தாவரங்களின் தலைவன்

This entry is part [part not set] of 29 in the series 20080619_Issue

எஸ். ஷங்கரநாராயணன்



நாழியாறு ஊரை மாளாக் காதலுடன் இடுப்பைத்தொட்டு வளைத்துக் கடக்கிறது. கரைகளைத் தொட்டாப்போல மரப்பாலம் ஏறிப்போக லிங்கேஸ்வரமூர்த்தி திருக்கோவில். கடந்தால் வயல்தான். டிரில்மாஸ்டரின் ஆணைக்குப் போல, சேர்ந்திசைக்குப் போல ஒருசேரத் தலையசைக்கும் நெற்பயிர். இளம்பச்சை கடும்பச்சை என வளர்ச்சிக்குத் தக்கபடி காற்றை கிரிக்கெட்டில் ஆறு அடித்தாப்போல அனுப்பி வைக்கும் பிரியமாய்.

டி.வி. பொட்டியில் இப்பல்லாம் பொழுதன்னிக்கும் கிரிக்கெட்தான். ராத்திரி பகல் கிடையாதா இவகளுக்கு. விளக்கைப் போட்டுக்கிட்டு விளையாடுகிறார்கள். தூக்கத்தைக் கெடுத்துக் கொண்டு அதைப் பார்க்க பெருங் கும்பல். ஒரே கொண்டாட்ட கும்மாள அமக்களம் – கோயில் திருவிழா போலிருக்கிறது. விளையாடற ஆளுகளும் தீவாளிக்குப் போல ஆட்டத்துக்கு புதுத்துணி போடுகிறார்கள்… நம்மல்லாம் வீட்ல நல்ல துணி, விளையாட கிளையாட சுமார்த் துணி போடுவம்.

அந்த டிரில் உடற்பயிற்சியும் பார்த்திருக்கிறார். ஃபோர் த்ரீ நெக்ஸ்ட் சேஞ்… தண்ணில கொத்தாய் மீன் திரும்புகிறாப்போல ஒரு விஷ். நல்லாத்தான் இருக்கு. அவங்கப்பன் அவரையும் படிக்க வைத்திருக்கலாம். இப்ப நினைச்சு என்ன புண்ணியம்… பயபுள்ள நல்லாப் படிக்கட்டும். எங்க படிக்கான் அவன், ஒரே ஓட்டமும் சாட்டமும் தான். ஓட்டப் பந்தயத்தில் முதல் பரிசு! எல்லாரும் பார்த்துக் கொண்டிருக்க அவர்மாத்திரம் கை தட்டினார். எல்லார் மீதும் ஆத்திரமாய் வந்தது. எடுபட்ட பயக ஊரு… என நினைத்துக் கொண்டார். அடுத்த பையன் பரிசு வாங்கும்போது அவர் கைதட்டவில்லை.

”எய்யா ப்ரைஸ்!…”

”எலேய் உரத்துக்குக் கடன் வாங்கி வெச்சிருக்கேன், எடுத்திட்டு ஓடிறாத, என்னால ஒன்னப் பிடிக்க முடியாது,” என்றார் வேடிக்கையாக.

ஊர்ல பாதிப்பேர் அப்டிதான் திர்றான்.

அவர் பேர் லிங்கமூர்த்தி. ஊரில் பாதிப்பேருக்கு அதே பேர்தான். சாமி பேர். தபால்காரன் திண்டாடிப் போவான். பெண்ணு பார்க்க வந்து தப்பான வீட்டுக்குள் நுழைந்து, கல்யாணமும் ஆகிப்போன கதைகள் ஊரில் உண்டு. அழகான பெண்ணுக்கு எப்படியும் கல்யாணம் ஆகிவிடுகிறது.

சுமாரான மாப்ளைக்கும் கூட!

மண்ராசிக்கு ஊரின் கிழக்காமல் போனால் தோப்புகள். போகாட்டாலும் அங்கே அதே தோப்புகள். குரங்குகள் கொட்டமடிக்கும் பூமி. மாந்தோப்பு, புளியந்தோப்பு என இருளடித்துக்குக் கிடக்கும். ஆப்பிள் முந்திரி என்றுகூடப் போட்டிருந்தார்கள். முந்திரி பணப்பயிர். பூவுதிராமல் பார்த்துக் கொள்வதற்குள் போதும் போதும் என்றாகிவிடும்… வெளிச்சமும் திருடனும் உள்ளே வர அனுமதி இல்லை. கரண்ட் வயர் போட்டிருப்பார்கள். சாதா வேலி என்று தொட்டால் சிவலோகப் பிராப்தி நிச்சயம். லிங்கமூர்த்தி சிவலோகம் போனார், என உத்திரகிரியைப் பத்திரிகை. அவர் அவர்வீட்டுக்குத்தானே போயிருக்கிறார், என்றிருக்கும்!

அடிக்கடி குரங்குகள் அடிபட்டு இறந்து போகின்றன. யாரும் பத்திரிகை அடிப்பதில்லை அவற்றுக்கு. குரங்குகளைத் தோட்டத்துக்குள்ளேயே குழிதோண்டிப் புதைக்கிறார்கள். நல்ல உரம் அவை. மின்கம்பி வேலி உஷார், என்று பலகை உண்டு. படிக்கத் தெரியாவிட்டாலும் மண்டையோடும், தோள்த்துண்டு போல ரெண்டு பக்கமும் எலும்புகளும், அபாய அறிவிப்பு சிவப்பில். மனுசாள் பார்த்து ஒதுங்கிப் போவர். பாவம் குரங்குகள். நல்ல உரம் அவை.

வெறும் மண்டையோடு படம், அது குரங்கின் ஓடாகவும் இருக்கலாம்!

மேற்கே கோவில் தாண்டி இறங்கினால் நேர்ரோடு புளியங்குளம் நோக்கிப் போகிறது. அது போகாது, நாமதான் போகணும்! நல்ல அகலமான ரஸ்தா. பஸ் டிரைவர் எல்லாவனுக்கும் அந்த ரஸ்தாவும் அதன் கருப்புக் கோவணமும் பார்க்கவே உற்சாகம் கிளம்பி முழுவேகத்தில் எடுப்பான்கள், ஒண்ணுக்குப் போக அவசரப் பட்டாப் போல! ரெண்டு பக்கமும் ஒரு மரம் கிடையாது. ஊர் கீர் எதுவும் கிடையாது, ஆறு கிலோ தாண்டினால்தான் பாலகிருஷ்ணாபுரம், சிற்றூர். அநேக வண்டிகள் அங்கே நிற்கா. எலேய் ஊராடா இது, என்கிறாப்போல தாண்டிப் போகும். மத்த மனுசாளைக் கேவலப் படுத்துவதில் ஒரு சந்தோசம்! வீடியோ கோச். படம் பார்த்தபடி ஆனந்தமாய் வடிவேலு உதை வாங்குவதைப் பார்த்துச் சிரித்தபடி போகையில் உலகம் தூசாகி விடுகிறது…

மரமற்ற ரஸ்தா. நீள வெறுமைக்கு இடையே தனி அடையாளமாய் அவரது வயல் துவக்கத்தில் மூக்கு முடியாய் வெளித் தெரியும் ஒற்றை வேப்பமரம், அவர் வயல் என்று எந்த தூரத்தில் இருந்தும் காட்டலாம். பணிந்த பூமியில் கிரிக்கெட்டில் ஒற்றை விரல் தூக்கி அவ்† கொடுத்தாப்போல நிற்கிறது மரம்.

அதைப் பள்ளிப்பிள்ளை வாத்தியாரைப் பார்த்துக் காட்டினால் ஒண்ணுக்கு வருது என அர்த்தம். அதைப் பார்க்க அநேக டிரைவருக்கு வந்தது!

கோவில்தாண்டி இறங்க ஐந்து நிமிஷ நடையில் அவரது வயல். நாலு ஏக்கரா பூமி. ஓரத்தில் கிணறு. லிங்கேஸ்வர மூர்த்தி புண்ணியத்தில் உள்ளே தண்ணி, கோடையில்கூட மட்டம் கீழிறங்கும், இல்லை என்று கைவிரிக்காது. ஊற ஊற எடுத்துக்கிற வேண்டிதான். கமலை இறவைதான். மின்சாரம் கிடையாது. அவரே இறைப்பார். கமலை இறைப்பு என்றால் சுவாரஸ்யத்துக்குக் குறைவில்லை. முருகனைக் கிழே பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு அவர் கமலைத் தண்டில் ஏறி முன்னே பின்னே நடந்து போய் வருவார்.

ஊர்த் திருவிழா பட்டிமன்றத்தில் கேட்டிருக்கிறார் – ராமாயணக் கம்பருக்கே ஒரு ஏற்றம் இறைக்கிறவன் பாடிய பாட்டில் அடுத்த வரி யூகிக்க சவாலாய் இருந்ததாமே…

மூங்கிலிலை மேலே
தூங்கு பனிநீரே… (முதல் வரி)

தூங்கு பனி நீரை
வாங்கு கதிரோனே… (ரெண்டாவது)

உற்சாகமாய் அவர் ஒரு சினிமாப் பாடல் பாடினார். ஆனால் பாட்டின் அடுத்த வரி அவருக்கே மறந்திருந்தது.

அட அதை விடு. கமலைத் தண்டில் ஏறி இறங்குகையில் அந்த மேல்ப்பார்வையில், உலகம் கீழே என்று பார்க்க ஆனந்தம். அதான் பாட்டு கிளம்புகிறது. மூங்கிலிலை மேலே… என்று உலகத்தைப் பார்த்துத்தானே பாடியிருக்க வேணும் அவன்.

இவன்தான் மேலே. மூங்கிலிலை இவனுக்குக் கீழே அல்லவா!

நெல்லைப் பார்க்காமல் மூங்கில் புல்லை எப்படி நினைத்துக் கொண்டான் தெரியவில்லை.

உயரத்தில் இருந்து உலகைப் பார்த்தல், இந்தப் பறவைகள் எத்தனை அதிர்ஷ்டம் பண்ணியிருக்கின்றன…

தண்டுடன் கட்டிய பின்பாரக் கல் உயர, கமலை கிணற்றில் குனியும். அவர் முன்பக்கமாய் இசைவாய் வருவார். கமலையில் நீர் அள்ளிக் கொண்டபின் அவர் பின்வாங்க மெல்ல தண்ணீர் மேலே வந்து சாலில் கமலை கவிழ்ந்து தண்ணீர் இறங்கி வயலுக்கு சலசலத்துப் போகும். ஒருமணி ரெண்டுமணி உழைப்புக்குப் பின் மேல்த் துண்டால் வியர்வையைத் துடைத்துவிட்டு வந்தமர வேப்பமரம் ரொம்ப வசதி. அம்மைபோல அவரைப் பிரியமாய் மடியமர்த்திக் கொள்ளும் அது. அம்மையை விட அது ஒசத்தி. அம்மைக்குக் கோவம் வந்தா விளக்குமாத்தால சாத்திருவா.

இது சாத்தாது.

இந்த விசயத்தில் சம்சாரங்களையே நம்பேலாது. குரங்கு எப்ப பேன் பார்க்கும், எப்ப காதைக் கடிக்கும்னு யாருக்குத் தெரியும்?

வேப்பங் காத்தின் குளிர்ச்சிக்கு ஈடாய் லோகத்தில் வேறெதும் உண்டா? மண்பானைத் தண்ணி குடிச்சி வயிறு குளிர்ந்தாப்போல மனசடங்கிப் போகும். சிலுசிலுவென்று காற்றின் கோபத்தை அடக்கிக் கீழனுப்பும் மரம். உடம்பு கருப்பு. சின்னச் சின்னதாய் வெள்ளைப் பூ. இலைக்கொழுந்து பழுப்பும் சிவப்புமாய் என்ன மெருகு. பழமோ பச்சை – என்று ஆச்சர்யமான மரம். கோடையில் தரையில் பாய் விரித்து உதிரும் பூவைச் சேகரிப்பார்கள். வேப்பம் பூவில் ரசம் வைத்தால் கையில் வாங்கி உறிஞ்சிக் குடித்து ஆனந்திப்பார்கள்.

பக்கத்தில் மரமே கிடையாது. வயல் வளர்ச்சிக்குக் கொக்கும் காகமும் வந்தாலும் ஒரு நிமிசம் இந்த மரத்துக்கு வந்து களைப்பாறிவிட்டுக் கிளம்பும். பறவைச் சத்திரம்.

ரோட்டோடு அசுரவேகம் போகிற பஸ்சுகள் லாரிகள் கல்யாணப் பார்ட்டி வேன்கள் சட்டென்று அங்கே நின்றால் இறங்கி ஒண்ணுக்குப் போகப் போகிறார்கள் என்று அர்த்தம். வெட்ட வெளியில் நின்று திறந்து காட்டியபடி ஒண்ணுக்கடிப்பது ஏனோ சனங்களுக்கு லஜ்ஜை. ஒரு மரம் அவர்கள் தேவையை முழுமை செய்து விடுகிறது. நாய்ப் பிறவி போல மரம் தேடி அலைதல்… டிரைவர் அவசரத்துக்கு அவன்வசதிக்கு வண்டியை நிறுத்தி இறங்குவான். பிறகு அவனைப் பார்த்ததும் பிற ஆண்மக்கள் இறங்கி சாந்தி பண்ணிக் கொள்வர். பெண்கள் ஆத்திரத்துடன் பல் கடித்துக் காத்திருப்பர். அட சீக்கிரமாவது வந்து வண்டி யெடுங்கடா. முடிச்ச பின்னும் நின்னு சிகெரெட்!… இது ஆண்களின் உலகம்.

தோளோடு ரெண்டு கையும் விரித்துப் பரத்தினாப் போல மரம். வெயில் முழுசும் எனக்கே என்று எல்லா இலையும் வெளிச்சங் குடிக்கத் தவித்தது. டோப்பாத் தலை மாதிரி மரத்தின் மண்டை ஒரு பன் உப்பலில் ஓரங்களில் சரிந்து உச்சி பொம்மித் தெரியும், ஷேவிங் பிரஷ் போல. சதா காதலன் முகம் பார்க்கப் பிரியப்படும் காதலி போல வானம் பார்த்துக் கிடந்தது மரம். கீழே கருணையோடு அது விட்டு வைத்திருந்தது நிழலை. வெயில் எனக்கு, நிழல் உனக்கு – என்று விட்டுக் கொடுத்தாப் போல. ஒரு அவசரத்தில் தோலை உரித்து பழத்தை விட்டெறிந்து தோலை வாயில் வைத்தாப் போல!

தெரிந்தே தியாகம் செய்யும் அம்மையின் எல்லையில்லா அன்பு அது…

மரத்தின் மேல் சந்தோசக் கிறுகிறுப்புடன் பரபரத்துத் திரியும் கரு எறும்புகள். பிள்ளையார் எறும்புகள் என்பார்கள். மேலே ஊறும். கடிக்காது. செவ்வெறும்புகள் கெட்ட ஜாதி. கடிச்சால் கை தடித்து விடும்.

சிவ பெருமானிடம் தப்பா வரம் வாங்கியவை அவை, என்கிறதாக ஒரு கதை கேட்டிருக்கிறார். மனுசாளை எதிர்த்து அவை சிவ பெருமானிடம் ஒரு வரம் கேட்டன. நாங்க மட்டுந்தான் லோகத்தில் இருக்கணும், மனுசாளால் எங்களுக்கு ஒரே தொந்தரவு… என்றன. என்ன வரம் வேண்டும், என்றார் கடவுள். அவசரத்தில், நாங்க கடிச்சா சாகணும், என அவை வேண்டின. தந்துவிட்டார் கடவுள்.

அடுத்த முறை அவை போய் மனுசனைக் கடித்தபோது அவன் ஒரே அடி, எறும்பு செத்துப் போனது. கடிச்சால் யார் சாகணும், என்று அவை சரியாக வரம் கேட்டிருக்க வேணாமோ?… முருகனின் டீச்சர் சொன்னாள் இந்தக் கதையை. சொல்லும் போதே அவனுக்கு கெக் கெக் என்று சிரிப்பு. பள்ளிக் கூடத்தில் நல்ல நல்ல கதையெல்லாம் சொல்லித் தருகிறார்கள்…

இடுப்பு பெருத்து மேலேற ஏற சிறுத்துக் கிடந்தது மரம். கிளைகள் சிறிதாகிக் குச்சிகளாய் முடிந்தன. கணுக்களி¢ல் இலைகள். அவற்றின் தீக்கொழுந்து நுனிகளின் பளபளப்பு. சளிப் பளபளப்பு அது. கொத்தாய் வேப்பங் கொட்டைகள். முத்த முத்த கனியக் கனிய அவை உள்கொளகொளப்புடன் பளிங்குத் தன்மை பெறுகின்றன. வேப்பங்காய் ச்சை கசப்பு, வாயில் வைக்கேலாது. பழம் நல்ல ருசி. சிலவகை இனிச்சுக் கிடக்கும்! ஆச்சர்யங்களை வைத்திருந்தது மரம். க்ரீச் க்ரீச் என்று அணில் வாலை மரத்தில் அடித்து அடித்து உள்வயிறு அதிர சப்தமெழுப்புகின்றன.

தொலைவில் இருந்து பார்க்கையில் அந்த மரம் வாத்தியார் போலவும் கீழே வயல் நாத்துகள் பிள்ளைங்கள் போலவும் காணும்.

டிரில் வாத்தியார். அவர் ஆணைக்கு இடப்புறம் வலப்புறம் ஒருசேரத் தலையாட்டும் நாத்துகள்.

அந்த நாத்துகள் முன் மரம், தாவரங்களின் தலைவன் போல கம்பீரமாய் நின்றிருந்தது. அங்கங்கே சிறு பட்டைவெடிப்புகளில் வஜ்ரம் ஊறியிருந்தது. தண்ணிப்பசை இறுகிக் கெட்டிப்பட்டு கோந்து திரண்டிருந்தது. அதிலும் ஒரு ஆரஞ்சுத் தனமான கோலி குண்டுப் பளபளப்பு காணும். முருகன் கோந்தைத் திரட்டி வருவான். வேப்பம் பிசின் போல ஒட்ட வேறு கோந்து உலகில் இல்லை. மரத்தில் கோந்துக்கொத்தை ஒரு தீக்குச்சி உரசிப் பற்ற வைத்தால் உஸ்ஸென்று ஒரு பைத்தியச் சிரிப்பு சிரிக்கும். முருகனுக்கு அதைக் காண ஆனந்தம். கெக் கெக், என்று அவன் சிரிப்பு தனிவகை, விக்குகிறாப் போல!

”மரத்தை இம்சை பண்ணாதடா” என்பார்.

ஒரு ராத்திர் அந்த மோசமான நிகழ்ச்சி நடந்தது. வீட்டில் தொலைக்காட்சி ஓடிக் கொண்டிருந்தது. இருபத்திநாலு மணி நேரமும் அதில் எதாவது இருந்துகொண்டுதான் இருக்கிறது. போட்டதையே திருப்பியாவது போடுகிறார்கள்… சிலோனில் குண்டு வெடித்தது என்கிறான்கள், பழைய நியூசா இப்ப புதுசா தெரியவில்லை. சிலோனில் குண்டு வெடித்துக்கொண்டே இருக்கிறது…

”லிங்கம்?” என்று வாசலில் பதட்டக் குரல். மேல வயல் லிங்குசாமி. வயக்காட்டில் ராத்திரி தண்ணியிறைக்க என்று போனவன் பதறி ஓடி வந்திருந்தான். ”என்னடா பாம்பு கீம்பு புடுங்கிட்டதா…” என்று வெளியே வந்தார்.

”ல்…” என்னுமுன் மூச்சிறைத்தது. அவனே பாம்பாய் மூச்சு விட்டான்.

”ஆக்சிடெண்டா?”

”எவனோ குடிகார டிரைவர் கம்னாட்டி வண்டில தடுமாறி…”

இது புது செய்தி, என்று டி.வி.யை அணைத்தார். ”என்னாச்சி?”

அதற்குள் அவர் ஆசுவாசப் பட்டிருந்தார். ”நல்ல போதை போல டிரைவர். வண்டில நிதானப்பட முடியல. வண்டி நேரா மரத்ல மோதி…”

”ஐயோ மரத்துக்கு என்னாச்சி?” என்றார் பதறி.

வயலை நோக்கி ஓடினார்கள்.

(நன்றி – யுகமாயினி மாத இதழ் ஜுன் 2008)


storysankar@rediffmail.com

Series Navigation

எஸ்.ஷங்கரநாராயணன்

எஸ்.ஷங்கரநாராயணன்