எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:6 காட்சி:5&6)
சி. ஜெயபாரதன், கனடா

காலப் பெரு இடைப்வெளி தனைக் கடந்திட!
எனை விட்டேகினார் என்னினிய ஆண்டனி! … கிளியோபாத்ரா
வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)
எங்குள்ளார் ஆண்டனி? நிற்கிறாரா? குந்தியுள்ளாரா?
நடக்கிறாரா? அன்றிக் குதிரைமேல் சவாரியா?
ஆண்டனி பளுவைச் சுமந்து மகிழும் குதிரையே!
எவரைச் சுமக்கிறாய் எனும் தீரப் பெருமையில் செல்! … (கிளியோபாத்ரா)
வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)
என்னரும் அரசி! இது அவர் இறுதியாய்ச் செய்தது!
முத்த மிட்டார் இவ்வாசிய முத்தை இருமுறை!
அப்பிக் கொண்டன நெஞ்சை அவர் மொழிகள்!
“அருமை நண்பா! நிமிர்ந்த ரோமன்
எகிப்து அழகிக்குச் சிப்பிக் களஞ்சியம்
அனுப்பிய தாக உரைத்திடு” என்பார்.
பிணைப்பேன் அவள் செல்வ ஆசனத் தோடு,
பிடித்த எனது நாடுகள் எல்லாம். பிறகு
ஆசிய நாடுகள் அனைத்தும் அவளை
ஆசை நாயகி யாக அழைக்கும் எனச்சொல்! … (அலெக்ஸாஸ்)
வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)
பனித்த குருதியில் என்னறியாப் பருவத்திலே,
நல்லது, கெட்டது புரியாத் தருணத்திலே,
தனித்து அப்பாவி போல் சொல்லியது,
கொண்டுவா தாளையும், மையையும். எகிப்தின்
குடியினர் அனைவரும் அனுதினம் எழுதிக்
கடிதம் போகும் ஆண்டனி அவர்க்கு! … கிளியோபாத்ரா
வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)
கதைச் சுருக்கம்: கிரேக்க மகாவீரர் அலெக்ஸாண்டர் பரம்பரையில் வந்த எகிப்தின் வசீகர மங்கை, ஏழாம் டாலமியின் புதல்வியாக கி.மு. 69 ஆம் ஆண்டில் அலெக்ஸாண்டிரியாவில் பிறந்தாள். தந்தை டாலமி மரணம் எய்திய பிறகு கிளியோபாத்ராவும் அவளது இளைய தமையன் டாலமியும் ஒன்றாகச் சேர்ந்து எகிப்தை ஆண்டார்கள். மூன்றாண்டுகள் கழித்துக் கணவனும், தம்பியுமான 15 வயது டாலமி கிளியோபாத்ராவை நாடு கடத்திப் பிறகு தானே அரசாண்டான். சிரியாவுக்கு ஓடிய கிளியோபாத்ரா, தம்பியைப் பலிவாங்க அப்போது அலெக்ஸாண்டிரியாவுக்கு வந்த ரோமானியத் தளபதி ஜூலியஸ் சீஸரின் உதவியை நாடுகிறாள். சீஸரைக் கவர்ச்சியால் மயக்கி, எகிப்துக்குத் தானே அரசியாக வேண்டு மென்றும், சகோதரன் டாலமி அகற்றப்பட வேண்டு மென்றும் வற்புறுத்தி வெற்றியும் பெற்றாள். சீஸர் கிளியோபாத்ராவின் தேன்நிலவு நீடித்து அவளுக்கு ஓர் ஆண் மகவு பிறந்தது. எகிப்தில் நடத்திய சீஸரின் தாம்பத்திய வாழ்க்கையை ரோமானியர் ஏற்று கொள்ளாமல் அவரை வெறுத்தனர்!
முடிசூட்டிக் கொள்ள ரோமுக்குச் சீஸர் மீண்டதும், செனட்டர் செய்த சதியில் சீஸர் கொல்லப்பட்டார். சீஸர் கொலைக்குப் பின் ரோமில் பெரும் குழப்பம் உண்டாகி மார்க் ஆண்டனி, அக்டேவியன் ஆகியோரது நேரடிக் கண்காணிப்பால் ரோம் சாம்ராஜியத்தில் அமைதி நிலவியது. நேரடியாக அலெக்சாண்டிரியாவுக்குக் காண வந்த ஆண்டனியைக் கவர்ச்சியால் மயக்கித் தன் காதல் அடிமையாய் ஆக்கினாள் கிளியோபாத்ரா. ஆண்டனியின் தேனிலவு நீடித்து ரோமானிய செனட்டர்களின் சீற்றத்தையும், வெறுப்பையும் மார்க் ஆண்டனி பெறுகிறான். அக்டேவியன் தலைமையில் ரோமானியப் படை ஆண்டனி மீது போர் தொடுத்து வெற்றி அடைகிறது. எகிப்தில் தனித்துப் போன ஆண்டனியும், அக்டேவியன் உடன்படிக்கைக்கு அடி பணியாத கிளியோபாத்ராவும் பயங்கர முடிவைத் தேடிக் கொள்கிறார்கள்.
ஆண்டனி & கிளியோபாத்ரா
மூன்றாம் பாகம்
நாடகப் பாத்திரங்கள்:
எகிப்தின் அலெக்ஸாண்டிரியாவில்:
கிளியோபாத்ரா: எகிப்தின் பட்டத்தரசி
ஆண்டனி: ரோமாபுரியின் மூன்று தளபதிகளில் ஒருவர்
டையோமீடிஸ்: கிளியோபாத்ராவின் பணியாள்
ஸெலியூகஸ்: கிளியோபாத்ராவின் கணக்காளி
பெல்லோடோரஸ்: கிளியோபாத்ராவின் பாதுகாப்புக் காவலன்.
பிதாதீதா: கியோபாத்ராவின் ஆயா
சிஸேரியன்: கிளியோபாத்ராவின் மகன்
ரோமாபுரியில்:
ரோமின் தளபதி: மார்க் ஆண்டனி,
அக்டேவியஸ் சீஸர்: ரோமின் இரண்டாம் தளபதி, ஜூலியஸ் சீஸரின் சகோதரன் மகன்
லெப்பிடஸ், ரோமின் மூன்றாம் தளபதி
எனோபரஸ் (ஆண்டனியின் பாதுகாவலன்),
டெமிட்ரியஸ்: ஆண்டனியின் நண்பன்
•பிலோ: ஆண்டனியின் நண்பன்
ஸெக்டஸ் பாம்ப்பி (கொல்லப்பட்ட போர்த் தளபதி பாம்ப்பியின் வாலிப மகன்)
அக்டேவியா (ஆண்டனியின் இரண்டாம் மனைவி, அக்டேவியஸின் சகோதரி)
கிளியோபாத்ரா
அங்கம்:6 காட்சி:5
ரோமா புரியின் நிலைமை: •பிலிப்பிப் போரில் புரூட்டஸ், காஸ்ஸியஸ் மற்ற சதிகாரர் யாவருமிறந்த பிறகு, ஆண்டனி, அக்டேவியஸ், லெப்பிடஸ் மூவர்களின் கூட்டு மேற்பாட்டில் ரோமாபுரி இயங்கி வருகிறது. ஜூலியஸ் சீஸர் கொலையாகி இரண்டாண்டுகளுக்குப் பிறகு ஆண்டனி கிளியோபாத்ராவைக் காண எகிப்த் வருகிறான். மனைவி •புல்வியா மரணம் அடைந்த பிறகு, ஆண்டனி தனிமையாகிக் கிளியோபாத்ரா மீது நாட்டம் உண்டாகுகிறது. அதே சமயத்தில் நிதிக் களஞ்சியம் காலியாகிப் போர்வீரர்களுக்குக் கூலி கொடுக்க நிதியின்றிப் பணம் திரட்ட வேண்டி, ஆண்டனி எகிப்து செல்லத் திட்டமிடுகிறான். எகிப்த் அரசியிடம் நேராகக் கையேந்திப் பிச்சை கேட்கத் துணிவின்றி, கிளியோபாத்ரா தன்னைக் காண வரவேண்டும் என்று காவலர் மூலம் உத்தரவு அனுப்புகிறான். ஆனால் கிளியோபாத்ரா எகிப்த் தளத்தில் தானிருப்பதாகவும், ஆண்டனிதான் அவளைக் காண வரவேண்டும் என்று மறுமொழி அனுப்புகிறாள். எகிப்துக்கு வந்த ஆண்டனி தன் மனைவி புல்வியா போர்க்களத்தில் தனித்துப் போய் நோயில் மரணமடைந்த தகவல் கேட்டு மனம் நோகிறான். ரோமுக்கு மீளவும் விரும்பாது, கிளியோபாத்ராவின் கவர்ச்சியிலிருந்து மீளவும் முடியாது திண்டாடுகிறான் ஆண்டனி.
நேரம், இடம்: ரோமாபுரி. பகல் வேளை.
நாடகப் பாத்திரங்கள்: ரோமாபுரித் தளபதிகள் அக்டேவியஸ், லெப்பிடஸ் அவரது படைக் காவலளர்.
காட்சி அமைப்பு: ரோமாபுரி அரண்மனையில் தளபதி அக்டேவியஸ் எகிப்திலிருந்து ஆண்டனி போரில் கலந்து கொள்ள வரவில்லை என்று செய்தி கொண்டுவந்த கடிதத்தைக் கையில் பார்த்துக் கொண்டு ஆத்திரமோடு உள்ளார். கொல்லப்பட்ட பாம்ப்பியின் மகன் ஸெக்டஸ் பாம்ப்பி தனது படைகளுடன் ரோமைக் கைப்பற்ற வந்து கொண்டிருக்கிறான்.
அக்டேவியஸ்: பார் லெப்பிடஸ்! ஆண்டனி வரவில்லை! எகிப்தில் கட்டாய வேலை யிருப்பதால், ஆண்டனி போரில் கலந்த கொள்ள முடியாதாம். ஸெக்டஸ் பாம்ப்பி ரோமின் எல்லையில் உள்ளதாய் அறிந்தேன்! லெப்பிடஸ்! நீ ஒருவன் மட்டும் பாம்ப்பியை எதிர்க்க முடியாது! ஆண்டனி முன்போல் படை வீரரை நடத்திச் செல்ல வேண்டும். ஆனால் கிளியோபாத்ரா கவர்ச்சி வலையில் மிதந்து கொண்டிருக்கிறார் ஆண்டனி! என்ன கட்டாய வேலை எகிப்தில் உள்ளது ஆண்டனிக்கு? கிளியோபாத்ரா கண்சிமிட்டும் போது முத்தமிடுவதைத் தவிரக் கட்டாய வேலை வேறு என்ன ஆண்டனிக்கு?
லெப்பிடஸ்: நமது நிதிக் களஞ்சியம் வற்றிப் போனதை மறந்து விட்டாயா, அக்டேவியஸ்! நமது படையாட்கள் பல மாதங்கள் சம்பளம் தரப்படாமல் முணங்குவது உன் காதில் கேட்க வில்லையா? கிளியோபாத்ராவை ஆசை ராணியாக வைத்துக் கொண்டால்தானே பொன் நாணயங்களை ஆண்டனி கறந்து கொண்டு வரலாம். என்னாற்றல் மீது அவருக்கு உறுதி உள்ளது. அதனால்தான் அவர் வரவில்லை! நான் உள்ள போது நீயேன் கலங்க வேண்டும்?
அக்டேவியஸ்: சீஸருக்குப் பிறகு ரோமாபுரியின் பராக்கிரமத் தளபதியாய், ஆண்டனி தனித்து நிற்கிறார். அவரிடம் நாம் குற்றம் காணக் கூடாது! ஆனால் மாவீரர் ஆண்டனி யில்லாமலே நான் பாம்ப்பியின் படைகளை நசுக்க முடியும். எனக்கு நம்பிக்கை உள்ளது!
அக்டேவியஸ்: உன் நம்பிக்கை மட்டும் போதாது லெப்பிடஸ்! நமது ரோமானியப் படைகள் சாதாரண மனிதர். அவரைப் புலிகளாகப் பாய வைக்க ஒரு தளபதியால் முடியும்! அதே புலிகளைப் பூனைகளாகவும் ஒரு தளபதி ஆக்கிவிட முடியும். ஆண்டனி சாதாரணப் படை வீரரை ஆவேசப் புலிகளாக ஆக்க வல்லவர்! நமது பொறுப்பில் விட்டுவிட்டு ஆண்டனி கிளியோபாத்ரா மடியில் படுத்துக் கிடப்பது எனக்கு வேதனை தருகிறது. பாம்ப்பியை நாமிருவரும் தோற்கடித்தால் அவர் தன் முதுகில்தான் தட்டிக் கொள்வார். மாறாக நாமிருவரும் தோற்றுப் போனால், உன்னையும் என்னையும் திட்டி ஊரெங்கும் முரசடிப்பார்!
லெப்பிடஸ்: ஈதோ போர் முனையிலிருந்து நமக்கு முதல் தகவல் வருகிறது.
[அப்போது ஒரு படைத் தூதுவன் வருகிறான்]
முதல் தூதுவன்: மாண்புமிகு தளபதி அவர்களே! ஒவ்வொரு மணிக்கும் தகவல் வருமினி உங்களுக்கு. வெளி நாட்டுப் போர்க்களம் எப்படி உள்ள தென்று சொல்லவா? பாம்ப்பியின் கடற் படைப்பலம் வல்லமை உள்ளது. அக்டேவியஸ் தீரருக்கு அஞ்சியவர் அனைவரும் பாம்ப்பியின் பக்கம் போய்ச் சேர்ந்திருக்கிறார். அவரது ஒற்றர் அவருக்குத் தவறான தகவலைக் கொடுக்க வழி செய்தோம் நாங்கள்!
அக்டேவியஸ்: மெச்சினேன் உன்னை! தப்பான தகவல் கொடுங்கள்! தவறான பாதையைக் காட்டுங்கள்! மாட்டிக் கொண்டதும் அவரைச் சுற்றித் தாக்கி ஈட்டியால் குத்துங்கள்!
[முதல் தூதுவன் போகிறான். அடுத்த தூதுவன் நுழைகிறான்]
இரண்டாம் தூதுவன்: மாபெரும் கடற் கொள்ளைக்காரர் பலரைப் பாம்ப்பி படைவீரராய்ச் சேர்த்திருக்கிறார். அந்த பயங்கர வாதிகள் பரிவுள்ள மனிதர் அல்லர். வன விலங்குகள்! நாம் மிகக் கவனமாகப் போரிட வேண்டும்.
அக்டேவியஸ்: முன்பே அறிவித்ததற்கு நன்றி. போய் வா [தூதுவன் போகிறான்] லெப்பிடஸ்! புதிதாகப் பயிற்சி பெற்ற அந்த வாலிப படைகளை அனுப்பி வை! வாலிபர் நெஞ்சம் வைரம் போன்றது. கடற் கொள்ளைக்காரர் ஓய்வெடுக்கும் நேரம் பார்த்துக் கப்பலுக்குள் அவர் நுழைய வேண்டும். திடீரெனத் தாக்கி அவருக்கு மரண அதிர்ச்சி கொடுக்க வேண்டும். ஆண்டனி யிருந்தால் அவரது ஆலோசனை பயன்படும். அவர் கடற்போர் புரியும் நேரத்தில் கிளியோபாத்ராவுடன் குளத்தில் நீராடிக் கொண்டிருப்பார்.
லெப்பிடஸ்: ஆண்டனியால் நமக்கும் அவமானம்!, அவருக்கும் அவமானம்! தன்மான மின்றி அடிமையாய்ப் பெண்மானின் காலை வருடிக் கொண்டிருக்கிறார்! ஆண்டனி கிளியோபாத்ராவுக்கு அடிமையா? அல்லது கிளியோபாத்ரா ஆண்டனிக்கு அடிமையா? .. நான் கவலைப் படவில்லை. நமது படைகள் கூடட்டும்! நமது கலப்பு யோசனைகள் சேரட்டும்! நாம் எதிர்த்து முன்னேறா விட்டால், பாம்ப்பி நமது சோம்பலில் பலப் பெறுவார்! நாளை நமது கடற்படையைத் திரட்டித் தயார் செய்கிறேன்! நான் போகட்டுமா? விடை பெறுகிறேன். [வெளியேறுகிறான்]
அக்டேவியஸ்: போய்வா லெப்பிடஸ்! … ஆண்டனி! உனக்கு அழிவு காலம் உதய மாகி விட்டது. அறிவை அடகு வைத்து அணங்கின் பிடியில் வீரன் நீ அகப்பட்டுக் கிடக்கிறாய்! உன் கண்கள் காதலில் மூழ்கி ஒளியிழந்து குருடாகி விட்டன! நீ கண்ணை மூடினால் ரோமாபுரி இருட்டாகி விடாது! [போகிறான்]
கிளியோபாத்ரா
அங்கம்:6 காட்சி:6
நேரம், இடம்: அலெக்ஸாண்டியா, கிளியோபாத்ராவின் மாளிகை. பகல் வேளை.
நாடகப் பாத்திரங்கள்: கிளியோபாத்ரா, சேடிகள், அடிமைகள்
காட்சி அமைப்பு: கிளியோபாத்ராவின் மாளிகைப் பொய்கையில் நீராடிய பிறகு ஐரிஸ், சார்மியான், அலெக்ஸாஸ், மார்டியன் ஆகியோரோடு உரையாடிக் கொண்டிருக்கிறாள்.
கிளியோபாத்ரா: [மனம் நொந்துபோய்] ஐரிஸ்! அந்த மயக்க பானத்தை எனக்கு எடுத்து வா! [ஐரிஸ் போகிறாள்] நான் மறக்க வேண்டும் என் மன வேதனையை! நான் தூங்க வேண்டும், கால இடைவெளியைக் கடக்க! தூங்கி விழிக்கும் போது ஆண்டனி என் கண் முன்னே நிற்க வேண்டும்! அதுவரை எனக்கு உணவில்லை! கனவில்லை! நினைவில்லை! எதுவுமில்லை! ஆண்டனி விழிமுன் நின்றால், கண்ணிமைகள் தானாகவே திறக்கும். சார்மியான்! வாசலில் போய் நில், வருகிறாரா என்று பார்த்துச் சொல்! [சார்மியான் போகிறான்]. அலெக்ஸாஸ்! எனக்குத் தெரியாமல், எனக்குச் சொல்லாமல் ஆண்டனி ரோமாபுரிக்குப் போய் விட்டாரா என்று அறிந்து வா! போனால் எப்போது திரும்பி எகிப்துக்கு வருவாரெனத் தெரிந்து வா! [அலெக்ஸாஸ் போகிறான்]
[ஐரிஸ் கொண்டு வரும் தூக்க பானத்தை அருந்திப் படுக்கையில் சாய்கிறாள்]
கிளியோபாத்ரா: [எழுந்து] மார்டியான்! ஆண்டனி எங்கே போயிருக்க முடியும் என்று உன்னால் ஊகிக்க முடியுதா? எங்காவது காத்துக் கொண்டு நிற்கிறாரா? கவலையுடன் நெற்றியில் கைவைத்து எங்காவது உட்கார்ந் திருப்பாரா? ரோமுக்குப் போவதா, வேண்டாமா வென்று திக்குமுக்காடி அங்குமிங்கும் நடக்கிறாரா? அல்லது குதிரை மீதேறிச் சவாரியில் அப்பால் போய்க் கொண்டிருக்கிறாரா? அப்படியானல் அவரது பளுவைத் தாங்கும் அந்த குதிரை ஓர் அதிர்ஷ்டக் குதிரை! எத்தகைய கோமானைச் சுமக்கிற தென்று அக்குதிரை பெருமைப் பட்டுக் கொள்ளலாம்!
[அப்போது கையில் சிறு பேழையோடு அலெக்ஸாஸ் நுழைகிறான்]
அலெக்ஸாஸ்: மகாராணி! ஈதோ ஒரு பரிசை ஆண்டனி அனுப்பி யிருக்கிறார்! உள்ளிருப்பது நல்முத்து ! மூன்று முறை முத்தமிட்டு ஆண்டனி அளித்ததாகத் தூதர் சொல்கிறார். இது ஆசிய முத்து! ஆண்டனியின் இனிய அதரங்கள் அன்புடன் முத்தமிட்டு அளித்த முத்து ஈதோ! [கையில் கொடுக்கிறான்]
கிளியோபாத்ரா: ஆண்டனி முத்தமிட்ட முத்தென்றால் அதன் மதிப்பு ஆயிரம் மடங்கு! அடுத்தொரு முத்து வந்தால் காதணியாக மாட்டிக் கொள்வேன். என் தலையணைக் கடியில் வைத்துக் கொள்கிறேன். எனக்கினிய கனவுகள் வரும்! அக்கனவுகளில் முத்தை முத்தமிட்ட ஆண்டனி என்னை முத்தமிட வருவார்!
அலெக்ஸாஸ்: மகாராணி! ஆண்டனி தூதர் மூலம் ஒரு கடிதமும் அனுப்பியுள்ளார் உங்களுக்கு. ஈதோ கடிதம் [கடித்ததைக் கொடுக்கிறான்]
கிளியோபாத்ரா: [கடித்தை வாசிக்கிறாள்] “ஆசியச் சிப்பியின் முத்தை உனக்கு அனுப்பியிருக்கிறேன். அது தனித்துவம் படைத்தது. ஏனெனில் எனதினிய முத்தங்களைச் சுமந்து கொண்டு வருகிறது. கண்ணே கிளியோபாத்ரா! ஈதோ என் மாபெரும் பரிசு! நான் கைப்பற்றிய நாடுகளை எல்லாம், உனது எகிப்திய அரசுடன் இணைப்பேன். கிழக்காசிய நாடுகளும் உன்னைத் தம் ஆசை ராணியாகப் போற்றும்!” [பூரித்து எழுகிறாள்] யாரங்கே! அலெக்ஸாஸ்! தாளும், மையும் கொண்டுவா! நான் ஆண்டனிக்குக் கடிதம் எழுத வேண்டும். எகிப்தில் எழுதத் தெரிந்த அத்தனை பேரையும் தினமொரு முறை எழுத வைத்து, ஆண்டனிக்குக் கடிதம் அனுப்புவேன். முதல் கடிதம் என் கடிதம் என்னாசைக் காதலருக்கு!
(தொடரும்)
*********************
Based on The Plays:
1. Bernard Shaw’s Caesar & Cleopatra [Play-1]
2. William Shakespeare’s Julius Caesar [Play-2]
3. William Shakespeare’s Antony & Cleopatra [Play-3]
4. Britannica Concise Encyclopedia [2003]
5. Encyclopedia Britannica [1978 & 1981]
6. Life of Antony By: Plutarch
7. Elizabeth Taylor As Cleopatra, Movie & Images.
8. Life of Pompey the Great Wikipedia Encyclopedia
9. Shakespeare’s Antony & Cleopatra Edited By: David Bevington [1988]
10 Shakespeare’s Antony & Cleopatra Edited By: M.R. Ridly [1993]
11 Life of Antony & Fulvia Wikipedia the Free Encyclopedia [http://en.wikipedia.org/wiki/Fulvia]
********************
jayabarat@tnt21.com [S. Jayabarathan (Feb 14, 2007)]
- பச்சைத் தமிழரைப் பற்றிச் சில பசுமையான நினைவுகள்
- பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:6 காட்சி:5&6)
- நீர்வலை (11)
- இத்தருணத்தின் கடைசி நொடி
- காதல் நாற்பது (9) – என்ன கைம்மாறு செய்வேன் ?
- கோவில் சன்னதி
- பன்னாட்டுக் கருத்தரங்கம் – அண்ணாமலை பல்கலைக் கழகம், கலைஞன் பதிப்பகம்
- தாஜ் கவிதைகள்.
- தப்பூ சங்கரின் தப்பு தாளங்கள்.
- இது கூட இயற்கை தானா?….
- போரில்லா உலகுக்காய்ப் போரிடும் கவிஞர்கள் – தொடர்ச்சி
- மனத்தில் எழுந்த அலைகள் (கடிகாரம் அமைதியாக எண்ணிக்கொண்டிருக்கிறது – கட்டுரைத் தொகுதி அறிமுகம்)
- மனித வினைகளால் சூடேறும் பூகோளம் பற்றிப் பாரிஸ் கருத்தரங்கு-2 (IPCC)
- விவசாய சங்கத்தலைவர் ஆறுபாதி கல்யாணம் அவர்களுடன் பேட்டி 2 – தொடர்ச்சி
- அன்பர் தினம் துணையே
- பழமைவாதமும், புதுமைவாதமும் – இரு கண்காட்சிகள்
- In response to Jadayus atricle
- நெஞ்சோடு புலம்பல்!
- கடித இலக்கியம் -45
- மடியில் நெருப்பு – 25
- அலாஸ்கா கடற் பிரயாணம் – மூன்றாம் பாகம்
- இலை போட்டாச்சு! – 15 கறி (பொரியல்) வகைகள்
- ஜெனரல் பர்வேஸ் முஷர்ரஃபின் சுயசரிதை நூல் வெளியீட்டு விழா