இங்க்புளூ சாரியும், மிட்டாய் ரோஸ் பனியனும்

This entry is part [part not set] of 41 in the series 20060901_Issue

கே ராமப்ரசாத்



ஒரு பிரபல சினிமா நடிகர் நடித்த சினிமாவைப் பார்த்துவிட்டு வெளியே வரும்போது என்னை ஒரு குழு மடக்கி, “இந்தச் சினிமாவைப் பார்க்கலாமா ? கூடாதா என்று நீங்கள் சொல்லுங்கள்?” என்று மைக்கை நீட்டி, காட்சிப்பதிவு செய்தனர்.

நான் அந்தச் சினிமா கேவலமான சித்தரிப்புகளை மனித சமுதாயத்தின் மேல் சுமத்தி, காணும் ஒவ்வொருவரையும் அவமானமாக உணரும்படி செய்துவிட்டது என்று வெளிப்படையாகக் கூறுவதற்கு வெட்கப்படுபவன் என்பது அவர்களுக்கு எப்படியோ புரிந்துவிட்டது.

மற்றவர்களின் நம்பிக்கையைக் கெடுப்பதற்கு நான் யார் ? உண்மையை எடுத்துக் கூறுவது என் கடமையல்ல என்று நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். அந்த அனுபவம் எனக்குச் சங்கடமாகவும், அருவருப்பாகவும், அவமானமாகவும் இருந்தது. மேலும், இந்த மனநிலை இயற்கையானதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு பழகிக்கொள்ள முடிகிறது.

இதற்கு வேறு பெயரும் உண்டு. அது ‘நல்லொழுக்கம்’.

வெளியே வந்து, காஃபி ஷாப்பில் அமர்ந்தேன். அங்கு அவள் அதுவரை அமைதியாக வந்துவிட்டு, மெல்ல அருகில் அமர்ந்து என்னைப் புகழத் துவங்கிய நொடியில், ஏதோ ஒன்று நடக்கப் போவதை நான் கண்டு கொண்டேன். பெருங்குற்றத்திற்காக கடுந்தண்டனை ஒன்று எனக்காகக் காத்திருப்பதை நான் தெரிந்து கொண்டேன். இது அரசியல் நடவடிக்கை. முதலிலேயே புகழ்ந்து விட்டால் எதிர்ப்புகள் என் மூலம் இருக்காது. அப்புறம் குற்றம் சாட்டப்படும். அக்குற்றத்தை எதிர்த்து வாதிடுவதற்கு ஒன்றும் இருக்காது.

அடுத்தவர் கூறியதற்கு பதிலளிப்பதற்கு பதிலாக தான் நினைப்பதற்கு பதிலளிக்குமாறு கேட்பது அவள் பாணி.

அப்போது, அவள் கேட்டாள் காதல் என்பதற்கு உன் விளக்கம் என்ன ?

நான் பதிலுக்குக் கேட்டேன், காதல் ? ஒரு குறிப்பிட்டவரை அதிக காலத்திற்கு விரும்புவது.
அந்த அதிகமான விருப்பம் எவ்வளவு நாள் இருக்கும் ? நீண்ட காலம் அல்லது வாழ்க்கை முழுவதுக்குமே என்பது யாருக்குமே தெரியாது. ஏதோ ஒரு காலகட்டத்தில் இருவருக்கும் கடுமையான வாக்குவாதமோ, மனவருத்தமோ மற்றவர்பால் ஏற்படும். அது மீண்டும் சரி செய்யப்பட்டு, இன்னும் அதிகமாகக் காதலில் ஈடுபடுவது மேலும் புதிய சக்தியுடன் இன்னும் மூர்க்கமாகச் சண்சையிடுவதற்கே. திருமணத்திற்கு முன் ‘மயக்குவதற்கும்’, திருமணத்திற்குப் பின் ‘ஆட்சி செலுத்துவதற்கும்’ சில திறமைகளை பெண் என்பவள் எங்கும், யாரும் சொல்லிக் கொடுக்காமலேயே, இயற்கையாகவே கற்றிருக்கிறாள்.

அவள், “கற்பு என்பது காதலில் விசுவாகமாக இருப்பது தான். உடல் என்பது உள்ளம் என்னும் நெருப்பைத் தாங்கும் ஒரு அகல் விளக்கு என்று அளிக்கப்படும் விளக்கம் உங்களுக்கு சம்மதமா ?.”

நான், ” ஒரு முருங்கை மரமும், ஒரு எருமை மாடும் சொந்தத்தில் இருந்தால் உயிர் வாழ்வது இந்த உலகத்தில் சுலபம். யாரிடமும் நாம் கைகட்டி வேலை செய்யத் தேவையில்லை. அப்படி வாழ்வது எல்லோருக்கும் சாத்தியப்படுமா ? அதுபோலவே, உயிர் வாழ, உற்சாகமாகப் பணி புரிய ஆரோக்கியமாக இருந்து வெளிவேலைகளைச் செய்ய உணவும் எளிமையாக கொழுப்பு தவிர்த்து இருந்தால் போதுமானது. ஆனால், இறைச்சி, ஊட்டமான இதர உணவு வகைகள் சாப்பிடுவது எவ்வகையில் செலவிடப்படுகிறது ?”

இன்றைய காலகட்ட காதல் என்பது இந்தவகையான ஊட்டமான உணவினாலும், சினிமாவினாலும் ஏற்பட்டது. ஊட்டச்சத்து உணவு வாழ்வதற்குத் தேவை என்று சொன்னால், சினிமா சொல்லும் காட்டும் வாழ்க்கை நாம் வாழும் வாழ்க்கை என்று ஏற்றுக்கொள்ள முடிகிறதா ? இந்த வகை சினிமாக்களில் ஆபத்தான, சட்டத்துக்குப் புறம்பான ஏதோ ஒன்று மறைந்து இருப்பதை நான் உணர்கிறேன்.

நாம் பார்த்த இந்தச் சினிமாவில் அக்கதாநாயகி, “எனக்கு எந்த போலீஸ் அதிகாரியையும் தெரியாது. நீங்கள் தான் முதல் அறிமுகம்” என்று பேசும் வசனத்திற்கு, நம் ரசிகப்பெருமக்கள் “யேய்ய்ய்ய்.” என்று அசிங்கமாகக் கத்தி ஆர்பாட்டம் செய்ததைக் கவனித்தாயா? அந்த நடிகை ஏற்கனவே ஒரு போலீஸ் அதிகாரியாக நடித்த நடிகருடன் நடித்து, காதல் கொண்டவர் என்பது வதந்தி. ஆனால், சினிமாக் காட்சியில் சினிமா வசனம் பொய் என்பது (சினிமா கதையே பொய்) நம் ரசிகர்களுக்கு அதிர்ச்சியாகி கலவரப்படுத்திவிட்டது.
பிறகு வேறு ஒரு காட்சியில் அக்கதாநாயகன், கதாநாயகியிடம், ” இனி உன் பெண் குழந்தையும், நீயும் தான் எனக்கு முக்கியம்” என்று வசனம் பேசும்போது நம் ரசிகப்பெருமக்கள், விசிலடித்துக் கைதட்டி, (வரவேற்று? ) ஏக ரகளை செய்தது மற்றுமொரு ஆச்சரியம். அந்த ந்டிகருக்கும் வேறு ஒரு நடிகைக்கும் நிஜத்தில் ஒரு நட்பு இருப்பதாக வதந்திகள். சினிமாக் காட்சியில் சினிமா வசனம் நிஜம் என்பது (சினிமா கதையே பொய்) நம் ரசிகர்களுக்கு ஆனந்தத்தை ஏற்படுத்திவிட்டது.

இது வேட்டையா அல்லது விளையாட்டா என்பது என் மனதில் உள்ள வினா ? நாம் ஆபத்தானவர்களாக ஆகிவிட்டோம்.

அவள் சொன்னாள், “இந்த இடத்தை விட்டு நகர்வோம்.”

மேலும் சொன்னாள், எனக்கு ஒரு கதை நினைவிற்கு வருகிறது. ஒரு கூண்டில் சிங்கம். மற்றொரு கூண்டில் சிட்டுக்குருவி. தினமும் காலையில் குருவி சிங்கத்தைப் பார்த்துச் சொல்லும், “சகோதர சிறைக்கைதியே, உனக்கு என் காலை வணக்கம்”.

நான் ஆமோதித்தேன், “ஆம் அவமானம் என்பது நம் மனதால் கண்டுபிடிக்கப்படும் ஒரு புதிய கண்டுபிடிப்பு காதலைப் போலவே”.

உடனே அவள், ” நாம் யாருக்கு நன்மை செய்கிறோமோ அவரை நேசிக்கிறோம். நாம் யாருக்குத் தீமை செய்கிறோமோ அவரை வெறுக்கிறோம். இதில் அவமானம் என்பதன் இடம் நாம் பதிலுக்குக் கிடைக்கும் எதிர்வினையில் உள்ளது” என்றாள்.

நாங்கள் மெல்ல எழுந்து வெளியே வந்து நகர சந்தடியில் கலந்தோம். நான் யோசித்தபடியே நடந்தேன். அழகானவை எல்லாம் நல்லவை என்ற எண்ணம் நீக்கமற்று உலகெங்கும் பரவியுள்ளது.பாவச்செயல்கள் மன்னிக்கப்படும். ஆனால், அசிங்கமாக அலங்கரித்துக் கொள்வது, உடலுக்குப் பொருத்தமில்லாத உடை அணிவது மன்னிக்கமுடியாது.

எனவே, வெளிப்படையான அழகுக்கு வரவேற்பு உண்டு. ஏனென்றால் அழகு நல்லது. அழகுக்கு எதிரானது கெட்டது. அதன் பெயர் அசிங்கம் அல்ல.

ஆன்மாவை இனிமையாக்குவதைத் தவிர வேறு எதையும் காதலில் எதிர்பார்க்க என்னால் இயலவில்லை என்று மெல்ல முனகினேன்.


kramaprasad@gmail.com

Series Navigation

கே ராமப்ரசாத்

கே ராமப்ரசாத்