மீசை

This entry is part [part not set] of 39 in the series 20070920_Issue

அப்துல் கையூம்


(மீசை வைத்தவர்கள் அதிலும் குறிப்பாக எளிதில் உணர்ச்சிவசப்பட்டு கோபப்படுபவர்கள் தயவுசெய்து இக்கட்டுரையை படிக்க வேண்டாம்)

சிலருக்கு அண்டை வீட்டுக்காரர்களiனால் பிரச்சினை வரும். சிலருக்கு சொந்த பந்தங்களால் பிரச்சினை எழும். சொன்னால் நம்ப மாட்டீர்கள் எனக்கு பிரச்சினையே என் மீசைதான்.

மீசை வைப்பதா? வேண்டாமா? என்று குழம்பியே நடுத்தர வயதை எட்டியாகிவிட்டது. எத்தனையோ முறை வளர்த்தாகி விட்டது. வளர்த்த வேகத்தில் மழித்தும் பார்த்தாகி விட்டது. வேறென்ன? கம்பளிப்பூச்சியை மோவாயில் சுமந்துக் கொண்டு திரிவதென்றால் எரிச்சலாக இருக்காதா பின்னே?

“ஆம்பளைன்னா அவனுக்கு மீசை இருக்கோணும்” இப்படி அதிகப்பிரசிங்கித்தனமாக அறிவுறுத்தும் ஆசாமிகளைக் கண்டால் எனக்கு பற்றிக் கொண்டு வரும். இப்படி ஒரு பார்முலாவை ஒரு பேச்சுக்கு உண்டாக்கி வைத்துச் சென்ற அந்தக் கால பெருசுகளைத்தான் குற்றம் சொல்ல வேண்டும். எனக்கென்னமோ மீசை என்ற வார்த்தையே தமிழ் வார்த்தைபோல் தோன்றவில்லை. வடமொழியாக இருக்கலாமோ?

மீசைக்கு நம்மவர்கள் அளவுக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுத்து விட்டார்களோ என்று சில சமயம் எண்ணத் தோன்றும். ஆங்கிலேயர்களோ, மற்ற நாட்டினரோ மீசை இருந்தால்தான் ஆண்பிள்ளை என்று சொல்ல நாம் கேள்விப்பட்டதில்லையே?

முறுக்கிய மீசை வானத்தை பார்த்தவண்ணம் இருந்தால் வீரத்தின் எதிரொலி என்று அர்த்தமாம். என்ன அநியாயம் இது? சீனர்களுடைய மீசை பூமியை பார்த்த வண்ணம் புடலங்காய் போல தொளதொளவென்று தொங்கிய வண்ணம் காட்சி தரும். அவர்கள் இனத்தில் வீரர்கள் இல்லவே இல்லையா? பூனைக்குகூட மீசை இருக்கிறதே? அது என்ன பெரிய வீரனா? மீசையே இல்லாத ஜான்ஸிராணியை வீரத்தின் உதாரணமாக நாம் சொல்வதில்லையா?

பிளாஷ் பேக் – எனக்கு என் வீட்டில் பெண் பார்க்க அலைந்தார்கள். இந்தி நடிகன் போல் ஸ்டைலாக காட்சி தரவேண்டும் என்ற காரணத்துக்காக நான் மீசையை மழித்துக் கொண்டிருந்தேன். “ஏம்பா நீ மீசை வச்சா என்னா?” என் தகப்பனாருடைய தொந்தரவு தாங்க முடியவில்லை. “இது என்ன இது பொறிச்ச வாடா மாதிரி” என் பாட்டியின் தோழி அய்ஷானுடைய குசும்பு. இந்த நக்கல் ஓவர்தானே?

“பெண் வீட்டாருக்கு கொடுக்க வேண்டும் உன் போட்டோவை அனுப்பி வை” என்று என் தகப்பனார் கடிதம் எழுதியபோது மீசை இல்லாத போட்டோவைத்தான் அனுப்பி வைத்தேன். பார்த்து முகம் சுளித்திருப்பாரோ என்னவோ?

கல்யாணத்திற்குப் பின் ஒருநாள் என் மனைவி சொன்னாள். “உங்க போட்டோவை முதன் முதலில் பார்த்தபோது 16-வயதினிலே படத்தில் வர்ற டாக்டர் மாதிரியே ஸ்டைலா இருந்துச்சா, எனக்கு மிகவும் புடிச்சுப் போச்சு.” அட்றா சக்கை. எனக்கு அப்படியே ஆகாயத்தில் பறப்பது போல் இருந்தது. காலம் முழுக்க மீசையே இல்லாமல் ஜாலியாக பொழுதைக் கழிக்க சால்ஜாப்பும் லைசன்சும் கிடைத்த ஏகபோக ஆனந்தம் எனக்கு.

மீசை வைப்பவர்கள் ஷேவ் செய்ய எடுத்துக் கொள்ளும் நேரத்தை விட மீசை இல்லாதவர்கள் ஷேவ் செய்ய எடுத்துக் கொள்ளும் நேரம் குறைவாகத்தான் இருக்க வேண்டும் என்பது என் கணிப்பு. மீசையை ஒதுக்குகிறேன், ட்ரிம் செய்கிறேன் என்று கூறி பாத்ரூமில் பாதி நேரத்தை செலவழித்து விடுவார்கள். பொன்னான நேரத்தின் மகிமையை உணர்ந்தவர்கள் இந்த மீசை இல்லாதவர்கள் என்று நான் மார்தட்டிச் சொல்ல முடியும்.

போன்சாய் என்ற ஒரு கவிதைத் தொகுப்பினை சமீபத்தில் வெளியிட்டிருந்தேன். அதில் மீசையை பற்றி இப்படி எழுதியிருந்தேன்.

இன்றோடு போகட்டும்
இந்த நச்சரிப்பு மீசை

உதட்டோரம் எனக்கு
வீண் சுமை

வெறுமனே ஒரு
முகப்புத் தோரணம்

முணுமுணுக்கும்
கம்பளiப் பூச்சி

உண்மையைச் சொன்னால்
மோக யுத்தத்தில்
முத்தத்தின் எதிரி

இதைப் படித்துப் பார்த்த என் சித்தப்பா டாக்டர் அப்துல் ரசாக்கிற்கு என்ன ஆத்திரமோ தெரியவில்லை.

மீசை
மோக யுத்தத்தில்
முத்தத்தின் எதிரி

என்று எழுதியிருந்தாய். மீசை செய்யும் குறும்பை நீ அறியமாட்டாய் என்று விமர்சனம் செய்து எழுதி இருந்தார்.

அவர் கறுகறுவென்று தடிமனான மீசை வைத்திருப்பார். அவருடைய அனுபவத்தை அவர் சொல்லியிருக்கிறார். நாம் ஏன் அநாவசியமாக விவாதம் பண்ணிக்கிட்டு இருப்பானேன் என்று பேசாமல் இருந்து விட்டேன்.

சினிமாவில் காமெடி செய்வதற்காகவே கண்டு பிடிக்கப்பட்ட ஒரு உபகரணம் அல்லது யுக்தி இந்த மீசை என்பது நான் வைக்கும் வாதம். சந்திரபாபு, ஏ.கருணாநிதி, தங்கவேலு, நாகேஷ் இவர்களுடைய மீசையைப் பார்த்தாலே ரசிகர்களுக்கு சிரிப்பு வரும்.

பழைய கறுப்பு வெள்ளை படங்களiல் ஹாஸ்ய நடிகர் “துடிக்கிறது என் மீசை” என்று வீர வசனம் பேசுவார். ஒட்டு மீசை துள்ளி கீழே விழும். தியேட்டரில் சிரிப்பு அலைமோதும். சமீபத்தில் வெளிவந்த 23-ஆம் புலிகேசி என்ற படத்தில் வடிவேலுவின் நடிப்பை விட அவருடைய கொடுவா மீசையின் நடிப்புக்கே பெரும் வரவேற்பு கிடைத்தது. (போதாதக்குறைக்கு கிச்சுகிச்சு மூட்ட மீசைக்கு மேலே இரண்டு பூக்கள் வேறு. கொடுமையடா சாமி)

மீசை என்ன பொல்லாத மீசை? அதே போன்சாய் தொகுப்பிலே இன்னொரு கவிதை இப்படி எழுதியிருந்தேன்.

மீசை முளைத்தோரெல்லாம்
பாரதி என்றால்

எனக்கும் ஆசை
கவிதை வடித்திட

இப்படிக்கு பாசமுடன்
கரப்பான் பூச்சி – என்று

ஒரு சமயம் சலூனில் அமர்ந்து படுஜாலியாக மீசையை மழித்துக் கொண்டிருந்தபோது வானொலியில் அந்த பழைய பாட்டு ஓடிக் கொண்டிருந்தது.

மணமகள் தேவை – நல்ல
மணமகள் தேவை

ஆணழகன் ஒருவனுக்கு
அரும்பு மீசைக் காரனுக்கு

தேவை தேவை தேவை
மணமகள் தேவை

எனக்கு எரிச்சலாக வந்தது. அரும்பு மீசை இருந்தால் அவன் ஆணழகனா? இந்த பாடலை எழுதிய கவிஞனிடம் நாலு வார்த்தை நறுக்கென்று கேட்கத்தோன்றியது. பென்சிலால் வரைந்ததுபோல் சிலர் மெல்லிய மீசை வைத்திருப்பார்கள். அதற்குப் பெயர் அரும்பு மீசையாம். இது மோவாயில் இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன? இதற்குப் பெயர் மீசையா? பேனாவும் பேப்பரும் கிடைத்தால் எப்படி வேண்டுமானாலும் எழுதுவதா? இப்படியெல்லாம் மனதுக்குள் கொதித்துப் போவேன்.

ஹிட்லர் மீசை, மா.பொ.சி மீசை, வீரப்பன் மீசை. என்று சிலருடைய மீசை மிகவும் பிரபலமாகி விட்டது. மா.பொ.சி. இவ்வளவு பெரிய மீசையை வைத்துக் கொண்டு உண்ணுவதற்கும் பருகுவதற்கும் மனுஷர் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார் என்பதை என்னால் உணர முடிந்தது.

மீசை முருகேஷ் என்ற அருமையான இசைக் கலைஞர். எல்லா விதமான பக்க வாத்தியங்களும் இவருக்கு அத்துப்படி. வாயினாலேயே எல்லா விதமான ஸ்பெஷல் எஃபெக்ட்ஸும் கொடுப்பார். அவருடைய அபரிதமான இசைஞானத்திற்கு அவருக்கு கிடைத்த பாராட்டுதல்களைவிட அவருடைய மீசைக்கு கிடைத்த பாராட்டுதல்களே அதிகம். மீசை இன்று இருக்கலாம் நாளை காணாமல் போகலாம். இதுக்குப்போய் இத்தனை ஆரவாரமா? என்று நினைத்துப் பார்ப்பதுண்டு.

“மீசைக் கவிஞன் பாரதி” என்று கவிஞர்கள் பாராட்டும் போது எனக்கு கோபம் கோபமாக வரும். அவனுக்கு மீசை இருந்தால் என்ன இல்லா விட்டால் என்ன? அவன் எழுதிவைத்திருப்பதை பாராட்டுவதை விட்டுவிட்டு அனாவசியமாக மீசையை பெரிதுப் படுத்தி புகழ்கிறார்களே என்று ஆத்திரம் வரும்.

நானும் சில உண்மைகளை வெளiப்படையாகச் சொல்லத்தான் வேண்டும். என்னதான் மீசை மீது ஒரு வெறுப்பிருந்தாலும் அவ்வப்போது மீசை வளர்க்க வேண்டும் என்று ஆசை வந்ததென்னவோ உண்மைதான். அந்த ஆசை அதிக நாட்கள் நீடிக்கவில்லை என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளுங்களேன்.

வெளிநாட்டில் வசிக்கும் நான் ஒருமுறை தாயகம் புறப்பட ஆயத்தமாகும் தறுவாயில் மீசையோடு ஊருக்குப் போனால் சற்று வித்தியாசமாக இருக்குமே என்று மீசை வளர்த்தேன். இதற்காக மெனக்கெட்டு எந்தவிதமான முயற்சியோ கஷ்டப்படவோ இல்லை. ஒண்ணுமே செய்யாமல் சிவனேன்னு இருந்தேன். அதுவாக வளர்ந்து விட்டது. ஓரளவு வளர்ந்த பிறகு மீசையை அழகு படுத்தலாமே என்று முனைந்து ஒதுக்க ஆரம்பித்தேன். அது என்னடாவென்றால் ஒரு பக்கம் பெரிதாகவும் மற்றொரு பக்கம் சிறிதாகவும் போய்விட்டது. மேலும் என் திறமையை காண்பிக்கப்போக, குரங்கு அப்பத்தை பிய்த்த கதையாக அது ஹிட்லர் மீசையாட்டம் அலங்கோலமாக போய்விட்டது. அன்று மீசை மீது எனக்கு வந்த கோபம் சொல்லிமாளாது. மீசை என்று யாராவது பேச்செடுத்தால் அவர்களை கடித்துக் குதறவேண்டும் போலிருந்தது.

அப்போதுதான் என் தாயாருடைய போன் வந்தது. “நீ ஊர்வரும்போது அவசியம் மீசைக்காரத் தைலம் கொண்டு வா மறந்து விடாதே” என்று உரக்கச் சொன்னார். “அதெல்லாம் முடியாது நான் கோடாலித் தைலம் வாங்கி வருகிறேன்” என்று அதைவிட உரக்கமாக கத்தினேன்.. “நீ எப்பவும் இப்படித்தான் நான் ஒண்ணு சொன்னால் நீ ஒண்ணு செய்வே” என்று சலித்துக் கொண்டு போனை வைத்தார். என்னுடைய கஷ்டம் அவர்களுக்கு எங்கே புரியப் போகிறது?

“மீசை நரைத்தாலும் இவனுக்கு ஆசை நரைக்கவில்லை பாருங்கள்” என்று நடுத்தரவயதினரைப் பார்த்து யாராவது கிண்டலடித்தால் நான் கடுப்பாகி போவேன். மீசை நரைத்தால் என்ன? ஆசை இருக்கக் கூடாதா? விடலைப் பருவத்தின்போது வருவது வெறும் காதல் மயக்கம். ஆத்மார்த்த காதல் பிறப்பதோ நடுத்தர வயதில்தான் என்பது என்னுடைய பயங்கரமான கண்டுபிடிப்பு. ஜொள்ளர்கள் இந்த வயதில்தான் அதிகம்.

“At Forty Men become naughty; Women become fatty”

என்று ஆங்கிலேயன் சும்மாவா சொல்லி வைத்துப் போனான்? எத்தனை அனுபவம் பொதிந்த வாக்கியம் இது?

இந்த கட்டுரையை எழுதிக் கொண்டிருந்த சமயத்தில் என் மனைவி கரிசனமாக அருகில் வந்து “எதைப் பற்றி எழுதிக் கொண்டிருக்கிறீர்கள்” என்று கேட்டாள். நம்மை ஒரு அறிவு ஜீவி என்று நினைத்துக் கொண்டிருக்கிறாள். அவளiடம் போய் நான் என் மீசையைப் பத்திதான் எழுதிக் கொண்டிருக்கிறேன் என்று உண்மையைச் சொன்னால் “இவனுக்கு கழன்றுவிட்டதோ?” என்பதுபோல் ஒரு மாதிரியாக பார்ப்பாள். எதற்கு இந்த தொந்தரவென்று இரண்டு கைகளாலும் எழுதுவதை மறைத்துக் கொண்டேன். கடுப்பாகி அங்கிருந்து நகர்ந்து விட்டாள்.

எந்த வித முணுமுணுப்பும் இல்லாது இத்தனை வருஷம் மீசை இல்லாமல் ஜாலியாக ஓட்டி விட்டேன். திடீரென்று இந்த விபரீத ஆசை மீண்டும் எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை. சென்ற மாதம் மறுபடியும் மீசை வளர்க்க ஆரம்பித்தேன். பாதி வெள்ளை முடி, பாதி கறுப்பு முடி. கண்ணாடியில் பார்த்தபோது வயதானவன்போல் ஒரு தோற்றம். ஒரு விருந்துக்கு புறப்பட்டுக் கொண்டிருந்தேன். கண்ணுக்கு இடும் மையை லேசாக ஆட்காட்டி விரலால் தடவி மீசை மீது பூசிக் கொண்டால் ஒண்ணும் தெரியாது என்று என் மனைவி சூப்பர் ஐடியா ஒன்றைச் சொல்ல அதுபோலவே செய்தேன். இழந்த இளமை ஒருவழியாக மீண்டு வந்ததுபோல் ஓர் உணர்வு. விருந்துக்கு போன பிறகு கைகழுவச் சென்ற நான் ஏதோ ஒரு ஞாபகத்தில் ஈரமான என் கைகளை முகத்தில் பூசிக் கொண்டேன். சபையில் இருந்தவர்கள் என்னை ஒரு மாதிரியாக பார்க்கப் போக, அப்பொழுதுதான் புரிந்தது. என் மேக்கப் கலைந்து முகமெல்லாம் கரியை பூசிக் கொண்டதுபோல் ஆகிவிட்டது. வெட்கித்துப்போய், பூனைபோல் மெதுவாக அங்கிருந்து நழுவி வந்தேன்.

அதற்குப் பிறகு நண்பன் ஒருவனின் உபதேசத்தின்படி ‘டை’ செய்தால் என்ன என்று தோன்றியது. அது கறுப்பு மருதாணி என்று சொன்னார்கள். முதன் முறை என்பதால் எப்படி பூசுவது என்று தெரியவில்லை. பசைபோல கரைத்து என் மனைவியிடம் கொடுத்து பூசச் சொன்னேன். என் மீது என்ன கோபமோ தெரியவில்லை, ஒரு பட்டையான பிரஷ்ஷை எடுத்து சுவற்றுக்கு சுண்ணாம்பு பூசுவதைப் போல் விளாசித் தள்ளி விட்டாள். அரைமணி நேரம் நகரக் கூடாது என்று கண்டிஷன் வேறு. முடி கன்னங்கரேல் என்று ஆகிவிட்டது.

அடுத்த நாள்தான் அந்தக் கொடுமை. அந்த மருதாணியில் என்ன கெமிக்கல் சேர்ந்திருந்ததோ தெரியவில்லை. என் முகம் முழுதும் புஸ்ஸென்று வீங்கி அரிப்பும் எரிச்சலும் தொடங்கி விட்டது. மீசையை அப்படியே பிய்த்து எறிந்து விடலாம் என்று தோன்றியது. மோவாயெல்லாம் புண்ணாகி விட்டது. டாக்டரிடம் சென்று ஊசி போட்டுக் கொண்டேன். அலர்ஜி ஆகிவிட்டதாம்.

புண் ஆறியதும் முதல் வேலையாக மீசையை மழித்து வீசி எறிந்தப் பின்தான் எனக்கு திருப்தி. இப்பொழுதெல்லாம் எந்தவொரு பிரச்சினையும் இல்லை. விபரீத ஆசையும் வருவதில்லை. இளமையாகவே இருப்பதுபோல் ஓர் உணர்வு, உற்சாகம். முகத்தை லேசாக வருடிக் கொண்டேன். வழுவழுவென்று அட்டகாசமாக இருந்தது.

**
vapuchi@hotmail.com

Series Navigation

அப்துல் கையூம்

அப்துல் கையூம்

மீசை

This entry is part [part not set] of 43 in the series 20070104_Issue

மீரான் மைதீன்


மீசை கொஞ்சம் பெரியதாகத் தான் இருக்கிறது மீசை பெரிதாக இருப்பதால் அது அழகாக இருப்பதாக நான் அடிக்கடி நினைத்து கொள்வதுமுண்டு. என்னிடமுள்ள சிறப்புகளில் முக்கியமானதாக நான் மீசையைத்தான் கருதுகிறேன். இந்த மீசையைத் தான் ஒரு நாளைக்கு எத்தனை முறை கண்ணாடியில் பார்த்துக் கொள்கிறேன். தலைவாரிக் கொள்வதைப்போல மீசை வாரிக் கொள்ளும்போது இப்படி ஒரு மீசை எனக்கு வளரும் என்பதை முன்பு ஒருக்கிலும் நான் நினைத்துப் பார்த்ததில்லை. ஆனாலும் அது இயல்பாகவே வளர்ந்துவிட்டது.

இன்று காலை மீசையின் தும்பை வெட்டி விடும்போது தான் மீசையின் ஒரு முடித்துண்டு என் வாயில் போய் மேல் முன் பல்லின் பின்பக்கம் ஈனியின் இடுக்கில் வசமாகப் போய் குத்திக் கொண்டது. இது வரையிலும் ஒராயிரம் முறைக்கு மேலே நாக்கு நுனியால் நிமிண்டிப் பார்த்தும் ஈனியின் இடுக்கில் சிக்கிய எனது மீசை முடித்துண்டு வெளியேறவில்லை. தண்ணீரால் விதவிதமாக வாய் கொப்பளித்துப் பார்த்தும் பிரயோஜனமில்லை. இரண்டாவது முறையாக பல் தேய்த்துப் பார்த்தேன். வளைந்தும், தெளிந்தும் தெரிந்த வித்தை எல்லாம் காட்டியும் நான் அழகிய மீசை என்று கருதும் எனது மீசை முடித்துண்டு என்னை ஒபத்திரம் செய்துகொண்டே இருக்கிறது.

காலை பத்திரிகை படிக்கும் போது நாக்கின் நிமிண்டல் தனி ஆவர்த்தனம் நடத்தியது. முடித்துண்டு வெளியேறி விட்டதைப்போல தோன்றினாலும் எச்சிலைக் கூட்டி துப்பி விட்டு மீண்டு நாக்குநுனியால் நிமிண்டிப் பார்க்கும் போது அந்த நெருடல் அப்படியே இருந்தது. எரிச்சலில் வலது கை பெருவிரலின் நகத்தால் ஈனியில் கிழறியபோது ரத்தம் கசிந்தது. ஆனாலும் மீசை முடித்துண்டு அசங்கவில்லை.

சின்ன குழந்தையாக இருந்தபோதே வாப்பாவின் மீசையில் எனக்கு நிறைய லயிப்பு உண்டு. அவர் மார் மீது தூக்கி வைத்துக் கொள்ளும் போதெல்லாம் கம்பி போன்ற அவரின் கட்டை மீசையின் தும்பை பிடித்து இழுக்கும்போது அவருக்கு விவரிக்க முடியாத சுகமாக இருந்திருக்க வேண்டும். மீண்டும் மீண்டும் அவரின் மீசை எனது முகத்துக்கு நேராக என் விரல்கள் அளைவவதற்கு தோதாக வரும்.

மீசை இல்லாத பருவத்தில் மீசை இருப்பதாக கருதி உதட்டின் தும்பில் வேண்டுமென்றே கை வைத்து முறுக்கிப் பார்த்த நினைவுகளும், கரிக்கட்டையை பொடியாக்கி துப்பணித் தொட்டு முறுக்கு மீசை வரைந்து தோப்பில் கட்டப்பொம்மன் வசனம் பேசிய அந்த நாட்களெல்லாம் ரசனைக்குரிய காலம்.

அரும்பு மீசை முளைத்த நேரத்தில் மீண்டும் மீண்டும் தொடர்ந்து வழித்து தேங்காய் எண்ணெய் போட்டுப்போட்டு முகத்தில் ரத்த ஓட்டம் வந்தால் மீசை வேகமாக வளரும் என்று யாரோ சொன்னதை நம்பி பள்ளி தென்னை மரமூட்டில் யாருமற்ற நேரத்தில் தலைகீழாக நின்று நான் வளர்த்திய எனது அழகிய மீசையின் ஒரு முடித்துண்டு தான் இப்போது எனது ஈனியும் பல்லும் இணையும் இடுக்கில் போய் உக்கார்ந்து என்னை பெரும்பாடுப்படுத்தியது.

எனக்கு மீசை வளர ஆரம்பித்த நேரத்தில் எப்படி மீசை வைத்துக் கொள்வது என்பதை குறித்த நிறைய சிந்தனைகள் உண்டு. வாரஇதழ்களில் அட்டைப்பட நடிகைகளின் முகங்களில் கோணல் மாணலாக ஒரு மீசையை வரைந்து விட்டு லயித்துப் பார்த்து விட்டு வாயை பொத்தி விழுந்து விழுந்து சிரிப்பேன். எம்.ஜி.ஆர். படங்களுக்கு பலவிதமான மீசை வரைந்ததும் அது கடைசி வரை திருப்தி தந்ததில்லை. நான் ஒரே மீசையிலிருந்து பல வகை மீசைகளை வரையும் நேர்த்தியை நிரம்ப பெற்றிருந்ததாக நினைத்துக் கொண்டதுண்டு. ஒரு கட்டை மீசையை வரைந்து பிறகு முறுக்கு மீசையாக மாற்றி அதையே தாடியோடு கலரும் மீசையாகவும் மாற்றி விடுவேன்.

ஊரில் பார்த்த ஒரு பாடு மீசைகள் ஞாபகத்தில் வந்தது. பெரிய பெரிய தலைவர்களின் மீசைகளெல்லாம் அலசிப் பார்த்தேன். பிரதமராக இருந்த பலருக்கும் மீசை இல்லை. சந்திரசேகரின் மீசையை மீசை என்று சொல்ல முடியாது. அது மீசைக்கான தனித்தும் இல்லாமல் தாடியில் பதுங்கி கிடந்தது. பிற்காலத்தில் வி.பி.சிங்கின் மீசை எனக்கு பிடித்திருந்தாலும் கூட அதற்கு முன்னாலே எனக்கு மீசை வளர்ந்து விட்டது. பாரதியின் மீசை எனக்கு ரொம்பவும் இஷ்டமானது. எனக்கு சிறு வயதில் இருந்தே போலீஸ் மீசைகள் மீது ஒருபாடு பயம் உண்டு. அந்த பயம் இப்போது வரையில் விலகவில்லை.

உதட்டின் விளிம்பில் ஒரு கனத்த நூல்போல் இருந்த பெரியப்பாவின் மீசையைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு சிரிப்பு பொத்துக் கொண்டு வரும். அடிக்கடி அக்காவின் ‘மை’ பென்சிலால் அதுபோல கோணல் மாணலாக மீசை வரைந்து கொண்டு கண்ணாடியில் முகம் பார்த்துச் சிரிப்பேன். வீட்டில் எல்லோரும் கூடிவிடுவார்கள். இரண்டு கைகளாலும் முகத்தைப் பொத்திக் கொண்டு தரையோடு கமுந்து படுத்துக் கொள்வேன். எல்லோருமாக பெரும் பாடுபட்டு என்னை தூக்கி நிறுத்தி எனது இருகரங்களையும் அக்காவும் தம்பியும் இழுத்து பிடித்துக் கொள்ள நான் முகம் பொத்த முடியாமல் வெட்கப்பட்டு கண்களை மூடிக் கொண்டு முகத்தை ஒரு மாதிரியாக சுளித்துக் கொள்ளும்போது அந்த வினோத தோற்றத்தைப் பார்த்து வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரிப்பார்கள்.

மைதீன் கண்ணப்பாவின் மீசையில் ஒரு கம்பீரம் உண்டு. அவரை ஊரில் எல்லோரும் மீசைக்காரப்பா என்று தான் கூப்பிடுவார்கள். உதட்டுக்கு மேலே அழகாக மீசையை கத்தரித்து கன்னத்தில் ஒரு சிறிய வட்டமாக அது படர்ந்து கிடக்கும் அழகைப்பார்த்துக் கொண்டே இருக்கலாம். சமீபகாலமாக எனக்கு அந்த கிறக்கம் சொக்கலிங்க அண்ணாச்சியின் கிருதா மீதும் உண்டு. அதுபோலவே முஸ்தபாவின் மீசையையும் குறிப்பிட்டுச் சொல்லலாம். மீசைதான் முஸ்தபா முஸ்தபாதான் மீசை என்று சொல்லுமளவுக்கு எனக்குள்ளே பிரபலமாகிப் போனது. முற்றிய கதிர் வரப்பில் சாய்ந்து கிடக்கும் அழகைப்போல உதடுகளை முழுமையாக மூடிக்கிடக்கும் அவனின் மீசையின் கம்பீரம் அழகானது.

எனது பத்தாவது வயசில் திருவனந்தபுரம் மிருகக்காட்சி சாலைக்கு கார் பிடித்து குடும்பத்தோடு போனபோது வாப்பாவிடம் அக்கா சிலேடு வாங்கிக் கேட்டாள். தங்கச்சிக்கு பொம்மையும், தம்பிக்கு பேட்டரி காரும் வாங்கிக் கொடுத்து விட்டு உனக்கு என்ன வேணும் என கேட்டதும் அங்கே மீசை, தாடி வித்துக் கொண்டிருந்தவனைக் காட்டி ‘எனக்கு மீசை வேணும்’ என சொன்ன போது வாப்பாவிற்கு கோபம் வந்தது. பிறகு உடனே சிரித்து விட்டார். வீட்டுக்கு போய் தான் மீசை வைத்துக் கொள்ள வேண்டும் என்ற கண்டிசனோடு வாங்கித் தந்தார். ஆனாலும் ஒன்றிரண்டு முறை அவருக்குத் தெரியாமலேயே அங்கேயே வைத்துப் பார்த்தேன். இரண்டு சிறு கம்பி வளையம் மூக்கின் உள் மத்தியில் வைத்து அமுக்கி விட்டால் பிடித்துக் கொள்ளும். அந்த மீசையை வீட்டில் வந்ததும் அக்கா வைத்துப் பார்த்தாள். தம்பியும், தங்கச்சியும் வைத்துப் பார்த்தார்கள். ஒரு முறை உம்மா உறங்கும் போது அவளுக்கும் அந்த மீசையை வைத்து விட வீடே சிரித்துக் குலுங்கியது. எனக்கும் அக்காவுக்கும், தங்கச்சிக்கும் தம்பிக்கும் மகிழ்ச்சியைத் தந்துக் கொண்டிருந்த அந்த மீசை அக்காவின் கல்யாணத்திற்குப் பிறகு எப்படியோ காணாமல் போய்விட்டது.

கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது இப்போது இருப்பதைப் போல பெரிதாக இல்லாமல் சுமாரான மீசை இருந்தது. ஒரு முறை கல்லூரி நாடகத்தில் பெண் வேசம் போட எனது மீசையை வழித்துக் கொண்டேன். சிகரெட் பிடித்து பிடித்து கீழ் உதடு தடித்துப் போனதால் மீசையும் இல்லாமல் பார்க்க சகிக்காமல் அசிங்கமாகிப் போனது. மீசை அற்ற எனது முகம் அழகாக இல்லையென்று ஷியாமளா சொன்னாள். அப்போது தீர்மானித்துக் கொண்டேன். இனி எப்போதும் மீசையை எடுப்பதில்லையென்று.

எல்லா முடி திருத்தும் நிலையங்களிலும் நான் மீசை வெட்ட அனுமதிப்பதில்லை. நானாக வெட்டிக்கொள்வேன். மற்றபடி முருகன் மட்டும் தான் என் மீசையை வெட்டி இருக்கிறான். உலகில் அவன் மட்டும் தான் மீசை வெட்டும் கலையை அற்புதமாக அறிந்திருப்பதாக நான் நம்புகிறேன். இதில் என்ன கொடுமை என்னவென்றால் முருகனுக்கு மீசை கிடையாது. எவ்வளவோ மருந்தெண்ணெய்கள் வாங்கி தேய்த்துப் பார்த்தான். நிறைய வைத்தியர்களிடம் லேகியம் கூட சாப்பிட்டுப் பார்த்தான் ஆனாலும் அவனுக்கு மீசை வளரவில்லை. பூச்சி முடிமாதிரி பத்து பதினைந்து முடிகள் குருத்து நிற்கும். அவைகளை அவன் அனுமதிப்பதில்லை. முருகனுக்கு முழுமையாக மீசை வளராத கவலை ஒருபாடு உண்டு.

ஒரு நாளைக்கு எத்தனை மீசைகளைத்தான் அவன் பார்க்கிறான். அடர்த்தியான மீசை, அடர்த்தி குறைந்த மீசை, முறுக்கு மீசை, நூல்மீசை, உளி மீசை, எலி மீசை தாடியோடு கலரும் மீசை விதவிதமான மீசைகளை கத்தரித்து அழகுபடுத்தும் அவனுக்கு மீசை இல்லை.

முருகன் முதலில் சீப்புக் கொண்டு மீசையை அழகாக சீவி விடுவான். பிறகு அதன் தும்புகளை ஒரே நேர்க்கோட்டில் லாவகமாக வெட்டி எறிவான். ஒரு முடித்துண்டு கூட முகத்தில் படாது. அவன் தீர்மானித்து வெட்டிய எல்லைக்கு கீழே ஒரு முடித்துண்டு கூட நீண்டு நிற்காது. இப்படியும் அப்படியும் முகத்தை திருப்பித் திருப்பிப் பார்ப்பான். தலையை பின்பக்கமாக சாய்த்து உற்றுப் பார்ப்பான். மீசையற்ற அவன் முகத்தில் புன்னகைத் தவழும். முருகன் கத்தரிக்கும் மீசையை எந்த கொம்பனும் குறை சொல்லமுடியாது.

முருகன் தான் என் முகத்திற்கு பெரிய மீசை இருந்தால் அழகாக இருக்கும் என்று முதலில் சொன்னான். என் சுண்டு மறையும் அவவுக்கு மீசை வளர நீண்ட நாட்கள் பிடித்தன. பெரிய மீசை வளர்ந்தபோது எனக்குள்ளே ஒரு பிரம்மாண்டமான கம்பீரம் வந்து விட்டதாக நான் கருதிக் கொண்டேன். ஆரம்பத்தில் எனது பெரிய மீசையின் தும்பை நான் கடித்துக் துப்புவதுண்டு. மீசை மீதிருந்த தீவிரமான காதலால் மீசை கடிக்கும் பழக்கம் என்னிலிருந்து விலகிக் கொண்டது. மீசை கடிக்கும் பழக்கம் இருந்த நேரத்திலும் கூட முடித்துண்டு இப்படி ஈனியின் இடுக்கில் சிக்கியதில்லை. ஈனியிலும், பல்லிடுக்கிலும், தொண்டையிலும் பலமுறை மீன்முள் சிக்கிய அனுபவமுண்டு. ஆனால் முடி எனக்கு புதிய அனுபவம். பெருவிரலிலும் ஆட்காட்டி விரலிலும் நீண்ட நகம் இருந்திருந்தாலாவது பிடுங்கி எறியும் முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம். நகம் வளர்த்தால் தரித்திரியம் என்ற நம்பிக்கையில் வளர்ந்து விட்டதால் அதற்கான வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது.

மதியத்திற்கு பிறகு மனதில் ஒரு சபதம் எழுந்தது. ஈனியின் இடுக்கிலிருந்து மீசை முடித்துண்டு அது பாட்டுக்கு இருந்து விட்டு போகட்டும். இனி அது பற்றி சிந்திக்க வேண்டாம். சிந்திப்பதால் தான் பிரச்சனை என மனசைக் கட்டுப்படுத்தும் முயற்சியிலும் தோல்வியே மிஞ்சியது. நாக்கு என் கட்டுபூபாட்டை உடைத்துக் கொண்டு மீண்டும் நிமிண்டிக் கொண்டே இருந்தது.

எனது ஒட்டு மொத்த கோபமும் நாக்கின் மீது திரும்பியது. நாக்கு எது சொன்னாலும் கட்டுப்படுவதில்லை. மதியம் தூங்கும் முயற்சியிலும் தோற்றுப் போனேன். கண்களை இறுக்கி மூடினேன். ஒன்று, இரண்டு நூறுவரை சொல்லிப் பார்த்தேன். தூங்க முடியாத அளவுக்கு தவிப்புக் கூடிப்போனது. மேல் உதட்டுக்கு கீழே மீசை வளர்ப்பது ஹராம் என்று அடிக்கடி என் மீசையைப் பற்றி பேசுகிற மலுக்கு சொல்லியிருந்தார் அவர் சொல்லைக் கேட்டு மீசையை வெட்டியிருக்கலாம் என்று தோன்றியது. மாலையில் என் உலைந்த முகத்தைப் பார்த்து மலுக்குக் கேட்டார் ”என்னா மீசைக்காரா ரொம்ப டல்லா நிக்கே….”

”மீசையாலே பெரிய இம்சை கேட்டியளா…?” எனத் தொடங்கி ஈனியின் இடுக்கில் சிக்கிய மீசை முடித்துண்டின் கதையைச் சொன்னேன்.

”அதான் ஹராமான மீசை வேண்டாம்னு சொன்னேன்…” எனச் சொல்லி விட்டு யானை முடி மோதிரம் கிடந்த கையால் வாயைப் பொத்திச் சிரித்தார்.


mitheen@yahoo.com

Series Navigation

மீரான் மைதீன்

மீரான் மைதீன்