தைவான் நாடோடிக் கதைகள்

This entry is part [part not set] of 41 in the series 20071122_Issue

தமிழில் – மதுமிதா


முன்னுரை

‘தைவான் நாடோடிக் கதைகள்’ தைவான் மொழி, ஹ¥ஸ்டன் கலாசார அமைப்பின், தைவானிய பழ மொழிகளின் ஒரு பகுதியாகும். இது தைவான் நாடோடிக் கதைகள், நீதிக் கதைகள், புராணக் கதைகள் மேலும் தைவானின் பூகோள ரீதியான சம்பவங்கள், வரலாற்று நாயகர்கள் குறித்த நூதன விஷயங்களைத் தருகிறது. இவற்றை வாசிப்பதன் மூலமாக இதில் பொதிந்திருக்கும் நீதி, மதம் குறித்த பாடம், கலாசாரத்தின் முக்கியத்துவம் ஆகியவற்றைக் காணலாம். ஆங்கிலத்தில் இதை வாசிக்கிறபோது அமெரிக்க, தைவானிய கலாசாரங்களுக்கு இடையேயான வேறுபாடுகளை அறிந்து முடிகிறது. (தமிழில் தருவதும் நமக்கு இதேபோன்ற ஒப்புநோக்கிய புரிதல்களுக்குப் பயனுள்ளது.)

இரண்டாவது தலைமுறை தைவானிய – அமெரிக்கர்களால் இக்கதைகள் மொழிபெயர்க்கப்பட்டு பதிப்பிக்கப்பட்டவை என்பது விஷேசம். மொழிபெயர்ப்பாளர்கள் மேல்நிலைப்பள்ளி, கல்லூரிகளில் பணிபுரிபவர்களாகவோ, பட்டதாரிகளாகவோ, தைவானிய பள்ளிகளில் பணிபுரிபவர்களாகவோ இருக்கின்றனர்.

கதைகள்:

1. சூரிய – சந்திரன் ஏரியின் பூர்வகதை
இந்தப் புராணக்கதை மத்திய தைவானில் வசிக்கும் சாவோ இன மக்களிடமிருந்து தோன்றியது. இந்த ‘பந்து பிடி நடனம்’ தெற்கத்திய மக்களின் பிரபலமான பூர்வீக விளையாட்டு. மக்களைக் காப்பதற்காக, தொலைந்த சூரியனையும், சந்திரனையும் தேடி தங்கள் வாழ்க்கையைத் தியாகம் செய்த ஒரு இளம்தம்பதியினரின் கதை இது.

2. கலங்கிய நதியின் பூர்வகதை

‘சாவ் சூய் ஹ்சீ’ தைவானில் இருக்கும் பெரிய நதி. இது ‘சீ – லாய்’ மலையில் தோன்றி பல புனிதமான காடுகளின் வழியாகப் பயணம் செய்கிறது. மலையிலிருந்து வருகையில் மண்ணும், கசடும் கொண்டு கீழ்நோக்கிப் பாய்வதால் கதையின் தலைப்பு சொல்வதுபோல், கலங்கிய நதியெனும் பெயர் பெறுகிறது.

3. ஏரிச் சகோதரிகளும், இரு சகோதரர்களும்

பிரசித்தி பெற்ற அலிசான் மலையில் இரு சகோதரிகள் ஏரியாகவும், இரு சகோதரர்களும் இயற்கையின் ஒத்திசைவுக்காக இணைகின்றனர்.

4. பான் பின் ஷான்

பான் பின் ஷான் என்பதன் பொருள் ‘அரை முக மலை’ என்பதாகும். இதை இந்த மலையின் வடிவமே சொல்கிறது. இக்கதை நேர்மையின் உயர்குணம், கருணையின் மதிப்பு, தன்னலமற்ற தன்மை ஆகியவற்றைக் குறித்துச் சொல்கிறது.

5. புராண நாயகன்
அடயல் இன மக்கள் ஜப்பானியர்களின் கொடுங்கோலாட்சியில் பல வருடங்கள் துன்பப்பட்டனர். கலகம் செய்து தங்கள் விடுதலைக்காகப் போரிட்டனர். பலர் வீர மரணமடைந்தனர். இந்த பிரபலமான வூ -ஷீ நிகழ்வு, பல தைவானியர்கள் ஜப்பானியர்களை எதிர்த்து நிற்கக் காரணமாயிருந்தது.

6. பெண்புலி மந்திரக்காரி (ஹொ கொ பொ)

நம்பிக்கை இருக்கிறதா உங்களுக்கு விலங்குகள் மனிதனாக மாறுமென்று. பெண்புலி மந்திரக்காரியை எதிர்த்து புத்திசாலித்தனமாய் தப்பித்த ‘ஆகிம்’ எனும் தைவானிய சிறுமியின் கதை இது.

7. கிணற்றுத் தவளை

பல மனிதர்கள் தங்கள் சிறிய உலகத்திற்குள் தாங்கள் பார்த்து, கேட்ட விஷயங்களை மட்டுமே அறிவர். தங்கள் வாழ்வின் வட்டத்தை விட்டு வெளியே என்ன நடக்கிறது என்பதை அறியாதவர்களாகவே உள்ளனர். இது தவறான அணுகுமுறை. இந்தக் கதையிலும் கதையின் முடிவில் குட்டித் தவளை அதனை உணர்ந்து கொள்கிறது.

8. மனைவியும் இல்லை; குரங்கும் இல்லை.

ஒரு மூடனின் முட்டாள்தனமான முடிவினால் அவன் பெண்டாட்டியை இழந்ததைச் சொல்லும் கதை.

9. கடல்நீர் எப்படி உப்பானது?

கடல்நீர் முன்னொரு காலத்தில் இனிப்பாகவே இருந்தது. பிறகு எப்போது எப்படி உப்புநீராக மாறியது? அதையே இந்தக் கதை சொல்கிறது.

1. சூரிய – சந்திர ஏரியின் வரலாறு

முன்னொரு காலத்தில் மத்திய தைவான் மலைப்பகுதிகளில் ஷாவோ இன மக்கள் வசித்து வந்தனர். அம்மக்கள் விவசாய நிலங்களில் சோளம், தாரோ, நெல் போன்ற பயிர்களைச் சாகுபடி செய்தனர். சில சமயங்களில் மீன்பிடித்தும், வேட்டையாடியும் வந்தனர். அவர்கள் மிகுந்த மனநிறைவுடன் வாழ்ந்து வந்தனர்.

ஒரு பகல்பொழுதில் ஷாவோ மக்கள் வேலை செய்துகொண்டிருந்தபோது ஒரு பெரும் சத்தம் கேட்டது.

“பூம்ம்ம்ம்ம்!”

நிலம் பயங்கரமாய் அதிர்ந்தது.

“ஓ! என்ன ஆச்சு. சூரியன் இல்லை. எங்கே போச்சு.” பயத்துடன் அனைவரும் அழுதனர். பிரகாசமாய் ஒளிரும் சூரியன் தங்கள் கண்ணெதிரிலேயே மறைந்ததை, அவர்களால் நம்ப முடியவில்லை. அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை, ஒருவருக்கொருவர் தங்களுக்குள் உதவிக்கொண்டு இருளில் வீடு சென்று சேர்ந்தனர்.

அதிர்ஷ்டவசமாக அன்றைய இரவு சந்திரன் வந்தது. அனைவராலும் இரவில் நிலவின் ஒளியில் வேலை செய்ய முடிந்தது.

திடீரென இன்னொரு பயங்கர சத்தம் கேட்டது.

“பூம்ம்ம்ம்ம்!”

வீடுகள் அனைத்தும் பெருஞ் சப்தத்துடன் அதிர்ந்தன.

“ஓ! நிலவும் இப்போது இல்லை. நாம் என்ன செய்யப் போகிறோம்?” அலறினர். அனைவரும் பயந்தனர். என்ன காரணத்தால் இப்படி நடந்தது என்பதும் யாருக்கும் தெரியவில்லை.

அன்றிலிருந்து ஆகாயத்தில் சூரியன், சந்திரன் இரண்டுமே இல்லை. முழு உலகையும் இருள் சூழ்ந்துகொண்டது. விளைநிலங்களில் பயிர்கள் வாடின. மீன்கள் தண்ணீரில் ஆழத்தில் மறைந்துகொண்டன. மலர்கள் மலரவில்லை. விலங்குகள் வாழ்வையிழந்தனவாய் இருந்தன. ஜனங்கள் ஒருத்தருக்கொருத்தர் கேள்வி கேட்டுக் கொண்டார்கள். “சூரிய ஓளியின்றி எப்படி வாழப்போகிறோம். சூரிய ஒளியின்றி எதுவும் வளராதே.”

‘டாஜியன் ஜி’, ‘ஷ¤யி ஷி ஜீ’ இருவரும் இளம் தம்பதியர். சோளம் பயிரிட்டு வாழ்ந்து வந்தனர்.

சூரியன் மறைந்ததால் பயிர்கள் வாடின. சோளப்பயிரில் தங்கநிறக் கதிர்கள் இல்லை. ஒருநாள் ஷ¤யி ஷி ஜீ தன் கணவனிடம், “உடனே சூரியன் வரவில்லையென்றால், பசியால் அனைத்து மக்களும் இறந்து விடுவோம். இதிலிருந்து தப்பிக்க நாம் ஒரு வழி கண்டுபிடிக்க வேண்டும்.”

டாஜியன் ஜி தலையசைத்து, “சூரியனும், சந்திரனும் பள்ளத்தாக்கில் விழுந்திருக்க வேண்டும். நாம் போய்த் தேடிப் பார்க்கலாம்.” என்றான்.

இரண்டாவது நாள், இருவரும் கிளம்பி சூரியன், சந்திரனைத் தேட அடர்ந்த காட்டுக்குள் சென்றனர். இருவரும் கைகளில் கைவிளக்கினை எடுத்துக்கொண்டு பயணத்தை தைரியமாய்த் தொடர்ந்தனர். பல மலைகளில் ஏறியும், ஏரிகள், காடுகளைக் கடந்தும் சென்றனர். கைவிளக்கு பயன்படுத்தி தேடியும் சூரியன், சந்திரனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. முழு உலகமும் இருளிலேயே இருந்தது.

கடைசியாக இருவரும் உயர்ந்ததோர் மலையின் உச்சியை அடைந்தனர். ஷ¤யி ஷி ஜீ தனக்கெதிரே ஒரு மங்கலான வெளிச்சத்தைப் பார்த்தாள்.

அவள் மலைக்கு எதிரே ஒரு ஏரியைக் காட்டி டாஜியன் ஜி யிடம் கூறினாள். “அங்கே பாருங்கள். அந்த ஏரியில் மின்னும் ஒளியொன்று தெரிகிறது. அந்த ஏரியில்தான் சூரியனும், சந்திரனும் இருக்க வேண்டும். நான் பந்தயம் வேண்டுமானால் வைக்கிறேன்.”

டாஜியன் ஜி அதீத மகிழ்ச்சியில் கத்தினான். “ஆமாம். ஆமாம். அவை சூரியனும், சந்திரனுமாகத்தான் இருக்க வேண்டும். ஹா! ஹா! கடைசியில் நாம் அவற்றைக் கண்டுபிடித்துவிட்டோம்.”

அவர்கள் ஏரியை நோக்கி ஓடினர். அங்கே இரு பயங்கர டிராகன்கள் சூரியனும், சந்திரனும் ஆகிய இரு நெருப்புப் பந்துகளை வைத்து விளையாடிக் கொண்டிருப்பதைக் கண்டனர்.

“சூரியனும், சந்திரனும் மறைந்தது அதிசயமல்ல. இந்த இரு டிராகன்களும் அவற்றைத் தங்கள் விளையாட்டுப்பொருளாக்கிக் கொள்ள திருடி வந்துவிட்டன.” இருவரும் கத்தினர்.

டாஜியன் ஜி, ஷ¤யி ஷ ஜீ இருவருக்கும் என்ன செய்வதெனத் தெரியவில்லை. அவர்கள் இரு டிராகன்களிடமிருந்து சூரியன், சந்திரனை எடுத்துவர விரும்பினர். ஆனால், அவைகளுக்கு பயந்தனர். ஒரு பெரிய பாறையில் அமர்ந்து இருவரும் திட்டம் வகுக்க அமர்ந்தனர். ஆனால் எதுவும் முடிவு செய்ய இயலவில்லை.

என்ன செய்யலாம்? அந்த இரு டிராகன்களிடமிருந்தும் சூரியனையும் சந்திரனையும் எப்படி மீட்கலாம்?

திடீரென தாங்கள் அமர்ந்திருந்த பாறையின் கீழிருந்து வெண்புகை வருவதைக் கவனித்தனர். டாஜியன் ஜி தன் பலம் முழுவதும் உபயோகித்து பாறையை நகர்த்தினான். கீழ்நோக்கி நீண்ட, ஆழமான, குறுகிய ஒரு பாதை செல்வதைக் கண்டுபிடித்தனர். அந்தப் பாதையின் வழியாகவே அந்தப்புகை வந்துகொண்டிருந்தது.

“இந்தப் பாதையை அடுத்து யாரோ வசித்து வருகின்றனர். நாம் போய்ப் பார்க்கலாம்.” என டாஜியன் ஜி கூறினான்.

ஜாக்கிரதையாக அவர்கள் அப்பாதைவழியே சென்றனர். அப்பாதை வளைந்து செல்லும் இடம் வந்ததும் சூழல் மிகவும் இருட்டாய் இருந்தது. சிறிது நேரத்துக்குப் பிறகு அவர்கள் நெருப்பைக்கொடுக்கும் சிவப்பு ஒளி வரும் இடத்துக்கு வந்து சேர்ந்தனர்.

புகை அடர்த்தியாக இருந்தது. அவர்கள் ஒரு சமையலறையில் இருப்பதை உணர்ந்தனர். தலைநரைத்த ஒரு கிழவி நின்று கொண்டு சமைத்துக் கொண்டிருந்தாள். ஷ¤யி ஷி ஜீ மென்மையாக, “பாட்டி. எப்படி இருக்கிறீர்கள்?” என்று கேட்டாள்.

கிழவி பெரும் வியப்படைந்தாள். தலையுயர்த்தி அவள் முன்நிற்கும் இளம் தம்பதியினரைப் பார்த்தாள். சமைத்துக் கொண்டிருந்த பாத்திரத்தை வைத்துவிட்டு, ” ஆமாம். எங்கிருந்து வருகிறீர்கள்? பல நாட்களாக நான் மனிதரையே இங்கே பார்க்கவில்லை.”

மேலும் கூறினாள், “பலவருடங்களுக்கு முன்பு நான் வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோது டிராகன்கள் என்னைப் பிடித்து இங்கே கொண்டு வந்து விட்டன. என்னை இந்த இடத்தை விட்டுப்போக அவை விடவேயில்லை. உணவு சமைக்க வற்புறுத்தின…..”

தம்பதியர் கிழவியிடம் சூரியன், சந்திரனைத் தேடிவந்த கதை முழுவதையும் கூறினர். கிழவி தலையை ஆட்டி ,”இரு டிராகன்களும் பயங்கரமானவை, குரூரம் மிக்கவை. நீங்கள் இருவரும் அவற்றை வெல்ல முடியாது” என்றாள்.

“இல்லை. நாங்கள் அந்த டிராகனிடமிருந்து சூரியன், சந்திரனை எடுத்துச் செல்லத்தான் போகிறோம்.” உறுதியாகக் கூறினர் தம்பதிகள்.

“எனக்கு ஒரு விஷயம் தெரியும். யாரோ சொல்லக் கேட்டேன். ‘அலி’ மலையின் அடியில் மறைத்துவைக்கப்பட்டிருக்கும் தங்கக் கத்திரி, தங்க கோடாலிக்கு டிராகன்கள் பயப்படுமாம். நீங்கள் இரண்டையும் கண்டுபிடித்துக் கொண்டுவந்து, ஏரியில் எறிந்தீர்கள் என்றால் கத்தரியும், கோடலியும் உடனே டிராகன்களைக் கொன்று விடும். நீங்கள் சூரியன், சந்திரனை திரும்பப் பெற்று செல்லலாம்.”

டாஜியன் ஜி தன்னம்பிக்கையுடன், “நாங்கள் தங்கக் கத்திரி, தங்கக் கோடாலியைக் கண்டுபிடிப்போம். டிராகன்களைக் கொன்றுவிட்டு உங்களையும் காப்பாற்றுவோம்” என்றனர்.

டாஜியன் ஜி, ஷ¤யி ஷி ஜீ இருவரும் கிழவியிடம் விடைபெற்று ‘அலி’ மலையினை நோக்கிச் சென்றனர். ‘அலி’ மலையின் அடிவாரம் சென்று சேர்ந்ததும் இருவரும் இரு மரக்குச்சிகளை எடுத்துத் தோண்ட ஆரம்பித்தனர். இரவும், பகலும் தோண்டினர். தங்கக் கத்திரி, தங்கக் கோடாலியைப் பார்க்கும் வரை அவர்கள் தோண்டுவதை நிறுத்தவேயில்லை.

பலநாட்களுக்குப்பிறகு ‘அலி’ மலை பெரிய துவாரம்போல் தென்பட்டது. இரு ஒளிரும் தங்கப்பொருள்கள் பூமியிலிருந்து குதித்து வெளிப்பட்டன.

“இவை தங்கக் கத்திரி, தங்கக் கோடாலியாகத்தான் இருக்கும்” இருவரும் மகிழ்ச்சியில் கூச்சலிட்டனர்.

ஆமாம். அவை தங்கக் கத்திரி, தங்கக் கோடாலியேதான்.

இருவரும் தங்கக் கத்திரி, தங்கக் கோடாலியை எடுத்துக்கொண்டு ஏரியை நோக்கிச் சென்றனர்.

அவர்கள் ஏரியை நெருங்குகையில் இரு டிராகன்களும் நெருப்புப் பந்துடன் விளையாடிக் கொண்டிருந்தன. ஷ¤யி ஷி ஜீ தங்கக் கத்திரியை டிராகனை நோக்கி எறிய, அது நேராக முதல் டிராகன் மேல் பட்டு அதன் உடலை பல துண்டுகளாக வெட்டியது. இரத்தம் ஊற்றைப்போல் பெருக்கெடுத்தது.

டாஜியன் ஜி தங்க கோடலியை வேகமாய் இன்னொரு டிராகன்மேல் எறிந்தான். இரண்டு பயங்கர கூச்சல் போட்டது டிராகன், அதன் தலையும் வெட்டப்பட்டது.

டிராகன்களின் இரத்தத்தால் ஏரியின் நிறம் மாறியது. சிவப்பு நிற ஏரியில் சூரியனும், சந்திரனும் மிதந்தன.

டிராகன்களைக் கொன்றதும் தம்பதியினர் கிழவியைக் காப்பாற்றினர். டாஜியன் ஜி, ஷ¤யி ஷி ஜீ இருவருக்கும் இப்போது பெரும் பிரச்சினை.

எப்படி சூரியன், சந்திரனை மறுபடியும் ஆகாயத்துக்கு அனுப்புவது?

அவர்கள் குழம்பினர்.

அப்போது கிழவி கூறினாள், “டிராகனின் கண்ணை சாப்பிட்டால் சாப்பிடுபவர் உயரமாகவும், திடகாத்திரமாகவும் மாறிவிடுவார்கள் எனக் கேள்விப் பட்டிருக்கிறேன். டிராகன்களின் விழிப்பந்தை எடுத்து சாப்பிட்டால் சூரியனையும், சந்திரனையும் ஆகாயத்திற்கு அனுப்பும் சக்தி உங்களுக்குக் கிடைத்துவிடும்” என்றாள்.

உடனே இருவரும் ஏரியில் குதித்துத் தேடி டிராகனின் விழிப்பந்தைக் கொண்டு வந்தனர்.

அதை உண்டதும் டாஜியன் ஜி, ஷ¤யி ஷி ஜீ இருவரும் வளர ஆரம்பித்தனர். இஞ்ச் இஞ்ச் – சாக அவர்களின் உயரம் அதிகரித்துக்கொண்டே வந்தது.

தண்ணீரிலிருந்து எழுந்து வெளியே வருகையில் அவர்கள் இருவருமே இரு மலைகளைப்போல் கரையில் நின்றனர்.

மிகுந்த பிரயாசையுடன் டாஜியன் ஜி, ஷ¤யி ஷி ஜீ இருவரும் சேர்ந்து சூரியனை ஆகாயம் நோக்கி எறிந்தனர். சூரியன் மேலே சிறிது நேரம் இருந்து உடனே கீழே விழுந்துவிட்டது. மறுபடியும் ஒருமுறை எறிந்தனர். மறுபடியும் கீழே விழுந்துவிட்டது.

சந்திரன் விஷயமும் இப்படியே ஆயிற்று.

அவர்களின் காலுக்கடியில் இருந்து கிழவி கூறினாள்,”குழந்தைகளே! ஏரிக்கரையில் இரண்டு பெரிய பனைமரங்கள் இருக்கின்றன. அவற்றை உபயோகப்படுத்துங்கள் சூரிய, சந்திரனை மேலே கொண்டு செல்ல.”

டாஜியன் ஜி, ஷ¤யி ஷி ஜீ இருவரும் குனிந்து மரத்தைப் பறித்தனர். பனைமரத்தின் மேல் சூரியனை வைத்து மெதுவாக உயர்த்தினர். மெதுவாக சூரியன் மேலே மேலே சென்றது. ஒரு முழுநாள் கடின உழைப்புக்குப் பிறகு ஒளிரும் சிவப்பு சூரியன் ஆகாயத்தில் தன் பணியை எப்போதும்போல் செய்ய ஆரம்பித்தது.

அதேமுறையில் சந்திரனையும் செய்தனர்.

இந்த உலகம் அதன் ஒளியைப் பெற்றதும் தாவரங்கள் செழித்தன. மனிதர்கள் புன்னகைக்க ஆரம்பித்தனர்.

ஆகாயத்தில் சூரியன் தன் பணியினை முடிக்கையில், சந்திரன் தன்பணியை ஆரம்பித்தது.

டாஜியன் ஜி, ஷ¤யி ஷி ஜீ இருவரும் டிராகன்கள் திரும்பி வந்துவிடுமோ என்று பயந்தனர். அதனால் இருவரும் ஏரிக்கரையில் காவலுக்கு இருந்தனர்.

பல வருடங்கள் கழித்து அவர்களின் பெரிய உடல்கள் இரு மலைகளாகின.

அந்த மலைகளே ‘டாஜியன் ஷான்’, ‘ஷ¤யி ஷி ஷான்’ என இப்போது அழைக்கப்படுகின்றன. அந்த ஏரியே இப்போது ‘சூரிய சந்திர ஏரி’ என அழைக்கப்படுகிறது.

இளம்தம்பதிகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ‘காவோ ஷ¥’ மக்கள் தைரியசாலியான டாஜியன் ஜி, ஷ¤யி ஷி ஜீ இருவருக்காக வருடத்திற்கொருமுறை நடனத்தை சமர்ப்பிக்கின்றனர். அந்த நடனமே “பந்து பிடி நடனம்” என அழைக்கப்படுகிறது.

இந்த நடனத்தில் மக்கள் அழகிய, வண்ணப் பந்தினை காற்றில் எறிந்து அதனை மூங்கில் கம்பில் பிடிக்கின்றனர். இந்த நடனம் தைரியசாலி தம்பதியினரான டாஜியன் ஜி, ஷ¤யி ஷி ஜீ இருவரின் தைரியமான செயலைக் குறிப்பதாயிருக்கிறது.

அடுத்த இதழில் – கலங்கிய நதியின் பூர்வகதை


madhuramitha@gmail.com

Series Navigation

மதுமிதா

மதுமிதா