மடியில் நெருப்பு – 10

This entry is part [part not set] of 35 in the series 20061102_Issue

ஜோதிர்லதா கிரிஜா



சூர்யா திடுக்கிட்டு அவளைப் பார்த்தபோது, அவள் தன் சிரிப்பை அடக்க முயன்றுகொண்டிருந்தது தெரிந்தது.
சூர்யா சட்டென்று நின்றுவிட்டாள். முகத்துச் சிவப்பைச் சமாளிக்க முயன்று, தோற்று, “என்ன கேக்கறே, சுகன்யா? எந்த ஆளைப்பத்திக் கேக்கறே? புரியும்படியாப் பேசு,” என்றாள்.
“ஏங்க்கா படபடன்றே? இன்னைக்கு மத்தியானம் அம்மாவுக்கு மயக்கமா வந்திடிச்சாம். அதனால உனக்கு ·போன் பண்ணிப் பெர்மிஷன் போட்டுட்டு சீக்கிரம் வரச்சொல்றதுக்காக எதிர் வீட்டு மாரியப்பனைக் கூப்பிட்டிருக்காங்க. ஆனா நீ ஏற்கெனவே அம்மாவுக்கு உடம்பு சரியில்லேன்னு பெர்மிஷன் போட்டுட்டுப் போயிட்டதா உங்க ஆ·பீஸ்ல சொல்லியிருக்காங்க. உடனே அம்மா ஒரு மாதிரி ஆயிட்டாங்கன்னு நினைக்கிறேன். நான் வந்ததும் என்னோட கெளம்பினாங்க… வழியெல்லாம் உன்னைப் பத்திக் கவலைப்பட்டுப் பேசிட்டே இருந்தாங்க. நம்ப அக்கா அப்படிப் பண்ணிடிச்சில்லே? அதனால் நம்ம ரெண்டு பேர் மெலேயும் கூட அம்மாவுக்கு நம்பிக்கையே இல்லே. எனக்கும் மறைமுகமா புத்தி சொல்லிட்டே வந்தாங்க…’அழகான பொண்ணுங்களுக்கு என்னைக்குமே ஆபத்து அதிகம். மோசக்கார ஆம்பளைங்க அவங்களை அழிக்கிறதுக்குன்னே அலைவாங்க. இந்தப் பொண்ணுங்களும் பசப்பு வார்த்தையிலே மயங்கி மனசைப் பறி குடுத்துடுவாங்க…மனசோட நின்னிச்சுன்னாப் பரவாயில்லே’ ன்னெல்லாம் விலாவாரியாப் பேசினாங்க… நாம ரெண்டு பேரும் அக்கா மாதிரி பண்ணிடுவோமோன்னு பயப்பட்றாங்க..”
சூர்யா தலை குனிந்தபடி நடந்தாள். “ஒரு தாயோட நியாயமான பயம்தான்.”
“அது சரி, அந்த ஆளு யாருன்னு கேட்டேனே? அதுக்கு நீ பதிலே சொல்லல்லே!”
“எந்த ஆளுன்னு கேட்டேனில்லே? புரியும்படியாப் பேசுன்னேனில்லே? என்னடி கேக்குறே நீ?”
“பெர்மிஷன் போட்டுட்டு யாரோட வெளயிலே போனேன்னுதான் கேக்கறேன்! இந்தச் சின்ன கேள்வி புரியலையா?” என்று கேட்டுவிட்டு சுகன்யா வாய்க்குள் நமட்டுச் சிரிப்புச் சிரித்தாள்.
சூர்யாவின் முகம் ரத்தமாய்ச் சிவந்துவிட்டது. ” என்னடி இது, இப்படி ஒரு கேள்வி கேக்கறே? நான்தான் சொன்னேனில்லே, என் ·ப்ரண்ட்ஸோட சினிமாவுகுப் போனேன்னு?”
“அப்படியா? என்ன சினிமாவுக்குப் போனே?”
சூர்யா திகைத்துப் போய்விட்டாள். சட்டென்று என்ன சொல்லுவதென்று தோன்றவில்லை: “என்னது, நீ? இல்லாத பொல்லாத க்ராஸ் க்வெஸ்டினெல்லாம் கேக்கறே? ஒரு சினிமா பேரையும் ·ப்ரண்ட்ஸோட பேருங்களையும் சொல்ல எவ்வளவு நாழியாகும்? நம்பிக்கை வேணும்!”
“அப்படியா?” என்று சிரித்த சுகன்யாவின் குரலில் ஒரு கேலி இழையோடியது. பிறகு, முகத்தில் இருந்த கேலியை அகற்றிக்கொண்டு, “உனக்கு இஷ்டமில்லைன்னாலோ, என் மேலே நம்பிக்கை இல்லேன்னாலோ, நீ எதுவும் சொல்ல வேணாங்க்கா. ஒரு ஆர்வத்திலே தான் திருப்பித் திருப்பிக் கேக்கறேன். நீ ஒரு மாருதி கார்லே ஏறிட்டுப் போனதை என் ·ப்ரண்ட் சாவித்திரி பார்த்திச்சாம். இன்னைக்கு அது காலேஜுக்கு வரல்லே…” என்று சன்னமான குரலில் கூறிய சுகன்யா சூர்யாவின் அசடு தட்டிய முகத்தை நேரிடையாகப் பார்த்து அவளுக்குச் சங்கடம் விளைவிக்க விரும்பாமல் தரையைப் பார்த்தபடி நடந்தாள்.
சூர்யாவுக்கு வாய் அடைத்தே போய்விட்டது. சுகன்யா மேற்கொண்டு ஏதும் கேட்காமல் இருந்தாள்.
சுகன்யா, “சாரிக்கா. நான் அநாகரிகமா திருப்பித் திருப்பி உன்னைத் தொணதொணத் திருக்கக் கூடாதுதான்…” என்றாள், சற்றுப் பொறுத்து.
தங்கையின் முகத்தைப் பார்க்க முடியாமல், தரையைப் பார்த்தபடியே, சூர்யா சொன்னாள்: “உங்கிட்ட சொல்லக் கூடாதுன்னு இல்லேடி, சுகன்யா. கொஞ்ச நாள் கழிச்சுச் சொல்லலாம்னு இருந்தேன். இன்னைக்குத்தான் அறிமுகமே ஆச்சு. அதை பத்தி நான் யார் கிட்டேயாவது சொல்லணும்னு நினைச்சா அந்த முதல் ஆளு நீதாண்டி.”
“சரி. அப்படியே இருக்கட்டும். ஆனா, இப்ப வசமா மாட்டிக்கிட்டதாலே, இப்பவே சொல்லு – அந்த ஆளு யாரு, என்ன, ஏதுன்ற விவரத்தை யெல்லாம்… அவரு பேரென்ன?”
“ராஜாதிராஜன்…”
“ராஜாதிராஜனா! ஆளு ரொம்ப ஷோக்கா இருக்காருன்னு சாவித்திரி சொல்லிச்சு. ‘யாரு அந்தாளு? உனக்குத் தெரியுமா?’ ன்னும் கேட்டிச்சு. ‘தெரியும்’ னு புளுகி வெச்சேன். நல்ல வேளை. வேற எதுவும் கேக்குறதுக்கு முந்தி கடையிலேர்ந்து அவங்கம்மா வந்துட்டாங்க. நான் ஜாடை காட்டிட்டு நைஸா நகர்ந்துட்டேன்…”
“நீ சாவித்திரியை எங்கே பார்த்தே?”
“அம்மாவைக் கூட்டிக்கிட்டு டாக்டர் வீட்டுக்குப் போனேனில்லையா? திரும்பி வர்றப்போ நான் ஆட்டோ தேடி ஒரு கடை வாசல்லே நின்னப்போ அது அந்தக் கடைக்குள்ளேருந்து வந்திச்சு. அவங்கம்மா கடைக்குள்ளே இருந்தாங்க…”
“அப்ப, நம்ப அம்மா பக்கத்துலே இருந்தாங்களாடி?”
“இல்லேல்லே. அம்மாவை டாக்டர் வீட்டிலேயே விட்டுட்டு நான் ஆட்டோ பிடிக்கிறதுக்காக வெளியே வந்தேன். அதனால சாவித்திரி என்னோட பேசினது பத்தி எதுவும் அம்மாவுக்குத் தெரியாதுக்கா.”
“நல்ல காலம்! தப்பிச்சேன். இப்போதைக்கு அம்மாவுக்குத் தெரியவேணாம்.”
“அது சரி, அவரு யாருக்கா? உனக்கு எப்படி அறிமுகமாச்சு? என்ன பண்ணிட்டிருக்காரு?”
நடந்ததை யெல்லாம் அப்படியே சொன்னால், சுகன்யா தன்னை அசடு என்று நினைப்பாளோ எனும் கூச்சத்தில் அவள் உண்மையைத் திரித்துச் சொன்னாள்: ” கொஞ்ச நாளா பஸ் ஸ்டாப்ல வெச்சுப் பழக்கம். இன்னைக்குத்தான் முத முதலா விஷயத்தைச் சொன்னாரு. என்னோட பேசணும்னாரு. அதான் பெர்மிஷன் போட்டுட்டு சோழா ஓட்டலுக்கு அவரோட போனேன்.”
“அப்ப அந்தக் கார் அவரோடது இல்லையா?”
“அவரோடதுதான்.”
“பஸ் ஸ்டாப்ல வெச்சுப் பழக்கம்ங்குறே? கார் வெச்சுருக்குறவரு பஸ் ஸ்டாப்லே ஏன் நிக்கணும்?”
சூர்யாவுக்குத் தடுமாற்றம் ஏற்பட்டது. ‘இவ வக்கீலுக்குப் படிக்க வேண்டியவ…’
“கார் ரிப்பேராயிருக்கலாம். அதனால டாக்சியிலேயோ பஸ்லேயோ போறதுக்காக வந்து நின்னிருக்கலாம். ஆனா நான் கேக்கல்லே.”
“என்ன பண்ணிட்டிருக்காராம்?”
“அவங்கப்பா பெரிய பிசினெஸ்மேன். அம்மா கிடையாது. நீ கூட கேள்விப்பட்டிருப்பே – பயனீர் இம்ப்போர்ட்டர்ஸ் அன்ட் எக்ஸ்போர்ட்டர்ஸ்னு! அதுல இவரும் பார்ட்னர். முதலாளியுடைய ஒரே மகன்.”
“அம்மாடியோவ்! அப்ப, அவங்க ரொம்பப் பெரிய பணக்காரங்களா இருக்கணுமே?”
” ஆமா. அதான் எனக்கும் கொஞ்சம் கவலையா யிருக்குடி, சுகன்யா. ஆனா. ஆளைப் பார்த்தா, நல்லவராத்தான் தெரியறாரு. அவரோட அப்பா கல்யாணத்துக்கு லேசிலே சம்மதிக்க மாட்டாராம். முரண்டு பிடிச்சு அவரை எதிர்த்துத்தான் சாதிக்க வேண்டியிருக்கும்னாரு.”
“அப்படின்னா, சிக்கல் இருக்கும்னு சொல்லு.”
“ஆமா.”
“நாம பரம்பரை ஆண்டிங்குற விஷயம் அவருக்குத் தெரியுமாக்கா?”
“சொல்லாம இருப்பேனாடி? நான் அவரு கிட்ட சொன்ன முதல் விஷயமே அதுதான். என் ஒருத்தியோட சம்பாத்தியத்தை நம்பித்தான் நம்ம குடும்பமே வாழுதுன்னு சொன்னேன். அவரு ஏற்கெனவே நம்ம குடும்பத்தைப் பத்தியெல்லாம் விசாரிச்சுத் தெரிஞ்சுக்கிட்டிருக்காரு…எல்லாம் தெரிஞ்ச பெறகுதான் என்னைக் கேட்டாரு.”
“என்ன கேட்டாரு?”
“போடி!”
“எல்லாம் சரிதான்…ஆனா அவங்கப்பாவோட சண்டை போட்டுச் சாதிக்கிற அளவுக்கு அவருக்குத் துணிச்சல் இருக்கான்றதை நல்லாக் கேட்டுத் தெரிஞ்சுக்க.”
“அவரு துணிச்சல் இல்லாத ஆளாத் தெரியல்லே… இன்னொண்ணு கூடச் சொன்னாருடி, சுகன்யா. ஒரு பெரிய தொகையை நம்ம அப்பா அம்மா கிட்ட குடுத்துட்டுத்தான் என்னைக் கல்யாணம் பண்ணிப்பாராம். அதுவும் அவரு செலவிலதான் பண்ணிப்பாராம். ஏன்னா, கல்யாணத்துக்குப் பெறகு நான் வேலையை விடவேண்டி வருமில்லே? அதுக்குத்தான்.”
“பரவால்லியே! அப்ப நியாயமானவராத்தான் தெரியுது..”
சூர்யா பெருமை ததும்பிய வெட்கத்துடன் புன்னகை செய்தாள்: ” அது மட்டும் இல்லே. உனக்குக் கூட ஒரு மாப்பிள்ளைப் பையனை அவரே தேடி ஏற்பாடு பண்ணுவாராம். சொன்னாரு…”
சுகன்யா சிரித்தாள்.
“என்னடி, சிரிக்கிறே?”
“உனக்கே அம்மா இப்ப கல்யாணம் பண்ணிவைக்கிறதா இல்லே! அதுக்குள்ளே நீ என் கல்யாணத்துக்கு போயிட்டே…’இன்னும் கொஞ்ச நாளுக்கு சூர்யாவோட சம்பாத்தியம் நம்ம குடும்பத்துக்குக் கிடைச்சா நல்லாருக்கும். அதுக்குள்ளே – வெளியே போற பொண்ணு – அக்காக்காரி மாதிரி – காதல் ஊதல்னு சொல்லிக்கிட்டு எந்த வம்பிலேயும் மாட்டிக்காம இருக்கணுமேன்னு ரொம்பக் கவலையாயிருக்கு…ஆனா, ‘இப்போதைக்கு உனக்குக் கல்யாணம் கிடையாது’ ன்னு ஒரு பெத்த தாய் மககிட்டே எப்படிச் சொல்லமுடியும்’ அப்படின்னு புலம்பினாங்க அக்கா!…”
” ……… ”
“என்னக்கா பேசாம இருக்கே?”
சூர்யா ஆத்திரத்தை அடக்கியபடி, “அதுக்கு நஷ்ட ஈடாத்தான் ஒரு பெரிய தொகையைக் குடுக்கிறதா இருக்காரே! அப்புறம் என்னவாம்?” என்றாள்.
சூர்யாவின் குரலில் தெறித்த சூடு சுகன்யாவை அயர்த்தியது.
சூர்யா தொடர்ந்தாள்: “இந்த விஷயம் அம்மாவுக்கு இப்போதைக்குத் தெரியவேண்டாம். ஏன்னா நான் இன்னும் யோசிக்க வேண்டிய விஷயமெல்லாம் இருக்கு.”
“அதான் சரின்னு சொல்லிட்டியேக்கா? அதுக்குப் பெறகு யோசிக்க என்ன இருக்கு?”
“அவரு நம்ம குடும்பத்துக்கு எம்புட்டுப் பணம் குடுப்பாருன்னு தெரியணும். அது முக்கியம்.”
“என்னக்கா இது? அவரையேவா அதைப் பத்திக் கேக்கப்போறே?”
“நேரடியாக் கேக்க மாட்டேண்டி. ஜாடையாக் கேட்டுத் தெரிஞ்சுக்குவேன்.”
“நீ என்னதான் சாமர்த்தியமாக் கேட்டாலும், அவரு புரிஞ்சுப்பாருக்கா…அசிங்கமாப் போகும்.. .நாளைக்கே விழுந்தடிச்சுக் கேக்காதே. கொஞ்சம் பொறுமையா யிரு.”
தங்கையின் அறிவுரையில் இருந்த விவேகம் சூர்யாவுக்கும் புரிந்தது.
மருந்துக் கடையை விட்டு இருவரும் வெளியே வந்த போது, அன்று மாலையில் கை நீட்டி ராஜாதிராஜனின் காரை நிறுத்த முயன்ற மனிதன் கடைக்குள் நுழைந்துகொண்டிருந்தான். அவனது விநோதமான சதுர முகமும், தொங்கு மீசையும், வகிடு இன்றி உயர்த்தி வாரிய தலைமுடியும் மனத்தில் நன்கு பதிந்து போயிருந்ததால், சூர்யா அவனைச் சற்று ஆழமாகவே கவனித்தாள். அவனும் அவளை நெடுமையாகப் பார்த்தான்.

jothigirija@vsnl.net

– தொடரும்

Series Navigation

ஜோதிர்லதா கிரிஜா

ஜோதிர்லதா கிரிஜா