விபச்சாரியை பெண்ணென்று ஆங்கீகரிப்பதும், சூசானும்*

This entry is part [part not set] of 41 in the series 20080320_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


சூசான், புத்தகங்கள் என்ன சொல்கின்றன என்பதை நீ தெரிந்து கொள்ளவேண்டும். சமீபகாலம்வரை புத்தகங்களென்றால் முகத்தைத் திருப்பிக்கொண்டிருந்தவள், இப்போது அவைகளைத் தொட்டதற்காக வருந்திக்கொண்டிருக்கிறேன், கிறிஸ்துமஸ் கேக்கிற்கு முன்னால் உட்கார்ந்துகொண்டு புலம்புகிற குடிகாரனைப்போல. வாசிப்பதில் பாதிப்பென்று ஏதுமில்லை அதாவது உடல்ரீதியாக. இப்பொழுதாவது ‘ஏதோவொரு இடத்திற்கு’ எனக்கு வரமுடிந்திருக்கிறதே என்பதை நினைக்கயில் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. ‘போன்னர்(Bonner) ‘கோல்’விழாமல் தடுத்தபோது நீ எங்கிருந்தாய் என யாரேனும் கேட்டால், கூச்சமோ வெட்கமோமின்றி அதற்கான பதிலை என்னால் சொல்லமுடியும். அன்றைக்கு எனது சகோதரியின் பிள்ளைகளில் ஒருவனுக்கு உடல்நலமில்லாமலிருந்ததால், இங்கே டப்ளனில்(Dublin) அவள் வீட்டில்தானிருந்தேன். கட்டிலில் படுத்தபடி, ஒருவர் மாற்றி ஒருவர் தலைவரை போர்வையை இழுத்து போர்த்தியபடி தொலைகாட்சி பார்த்துக் கொண்டிருந்தோம். என்னுடைய முறை வந்தது, நானும் போர்வைக்குள் தலையை இழுத்துக் கொள்கிறேன், சட்டென்று அது நடந்து முடிந்துவிட்டது. நல்லவேளை அக்காட்சியை மறு ஒளிபரப்புச் செய்தார்கள். அப்படித்தான் அன்றைக்கு அமெரிக்கர்கள் பாக்தாத் நகரில் குண்டுமழை பொழிந்தபோது, ‘பப்’பொன்றில்(Pub) இருந்தேன், சுற்றிலும் நிறைய அமெரிக்கர்கள். டப்ளினில் (Dublin),குறைந்தபட்ஷம் ஒரு அமெரிக்கனையாவது பார்க்கமுடிகிற ‘பப்பும்’ அதுவொன்றுதான். அயர்லாந்து நாட்டின் பாரம்பரிய இசையைக் கேட்பதற்கென்றே அமெரிக்க பிரஜைகள் அங்கே கூடுகிறார்கள். வாசிப்பை நிறுத்திக்கொண்ட வாத்தியக் குழுவினருடைய பார்வை இப்போது தொலைகாட்சிப் பெட்டியின் மீது ஆணி அடித்ததுபோல பதித்திருக்கிறது. எங்களைப்போலவே வாத்தியக் குழுவினர் நடந்துகொண்டதும், தொலைக்காட்சிப் பெட்டியில் அவர்கள் பார்வை பதிந்திருந்ததவிதமும், என்னவோ போலிருந்தது. குண்டுகள் விழுகிறபோது எழுந்த சீழ்க்கை ஒலியை, அதிநவீன சிந்தெட்டிசர் எழுப்பும் ஓசையுடன் இணைத்து கற்பனைசெய்யக்கூட சங்கடமாக இருந்தது. அமெரிக்கர்களைத்தவிர மற்றவர் முகங்கள் வெளுத்துப் போயிருந்தன. அதற்குப்பிறகு, தொடர்ந்து வாசிக்க இசைக் குழுவினருக்கு ஆர்வமில்லை. சூசான், அந்த சமயத்தில் நீ எங்கிருந்தாய்? பொதுவாக நீ சீக்கிரம் உறங்கச் செல்பவளில்லையா? அப்படித்தான் போப்பாண்டவர் வந்த அன்றைக்கு நான் ‘கோர்க்'(Cork)கிலிருந்தேன். உனக்கு ஞாபகமிருக்கிறதா? போப்பாண்டவர் நிகழ்ச்சி நிரலில் ‘கோர்க்’ இல்லையென்பதை தெரிந்து வைத்திருந்த மக்கள் கூட்டம் கூட்டமாக அங்கே போனார்கள். சூசான்.. நீ எங்கிருந்தாய்? சொல்ல வேண்டாம், அவசியமில்லை, நீ எங்கே இருந்திருப்பாயென்று எனக்குத் தெரியும். புத்தகவாசிப்பை நான் தொடங்கினதற்கு ஒரு காரணம் வேண்டுமெனில் ‘எங்குமில்லை’ பிரதேசத்திலிருந்து நான் வந்ததற்காவென்று சொல்லலாம். கென்னடியை சுட்டபோது நீ எங்கிருந்தாயென? யாரேனும் உன்னைக் கேட்டால், உன்னிடத்தில் அதற்கான பதிலுண்டு என்பதை நான் அறிவேன். ஆனால் என்னைக் கேட்டால் வழக்கம்போல ‘எங்குமில்லை”யென்றுதான் சொல்லவேண்டும்.. அதாவது எனது சகோதரியுடன் சாலையை ஒட்டியிருந்த கால்வாய்கரையில் கையில் டார்ச்சுடன் (அது சரியாக எரியாது, பேட்டரிக்கும் பல்புக்கும் சரியான தொடர்பினை உண்டாக்கவென்று அவ்வபோது அதன் தலையில் தட்டவேண்டும் அல்லது ஏதாவது செய்தாகவேண்டும்) கடைவரை நடந்து சென்றதையும், சேறு படிந்திருந்த நமது காலணிகளில், பனியில் உறைந்திருந்த புற்கள், கோட்டோவியங்கள் எழுதியதையும் ஞாபகப்படுத்திக்கொண்டு, நீயென்றால் அதனை, ‘ஏதோவொரு இடமாக’ அடையாளப்படுதுவாய். என்னால் முடியாது. வழியில் வாத்தியக்குழு – சரியாய்ச் சொல்ல வேண்டுமெனில் ‘துருத்திக் குழல் வாத்தியக்குழு'(The bagpipe band) – மற்ற வாத்தியக்குழுவிடமிருந்து அவர்களைப் பிரித்துப் பார்க்கவோ அல்லது அக்குழுவினர் துருத்திக் குழல்களை பிரதான வாத்தியக் கருவிகளாகக் கொண்டிருந்ததாலோ, ஏதோவொரு காரணத்திற்காக அவ்வாறு பெயரிட்டு அழைத்ததாக ஞாபகம் – கிளாடிஸ் மஹெ·பி வீட்டில் (அதாவது அவள் கிராமத்திற்குத் திரும்பும்வரை குடியிருந்த வீட்டில்) ஒத்திகை பார்த்துக்கொண்டிருந்தார்கள். கிளாடிஸ்ஸ¤க்குத் தொழில் விபச்சாரம், விபச்சாரி. அதனாலென்ன? விபச்சாரிகள் ‘எங்குதானில்லை’? ‘எங்குமில்லை’மாதிரியான இடங்களிலுங்கூட இருக்கத்தான் செய்கிறார்கள். சட்டென்று எவருக்கும் பிடித்துப்போகும் பெண்மணி, நேர்மையற்றவளென்கிற பேச்சிருந்தாலும் அன்பானவள், சிறுவர் சிறுமியர்புடை சூழ இருப்பவள். அவர்கள் மீதான அவளது பிரியத்தை ஹிக்கரி ஹோலரு(Hickory Holler)க்கும் ஒருபடி மேலேயென்று சொல்லலாம். பையன்களும், பெண்களும் பார்ப்பதற்குக் கடைகாரர்கள், விவசாயிகள், கூலிகள், வாடகை ஊர்தி ஓட்டுனர்கள் போலிருந்தனர். கடைக்குப் போகும்போதெல்லாம், தவறாமல் குறிப்பாக இரவு நேரங்களில் அம்மா,”கால்வாய்ப் பக்கமாக நடக்கவேண்டாம், சாக்கடையில் விழுந்து தொலைப்பீர்கள்” என்று எச்சரிப்பதுண்டு, அவளது எச்சரிக்கையை மீறுவதென்றால் எங்களுக்குக் கொண்டாட்டம், அதற்காகவே கால்வாய்ப் பக்கமாய் நடந்து செல்வதுண்டு. வீட்டைவிட்டு வெளியே வந்தவுடன் முதல் வேலையாக டார்ச் லைட்டை எரியவிடுவோம், கற்றையாக ஒளி வெளிப்பட்டதும் பரந்திருக்கும் வானத்தில், மேல்வானத்திலிருந்து அடிவானம்வரையிலும், தலைக்குமேலேயும், பின்னர் கீழிறக்கி காலணிகள்மீதும் பாய்ச்சுவோம், பின்னர் பால்வெளியில் ஒளிக்கற்றையை ஆட்டம் போடச் செய்து, அதனைக் கேலி செய்தபடி கடந்து செல்வோம். எனக்கென்ன தோன்றுகிறதென்றால், ஒருவேளை டார்ச் ஒளியை ஒத்திகைப் பார்த்துக்கொண்டிருந்த வாத்தியக் குழுவினரில் ஒருவன் கண்டிருக்கலாம், பிறகு வெளியில் வந்து எங்களிடத்தில் ஜான் எ·ப் கென்னடி சுடப் பட்டதை அதாவது அவர் இறந்துபோனதை சொல்லியிருக்கலாம், அச்செய்தி நாள்முழுதும் இயக்கதிலிருந்த வயர்லெஸ்மூலம் அவர்களுக்குக் கிடைத்திருக்க வேண்டும். ஆனால் என்னை வியக்கவைக்கும் விடயம், ஒத்திகையின்போது துருத்திக் குழல்கள் எழுப்பிய சத்தத்துக்கிடையே, கென்னடி கொலையுண்ட செய்தியைக் அவர்களால் எப்படி கேட்க முடிந்தது என்பது. இன்னொரு சாத்தியமும் இருக்கிறது: கால தாமதமாகவந்த இசைக் கலைஞர்களில் ஒருவன் அச்செய்தியைக் கொண்டுவந்திருக்கலாம், அல்லது வெகு நேரத்திற்கு முன்பாகவே கென்னடி இறந்த செய்தியை அவர்கள் தெரிந்துவைத்திருந்து, எங்களைக் கண்டதும் அச்செய்தி இன்னமும் எங்களை எட்டவில்லை என்பதை யூகித்துக்கொண்டு, சொல்லிவிடுவது நல்லதெனத் தீர்மானித்திருக்கலாம். நாங்கள் “எங்குமில்லை” பிரதேசத்திலிருந்து வந்தவர்கள் என்பதால், கென்னடி இறந்து பலமணிநேரங்கள் ஆகியிருக்கவேண்டும், தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அச்சம்பவத்திற்கு பிறகு, “எங்குமில்லை’ பிரதேசத்திலிருந்து வந்திருந்த அநாமதேயப் பெண்ணென்றவகையில் எனக்கேற்பட்ட வலிகளுக்குத் நிவாரணம் தேடுவது அவசியமாயிற்று, வாசிக்கத் தொடங்கினேன். ஒருநாளிரவு, கிளாடிஸ் ‘மாக்எம் (திருவாளர் மாக் எம்- (MacM) என்ற வாடிக்கையாளரோடு இருக்கையில் அவளுக்கு ஒருவித வலிப்பு வந்திருக்கிறது. அச்செய்தி மடமடவென்று பரவ, அன்று முதல் அவள் வீட்டிற்கு வருவதை ஆண்கள் நிறுத்திக்கொண்டார்கள். ஆனாலும் அவள் தங்களைப் பற்றி எதையாவது உளறிக் கொட்டிவிடப் போகிறாள் என்றஞ்சியதால், வழக்கமாக கொடுத்துவந்த பணத்தை அவர்கள் நிறுத்தவில்லை. ‘கிளாடிஸ்’க்கும் இந்த ஏற்பாடு ஒருவகையில் மகிழ்ச்சியைத் தந்தது. கிடைத்த பணம் அவளை அண்டியிருந்த சிறுவர் சிறுமியர் வளர்ப்புக்கு தேவையானதாக இருந்தது. சூசான், இரவுவிடுதிகளில் புழங்கும் பெண்களை எடுத்துக்கொள், தெருவிளக்கு அளவில் விரலில் மோதிரத்தை அணிந்திருந்தும், அவர்கள் விரல்களில் நீலம் பாரிக்காததும், அவை இற்றுப் போகாததும் ஆச்சரியம். சூசான், செல்லமே! ‘எனக்குத் திருமணமென்று ஒன்று நடந்தால், எனது வாழ்க்கையின் பல ஏக்கங்கங்களையும் பூர்த்திசெய்துகொள்வேன், ஆனால் அவற்றுள் எனது திருமணம் ஒன்றல்ல’, என்று நான் கூறுவதற்கு ஒருபோதும் வாய்ப்பில்லையென்று பலரும் நினைக்கின்றனர், அதில் உண்மையில்லை. சிறுமியாக இருந்தபோது இளம்பிள்ளை வாதத்திற்கு ஆசைபட்டதுண்டு. நமது உயிருக்கு அதனால் ஆபத்தில்லை என்பதும், ஊனம் நமது வசீகரத்தைக் கூட்டவல்லது என்பதையும் அறிந்துவைத்திருந்தேன். நான் ‘எங்குமில்லை’ பிரதேசத்திலிருந்து வந்தவளென்மதை நினைவிற் கொண்டால், இந்த ஊனம், அந்த ஊனமென்றல்ல, எதுவென்றாலும் சந்தோஷப்பட்டிருப்பேன். கடைசியில் புத்தகங்களை துறந்தவளாகவும், எதிலும் பிடிப்பற்றவளாகவும் வாழ்க்கையை அமைத்துக் கொள்வேனென்று பலரும் எதிர்பார்த்தார்கள், அப்படியேதும் நடந்துவிடவில்லை. உனக்குத் தீப்பெட்டி வேண்டுமா? ம்..பிடி. நீ மெழுகுவர்த்தியில் சிகரெட் பத்தவைக்கிறபோதெல்லாம் எங்கோவொரு மாலுமி மரணிக்கிறான் தெரியுமா? நானும் என்பங்கிற்கு சரக்குகளோடு நிறைய கப்பல்களை மூழ்கடித்திருக்கிறேன். குளியலறையில் மின்சாரத்தைத் துண்டித்துவிட்டு மெழுகுவர்த்தி ஏற்றி வைப்பதை சமீபக் காலங்களில் வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறேன், அதுவொரு சுகமான அனுபவம். அதிகம் செலவுபிடிக்கிற உணவு விடுதிகளுக்கெல்லாம் சென்றதுண்டு, அங்கும் அவர்கள் மெழுவர்த்தியைத்தான் ஏற்றி வைக்கின்றனர். நான் ஏதோ பெரிதாக சாதித்துவிட்டேனென்று சிலர் சத்தியம் செய்யக்கூடும். என்னைக் கேட்டால், ஊனமுற்றவளாக இருந்திருந்தால் கூடுதலாக சாதித்திருப்பேன், நான் வேறுபட்டவள் என்பது தெரிந்திருக்கும். ஆனால் புத்தகங்கள், சூசான் புத்தகங்களைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தேன். கழுத்துவரை அமிழ்ந்துவிட்டேன், சுவைத்தேன், கவளம் கவளமாக விழுங்கிவைத்தேன், ஒரு சிலர் உயிர்ச்சத்து மாத்திரைகள் எடுத்துக்கொள்வதில்லையா? அப்படி. திக்குதெரியாத ஒரு தேசத்திலிருந்த என்னுடைய அனுபங்கள் எப்படியிருந்திருக்குமென்று கற்பனை செய்துபார். நம்மைப் பற்றி புத்தகங்கள் கொண்டிருந்த அபிப்ராயங்கள் தவறானவை என்பதைப் புரிந்துகொண்டபோது, காலம் கடந்திருந்தது. எனது வாழ்க்கையில் சோதனைமிகுந்த காலமென்று சொல்லவேண்டும். இன்றைக்கும் புத்தகங்கள் ஒவ்வொன்றும் எனக்குக் காதற்கடிதங்களாவே படுகின்றது, என்ன.. அவை அய்யோக்கியர்களால் எழுதப்பட்டிருக்கின்றன. புத்தகங்களை எழுதியவர்கள் நம்மைச் சுத்தமாக மறந்திருப்பது எரிச்சல் ஊட்டுகிறது அதாவது அப்புத்தகங்களில் உண்மையில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதை நாம் அறியும்வரை அது தொடரக்கூடும். எதையாவது சொல்லித் தொலைத்திருக்கலாம், நம்மைப்பற்றி எதையுமே சொல்லாமலிருப்பதென்பது ஆக மோசம். புத்தகங்களில், பெண்கள் பிள்ளைபெறுவதை நான் வாசித்ததில்லை, சூசான் சொல்லு! நீ வாசித்திருக்கிறாயா? நேற்றுவரை இருந்த குடும்ப எண்ணிக்கையில் ஒன்றைக் கூட்டவேண்டிய நேரம்; பிரசவித்திருக்கிற தங்கள் மனைவியரை பார்க்கவென்று வேகவேகமாய் மருத்துவனை படிகளிலேறி மூச்சிறைக்க நடந்துவரும் கணவன்மார்கள்; பெண்களருகே பச்சைக் குழந்தைகள்(சற்றுமுன்புவரை அப்படியேதுமில்லை) அல்லது இறந்துபோன மனிதனுக்கு நான்கு பிள்ளைகள் (ஏதோ அவைகளெல்லாம் வானத்திலிருந்து குதித்ததைபோல) என்றெல்லாம் எழுதுபவர்கள், சம்பந்தப்பட்ட பெண்ணின் பிரசவங்கள் குறித்து பேசுவதில்லை: குமட்டலில்லை வாந்திமில்லை, பிரசவ வேதனைகளில்லை, தங்கள் கணவன்மாரிடம் இரவு நேரங்களில் கொஞ்சம் முதுகுபக்கம் தாங்கிப்பிடியுங்களேன் என்கிற கெஞ்சுதலில்லை. கிழித்தலில்லை, கத்தரிப்பு அல்லது வெட்டுதலில்லை, அலறலில்லை, வீறிடுதலில்லை, இரத்தப் பீச்சுகளில்லை, விரிந்த கருப்பையில்லை. ஆகப் பிறப்பைக் குறித்து அவர்களுக்கு எதுவுமே வேண்டாம், தெரிந்தென்ன ஆகப்போகிறது, அதைத் தெரிந்துகொள்ளாதவரை யுத்தத்திற்கு ஆள் திரட்டுவது அவர்களுக்கு ரொம்பச் சுலபம். சூசான்! அங்கே அதோ முலைக்காம்பில் பாலுறிஞ்சுகிறதே அக்குழந்தை மிகபெரிய யுத்த வீரனென்று ஒருநாள் பேரெடுக்கக்கூடும். தாராளாமாக எடுக்கட்டும், ஊர்பேர் தெரியாத பெண்ணொருத்தியின் சாரசரி ஆண் சினேகிதன் கூடத்தான் நினைத்தால் ஹீரோவாக முடியும்: உதாரணத்திற்குத் தீப்பிடித்த பக்கத்துவீட்டு சிறுவர் சிறுமியரை காப்பாற்றுதல் அல்லது லி·பேயில்(Liffey)ல் குதித்து தற்கொலையிலிருந்து ஒருவனை மீட்பது மாதிரியான செயல்கள்- உண்மையில் இதிலேதும் ஹீரோத்தனம் இருப்பதாக நான் நினைப்பதில்லை, சொல்லப்போனால் இவைகளெல்லாம் அடுத்தவர் விவகாரங்களில் அனுமதியின்றி தலையிடுவது. ‘ம்.. என்னசொல்ல வருகிறேன் என்பது உனக்குப் புரியுமென்று நினைக்கிறேன். ஹீரோவென்று பேரெடுக்க யாரையாவது கொல்ல வேண்டுமென்பதில்லை. நமக்கு ஆர்வமூட்டும் பல விடயங்களில் சூதிருக்கிறது. சூசான்! இன்னொரு விடயம்.. நீ முதலில் ஓரிடமா நின்று நான் சொல்வதைக் காதில் வாங்கு. எளிதில் உணர்ச்சிவசப்படுவதும், வேளைக்கு உறங்கச் செல்வதும் உனக்கு வழக்கமாகிவிட்டது. நான் யாருக்காகவும் அடங்கிப்போகின்றவள் அல்ல? எதற்காக அடங்கிப்போகவேண்டும்? அவர்கள் அடங்கிப் போகின்றவர்களா என்ன? ஒருபோதும் நடவாது. சூசான் உன்னால் நேற்று நடந்ததொன்று நினைவுக்கு வருகிறது, ஒரு பிள்ளை தனது தாயிடம், “அம்மா.. நான் நல்லபிள்ளையாக நடந்துகொள்கிறேனா? எனக் கேட்டது. அந்த பிள்ளை பரம சாதுவாகவே இருக்கட்டும், அப்படியிருப்பதால் பலனுண்டா? சொல்லேன். சில விடயங்களை நாம் அவசியம் தெரிந்துகொள்ளவேண்டும், அதில் தப்பானவைகளும் அடக்கம். என்ன தெரிந்துகொள்ளவேண்டுமென ஒரு சில விநாடிகளில் தெரிவிக்கிறேன். நான்மாத்திரம் புத்தகமொன்று எழுதுவதென தீர்மானித்தால், பயப்படவேண்டாம் நன்குக் கேட்டுக்கொள், நானொன்றும் எழுதுவேனென்று தீர்மானமாகச் சொல்லவில்லை. எதற்காக முகத்தை இப்படி ‘உம்’மென்று வைத்திருக்கிறாய் சூசான், கொஞ்சம் சிரியேன், சிரிப்பதால் ஒன்றும் குடிமுழுகிப் போகாது. சகோதரி பிரிஜித்தா, ‘ஆங்கிலத்தில் நான் திறமைசாலியென’ அடிக்கடி சொல்வாள், ஏனோ அதனை கொஞ்சம் வருத்தத்துடன் அவள் காலணியில் பார்வையை பதித்தபடி சொல்வாள், அவளைப் பொறுத்தவரையில் ஆங்கிலத்தில் கெட்டிக்காரியாக இருப்பவள் ஐரிஷ் மொழியில் கெட்டியாக இருக்கமுடியாதென நம்புகிறாள், பாவம் பிரிஜித்தா. ‘ஏதோவொரு தேசத்திற்கு’ அழைத்துச் செல்லும் வார்த்தைகளுடைய தந்திரத்தை அல்லது வழிமுறைகளை நான் நேசித்ததை மீண்டுமிங்கே நினைத்துப்பார்க்கிறேன். ‘Hangar’ என்ற சொல்லுக்கு, ‘விமானத்தை நிறுத்திவைக்கும் கொட்டகை’ என்று அறியவந்தபோது சந்தோஷமாக இருந்தது. அச்சந்தோஷம் ‘hanger’ பற்றி நினைக்கும்போதும், எனது அறையை ஒழுங்குபடுத்துகிறபோதும், ஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனைக்காக தேவாலயம் செல்லவென்று எனது கோட்டினை எடுக்கிறபோதும், விமானத்தில் பயணிக்கும் சந்தோஷமாகத் தொடர்ந்தது. பிரார்த்தனைகள் எனது ஆன்மாவிற்கு கடவுளின் அநுக்கிரகத்தை பெற்றுத் தருகின்றன. ஒருமுறை வயிறு முட்ட ஜவ்வரிசி பாயசம் குடித்ததைப் போல (‘கஸ்டர்ட்’ என்றால் உண்மையில் பிரியம்), உணர்ந்தேன். பிரார்த்தனை முடியும் தருவாயிலிருந்தது, வீட்டிற்குத் திரும்பியதும் சாப்பிடவேண்டும் என நினைத்துக் கொண்டேன். பிரார்த்தனையிலிருந்தாலும் அல்லது உண்வருந்தப் போகிறோம் என்றாலும் சின்னச் சின்னை விடயங்கள் மிகவும் முக்கியம். அப்படித்தான் ஒரு ஞாயிற்றுக் கிழமை பிரார்த்தனையின்போது என்ன செய்தேன் தெரியுமா? அடிக்கடி நேரத்தைப் போக்கவென்று, வரிசையாக எதையோ பட்டியலிட்டுக்கொண்டு முனகினேன். பட்டியல் வரிசை அவ்வபோது மாறும், ஒருமுறை ‘ பத்து கட்டளைகளை’ முடிந்தமட்டும் வரிசையாகச் யோசித்து சொல்லிப் பார்த்துக் கொண்டதுண்டு. சூசான் நான் புரிந்துகொண்டது என்னவெனில் ‘ஓரினச் சேர்க்கையினராக நாம் இல்லாதிருப்பின் ‘கட்டளைகளுக்கும்’ நமக்கும் எந்த சம்பந்தமுமில்லையென தாராளமாகச் சொல்லலாம் .’பிறன் மனையாள் நயவாமை நன்று(1)’ என்ற வாக்கியம் எல்லோருக்கும் பொருந்தும். சூசான்! உன்னிடத்தில் அதை மறைத்து என்ன ஆகப்போகிறது, என்னோட இந்த மாற்றத்திற்கு அதுவுமோர் காரணம். ம்.. நல்லது, மறுபடி புத்தகங்களுக்கு வருகிறேன். நான் மாத்திரம் புத்தகமொன்று எழுத முடியுமெனில், நமது சார்பாக சொல்ல வேண்டியதை ஒளிவுமறைவின்றி சொல்வேன்: எனது பிள்ளைகளை ஈவு இரக்கமின்றி கொன்றது, எனது மகன்களை போர்முனைக்கு அனுப்பியது, விடுதியொன்றில் குவளையில் மூத்திரம் போனது ( குறித்துகொள், மறுநாள் காலை விடுதியில் தங்கியிருந்தவர்களுக்கு அக்குவளையால் நோய் ஏதும் வராமலிருக்க வெந்நீர்கொண்டு கழுவினேன்). நாயொன்றுடன் புணர்ந்தது (குறித்துக்கொள், மனிதர்கள் அனைவரும் இப்படித்தானிருப்பார்களோ என்ற ஐயம் நாய்க்கு வந்துவிடக்கூடாது என்பதற்காக பிறகு அதனை பழையபடி கீழே இறக்கி, விட்டுவிட்டேன்). சூசான், என்ன நான் சொல்வது உனக்கு அதிர்ச்சியாக இருக்கிறதா? உலகெங்கும் கோவில்கள் மற்றும் தேவாலயச் சுவர்களில் மனிதர்கள் மற்றும் விலங்குகளின் புணர்ச்சியைக் காட்சிப்படுத்தியிருக்கிறார்களென்பது உனக்குத் தெரியுமா? உண்மைதான், கற்களுக்கும் சொற்களுக்கும் வேறுபாடுகள் இருக்கின்றன. கற்களை குற்றம் சொல்வது எளிது. போருக்குச் சென்ற என் பிள்ளைகள், பிறர் பிள்ளைகளைக் கொன்றாலும் பரவாயில்லை? எந்த விக்கினமுமின்றி திரும்பவேண்டுமென பிரார்த்தனை செய்வதுண்டு. கொல்லப்பட்ட பிள்ளைகள் சம்பந்தமாக நான் வாய் திறப்பதில்லை, வாய் திறந்தால், பிற பெண்மணிகளும் என் வழியைப் பின்பற்றி விடுவார்களென்கிற அச்சம். எனக்கு பிரச்சினையேதுமில்லை, இதுபோன்ற அபத்தமான கதைகள் இருக்கும்வரை. ஆனால் நான் சொல்வதை ஒருவரும் நம்பப்போவதில்லை. குதிப்பேன், தாவுவேன், உயர்ந்த கட்டிடங்களுக்கு மேலாகப் பறந்து செல்வேன் என்றெல்லாம், எழுதுகிறேனென்று வைத்துக்கொள், மாயையைத் தத்ரூபமாக வெளிபடுத்தியிருக்கிறேனென்று புகழ்வதற்கு ஒரு கூட்டமுண்டு, பதிலாக எனது உயிர்வாழ்க்கை இரண்டு விடயங்களுக்கு ஆசீர்வதிக்கபட்டிருக்கிறது: ஒன்று கற்பனாதிறன், மற்றது ஈரத்தன்மைகொண்ட யோனி எனப் புத்தகத்தைத் தொடங்கினாலோ (உனக்கு வேண்டுமானால் அது ஆசீர்வதிக்கபட்டதாக இருக்கலாம்) பலருக்கும் அது கற்பனையல்ல உண்மை, எனது நிஜ வாழ்க்கையைத்தான் எழுத்தில் சொல்லியிருக்கிறேன் என்பார்கள். கட்டிடங்களிலிருந்து கீழே குதிப்பது, ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு பறந்து செல்வது, எளிதான விடயமல்ல, ஆச்சரியபடவைப்பது ஆனால் மற்றது? சூசான்.. உண்மை நான் மறுக்கவில்லை. உன் தரப்பில் நியாயமிருக்கிறது, நான் கவனத்துடன் எழுதவேண்டும். தங்களுக்கு நேர்ந்த இன்னல்களை மீள்பார்வை செய்யவென்று ஒரு சிலர் எழுதுகின்றனர் அல்லது பிறருக்கு இன்னல்களை இழைத்து, நாளும் தங்கள் இதயத்தில் சுமக்கும் சங்கடங்களின் பாரத்தை இறக்கி வைப்பதற்காகவென்று ஒரு சிலர் எழுதுகின்றனர். நான் எல்லாவற்றையும் இறக்கியாகணும், எல்லாவற்றையும் ஒரு முறையாவது பார்த்தாகணும், அப்படி பார்ப்பதிலிருந்து என்னை விடுவித்துக்கொள்ள முடியாதென்றாலும் பரவாயில்லை. பிரச்சினைகளுக்கான தீர்வுகளையறிய நீ முயற்சிக்காதவரை, அவற்றைப் பார்ப்பதற்கு உனக்கு உரிமையுண்டு. பள்ளியில் படிக்கிற காலத்தில் சரித்திர பாடத்தை நீ விரும்பியது உண்டா? சூசான்.. உனக்கு பார்னெல்(Parnell) பிடிக்குமா? எனக்கு பார்னெலையும் பிடிக்கும், கிட்டியையும்(Kitty)பிடிக்கும். மைக்கேக் கோலின்ஸையும் ( Michael Collins(2) வாசிக்க விரும்பினேன். முப்பதாண்டுகள் போரை(3) எனக்கு அறவே பிடிக்காது. எது எப்படியோ அவைகள் சொல்வதனைத்தும் உண்மையென்று நான் கொள்வதில்லை. ஆக சில பொய்களும் இருக்கின்றன. ‘சில பொய்களும் இருக்கின்றன’ என்பதை ஏற்றுக்கொள்கிறபோது, அவைகள் உண்மையென்று சொல்வதுங்கூட பொய்களாக இருக்கலாமில்லையா? சரித்திரமெழுதும் எண்ணம் எதுவும் எனக்கில்லை, காரணம் இருக்கிறது. நமக்குப் பிடித்தமான செய்தித் துணுக்குகளின் அடிப்படையில் என்ன எழுதமுடியும், சாமர்த்தியமிருந்தால் வேறொன்றோடு முடிச்சுபோடலாம், மற்றபடி அதிலிருந்து பெரிதாக தெரிந்துகொள்ள ஏதுமில்லை. அதற்கு சரித்திரம் என்ற பெயர்வைத்து நம் தலையில் கட்டியதைத் தவிர வேறென்ன நடந்தது. எங்கிருந்து இவர்களுக்குச் செய்திகள் கிடைக்கிறதோ? நான் செய்திகளையும் விரும்புவதில்லை. பெரும்பாலும் அவை நடந்து முடிந்த அல்லது நடக்கவிருக்கிற போர்கள் குறித்தே பேசுகின்றன, அச்செய்திகளின் பின்னணியில் நம்மை பயமுறுத்தும் எண்ணமிருக்கிறது. உலகில் செய்திகள் மாத்திரம் இல்லையெனில், ஆண்களில் சிலர் நன்னடத்தையுள்ளவர்களாக இருந்திருப்பார்கள். நமக்குத் தொடர்பில்லாத நாடுகளுடைய செய்திகளில் நம்மை மூழ்கடிக்கிறார்கள், அப்படிசெய்வதால் உள்ளூர் அபத்தங்களிலிருந்து மக்களைச் சுலபமாய் திசைதிருப்ப முடிகிறது. சொல்லப்படும் செய்திகள் நமக்குச் சந்தோஷத்தை அளித்துவிடக்ககூடாதென்கிற நல்லெண்ணத்துடன் கணிசமான நேரத்தை ஒதுக்கிச் செயல்படுகின்றனர். இரவில் நம்மை வேதனைப்படுத்துவது போதாதென்று, மறு நாளும். யார் எக்கேடுற்றாலும் அவர்களுக்கென்ன? மாலைநேரங்களில் செய்தித்தாள் அலுவலகங்களில் என்ன நடக்கிறது தெரியுமா, முதலில் ‘அம்மாக்கள்’ வீட்டிற்குத் திரும்புகிறார்கள். அவர்கள் போன சிறிது நேரத்திற்கெல்லாம் ‘யுத்தங்களில்’ ஆர்வமில்லாத ஒண்டிக்கட்டைப் பெண்களும் வீட்டிற்குத் திரும்புகிறார்கள். வீட்டில் தனிக்கட்டையாயிருக்கும் ஆண்களும், அப்பாக்களும் தங்கிவிடுகிறார்கள். இந்த அப்பாக்கள், ஏற்கனவே அதாவது திருமண பந்தத்தில் தங்களை இணைத்துக்கொள்ளும்வரை இரவு முழுக்க நின்று வேலைசெய்ய பழகியிருந்தவர்கள். எனவே இரவுநேரங்களில் வேலைசெய்வதில் அவர்களுக்கு ஆட்சேபணைகளில்லை. சூசான், எந்த நேரமும் குண்டுபோடக்கூடும் என்பதாகத்தானே இங்கு நிலைமையிருந்தது, பேயறைந்தது போல பெண்கள் இருக்கவும் அதுதானே காரணம். ஆனால் அப்படியேதும் நடக்காதென அறியவந்தவுடன், நீண்ட விடுமுறைக்குத் தயாரானோம், என்ன நடந்தது. மீண்டும் பழையபடி அதே நிலைமை. இரவு நேரங்களில் கண்விழித்து பணிபுரியும் ஆண்களுக்கு உலகில் ‘அமைதி’ திரும்பிவிடக்கூடாது. சூசான்! இந்த ஆண்களால் நமக்கேதும் பிரச்சினைகள் கூடாதென்றால், அவர்களை கட்டிலில் போட்டு கூரையைப் பார்த்தபடி படுக்கச்செய்யவேண்டும், அப்படியில்லையெனில் சமையற்கலையிலோ அல்லது ஆடை அலங்காரத்திலோ இழுத்துப்போடவேண்டும். ஒருமுறை பத்திரிகையாளன் ஒருவனோடு இரவொன்றினை கழிக்கவேண்டியிருந்தது. இருவரும் ஒன்றாகப் படுத்தோம். அந்த மாதிரியான நேரத்திலும், அவன் தனது பணியையே நினைத்துக்கொண்டிருந்தான் என்பது என் அபிப்ராயம். கிட்டத்தட்ட மூன்று விநாடிகள் அவன் பரவசத்தில் இருந்திருக்கலாம், அதாவது நான் அந்நிலையை அடைவதற்குச் சற்று முன்பாக: கண்கள் வெறித்தபடி இருக்கின்றன, வாழ்க்கையின் அரிதான அத்தருணத்தின்மீது பிடிப்பற்று ஒட்டிக்கொண்டு, போகத்தின் உச்சத்தில் ஸ்தம்பித்தவன், ஒருவித பயத்துடன், வெள்ளத்தால் இழுத்துச் செல்லப்பட்டவன்போல அல்லது சூறைக்காற்றால் வாரிச் செல்லப்பட்டவன்போல, சட்டென்று விலகினான். புணர்ச்சியில் ஆர்வமிருந்தபோதிலும் அதன் அந்தரங்கத்தில் அக்கறைகொள்ளாதவன் என்பது புரிந்தது. அவர்கள் செய்திகளைச் சேகரிக்கிற இலட்சணமும் புரியவந்தது: புணர்ச்சிக்குப் பிறகும் தூக்கமென்பதில்லை, இரவு முழுக்க கண்விழித்திருக்கிறார்கள். தங்களைச் சுற்றிலும் பகலாகவே இருக்கிறதென்கிற நினைப்புடன் செயல்படுகிறார்கள் என்பதை எனது சொந்த அனுபவம் உறுதிபடுத்தியது. சிறிது நேரம் கடந்திருக்கும், விடிகின்ற நேரம், உணர்ச்சியின் கொந்தந்தளிப்பில் தவித்த நான், அதனைத் தணிக்குமாறு அவனிடம் வேண்டினேன், இயலாதென்றான். அவனுக்கு அதினினும்பார்க்க வேறு முக்கியப் பணிகளிருக்கிறதாம், ‘எவ்வாறெல்லாம் ஏழைகள் பாதிக்கப்படுகிறார்கள்’ என்பதுகுறித்து எழுதவேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறேன், என்றான். அதாவது புறக்கணிக்கப்பட்ட மனிதர்கள், மன உளைச்சலுக்கு ஆளானவர்கள், தெருவாசிகள், வேலைவாய்ப்பு இல்லாதவர்கள் ஆகியோரது வேதனைகளை எழுதவேண்டுமாம். நான் அவனிடம், ‘ஏழைகளென்ற வார்த்தையையே நான் கேட்டறியாததுபோல பேசுகிறாயே?’, என்று கேட்டுப்பார்த்தேன். ‘தங்கள்படும் வேதனைகளை அவர்களே உன்னிடத்தில் சொல்லக்கூடிய வாய்ப்பு, உண்மையிலேயே இருக்கிறதா? நீ நம்புகிறாயா?, என்றும் கேட்டேன். நானென்றால் தவிர்ப்பேன். என்மீது அவனுக்குள்ள நல்ல அபிராயத்தை குறைத்துக்கொள்ளும் விருப்பம் எனக்கில்லை. அடுத்தவரிடத்தில் உனது ஏழ்மையை வெளிச்சம்போட்டுக் காட்டுவதிலுங் பார்க்க வேறு கேவலம் உலகில் இருக்கமுடியாது. ஆனாலும், என்போன்ற ‘எங்குமில்லை’ பிரதேசத்திலிருந்து வந்தவர்களுக்குங்கூட கென்னடி கொலையுண்ட செய்தியை கொண்டுபோய் சேர்ப்பதால், கண்விழித்து செய்தி சேகரிக்கிறவர்களைப் பாராட்டியே தீரவேண்டும். இதில் இன்னொரு சங்கடமும் இருக்கின்றது. இரவு விடுதிகளில் ஆட்டம்போட்டுக் கொண்டோ அல்லது உறங்கிக் கொண்டோ இருப்பவர்களுக்கு யார், யாரைக் கொன்றால்தான் என்ன? தெரிந்து என்ன ஆகபோகிறது? அதானாற்தான், எனக்கு சரித்திரமேதும் எழுத விருப்பமில்லையென்று சொல்கிறேன். சரித்திரப் பாடங்களில், ‘பஞ்சம்’ குறித்து எழுதுகிறார்கள், தாராளமாக எழுதட்டும் ஆனால் இவற்றையெல்லாம் தெரிந்து கொண்டு, அதற்கான காரணங்களையும் புரிந்துகொண்டு இனி பஞ்சம்வராமல் தடுக்க முடியும் அல்லது பஞ்சமே ஏற்படாது, என்கிற உத்தரவாதத்தையும் இவர்கள் தரட்டும். ஸ்காட்லாந்தின் மேட்டுப் பிரதேசங்களை, காட்டுமிராண்டித்தனமாக சீரழித்தார்கள் என்று கேள்வி, அதையுந்தானே விளக்கமாக நாம் தெரிந்துகொள்ளவேண்டும். ‘பஞ்சத்தை’ எழுத முடிந்தவர்களுக்கு, இதைச் சொல்ல ஏன் தைரியமில்லை, அதற்கான காரணத்தைத்தான் நான் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறேன், சூசான். நான் புத்த்கங்களை வாசிப்பதன் நோக்கமே, நான் அறிந்திராததை அறிவதற்கு, ஆனால் எனது அப்படியான தேவைகளைப் புத்த்கங்கள் பூர்த்திசெய்வதில்லை என்பதுதான் உண்மை. சூசான், நாமும் சராசரி பெண்வர்க்கத்தைச் சார்ந்தவர்களா? அப்படித்தான் நம்புகிறாயா? ஒரு நாள் மாலை தொலைக்காட்சியில் ‘The Late Late’ நிகழ்ச்சியின்போது அழைத்த கணவனொருவன், ‘கூடியுள்ளவர்கள் சராசரி பெண்களல்லவென்றும், அவனது மனைவியைப்போல சராசரிப் பெண்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்க வேண்டுமென்றும்’, சொன்னான். ஆனால் எனக்கென்னவோ அவனது மனைவியும் நம்மைப்போலத்தான் இருக்கவேண்டும், ஆனால் அவனுக்கு உண்மை தெரியவில்லை. சூசான், நாமும் சாரசரிவகை பெண்களென்றுதான் நினைக்கிறேன். பாலியல் வன்முறையை அனுபவித்திராத சிறுமியர்கள். நல்லவேளை, நமது அப்பாக்கள் கொஞ்சம் முன்னதாகவே நம்மிடமிருந்து ஒதுங்கிக் கொண்டார்கள். பாட்டி வீட்டிற்குப் போவதற்கென்று, வாடகைக்கு எடுத்திருந்த காருக்கு முன்னால் எனது தந்தையுடைய கால்களுக்கிடையில் நிற்பதில் ஒருவித சந்தோஷமிருந்தது என்பதும் உண்மை. நீ பேருந்தில் பயணம் செய்பவள், நன்றாக நினைவிருக்கிறது. ஆனால் நாங்கள் பாட்டி வீட்டிற்குப் போவதென்றால் கட்டாயம் வாடகைக்கு ஒரு கார் ஏற்பாடு செய்யவேண்டும். எனக்குப் பசிபற்றியும் எதுவும் தெரியாது. ஒரு முறை மதிய உணவிற்கென்று ‘போரிஜி'(Poridje)(4) சாப்பிடவேண்டியிருந்தது, ஒரே ஒருமுறை. காலை உணவிற்கென்றுகூட அந்த அபத்தத்தை விழுங்கித் தொலைத்ததில்லை-குமட்டிக்கொண்டு வந்தது. பெரும்பாலும் எங்கள் வீட்டு உணவில் உருளைக்கிழங்கும், முட்டைக்கோசும் கட்டாயமுண்டு. ஒருமுறை எனது அம்மாவிடம், ‘வெளியிலே போய் உணவருந்ததலாமே’, என்றேன். அம்மா, ‘சம்மதம்’, என்றாள். அம்மாக்கள் இப்படி சம்மதம் தெரிவிப்பதென்பது, சுலபத்தில் நடப்பதல்ல. தோட்டமெங்கும், பெரியவர்கள் அணிகிற மேலங்கிககள் பரவலாகக் கிடந்தன. பாத்திரங்கள் நிறைய பொரித்த கோசுடன், உருளைகிழங்கு. நான் முட்கரண்டிகளை எடுத்துவர சமயலறைக்குப் போய்விட்டு, திரும்பவும் தோட்டத்திற்கு வந்து பார்க்கிறேன், மூன்று நிமிட இடைவெளியில் நாய் மிச்சம்வைக்காமல் துடைத்திருந்தது. அதற்குப் பிறகு நடந்ததை நினைத்தால் இப்போதும் எனது காதில் வலிக்கிறது. எனக்கு நடிக்கத் தெரிந்திருந்து, அழுதுமிருந்தால், பிரச்சினையேதும் இருந்திருக்காது, பால்யவயதில் ஒருநாள் தோட்டத்தில் சாப்பிட அமர்ந்தபொழுது நாய் எல்லாவற்றையும் தின்று தீர்த்துவிட்டதுமாத்திரம் நினைவிலிருந்திருக்கும். மற்றொன்றும் நினைவிலிருக்கிறது, அது மாலைவேலைகளில் பள்ளிக்கூடம் முடிந்ததும் நேராய் வீட்டிற்கு வந்து சேரவேண்டுமென்று அம்மா விடுக்கும் எச்சரிக்கை. எதற்காக அப்படிச் சொல்கிறாள்? அடிக்கடி என்னுள் எழுந்தக் கேள்வி. எதற்காக நேரத்திற்கு வீட்டிற்கு வரவேண்டும், வீட்டில் அச்சமயம் ஏதேனும் விசேடமா? அப்படி எதையாவது நினவுகொள்ள முடிகிறவர்களுக்கு அம்மாக்களும் நல்லவர்களாகத்தான் இருந்திருப்பார்கள். காரணமில்லாமல் நேரத்திற்கு வீட்டிற்குத் திரும்பவேண்டுமென, நான் எனது பிள்ளைகளை வற்புறுத்த மாட்டேன். ஆனாலும், சராசரிபெண்களில் நானும் ஒருத்தி. கென்னடி கொல்லப்பட்ட இரவு நான் ‘எங்குமே இல்லை’ என்பதையும், அன்றைய தினத்திலிருந்து நான் நடத்திவரும் வாழ்க்கையையும், நம்மிடம் சொல்லபட்டப் பொய்களையும் கணக்கில் கொள்வதெனில், நாட்டிலிருக்கும் சராசரிபெண்களில் நானுமொருத்தி. தாயின் வயிற்றிலிருந்து வெளிவந்த ஒருவன் அல்லது ஒருத்தியைக் குறித்து சொல்லிக் கொள்ளும்படி ஏதுமில்லை என்கிறபோது அவர்கள் சாதாரணமானவர்களாகிறார்கள். ஆனால் தொலைக்காட்சி நிகழ்ச்சியின்போது அழைத்த மனிதனுக்கான ‘சராசரிப் பெண்’ என்பவள் எவள்? ஒரு சில புத்தகங்களைமட்டுமே வாசிக்கிற பெண்ணா? அல்லது ஒருசில புத்தகங்களை வைத்திருந்தும் அதில் ஒன்றினைக்கூட வாசித்துவிடக்கூடாது என்பதில் உறுதியாயிருக்கிறாளே அவளா? அல்லது புத்தகங்களை வாசிக்கிற பெண்மணியாக இருந்து, தகாத வார்த்தைகளை என்னைப்போல தவிர்ப்பவளா? உதாரணமாக நான் ‘கரு, கர்ப்பம்’ போன்றச் சொற்களை இதுவரை உபயோகித்ததில்லை; அதனை பாவச்செயலாகவும், கொலைபாதகத்தை தூண்டுவதாகவும் நினைக்கிறேன்; சூசான்! ஏற்கனவே உனக்குச் சொன்னதுதான், திரும்பவும் சொல்கிறேன், ‘கொலைபாதகங்கள் வேண்டாம்’. சராசரி பெண்ணாக இருக்க என்ன செய்யவேண்டும்? நமது அம்மாக்கள் சின்ன பிள்ளைகளாக இருந்தகாலத்தில், அவர்கள் சகோதர்களுக்கு ‘Nappy’ மாற்றுகிறவேளையில், அங்கே இருக்கக்கூடாதென்று சொல்லப்பட்டது. அவர்கள், இயேசுபெருமானின் அம்மாக்களாக நடத்தபட்டார்கள். இபோதென்ன நிலைமை? விட்டால், எங்கே நம்மை குதறிவிடுமோ எனநினத்து, ஆண்குறியை விரல்முனைகளில் கையாளுகின்ற பெண்களை நம்மிடையே பார்க்கிறோம். சராசரி பெண்? சராசரி பெண்? அதற்கு என்ன விதிமுறைகள் வைத்திருக்கிறார்கள்? எப்படியிருந்தால் இவர்களுக்குச் சராசரி பெண்ணாம்? இரவொன்றில் பித்துபிடித்தவள்போல நகரத்தில் கண்ணிற்படுவதையெல்லாம் வாரி இறைக்காமலிருந்தால் போதுமா? எதனால் நமது குடிபானங்களை மாற்றித்தொலைக்கிறேன் என்பது இப்போது புரிகிறதா? இப்போது ஷம்பெய்ன் கொண்டுவரச் சொல்லப்போகிறேன், பிறகு நான் வாசித்த புத்தகங்களில், நம்மைப்பற்றி சொல்லமறந்ததை உன்னிடத்தில் விளக்கிச் சொல்லவேண்டும். முதலில் நமது தோற்றம், அதனை விவரித்துச் சொல்ல படமோ, ஓவியமோ பெரிதாக உதவிடாது. நமது பரிமாணம், வளத்தி, பருமன் எதையும் குறிப்பிட்டுச் சொல்லவியலாது. ஆக நம்மை அடையாளப்படுத்த பெயர்கள் அவசியமாகின்றன. தடித்த அல்லது மெல்லிய உடலுடன், கனத்த அல்லது தளர்ந்த தனங்களுடன், இடுப்பை உயர்த்தி நிறுத்தி, காமநோயால் வருந்தி, காதல் போதையில் நம்மையே மறந்து, காற்று நுழைய ஏதுவாக யோனியை விரித்தோ அல்லது மறுத்து இறுக்கவோ செய்கிறவர்கள். நமது உருவ அமைப்பு எப்படி இருக்கிறதென்பது முக்கியமல்ல. உடற்புணர்ச்சிக்கான ஏக்கத்துடன் சிலவேளைகளில் பைத்தியமாக அலைகிறோம். இதைப்பற்றியெல்லாம் புத்தகம் எழுதிகிறவர்கள் பேசியதில்லை, உனக்குத் தெரிந்து அப்படிப்பட்ட புத்தகங்கள் உண்டா? சொல்லமுடியுமா? ஐம்பதுகளில் அல்லது அறுபதுகளின் தொடக்கத்தில் நமது தேடுதல் வேட்டைக்கு நல்லப் பலனிருந்தது, இரு தரப்பினருக்குமே அதனால் இலாபம், மகிழ்ச்சி அடைந்தோம். அடைந்தோமென்று நான் சொல்வதால், எப்போது அடைந்தோமென்று கேட்டுவிடாதே? அப்போதெல்லாம் நாம் சிறுமிகள், வெகு காலத்திற்கு முன் நடந்ததென்பதை மறந்திடாதே. புரிந்துகொண்டிருப்பாயென நினைக்கிறேன். இங்கே நான் குறிப்பிட்டப் பெண்கள் நமது முன்னோடிகளாக இதோ இங்கே நின்று தொழில் புரிந்தவர்கள், கன்னக் கதுப்புகளில் வெள்ளி நரம்புகள் கொண்டிருந்தவர்கள். அது பற்றியெல்லாம் இப்புத்தகங்கள் பேசியதில்லை. புத்தகங்கள் நம்மை முற்றும் துறந்தவர்களாக நடத்துகின்றன, அதாவது அன்பு, காதல் இவைபற்றியெல்லாம் அறிந்திராதவர்கள் அல்லது அக்கறைகொள்ளாத மரக்கட்டைகளென்று நம்மைச் சொல்கின்றன. நம்மோடு சிவப்பு நிறத்தை இணைத்துப் பேசுகின்றனர். அதனை ஒரு நல்ல வண்ணமாக அவர்கள் நினைப்பதில்லை. அயர்லாந்தில் உள்ள எந்தவொரு புத்தகமும் உடற் புணர்ச்சியைப் பற்றி பேசி நானறியேன், மாறாக தேவாலயச் சுவர்களிலிருக்கும் கலவி சம்பந்தமான சிற்பங்கள் அதாவது நான் முன்பு கூறியதுபோல, கற்களைக் குறித்து (பிரச்சினைகள் இருக்காதென்பதால்) நிறைய எழுதியிருக்கிறார்கள். எவரேனும் நம்மை நெருங்கி, தமது கைகளை நமது உடலில் ஓடவிட்டபடி ‘என்ன.. இதுதான் உனக்கு சௌகரியமாக இருக்கிறதா?’ என்று கேட்கவேண்டுமென்பதற்காக, நாம் குனிவதில்லையென்று சொன்னால் அவர்கள் நம்புவார்களா? அல்லது அநாதைபோல நிற்கிற இரவுநேரங்களில், தனிமையில் (அவ்வாறில்லையென்கிறபோதும்), அண்டையில் நெருங்கும் உடலிடம், ‘என்ணுடைய இடத்துக்குப் போகலாமா? என கேட்காமலேயே பல சனிக்கிழமை இரவுகளை நாம் கழிப்பதையேனும் நம்புவார்களா? காமத்தை நாம் தனித்து சுகிப்பதில்லை என்பதையாவது? நம்முடைய ஒற்றைக் கட்டிலருகே விடிந்தபிறகும் எழுந்திருக்க முடியாமல் அயர்ந்து படுத்துக்கிடப்பதையாவது? அவர்கள் இச்சையை பூர்த்திசெய்வதே நமது விருப்பமென்றும், மாறாக ஒரு மழை இரவில் நம்மீது மேலும் கீழும் புரளும் மனிதனின் இச்சைக்குப் பலியாகவோ அல்லது யோனியைத் தீண்டி, அதன் மடலைத் தேடி – கணுக்கையில் ஆரம்பித்து ஒன்றல்ல மூன்றுவிரல்கள் அங்கு செய்கிற சேட்டைகளை சகித்துக்கொள்ளவியலாமல், மேற்சட்டையைத் தளர்த்திக்கொண்டு, காமத்தில் தகிக்கிற மார்புகளை நமது கைகொண்டு அளைவதற்கு விருப்பமில்லயென்றும் நினைக்கிறார்களா? சூசான், இது எப்படி சாத்தியம்? எழுதத் தெரிந்த மனிதர்களுக்கு, இவையெல்லாம் தெரியாதென்றால் எப்படி? மற்றவர்கள் தெரிந்து வைத்திருக்கிறார்களே. அந்த ஆளைப் பார். அவனில்லை.. சூசான் சட்டைக்கையை மடித்துவிட்டிருக்கும் ஆண்களை எனக்குப் பிடிப்பதில்லை, குறைந்த பட்ஷம் நான் அவர்களைப்பற்றி பேசும்வரையாகிலும் அதைச் செய்யாமலிருந்திருக்கவேண்டும்.-அதோ அவன் பக்கத்தில் நிற்கிறானே அவனைச் சொல்கிறேன். ஒரு நாள் ‘மில்லருக்கு'(Miller) எழுதவேண்டுமென்று நினைத்தேன். மிஸ்டர் மில்லர், ‘உங்களுக்குப் போதாது’ இதற்குமேலே என்னால் உங்களுக்கு விளக்கமாக சொல்லமுடியாது. நீங்கல் படுத்திருப்பது ஒரு மரக்கட்டையோடல்ல. அதுவொன்றும் இடுக்கமான வளையுமல்ல, பிளவாவென்றால்? அதுவுமில்லை, ஏனெனில் அது இரண்டுக்குமிடையில் இருக்கக்கூடியது. மாமிசப் பிண்டமுமல்ல. மாமிசப் பிண்டம்? அப்படி நினைத்துதானே உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்கிறீர்கள். நீங்கள் வேண்டுமென்று செய்வதில்லை, உங்களால் முடியக்கூடியது அதுதான், உங்களுக்குத் தெரிந்தது அவ்வளவுதான். அதை உண்ணும்பொருளாக நினைக்கிறீர்கள், அது தான் தப்பு. அதற்கான உபயோகம் அதுவல்ல. உங்களுக்கான அச்சம் என்னவென்பதும் அதை வெளிபடையாக ஏற்றுக்கொள்ளாததன் காரணமும் புரிகிறது. பெட்டைக்கழுதை, அவளிடத்தில் நான்குவார்த்தைத் தொடர்ந்து பேச நமக்கு அருகதையில்லை அப்படியிருக்க, அவள் நமக்கெதிராகத் திரும்பினால் எங்கே முகத்தை வைத்துக்கொள்வதென்கிற பயம்? அப்படித்தானே? மிஸ்ட்டர் மில்லர்! நான் சொல்வதைக் கேள். முழுக்கிணறும் தாண்டுமுன்னே மூச்சுவாங்குவது நல்லதல்ல. ஜாக்கிரதை. என்ன சொல்கிறேன் புரிகிறதா? ஜாக்கிரதை. உங்க ஆண்மையை எனக்கு நிரூபிச்சாகணும், ஆகட்டும். பாதியில நிறுத்துகிற அளவிற்கு என்ன நடந்தது? உடலுறவென்றால் இத்தனை பயமா? எல்லாம் முடிந்ததென்று நினைத்து எழுந்துவிட்டீர்களா? உடலுறவையும், அதன் கண்ணியத்தையும் இப்படியா கேவலப்படுத்துவது? உங்கள் பார்வையில் தெரிகிற யாசிப்பிலிருந்து ஒன்றைப் புரிந்து கொள்கிறேன், நீங்களும் தவறுதலாக வாசித்திருக்கவேண்டும். சொல்லுங்கள், அப்படி என்னத்தை வாசித்து தொலைத்தீர்கள்? உடலுறவில் உங்களுக்குச் சந்தோஷம் கிட்டியிருக்குமெனில்; சம்பந்தப்பட்டவர்களுடைய பெயர்களையும் நினைவில் நிறுத்தமுடியுமெனில், எங்களில் பலர் உண்மையில் உங்களுக்கு தைரிய மூட்டக்கூடும். நான்குபேர் மதிக்க வேண்டுமென்பதற்காகவும், கைத்தட்டலுக்காகவும் நகரத்துத் தெருக்களை சுற்றிவந்தீர்கள் போலிருக்கிறது? அங்கே மெழுகுவர்த்தி வெளிச்சங்களில் பாலுறவுவை நடத்தியிருக்கவேண்டும். அந்த மகிழ்ச்சிக்குக் கூடுதலாக வேண்டாம், அதே அளவிற்கு எங்களைச் சந்தோஷபடுத்தினாற்கூட போதும் ஏன் கொஞ்சம் குறைச்சலாக இருந்தால்கூட எங்களுக்குத் திருப்திதான். ஆனால் எங்களுடைய இந்த விருப்பத்தைக்கூட உங்களால் சகித்துகொள்ளமுடியாதது ஏன்? உடற்புணர்ச்சி எங்களுக்கு தடைசெய்யபட்டதல்ல என்ற உண்மை உங்களுக்குக் கசக்கலாம், அதற்கான உரிமை எங்களுக்கு உண்டு. ஆனால் அவ்வுரிமைக்கு நீங்கள் காரணமல்ல, நாங்கள்தான் காரணம் அதாவது எங்களுடைய நடத்தைகளுக்கும், வடிவங்களுக்கும் அதில் பங்குண்டு. கையில் பணமில்லையென்கிறபோதும், கூப்பிட்டுப்பார்க்கலாம் என்கிற உங்கள் எண்ணத்திற்கு உங்களிடமுமுள்ள வேசிகுணமே காரணம். இப்பொழுதெல்லாம் உங்களைப்போல வளர்ந்த மனிதர்களுக்கு உடலுறவென்பது, அடுத்தவர் பார்வைக்கென்று ஒருவித மாயபிம்பத்தை உருவாக்கிக் காட்டுவது, முகத்தின் அண்மையில் கரத்தைக் கொண்டுசென்றும் தீண்டாமலேயே இருப்பது. எல்லாவற்றையும் நாங்களே செய்கிறோமென்பது உங்களுக்குத் தெரியுமா? உங்கள் பின்புறங்களை கூச்சமின்றி முத்தமிடுகிறோம், நம்மை நாமே மறந்திருக்கிறபொழுது, உங்களைப் பைத்தியமாக்கிப்ப ¡ர்ப்பதில் ஒருவித சந்தோஷம். ஹென்ரி, உனது விருப்பத்திற்கு மாறாக நடந்திருக்கிறோம். சூசான், அவரிடத்தில் நாம் செய்த அனைத்தையும் சொல்வேன். சூசான்..ஆண்களிடம் நீயுந்தான் எப்படியெல்லாம் நடந்துகொண்டிருப்பாய்? உன்னைப் பார்த்தால் அப்படி சொல்ல முடியுமா? சொன்னால்தான் நம்புவார்களா? உனது மனதை புண்படுத்துவதற்காக சொல்கிறேனென நினைக்கவேண்டாம். உண்மையில் நீ அழகானவள், இருந்தும் நீ நிற்கிற தோரணையும், ஆண்களைக் கண்டதும் முகத்தைத் திருப்ப்பிகொள்ளும் உனது குணமும் மற்றவர்களை அவ்வாறு நினக்கத் தூண்டுகிறது. சூசான், உடலுறவு என்பது நம்வரையில் தெளிவற்ற சத்தம் மட்டுமல்ல, அதற்கும் மேலேயென்று அவரிடம் அவசியம் சொல்வேன்.(ஏதோ மில்லரை மாத்திரம் குறிவத்து பேசுகிறேன் என நினைத்துவிடாதே). நான் சந்தித்த ஆண்களில் ஒருவனைத்தவிர உடலுறவில் என்விருப்பத்திற்கு மாறாக நடந்துகொண்ட கூட்டத்தில் நீங்களும் ஒருவரென்றும் மில்லரிடம் தெரிவிப்பேன். நான் குறிப்பிட்ட ஒருவனால் என்னைப் பார்த்தவண்ணம் உடலுறவுகொள்ள முடிந்தது. எங்களிருவரின் முதல் இரவு குளிர்காலம் முற்றிலும் விலகாத கோடையின் தொடக்கம். சன்னற் கண்ணாடியினூடாக உட்புகுந்த மங்கிய வெளிச்சம், மஞ்சளும்சிவப்புமாய் மாறிப்போன இரவு. அந்த இரவுக்குப்பிறகு, உணவு விடுதியொன்றில் எங்கள் சந்திப்பு நிகழ்ந்தது. எதிரெதிர் நாற்காலியில், மேசையில் முழங்கையை ஊன்றியபடி அமர்ந்திருந்தோம். இருவரும் அடுத்தவர் திசைக்காய் வளைந்து, இருவர் கணுக்கைளையும் இணைத்து, விரல்களைப்பிரித்து அடுத்தவர் கையுடன் பிணைத்துக்கொண்டோம். அப்படியொரு சந்தர்ப்பம் மறுபடியும் வாய்க்குமென்று நினைக்கவில்லை. பல நேரங்களில் ஒருவர் மற்றவர் சிந்தனைக்கு கேட்டினை ஏற்படுத்திவிடுவோமோ என்று அஞ்சுபடியான நெருக்கம். நான் சற்று கவனமாயிருந்திருக்க வேண்டும். இதயத் துடிப்பு அதிகரிக்கிறவேளையில் கவனமாய் இருப்பது சாத்தியமா என்ன? வேண்டுமென்கிறபொழுதெல்லாம் உடலுறவுகொண்டோம். ஒவ்வொரு நாளும் அடித்த பேய்மழையில் நாங்கள் இருவரும் மூழ்க நேர்ந்ததை வேறெப்படி சொல்ல முடியும். எங்கள் தாபத்தைத் தணித்துக்கொள்ள ஒருவர்மாற்றி ஒருவர் வியர்வையை பருகினோம்; போனோம் வந்தோம்; அடுத்தவரிடம் மிச்சமின்றி கொட்டித் தீர்த்தோம் அதாவது பிள்ளைகள் தண்ணீர் ஜாடியைவைத்துகொண்டு செய்கிற அத்தனை விளையாட்டும் எங்களிடையே நடந்தேறியது. இருவரும் ஒருவராகிப்போக, எங்கள் இருவரில் யார் எங்கே தொடங்கியது அல்லது முடித்துவைத்தது என்பதை புரிந்து கொள்வதிலுங்கூட குழப்பம் நிலவியது. ஒவ்வொருமுறையும் நான் அறைக்குள் நுழையும்போதெல்லாம், எனது கண்களிற் படும் முதற்காட்சி, தன்னிச்சையாய் மூடிக்கொள்கிற அவனது கண்கள். எனது விழிகளும் சட்டென்று இறுகிக்கொள்ளும், ஏறக்குறைய பார்வையை இழந்தவள்போல ஆகிவிடுவேன். எனது நிர்வாணத்தை உணர்ந்ததில்லை. அடுத்தடுத்த மாதங்களில், இனம்புரியாத அச்சமொன்று எங்களிடையே உருவாயிற்று. அவனது கைகளை அடிக்கடி இறுக்கிப் பிடித்துக்கொள்வேன். எனது கை பெரியதாக இருந்ததால், எனது கட்டைவிரலும், நடுவிரலும் சுலபமாக அவனுடயதை வளைத்துப் பிடித்துக்கொள்ளும். சின்னசின்ன இம்மாதிரியான காரியங்களை, கனவுலகிலிருந்து நம்மை மீட்க உதவுமென்கிற நம்பிக்கையில், விரும்பிச் செய்தேன். நாங்கள் படுத்த கட்டில் அல்லது தரை (பல நேரங்களில் கட்டில்வரை செல்வதற்கு எங்களுக்குப் பொறுமையிருப்பதில்லை – இது ரொம்பவும் முக்கியம், குறித்துகொள்). எப்போதாவது இந்த விடயத்தில் என்னை அவன் கவனமாக இருக்க வேண்டுமென்று எச்சரித்ததுண்டா? யோசித்துப்பார்க்கிறேன், நன்றாக நினைவிருக்கிறது, எங்களிருவருக்குமிடையே மனக்கசப்பு ஏற்படுவதற்கு முன்னால் நடந்த சம்பவம், குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் அவனது பணிமனையில் இருவரும் சத்தமில்லாமல் கூடியதைச் சொல்லவேண்டும், ஏனெனில் அங்கிருந்த நான்கங்குல அளவு தடுப்புக்குப் பின்பக்கம் இருந்தவர்கள், நாங்கள் ஏதோ வாசித்துக் கொண்டிருப்பதாகவோ அல்லது குறைந்தபட்சம் ஒருவரை ஒருவர் வெறுமனே பார்த்துக்கொண்டிருப்பதாகவோ நினைத்தார்கள். பற்கள் பட முத்தங்களைப் பரிமாறிக்கொண்டோம். அசரீரி போல ஒரு குரல் எனக்கு மாத்திரம் கேட்டது., நிச்சயமாய் அது என்னுடையதல்ல. எனக்குள் இரத்தம் கொப்பளித்தது. சட்டென்று என்மீது படிந்தான், என்ன எழுதப்போகிறோமென்று தீர்மானிக்காமலேயே கடிதத்தினை ‘அன்புள்ள’ எனத் தொடங்குவதில்லையா? அதைப்போல. தொடர்ந்து தொலைபேசி மணி ஒலித்தது. என்னிடலிருந்து விலகியவன், எழுந்து சென்றான். அவனது ஆண்குறி இரத்தத்தில் தோய்ந்திருப்பதைப் பார்க்க இருவருக்குமே ஒருவித நிறைவான ஆறுதல். ஏற்கனவே பலமுறை எங்களுக்குள் இரத்த பரிமாற்றத்தைத் தாராளமாக செய்திருந்ததால், அது எங்களை வியப்பிலாழ்த்தவில்லை.. அவன் தொலைபேசியில் உரையாடிக்கொண்டிருக்க, நான் அவனைத் தேடி சென்றேன், அவனை கட்டித் தழுவினேன், தாமதமின்றி என்னுள் புதைந்தான், சுரம் கண்டவளைப்போல எனது உடல் நடுங்கியது. இப்பொழுது அவன் இல்லை, புறப்பட்டு போய்விட்டான் அது இன்னொரு கதை. உடலுறவு கொள்ளவேண்டுமென்கிற அவா எழும்போதெல்லாம், என் முதுகில் பதிந்த அவன் கட்டைவிரலும் அது அழுந்தப் பதியவேண்டுமென்பதற்காக எனதுடலெடுத்த முயற்சியும், தனது செயலுக்கான காரணம் புரியாமல் அவன் சிரிப்பதும் நினைவிற்கு வருகின்றன. கென்னடி கொல்லப்பட்ட இரவு அவன் எங்கே இருத்தானென்பதை நான் அறிவேன். இவற்றையெல்லாம் மில்லருக்கு எழுதுவேன், அவர் வேண்டுமானால் அக்கடிதத்தை தன் நன்பர்களுக்குக் காட்டட்டும். கடவுளே! எனது கேடுகெட்ட முதலாளி வந்திருக்கிறான், ஏற்கனவே அவனுக்கு மூன்று வாரங்கள் பாக்கி. ‘பேட்ரிக்’ நில்.. எப்படி இருக்கிறாய்? சூசான், கிளம்பு..அவன் நம்மை சீண்டுவதற்குள், இங்கிருந்து புறப்பட்டாகவேண்டும். என்னோட ஜாகைக்கு போவோமா? ஏதேனும் புத்தகங்கள் வாசிக்கலாமே? நீ இதுவரை அறிந்திராத புத்தகங்கள், அதன் உயரத்திற்கு நம்மை அழைத்துச் செல்லக்கூடிய புத்தகங்கள். இன்றைக்கு சீக்கிரம் உனது ஜாகைக்குத் திரும்பியாகவேண்டுமென்கிற கட்டாயமேதும் உனக்கில்லை. உனக்கென்றால் நான் எதையும் செய்வேன், என்ன நம்பு.. நீ நினப்பதுபோல கடிதத்தை அவர் தனது நண்பர்களிடம் காண்பிக்கப்போவதில்லையென்றே நானும் நினைக்கிறேன். வேறென்ன சொல்லமுடியும்?, ஒருபோதும் என்ன நடந்ததென்பதை நாம் அறியப்போவதில்லை, அதுதானே உண்மை.


*Taking scarlet as a Real colour or and also Susan
1. Thou shall not covet thy neighbour’s wife
2. அயர்லாந்த்தின் அரசியல்வாதிகளில் ஒருவர், அயர்லாந்து விடுதலை இயக்கத்தைச் சேர்ந்தவர்.
3. Thirty years war (1618 -1648)
4. ஓட் தானியத்தில் செய்யப்படும் ஒருவித களி


nakrish2003@yahoo.fr

Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா