நீர்வலை (4)

This entry is part [part not set] of 33 in the series 20061228_Issue

எஸ். ஷங்கரநாராயணன்


ராணுவக்கார அப்பா. என்றாலும் அவர் சாவு துக்ககரமானது.
வெயிலிலும் மழையிலும் பனியிலும் காடு மலைகளிலும் அலைந்து திரிகிறவராய் இருந்தார் பிச்சையின் அப்பா. குழந்தை இல்லாமல் வெகுகாலங் கழித்து அவன் அவருக்குப் பிறந்தான். பார்க்கிறவர்கள் பேரனா, என்பார்கள். அந்தளவு அவர் உடலும் மனசும் தளர்ந்திருந்தது. தலை வழுக்கை. நரை. நெற்றி நிறையச் சுருக்கங்கள், மணல் வெளிகளில் காற்று நடந்து போனாப்போல. நியதிகள் ஒடுங்கிவிட்டன.
பிச்சையைப் பெற்ற ஜோரில் அம்மா இறந்துபோனாள்.
ஒரு குழந்தை பிறந்து விட்டால் எத்தனை அழகாகி விடும் வாழ்க்கை என நம்பியிருந்தார் அப்பா. அது அவரது அதிர்ஷ்டம். அவனது அதிர்ஷ்டம்… காலம் அவர்களைத் துரத்தி விசிறியடிப்பதில் எத்தனை ஆர்வப் பட்டது. யானையின் துதிக்கையாய் விதி ஆவேசமாய் முன்னகர்ந்து வருகிறாப் போல இருந்தது.
இருந்த மண்வீடு ஒரு மழைக்குச் சரிந்து விழுந்தது தனிக்கதை…
சோகக்கதைகள்.
பதுங்கு குழிக்குள் விழுந்தது குண்டு. அவர் மீது விழுந்திருக்க வேண்டும். சுதாரித் ததில் தொடையைக் கீறியிருந்தது. ஒரு மீட்டர் உயரத்துக்கு எழுந்தது மண் புழுதி. அவரையும் சற்று வெளியே பிதுக்கி வீசியது. பற்பசைப் பிதுக்கல்.
தொங்கிக் கொண்டிருந்தது கால். எவ்வளவு ரத்தம்! மயங்கிக் கிடந்தார் காலைப் பிடித் தபடி. எப்படியும் தள்ளாடியும் ஊர்ந்தும் முடிந்தவரை அவர் நடக்கப் போரா… ஆடினார். உடம் பே அதிர்ந்து ஆளைத் தாலாட்டிக் கீழே தள்ளியது. முழுப் பனி. முட்டிவரையிலான பூட்ஸ். விமான குண்டு அடித்த அடியில் தொடைப் பக்கம் சதை குதறிச் சிதறியது ஞாபகம். என்ன அலறல் அலறினார். உடனே மயக்கமாகி விட்டார்.
முழித்தபோது உயிர் இருப்பதே திகைப்பாய் நம்ப முடியாத அம்சமாய் இருந்தது. உயிர் பிழைக்க ஆவேசமாய் எழுந்து கொண்டவர் கீழே விழுந்தார். தொடைக்காயம். காலில் பாய்ந்திருந்தது குண்டு. முருங்கைக் கிளையாய் ஒடிந்து ஆடிக் கொண்டிருக்கலாம் அது. சோதித்துப் பார்க்கக் கூட முடியவில்லை. எந்த மரத்தின் எந்தக் கிளை எப்படி அவர் கைக்குக் கிடைத்ததோ தெரியாது.
பத்து இருபது தப்படி – அது சரியான அடி அல்ல. தப்பு அடி! – வைக்குமுன்னே மயக்கமாகி யிருந்தார். நினைவு வந்தபின் எழுந்து கொள்ளக் கூட தைரியம் வரவில்லை. காத்திருந்தார். எதிரி கையில் மாட்டுவாரா, நமது ராணுவத்தினர் வந்து மீட்டுச் செல்வார்களா தெரியாது. வலி தெரியாமல் இருக்க கால்ப்பக்கம் அசைவு காட்டாமல் இருப்பது உத்தமம். இருக்கிற கொஞ்ச நஞ்ச தைரியத்தையும் அது கழட்டி விட்டு விடும்… ரயில்பெட்டி ஷண்டிங் போல.
எதிரி கையில் மாட்டினால் – இதோ உயிர் எடுத்துக் கொள், எனக் கொடுத்து விட வேண்டியதுதான்.
சில சமயம் முழித்துக் கொண்டு கிடப்பார். சிலசமயம் மயங்கிக் கிடப்பார். விழிப்பு வந்தபோதுதான் தெரியும் மயங்கிக் கிடந்த விஷயம். யாரோ நழுவ விட்டுவிட்டுப் போன பர்ஸ் போல அவர் மாத்திரம் கிடந்தார். பனியும் குண்டு சிதர்கள் வீசிய கந்தகமும் பாசியுமாய்க் கலவை வாசனையாய் இருந்தது பிரதேசம். சில சமயம் ஊதற் காத்து கிளம்பி உடம்பையே நடுக்கும். பனி கொட்டும். மழை போல கடுங் குளிராய்ப் பெய்கிறதும் உண்டு. மனிதன் வாழ லாயக்கில்லாத இடம்.
– அதற்கு ஒரு போர்!…
இரவும் பகலும் கழிந்து போயின அவர் பார்வையில். அந்தக் குளிர் அதைத் தாங்கும் வல்லமை எப்படி வந்தது தெரியாது.
நினைத்துப் பார்த்தால் மனிதன் எத்தனை பெரிய பெரிய சோதனைகளைத் தாங்கும் சக்தி உடையவனாய் இருக்கிறான் என்று தெரிகிறது. ஆச்சர்யம். எப்படியும் பிழைத்து விடுவோம் என்கிற அசாத்திய நம்பிக்கை. வாழ்க்கைமேல் அவனுக்கு இருக்கிற பற்று. ஆசை.
செத்துப்போக யாருக்கும் எக்காலத்தும் மனசு வருவது இல்லை!
உலகம் துக்ககரமானது என மேல்ப்பூச்சாய் வாய் பேசினாலும் இறக்க யாரும் சம்மதிப்பதில்லை. வாழ்க்கையில் எதோ அம்சம் கவர்ச்சியாய் காந்தமாய் நம்மைப் பிடித்து வைத் துக் கொள்கிறது. மேலும் மேலும் வாழத் தூண்டுகிறது…
வாழ்க்கை எதிர்பாரா விநோதங்களின் கலவை.
ஒண்ணு ரெண்டு வரிசையாச் சொல்லச் சொன்னால், தப்பாச் சொல்லவில்லையா குழந்தை… அதுபோல!
சோகப் படங்கள் – படம் பூரா விக்கி விக்கி அழுதபடி ஜனங்கள் பார்ப்பது இல்லையா! கடைசிவரை பார்த்தாகிறது. தியேட்டரில் படம் முடிந்து விளக்கு போட்டால் அத்தனை முகங்களிலும் ஜிவுஜிவு. அழுது சிவந்த முகங்கள்! ஒருத்தரைப் பார்க்க இன்னொருத்தருக்குச் சிரிப்பு. வேடிக்கை. தன்மேலேயே சிரிப்பு. படம்தான் அழுகை என்றால் அழுகைக்கு எனத் தனிப்பாட்டே வைக்கிறான்யா. போதும். நிப்பாட்டு, என யாரும் சொல்வதில்லை!…
எங்கே நிம்மதி!… கடைல போய்க் கேப்பான் போல!
ஐயா ஒரு கிலோ நிம்மதி – பொட்டலங் கட்டிக் குடுங்க!…
சோகப்பாட்டுக்கு எல்ப்பீ ரெகார்டு… ரெண்டு பக்கம். பெரிய பாடல்… கருப்புத் தட்டில் செவிக்கு உணவு! தட்டு நிறையச் சோறு.
எவ்வளவு அழுகிறோமோ அல்லது ஒரு பாதி எவ்வளவு கஷ்டப் படுகிறோமோ அந்தளவு பின் பாதிருசிக்கிறது. பசித்தவனுக்கு உணவு போல! அந்த ருசிக்கு பட்டினியாய் இருப்பதுகூட வேண்டித்தான் இருக்கிறது!
அழுகை மனசைக் கழுவிவிட்டு சுத்தம் செய்கிறது.
இருட்டிலும் முழு இருட்டு என்பது இல்லை, என்று சொல்வார்கள். ஒளிகசிகிற இருட்டுதான்!
வெற்றியிலும் முழு வெற்றி கிடையாது. சோதனைகள் காயங்கள் தழும்புகள் கட்டாயம் கலந்துகட்டித்தான்… ஒவ்வொருவரிடமும் கூட இருக்கவே செய்கின்றன…
ஆனால் வாழ்க்கையில் ரொம்பக் கஷ்டப்பட்டவன் பிறகு முன்னேறிட்டா நான் அவ்ளோ கஷ்டப் பட்டேன்னு அல்ட்டறதில்லை. நினைச்சிப் பார்க்கறதில்லை. தூசிதட்டினாப்ல போயிர்றான். ஜெயிக்க முடியாத சனியன்கள்தான்… வாழ்க்கையை மலைபாரமாய் உணர்றாங்க… எப்பா ஏங் கிரகம் எப்பதான் விடியுமோ…ன்னு ஆயாசப் படுதுங்க. அந்தக் காரியம் பண்ணாதே, இந்தக் காரியம் பண்ணித்தான் நான் நாசமாப் போனேன்-னு அடுத்தாளுக்கு ஆயிரம் அட்வைஸ்.
அப்பா அப்படியே தூக்கமும் விழிப்புமாய்க் கிடந்தார்… விமானம் ஒன்று தாழப்பறந்து வந்ததை அறிவார். சத்தம் கேட்டது. எத்தனை அற்புதமாய் இருந்தது அந்தச் சத்தம். குழல் இனிது. யாழ் இனிது. விமானச் சத்தமும் இனிது. அதன் இஞின் சத்தம் அவர் அறிவார்…
சிறிய செஞ்சிலுவை விமானம். சண்டைச் சத்தம் அடங்கிய ஜோரில் இடம் அமைதியானதும், இழப்புகளைச் சோதிக்க எனத் தேடி வருவார்கள். நமது நாட்டின் செஞ்சிலுவை விமானங்களும் வரும். எதிரி நாட்டின் மருத்துவக் குழுவும் வரும்… உயிர் ஊசலாடிக் கொண் டிருப்பவர்கள், இறந்த உடல்கள் என்றெல்லாம் கணக்கு கிடையாது. கிடைத்த நபர்களைச் சேகரிப்பார்கள்… எதிரி ராணுவ வீரன், நமது நாட்டு வீரன் என்கிற பேதங்கூட இல்லை. இவர்கள் நோயாளிகள். மருத்துவமும் உயிர் பிழைக்க வைப்பதான முயற்சிகளும் எல்லார்க்கும் பொது. மருத்துவ முகாமின் பணி அது.
போர்க்களத்தில் அவர்கள் தனிப் பிறவிகள். டாக்டர்மார் – அவங்கதான் நம்மைச் சாகடிப்பார்கள். நாம அவர்களைச் சாகடிக்க முடியாது!
போர் வளாகப் பகுதியிலேயே சற்றுதள்ளி மருத்துவப் பணிமனை. ரயில்வே பிளாட்பார்ம்போல வளாகங்கள். ஒரு ஸ்பெஷல் சாதா… என சத்தம் வராததாலோ என்னமோ, பார்சல் ஆகாத பிணங்கள். முகம்வரை மூடப்பட்டு வரிசையாய் வைக்கப் பட்டிருக்கும்.
இன்னும் இன்னும் என உடல்களும் காயம் பட்டவர்களும்… ஆட்கள் வந்து குவிந்துகொண்டே இருக்கிறார்கள். அருகிலேயே குண்டுச் சத்தங் கூட கேட்கும். பரபரப்புடன் விமானங்கள் உயர எழும் ஓசை கேட்கும். இரும்புப் பெருங் கரண்டியால் அடிவயிற்றில் சுரண்டுகிறாற் போல கடூரமான பயமான ஓசை.
செஞ்சிலுவைக் கொடி பறக்கும் பணிமனைப் பகுதிகள்…
போர் என்பதே அநேக அபத்தங்கள் கொண்டது. யாரோ என்னவோ பேச்சு வார்த்தை நடத்துகிறார்கள். இவனுக்கும் அவனுக்கும் பாஷைப் பிராப்தி கூடக் கிடையாது. அவனுகள் பாட்டுக்கு அவனவன் வேலையைப் பார்க்கலாம். சும்மா நோண்டிக் கொண்டே இருப்பதில் பொழுதைக் கழிக்கிறார்கள்… அதில் உரசல்கள். போர்… வெற்றி என்கிறார்கள். தோல்வி என்கிறார்கள். உடனே போர் என்கிறார்கள். பிறகு போர் நடக்கிறது. யாரோ தெரியாத யாரோடோ மோதுகிறார்கள். ஆண்மை சிலிர்த்தெழுந்தாப் போல பீரங் கிகள்… அடிரா குண்டை. காயம் படுகிறார்கள். உயிர் இழக்கிறார்கள்… அதைவிட வேடிக்கை சுட்டுக்கொண்டே இருப்பார்கள். திடீரென்று செய்தி வரும்… நிறுத்து. நிறுத்து… சமாதானம் சமாதானம்… என்கிறார்கள். உடனே துப்பாக்கியை இரு தரப்பினரும் இறக்கி விட்டுப் புன்னகைகள். கைகுலுக்கல்கள்.
இரண்டு ராணுவத் தளபதிகளும் என்ன பேசிக் கொள்வார்கள்?
இரு குழந்தைகள் போல – ஏண்டா சுட்டே? – நீ மட்டும் சுடலாமோ?…
சிப்பாய்களும் போர்வீரர்களும் முடுக்கப் பட்டவர்களாய் ஆணைக்கு இயங்கியபடி இருப்பார்கள். சூ – என இலக்கு காட்டப்பட்ட நாய்கள்! சாவி கொடுத்த பொம்மைகள். மனித யந்திரங்கள். நேரங் காலம் இல்லை. இரவு பகல் இல்லை. உண்மையில் இரவில் போர் இன்னும் உக்கிரமாய் மூர்க்கமாய் இருக்கும்.
ஒரு பிரதேசத்தைக் குறிவைத்துக் கொள்வார்கள். முதலில் வானத்தில்தான் தாக்குதல்… முதல்கட்ட யோசனைதான். வரைபடங்களை வைத்துக் கொண்டு விவாதங்கள் நிகழும். சட்டென்று முகூர்த்தம் தவறாமல் சிர்ர் சிர்ர்ரெனச் சீறிக் கிளம்பும் விமானங்கள். அதன் அசுர வேகம். இலக்குகளில் குண்டுகள் பொழியும். மழையாய்ப் பொழியும். போன விமானங்கள் குறிப்பிட்ட எல்லைவரை வானத்தைக் கைப் பற்றி விட்டுத் திரும்பும். எத்தனை விமானங்கள் கிளம்பின, அத்தனையும் பத்திரமாய்த் திரும்புமா உத்திரவாதம் இல்லை. போரில் வெற்றி தோல்விக்கே உத்திரவாதம் இல்லை!
பிறகு பீரங்கிப் படையின் முறை. ஐம்பதடி தூரம்வரை பீரங்கிகளின் குண்டு வீச்சு. போஃபர்ஸ் பீரங்கிகள் எடை குறைந்தவை. நகர்த்திச் செல்ல எளியவை. இருளில் அக்னிக் குழம்புகளாய்ச் சீறிச் செல்லும் குண்டுகள். நீள்குழாயில் குண்டுகளைப் போடும் ஒருவன். விசையை அழுத்தி வெளியே தள்ளும் இயக்கத்தில் ஒருவன். பெரிய பெரிய கடல்மீன்களைப் போல குண்டுகள். தனியாளாய்த் தூக்க முடியாது. ஐம்பது அடிவரை குண்டுகள் முழங்கும். நம் பகுதியிலும் குண்டுகள் வந்து விழும் எதிரி முகாமில் இருந்து!
பிறகுதான் தரைப்படையின் வேலை. கடும் இருட்டு. நிற்க நேரங் கிடையாது. காதுகளின் வேலைதான் அதிகம். பதுங்கு குழிகளில் சுட்டுக் கொண்டே செல்ல வேண்டும். கூட வருகிறவன் இறந்து போனால் கூட பார்க்கமுடியாது. நிற்கமுடியாது. அதைப்பற்றி யோசிக்கவே முடியாது… என்ன, கூட வந்தவன் அலறல்… அது தெரியும். அவன் குண்டடிபட்டு உருள்கிறது, அங்கப் பிரதட்சிணம் – தெரியும். அவனது ராணுவ சாமான்களையும் சேர்த்து எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும். எதிரிகள்… அடிபட்டு ஆயுதம் இல்லாமல் கிடக்கிறவர்கள் கையில் இந்த ஆயுதங்கள் கிடைப்பது ஆபத்து. அதை அனுமதிக்க முடியாது.
என்ன, நண்பன் அடிபட்டு விட்டான்… என்கிற நிலை உள்ப்பதட்டத்தை, சீற்றத்தை, ஆவேசத்தைக் கிளர்த்தும். சண்டை முன்னிலும் ஆக்ரோஷமாய் நிகழும். மனித சராசரி உணர்ச்சிகளுக்கு அப்பாற்பட்ட நிமிடங்கள். மனித யந்திரங்கள்… எதிர்ப்பட்டவன் சாகணும் என்பது விதி. இரக்கப் பட்டால், பாவி அவன் உன்னைக் கொன்னுருவாண்டா!
ஒரு தீபாவளி அன்று பிச்சை பயந்து உள்ளோடி வருகிறான். அப்பா சிரிக்கிறார்.
‘என்னடா?’
‘வெடி வெடிக்காக…’
‘ஏல… நீ ராணுவ வெடி பாத்திருக்கியால?’
அவன் அவரையே பார்த்தான்.
‘என்னடா?’
‘அந்த வெடிலதான உமக்குக் கால் போச்சு…’
‘அதுக்கு? சண்டைன்னா எல்லாந்தான்…’ என்று அவனைத் தடவிக் கொடுக்கிறார் அப்பா.
‘எனக்கும் கால் போயிட்டா ஒன்னிய யார் பாத்துக்க இருக்காக…’ என்றான் பிச்சை.
‘ஏல பயப்டப்டாதுடா… இந்த வெடில கால் போயிருமாங் காட்டியும்… எது வந்தாலுஞ் சரின்னு இருக்கணும். நிமிர்ந்து நிக்கணும்… அவன்தான் மனுசன். கேட்டியா? மிருகங்கள் இல்ல… நாலு கால்ப் பிராணி. அதுதான் குனிஞ்சி நடக்கும். நாம? நாம மனுசங்க. நிமிர்ந் து தாக்குப் பிடிச்சி நிக்கணும்…’
‘நிமிர்ந்து நின்னுதான் உமக்குக் காலைக் கழட்டி விட்ட்டானுங்க… பயப்பட வேண்டிய விசயத்துல அசட்டு தைரியங் கூடாதுப்பா…’ என்கிறான் பிச்சை. எப்படியோ சட்டென்று பதிலடி அவனிடம் சிக்கி விடுகிறது…
இந்த அறிவு புழுதியில் வீணையாய்க் கிடக்கிறது!… அப்பாவுக்கு வருத்தம்.
– உடம்பு முழுக்க ரத்தம் சொட்டச் சொட்ட காயம். அங்கங்க வாழைக்காய்த் தெரிகிற பஜ்ஜியாட்டம் கெடக்கேன்! எதிரி வாரான் பாத்துக்க பிச்சை. உங்கப்பாவுக்கு நேரா வந்திட்டான். நான் எதிர்பார்க்கவே யில்ல. நான் முன்பக்கமாப் போயிட்டிருந்திருக்கேன். அல்லது அப்பதான் மயக்கம் தெளிஞ்சு எப்பிடியோ நடந்து வராம் போல…
என் முதுகுப்பக்கம்… சுட்டிருப்பான். எப்பவுமே எதிரி துடிக்கறதாத் தெரிஞ்சா உடனே சுட்றணும், அவனை விட்டு வைக்கப்டாதுன்னு கட்டளை. எப்படியோ அவன் தப்பிச்சிட்டிருக்கிறான்… சரி நம்ம கதை முடிஞ்சிட்டதுன்னே தீர்மானிச்சிட்டேன்…
ஆனா அப்படியே சரிஞ்சி என் காலடில விழுந்தான். எங்காளுகள்ல யாரோ ஒருத்தன்… அந்த மவராசன் யாரு தெரியல… போட்டுத் தள்ளீர்க்கான். எங்கருந்தோ வந்திருக்கு குண்டு.
எதுக்குச் சொல்ல வரேன். அப்பக் கூட எங்களுக்கு சாவுபயம் கிடையவே கிடையாது. ஆறிலுஞ் சாவு. போரிலும் சாவு!…
சாவு கூட பயமான விஷயம் இல்லடா. ஆனா சாவுக்குக் காத்திருக்கறம்ல? அதான் பயங்கரம்…
‘புரியலய்யா… எதுக்குக் காத்திருக்கணும். ஒம்மபாட்டுக்கு நீர் ஒம்ம சோலியப் பாத்திட்டு இருக்காம…?’
‘இப்ப எதுக்கு உனக்குச் சாவு கவலை… நான் சொன்னது உனக்குப் புரியாம இருக்கறதே நல்லது… நீ வளர்ற பிள்ளை…’
சாவு அல்ல. இந்த வயசில், பசிதான் பிரதான பிரச்னை. அது தீர்ந்ததா, வயிறு நிறைந்ததா… உலகம் இன்பகோளம்!
சற்று பள்ளத்தில் கீழே கிடந்த அப்பாவை ஒருவேளை பார்க்காமல் போய்விடக் கூடும் என்ற பயம் அப்பாவுக்கு. அதெப்படி போவார்கள் என்று யோசிக்க முடியாத கையறு நிலை. அடிச்ச பனிப்புயலின் கடுமை… அதுவரை உறைக்காதது அப்போது உறைத்தாப் போலிருந்தது. இருந்த சக்தியெல்லாம் திரட்டி கைதூக்கி ஒரு ஓநாய்போல அவர் அழுது அலறினார். ஓடிவந்த சிப்பாய் தொட்ட்… தூக்க் – ஆஆஆ ஊஊஊ… என உயிர் எழுத்துக்களை வாரி வழங்கினார்… சரியாய்த்தான் பேர் வைத்திருக்கிறார்கள். உயிர் போகும்போது உச்சரிக்கும் எழுத்துக்கள்! – மீண்டும் மயக்கமானார். கடுமையான காலங்கள். வலி தெரியாமல் இருக்க அங்கேயே ஊசி போட்டார்கள். மரத்துப்போகும் ஊசி. தொடைக்காயத்துக்கு முதலுதவி. சிறு கட்டுப்போட்டு புண்ணை மூடி அவரை ஸ்ட்ரெட்ச்சரில் தூக்கி எடுத்துப் போனார்கள். ஆஸ்பத்திரியில் காலைச் சோதித்தார்கள். கால் கடுமையாய்ச் சேதம் பட்டிருந்தது. ரத்தம் கெட்டுப் போய் இருந்தது. பாசிகள் திரண்டிருந்தன புண்ணில். தொடையே நீலமாய் இருந்தது.
ரத்தங் கட்டி பாரமாய் காலே… கால் இல்லாமல், துணையெழுத்து தப்பி, க ல் என ஆகியிருந்தது! – காலை எடுத்து விட்டார்கள். இல்லாவிட்டால் உயிரையே பறி கொடுக்க வேண்டியிருக்கும்.
முட்டிக்கு சற்று மேல் வரை நீக்க வேண்டியிருந்தது. உடல் தேற, புண்கள் ஆற ஆறேழு மாசம் படுக்கையில் கிடந்தார். நர்ஸ் தோளைப் பற்றியபடி மெல்ல நொண்டியபடி நடந்து பழகினார். பிறகு மனுசாள் உதவியின்றி தவளைத்துள்ளல் துள்ளித் துள்ளி, தானே குளியல், காலைக்கடன், என்று பார்த்துக் கொள்ள ஆரம்பித்தார்.
சிறு குழந்தை போல, வாழ்க்கையை மீண்டும் துவங்கினாற் போல…
உயிர் இன்னொரு ஜென்மம் எடுத்தாப் போல…
தந்தி கொடுத்து அவர் மனைவியை வரவழைத்திருந்தார்கள். ஊருக்குக் கூட்டிப் போகணுமானால் போகலாம். இங்கேயே நகர இராணுவ ஆஸ்பத்திரியிலும் வைத்துப் பார்த்துக் கொள்ளலாம் என்றார்கள். ஊரில் என்ன வசதி இருக்கிறது… அரசம்பட்டியில்? அங்க ஒரு வௌங்காத மருத்துவச் சி இருக்கா. நாளாக நாளாக அவ காலே இத்தா தண்டி வீங்கிப் போயி, வெளிநடமாட்டமே அவளுக்கே அத்துப் போச்சு. என்ன வைத்திச்சி. அவளுக்கே தன் காலையே சரி பண்ண இயலாமல்ல போச்சி… அவர்கள் அங்கேயே தங்க முடிவு செய்தார்கள்.
போர்க்காயம் பட்டவர். தனி அறையில் ராஜ வைத்தியம். கூட ரமணிபாய்…
ரமணிபாய் கருத்தரித்தது அங்கேதான்!…
அக்குள் தாங்குக் கட்டைகளுடன் அப்பா திரும்ப ஊர் வந்து சேர்ந்தார்.
ஊரே கௌரவமாய் வரவேற்றது மகிழ்ச்சிகரமாய் இருந்தது. வீட்டுக்கு அவரைப் பார்க்க வந்த எல்லாருக்கும துக்கம் தொண்டையில் விக்கியது. தம்மைக் காக்க அவர் கால் கொடுத்ததாக அவரைப்பற்றிப் பேசிக் கொண்டார்கள். நினைத்தார்கள்.
ரமணிபாய்க்குக் கூட அதையிட்டுப் பெருமைதான். நீங்க பிழைச்சி வந்ததே போதும், என் று வாயாரச் சொன்னாள்…
– நாளடைவில் அவர் கொண்டு வந்த பணத்தை கபளீகரம் செய்ய கழுகுகள் சுற்றிவர ஆரம்பித்தன. யாரை நம்ப, யாரை எவ்வளவு தூரம் நம்ப தெரியவில்லை. பிசினெஸ் என அவர் எதிலும் இறங்கியதில்லை.
ஆழம் தெரியாமல் காலை விடக்கூடாது.
என்னத்தைக் காலை விடறது… காலே இல்லையே!
ஏமாற்றம்.
ஏமாற்றங்கள்.
இதன் நடுவே சிறு ஆறுதல் போல குழந்தை வரம்… என்று பார்த்தால், சுவரை விற்று சித்திரம் வாங்கினாப் போல…. இவனைப் பிரசவித்துவிட்டு ரமணி இறந்து போனாள். இந்தக் காலத்தில் சுற்றிலும் எதிரிகள் மத்தியில், கால் இல்லாமல்… இவனை நான் எப்படி வளர்ப்பேன்..
இருந்த உள்க் கலவரத்தில் உடம்பே படுத்த ஆரம்பித்து விட்டது. சிறு குளிரும் கூட ஒத்துக் கொள்ளவில்லை. எத்தனை பனியில் சிகரங்களில் வீறுநடை போட்டிருக்கிறார். என்னாயிற்று எனக்கு.
வெள்ளிப் பனிமலையின் மீது உலாவுவோம் – பாடிய பாரதியே குளிர்தாங்காமல் கழுத்தை முகத்தைத் தலையை மூடிக்கிட்டிருக்கிறார்….
பையனுக்கு அவர் துணை என்ற காலம் பிடி உருவிக் கொண்டாற் போல…
அவரே அவனது சுமையாகிப் போனார்.
பள்ளிக்கூடம் போவதை தானே நிறுத்திக் கொண்டான். தன் நிழலே தனக்கே எதிரி என ஆகிப் போன காலம்.
‘எலேய் அழாதடா…’ என்று சொல்ல வந்தவர் இரும ஆரம்பித்து முடிக்க முடியாமல் திணறினார்.
கண்ணைத் துடைத்து விட்டு ‘அழாதீங்கய்யா’ என்றான் அவன்.
அவசர வேலைகளில் அவனை அழைத்தார்கள். கல்யாணங்களில் கோவில் உற்சவங்களில் சாவில் என பெட்ரோமாக்ஸ் விளக்கு சுமந்தான். புஸ் புஸ்சென்று சத்தம் பாம்பை அடிக்கடி ஞாபகப் படுத்தியது. கோதுமை மாவு, நெல் அரைத்துக் கொடுத்தான். சந்தைக்கு இரா பூரா நடந்து மாடு ஓட் டிப் போனான். சாமிக்கு முன் தீவட்டி தூக்கி வந்தான். சாமிக்கு முன் ஆட்டபாட்டங்கள்.
யானை கூட நடக்க ஓர் உற்சாகம். எங்காவது நாட்டியம், கரகாட்டம் என, தெருச் சந்தியில் டேரா என்றால், மாவுத்தன் சிங்காரம் யானையின் முன்கால்ப் பக்கமே குந்தி உட்கார்ந் து பல்குத்திக் கொண்டிருப்பான்.
உற்சவத்தில் வெடிச்சத்தம் கேட்டபோது அப்பா இருமினாற் போலிருந்தது.
… அந்த யானையோடு ஒருமுறை… நினைக்கவே சிரிப்பு வந்தது.
இருந்த வெக்கைக்கு சிங்காரம் யானையின் அடியிலேயே ஒருநாள் படுத்துக் கொண்டான். படுக்க இடமா இல்லை. யானைக்கு அன்றைக்கு படா உற்சாகம். ஐந்தாம் காலால் அவனைத் தட்டித் தட்டி எழுப்ப முயன்றது… ராஜா பார்த்துக் கொண்டே இருந்தான். சிங்காரம் தண்ணி போட்டிருந்தான் போல. ஆள் எழுந்து கொள்கிறாப் போல இல்லை. அடக்க முடியாத யானை, சர்ர்ர்ரென்று அருவி போல அடிச்சது பார்… குடம் குடமாய் நாத்தமான நாத்தத்தில் சிங்காரம் குளிச்சான். வாரியடிச்சி எழு ந்திரிக்க வேண்டியதாயிட்டு.
குளிச்சதுல போதையே அடங்கிருக்கும்!…

( தொ ட ர் கி றது )

Series Navigation

எஸ்.ஷங்கரநாராயணன்

எஸ்.ஷங்கரநாராயணன்