காட்டாற்றங்கரை – 2

This entry is part [part not set] of 44 in the series 20080410_Issue

வ.ஐ.ச. ஜெயபாலன்



வன்னிக்கு வருகிற போதெல்லாம் பாலனை யாருமே துயில் எழுப்ப வேண்டியதில்லை. அங்கு எல்லா இசைகளும் எண்ணற்ற இன்ப அழகுகளும் நிறைந்த அந்தக் காடு எப்பவும் கடிகாரங்களோடு அவனுக்காகக் காத்திருந்தது. போத்துக்கீசர் காலத்தில் இருந்தே காலம் காலமாய் ’கும்பிட்டு வாழ்கிலேன் நான்’ என்று நிமிர்கிற தமிழர்கள் புகல் என்று ஒன்றில் ராமேஸ்வரத்துக்கு அல்லது இந்த வன்னிக் காட்டுக்குத் தானே ஓடி வருகிறார்கள்.

நீண்ட பயணத்தின் உடற் சோர்வுடனும் வழியில் யானையிறவு கிழிநொச்சி மாங்குளம் என்று சோதனைச் சாவடிகளில் ஏறி இறங்கி சிங்கள் வசவுகளில் இழிவு பட்டு மன உழைச்சலுடனும் வருகிற பாலனைக் கணடதும் வரண்ட செம்புழுதியைத் துடைத்துக் கொண்டு அந்தக் காடு பசுமையாகச் சிரிக்கும். காட்டின் சித்தத்தை அள்ளும் சிரிப்பிலும் நெழிப்பிலும் பறக்கும் முத்தங்களிலும் பேருந்தை விட்டு இறங்க முன்னமே பாலன் வசமிழந்து வழியத் தொடங்கி விடுவான். கர்வம் கொண்ட காடு அலட்சியமாய் “பார் இன்னுமொருத்தர் விழுந்துகிடக்கிறார்” என்று பறவைகளிடம் கண்சிமிட்டி விடுமாக்கும். பிறகென்ன கட்டந்தரையையே தின்கிற பறவைகள் விழைந்த வயல் கிடைத்தால் விட்டு விடுமா. அந்தப் பிரதேசம் முழுவதும் பறந்து பறந்து ‘பாலனைப் பாரடி, அவன் என்னடி காட்டிலயும் வழியிறான் பிறகு ஓரக் கண் சிமிட்டிச் சிமிட்டி காட்டுக்குத் தெரியாமல் என்னிலயும் வழியிறானடி. இவனை என்னடி செய்யிறது’ என்று கூடிக் கூடி கத்தியும் பாடியும் விருந்து கொண்டாடி விடுங்கள். நிச்சயம் இந்தக் காடும் பறவைகளும் ஈழத்து தமிழ்பேசும் பெண்கள் கல்லூரி ஒன்றில் தான் படித்திருக்க வேணும் என்று பாலனுக்குத் தோன்றும்.

ஆனாலிம் ஆச்சரிய நககை பாலன் இவற்றையெல்லாம் ஆர்வமுடன் ரசித்ததுதான். இதுதான் பாலன். இதற்க்காகத் தானே அவன் சந்தர்ப்பம் கிட்டும்போதெல்லாம் நெடும் பயணமாய் வடகாட்டில் உள்ள தங்கள் பண்ணை வீட்டுக்கு வந்து விடுகிறான்.

குயில் சந்தித்த முதல் வசந்தத்தில் இருந்து ஒவொரு வசந்த ஆரம்பத்திலும் பூவரசம் பூக்களை முந்திக்கொண்டு ‘மன்னிப்பு’ பாலன் என்றபடி வந்துவிடும். ‘மன்னிப்பு’ என்ற தமிழ்ச் சொல்லை பாலனுடன் பழகியதில் குயில் கற்றுக்கொண்டிருந்தது. வசந்தம் முழுக்க பாலனைத் துரத்தித் துரத்தி பாடிப் பாடி மூர்க்கமாகக் காதலிக்கும்.
காலையில் திருப்பள்ளி எழுச்சி பாடுவதில் ஆரம்பித்து சாமத்தில் தாலாட்டுப் பாடுவதுவரை அவனையே சுற்றிச் சுளன்றுகொண்டிருக்கும். அவன் யாழ்ப்பாணம் போனால் குயில் தன் தோழிகளுடன் அங்கும் வந்துவிடும். பின் தோழிகளோடு பிரச்சனைப் பட்டு அவர்களைத் துரத்திவிடும் என்பது இந்தக் கதையோடு அவ்வளவு சம்பந்தப் படாத தனிக் கதை. விரிவுரைகள் நடந்துகொண்டிருக்கும்போதே மண்டபத்தின் வெளியே இருக்கும் மாமரத்தில் வந்து குந்தியிருந்து ஏழேழு பிறப்புகளிலும் தீராத தன் காதலில் உருகி உருகிப் பாட ஆரம்பித்துவிடும்.
குயில் பாடத்தொடங்கிவிட்டால் பாலனுக்கு விரிவுரைகள் ஒன்றும் காதில் ஏறாது. அவனுக்கு முற்பிறப்பு ஞாபம் வந்துவிடும். கன்னம் வலிக்கும். கன்னத்தைத் தடவி விட்டுக் கொள்வான். சென்ற பிறப்பு முழுக்க ஈருடலும் ஒரு மனமுமாக அவர்கள் ஒட்டி ஒட்டி உறவாடிக் கழித்ததெல்லாம் நினைவுக்கு வரும். சென்ற பிறப்பில் அவளைக் குயிலி என்றுதான் அழைப்பான். சென்ற பிறப்பிலும் பாலன் பரந்து பட்ட மனிதாபிமானியாகவே இருந்தான். மனிதர்கள் ஆணும் பெண்ணுமாக இருந்தார்கள். காதல் மனைவியாக இருந்தும் குயிலி சந்தேகப் பிராணியாகி விட்டதுதான் துன்பம். ஒருமுறை பாலன் சரஸ்வதி அம்மனை தீவிரமாக வழிபட்டுக் கொண்டிருந்தான். திடீரென அங்குவந்த குயிலி கோவில் என்றும் பார்க்காமல் பாலனுக்கு ஓங்கி ஓங்கி அறை அரையென்று அறைந்துவிடுகிறாள். என்மீதா சந்தேகப் படுகிறாய் என்று சரஸ்வதி அம்மனிட்ட சாபத்தால்தான் இந்தப் பிறப்பில் அவள் குயிலாகவும் பாலன் கவிஞனாகவும் பிறக்க நேர்ந்தது. அடுத்த பிறவியில் ஒரு குயிலாகப் பாலனைச் சந்திப்பாயென்றும் ஓரே ஒருவருடம் பாலன்மீது தொடர்ந்து சந்தேகப் படாமல் இருந்தாயானால் உனக்குப் பாவ விமோசனம் கிடைக்கும். பின்னர் சுவர்க்கத்தில் நீங்கள் இருவரும் நித்திய போகத்தில் திழைக்கலாம் என்று சரஸ்வதி அம்மன் சாப விமோசனமும் அருளியது. பாலனுக்கு எல்லாமே நேற்று நடந்ததுபோல நினைவுக்கு வந்தது. சாபம் பெற்ற குயிலி குதிரைகளும் குதிரைவாலிப் புற்களும் மண்டிய ஒரு கடற்க்கரையில் உப்புக்காற்றுத் தாலாட்டும் வேப்ப மரத்துக் காகக் கூடொன்றில் பிறந்தாள். குயில் பருமடைந்த முதல் வசந்தத்திலேயே டாக்டர் எஞ்சினியர் கனவுகளில் உலையும் யாழ்ப்பாணத்துப் பையன்களையே கவிஞர்களாக்கிக் கொண்டிருந்த ஒரு தேவதைகளின் வேம்படியில் பாலனைச் சந்தித்தது. அப்பொழுதுதான் பாலனுக்கு முதல் முறையாக முற்பிறப்பு ஞாபகம் வந்தது.
அதன் பின் எல்லா வசந்தங்களிலும் அந்தக் குயில் யாழ்ப்பாணத்துப் பல்கலைக் களக மாமரங்களிலோ அல்லது வன்னிக் காட்டுக்குள்ளோ அல்லது அந்தக் காட்டின் நடுவில் இருக்கும் பண்ணை வளவு மாமரங்களிலோ வந்திருந்து காதலைப் பாடிக்கொண்டிருந்தது. பாட்டோடு பாட்டாக பாலனுக்கு குயில் பாசையும் கற்பித்தது. அது கூ என்றும் குக்கூ என்றும் கூக்கூ என்றும் குயில் மொழி சொல்லிக்கொடுக்க பாலன் குரலெடுத்து குக் கூ என அரிச்சுவடி பயிலும் அழகு மனதை உருக்கும். ஆச்சரியப் படத்தக்க விதத்தில் மிக விரைவாகவே “குக்கூ முதல எழுத்தெல்லாம்” என்கிற குயில் மொழிக் கவிதைகளைக் கூட பாலன் கற்றுத் தெளிந்துவிட்டான். ஆனாலும் பாலன் எல்லா உயிர்களையும் நேசிப்பவனாக இருந்தான். எல்லா உயிர்களும் ஆணும் பெண்ணுமாக இருந்தன. அந்த அறியாத குயில் கண்ணா இனி ஒருவருடமில்லை என் ஆன்மா உள்ளவரைக்கும் உன்னைச் சந்தேகப் படேன் கண்ணா என்றபடி ஒவ்வொரு வசந்தத்திலும் பாலனைத் தேடி வரும். ஓராண்டில் பாலனுடன் சுவர்கத்துக்குப் போய் இடையறாத போகம் மகிழும் கனவுகளோடு வந்த முதல் சந்திப்பின்போதே சிக்கல் ஆரம்பித்துவிட்டது. முதல் வசந்தம் முடியுமுன்னமே குயில் சந்தேகத்தில் கோபித்துக் கொண்டு போய்விட்டது. அதன் பின் அதுவே பாலனும் குயிலும் என்கிற தொடர்கதையாகி விட்டது. குயில் ஒவ்வொரு வசந்தத்திலும் sorry பாலன் என்று சொல்லிக்கொண்டு வந்துவிடும். பாலனுடன் பழகியதில் Sory மன்னிப்பு, இதுதான் கடைசி ஓரிரு மனித மொழிகலைக் குயில் அறிந்து வைத்திருந்தது. எனினும் ஒவ்வொரு வசந்ததிலும் எதாவது நடந்து குயில் படக்கூடாத சந்தேகத்தைப் பட்டுக்கொண்டு தன் மனசையும் உடைத்துக் கொண்டு காணாமல் போய்விடும்.

சித்திரை வைகாசி கடந்துவிட்டால் குயிலும் போய்விடும். அடுத்த கால் வருடத்துக்கு ஐயோ பாவமே இதுவா குயில்களும் வானம் பாடிகளும் வாழ்திப் பாட மலர்கள்சூடி வசந்தம் கொலுவிருந்த மாழிகைக் காடு என்று கேட்பீர்கள். ஈழம் முழுக்க ஈரத்தின் சுவடே இல்லாமல் பாலைத் திணையாய்க் கிடக்கும். ஈழம்போல பாலனின் கவி மனசும் வெக்கையில் காய்ந்து போய்விடும். பாலையின் வாழ்வியலே தென் இலங்கை மலேசியா சிங்கப்பூர் இங்கிலாந்து ஐரொப்பா கனடா என்று பொருள் வயின் பிரிதல்தானே. பாலனும் தன் ஜொல்னாப் பையோடும் ஒரு சேட்டு ஒரு காற்ச்சட்டை ஒரு கோவனம் ஒரு துவாலைத் இவற்றுடன் ஒரு பற்பசை, சீப்பு சோப்புக் கண்ணாடி வாசனைப் பொருட்கள் அடகிய அலங்கார அலங்காரப் பை என அவனது முழுப் பொக்கிசங்களுமடங்கிய பயணப்பையோடும் தேச சஞ்சாரம் கிழம்பிவிடுவான். இதுவும் குயிலுக்குப் பிடிக்கிறதில்லை. குயில் கோபித்துக் கொண்டு போனாலும் யாழ்ப்பாணத்துச் செம்மண் புழுதி பட்ட குயிலல்லவா. அது பாலன் போகக் கூடிய எல்லா ஊர்களிலும் ஒற்றர்களை நியமித்து விட்டுத்தான் கோபித்துக் கொண்டுபோகும்.
வசந்தமும் குயிலும் போய்விட்ட பிறகும் அந்தச் சின்னக் காட்டுக்குள் நிறைய சாபம் பெற்ற தேதைகளும் தேவர்களும் பறந்தும் நடந்தும் ஊர்ந்தும் நீந்தியும் திரிகிறது பாலனுக்குத் தெரிய வரும்.

அதிகாலையில் காட்டுக் கோழிகளின் முதல் குரலுக்கே பாலன் விழித்தெழுந்து இழுத்துப் போர்த்தபடியே கம கமவென்று முல்லைப் பூ உதிரும் முற்றத்துக்கு வந்துவிடுவான். முற்றத்து மயில் அகவத் தொடங்கும்போது வேப்பம் குச்சியை கவ்வியபடி காலைக் கடன்களுக்காக பண்ணை வீட்டின் முன்னே அவனை வழிபார்த்திருக்கும் காட்டுக்குச் செல்வான். பண்ணை வீட்டில் நவீன கக்கூஸ் இருந்தது. னாலும் அங்கு கமழும் காட்டுப் பூக்களும் சிறகசைக்கும் வண்ணத்துப் பூச்சிகளும் பாடும் பறவைகளும் தேவதைகளும் இல்லையே. பச்சைப் புறாக்கள் குறு குறுக்க ஆரம்பிக்கையில்தான் அவன் காட்டிலிருந்து வீட்டுக்குத் திரும்பி வருவன். மிகப் பெரிய வன்னிக்காடுகளில் ஒன்று அவர்களது பண்ணை வீட்டின் பின்புறத்தில் பச்சைக் கடலாக முட்டித் ததும்பிக் கொண்டிருந்தது. எனினும் பாலனுக்கு பண்ணையின் முன்னே நெடுஞ்சாலைக்கு மறு பக்கமாக இருக்கிற அந்தச் சின்னஞ் சிறு நூறு ஏக்கர் காடுதான் வாழ்வாக இருந்தது.
இந்தக் காடுக்கு இன்றுவரை பாலன்தான் சிற்றரசன். ஆனாலும் என்ன செய்வது. அந்தக் காட்டை வெட்டி விற்றுப் பசியாற ஒரு யாழ்ப்பாணத்து முதலாளிக் கூட்டமே அலைந்து கொண்டிருந்தது.

பாலிற்றங் கரையால் ஓடிவந்தததில் இருந்து பாலன் காட்டுப் பக்கமே போகவில்லை. வாந்தியும் வயிற்றோட்டமும் காச்சலுமாக படுக்கையில் சுருண்டு கிடந்தவனை காடு வாவா என்று அழைத்துக் கொண்டிருந்தது. ஆற்றம் கரையில் இருந்து ஓடிவந்தபோது நேரே யாழ்ப்பாணம் போய்விட வேணுமென்றுதான் முதலில் நினைத்தான். அங்குதான் அவனுடைய பல்கலைக் களகம் இருந்தது. பல்கலைக் களக வளாகத்துக்குள் மட்டுமே ஏற்படுகிற அசுர பலமும் ஊணர்கிற பாதுகாப்பும் அச்சமின்றி வெளிப்படுகிற கோபமும் அவை விரியக்கூடிய சுதந்திர வெளியும் உடனடியாகவே அவனுக்கு வேண்டியிருந்தது. ஆனாலும் இத்தனை புதிய இரகசியங்களோடு முன்னைப்போல அச்சமில்லாமல் வழி நீழ எதிர்ப்படும் சிங்கள இராணுவத் தடை முகாம்களைக் கடந்து செல்ல முடியாது என்பதை உணர்ந்தபோது அவனுக்குக் குலை நடுங்கியது.
இத்தனை இரகசியங்களுக்கும் எப்போ பழக்கப் படுவது எனக் குழம்பியபோதுதான் பாலனுக்கு வயிற்றைக் கலக்கத் தொடங்கியது.
மூன்றாவது நாளாக அடிபட்ட பாம்ப்பாகக் காட்டின் பாடலுக்கும் அசையாமல் கட்டிலில் நெழிந்து கொண்டிருந்தான். காதலிக்கிற காடுகூட அவனுக்கு அச்சம் தந்தது.
நேற்றுவரை வீதியின் சந்தடிகள் எல்லாம் தன்னைத் தேடி இராணுவ வண்டிகள் வருகிற பிரமையை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. இன்று மனம் அடங்கியிருந்தாலும் வீதிலில் மோட்டார் வாகனம் ஒன்று தரித்து ஹார்ன் அடிக்கிற சத்தம் கேட்டபோது அச்சமாக இருந்தது. மீனாட்சி வீட்டின் தலைவாசலால் தட தடவென்று ஓடிப்போனாள். பின்னர் கேட் திறக்கிற சத்தம் கேட்டது. பாலன் துணுக்குற்றுக் காதைத் தீட்டிக் கொண்டிருந்தான். வெளியில் பேசிக் கேட்பது தமிழ் என்பது ஓரளவுக்கு உறுதிப்பட்ட பின்னர்தான் அவனது கை விரல்களின் நடுக்கம் அடங்கியது. பார்த்தவன் பாடே இப்படியென்றால் பட்டவன் பாடு என்னாகும் என அவன் மனம் பதறியது. அன்றாடம் ஒடுக்குதலை எதிர்த்து முரண்பட்டுக்கொண்டிருந்த இளைய பெடி பெட்டையளௌக்காக அவனது மனசு கசிந்துருகியது.

அரசாங்கத்திடம் பண்ணை விவசாயத்துக்கென்று முன் காட்டை வாங்கியிருக்கும் முதலாளிதான் தனது பென்ஸ் காரில் வந்ததாக மீனாட்ச்சி சொன்னாள். “வெட்டப் போறாங்களா” என்று பதறிய பாலனின் தலையை தடவிவிட்ட மீனாட்ட்ச்சி பயபடாதே பாலன் தம்பி. இந்த வருசமும் உன்ர ஏயர் கொண்டிசன் கக்கூசையும் காப்பாத்தீட்டன்”
“அப்ப வாறவருசமா வெட்டப் போறானா”
“இன்னும் ஒருவருசம் அவகாசம் இருக்கு. பார்க்கலாம் என்றாள்” மீனாட்ச்சி.
“பண்ணையா வைக்கப் போறான்”
“அவனுக்கு விவசாயப் பண்ணை வைக்கிற நினைப்பே இல்லை. மர வியாவாரத்துக்கும் வருமான வரிச் சலுகைக்கும்தான் தம்பி அந்த தாயழி நாயாய் அலையுது.” என்று மீனாட்ச்சி வெறுப்போடு சொன்னாள்.
“றோட்டுக் கரையெல்லாம் இப்படி இப்படி வெட்டிக் கைவிட்ட காடுகளால வன்னியே பொட்டல் வெளியாய்ப் போச்சுது மீனாட்ச்சி.” என்று பாலன் சினந்தான்.
“தேயிலைத் தோட்டத்தில மரம் வெட்டி ஏத்தின முதலாளியின்ர கையை எடுத்திட்டுத்தான் வன்னிக்கு ஓடிவந்தனான். என்னசெய்யிறது இது உங்க ஊர்”
“அரசாங்கமே வன்னிக் காட்டை அழிக்கத் திட்டமிட்டுத்தான் தமிழ் முதலாள்மாரை ஊக்குவிக்குது மீனாட்ட்சி” பாலன் தன் கருத்தைச் சொன்னான்.
“காதரிட்டச் சொன்னன். அவன் மிரட்டின மிரட்டலில முதலாள் பயந்து போனான்”
“என்ன காதர் மிரட்டினதா” என்று பாலன் பதட்டமுடன் கேட்டான்.
“யாரைக் கேட்டு இதெல்லாம் செய்யிறாய் மீனாட்ச்சி. உன்ர தேயிலைத் தோட்டத்து வன்முறையை இங்கயும் கொண்டு வந்திடாத மீனாட்சி”
பயப்பிடாத இப்ப நான் பழைய மீனாட்சி இல்ல..”
“தெரியும் அது அஜீதா மீனாட்ச்சி. இது சாதா மீனாட்ட்சி”
“மீனாட்ட்சி சிரித்தாள்”
“அது சரி இண்ணைகு என்ன நடந்தது”
“அந்த முதலாளிப் பய முதல் முதல்ல வந்தப்ப தன்ர பெண்டாட்டியோட வந்தான்னு சொன்னேன்ல.”
“மா”
“அப்ப அக்கம் பக்கமெல்லாம் பண்ணையும் கைவிட்ட பொட்டல் வெளியுமா கிடக்க ஏன் இந்தத் துண்டுக் காட்டுமட்டும் வெட்டுபடேல்லேன்னு அந்த பொண்ணு கேட்டிச்சு.”
“ம்”
“நான் பொன்னியின் செல்வன் மாதிரிப் பெரிய பேய்க் கதையே அவனுக்கும் பெண்டாட்டிக்கும் சொன்னேன்.”
“சொல்லு மீனாட்ச்சி”
“25 வருசத்துக்கு முந்தி வேற ஒரு கொழும்பு முதலாளிக்கு அரசாங்கம் இதே காட்டக் கொடுததென்னன்.”
“ஏன் கொழும்பு முதலாளி”
“யாழ்ப்பாணமென்டா ஊர் பேர் விசாரிப்பாங்களே. அந்த கொழும்பு முதலாளி காடு வெட்ட வந்து இடதில பேய் அடிச்சு ரத்தம் ரத்தமா வாந்தியெடுத்துச் செத்திட்டதாய்ச் சொன்னேன். சரியா அதே நேரத்தில கொழுபில அவற்ர வீடு எரிஞ்சுபோனதுண்ணன். பிறகு யாரும் இந்தக் காட்டுப் பக்கம் வறதில்லேன்ணன். நான் வந்த புதிசில தெரியாம விறகு ஒடிச்சு பிறகு வாயால ரத்தம் கக்கி 3 மாசம் ஆஸ்பதிரியில கிடந்ததாச் சொன்னேன்.”
“நீ இவ்வளவு பொய் சொல்லுவியா மீனாட்ட்சி”
“நன்மைக்குச் சொல்லிற பொய்யும் உண்மை. திருவள்ளுவர் சொல்லியிருக்கார் என்று நேற்றுத்தானே சொன்னீங்க” மீனாட்ட்சி சிரித்தாள்.
“கதையைச் சொல்லு மீனாட்ட்சி”
“அந்த பொம்பிள கொஞ்சம் பயந்திட்டாள். அவதான் இரண்டு வருசமா இந்தக் காடட்டை வெட்ட விடேல்ல. பிறகு இந்த வருசம் காடு வெட்ட ஆயுத்தப் படுத்தினாங்க.. எங்க காதர் முன்ன யாழ்ப்பானத்திலதானே மீன் வித்தது.”
“தெரியும் மீன் பெட்டியில விடுதலை இயக்க நோட்டீஸ் கடத்திப் பிடிபடானல்ல. பொலிஸ் நல்ல அடியாம். இப்பவும் அவனுக்கு ஒருகாலில பிரச்சினைதானே. சரி கதையைச் சொல்லு மீனாட்ச்சி. பொலிஸ் பிரச்சினையாலதானே காதர் வன்னிக்கு வந்தது. ம் கதையைச் சொல்லு மீனாட்ச்சி”
“நான் அவனிட்ட மீன் வாங்கிற போதெல்லாம் இந்த காடு வெட்டப் பட்டால் பாலன் தம்பிக்கு விசராக்கீருமெண்ணு சொல்லிக் கவலைப் பட்டுக் கொண்டிருப்பேன். காதருக்கு தனக்கு அந்த முதலாளியைத் தெரியுமென்றான். யாழ்ப்பாணத்தில மீன் வித்தப்ப அந்த முதலாளி வீட்டுக்கும் காதர்தான் மீன் கொடுக்கிறதாம் அதால காதர் எங்களோடு சம்பந்தமில்லாத ஆள்மாதிரி அவங்க வீட்டுக்குப் போய்க் கதைச்சிருக்கிறான்”
“காடு வெட்ட இருந்தவ பயப்பிடுகிறமாதிரி அப்பிடி என்ன சொல்லிறது”
“வடகாட்டில இருக்கிற 100 ஏக்கர்க் காட்டில கைவச்சா போட்டுத் தள்ளிப் போடுவினமாம் இதை இயக்கம் உங்களுக்கு அறிவிக்கச் சொன்னதையா என்று அவர்களிடம் போய்ச் சொல்லியிருக்கிறான்.”
“அப்பிடியா, இதால எனக்கெதும் பிரச்சினை வந்திடும, ஆரைக் கேட்டு இதெல்லாம் செய்யிறியள்?”
“ம் சொல்லுங்க முதலாளி”
“இந்த நக்கல்தானே வேண்டாமென்கிறன். தமிழ்ப் படம் மாதிரி கதையை இழுக்காத சொல்லிற கதையைக் கெதியச்ச் சொல்லு மீனாட்ச்சி”
“முதலாளி ஒண்ணும் பேசெல்லையாம் ஆனா கனக்க யோசிக்கத் தொடங்க்கீற்றானாம். அவன்ர பெண்டாட்டிதான் அழத் தொடங்கீற்றாளாம்”
பாலன் கட கடவென்று சிரித்தான்.
“இந்தச் சின்னக் காட்டைத் தன்னும் அப்துல் காதரும் அஜிதா மீனாட்டியும் இல்லாம உங்களால் காப்பத்த எலாது பாலன்” என்றபடி மீனாட்ட்சி சமையலறைப் பக்கமாகப் போனாள்.

ஒரு வருசத்துக்காவது அந்தத் தெருவோரக் காட்டின் இருப்பை மீனாட்சியும் காதரும் பாதுகாத்தது பாலனுக்கு நம்பிக்கையைத் தந்தது. அதற்க்குள்ள ஒரு வழி பிறக்கும் என அவன் நம்பினான். பண்ணைக்குப் பின்புறமாக பரந்த காடு இருந்ததது. ஆனாலும் வன்னிக்கு வரும்போதெல்லாம் பாலன் எப்பவும் அந்தச் 100 ஏக்கர் காட்டில்தான் மோகமாக இருந்தான். ஆச்சரியப் படத்தக்க விதத்தில் பாலன் அந்தச் சிறுகாட்டுக்குள் அடிக்கடி வழிதவறி மணித்தியாலக் கணக்கில் பம்பரமாய்ச் ஒரே இடத்தில் சுன்று சுளன்று அலைவான். அப்போதெல்லாம் ‘சுற்றிச் சுற்றிச் சுப்பற்ற கொல்லைக்குள்’ அலகிற ஈழத் தமிழ் தலைவர்களது ராசியில் பிறந்துவிட்டேனோ என்று பாலன் அச்சப் பட்டுகொண்டிருப்பான். வேட்டைக்கார முத்துத்தம்பியோ அந்தக் காட்டுக்குள் திகைப்பூண்டு இருக்கிறதாகச் சொல்வார். யாரவது திகைப்பூண்டை மிதித்தால் திகைத்துப்போய் திசையை தவற விட்டுவிட்டுச் செக்குமாடுபோல சிறு துண்டுக்குள்ளேயே சுற்றிச் சுழன்று வருவார்களாம். பாலனுக்கு அதுதான் அடிக்கடி நடந்தது

கட்டிலில் கிடந்து கலவரப் பட்ட அந்த மூன்று நாட்களிலும் புத்தகம் வாசித்ததைத் தவிர பாலன் செய்த உருப்படியான வேலை தான் வாழ்ந்த காலத்துக்குள்ளும் இடத்துக்குள்ளும் மீழப் பயணித்ததுதான். அது அவனையும் அவனது சிந்தனையும் புதுப்பித்திருந்தது. நினைவு மீட்டலில் யானை புகுந்த தாமரைத் தடாகமாய்க் குழம்பிப் போயிருந்த அவனது சிந்தையையும் ஓரளவுக்குத் தெளிவு பெற்றது. அவன் பழம் கணக்குப் பார்த்து முடிக்கையில் “அப்துல் காதரும் அஜிதா மீனாட்சியும் இல்லாமல் இந்த சின்னக் காட்டைத் தன்னும் உங்களால்காப்பாற்ற முடியாது” என்ற மீனாட்ட்சியின் வார்த்தைகள் மட்டுமே அந்த அறையில் மீந்திருந்த்து.
முன்றாவது நாள் காட்டுக்குள் மர அணில் பாட ஆரம்பித்தபோது மூன்று மாதங்களாகத் தன்னுடைய ஜொல்னாப் பயினுள் கனத்துக் கிடந்த பேராசிரியை சுராங்கனி ஜெயவர்த்தனாவின் புதிய புத்தகத்தை வாசித்து முடித் திருந்தான். இன்னும் சிங்கள பேரின வாதத்தோடு சமரசம் செய்துகொள்ளாமல் அதனைத் தொடற்ச்சியாக விமர்சித்து வரும் ஒருசில சிங்கள அறிஞர்களுள் சுராங்கனிதான் முதன்மையானவர் என்பது பாலனின் கருத்தாக இருந்தது. கொழும்புக்குப் போகும் போதெல்லாம் பாலன் தவறாமல் சுராங்கனியைப் போய்ப் பார்ப்பான். அப்போதெல்லாம் யுத்தச் சூழலைப் பொருட்ப்படுத்தாமல் எப்பவும் உரத்த விமர்ச்சனங்களோடு திரிகிற பாலனின் பாதுகாப்பைப் பற்றியே அவர் கவலைப் பட்டுக் கொண்டிருப்பார். அவர் மிக இலகுவான ஆங்கிலத்தில் இனப் பிழவின் இருபுறத்தும் பல திறந்த புத்தகங்கள் கல்லறைக் காவியங்களாகி விட்டதைப் பாலனுக்கு உணர்த்த முனைந்தார். ”எச்சரிக்கையாய் இரு பாலன், யுதத்தை யார் எடுத்தாலும் முதற் பலி உண்மையும் நடுநிலையும் உன்னைப் போன்ற கோபக்கார ஜனநாயக வாதிகளும்தான்.” என்று சொல்லுவார். இருதரப்பு நியாயப் படுத்தல்களுக்கு அப்பால் உள்ள வெளி உண்மைகளதும் நம்மைப் போன்ற திறந்த புத்தகங்களதும் இடுகாடாகிக் கொண்டிருக்கிறது என்பார்.
அவருடன் பேசிக்கொண்டிருக்கும் போது வீர மரணமல்ல போர்க்குணமுள்ள வாழ்வே வலியதென்பதையும் பணியாத வாழ்வைவிட மகத்தானது எதுவும் இல்லை என்பதையும் பாலன் உணர்வான்.

தனது சொந்த அலுவலகதிலேயே உரத்துப் பேசினால் “அடக்கி வாசி பாலன் என்னுடைய சுவர்களுக்குள்ளும் காதுகள்” என்று சொல்லிக் கையமர்த்திக் கொண்டிருப்பார். தாய்மையின் கருணையும் கரிசனையும் நிறைந்த அந்தப் பேராசிரியை கடைசியாகப் பார்த்தபோது மிரட்சியோடிருந்தார். தன்னை வந்துபார்க்கும் தமிழ் இளைஞர்களுக்குத் தொல்லை ஏற்படலாம் என அஞ்சினார். தனது நண்பர்கள் பணியாளர்கள் வட்டத்துக்குள் பேரினவாதமும் ஊளவுத் துறையும் ஊடுருவி விட்டதாகக் காதுக்குள் கிசு கிசுகிசுத்தபோது அவரது கண்கள் பனித்திருந்தது.
வெளியில் வந்தபோது தெருவில் குட்டைத் தலைமுடியுடன் கறுப்புக் கண்ணாடி அணிந்த ஒருவர் பகத்து மாடி வீட்டைப் பார்த்துக் கொண்டு நிற்பதைக் கண்டான். அது அவனது காதலியின் வீடாக இருக்கலாம். வேறொருவன் முதுகு காட்டியபடி மோட்டார்ச் சைக்கிளில் குந்தியிருந்தான், அவன் அந்த ரோமியோவை ஏற்றி வந்திருக்கலாம் அல்லது யாருக்காகவோ காத்திருக்கலாம் என்று பாலனுக்குத் தோன்றியது. பாவம் பாலன். மிகவும் அப்பாவியாக இருந்தான். காதலிப்பதுதான் இலங்கையில் அதி முக்கியமான நடவடிக்கையென்று கருதினான் போலும். துர் அதிஸ்ட வசமாக இலங்கையில் போர்மட்டுமே முக்கியமானதாக மாறிவருகிறது என்பதைத்தான் சற்று முன்வரை சுராங்கனி அவனுக்குப் புரிய வைக்க முனைந்தர்.
வெளியே அரச மர நிழலில் ஒரு ஆட்டோ நின்றது. மக்களால் பிரதிஸ்டை செய்யப் அந்த பட்ட புத்தபிரான் சாந்தமாகக் கண்களை மூடிக்கொண்டு நிஸ்டையில் இருந்தார். யாழ்ப்பாணத்தைப்போல இராணுவத்தால் பிரதிஸ்டை கோவிலல்ல அது. முழ் வேலிகளும் யுதக் காவலும் இல்லாததால் பாலன் தமிழன் என்கிற அச்சமின்றி புத்த பகவானுக்கு முன் சென்று நெஞ்சில் கைவைத்து தலை சாய்த்து வணங்கினான். பின்னர் வெள்ளவத்தையென்று சொல்லியபடி ஆட்டோவில் ஏறியபோது பின்னே மோட்டார்ச் சைக்கிள் கிழப்பப்படும் சத்தம் கேட்டது.

ஆட்டோ நெடுஞ்சாலையில் ஏறிய பின்னும் தொடர்ந்த சிறிது நேர மெளனத்துக்குப் பிறகு “நானும் தமிழன்தான் ஐயா” என்று அந்த ஆட்டோச் சாரதி கதைக்க ஆரம்பித்தான்.
“ம்” என்றான் பாலன். அவனால் அத்தனை இலகுவாகச் சுராங்கனியின் அலுவலகத்தை விட்டு வெளியே வர முடியவில்லை.
“நான் இந்திய தமிழனையா” என்றபோது பாலன் எந்தத் தோட்டமென்று விசாரித்தான். சிறிது நேரம் பேசி நம்பிக்கை வந்ததும்
“இந்த அம்மா நல்ல சிங்கள மனுசி. கொஞ்சமும் இனத் துவேசம் இல்லை ஐயா..” என்றான்.
“தெரியும்” என்று பாலன் பதில் சொன்னான். கதையை வளர்ப்பதா துண்டிப்பதா என்று அவனுக்குப் புரியவில்லை.
ஆனால் அந்த ஆட்டோக்காரன் சம்பந்தமில்லாமல் “ஐயா உங்கள சி.ஐ.டி பின்தொடருது” என்று சொன்னான். பாலனுக்கு கொஞ்சம் திகிலாய் இருந்தபோதும் மெளனமாக இருந்தான். ஆட்டோக்காரனே தொடர்ந்து பேசினான். ”சுராங்கனி மேடத்தைப் பார்க்க புலிப் பெடியன்மாரெல்லாம் வாறதாம். அதால இங்க வாற எல்லாரையும் நோட் பண்ணுறாங்க ஐயா”
மனதில் சஞ்சலம் ஏற்பட்டாலும் “நான் திறந்த புத்தகம். பயப்பட ஒன்றுமில்லை” என்று பாலன் அலட்சியமாகப் பதில் சொன்னான். அதற்க்குமேல் அந்தப் பேச்சைத் தொடர விருப்பமில்லை. திறந்த புத்தகமாய் இருப்பதே தனது பலம் என்கிற துணிச்சல் அவனுக்குள் இன்னும் நிறையவே இருந்தது.
சிறிது நேர மெளனத்துக்குப் பின்னர் அந்த ஆட்டோசாரதி “நீங்க தமிழ்ப் புத்தகம் ஐயா” என்று மட்டும் அழுத்திச் சொன்னான். அவனது அழுத்தம் பாலனனுக்கு யாழ் நூலகத்தை நினைவுபடுத்தி மனசை ஒருகணம் துணுக்குற வைத்தது.

கடந்த மூன்று நாட்களாக “நீங்க தமிழ்ப் புத்தகம் ஐயா” என்று அந்த ஆட்டோ சாரதி சொன்ன வார்த்தைகள் திரும்பத் திரும்ப ஞாபகத்துக்கு வந்தது கொண்டிருந்தது. தன்னையும் கொன்றுபோடும் தீர்மானத்தோடு சிங்கள உளவுத் துறை கண்காணிக்கிறதாக அச்சம் ஏற்பட்டது. இது பொதுவாக எல்லாத் தமிழருக்கும் இருக்கிற அச்சம்தான். உளவுத்துறையால் கண்காணிக்கப் பட்ட தமிழ் இளஞர்கள் பலர் ஏற்கனவே காணாமல் போயிருந்தனர். அவர்களிற் சிலரைப் பாலனுக்குத் தெரியும். கண்காணிக்கப் பட்ட அவனது தோழி ஒருத்தி சிதைந்த பிணமாகப் பண்ணைப் பாலத்தில் வீசப் பட்ட போது ஒருநாள் முழுக்க வெளியில் போக அஞ்சி அறையைப் பூட்டிக் கொண்டு அழுதிருக்கிறான். எனினும் இரண்டாம் நாள் திடீரென உயர்ந்த துணிச்சலில் கோபத்தோடு தோழி என் தோழியென்று அஞ்சலிக் கவிதை எழுதினான்.
“தோழி
என் அருமைத் தோழி
பெண்மையால் தமிழ்மையால்
பலிச் சிலுவை சுமந்தவளே
தீ முட்டையாய்
தாய் மண்ணில் நீ இட்ட
கண்ணீரும் சென்னீரும்
காலத்தை மாற்றுதடி”
என்றவரிகள் கொலையுண்ட தோழியின் கறுப்புக் கட்டமிட்ட படத்துடன் வடக்குக் கிழக்கு மாகாணத்தின் சந்து பொந்துகளில் எல்லாம் இளைஞர்களால் வினியாகிக்கப் பட்டது. மூன்றாம் நாள் மீண்டும் அச்சமாக இருந்ததில் தோழியின் ஈமைக் கிரிகைக்கும் போகாது பாலன் தன் அறைக்குள் அச்சத்தோடு அழுது கொண்டிருந்தான். இது அவன் எழுதிய முக்கியமான அஞ்சலிக் கவிதை எனினும் இதற்க்கு முன்னமும் அவன் அஞ்சலிக் கவிதைகள் எழுதியிருக்கிறான். பல இலங்கைத் தமிழ்க் கவிஞர்களைக் கேட்டால் எனக்குத் தொழில் அஞ்சலிக் கவிதை என்றுதானே சொல்வார்கள்.
அவன் 13 வயதில் முதன் முதல் பாடசாலை நோட்டுப் புத்தகத்தில் எழுதிய அஞ்சலிக் கவிதை துண்டுப் பிரசுரமாகவில்லை. அப்படிப்பார்த்தால் 14 வயதில் எழுதிய ஒருபோதும் விடமாட்டோம் என்கிற அஞ்சலிக் கவிதைதான் அவன் எழுதித் துண்டுப்பிரசுரமாக அச்சடிக்கப் பட்ட முதல் அஞ்சலிக் கவிதையாய் இருந்தது. 1974ம் அண்டு கோடை காலத்தில் யாழ்ப்பானம் முழுக்க செம்மண் தோய்ந்த சைக்கிள்களில் கண்ணீர் தோய்ந்த முகங்களோடும் சபதங்களோடும் சவால்களோடும் புயலாகச் சுளன்று திரிந்த பல்லாயிரம் மாணவ மாணவிகளோடு ஒருவனாகத் திரிந்த நாளில்தான் பாலன் ஒருபோதும் விடமட்டோம் என்கிற அஞ்சலிக் கவிதையை எழுதினான்.

மண்சிவந்த சைக்கிள்களில்
மனம் சிவந்த மாணவிகள்
கண்சிந்தும் மாணவர்கள்
சிவகுமாரன் அண்ணா நீ
சென்ற வழி மறிப்போம்
மீண்டும் பிறப்பேன்
விடுதலைக்குப் போரிடுவேன்
என்று சொல்லி நீ போக
ஒருபோதும் விட மாட்டோம்.
எரிவதுந்தன் பாடையல்ல
இலங்கையென்ற பீடையண்ணா.

இதுதான் அச்சில் வந்த பாலனது முதற் கவிதை. அதுவரை இடதுசாரித் துண்டுப்பிரசுரங்களையே வெளியிட்டுவந்த கொட்டடி முற்போக்கு வாலிபர் சங்கத்தவர்கள் அந்தக் கவிதையை துண்டுப் பிரசுரமாக வெளியிட்டு வீதியாக ஒட்டினார்கள். ஆனாலும் அதற்கு முன்னமே 13 வயதில் அவன் பாடசாலை நோட்டுப்புத்தகத்தில் அஞ்சலிக் கவிதை எழுதி யிருக்கிறான். கம்யூனிஸ்ட் கட்ச்சி ஆதரவாளரும் அவனது ஆதர்சமுமான தோழர் என அழைக்கப் பட்ட தம்பிராசா மாமாவுடன் ’கந்தன் கருணை’ கூத்துப் பார்த்துவிட்டு தூக்கமில்லாமல் திரிந்த காலத்தில் அந்த அஞ்சலியைப் பாலன் எழுதினான். வெள்ளாளர் குழிக்கும் வயல் வெளி மழைத்தேக்கத்தில் குழித்தற்க்காக பள்ளர் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை சாதிவெறியர்கள் தென்னை மரத்தோடு வெட்டி விழுத்திக் கொன்றுபோட்டார்கள். கொலை காரர்கள் எல்லாரும் தீவிரமாய் தமிழர் போராட்டங்களில் ஈடு படுகிற அந்த பகுதி நாடாளுமன்ற உறுப்பினரின் வலது கைகளாம். அந்தச் சேதி ஆத்திரமூட்டுவதாய் இருந்தது. அந்த வயசிலேயே பாலன் துடி துடித்துப் போய்விட்டான்.அதுதான் அவன் எழுதிய முதல் கவிதை. அதுவே அஞ்சலிக் கவிதையாகிவிட்டது அதன்பின்னர் அஞ்சலிக் கவிதையா பாலனைப் பிடியுங்கள் என்று எல்லோருமே சொல்கிறமாதிரி அமைந்துவிட்டது. அவன் தனது முதல் கவிதையை எழுதியபோது தான் தொடர்ந்து அஞ்சலிக் கவிதைகள் எழுத வேண்டி வருமென்றோ ஈழத்துத் தமிழ்க் கவிதைகள் என்றாலே அஞ்சலிக் கவிதைகளா என்று பிறர் கேட்க்கும் நிலமை ஏற்படுமென்றறோ பாலன் நினைத்தில்லை.

மாடு குழிக்கிற தண்ணியிலே எங்க
மனிசன் குழிச்சது பொறுக்கலையா
கேடு கெட்டுச் சாதி பேசிக்கொண்டே- நீங்க
கேட்கும் தமிழீழம் யாருக்கடா
சூடு சுரணை இல்லாமல் பின்வர
சோத்துக்கு வாலாட்டும் நய்களில்லை
நாடு விடுதலை யாருக்கடா – இங்கு
நமக்குள் சமதுவம் இல்லையென்றால்

இப்படித்தான் அவனது முதல் அஞ்சலிக்கவிதை ஆரம்பிக்கிறது. அந்தக் கவிதை நோட்டுப் புத்தகத்தில் பத்துப் பக்கமம் வந்தது.
கொட்டடி முற்போக்கு வாலிபர் சங்கத்த்தினர் ஒழுங்கு செய்த கவியரங்கிற்க்கு தோழர் மாமா பாலனையும் கையோடு கூட்டிக் கொண்டு போனார். கவியரங்கிற்க்காக வந்திருந்த புதுவை ரத்தினதுரைக்கும் புரட்ச்சிக் கமாலுக்கும் ஜெயபாலனுக்கும் சேரனுக்கும் கொட்டடியைச் சேர்ந்த இளம் கவிஞனென்று பாலனை அவர்தான் அறிமுகம் செய்து வைத்தார். அந்த நோட்டுப் புத்தகத்தில் இருந்த அஞ்சலிக் கவிதையின் சில பகுதிகளை தோழர் தம்பிராசா அவர்களுக்கு வாசித்தும் காட்டினார். அந்த நாலுபேருக்குமே ஆரம்பக் கவிதை பிடித்து விட்டது. எல்லோரும் அவனைத் தட்டிக் கொடுத்துப் பாராட்டினார்கள்.
”தோழர் தம்பிராசா, எங்க சின்னத் தோழர் பாலனுக்கு யாழ்ப்பாணம் மட்டும் உலகமல்ல என்று தெரிய வேணும். கவிஞனை ஒருக்கா ஏறாவூரையும் மட்டக்களபையும் கூட்டிக்கொண்டுவந்து காட்ங்க” என்று புரட்சிக் கமால் அன்போடு சொன்னார். மிகவும் பிடித்த கவிஞரான புரட்சிக் கமாலே தன்னைப் பார்த்து சின்னத் தோழர் என்றும் கவிஞன் என்றும் சொன்னதை பல நாட்களாக பாலன் நினைத்து நினைத்து மகிழ்ந்திருக்கிறான். ”ஏறாவூர் ஒன்றும் யாழ்ப்பானத்தாருக்குப் புதிசில்லைக் கவிஞா. ஏறாவூர் முஸ்லிம்களுக்கும் யாழ்ப்பானம் புதிசில்லை. யாழ்ப்பாணத்துப் பணத்தில ஏறாவூர்க் காப்பிலைப் புகையிலைத் தோட்டக்காரரின் வியர்வையும் மணக்குதடா இளங் கவிஞா” என்றும் அவர் சொன்னார். அன்று அவர் என்ன சொல்கிறார் என்று பாலனுக்குப் புரியவில்லை. எனினும் ஓம் ஐயா ஓம் ஐயா என்று மரியாதையுடன் அமோதித்தான்.
தோழர் மாமா சொன்ன தென்னை மரத்தில் இருந்து சாதிவெறியர்களால் வெட்டி வீழ்த்தப் பட்ட சீவல் தொழிலாளியின் மரணச் சேதியும் ஏறாவூர் முஸ்லிம்களின் வியர்வை யாழ்ப்பானத்துப் பணத்தில் இருக்கிறதாய் கவிஞர் புரட்ச்சிக் கமால் தெரிவித்த புதினமும் பழைய வேலிகளைச் சரித்துக் கொண்டு இளம் பெண்கள் குவிந்த சுடலையில் ஈழப் போராட்டத்தின் முதல் சைனைட் குப்பியைச் கடித்த சிவகுமாரனின் உடல் எரிந்த காட்ச்சியும் பாலனைப பதின்மப் பருவத்திலேயே புரட்டிப் போட்டு விட்டது.

70பதுகளின் இறுதியில் வடகிழக்கில் சிங்கள அரசின் உளவுத் துறையால் பின்தொடரப் பட்ட பல தமிழர்களும் அவர்களுக்கு உதவி செய்த முஸ்லிம்களும் தொடர்ந்து காணாமல் போய்க்கொண் டிருந்தார்கள். போராளிகளான பாலனின் நண்பர்கள் சிலர் ஊரில் கோழி களவெடுத்தவனைக் கூட சுட்டு மின்சாரக் கம்பிகளில் கட்டி லேபிளும் ஒட்டிக் கொண்டிருந்ந்தார்கள். பாலனால் இதனை ஜீரணிக்க முடியவில்லை.அவன் அதனைக் கடுமையாக எதிர்த்தான். “எங்கள் புனிதமான இயக்கத்துக்கு எல்லாம் தெரியும். நீங்க போராட்டத்தைக் குழப்ப வேண்டாம்” என்று நண்பர்கள் பாலனை எச்சரித்தார்கள்.
அடிக்கடி உளவுத்துறை பட்டியகலிட்டுக் காணாமற் போனவர்களது சடலங்களையும் மின் கம்பங்களில் போராளிகளால் தொங்கவிடப்பட்ட சடலங்களையும் யாழ்ப்பாணத்துச் சந்து பொந்துகளில் இருந்து பொறுக்கி எடுத்துவர ஊர் கிழம்பும்போது பாலனும் கூடப் போவான்..
அந்த உடல்கள் துப்பக்கிக் குண்டுகளோடு புதைக்கவோ எரிக்கவோ பட்டன. புதையும் உடலுக்குள்ளோ அல்லது எரிந்த சாம்பருள்ளோ துப்பாக்கி ரவைகள் எறிகணை அல்லது விமானக் குண்டுகளின் சிதறல்களோ புதைந்திருந்தால் அவை முளைத்துக் காடாகப் பெருகுமமாம். துப்பாக்கிகளதும் பிரங்கிகளதும் கண்ணி வெடிகளதும் வித்துக்கள்தான் இந்தக் ரவைகளும் குண்டுகளும் சிதறல்களும் என்பது அப்போது யாருக்கும் தெரியாது. இப்படிப் புதைந்த போரின் வித்துகளால்த்தான் இலங்கைத் தீவு துப்பாக்கிகளதும் பீரங்கிகளதும் கண்ணி வெடிகளதும் குண்டுகளதும் காடாகிப் போர்க்களாமாகச் சிதைந்து போனது.

பாலன் வீதியில் நின்ற மீனாட்டியின் பக்கமாககத் தனது காதுகளை வீசிவிட்டு பேராசிரியை சுராங்கனி ஜயவர்தனாவின் புத்தகத்தை இரண்டாவது தடவை வாசிக்கும் விருப்பத்தோடு கையில் எடுத்தான். அந்தப் புத்தகத்தின் முக்கியமான பல இடங்களில் முதல் வாசிப்பின்போது பென்சில் கோடுகள் இழுத்திருந்தான். இரண்டாவது வாசிப்பின்போது அடிநாதமான வசனங்களின் கீழ் சிவப்பு கோடுகள் இழுக்க வேண்டுமென்ற ஆசை அவள்க்குள் பற்றிக் கொண்டது.
“சிங்கள வாக்கு வங்கியைக் சிங்களப் பெளத்த பேரினவாதமே அமைப்புரீதியாகக் கட்டுப்படுத்துகிறது. அதனால் அது ஆழும் கட்சியையும் பிரதான எதிர்க் கட்சியையும் சிங்களம் மட்டும் சட்டத்துக்குப் பின் உருவான நிர்வாக யந்திரத்தையும் தனது பூரண கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு ஏனையோருக்குக் குறிப்பாகதச் சரணாகதி அடைய மறுக்கும் தமிழருக்கு எதிராகச் செயல்ப் படுத்துகிறது. ஒற்றை ஆட்ச்சி முறைமை தேர்தலில் ராமன் வென்றாலும் இராவணன் வென்றாலும் நாட்டில் எப்பவும் சிங்கள பெத்த பேரின வாதத்தின் சர்வாதிகாரமே தொடர வழிவகுத்துள்ளது. ஒற்றை ஆட்சி அரசியல் அமைப்பால் தமிழருக்கு இன்று மட்டுமல்ல நாளையில் நம்பிக்கை வைக்கும் வாய்ப்புக்கூட மறுக்கப் பட்டுள்ளது. சிங்களவரின் ஒற்றையாட்ச்சியை நிராகரிக்கும் தமிழர்கள் முஸ்லிம்கள் சார்பாக உள்வாரியாகவும் ஒற்றையாட்ட்சியை நிராகரிக்க முன்வர வேண்டும்.” என்ற வரிகளில் சுராங்கனியின் ஆன்மா ஒட்டியிருந்தது. அந்த வரிகளின் கீழ் சிவப்பு பேனையால் கோடிழுக்க வேணும். சிவப்புப் பேனாவுக்காக பாலன் மீனாட்சியைத் தொடர்ந்தும் நச்சரித்துக் கொண்டிருந்ததான்.
“மூர்க்கனும் முதலையும் கொண்டது விடாது” என்று சிரித்தபடி மீன்னாட்ச்சி நான்கு கிலோமீட்டர் தூரத்திலிள்ள மல்லாவிக்குச் சைக்கிளில் போனாள். “ஊர்ப் புதினங்களும் விசாரிச்சிட்டு வா மீனாட்ட்ச்சி” என்று பாலன் அவளை வழியனுப்பி வைத்தான்.
நோய்வாய்ப் பட்டிருந்த பாலனைத் தனியே விட்டுச் செல்ல மீனாட்ட்சி விரும்பவில்லை. எனினும் பாலன் விடாகண்டன் என்பதால் அவளுக்கும் வேறு மார்க்கம் இருக்கவில்லை. பாலன் ஒருகல்லில் இரண்டு மாங்காய் விழுத்துகிறவன். மீனாட்சி மல்லாவிக்குப் போனால் பாலியாற்றில் நடந்த சண்டைபற்றிய முழுத்தகவல்களும் வீட்டுக்கு வந்துவிடும் என்பதை பாலன் அறிவான். பாலியாற்றுத் தேவதை பற்றி நினைத்தபோது பாலனுக்கு குயிலின் நினைப்பு வந்து துணுக்குற வைத்தது. குயிலுக்கு பாலியாற்றில் ஒற்றர்கள் இருக்க வாய்ப்பில்லையென்று பாலன் அடிக்கடி தன்னைத் தேற்றிக் கொண்டான்.

பண்ணை வீட்டின் கண்காணியான மீனாட்ச்சி பெற்றதாயைப் போல நோய்வாய்ப்பட்ட பாலனைப் பார்த்துக் கொண்டாள். பலதடவை பாலியாற்றில் தான் கண்ட அற்புதங்கள் பற்றியும் தேவதை பற்றியும் அவளிடம் சொல்ல வாயெடுத்தான். சொல்லியிருந்தால் அவனது மனசும் கொஞ்சம் இலேசாகி இருக்கும். காட்டாற்றங்கரைத் தேவதைப் பெண்ணைப் பற்றியும் அன்று நடந்த மோதல் பற்றியும் மீனாட்சி எதாவது சேதி கொண்டுவருவாள் என்று பாலன் காத்திருந்தான். ஏற்க்கனவே அந்தத் தேவதை பாலனின் பார்வையில் பாதிப்புகளை ஏற்படுத்தியிருந்தாள். குறிப்பாகப் அந்தக் காட்டாற்றங்கரைத் தேவதை பரந்த ஆனால் தட்டையான நவீனத்துவ அறிதல் என்கிற சிறையில் இருந்து பாலனை விடுதலை செய்தாள். பல்வேறு கால இடத் தளங்களில் செயற்படுகிற வாழ்வு பற்றிய பிரக்ஞையின் மாயக் கதவாக அவள் திறந்து கொண்டாள். போராட்டங்களிலும் கிளற்சிகளிலும் கனலும் தீயில் கொட்டும் எண்ணைத் தாரையாக பெண்கள் சம்பந்தம் இறங்குவதை அவன் எப்பவோ உணர்ந்திருந்தான்.
“அறத்திற்கே அன்புசார்பு என்பர் அறியார்
மறத்துக்கும் அ·தே துணை” என்கிற திருக்குறளுக்கு விளக்கம் சொல்லும்போது “போராட்டதின் றோமான்ரிசம்” இதுதான் என்று சிவலிங்கதாஸ் சொன்னது நினைவுக்கு வந்தது.

“காற்றில் ஏறி அவ் விண்ணையும் சாடுவோம்
காதற் பெண்கள் கடைக்கண் பணியிலே”
என்கிற பாரதியாரின் மோகனாங்கியத்தை விடுதலைப் போராளியான அந்தத் தேவதையின் வரவு அவனுக்குள்ளும் நிறைத்தது. அச்சங்களை மூட்டை கட்டி வைத்துவிட்டு காட்டாற்றங் கரைக்கு வந்து என்னைப்பார் என்கிற அந்தத் தேவதையின் அழைப்பை பாலன் காதலுடன் உணர்ந்தான். எரியும் பாலைவனத்து லில்லி மலரான பெண்கள்தான் விடுதலைப் போராட்ட அழகியலின் மையமாக இருந்தார்கள்.

இரும்புப் படலையைத் திறந்துகொண்டு மீனாட்சி வரும் சந்தடியை எதிர் பார்தபடிக்கு நெடுநேரமாக பாலன் கடந்த காலங்களை மீண்டும் வாழ்ந்துகொண்டிருந்தான். படலைச் சத்தம் கேட்டதுமே பாலன் முற்றத்துக்கு வந்துவிட்டான்.
“முந்தநாள் பாலியாத்துக்கு ஆமி வந்திட்டுதாம்.” என்று குரல் கொடுத்தபடியே மீனாட்சி உள்ளே வந்தாள்.. “பெரிய சண்டை நடந்திருக்கு. காட்டுக்கிள இருக்கிற எங்களுக்கு ஒரு மசிரும் தெரியேல்ல. நானும் மூண்டுநாளாய் றேடியோவும் கேக்கேல்ல, நாலைஞ்சு நாளாய்க் காதரும் இந்தப் பக்கம் வரேல்ல.”
“மீணாட்ச்சி பாலியாத்துக்கு எப்ப இராணுவம் வந்ததாம்”
“அம்நெஸ்ரி இன்ரநெசனல்காறர் கொழும்புக்கு வந்திருகாங்க அதுதான்”
“என்ன மீனாட்சி, அம்னெஸ்ரி கொழும்புக்கு வந்ததுக்கும் இலங்கை ராணுவம் பாலியாத்துக்கு வந்ததுக்கும் என்னம்மா சம்பந்தம்.”
“அவசரப் படாத பாலன். அம்னஸ்ரி கொழும்புக்கு வந்தபிறகு சிங்கள ஆமிக்காறர் முன்ன அவசரம் அவசரமா அடையாளத்தோட புதைச்ச சடலங்களை கிளறி எடுத்து எரிக்கிறாங்களல்லா.”
“ம் இயக்க வானொலியிலும் சொன்னாங்க.”
“பாலியாத்தில எங்கயோ ‘மாஸ் கிறேவ்’ இருக்காம். அதைக் கிளறி எரிக்கத்தான் சிங்கள ஆமி வந்தாங்களாம். பெடியள் ஒரு சிங்கள ஆமிக்காறனைப் பிடிச்சிட்டாங்க. அவன்தான் சொன்னானாம்” என்றாள் மீனாட்சி
முன்னர் இராணுவம் பலமாக இருந்தபோது வடகிழக்கு மாகணங்களில் இருந்து கடத்திக் கொன்றவர்களில் சிலரைப் பாலியாற்றுப் பக்கமா புதைச்சிருக்கலாம் என்று பாலனுக்கும் தோன்றியது.
“எந்த இயக்கம் ஆமிக்காறனைப் பிடிச்சது”
“எல்லா இயக்கப் பெடியளும் ஒற்றுமையால்லா நிண்டு அடிபட்டிருக்கிறாக.அதைச் சொல்லிச் சொல்லிச் சனங்க தெருத்தெருவா தீபாவளி கொண்டாடுறாங்க. நீ என்னடா எந்த இயக்கமென்று கேட்கிறாய்”
”என்ன மீனாட்ட்ச்சி நக்கலா”
“எனக்கு கவிதாதான் எல்லாம் சொன்னாள். இயக்கம் எல்லாம் ஒண்டாய்ச் சேர்ந்திட்டுதுகள் மாமி எண்டு என்னை அவள் கட்டிப் பிடிச்சுக் கொஞ்சிச் சைக்கிளால விழுத்தி எழுப்பி, ஐயோ கொஞ்ச நேரம் அவள் என்னப் படுத்தி விட்ட பாடு பாலன். அவளிட்ட கதையைக் கேட்டு தப்பி வாறத்துக்கிள போதும் போதுமெண்டாயிற்றுது.”
“இதை விட்டிட்டு கதையைச் சொல்லுங்க மீனாட்ட்சி” என்று பாலன் அவசரப்பட்டான்.
“ அவ சொன்ன மாதிரியே சொல்லிறன் தம்பி.”
மீனாட்ச்சி வலிப்பு வந்தவள்மாதிரி துள்ளித் துள்ளி யாரையோ கட்டி அணைத்து முத்தமிடுகிற அபினயங்களோடு கவிதாவின் கள்ளக் குரலில் பேசத் தொடங்னாள்.
”மாமி பெடியள் ஒற்றுமைப் பட்டிட்டாங்கள் மாமி, இனி எங்கலை ஆராலும் அசைக்கேலாது மாமி. பாலிஆத்து அடிபாட்டில எல்லாரும் ஒண்டா நிண்டதால எத்தின அதிசயம் மாமி நடந்திருக்கு. மாமி ஒரு இயக்கம் சுத்திவரக் கண்ணிவெடி வைச்சுதாம். மாமி இதைக் கேளன் ஒரு இயக்கம் வரேக்கிளையே செல் அடிச்சுக் கொண்டுதான் வந்துதாம், மாமி ஒரு இயக்கம் வந்ததும் வராமலும் பொறி வெடியளும் கிளைமோரும் பொருத்திச்சுதாம். மாமி பாலியாத்தைச் சுத்தி எல்லாக் காரியங்களும் இப்படி நடந்துகொண்டிருக்க ஒரு இயக்கம் காடுகளுக்கிளால முப்பது முப்பதைஞ்சு கிலோமீற்றர் போய் சிங்கள ஆமியிண்ட முகாம் வாசல்லயே குண்டு வைச்சிட்டுது மாமி. மாமி. இப்பிடி ஒவ்வொரு இயக்கமும் ஒவ்வொரு காரியத்தைப் பாத்துக் கொண்டிருக்க மாமி ஒரு இயக்கம் துணிஞ்சு பாலியாத்துக்கிள இறங்கி ஆமிக்கு நெத்தி அடி அடிச்சிருக்கிறாங்கள். மாமி சிங்களவர் ஹெலிபிலும் வந்தவங்களாம். பெடியள் இறங்க விடேல்ல. பிறகென்ன மாமி எங்கிட அண்ணாமாரும் அக்காமாரும் ஒரு ஆமிக்காறனை பிடிச்சிட்டாங்கள். மாமி அதோட ஆமி திரும்பிபயும் பாராமல் ஓடீற்றுதாம் மாமி. ஒரு ரகசியம் சொல்லிறன் மாமி ஒருத்தருக்குஞ் சொல்லாத மாமி பாலியாத்துச் சண்டையில ஓரு அம்மன் தோன்றினதாம் மாமி.”
பாலனுக்கு மயிர் கூச்செறிந்தது. சாமி வந்ததுபோல உடல் நடுங்கியது. மீனாட்ச்சி அதனைக் கவனிக்கவில்லை. அவள் தொடர்ந்து கதை சொல்லிக் கொண்டிருந்தாள்.
“எல்லா இயக்கமும் ஒற்றுமைப் பட்டு நிக்கிறதைப் பாத்திட்டு அந்த அம்மனுக்குச் சரியான சந்தோசமாம். அதால மாமி அம்மனும் எங்களுக்குத்தான் சப்போடடாம். மாமி அம்மன் அப்படியே பாலி ஆத்தை என்னோட சண்டை பிடிக்கேக்கிள அம்மா அகப்பையைத் தூக்கிறமாதிரித் தூக்கி, ஆமிக்காறருக்கு கண்ட பாட்டுக்கு அடிக்கத் தொடங்க்கீற்றுதாம். மாமி மாமி அதோட ஆமிக்காரர் ஓடீற்றாங்க மாமி. பெடியள் இதை இன்னும் வெளியால சொல்லேல்ல மாமி. நீயும் அம்மன்ர கதையை வெளியால விட்டிடாத மாமி”
பாலன் ஏன் பேசாமல் இருக்கிறான் என்று மீனாட்ச்சி ஆச்சரியப் பட்டபடி தொடர்ந்தாள்.
“ஐயோ ஒரு கொஞ்ச நேரத்துக்கிள அந்தப் பொண்ணு என்னப் பிடிச்சு வைச்சு ஆடிவிட்ட ஆட்டத்த என்னண்ணு சொல்லிறது. ஒருமாதிரித் தம்பிச்சன் பிழைச்சனெண்டு நான் கிழம்ப திரும்ப ஓடியந்து மாமி மாமி இன்னொரு ரகசியம் மாமி எண்டபடி என்ர சைக்கிள் காண்டில் பாரில பிடிச்சிட்டாள். கடவுளே ஆற்ற முகத்தில முழிச்சனெண்டு நான் திகைச்சுப்போய் நிக்க நான் வீட்டுக்குத் தெரியாம இப்பவே இயக்கத்துக்கு ஓடிறன் மாமி ஒருதரிட்டயும் சொல்லிப் போடாத மாமி என்கிறாள். சொல்லமாட்டன் எண்டு நூறு சத்தியம் செய்தபிறகுதான் காண்டில இருந்து கையை எடுத்தாள்.”
பாலன் சுதாகரித்துக் வீட்ட விட்டு ஓடவேண்டாமெண்டு நீ அவளுக்குப் புத்தி சொல்லேலயா என்று மீனாட்சியைக் குற்றம் சாட்டுவதுபோலப் பார்த்தான். “அந்தப் பெட்டை ஊமைப் பெட்டை எப்ப பாத்தாலும் ஊமைப் பெட்டை மாதிரித் திரியயும் அதா இவ்வளவும் கதைச்சது மீனாட்ச்சி”
“அதுதான் பாலன் எனக்கும் நம்பமுடியேல்ல. பாலன் நேற்றிருந்த தமிழர் வேற. இண்டைக்கு வேற”
“அவள் இயக்கத்துக்குப் போனா, தகப்பனுக்கும் தாய்க்கும் மாரடைப்பு வந்திரும் மீனாட்ச்சி. நீ அவளுக்குப் புத்தி சொல்லி மறிச்சிருக்கோணும்.”
“பாலன் நானே அவளிண்ட வயசில தலை மறைவாயிட்டன். தேயிலைத் தோட்டத் துரையை கட்டிவைச்சிட்டு பொலிஸ் வர ஓடீற்றன்” என்று மீனாட்ட்சி சமாளித்தாள்.

பாலன் அன்று நடுப்பகல் மீண்டும் பாலியாற்றுக்குப் போனான். கடுங் கோடை நாட்ளில் நடுப்பகலில்தான் சாமங்கள் போல ஊர் ஒடுங்கி இருக்கும். கொழுத்தும் வெய்யிலுக்கு ஆற மல்லாவியில் தேனீர்க் கடையில் தரித்தபோது அவனோடு பேசின எல்லோருமே பாலியாற்றுச் சமர் பற்றியும் அம்மன்பற்றியும் சொன்னார்கள். “எல்லாம் கோலியாத்தும் தாவீதும் சண்டைதானே” என்று கிறிஸ்துவரான தேனீர்க் கடைக்காரர் சொன்னார். “கர்த்தர் ஓருநாளும் இந்த அனியாயம் செய்யிற ஆமிக்காறருக்கு பின்னுக்கு நிப்பாரா? மாட்டார் கவணும் கையுமா நிக்கிற தாவீது மாதிரி எங்கிட பிள்ளையள்தான் நிக்குதுகள்” என்று அவர் நயம்படச் சொன்னது கவியரங்கத்தை நினைவு படுத்தியது.
தேனீர்க் கடையில் இருந்த ஒரு கிளவர் வன்னிவிழானங் குழம் அம்மன்தான் அண்டைக்குப் பெடியளைக் காப்பாறினது.” என்று உறுதியாகச் சொன்னார். “மற்றவை வந்து வன்னிக்குள்ள கால்வைக்க அம்மன் விட்டிடுவாளா”.
“அதப்பிடி அன்னியர் உள்ளுக்குவந்து சண்டித்தனம் விட ஒருகாலமும் மடு மாதா விடமாட்டாள். இது மடு மாதாஎண்டுதான் எனக்குப் படுகுது. ஐஞ்சு திருக்காயத்தையும் பெடியள் பாத்திருக்கிறாங்க” தேனீர்க்கடைக்காரர் தன்னுடைய கருத்தை வலியுறுத்தினானர்.
அதுவரை தேனீர்க் கடையின் மூலையில் எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டபடி தன் தையல் மெசினில் கருமமே கண்ணாய் இருந்த அக்கரைப்பற்றுக் காரரான கனீபா தொழுகைக்காக எழுந்தார். அவருக்கு ஊரில் நல்ல மதிப்பிருந்தது. அவரது தொழில் தையல் மட்டுமல்ல. அறுவடைக்காலத்தில் அக்கரைப் பற்றில் இருந்து உறுமால் கட்டிய அறுவடைக் காரரையும் அழைத்துவருவார். வவுனிக் குளத்துக்குக் கீழே குத்தகைக்குக் காணி எடுத்து வயலும் விதைப்பார். “நல்ல மனிசருக்கு ஆபத்தெண்டா அல்லா அவுலியாக்களை அனுப்பிறது. தமிழன் ஒருக்காலும் முஸ்லிம்களைக் கைவிட்தில்ல. கைவிடப் போறதுமில்ல அதால பாலியாத்துக்கு அவுலியா ஒருத்தர்தான் வந்திருக்கிறார்” என்றபடி பின் கட்டை நோக்கி நடந்தார்.

வழியில் தெரிந்தவர்களோடுகூட நின்று கதைக்காமல் பாலன் பாலியாற்றை நோக்கிச் சைக்கிள் மிதித்தான். ஆனாலலும் வழியில் கும்பிடப் போன தெய்வம் மாதிரி தெரிந்த போராளி ஒருவன் குறுக்கே வந்தபோது பாலனுக்குச் சந்தோசமாய் இருந்தது.
“என்னடா தம்பி அண்டைக்கு நடந்தது“ என்ற பாலன் அந்தப் போராளியின் பக்கத்தில் போய் தரை மிதித்தான்.
“அண்டைக்கு எங்களால ஒண்டும் செய்ய ஏலாமப் போச்சுதண்ண. ஒரு அம்மன்தான் எங்களைக் காப்பாதினது.”
“ஆச்சரியமா இருக்கு. ஊரெல்லாம் இதைத்தான் சொல்லுறாங்கள். இதெல்லாம் நடக்கிற காரியமா தம்பி” பாலன் அந்தப் போராளியைக் கிளறி விட்டான்.
”நானனும் அடிபாட்டுக்குப் போனனான் அண்ண.” பையனுக்குக் கோவம் பொத்துக் கொண்டு வந்துவிட்டது.
“சும்ம ஒரு பேச்சுக்குச் சொன்னனான். அதை விட்டிடு நீ சொல்லடா தம்பி”
“சிங்கள ராணுவம் திமு திமு எண்டு நாலு பக்கத்தாலும் வெட்டுக்கிழி வந்து விழுமாப்போல குவிஞ்சிட்டாங்கண்ண” என்று அந்தப் போராளி சொன்னான்.
“ம்”
“நல்ல காலத்துக்கு எல்லா இயக்கமும் ஆக்களைக் கொண்டந்து இறகீற்றுது. நாங்க வேற வேற இயக்கமெண்டாலும் எல்லாரும் ஒண்டாப் படிச்சு ஒண்டாச் திரிஞ்ச சினேகிதப் பெடியள்தானே. முதலில ஆமியை ஒட்டன் குழம் சந்தியில வைச்சு மறிக்கப் பாத்தம் முடியேல்ல. அவங்கள் மூண்டு முறிப்பாலயும் ஆத்தி மோட்டையாலயும் வந்து குவிஞ்சிட்டாங்க. நாங்க கரும்புள்ளியானில மறிக்கப் பாத்தம். சிங்களவர் கொஞ்சப்பேர் எங்களுக்கு முந்தி கெலியில போய் கரும்புள்ளியானிலை இறங்கிக் கவர் எடுத்திட்டாங்கள். நாங்கள் நேர பாலியாத்துக்குப் பின்வாங்கீற்றம். அவங்கள் கெலியிலும் பறந்து பறந்து சுடத் தொடங்கீற்றாங்க. கொஞ்சப்போரக் கொண்டந்து பின்ன்பக்கமா வயலுக்கிள இறக்கி எங்களைச் சுத்தி வழைக்கப் பாத்தாங்க நாங்கள் அதுக்குமட்டும் இடங்கொடுக்கேல்ல. தொடந்து அடிச்சுக்கொண்டிருந்தம். சிங்களவனுக்கும் ஆகப் பின்னுக்குப்போய் வயலுக்கிள இறங்கப் பயம். எங்கழுக்கும் முழுப்பேரும் சாகிறதா இல்லாட்டிப் பாதியாவது தப்பிப் பிழைக்கிறதா எண்டு முடிவெடுக்க வேண்டிய நிலமை.”
“பத்தக் காட்டுக்குப் போறதெண்டாலும், ஒரு கிலோமீட்டர் வயல் வெளியால ஓட வேணுமே. அதுக்கிள ஒரு நாப்பது ஐம்பது பேரைப் போட்டுத் தள்ளியிருப்பாங்களே. சொல்லு தம்பி”
“சொல்ல புல்லரிக்குதண்ன. திடீரெண்டு ஆத்தங்கரை மண் மேடுகளுகளுக்க இருந்து எங்கலுக்கு ஆதரவா நூறு நூற்றைம்பது குரல் கேட்டுததண்ன.”
“என்ன குரல்”
”அடிபடுங்கடா. நாங்ககளும் உங்களுக்கு உதவ உயிர்த்து வருவமடா. உதவிக்கு வருவமடா அடியுங்கடா அடியுங்கடா’ எண்டு ஒரே கூச்சல். நாங்கள் திரும்பக் கவர் எடுத்தம்.
ஒரு சத்தமில்லை. தலைக்குமேல ஒரு இலைகூட அசையேல்ல. எங்களோட சேந்து காடும் கவர் எடுத்திட்டுதண்ண. அப்படியே மரங்களும் செடியளும் புல்பூண்டுகளும் எங்களை மூடீற்றுதண்ண. பாலியாறு முழுக்க ஒரே சிங்களதுசணங்கள் கேட்டுதண்ண. பாத்தா மற்றக் கரை தெரியாம அமிக்காறர் குவிஞ்சுபோய் நிக்கிறாங்கள்.. அவங்கிட பெரியவன் நாங்கள் நிண்ட பக்கத்து மருத மரத்தடியைக் காட்டி சிங்களதில ஏதோ சொன்னான். வேற ஒருத்தன் மண்வெட்டியைத் தூக்கிக் கொண்டு சேறு பிரளாம கெந்திப் பாஞ்சு பாஞ்சு ஆத்தைக் கடந்து எங்க பக்கம் வந்திட்டான். அவன் மருத மரத்தடிக்குப் போய் மண்வெட்டியால மண்ணைச் சும்மா தட்டிப் பாத்தான். மண்வெட்டியால அந்த இடதில தொட்டதுதான் தெரியும் ‘பரா வெளிச்சக் குண்டு’ அடிச்சமாதிரி ஒரு மின்னல் வெட்டிச்சுது. பாத்தா சூரியன் உதிச்ச மாதிரி ஒரு அம்மன் நிக்குது. எங்களுக்கு வைச்ச கண் வாங்க முடியேல. நாத்து நடுகிற பெண்டுகள் மாதிரி அம்மன் ஒருக்காக் குனிஞ்சுதண்ண. நிமிரேக்கிள ரொக்கட் லோஞ்சறை தூக்கிற மாதிர் பாலிஆத்தை தூக்கீற்றுது அண்ணை.”
பாலனின் கண்கள் ககசியத் தொடங்கியது உடல் நடுங்கியது “பிறகு” என்று அவனது உதடுகள் யந்திர கதியில் அசைந்தன.
“பிறகென்னண்ண அப்படியே ஆதிசேடன் படமெடுத்த மாதிரி பனைமர உயரத்துக்குப் பாலியாறு ஆடுத்ண்ண. சுளட்டி ஒரு அடி. எங்கிட முகத்தில சேறு விழேல்ல தண்ணிதான் விழுந்திச்சு, தண்ணிபட்டதும் எங்களுக்கு அமுதம் குடிச்சதுமாதிரித் தெம்பு வந்திட்டுதண்ண. முகத்துத் தண்ணியை வளிச்செறிஞ்சு போட்டுப் பாத்தா மற்றக் கரையில ‘மகே அம்மே’ எண்டு சிங்களத்தில கத்திக் கொண்டு இரு ஆயிரம் சேத்துச் சிலையள் ஆடுதண்ண. மண்மேட்டுக்கிள இருந்து விடாதயுங்க அடியுங்க அடியுங்க எண்டு ஓரே கூச்சல். ஏன்ரா சும்மா நிக்கிறீங்கள் எண்டு துசணத்தால பேச்சு விழுகுதண்ன.”
“சொல்லு தம்பி” பாலனுக்கு உடல் சூடாகி வியர்க்கத் தொடங்கியது.
“அதேனண்ண சிங்கள ஆமி வாயத்துறந்தா சிங்களத்தில பச்சைத் தூசணம்தான் பேசுறாங்களண்ண. அதேனண்ண எங்கிட தழபதிமார் சிலபேரரும் வாயைத் திறந்தா அதை அப்படியே தமிழைல மொழி பெயர்க்கிற மாதிரியல்லாண்ண பேசினம். நீங்கள் கவிஞர் தானேண்ண உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும் சொல்லுங்கோ.”
“கதையச் சொல்லு தம்ப”
“நாங்கள் சுட ஆயுத்தம். ஒரு செக்கண்ட் பிந்தியிருந்தா ஒரு நானூறு ஐஞ்ஞூறெண்டு போட்டுத் தள்ளியிருப்பம்.”
“அப்ப நீங்க சுடேல்லயா”
“திடீரெண்டு பாலியாறு சுட வேண்டாம் சுட வேண்டாமெண்டு கத்திக் கொண்டு தன்பாட்டுக்கு எழும்பி குறுக்க விழுந்து நிலத்துக்கும் எங்க உயரத்துக்குமா ஒரு மலைப்பாம்பு நெளிஞ்ச மாதிரி நெழிஞ்சுது. அதுதான் ஆமியைச் சுட விடாம எங்களைத் தடுத்துப் போட்டு தண்ன. எங்க தளபதிகுக் கோவம் வந்திட்டுது. ஏன் என்று பாலியாத்தைப் பார்த்து அதட்டினார்.
பாலியாறு பேசுதண்ண ‘அவங்கள் எல்லாம் பெந்தோட்ட கங்கைக்கும் கும்புக்கன் ஓயா ஆத்துக்கும் இடையில இருக்கிற என்னை மாதிரிச் வறண்ட சித்தாறுகளிண்ட உங்கள மாதிரி ஏழைப் பிள்ளையள். ஒரு நாளைக்கு அரசாங்கத்தை விட்டிடு நீங்களும் அவங்களும் பேசுவீங்க. அப்ப நல்ல நினைவாக இது இருக்கட்டும். அவங்களைப் போகவிடுங்க. இந்த முறை சுட வேண்டாம்’ சிவகுமாரன் விட்டமாதிரி விடுங்க” ஒரு தாய்மாதிரிப் பாலி ஆறு புத்தி சொல்லிச்சுதண்ண, அப்ப எங்க தளபதி கத்தினார்.. ‘பாலி அத்தா எங்களையும் சிவகுமாரன்மாதிரிச் சைனைடைக் கடிக்கச் சொல்லிறியா’
”அப்ப ‘உங்களுக்கு நாங்கள் இருக்கிறம்’ எண்டு பாலிறும் அம்மனுக் திருப்பிக் கத்திச்சினம். எங்க்ளுக்குக் காது கிழிஞ்ச மாதிரி இருந்துச்சு.”
“எனக்கு உடம்பெல்லாம் சிலிர்க்குதடா நீ மிச்சக் கதையைச் சொல்லடா தம்பி”
”பிறகென்ன எங்கலைச் சுட வேண்டாமென்று சொல்லிப் போட்டு அம்மன் விழையாடத் தொடங்கீற்றா. விரலை வழைச்சு கோலி விழையாடிற மாதிரி மருத மரங்களை வில்லாய் வளைச்சு ஆமிக் காறற்ற ராங்கியளுக்கும் ஆமட் காறளுக்கும் அடிக்கிறா, ஒரு ராங்குக்கு அடிச்ச அடியில சிறகு முழைச்ச யானை மாதிரி மேல எழும்பி மருத மரங்களையும் உடைசுக் கொண்டுபோய்த் தொப்புக்கடீர் எண்டு விழுந்துதண்ண. கெலிக்கும் ஏதோ பிரச்சினை அண்ணை. அதுவும் புகைஞ்சு கொண்டு திரும்பிப் போயிற்றுது. எல்லாம் ஒரு கொஞ்ச நேரத்துக்குள்ள. துண்டக் கானம் துணியக் காணமெண்டு ஆமிக்காறர் ஓடத் துவங்கினாங்கள் அண்ண. நாங்கள் துரத்த எழும்ப தளபதி வேணாமெண்டிடார். அப்பவும் எங்கிட தளபதி மண்வெட்டியோட வந்த சிங்களவனை ஒரு குழந்தையை பிடிக்குமாப் போல வெறும் கையால எட்டிப் பிடிச்சிட்டார். பாலி ஆறு தடுக்காட்டி அண்டைக்கு ஒரு நூறாவது விழுத்தியிருப்பம்.”

பாலனுக்கு அதற்க்குமேல் கதைகேட்கப் பொறுமையில்லை. தன்னோடு பேசிக் கொண்டிருந்த போராளியையும் மறந்துபோய் நன்றிகூடச் சொல்லாமல் பாலியாற்றை நோக்கிக் கிளம்பினான். ”பாவம் கவிஞர் பயந்திட்டார் போல. வயுத்துக்கிள ஏதும் செய்யுதுபோல” என்றபடி போராளி பாலனையே பார்த்துக் கொண்டு நின்றான்.


visjayapalan@gmail.com

Series Navigation