“நீங்க இப்பொழுதே ஒரு நடமாடும் வியாபாரி (agent)”

This entry is part [part not set] of 35 in the series 20080731_Issue

கே.பாலமுருகன்


“நீங்க இப்பொழுதே ஒரு ஏஜெண்டு தம்பி! இப்பயே உங்க வேலையெ ஆரம்பியுங்க. நம்பளே கடக்கறே ஒவ்வொரு ஆளும் நம்பளோட கிளைண்ட்”

அப்பொழுது

“ஒரு தடவெ வந்து பாருடா. . அவரு என்னா சொல்றாருனு கேட்டுப் பாரு. . கண்டிப்பா உனக்குப் பிடிக்கும். . நான்லாம் இல்லயா? என்னா வேல செஞ்சிகிட்டு இருந்தேன். . இப்பெ என்னா செய்யறேன்? வாடா சும்மா. . வந்து கேளு போதும்”
ராகவன் பேசிக் கொண்டிருக்க அவனுடைய பேச்சில் சந்தேகமுடையவன் போல மௌனமாக நின்றிருந்தேன், அவன் தொடர்ந்து வற்புறுத்துவது போலவே இலாவகமாகப் பேசிக் கொண்டிருந்தான்.
“எங்க மாமா பத்தி உனக்குத் தெரியாது. எவ்வளவோ படிச்ச மனுசன். . இப்பெ எப்படி இருக்காருனு பாரு. . சும்மா படிச்சிட்டா மட்டும் இப்படி எங்க மாமா மாதிரி ஆயிற முடியாதுடா. . அதுக்கலாம் வேற ஒன்னு வேணும். .”
“நாளைக்கு வரேன். .பிளிஸ்”
அவனிடமிருந்து அப்போதைக்கு அகன்று கொள்ள முடிந்ததே தவிர நாளை கண்டிப்பாக வீட்டிற்கு வந்து விடுவான் என்ற எண்ணம் எழுந்ததும் சிறிது நேரம் கிடைத்த மனநிம்மதி அப்பொழுதே தளர்ந்து போனது. வீடுவரை நடந்தே போனேன். மூன்றுமுறை 24ஆம் நம்பர் பேருந்துகள் கடந்து போயிருக்கும். கை காட்டி நிறுத்தி ஏறி அமர்ந்து கொண்டே போயிருக்கலாம். அன்றென்னவோ பேருந்து சீட்டில் அமர்ந்து கொண்டு போய் எவனிடமாவது சிக்கிக் கொள்வதைவிட இப்படிக் கால் அயர நடந்தே போவது நல்லது என்று பட்டது. இயந்திரகதி வியாபாரிகளின் தொல்லை இப்பொழுதெல்லாம் அதிகமாகவே நகரத்தில் பெருகத் தொடங்கிற்று. மதிய வெயிலிலும் நகரத்தின் கனவுகளில் நடை வியாபாரிகளின் நடமாட்டம் வாகன நெரிசலைவிட ஒருபடி மேலாகிவிட்டது.

தற்பொழுது
“அவசரம் இல்லே. . உக்காந்து பேசலாமா? அந்தக் கடையிலே உக்காந்து பேசலாம் தம்பி. . வாங்க! கவலப்பாடாதிங்க. . நானே பிளஞ்சா பண்றேன். . ஒரு 20 நிமிசம் கொடுங்க தம்பி. . அப்பறம் நீங்களே முடிவெடுத்துக்கங்க. . நான் பேசப் போறது உங்க எதிர்க்காலத்தெ பத்திதான்”
“இல்லே பரவாலேங்க. . நான் அவசரமா போகனும்”
“தம்பி! அலட்சியமா பேசாதிங்க. . 1.5 விழுக்காடுதான் நம்பெ சொத்து இப்பெ. . இதெ உங்கள மாதிரி இளைஞர்கள்தான் மாத்தனும். . வாங்க உக்காருங்க தம்பி”
“. . . . . . ? ? ? ? ?”
“நீங்க என்னா போன் பாயிக்கிறிங்க? ஓகே டீஜீ. நீங்க வாரத்துக்கு 2 தடவே போன்லே காசு போடறிங்கனு வச்சிக்குவோம். . அதுலே ஒங்களுக்கு ஏதாவது இலாபம் இருக்கா? இல்லெ. எந்தக் கடையிலே காசு போடறிங்களோ அவனுக்குத்தான் இலாபம். . அதையே நீங்க யேன் சொந்தமா செய்யக்கூடாது? நீங்க ஒரு நாளு பேருக்கு காசு போட்டு விடுங்க போன்லே. . மோபைல் சேர்வீஸ் தம்பி. . நடமாடும் மோபைல் கம்பெனி நீங்க. . எப்படி? ஒங்களுக்கு 10 வெள்ளிலெ 0.50 காசு இலாபம். . ஒரு நாளைக்கு 10 பேருக்குப் போட்டு விட்டிங்கனா அதுலேந்து 5வெள்ளி இலாபம் உங்களுக்கு. . பிறகென்ன? அந்தக் காசுலே நீங்க போன்லெ காசு போட்டு காதலிகூட பேசலாம். . காசுக்கு காசு ஆச்சி செலவுக்கு செலவு ஆச்சி”
அவன் நடமாடும் கம்பெனிதான். பாக்கெட் நிறைய கைத்தொலைபேசியில் காசு போடும் அட்டைகளாக இருந்தன. அவனிடமிருந்து காரணம் கூறி தப்பி வருவதற்குப் பெரும் போராட்டமே நிகழ்ந்துவிட்டது. கடைசியில் குடித்த காப்பிக்கும் நான்தான் காசு கொடுத்துவிட்டு வந்தேன்.

நகரத்தில் நீங்கள் தவிர்க்க வேண்டியது (இப்பொழுதும்-எப்பொழுதும்)
முதலாவதாக தனியாக நடக்கும்போது யார் அழைத்தாலும் திரும்பிப் பார்க்கக்கூடாது. அப்படியே யாராவது அழைத்தால் உடனே திரும்பிப் பார்க்கும் சுபாவமுடையவர்களாக இருந்தால் தனியாக நடப்பதைத் தவிர்க்கவும். நகரத்தில் கூட்டமாக அமர்ந்து கதை பேசிக் கொண்டிருக்கும் ஆட்களின் மத்தியில் போய் நின்றுவிடக்கூடாது. கூட்டத்தின் ஒரு முக்கிய நபராக நீங்கள் மாற்றப்படுவீர்கள். அரைமணி நேரம் அங்கேயே செலவாகிவிடுவதோடு உங்கள் நெற்றியில் அட்டையொட்டி அனுப்பிவிடுவார்கள்.
அடுத்தபடியாக தனியாக நின்று உங்களையே வினோதமாகப் பார்க்கும் யாராகினும் அவரைக் கண்டு கொள்ளாததைப் போல உடனே அங்கிருந்து அகன்றுவிடுங்கள். நீங்கள் தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் உங்களுக்குத்தான் ஆபத்து. இப்படி எங்கெல்லாம் தனியாக நிற்கும் ஆசாமிகளைப் பார்க்கலாம் என்றால், மிகவும் சுலபம்தான். ஆள் நடமாட்டமே இல்லாத கடைகளின் வாசலில், பேராங்கடிக்குப் போகும் வழியில், பேருந்து காத்திருக்கும் இருக்கையின் ஓரமாக, பொது தொலைப்பேசியின் அருகே என்று சொல்லிக் கொண்டே போகலாம்.
தொடர்ந்து வங்கியில் பணம் எடுக்க சென்றால், வங்கியின் வாசலில் கைகளில் எதையாவது வைத்துக் கொண்டு போவோர் வருவோரைத் தொல்லைச் செய்து கொண்டிருக்கும் ஒரு பெண்ணையோ ஆணையோ நீங்கள் பார்க்க நேரலாம். இந்த நேரத்தில் நீங்கள் செய்ய வேண்டியது ஒன்று மட்டும்தான். கொஞ்ச நேரத்திற்கு சீரியல் நடிகராக மாறிவிட வேண்டும். கைத்தொலைபேசியை வெளியே எடுத்துக் கொள்ளுங்கள். யாரிடமாவது பேசுவது போன்று பாவனை செய்து கொண்டே உள்ளே போய்விடுங்கள். அவர்கள் உங்களிடம் பேச முற்பட்டாலும் தொடர்ந்து இல்லாத அழைப்பிற்குப் பதில் சொல்லிக் கொண்டே போங்கள். அவ்வப்போது வேகமாகச் சிரித்தும் வையுங்கள். திரும்பி அங்கிருந்து வெளியேறும்போதும் அதே சீரியல் நடிப்பைத் தொடருங்கள். கமல் போலெல்லாம் நடிக்க வேண்டாம். செயற்க்கைத்தனமாக நடித்தாலே போதும்.
“சார் கொஞ்ச நேரம் நில்லுங்க சார்”
“தம்பி என்ன வேலை செய்யுறிங்க? மாசம் எவ்ள சம்பளம்?”
“சம்பளம் பத்துதா தம்பி?”
“நம்பலாம் முன்னேறனுமா ஒரே வழிதான்”
“தம்பி எனக்கு ஒரு 10 நிமிசம் அவகாசம் கொடுக்குறீங்களா?”
இப்படி ஏதாவது பேசிக் கொண்டே யாராவது உங்களை நெருங்கினால் நீங்கள் செய்ய வேண்டியது வெட்கமே படாமல் பொது இடமாக இருந்தாலும் பரவாயில்லை, வேகமாக அங்கிருந்து ஓடுங்கள். தலை தெறிக்க ஓடினாலும் சரிதான். கீழே விழாமல் பார்த்துக் கொள்வது உங்கள் சாமர்த்தியம்.
நகரம் இப்பொழுது எப்படி இருக்கிறது என்பது எல்லோருக்கும் குழப்பமாக இருக்கலாம். குழம்பவே வேண்டாம். சிலர் நகரத்தை வார்த்தைகளால் சல்லடை செய்கிறார்கள். நகரத்தின் முச்சந்தியில் வெயில் பொழுதின் வெக்கையைப் பொருட்படுத்தாமல் கொக்கு போல காத்திருக்கிறார்கள்.

இப்பொழுது

ராகவன் தொல்லை தாங்க முடியாமல் அன்று அவனுடைய மாமாவை ஒரு சாப்பாட்டுக் கடையில் சந்தித்தேன். கழுத்தில் டை கட்டிக் கொண்டு கோமாளியைப் போல அமர்ந்திருந்தார். முகத்தில் ஓரு தீவிரமான அவதாணிப்பு. என்னையே வெகுநேரம் பார்த்துக் கொண்டிருந்தார். பிறகு நீண்ட மௌனத்தைக் கடந்து அவர்தான் பேசினார்.
“தம்பி உங்களே பாக்க பலநாள் காத்திருந்தேன். . யேன் உங்க மேலயே உங்களுக்கு அக்கறை இல்லயா? உங்கப்பா சாதரண வேலை செஞ்சி எப்படியோ உங்கள படிக்க வச்சி இப்பெ ஏதோ ஒரு தொழில்ல இருக்கிங்க. . இது போதுமா தம்பி? எவ்ள சம்பளம் வாங்கறிங்க?”
“. . . . .”
“என்னா ஒரு 850 வெள்ளி இருக்குமா? அது எந்த மூலைக்கு தம்பி? வர போர காலம் எப்படி இருக்கும்னு தெரியுமா? வெலவாசி ஏறி போச்சு. . கல்யாணம் பண்ணிட்டிங்கனா எப்படிக் குடும்ப நடத்தப் போறிங்க அந்தக் காசுலே? யோசிச்சி பாருங்க தம்பி. கையிலே இலாபம் இருக்கும்போது வேணானு சொல்லிட்டுப் போவ முடியுமா? நீங்க ஓகேன்னு சொல்லுங்க உங்க தலையெழுத்தெ நான் மாத்தறேன். . என்னா ஓகேவா?”
“. . . . . “
“என்னா தம்பி நீங்க? சின்ன வயசு. . முன்னேற துடிக்கனும். . அவன் அவன் எப்படிலாம் இருக்கானு பாருங்க. அரசாங்க தொழில் செய்யறவன் கதி என்னானு தெரியுமா? கடசிவரைக்கும் அதே சம்பளம்தான். . வருசத்துக்கு 65 வெள்ளி ஏத்துவான். . போதுமா? சுயமா நில்லுங்க தம்பி! கஸ்த்தமே இல்ல. நீங்க முதல்லெ சேருங்க, அப்பறம் ஒங்க குடுப்பத்துலே உள்ளவங்களுக்கு எடுங்க. . அப்பறம் ஒருவாரத்துக்கு ஒரு ஆள்னு போட்டிங்கனா. . அவுங்க மாசம் 100 வெள்ளி கட்டணாங்கனா அதுலே 20% உங்களுக்குத்தான்”
“. . . . . “
“தாராளமா செய்யலாம் தம்பி. மத்தியானம் அப்படியே கடைங்க பக்கமா நடந்திங்கனா ஒரு ஆளெ பிடிக்க முடியாது? நான்லாம் அப்படி நடந்துதான் அலைஞ்சிதான் இன்னிக்கு 4000 வெள்ளிக்கு மேல இலாபம். . பிடிச்ச காரு. . பெரிய வீடு. . நானும் படிச்சவந்தான். . படிச்சிட்டா போதுமா? சும்ம இருங்க தம்பி! ஆள் பிடிக்கனும். . அப்பத்தான் முன்னேற முடியும். . இன்னிக்கு தேதிக்கு உலகத்துலே இறப்பெ விட பிறப்புதான் அதிகமா இருக்கு. . அதனாலே நம்ப வியாபாரம் என்னிக்குமே படுக்காது தம்பி. என்னா சொல்றீங்க?”
“. . . . “
“நீங்க இப்பொழுதே ஒரு ஏஜெண்டு தம்பி! இப்பயே உங்க வேலையெ ஆரம்பியுங்க. அங்க பாருங்க ஒருத்தன் தனியா வரான். . அவன்கிட்ட போய் போலிசி எடுத்துட்டிங்களானு கேளுங்க. . செத்துட்டா குடும்பத்துக்கு ஒன்னுமே இல்லாம போகனுமா. . ஒரு 2 லட்சத்துக்கு போலிசி எடுக்கச் சொல்லுங்க. . ஆஸ்பித்தல்ல அடிபட்டு போனா எல்லாம் சலுகையும் கிடைக்கும்னு சொல்லுங்க. நீங்க சொல்றெ ஒவ்வொரு வார்த்தையும் அவனோட மரணத்தெ பத்தியதாகவே இருக்கனும். . அவன பயமுறுத்துங்க. . உலகத்தோட நடப்பெ பத்தி சொல்லுங்க. . போலிசியோட நன்மையைப் பத்திச் சொல்லுங்க. . நான் இன்னும் ஆழமா சொல்லித் தரேன். . போங்க தம்பி போங்க! அவனே விடாதிங்க. . நம்பளே கடக்கறே ஒவ்வொரு ஆளும் நம்பளோட கிளைண்ட். . நம்பளோட மோடல். . நம்பளோட எதிர்க்காலம். . சொத்துடமை. . பிடிங்க அவனே. . விடாதிங்க”
முடிவு


ஆக்கம்: கே.பாலமுருகன் மலேசியா
bala_barathi@hotmail.com

Series Navigation

கே.பாலமுருகன்

கே.பாலமுருகன்