பேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 1 காட்சி 3 பாகம் 2
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா
எவருடைய நடத்தை
தெருப் பேச்சுக்கு வருகிறதோ
அவரே முதலில்
அண்டை அயலவரைச்
சண்டைக்கு இழுப்பார் (நாடகம்: வஞ்சகன்)
பணமே தீய செயல்
புரிவதற்கு மூல காரணம் !
கிறித்துவத் தர்மம்
உனது பாப மன்னிப்புத்
தடுப்பு வழிகளுக்குக்
குறுக்கே நிற்கும். (நாடகம்: வஞ்சகன்)
இறை வழிபாடு இல்லாதவன் நான் !
ஆனாலும் ஒரு குறைபாடு இல்லாதவன் ! (நாடகம்: வஞ்சகன்)
சந்தி சிரிக்க பொதுப் புகாரில்
சிக்கிக் கொள்வது போக்கிரித்தனம் !
ஆனால் தனியாக, மறைவாகப்
பாபம் செய்வது பாபமில்லை ! (நாடகம்: வஞ்சகன்)
மாலியர் வாய்மொழிகள்
முன்னுரை: மாலியர் என்று நாடகப் புனைபெயர் கொண்ட பிரெஞ்ச் நாடக மேதை ஜான் பாப்டிஸ்ட் பொகுவலின் [Moliere the Pseudonym of the French Dramatist Jean Baptiste Poquelin (1622-1673)] பாரிஸில் பிறந்தவர். ஆங்கில நாடக மேதை ஷேக்ஸ்பியர் (1564-1616) காலமாகி ஆறு ஆண்டுகள் கழித்து அவர் அவதரித்தவர். மாலியர் நாடகப் படைப்பாளர் மட்டும் அல்லர். அவர் ஒரு நாடக நடிகர். மேலை நாட்டிலக்கிய இன்பியல் நாடக எழுத்தாள மேதைகளில் ஒருவராக மாலியர் கருத்தப்படுபவர். மாலியர் தனது கல்லூரிப் படிப்பை நடுவே விட்டுவிட்டு, பாரிஸ் நீதி மன்றத் தீர்ப்பின்படி 1643 இல் ஒரு நாடகக் கம்பேனியை நிறுவனம் செய்ய அனுப்பப் பட்டார். பாரிஸில் நாடகக் கம்பேனி முதலிரண்டு ஆண்டுகளில் வெற்றிகரமாக இயங்காது நொடித்துப் போய் விட்டது. அப்போது கொடுத்த பணத்தை அடைக்க முடியாது, அந்த இரண்டு ஆண்டுகள் மாலியர் சிறைக்குள் தள்ளப் பட்டிருந்தார். 1645 ஆண்டில் பிறகு பிரெஞ்ச் மாநிலங்களில் பயணம் செய்து நாடகக் கம்பெனியில் தானும் பங்கெடுத்துத் தனது நாடகத் திறமையைக் காட்டத் துவங்கினார். அடுத்த 12 ஆண்டுகள் (1657) மாலியர் தனது நாடகக் கலை நுணுக்கத்தை உன்னத நிலைக்கு விருத்தி செய்தார். 1658 இல் பேரரசர் பதினான்காம் லூயின் சகோதரர் பிலிப் அந்த நாடகக் கம்பெனியை எடுத்து நடத்தி வெற்றிகரமான ஒரு நாடகக் கலை நிறுவனமாக்கினார்.
மாலியர் 28 ஆண்டுகளில் எழுதிய பல நாடகங்களில் மேலானவை 36. அவற்றில் குறிப்பிடத் தக்கவை: Misanthrope, The School for Wives, The School for Husbands, Tartuffe or Hypocrite, The Miser, The Bourgeois Gentleman, The Doctor in Love, The Affected Ladies, The King’s Troupe, The Imaginary of Invalid & Don Juan. அவர் 1668 இல் எழுதிய கஞ்சன் [Miser] என்னும் இன்பியல் நாடகம் பாரிஸில் ராயல் மாளிகையில் முதன்முதல் அரங்கேறியது.
ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பான மாலியரின் பிரெஞ்ச் நாடகத்தைத் தமிழில் வாசகருக்குப் படைக்க நான் இப்போது விழைகிறேன். பிரெஞ்ச் பெயர்கள் தமிழ் உச்சரிப்புக்குச் சற்று கடினமாக இருப்பதால், நான் அப்பெயர்களை ஆங்கிலத்தில் எளிதாக இருக்கும்படி மாற்றி இருக்கிறேன். மேலும் சில சம்பவங்களும் மாற்றலாகி இருக்கின்றன.
பேராசைக் கஞ்சன்
அங்கம் 1 காட்சி 3 பாகம் 2
பேராசைக் கஞ்சன் நாடக நடிகர்கள்:
எட்வேர்டு: எலிஸபெத், கிரஹாம் இருவரது தந்தை. மொரீன் மீது மோகம் கொண்டவர்.
கிரஹாம்: எட்வெர்டின் மூத்த மகன். மொரீனைக் காதலிப்பவன்.
எலிஸபெத்: எட்வெர்டின் புதல்வி. வில்லியத்தைக் காதலிப்பவள்.
ஆப்ரஹாம்: மொரீன், வில்லியம் இருவரது தந்தை.
மொரீன்: ஆப்ரஹாமின் மூத்த மகள்.
வில்லியம்: ஆப்ரஹாமின் புதல்வன்.
கிளாடியா: ஓர் இரகசிய மாது..
சைமன்: ஒரு புரோக்கர்.
மேரி: எட்வெர்டின் வீட்டு வேலைக்காரி.
ஜேகப்: வீட்டு சமையல்காரன், குதிரை வாகன ஓட்டி.
வின்சென்ட்: கிரஹாமின் தனிப்பட்ட பணியாள்
***************
இடம்: பாரிஸில் செல்வந்தர் எட்வேர்டின் மாளிகை
நேரம்: பகல் வேளை
காட்சி அமைப்பு: செல்வந்தர் எட்வேர்டின் மாளைகை இல்லம். எட்வேர்டு உள்ளே நுழைந்த மகனுடனும், மகளுடனும் பேசிக்கொண்டிருக்கிறார்.
எட்வேர்டு: [கூர்ந்து நோக்கி, வியப்பாக] நான் பேசியது ஏதோ உங்கள் காதில் விழுந்திருக்கிறது. அதில் எனக்கு ஐயமில்லை ! எனக்குள் நான் போராடிக் கொண்டிருந்தேன் ! இந்தக் காலத்தில் பணம் தேடுவது, மிச்சப் படுத்துவது, சேமித்து வைப்பது எப்படிச் சிரமமானது என்று சிந்தித்துக் கொண்டிருந்தேன் ! நானொரு அதிர்ஷ்டசாலி ! வீட்டு விற்பனையில் பத்தாயிரம் பவுண் கிடைத்தால், ஒரு மனிதன் எத்தகைய ஆனந்தம் அடைவான் என்ற பூரிப்பில் பேசினேன் !
கிரஹாம்: உங்கள் சிந்தனையைக் கலைக்க எங்களுக்குத் துணிவில்லை ! அதனால்தான் உள்ளே நுழைய சற்றுத் தயங்கினோம்.
எட்வேர்டு: நான் சொல்ல வருவது என்ன வென்றால், நான்தான் பத்தாயிரம் பவுண் பணம் சம்பாதித்து விட்டதாக நீங்கள் கற்பனை செய்யக் கூடாது, குழப்பமும் அடையக் கூடாது !
கிரஹாம்: எங்களுக்குக் கற்பனா சக்தியும் இல்லை ! உங்களுக்குக் கிடைக்கும் பணத்தில் எங்களுக்குக் குழப்பமும் இல்லை !
எட்வேர்டு: ஆனால் அந்தப் பத்தாயிரம் பவுண் கிடைத்த அதிர்ஷ்டசாலி நானில்லை ! எவனோ ஒருவன் ! அவன்மேல் நான் பொறாமைப் படுகிறேன்.
எலிஸபெத்: ஆனால் அந்தப் பெரும் தொகை கிடைக்கும் திறமை தந்தைக்கு உள்ளது என்று நான் பெருமைப் படுகிறேன்.
கிரஹாம்: ஆனால் அந்த தொகை உங்களுக்குக் கிடைக்க வில்லை என்று சொல்லாமல் சொல்கிறீர் அவ்வளவுதானே ! அதை நம்புகிறேன் நான் !
எட்வேர்டு: [ஆனந்தமாக] அத்தகைய ஒரு பெரும் தொகை இப்போது கிடைத்தால் நான் ஒரு திருமணத்தை நடத்தி விடலாம் !
கிரஹாம்: [மகிழ்ச்சியாக] செவியில் தேனாகப் பொழிகிறது உங்கள் வாசகம் ! உங்களிடம் உள்ள பணத்தில் ஒன்றென்ன, இரண்டு திருமணங்கள் நடத்தி விடலாம் ! அப்பா ! நான் ஒன்று உங்களிடம் சொல்லத் துடிக்கிறேன் !
எலிஸபெத்: என் நெஞ்சில் பாலோடச் செய்கிறது உங்கள் பேச்சு ! அப்பா, திருமணம் என்று
நீங்கள் சொன்னதும், நானும் உங்களிடம் ஒன்றைச் சொல்ல தருணம் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
எட்வேர்டு: [புளதாங்கிதம் அடைந்து] எலிஸபெத் ! கிரஹாம் ! நானும் உங்களிடம் ஒரு முக்கிய விஷயத்தைச் சொல்ல வேண்டும். நல்ல தருணம் இது நம் குடும்பத்துக்கு ! அதைச் சொல்வதற்கு முன்பு உனக்கொரு கண்டிப்பைத் தெரிவிக்க வேண்டும்.
கிரஹாம்: [பயமுடன்] என்ன கண்டிப்பா ? எனக்கா ? நடுக்கம் உண்டாகுகிறதே !
எட்வேர்டு: [அழுத்தமாக] முதலில் உன் செலவைக் குறை ! வீண் செலவு செய்து என் சேமிப்புப் பணத்தைக் கரைக்கிறாய் ! இந்த வேகத்தில் என்னைக் கடனாளி ஆக்கிவிட்டு கையேந்த வைத்து விடுவாய் !
கிரஹாம்: [வியப்புடன்] அப்படி என்ன செலவை நான் செய்து விட்டேன் !
எட்வேர்டு: [அழுத்தமாக] வாலிப மைனர் போல் விலை உயர்ந்த உடைகளை அணிந்து கொண்டு வீதிகளில் வனப்பு மங்கையரை மயக்கி வருவதை நான் பார்த்தேன் ! நேற்று உன் சகோதரியைத் திட்டினேன். அவளும் ஆடை ஆபரணங்களில் என் பணத்தை விரயம் செய்கிறாள். நீ அவளை விட மிகவும் மோசம் ! கடைகளில் என் பெயர்க் கணக்கில் உடைகளை வாங்கிக் கொண்டு எனக்குத் தெரியாமல் என் பணத்தை சூறையாடுகிறீர் இருவரும் ! தந்தையின் பணத்தைக் கொள்ளை அடிக்கிறீர் !
கிரஹாம்: என்ன ? நாங்கள் உங்கள் பணத்தைக் கொள்ளை அடிக்கிறோமா ? நான் நாகரீகமாக உடை அணிய வேண்டாமா ? கற்கால மனிதன் என்றால் காட்டு இலை தழைகளைப் பின்னி அணிந்து கொள்ளலாம்.
எலிஸபெத்: அப்பா எனக்கு பதினெட்டு வயதாகிறது ! அழகா நான் உடை அணியா விட்டால் எந்த ஆடவனும் என்னைப் பார்க்க மாட்டான். எனக்குத் திருமணம் நடக்காது போகும் !
கிரஹாம்: அப்பா நான் … நான் காசினோவில் பணம் வைத்து சூதாடுவேன். கிடைத்த பணத்தை எல்லாம் பத்திரமாகச் சேர்த்து வைத்திருக்கிறேன் தெரியுமா ?
எட்வேர்டு: என்ன நீ பணத்தை வைத்து சூதாடுகிறாயா ? யாருடைய பணம் அது ? எவ்வளவு பணம் வைத்திருக்கிறாய் ? அப்படியானல் உன் திருமணச் செலவுக்கு நீ சம்பாதித்து வைத்திருக்கிறாய் என்று சொல் ! மெச்சுகிறேன் உன்னை !
கிரஹாம்: அப்பா ! அது போதாது என் திருமணத்துக்கு ! என் வருவாய் குறைவானது ! உங்கள் உதவி எனக்குத் தேவைப்படும் ! நான் இன்று அதைப் பற்றிப் பேச வேண்டும் !
எலிஸபெத்: அப்பா ! நானும் என் திருமணத்தைப் பற்றி உங்களிடம் இன்று சொல்ல வேண்டும்.
எட்வேர்டு: [ஆர்வமுடன்] பொறுங்கள் ! உங்கள் விருப்பத்தைச் சொல்லப் பொறுங்கள். நானும் திருமணத்தைப் பற்றித்தான் உங்களிடம் பேச விரும்புகிறேன்.
எலிஸபெத்: [களிப்புடன்] அப்பாவுக்கு நிகர் அப்பாதான் ! தங்கமான அப்பா ! சொல்லுங்கள் அப்பா ! யாருடைய திருமணத்தைப் பற்றி ?
கிரஹாம்: [ஆவலுடன்] நானும் அதைப் பற்றிப் பேசத்தான் துடித்துக் கொண்டிருக்கிறேன்.
[எட்வேர்டு நடுவில் இருக்க கிரஹாம் ஒரு புறமும், எலிஸபெத் மறுபுறமும் ஓடிவந்து ஆவலுடன் நிற்கிறார்கள்]
எட்வேர்டு: [பூரிப்போடு] இந்தத் திருமண விஷயத்தில் உங்களுக்கு இத்தனை விருப்பமா ? [சிரிக்கிறார்] இத்தனை மகிழ்ச்சியை நான் இதுவரைப் பார்த்தைல்லை.
கிரஹாம்: நீங்கள் முன்வந்து திருமணத்தைப் பற்றி திடீரென்று பேசுவது சற்று விந்தையாகவே உள்ளது அப்பா. ஒன்று சொல்ல ஆசைப்படுகிறேன், நீங்கள் தேர்ந்தெடுக்கும் பெண் எனக்குப் பிடிக்காமல் போகலாம்.
எலிஸபெத்: ஆமாம் அதுபோல் உங்களுக்குப் பிடிக்கும் ஆண்மகன் எனக்குப் பிடிக்காது.
எட்வேர்டு: பொறுங்கள் இருவரும் ! ஆத்திரப்பட வேண்டாம். உங்கள் இருவருக்கும் யார் யார் தகுந்தவர் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். நான் சொல்லப் போவதில் உங்களுக்கு வெறுப்பு எதுவும் உண்டாகாது. சரி உங்களில் யாருக்காவது தெரியுமா மொரீன் என்பவளைப் பற்றி ! அவள் வசிப்பது நமக்குச் சமீபத்தில்தான்.
கிரஹாம்: [பேரானந்தம் அடைந்து] அப்பா ! நன்றாகத் தெரியும் எனக்கு மொரீனை ! நான் நினைப்பதை நீங்களும் நினைத்திருக்கிறீர் !
எட்வேர்டு: [எலிஸபெத்தைப் பார்த்து] உனக்குத் தெரியமா மொரீனை ?
எலிஸபெத்: ஏதோ கொஞ்சம் தெரியும். அவளைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறேன்.
எட்வேர்டு: என்னருமை கிரஹாம் ! அவளைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய் ?
கிரஹாம்: கவர்ச்சியான பெண் ! கனிவான பெண் ! கச்சிதமான பெண் ! நேர்மையான பெண் ! புத்தி கூர்மையான பெண் ! கனவுக் காரிகை ! அவளைக் கைப்பிடிக்கும் அந்த அதிர்ஷ்டசாலி யாரோ ?
எட்வேர்டு: அப்படிப்பட்ட பெண் இந்த மாளிகையில் வாழத் தகுந்தவள் இல்லையா ?
கிரஹாம்: [புளதாங்கிதம் அடைந்து] உண்மை அப்பா ! நூற்றுக்கு நூறு ஏற்ற சொல் அது !
எட்வேர்டு: பொருத்தமான ஜோடி இல்லையா ?
கிரஹாம்: நிச்சயமாக !
எட்வேர்டு: ஒரு கணவன் அவளுடன் களிப்போடு வாழ முடியும் இல்லையா ? ஆனால் அதில் ஒரு சிக்கல் உள்ளது !
கிரஹாம்: [சிரித்துக் கொண்டு] நிச்சயமாக ! என்ன சிக்கல் அது ?
எட்வேர்டு: மொரீன் ஓர் எளிய குடும்பத்தைச் சேர்ந்தவள். வருவாய் இல்லாத வறுமைக் குடும்பம்.
வாயும் வயிறும் காய்ந்த ஏழைக் குடும்பம் !
கிரஹாம்: அப்பா ! நம் மாளிகையில் எல்லாம் நிரம்பி வழிகிறது. மணப் பெண்ணாய் ஏற்றுக் கொள்ளும் நாம் அவளது வறுமையை நிவர்த்தி செய்யலாம் இல்லையா ? நேர்மையான ஒரு பெண்ணை மணக்கப் பணம் ஏன் குறுக்கே நிற்க வேண்டும் ?
எட்வேர்டு: உங்கள் பதிலும், உடன்பாடும் என் இதயத்தில் தேனைப் பொழிகிறது ! மொரீனின் தணிவான பண்பும், பணிவான அன்பும், கனிவான கவர்ச்சியும் என்னை வென்று விட்டன ! நான் மொரீனை மணந்து கொள்ளத் தீர்மானித்து விட்டேன் ! உங்கள் இருவரது ஏகோபித்த உடன்பாடும் என்னைச் சொர்க்க புரிக்கு இழுத்துச் செல்கின்றன !
கிரஹாம்: அப்பா ! என்ன இது ? நீங்கள் சொல்வது எனக்குக் குழப்பம் உண்டாக்குது !
எலிஸபெத்: என்ன ? மொரீனை நீங்கள் மோகிப்பதா ? அவள் ஓர் அப்பாவிப் பெண் !
எட்வேர்டு: ஆம் ! மொரீனை நான் மோகிக்கிறேன் ! உண்மையாக அவள் ஒரு மோகினிதான் !
உங்கள் அன்னை செத்து பத்தாண்டுகள் ஓடிவிட்டன ! நான் தனிமையில் சாவது உங்களுக்குத் தெரியாது ! எனக்கொரு துணை தேவை ! அவள் மொரீனாகத்தான் இருக்கப் போகிறாள் !
கிரஹாம்: அப்பா ! வேண்டாம் ! வேண்டாம் ! மொரீன் உங்களுக்கு முற்றிலும் தகுதியற்றவள் !
எலிஸபெத்: அப்பா ! உங்கள் வயது எழுபது ! மொரீன் வயது இருபது ! இருபதையும், எழுபதையும் திருமணக் கோலத்தில் பார்த்தால், தாத்தா பேத்தி தம்பதிகள் போலிருக்கும் ! சின்னஞ் சிறிய ஏழைக் கன்னிக்கு உங்கள் பணத்தைக் காட்டி ஏமாற்றாதீர் ! பாவம், பெண் பாவம் ! வாலிபனை மணக்க வேண்டிய மங்கைக்கு ஒரு வயோதிகர் வலை வீசுவது முறையா ? நெறியா ? விதியா ?
எட்வேர்டு: [சிரித்துக் கொண்டு] சரியாகச் சொன்னாய் எலிஸபெத் ! எனக்கு வயதான மாதைப் பிடிக்காது ! அவளோடு சண்டை போட எனக்குச் சக்தி இல்லை ! சின்னஞ் சிறு அப்பாவிக் கன்னிதான் சொன்னபடி ஆடுவாள் ! பாடுவாள் ! நாடுவாள் ! பார்த்துக் கொண்டே பரவசப் படலாம் ! அவள்தான் எனக்கு மனைவியாக வர வேண்டும் ! கிழவியை மணந்து கொண்டு அவளது நோய் நொடிகளைத் தீர்க்கவே என் வாழ்நாள் முடிந்து விடும் ! என் பணப் பெட்டியும் காலியாகி விடும் ! திருமணத்துக்கு நான் இனி எல்லா ஏற்படும் செய்கிறேன் ! நீங்கள் எனக்கு ஒத்தாசையாக இருந்தால் போதும் ! [பாடுகிறார்] வாழ்விலோர் திருநாள் ! வருகுதே எனக்கொரு மணநாள் ! மொரீன் ! மொரீன் ! மொரீன் ! நீதான் எனது கனவுக் கன்னி !
எலிஸபெத்: அப்பா ! திருமணத்துக்கு நாங்கள் காத்துக் கிடக்கும் போது எப்படி நீங்கள் கனவுக் கன்னியை நினைக்க முடிகிறது ?
கிரஹாம்: எலிஸபெத் ! எனக்குத் தலை சுற்றிக் கொண்டு வருகிறது ! குடிக்கத் தண்ணீர் கொண்டுவா !
[கிரஹாம் மயக்கமுற்று நாற்காலியில் விழுகிறான். எலிஸபெத் ஓடிப்போய் அவனைப் பிடித்து உட்கார வைக்கிறாள்]
(தொடரும்)
************************
தகவல் & படங்கள்
Picture Credits Wikipedia & A.R.T American Reperory Theatre
Based on The Play
Moliere’s Miser (1922-1673)
1. Moliere’s Miser Translated By: Sysvan Barnet, Morton Berman & William Burto (1958) A Mentor Book “Eight Great Comedies”
2. A Mentor Book “Eight Great Tragedies” By: Sysvan Barnet, Morton Berman & William Burto (1957)
3. Dover Thrift Editions: Moliere “Tartuffe” (2000) for Biographical Reference
4. Moliere Miser – Wikipedia Encyclopedia for Biographical Reference.
5. Moliere The Misanthrope & Other Plays By Benguin Classics (2000)
********************
jayabarat@tnt21.com [S. Jayabarathan (September 19, 2007)]
- பகவத் கீதை – ஓர் எளிய மொழியாக்கம் – 7
- தொட்டிச் செடிகள்
- ஈழத்துப்பூராடனாரின் தமிழ்இலக்கியப் பணிகள்
- மாலை நேரத்து விடியல்
- பேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 1 காட்சி 3 பாகம் 2
- மாத்தா ஹரி – அத்தியாயம் 28
- ஒரு சுனாமியின் பின்னே…
- அக்கினியின் ஊற்று……
- காதலே ஓடிவிடு
- “பெயரில்லாத நண்பனின் கடிதம்”
- ஆடும் கசாப்புக்காரனும்!!
- பதுங்குகுழியில் பிறந்தகுழந்தை
- பிடுங்கிகள்
- ரசனை
- மகத்தானவர்கள் நாம்
- இலை போட்டாச்சு கடலைப் பருப்பு போளி
- “படித்ததும் புரிந்ததும்”.. (2) நினைவுச் சின்னம்
- மகாகவி பர்த்ருஹரியின் ‘சுபாஷிதம்’ : மதுமிதாவின் தமிழாக்கம்
- கால நதிக்கரையில் – அத்தியாயம் – 24
- கவிஞர் தமிழ்ஒளி அவர்களின் 84 ஆம் பிறந்தநாள்விழா
- அணுமின்சக்தி இயக்க ஏற்பாடுகளின் அனுதினப் பாதுகாப்பும் கண்காணிப்பும் -3
- மீசை
- 9 கேள்விகளும் – உண்மையின் மையப்புள்ளியும்
- காதல் நாற்பது – 39 சொல்லிக் கொடு இனியவனே !
- சாவு அச்சங்கள் நீங்கிய பொழுதுகள்!
- மேற்கு உலகம்!
- இழந்த பின்னும் இருக்கும் உலகம்
- சீரியல் தோட்டம்
- சொன்னாலும் சொல்வார்கள், திருக் கயிலாயம் வெறும் பாறை என!
- பிழைதிருத்தம் 16 – அலைகடல் – அலைக்கடல்
- பாரதி 125 பன்னாட்டுக்கருத்தரங்கம்
- குடி கலாச்சாரம்?
- ஸ்ரீனி’யின் ‘அந்த நாள் ஞாபகம் – பாட்டுக்கு பாட்டெடுத்து…’
- ஹெச்.ஜி.ரசூல் என்ன செய்தார்…. எழுத்தாளர் பா.செயப்பிரகாசத்தின் பதிவு
- கண்மணி குணசேகரனுக்கு சுந்தர ராமசாமி இலக்கிய விருது
- மங்களத்தின் கவலையில் நானும் பங்கேற்கிறேன். ஆனால்…
- கடிதம்
- இராம சேது குறித்தும் இராமர் குறித்தும்
- வீடு