மடியில் நெருப்பு – 24

This entry is part [part not set] of 37 in the series 20070208_Issue

ஜோதிர்லதா கிரிஜா



24.

தன்னைப் பார்க்கத்தான் காவல்துறை ஆய்வாளர் வந்துகொண்டிருந்தார் என்பது புரிய, பவானி, பேனாவை மூடிவைத்துவிட்டு, “ வாங்க, இன்ஸ்பெக்டர்!” என்றாள். எழுந்து போய் எதிரே சுவரோரத்தில் மடக்கிவைக்கப் பட்டிருந்த நாற்காலி யன்றை எடுத்து விரித்து எதிரே போட்டு, “உக்காருங்க, இன்ஸ்பெக்டர்!” என்றவள் அவர் உட்கார்ந்ததும் தானும் உட்கார்ந்துகொண்டாள்.

“தொந்தரவுக்கு மன்னிக்கணும்மா. மிஸ் கமலாவைப் பத்தி இன்னும் சில விவரங்கள் வேணும். அதான் வந்தேன். . . “ என்ற சத்தியானந்தம் கழற்றிய தொப்பியை மடியில் வைத்துக்மொண்டு, “அவங்க வேலை செஞ்சது வேற செக்ஷன் இல்லே?” என்றார்.

“ஆமாங்க. வாங்க, போலாம்.”

இருவரும் எழுந்தார்கள். ஐந்தே நிமிடங்களில் பவானி திரும்பிவந்து உட்கார்ந்தாள்.

சுமார் அரை மணி கழித்துச் சத்த்¢யானந்தம் மறுபடியும் வந்தார். பவானியின் எதிரே அமர்ந்தார்.

“கமலாவுடைய தம்பியை விசாரிச்சீங்களா, இன்ஸ்பெக்டர்?”

“கேட்டாச்சும்மா. அவனுக்கு ஒண்ணும் தெரியல்லே. தண்டபாணின்ற அந்த ஆளு சாமர்த்கியமாத்தான் வேலை பண்ணியிருக்கான். தனக்குத் தெரிஞ்சு அப்படி யாருமே தன் அக்காவைத் தேடிக்கிட்டு வந்ததே இல்லேன்றான் பையன். ஒருவேளை அவன் இல்லாத நேரங்கள்லே போக்குவரத்து இருந்திருக்குமோங்கிறதைக் கண்டு பிடிக்கிறதுக்காக அக்கம் பக்கத்துல விசாரிச்சேன். அப்படியெல்லாம் எந்த ஆம்பளையும் வந்ததே கிடையாது, அது நல்ல பொண்ணுன்றாங்க. அதனால, கமலாவை வேற இடங்களுக்குக் கூட்டிப் போயிருந்திருக்கணும்னு எனக்குத் தோணுது. . . .”

போஸ்ட் மார்ட்டத்திலே எதாச்சும். . .”

நாங்களும் அது மாதிரி சந்தேகப்பட்டோம்தான். ஆனா, அப்படி எதுவும் இல்லே.. . அதனால அந்தப் பொண்ணு செத்தது வேற ஏதோ காரணத்துனாலேன்னு தோணுது. காதல் தோல்வியாக் கூட இருக்கலாம். அந்த தண்டபாணியு¨டைய ·போட்டோ எதாச்சும் கிடைக்குமான்னு மிஸ் கமலாவுடைய டேபிள் டிராயரையும் நல்லா செக் பண்ணிப் பாத்துட்டேன். ஒண்ணும் கிடைக்கல்லே..”

அவனோட முகம் ரொம்ப பெக்யூலியரான சச்சதுர முகம், இன்ஸ்பெக்டர். நம்ம ம.பொ.சி. இருந்தாரே, அவரோடது மாதிரியே மீசை வெச்சிருப்பான். . .”

சரி. உங்க உதவி தேவைப்பட்டா மறுபடியும் வருவேன்,” என்ற சத்தியானந்தம் விடை பெற்றுப் புறப்பட்டார்.

அவர் போனதும், “இதெல்லாம் நமக்கு ஒரு பாடமா அமையணும். முன்னே பின்னே தெரியாதவங்களை யெல்லாம் கமலா மாதிரி சட்னு நம்பிடக்கூடாது. அப்புறம் ஏமாந்து போய் இப்படித் தற்கொலை பண்ணிக்கக் கூடாது. . .” என்று சூர்யாவிடம் கூறி பவானி பெருமூச்செறிந்த போது, சூர்யாவுக்குச் சுருக்கென்றது. ‘நானும் அவசரப்பட்டுவிட்டேனோ? .. .

சேச்சே! ராjஜா எங்கே, அந்த அயோக்கியன் எங்கே?’ என்றெண்ணிய சூர்யா தன் வருங்காலக் கணவனைப் பற்றித் தரக்குறைவாகச் சிந்தித்துவிட்டதற்காக அவனிடம் தன் மனத்துள் மன்னிப்புக் கேட்டுக்கொண்டாள். . . . மறுநாள் காலை அனந்தநாயகி, “அந்தப் பொண்ணு கமலா எதுக்குத் தூக்கு மாட்டிக்கிச்சாம்? எதாச்சும் தெரிஞ்சுதா?” என்று சூர்யாவை ஆழமான பார்வையுடன் விசாரித்தாள்.

“ஒண்ணும் தெரியல்லேம்மா. ஒரே மர்மமாயிருக்கு. அது லெட்டர் எதுவும் எழுதி வைக்கல்லையாம். போலீஸ் இன்ஸ்பெக்டர் சொன்னாரு.”

“நீ எதுலயும் பட்டுக்காதேடி, சூர்யா. எதாச்சும் தெரிஞ்சாக் கூட, தெரிஞ்சதாச் சொல்லிடாதே! வீண் வம்பு வந்து சேரும். ஆனா ஒண்ணு. வயசுப் பொண்ணு தற்கொலை பண்னிக்கிட்டாள்னா, அதுக்கு ஒரே ஒரு காரணம்தான் இருக்க முடியும்.”

“மறுபடியும் ஆரம்பிக்காதேம்மா. பேசாம இரு. பிடிச்சவனைக் கல்யாணம் கட்ட முடியாட்டிப் போனாலும், பொண்ணுங்க தற்கொலை பண்ணிக்குவாங்க! தெரியுமில்லே?”

“அந்த விசயத்துலே உன்னோட அக்காக்காரி கெட்டிக்காரிதான். உசிரை யெல்லாம் விட்டுக்கிட்டிருக்காம, பிடிச்சவனோட ஓடியே போயிட்டா! கடங்காரி! எங்கே திண்டாடித் தெருப் பொறுக்குறாளோ!”

“அய்யோ! உன் வாயாலே அப்படியெல்லாம் சொல்லாதேம்மா. எல்லாம் நல்லாத்தான் இருப்பா. ஒரு நாளு வருவா, பாரு. உன்னோட கோவம் தணியட்டும்னு காத்திட்டிருக்காளோ என்னமோ! ஓடிப்போறவங்கல்லாம் திண்டாடித் தெருப் பொறுக்கித்தான் ஆகணும்னு சட்டம் ஒண்ணும் இல்லே!”

“வாயை மூடுடி. காலங்கார்த்தாலை அந்த ஓடுகாலியைப் பத்திப் பேசாதே!”

“ நீதானேம்மா இப்ப அவ பேச்சை எடுத்தே? நானா எடுத்தேன்? . . . அம்மா! உன்னை நான் ஒரே ஒரு கேள்வி கேக்கறேன். அதுக்குச் சரியான பதில் சொல்லு. பெரியவங்க பாத்துப் பாத்துப் பண்ணி வைக்கிறாங்களே, அந்தக் கலியாணம் மட்டும் ஒழுங்கா யிருக்குதாம்மா? சொல்லு”

“எம்புட்டோ வெசாரிச்சுட்டுத்தான் பெரியவங்க கலியாணத்தைப் பண்ணி வைக்கிறாங்க. அப்படியும் சிலது தோத்துப் போச்சுன்னா அதெல்லாம் அவங்கவங்க விதி!”

“அப்ப அதே விதி ஓடிப்போறவங்களுக்கும் பொருந்துமேம்மா!”

“அடியே, சூர்யா நீ இப்படி யெல்லாம் ஏடாகூடமா வாயாடாதேடி! எனக்கு அடி வயித்துலே பகீர்ங்குது! அழகான பொண்ணைப் பெத்துட்டா, ஒரு அம்மாக்காரி மடியிலே நெருப்பைத்தான் கட்டிக்கிட்டிருக்கணும்கிறதுக்கு நான் உதாரணமாப் போனேன். அக்காக்காரி போன வழியிலே தங்கச்சிங்களும் போயிடாதங்கடி!”

“அய்யோ, அம்மா! காலங்கார்த்தாலே அழத் தொடங்கியாச்சா? கிழிஞ்சுது போ! அப்படி யெல்லாம் இந்த வீட்டுலே இனிமே யாரும் பண்ண மாட்டாங்கம்மா. அக்கா அரிசனப் பையனை லவ் பண்ணிச்சு. வீட்டிலே சம்மதிக்க மாட்டாங்கன்னு ஓடி போச்சு. நானும் சுகன்யாவும் எங்களுக்குப் பிடிச்சவனாவே இருந்தாலும், அப்பாவும் நீயும் சம்மதிச்சாலொழியக் கலியாணம் கட்ட மாட்டோம்மா! சரியா?”

அப்போது அங்கு வந்த சுகன்யாவைப் பார்த்து சிரித்த சூர்யா, “உனக்கும் சேர்த்து நானே அம்மாவுக்கு வாக்குக் குடுத்துட்டேண்டி, சுகன்யா!” என்றாள்.

சுகன்யாவும் சிரித்துவிட்டு, “ உங்க ஆ·பீஸ் கமலா சமாசாரம் என்ன ஆச்சு?” என்று விசாரித்தாள். அவள் முகம் கணத்துள் முனைப்புக் கொண்டது.

“அவ பேச்சை இந்த அம்மா தான் எடுத்தாங்க. அப்படியே ராஜலட்சுமியைப் பத்திப் பொலம்பத் தொடங்கிட்டாங்க.”

இருவரும் அப்பால் நகர்ந்தார்கள். “என்ன தான் அக்கா மேல கோவம் இருந்தாலும் அம்மாவுக்கு வருத்தமும் இருக்கு மில்லையா? .. . ம்! ராஜலட்சுமியும் எங்கே இருக்காளோ! அம்மாவும் அப்பாவும் பாத்து நிச்சயம் பண்ணினவனைப் பண்ணிக்க மாட்டேன்னு அவ அழுதப்போ, கொஞ்சம் விட்டுப் பிடிச்சிருந்திருக்கணும். கட்டாயப் படுத்தினாங்க. அவ ஓடிப் போயிட்டா. மனசிலே ஒருத்தன் இருக்குறப்போ அது வேத்தாளுக்கு எப்படிக் கழுத்தை நீட்டும்? பாவம்!’ – சுகன்யாவின் நமட்டுச் சிரிப்பைக் கவனிக்காதவள் போல் சூர்யா அவசரமாய்த் தன் அலுவலைப் பார்க்க விரைந்தாள்.

. . . தண்டபாணி தன் அறையில் கவலையாய் உட்கார்ந்துகொண்டிருந்தான். நாகதேவன் அவனுக்கு எதிர் நாற்காலியில் மவுனமாக அமர்ந்திருந்தான்.

“நீ ஏண்ணே கவலையா யிருக்குறே? அதனோட தலையெழுத்து அம்புட்டுத்தான். போய்ச் சேர்ந்ட்திடிச்சு. . .”

“அதைப் பத்தி யாரு கவலைப் பட்டாங்க, நாகு? போற போக்குலே என்னைப் போலீஸ்ல மாட்டிவைக்கிற மாதிரி அது லெட்டர் எதாச்சும் எழுதி வைக்காம இருந்திருக்கணுமேன்னில்லே நான் கவலைப் பட்டுட்டு இருக்குறேன்!”

“அட, போண்ணே! நீ வேறே! போலீசே நம்ம கையிலேதானே இருக்குது? கொடுக்க வேண்டியதைக் கொடுத்துட்டா எவனும் கண்டுக்க மாட்டானுக, அண்ணே! இதுக்குப் போயா கன்னத்துலே கையை வெச்சிகிட்டுக் கெடக்குறே? விடுண்ணே.. . . அந்த சூர்யாப் போண்ணு விசயம் என்னண்ணே? அத்தச் சொல்லு! ·போன்ல கூப்பிட்டுப் பேசப் போறதாச் சொன்னியே? பேசினியாண்ணே?”

“ஓ! பேசினேன், பேசினேன் – என் பேரு விநாயகம்னு சொல்லிட்டுப் பேசினேன். உன்னோட தனியாக் கொஞ்சம் பேசணுமேன்னேன். . .’ போடா, பொறுக்கி‘ ன்னு கத்திட்டு ·போனை வெச்சிடிச்சு. . .”

“தப்புப் பண்ணிட்டேண்ணே. எடுத்த எடுப்பிலேயே, ‘ராஜாதிராஜன் விசயமா உன்னாண்ட ஒரு முக்கியமான ரகசியம் சொல்லணும்’ அப்படின்னு நீ பேச்சைத் தொடங்கி யிருந்தியின்னா, அது உடனே அப்படிக் கூப்பாடு போட்டிருக்காது. கொஞ்சம் வாயடைச்சுப் போய் நின்னிருக்கும். அதைப் பயன்படுத்திக்கிட்டு, ‘ உன்னோட நல்லதுக்குத்தாம்மா சொல்றேன், அவனாண்ட ஏமாந்து போயிடாதே. எத்தினியோ பேரை ஏமாத்தினவன் அவன்’ அப்படின்னு சொல்லியிருக்கலாம். அப்ப, கதையே வேற மாதிரி போயிருக்கும்!”

“நீ சொல்றது சரிதான் . . . மடத்தனமா அப்படிப் பேசிட்டேன். . . அத்த விடு. . ராஜாதிராஜன் தனக்கு ஏற்கெனவே கலியாணம் ஆயிடிச்சுன்ற உண்மையை அந்தப் பொண்ணு கிட்ட சொல்லிட்டேன்றானே! நெசமாவே சொல்லியிருப்பான்றே? அது சின்னவீட்டுக்காரியாத்தான் இருக்க முடியும்கிறதுக்குத் தலையாட்டி யிருக்கும்னு நம்பறே? எனக்கு நம்பிக்கை இல்லே!”

“ அப்படியும் இருக்கலாம், அண்ணே! ராஜாதிராஜன் சொல்றது பொய்யா மெய்யான்றது அந்த்ப் பொண்ணுகிட்ட பேசினாத்தான் தெரிய வரும் . . .ஆனா, ஒண்ணு. அந்தாளு புளியங்கொம்பா யிருக்குறதாலே கலியாணம் ஆனவனா யிருந்தா இருந்துட்டுப் போகுதுன்னு ஒருக்கா அந்தப் பொண்ணு சம்மதிச்சிருக்கலாம்னும் தோணுது!. . .”

“அந்தப் பொண்ணோட பேசினாத்தானே, அதெல்லாம் தெரிய வரும்?”

“அதென்னமோ மெய்தான், அண்ணே!”

“சரி. ஆனது ஆச்சு. போனது போச்சு. அத்த விடு. இப்ப ஆகவேண்டியதைப் பாப்போம். . .அந்தப் பொண்ணை எப்படி, எங்கே தனியாப் பாத்துப் பேசுறது?”

“யோசிக்கலாண்ணே. . . “

“அது பஸ்ஸ¤க்கு நிக்கிற ஸ்டாப்பிங்தான் எனக்குத் தெரியுமே! அங்கயே பாத்துப் பேசிடலாம்.”

“பேசலாந்தான். ஆனா, அக்கம் பக்கத்துல நெறைய ஆளுங்க இருப்பாங்களே. அந்தப் பொண்ணு எதுனா சத்தம் கித்தம் போட்டு ரகளை பண்ணிச்சுன்னா?”

தண்டபாணி சிரித்தான் : “ என்னப்பா நீ? ஏதோ அடி முட்டாப் பயலோட பேசுறவன் மாதிரி பேசுறே? அக்கம் பக்கம் பாக்காம அப்படியெல்லாம் பேசிடுவேனா? இடம், பொருள், ஏவல் எல்லாம் கவனிச்ச பெறகுதாம்ப்பா பேசுசுக் குடுப்பேன்! நீ வேற! ஏதோ பத்து வயசுப் பயலுக்குப் பாடம் சொல்ற மாதிரி பேசுறே!”

“சாரிண்ணே! ஒரு கவலையிலதான் . . . அது மாதிரி. . பேசிட்டேன்.”

“சரி, விடு. . . “ என்ற தண்டபாணி சிகரெட் புகையை ஊதியபடி அண்ணாந்து பார்த்தவாறு யோசனையாய்ச் சில நொடிகள் போல் இருந்தான்.

நாகதேவன், திடீரென்று தோன்றிய முகத்து ஒளியுடன், “அண்ணே! ஒரு சூப்பர் ஐடியாண்ணே! காதைக் கொஞ்சம் இப்படிக் குடு!” என்றான்.

“முதல்ல விசயத்தைச் சொல்லுப்பா. அப்பால நான் சொல்றேன், அது சூப்பரா இல்லியான்னு! அதுக்குள்ளாற பீத்திக்காதே!”

நாகதேவன் நாற்காலியிலிருந்து விருட்டென எழுந்து சுவர்களுக்குக் கூடச் செவிகள் இருக்கக்கூடும் என்று அஞ்சியவனைப் போல், தண்டபாணியை நெருங்கித் தன்னிரு கைகளையும் குவித்து அவன் காதுக்குள் மிக மெதுவாய்ப் பேசினான்.

அவன் சொன்ன யோசனையைக் கேட்டதும் தண்டபாணியின் முகத்தில் ஒரு புது மலர்ச்சி வந்து அமர்ந்துகொண்டது.

“உன் மூளையே மூளைப்பா! உண்மையிலேயே படு சூப்பர் ஐடியாதான்! ஒரே கல்லுலே ரெண்டு மாங்காய் அடிச்சிறலாம். . .தாங்க்ஸ், நாகு!” “அட, என்னண்ணே! இதுக்குப் போய்த் தேங்க்ஸ் சொல்லிக்கிட்டு! அதுவும் எனக்கு! உன்னோட உப்பைத் தின்னுக்கிட்டிருக்குறவன் நான்!”

“சரி சரி.”

“ஆமாண்ணே. பின்ன என்ன? நாம வளைச்சுப் பிடிக்கிற எந்தப் பொண்ணையும் நீ விட்டுக் குடுத்ததே கெடையாது – இன்னி வரையிலே. இப்ப என்னா புது வழக்கம்? தவிர அந்தாளுக்கு லவ்வென்ன வேண்டிக் கெடக்குது, லவ்வு! ஏற்கெனவே கலியாணம் ஆனவன். அடிக்கடி ஊர் மேயுறவன். . .” என்ற நாகதேவன் மனநிறைவுடன் இன்னும் இரண்டு கிண்ணங்களில் விஸ்கியை ஊற்றினான்.

jothirigija@vsnl.net – தொடரும்

¦¾¡¼Õõ


jothirigija@vsnl.net

Series Navigation

ஜோதிர்லதா கிரிஜா

ஜோதிர்லதா கிரிஜா