மறுபடியும் ஒரு மகா பாரதம் – அத்தியாயம் – 35 ( முடிந்தது )

This entry is part [part not set] of 39 in the series 20060825_Issue

ஜோதிர்லதா கிரிஜா


மறுபடியும் ஒரு மகா பாரதம்

அத்தியாயம் – 35
மாலதியின் மீது எனக்குக் கோபமே வரவில்லை. மாறாக, அவள் சிறுபிள்ளைத் தனமாக நடந்துகொண்டுவிட்டதாய்த் தோன்றியது,
“மாலதி! நீ எழுதின என்னோட சுயசரிதையில நீ விவரிச்சிருக்கிற சிவகுருவோட என்ணங்களும், நான் தற்கொலை பண்ணிக்கிறதுக்காக வீட்டைவிட்டுக் கெளம்பினதுக்கு அப்புறம் நடந்ததா நீ எழுதியிருக்கிற அந்த மார்கரெட்டோட சதியும், அவள் காதலன் அவளை ஏமாத்திட்டு ஓடினதாச் சொல்லியிருக்கிற சம்பவமும் நீயாக் கற்பனை பண்ணி எழுதினது. ஆனா நிஜமா நடந்தது என்னங்கிறது அவராச் சொன்னாத்தான் நமக்குத் தெரியும். அப்படி அவரு சொன்னாருன்னா, சுய சரிதையில மாறுதல் செய்யலாமா?”
“சுயசரிதை வடிவத்துல நான் அதை எழுதல்லியே, மேடம்! ஒரு கற்பனை நாவல் மாதிரிதானே எழுதியிருக்கேன்? அது அப்படியே இருந்துட்டுப் போகட்டுமே! ஆனா, உங்களுக்கு ஒரு ஆவல் இருக்கும். அவரு கிட்ட கேட்டுத் தெரிஞ்சுக்குங்க. அப்படியே, அது என்னன்றதையும் – உங்களுக்கு ஆட்சேபணை இல்லாட்டி – எனக்கும் சொல்லுங்க!” – நான் சிரித்தேன்.
.. .. .. சுமார் பதினொரு மணிக்கு மாலதி சிவகுருவை அவருடைய பேத்தியுடன் அழைத்துக்கொண்டு வந்தாள். பிறகு போய்விட்டாள். என்னைப் பார்த்ததுமே அவர் முகத்துச் சதைகள் அதிர்ந்து கண்களில் ஒரு மிரட்சியும் தோன்றியது. பார்த்து ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டாலும், அவர் கிழடு தட்டிப் போய் மாறி யிருந்த அளவுக்கு – நானும் ஒரு கிழவியே யாயினும் – என்னிடம் மாற்றாங்கள் இல்லை என்பது எனக்கே தெரிந்தது. படு பயங்கரத் தாத்தாவாகி விட்டிருந்தார்.
“யெஸ்?” என்ற நான் அவரை அடையாளம் தெரிந்ததாய்க் காட்டிக்கொள்ளவில்லை. அவர் வரப் போவது முன் கூட்டித் தெரியவராது போயிருந்தால், நானும் வெளிப்படையாய் அதிர்ந்திருப்பேனோ என்னவோ!
“நீ.. நீ.. நீங்க.. .. துதுதுர்க்கா தானே?”
“ஆமா. நீங்க?”
“என்ன, துர்க்கா! என்னைத் தெரியலியா? நான்தான் சிவகுரு!”
“ஓ! நீங்களா! . .. அடையாளமே தெரியல்லே. ரொம்பவே மாறிப்போயிட்டேள்!”
“நீயும்தான்! .. நீநீநீ .. நீங்களும்தான். ஆனா அடையாளம் தெரிஞ்சுக்க முடியாத அளவுக்கு மாறல்லே.”
என்னை ‘நீங்க’ என்று மரியாதைப் பன்மையில் விளிக்க வேண்டாம் என்று நான் கூறவில்லை!
“மாலதி சொன்ன பொண்ணு இவதானா?”
“ஆமா. நீ.. நீ.. நீங்க போனதுக்கப்புறம், மர்கரெட்டும் பயந்துண்டு என்னை விட்டுட்டுப் போயிட்டா. நீங்க் தற்கொலை பண்ணிண்டிருந்திருப்பேள்னு அவளுக்கு ஒரே திகில். அதுல சிக்கிக்க அவ விரும்பல்லே. அதான் போயிட்டா.. .. ..”
நான் ஒன்றும் சொல்லாதிருந்தேன்.
“உன்னை.. .. உஉ உ.. உங்களை நிறைய நாள் தேடினேன். கிடைக்கல்லே. அதுக்கு அப்புறம் இன்னொரு கல்யாணம் பண்ணிண்டு ஊரோடவே இருக்கத் தொடங்கிட்டேன். என்னோட பிஸ்நெஸ் பார்ட்னர்ஸ் (business partners) என்னை ஏமாத்திட்டா. எக்கச் சக்க நஷ்டம். பணமெல்லாம் போயிடுத்து. அதனால கிராமத்துலேயே வெவசாயத்தைப் பாத்துண்டு இருக்கத் தொடங்கிட்டேன். நான் கல்யாணம் பண்ணிண்டவ பத்தே வருஷத்துல காலமாயிட்டா. மூணு பொண்ணுகள் பொறந்தா. மூணு பேருமே இப்ப உசிரோட இல்லே. மூத்தவளை, அவளுக்குக் கொழந்தை இல்லேங்கிறதுக்காக, அவ ஆம்படையான் தள்ளி வெச்சான். ரெண்டாவது பொண்ணுக்குப் புருஷன் செத்துப் போயிட்டான். அவளும் கடேசி வரையில அவளும் எங்கிட்டதான் இருந்தா.. மூணாவது பொண்ணையும் அவ புருஷன் தள்ளி வெச்சுட்டான். எவளோடவே தனிக்குடித்தனம் வெச்சிருக்கான். அவளோட பொண்ணுதான் இவ. காது கேக்காது. கொஞ்சம் இழுத்து இழுத்து மெதுவாத்தான் பேசுவ. ஒரு காலும் கொஞ்சம் ஊனம். நீட்டி நீட்டித்தான் நடப்ப. அவ கர்ப்பத்துல இருந்தப்ப அப்பன்காரன் அதைக் கலைக்கிறதுக்கு எதையோ மருந்தை எம் பொண்ணுக்கு அவளுக்குத் தெரியாமயே குடுத்திருந்திருக்கான். அதிலதான் இப்பிடி ஆயிடுத்து. செவிட்டுக் காதை வெச்சிண்டு இவ என்னத்தைப் படிக்கிறது? எப்படியோ, இழுத்துக்கோ பறிச்சுக்கோன்னு பாஸ் மார்க் வாங்கிப் பத்தாவது தாண்டிட்டா ஒரு வழியா. இதுக்கு மேல படிப்பு ஏறாது இவளுக்கு. மதுரைக்குப் போயிருந்தப்ப மிஸஸ் மாலதியைச் சந்திச்சேன். அவதான் இந்த ஹோம் பத்திச் சொன்னா. ஆனா அதை நடத்தறது நீதான்னு இன்னை வரைக்கும் தெரியாது.. .. ..”
மிக இயல்பாய ஒருமையில் விளிக்கத் தொடங்கிவிட்ட அவரை நான் ஒரு பார்வை பார்த்தேன் அவரது தலை உடனே தாழ்ந்துகொண்டது.
நான் இயல்பில் அகம்பாவக்காரி யல்லேன். ‘ஆனாலும், படித்து, நாகரிகங்கள் கற்று, மாதர் அமைப்புகள் சிலவற்றின் தலைவியாகவும், ஆதரவற்றோர் இல்லங்களின் தலைவியாகவும் இப்போது இருந்து வரும் இன்றைய துர்க்க்காவுக்குத் தன்னை ஒதுக்கிய – இன்னொருத்தியை வீட்டுக்கே கூட்டி வந்து கொட்டமடித்த – ஆணவக்கார ஆண்பிள்ளையைப் பார்த்ததும் அவளுள் உறங்கிக்கொண்டிருந்த ஒரு சின்ன ஆணவம் சிலிர்த்துக்கொண்டு எழுந்து நின்றது!’ – ஆமாம். ஒரு சுய அலசலில் எனக்கு அப்படித்தான் தோன்றியது.
நான் எய்த பார்வையின் பொருள் இன்றைய மாறுபட்ட துர்க்காவை அவருக்குப் புரியச் செய்திருந்திருக்க வேண்டும். தொண்டையைக் கனைத்துக்கொண்ட பின், “எனக்கு உங்களை நேருக்கு நேராப் பாக்கிறதுக்கே வெக்கமாயிருக்கு. எல்லாம் சின்ன வயசுத் திமிர். ஒடம்பில இருக்கிற ரத்தம் சுண்டிப் போனதுக்கு அப்புறந்தான் மனுஷாளுக்கு ஞானம் வருது! .. .. அது சரி, நீங்க எப்பிடி இங்க வந்து சேந்தேள் – இந்த அளவுக்கு முன்னேறினேள்ங்கிறதை யெல்லாம் நான் தெரிஞ்சுக்கலாமா? .. .. சொல்லலாம்னா சொல்லுங்கோ!”
இன்றளவும் அன்றைய நிகழ்ச்சியை நான் அன்றாடம் நினைத்துக் குமுறாமல் இருந்ததே இல்லை. சொன்னேன். சொல்லி முடித்துவிட்டு, “என்னோட நல்ல காலம் – முத்துலட்சுமி சிஸ்டர் கையில நான் ஆப்புட்டேன். .. .. இல்லேன்னா நான் என்னிக்கோ செத்திருப்பேன். நான் அன்னிக்கு இருந்த மன நெலையில நான் வேற என்ன முடிவுக்கு வந்திருக்க முடியும்? சொல்லுங்கோ!” என்று கேட்டுப் புன்னகை புரிந்தேன்.
என் கண்களை அவரால் சந்திக்கவே முடியவில்லை. ச்¢ல இறுக்கமான கணங்கள் மவுனத்தில் கழிந்த பின்னார், அவர் கம்மிப் போயிருந்த குரலில் தொடர்ந்தார்: “நான் பண்ணின காரியத்துக்கு எனக்கு ஏழேழு ஜென்மத்துக்கும் மன்னிப்பே கிடையாது. இருந்தாலும், கேக்கறேன் – என்னைப் பெரிய மனசு பண்ணி மன்னிச்சுடுங்கோ! நீங்க மீட்டிங்ல பேசினதை யெல்லாம் நான் தங்கி யிருக்கிற வீட்டுப் பொண்ணு ரெகார்ட் பண்ணி எடுத்துண்டு வந்து போட்டுக் காமிச்சா. எல்லாத்தையும் கேட்டேன். உங்க பேச்சில பறந்து சூடு ரொம்பவே நியாயந்தான். காலங்கடந்து என் மனசு இப்ப மாறியிருக்கிறதுனால எந்தப் பிரயோசனமும் இல்லேதான். மத்தவாளாவது – என்னை மாதிரி இல்லாம – காலா காலத்துல தப்பை உணர்ந்து திருந்தினா – ஏன்? தப்பே செய்யாமயே இருந்தாலும் கூடத்தான் – மனுஷாளோட வாழ்க்கை ஒரு சொர்க்கலோகமா மாறிடும்!.. .. .. ‘மகா பாரதம்’ ங்கிற பத்திரிகையை நடத்தறது நீங்கதான்னு தெரியாமயே நான் ரொம்ப நாளா அதைப் படிச்சுண்டு வறேன். அதுல வர்ற கட்டுரைகளைப் படிக்கிறப்ப ஆரம்பத்துல எனக்கும் நீங்க ஆம்பளைகளை ரொம்பவுந்தான் மட்டந்தட்டி எழுதறேள்னு நெனச்சுக் கோவம் கோவமா வரும். ஆனா, வயசாக வயசாக – என் பொண்ணுகள் வாழ்க்கை சீரழிஞ்சு போனதுக்கு அப்புறம் – அதுவு மில்லாம, இன்வெஸ்டிகேடிவ் ஜர்னல்ஸ்ல பெண்கள் பட்ற பாட்டைப் பத்தி வர்ற உன்மைச் சம்பவங்கள் பத்தியும் தெரிஞ்சுண்டதுக்குப் பிற்பாடு – நீங்களும் உண்மையைத்தானே சொல்றேள்னு எனக்குத் தோண ஆரம்பிச்சுடுத்து.. .. “
“சரி. இப்ப நான் உங்களுக்கு என்ன செய்யணும்? அதைச் சொல்லுங்கோ.”
“இந்தப் பொண்ணுக்கு நீங்கதான் ஒரு நல்ல வழி காட்டணும். இவளுக்குக் கல்யாணம்னு ஒண்ணு ஆறதுக்கெல்லாம் சான்ஸே இல்லே. காது செவிடு. கால் வேற ஊனம். இழுத்து இழுத்து வேற பேசறா.. .. அதனால .. .. இந்த ஹோமுக்கு என்னால இப்ப சத்தியா இருபத்தஞ்சாயிரம் நன்கொடை குடுக்க முடியும். ஆனா, ஆயுசு பரியந்தம் நீங்க இவளை இங்கே வெச்சுக் காப்பாத்தறதுக்கு அந்தத் தொகை ரொம்பக் கொறைச்சல்தான். . .. இருந்தாலும் .. ..”
“சரி. நீங்க இவளை இங்கே விட்டுட்டுப் போகலாம்.. .. ..”
‘ரொம்ப தேங்க்ஸ். நாளைக்கு இங்கே இவளைச் சேர்த்துட்றேன். என்னோட பெரிய சுமையை எறக்கி வெச்சுட்டேள். கிராமத்துக்குப் போய்த் தனியா உக்காந்துண்டு மிச்ச வாழ்க்கையைக் கழிக்கணும் நான்.. ..” என்று அலுப்புடன் கூறியவாறே சிவகுரு ஆழமாக என்னை ஒரு பார்வை பார்த்தார். ‘நானும் இங்கேயே ஒரு ஓரமா இருந்துட்டுப் போயிட்றேனே!’ என்று அந்தப் பார்வை கெஞ்சியது.
“முதியோர் இல்லம் ஒண்ணை என்னோட சிநேகிதி ஒருத்தி நடத்தறா. அவாளுக்கு ஒரு லெட்டர் தறேன். அங்க போய்ச் சேந்துடுங்கோ!”
சிவகுரு, எச்சில் விழுங்கினார். ஏதோ சொல்ல வந்து அடக்கிக்கொண்டது புரிந்தது. சொற்களை அவர் சிரமப்பட்டு விழுங்கிக்கொண்டதில் தொண்டக் குமிழ் ஏறி இறங்கிற்று.
அப்போது தொலைபேசி கிணுகிணுக்க, என் செயலர்ப் பெண் பேசினாள் : “உங்களுக்கு ·போன்கால், சிஸ்டர்! யாரோ சுந்தரமாம்.. ..”
“சரி, குடு.”
சுந்தரம் என்பவர் பேசினார்: “ஹல்லோ, மேடம். உங்களோட கொஞ்சம் பேசணும். ஒரு அஞ்சு நிமிஷம் ஒதுக்க முடியுமா?”
“ஓ! முடியுமே! அது சரி, நீங்க யாரு?”
“என் பேரு சுந்தரம். வயசு இருபத்து ஏழு. வேலை வெட்டி இல்லாதவன். அதாவது பட்டதாரியா யிருந்தும் எந்த வேலையும் கிடைக்காதவன். .. பெண்களுக்காக ரொம்பவுந்தான் மாஞ்சு மாஞ்சு எழுதித் தள்றீங்க. பெண்கள்ளாம் ஆயிரக் கணக்குல படிச்சுட்டு வேலைக்கு எங்களோட போட்டிக்கு இப்பல்லாம் வர்றதால எங்களுக்கு வேலை கிடைக்க மாட்டேங்குது. அவங்கவங்க வேலையை மட்டுந்தான் அவங்கவங்க செய்யணும், மேடம்! இப்படி எங்களோட அவங்க போட்டி போட்றதால, நியாயப்படி எங்களுக்குக் கிடைக்க வேன்டிய வேலைகளை அவங்க தட்டிப் பறிச்சுக்குறாங்க. உத்தியோகம் புருஷ லட்சணம்கிறதுதான் பழமொழி!.. ..”
“அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்னு ரெண்டாங் கிளாஸ்லயே படிச்சோம். அது கூடப் பழமொழிதான். அதும்படிதான் நடக்கறோமா, மிஸ்டர் சுந்தரம்? முதியோர் இல்லத்துலதானே இப்பல்லாம் விட்டுட்டு இருக்கோம்? சரி. அத விடுங்க. இப்ப என்ன சொல்ல வர்றீங்க? பொண்ணுகளும் படிச்சுட்டு வேலைக்கு வர்றதால ஆம்பளைங்க உங்களுக் கெல்லாம் வேலை கிடைக்க மாட்டேங்குதுன்றீங்க. உத்தியோகம் புருஷ லட்சணம் மட்டுந்தான் – பொம்பளைங்க லட்சணம் இல்லே – அப்படிங்கறீங்க. அதானே?”
“கிண்டலாத்தானே கேக்கறீங்க?”
“ஆமாமா. கிண்டலாத்தான் கேக்கறேன், மிஸ்டர் சுந்தரம்! நீங்க சொன்ன பழமொழியை மாத்தி எழுத வேண்டிய காலம் வந்தாச்சுப்பா. இந்தக் காலத்துல எத்தனை குடும்பங்கள் பொண்ணுகள் சம்பாத்தியத்துல வயிறு வளத்துக்கிட்டு இருக்குன்னு உங்களுக்குத் தெரியுமா? மூத்த பொண்ணு சம்பாத்தியத்துல, அவளோட தம்பி, தங்கைகள்ளாம் படிக்கிறாங்க. பயனடையறாங்க. வரதட்சிணைக்குக் காசு சேக்கிறதுக்காகவும் பொண்ணுங்க சம்பாதிக்க வேண்டியிருக்கு. ஆக, அவ வேலைக்குப் போறதுக்கு வரதட்சிணை கேக்கிற ஆம்பளைங்களும் ஒரு காரணம்! அந்த அம்சத்தைப் பத்தி நீங்க யோசிச்சுப் பாத்ததுண்டா, மிஸ்டர் சுந்தரம்? அது மட்டுமா? இன்னைக்கு ஏழைக் குடும்பங்களும், நடுத்தரக் குடும்பங்களும் பெண் சிசுக் கொலை செய்யறாங்க. ஏன்? பொண்ணுன்னாலே செலவுன்னு ஆயிட்டதால. இதனோட விளைவு சில நூறு வருஷங் கழிச்சு என்ன வாகுனு யோசிச்சுப் பாத்திருக்கீங்களா? ஆண்களோட எண்ணிக்கை ரொம்ப அதிக மாயிடும். பொண்ணுகளோட எண்ணிக்கை ரொம்பவே குறைஞ்சுடும். அப்ப என்ன வாகும்? பொண்ணுகளுக்கு மவுசு அதிகமாயிடும். அப்ப? பொண்ணு வரதட்சிணை கேப்பா! ஆம்பளைங்க நீங்க குடுப்பீங்க! .. .. சரி. இப்ப இப்படிப் பேசற நீங்க, நாளைக்கே உங்களுக்கு ஒரு வேலை கிடைச்சதும், வீ¢ட்டுல கல்யாணத்துக்குப் பொண்ணு தேடுறப்ப, ‘வேலை பாக்குற பொண்ணா’த் தேடச் சொல்லுவீங்க. இல்லாட்டி, நீங்களே தேடிக்குவீங்க! சுயநலம்னு வந்ததும் உங்க இப்போதைய நியாயமும் சட்டமும் தலை கீழா மாறிடும், மிஸ்டர் சுந்தரம்!”
தொலைபேசியின் மறு முனை சில கணங்களுக்கு அமைதியானது.
“சரி. அதை விடுங்க.. .. பெண்கள்லே எத்தனையோ ராட்சசிங்க இருக்காங்க. உங்க பத்திரிகையில வர்ற கதைகள்லேயும் பெண்களை தேவதைகளாவும் ஆண்களை அரக்கர்களாவுமே சித்திரிக்கிறாங்க. ஆண்கள் கண்ணு0ல விரலை விட்டு ஆட்டுற எத்தனை ராட்சசிங்க இருக்காங்க, தெரியுமா?”
“தெரியும், மிஸ்டர் சுந்தரம். நல்லாவே தெரியும். ஆனா ஒண்ணை நீங்க கவனிக்கணும். பெண்கள்லே ராட்சசிங்க சிறுபான்மை. ஆண்கள்லே ராட்சசங்க பெரும்பான்மை! இந்த அடிப்படை வித்தியாசத்தை மறக்காதீங்க. விதிவிலக்கான ஆண்-பெண்களைப் பத்தியும் எழுதணும்தான். அப்படியும் நாங்க கதைகளை வெளியிட்றோமே?”
“வெளியிட்றீங்கதான். ஆனா ரொம்ப அபூர்வமாத்தான்!”
“ஏன்னா, அப்படிப்பட்ட நல்ல ஆம்பளைங்க அபூர்வமா யிருக்கிறதால!.. மிஸ்டர் சுந்தரம்! எங்க மேல கோவப்படாம நிதானமா யோசிச்சுப் பாருங்க. . ஒண்ணும் மட்டும் சொல்றேன். ஒருக்கா, ஆம்பளைங்களை யெல்லாம் பொண்ணுங்க அடிமைப் படுத்திக் கொடுமையும் படுத்துற காலம் ஒண்ணு வந்தா – அது என் காலம் முடியறதுக்குள்ள வரவே போறதில்லே – ஏன்னா நம்ம நாட்டுப் பொண்ணுகள்லாம் மொத்தத்துல நல்லவங்க.. அப்படியே வந்துட்டாலும், என்னோட பேனா பெண்களைக் கண்டிச்சும், ஆண்களுக்கு ஆதரவாவும் எழுதும்! எனக்கு வேண்டியதெல்லாம் நியாயம், நியாயம், நியாயம்! அது மட்டுமே! சரி, அதை விடுங்க. இப்ப உங்க விஷயத்துக்கு வறேன்.. .. உங்க படிப்பு விவரம், விலாசம் – அதாவது உங்க பயோ-டேட்டா (bio-data) – இதையெல்லாம் எனக்கு உடனே அனுப்பி வையுங்க. உங்களுக்கு ஒரு வேலை கிடைக்க நான் முயற்சி பண்றேன்.. .. .. ஆனா, கட்டாயம் வாங்கித் தருவேன்னெல்லாம் என்னால வாக்குறுதி எதுவும் தர முடியாதுப்பா!”
“.. .. .. மே..மே..மேடம்!”
“சொல்லுங்க.”
“நான் யாருன்னு தெரிஞ்சா எனக்கு உதவி செய்ய மாட்டீங்க!”
“நீங்க யாராயிருந்தாலும் உங்களுக்கு ஒரு வேலை கிடைக்க முயற்சி செய்வேன், மிஸ்டர் சுந்தரம்!”
“நேத்து கூட்டத்துலே உங்க மேல குறி வெச்சுக் கல்லை எறிஞ்சு காயப் படுத்தினது நான்தான்!”
கணம் போல் எனக்குத் திக்கென்றுதான் ஆயிற்று. இருப்பினும் சமாளித்துக்கொண்டு வாய்விட்டே சிரித்தேன் .
“பரவால்லே. உங்களுக்குக் குறி பாத்து அடிக்கிற திறமை இருக்கு. கரெக்டா என் மேல கல்லு விழும்படியா குறி தவறாம வீசி யிருக்கீங்க. அந்தத் திறமைக்கு ஏத்த மாதிரியான வேலையாக் கூட நான் உங்களுக்குத் தேடிக் குடுக்க முடியும்னு நெனைக்கிறேன்! பாக்கலாம். நேர்ல வந்து என்னைப் பாருங்க, மிஸ்டர் சுந்தரம். நான் உங்களை வரவழைச்சுப் போலீஸ்ல மாட்டி வெச்சுடுவேனோன்ற பயமெல்லாம் உங்களுக்கு வேண்டாம். நான் நடத்தற ‘மகா பாரதம்’ பத்திரிகை மேல ஆணையா இதைச் சொல்றேன்.. .. அப்புறம் இன்னொண்ணு.. .. இந்த வாரத்து ‘இண்டியன் எக்ஸ்ப்ரெஸ் சப்ளிமென்ட்’லே ஒரு கட்டுரை வந்திருக்கு. ‘ப்ரௌலிங் அரவ்ண்ட் வித் இம்ப்யூனிட்டி’ (Prowling around with impunity) ன்ற தலைப்பில ஒரு ஆர்ட்டிகிள் (article). தயவு பண்ணி அதைப் படிங்க. பதவியில இருக்கிற சில அரசியல்வாதிகளோட படு மட்டமான நடத்தை பத்தியும் அதுல வந்திருக்கு. நேத்தைய கூட்டத்துல அதைப்பத்தி யெல்லாம் விலாவாரியாப் பேசறதுக்கு என் நாக்கு கூசித்து. அதான் சொல்லல்லே. அதைப் படிச்சீங்கன்னா எங்க கோவம் சரியா, தப்பான்னு உங்களுக்குப் புரியும்.. .. சரி. அப்ப என்னிக்கு வர்றீங்க?”
“ நிஜமாவே என்மேல உங்களுக்குக் கோவம் இல்லியா, மேடம்?”
“.. .. .. இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்!”
“அப்ப, ஆம்பலைங்களை மட்டும் ஏன் மேடம் தாக்கு தாக்குன்னு தாக்குறீங்க? அவங்கல்லாம் நாணும்படியா நன்னயம் செய்யலாமில்ல?”
“இத்தனை வருஷங்களா பொம்பளைங்க அதைத்தானே செய்துட்டு வர்றாங்க! எத்தனை ஆயிரமாயிரம் ஆண்டுகளாப் பொறுமையா இருந்துட்டிருக்குறாங்க! ஆனா அவங்களுக்குச் சூடு சொரணையோ நாணமோ வரல்லியே! .. .. விட்டா, வெள்ளைக்காரனைக் கூட, அவனுக்கு நாணம் வர்ற வரைக்கும், தொடர்ந்து ஆளா வ்¢ட்டிருக்கணும்னுவீங்க போல!”
சுந்தரம் சிரித்தான்: “அப்ப, கூடிய சீக்கிரம் – அதாவது உங்களைத் தலை நிமிர்ந்து பாக்குறதுக்கான தைரியம் என்னைக்கு வருதோ அன்னைக்கு – உங்களைச் சந்திக்கிறேன், மேடம்!”
“இப்பவே வாங்கப்பா! என் மேல கல்லு வீசி எறிஞ்சப்ப எவ்வளவு தைரியத்தோட இருந்தீங்களோ, அதே தைரியத்தோட வாங்க!”
“இல்லீங்க, மேடம். எனக்கு அசிங்கமா யிருக்கு. நான் இன்னொரு நாள் அப்புறமா வர்றேன்.”
“உங்க இஷ்டம்!” – ஒலிவாங்கியை வைத்துவிட்டு நிமிர்ந்தேன்.
என் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த சிவகுருவின் கண்களில் குற்ற, அவமான உணர்வுகள் துல்லியமாய்த் தெரிந்தன.
“முதியோர் இல்லத்துக்கு சிபாரிசு லெட்டர் தறேன்னேள்.”
“இதோ. ஒரு நிமிஷம்.”
தொலைபேசியின் முரலை (buzzer) நான் அழுத்தி நீண்ட ஒலி எழுப்பியதும் என் செயலர் வந்தாள். அவளிடம் ஒரு சிபாரிசுக் கடிதத்தை வாய்மொழிந்த பின், “உங்க பேத்திக்கு மொதல்ல ஒரு க்ளெர்க்குக்கு (clerk) உதவியாளர் வேலை தறேன். போகப் போக, அவளோட திறமை எந்த அளவுக்கு இருக்குன்றது வெளிப்பட்ட பிற்பாடு, அவளுக்கு ஏத்த மாதிரியான ஒரு வேலையில அமர்த்திக்கிறேன். பெரிசா சம்பளமெல்லாம் எதிர்பார்க்க வேண்டாம். சாப்பாடு, இருக்க இடம், துணிமணிகள் தருவோம். கடைசி வரையில பாதுகாப்பா இங்கேயே இருந்துக்கலாம். திறமைகள் இருந்தா வளர்த்துக்கலாம். அதோட அடிப்படையில உபரியாச் சில கைத் தொழில்கள் இங்கேயே செஞ்சு சம்பாதிக்கலாம். அது அவளோட பணம். “
“இது போறும். கொள்ளையோ கொள்ளை. இது மாதிரி யாரு சொல்லப் போறா! தேங்க் யூ வெரி மச்! .. .. ..”
“அதெல்லாம் ஒண்ணும் சொல்ல வேண்டாம். நான் ஒண்ணும் பெரிசா எதுவும் செஞ்சுடல்லே. யாரு வந்தாலும் செய்யற உதவிதான்… .. “
சிவகுரு எதிரே கண்களின் கலக்கத்துடன் அமர்ந்திருக்க, நான் கோப்புகளில் கையெழுத்துப் போடத் தொடங்கினேன். ஐந்து நிமிடங்கள் கழிந்ததும் என் செயலர் என அறைக்கு வந்து எனது சிபாரிசுக் கடிதத்தில் என் கையெழுத்தைப் பெற்றுக்கொண்டாள். அவளை அனுப்பிவிட்டு நான் அதை அவர் புறம் நகர்த்தினேன். சற்றே அதிர்ந்த விரல்களால் அதைப் பற்றி எடுத்துத் தம் கைப் பையில் பத்திரப்படுத்திக்கொண்டார்ர். பின்னர் எழுந்தார். கை கூப்பினார். நானும் எழுந்து நின்று, கை கூப்பி, “சரி!” என்று விடை கொடுத்தேன். பேத்தியுடன் நடந்தார்.
தளர்ந்த நடையில் கதவு நோக்கிச் சென்றவர், அது தானியங்கிக் கதவுதானென்றாலும், தேவையற்றுத் திரும்பி நின்று அதைச் சாத்துகிற முயற்சியில் போல் அதில் கை பதித்தவாறு ஆழமாக என்னை நோக்கினார். தலையை உயர்த்திப் பாராமலேயே அவர் என்னைப் பார்த்தது எனக்குத் தெரிந்தது. தலையை உயர்த்தி நான் அவரது பார்வையைச் சந்திக்கவில்லை. அவர் சென்று, கதவும் சாத்திக்கொண்ட பின்னர், கதவை வெறித்தேன்.
எத்தனை ஆண்டுகளுக்குப் பிறகான சந்திப்பு அது! மூன்று ஆண்டுகள் அவருக்கு மனைவியாய் வாழ்ந்த ஞாபகமே அருவருப்பைத் தந்தது. அந்த மனிதரைப் பிரிந்ததால் நான் எதையும் இழந்துவிடவில்லை என்று தோன்றியது. மாறாக, சில நல்ல சாதனைகளைப் புரிய முடிந்துள்ளது. அவரைப் பிரிந்த நிகழ்வால்தான் அது சாத்திய மாயிற்று! ஆண்டவன் என்னை வேறொரு நல்ல நோக்கத்துக்காகப் படைத்திருக்கையில், மண வாழ்க்கை நல்ல முறையில் எனக்கு எப்படி வாய்க்கும் என்றெண்ணிச் சிரித்தேன்!
வாழ்க்கையில் ஒரு கட்டத்தில் நிகழும் ஓர் ஏமாற்றம் பின்னாளில் அதன் பிறிதொரு கட்டத்தில் மாபெரும் வெற்றியின் அறிகுறியாகவும், அதன் முதல் படியாகவும் ஆகிவிடுகிறது!
மாலதி எட்டிப் பார்த்தாள்.
“என்ன, மேடம்? மிஸ்டர் சிவகுருவும் நீங்களும் என்ன பேசினீங்கன்றதைச் சொன்னா, நாவலோட கடைசி அத்தியாயமா அதை எழுதிடுவேன்!”
இவ்வாறு சொல்லிவிட்டு மாலதி புன்னகை செய்தாள். நானும் சிரித்துவிட்டு எல்லாவற்றையும் அவளிடம் சொன்னேன். சொல்லிவிட்டு, “அந்த மார்கரெட் விவகாரம் பத்தி நீ கற்பனையா எழுதினது அப்படியே இருக்கட்டும். அவர் சொன்னதை எழுதிக் கதையை இப்ப மாத்தினா சுவாரசியம் கெட்டுடும். சரியா?”
அப்போது தொலைபேசியின் முரல் ஒலித்தது. எடுத்தேன்.
“மேடம்! நான் அசிஸ்டன்ட் எடிட்டர் (Assitant Editor) சக்திவேல் பேசறேன். நம்ம மகா பாரதம் ஆ·பீசைச் சுத்தி ஒரே ரவுடிக் கும்பல். நீங்க நேத்து ஒரு மினிஸ்டரோட நடத்தை பத்தி மாதர் மாநாட்டுக் கூட்டத்தில பேசினீங்கல்ல?. அதுக்காக நீங்க நேர்ல வந்து மன்னிப்புக் கேக்கணுமாம்! இல்லாட்டி நம்ம ஆ·பீசை அடிச்சு நொறுக்கிடுவாங்களாம்! .. .. ..”
“சரி. நீங்க வெச்சுடுங்க. நான் வறேன்னு சொல்லுங்க.”
நல்ல வேளையாக இப்போது பதவியில் இருக்கும் காவல்துறை ஆணையாளர் நேர்மையானவர். புதிதாக மாற்றலாகி வந்துள்ளவர். அமைச்சர்களுக்கே அவர் என்றால் சிம்ம சொப்பனம் என்று சொல்லுவார்கள். அவரோடு தொலைபேசினேன்.
“கவலையே படாதீங்க, மேடம்! துப்பாக்கியைக் காட்டினா குருவிக்கூட்டம் மாதிரி கலைஞ்சு பறந்துடுவாங்க! இதோ, இப்பவே ஆளுங்களோட கெளம்பறேன். நீங்க அந்த எடத்துக்கெல்லாம் போகாதீங்க. நான் போயிட்டு வந்து உங்களோட பேசறேன்!” என்றார் சியாமசுந்தர்லால் நட்கர்னி.
நான் கவலையுடன் நாற்காலி முதுகில் சாய்ந்துகொண்டு காவல்துறை ஆணையரின் தொலைபேசி அழைப்புக்குக் காத்திருக்கலானேன்.
/ முடிந்தது /
jothigirija@vsnl.net

Series Navigation

ஜோதிர்லதா கிரிஜா

ஜோதிர்லதா கிரிஜா

மறுபடியும் ஒரு மகா பாரதம் – அத்தியாயம் – 33

This entry is part [part not set] of 36 in the series 20060811_Issue

ஜோதிர்லதா கிரிஜா


கூட்டத்தினரை நோக்கிக் கையமர்த்தி அவர்களது ஆரவாரத்தைத் தடுத்த பின், துர்க்கா தொடர்ந்தாள்: “கொஞ்ச நாள்களாக ‘தலித்’ எனும் சொல் இலக்கிய உலகிலும் கலை உலகிலும் கூட அடிபடுகிறது. ‘தலித்’ என்பது முன்னர் நாம் அரிஜனங்கள் என்று கூறிவந்தவர்களை விடவும் அதிக அளவில் தாழ்த்தப்பட்டவர்களைக் குறிக்கும் சொல்லாகும். ‘தலித்’ என்னும் இந்திச் சொல்லுக்கு, ‘மிதிக்கப்பட்ட, நசக்கப்பட்ட, நாசமாக்கப்பட்ட’ என்றெல்லாம் பொருள்கள் உண்டு. மிதிக்கப்பட்டு, நசுக்கப்பட்டு, நாசமும் ஆக்கப்பட்ட மனிதர்கள் யாராயினும் அவர்கள் தலித் மக்களே! இந்த அளவுகோலின்படிப் பார்த்தால், பெண்ணினம் முழுவதுமே ‘தலித்’ எனும் தலைப்பின் கீழ் வருகிறது! காலங்காலமாக அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு, ஆண்களால் மிதிக்கப்பட்டும், நசுக்கப்பட்டும், நாசமாக்கப்பட்டும் வந்துள்ள இவர்கள் ‘தலித்’ மக்கள் அல்லரெனில், வேறு யாரை அப்பெயரால் அழைப்பது!

“ஆனால், ஒட்டுமொத்தமாக நசுக்கப்பட்ட சில இனத்தாரை மட்டுமே ‘தலித்’ என்கிறார்கள். இவர்களில் ஆண், பெண் ஆகிய இருபாலரும் அடக்கம். இதை நாங்கள் மறுக்கவில்லை. எனினும், தலித்துகள் என்று முத்திரை குத்தப்பட்ட இனத்தவர்களிலும் கூட, அவ்வினத்தவரி பெண் இனத்தினர் ஆண் தலித்துகளால் நசுக்கப்பட்டு வந்துள்ளவர்களே! இதைப் பார்க்கும் போது, பெண் தலித்துகள் ஆண் தலித்துகளை விடவும் கேடுகெட்டு நாசமானவர்கள் என்பது தெளிவாகிறது! ஆண்கள், எவ்வினத்தவராயினும், பெண்களை நசுக்குபவர்களே என்றும் ஆகிறது. இன்னும் தெளிவாய்ச் சொல்ல வேண்டுமானால், தாங்கள் நசுக்கப்படுவதற்கு எதிராய்க் குரல் கொடுத்தபடியே, ஆண் தலித்துகள் தங்களைச் சார்ந்துள்ள பெண் தலித்துகளை நசுக்கிக்கொண்டிருக்கிறார்கள்! ஆகவே, இந்தக் கூட்டம் பெண்கள் இனத்தையே ஒட்டுமொத்தமாக தலித்துகள் என்று அறிவித்து அவர்களுக்குத் தனிப்பட்ட சலுகைகளை வழங்க வேண்டும் என்கிற கோரிக்கையை அரசின் முன் வைக்கிறது.. .. ..”

பெண்கள் மறுபடியும் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள்.

“நாங்கள் சென்னையில் சில மகள்¢ர் இல்லங்களை நடத்தி வருகிறோம். இவற்றில் உள்ள பெண்களில் பெரும்பாலோர் கணவனால் தள்ளிவைக்கப்பட்டவர்கள். கேட்கும் போதெல்லாம் பிறந்த வீட்டிலிருந்து பெருந்தொகையையோ அல்லது விலை உயர்ந்த பொருள்களையோ கொண்டுவந்து கொடுக்கவில்லை எனும் காரணத்துக்காகக் கொடுமைப்படுத்தப் பட்டவர்கள்தான் இவர்களில் ஒரு சாரார். மேலும் சிலர், பெற்றோரால், ‘நீ இருக்க வேண்டிய இடம் கணவனின் வீடுதான்’ என்று அறிவுரை சொல்லப்பட்டுக் கட்டாயமாய்த் திருப்பியனுப்பி வைக்கப்பட்டவர்கள். அவர்களுடைய வாதம் இன்னதென்பதைப் பெற்றோர் காது கொடுத்துக் கேட்கக் கூடப் பெரும்பாலும் தயாராயிருப்பதில்லை. இந்தப் பெண்களில் சிலர், புகுந்த வீட்டுக்குப் போகாமல், துணிந்து இங்கு வந்து சேர்ந்தவர்கள். குற்றம் இழைத்த பல கணவன்மார்கள், புகுந்த வீட்டார் ஆகியோர் மீது நாங்கள் வழக்குப் போட்டுப் பெரும்பாலானவற்றில் வெற்றியும் பெற்றுள்ளோம். குற்றவாளிகளுக்குத் தண்டனையும் பெற்றுத் தந்துள்ளோம். எனினும் பல வழக்குகள், அவர்களுக்கு உள்ள செல்வாக்கால், இழுத்தடிக்கப்பட்டு வருகின்றன. .. .. இதற்கும் காவல்துறையே பொறுப்பேற்க வேண்டும்.. ..”

முன்வரிசையில் உட்கார்ந்திருந்த காவல்துறை ஆணையர் மீண்டும் ஒரு முறை அசட்டுக் களையுடன் நெளிந்தார்.

“.. .. பெண் சமீப காலமாய் ஆணுக்கு நிகராய் வெளியே வந்து சம்பாதிக்கத் தொடங்கி யிருக்கிறாள். இப்போது நான் குறிப்பிட்டது படித்துவிட்டு வேலைக்கு வரும் பெண்களைப் பற்றி. ஆனால், காலங்காலமாகவே, கீழ் மட்டத்து ஏழைப் பெண்கள் ஆணுக்கு நிகராய் வெளியே சென்று வேலை செய்து சம்பாதித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். வயலில் நாற்று நடும் பெண்கள் அருகிலேயே உள்ள மரங்களின் கிளைகளில் தூளிகள் கட்டிக் குழந்தைகளை அவற்றில் விட்டு விட்டு ஆண்களுடன் வயலில் இறங்கி வேலை செய்கிறார்கள். இன்னும் சில துறைகளிலும் அப்படியே. இதனால், பெண்களின் வேலைச் சுமை ஆண்களுடையதைக் காட்டிலும் மிக அதிகமாக உள்ளது. ஆண்களில் நூற்றுக்குத் தொண்ணூறொன்பது பேர் வீட்டு வேலைகளில் பெண்களுக்கு உதவுவதே கிடையாது. வெளி வேலையில் ஆணும் பெண்ணும் சம அளவிலான உடலுழைப்பில் ஈடுபடும் நிலையிலும், வீடு திரும்பியதும் பெண்ணே வீட்டு வேலைகள் எல்லாவற்றையும் செய்ய வேண்டுமென்பதும், ஆண் மட்டும் ஹாய்யாகப் படுத்துக்கொண்டு ஓய்வு எடுத்துக்கொள்ளும் உரிமை யுள்ளவன் என்பதும் என்ன நியாயம்? சொல்லுங்கள், சகோதரர்களே! யோசியுங்கள் அருமைச் சகோதரர்களே! காலங்காலமாகப் பெண்ணை இவ்வாறு நடத்தியே பழக்கப்பட்டுள்ளதால் இப்படி ஒரு தகாத குணம் உங்கள் இரத்தத்தில் ஊறிக் கிடக்கிறது. எனினும் கொஞ்சமேனும் சிந்தித்தால் அது அநியாயம் என்பதைப் புரிந்துகொள்ளுவீர்கள். . ..

“.. இந்தியாவின் சுதந்தரப் பொன்விழாவுக்கு இன்னும் இரண்டே ஆண்டுகள்தான் உள்ளன. இன்னும் ராஜஸ்தான் மாநிலத்தில் பெண்களை மரித்த கணவனுடன் ‘உடன்கட்டை’ ஏற்றுகிற பழக்கம் போகவில்லை என்று ராஜஸ்தான் பெண்ணியக்கத் தலைவி சொன்னதைக் கேட்டீர்கள். இவற்றையெல்லாம் கண்டும் காணாதிருப்பதோடு. அவற்றை நாம் சுட்டிக்காட்டுகையில், அவற்றுக்கு மதவாதிகள் சப்பபைகட்டுக் கட்டுவதும், சாஸ்திரங்களின் இடைச்செருகல்களுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு தப்பான விளக்கம் அளிப்பதும்தான் கொடுமையிலும் கொடுமை! .. .. எனக்கு முன் பேசிய பல தலைவியரும் சுட்டிக்காட்டிய குறைகளையெல்லாம் களைவதற்கும், பெண்களும் ஆண்களைப் போன்றே மனிதர்களே என்பதை ஆண்களுக்குப் புரிய வைப்பதற்கும் எங்கள் மகளிர் அமைப்புகள் தொடர்ந்து பணிபுரியும். அதனால்தான் எங்கள் இயக்கத்திலுள்ள ஆண்களுக்கெல்லாம் முன்னோடியாகத் திகழும் என் தந்தையாரை யத்த திரு சாமிநாதன் தாம் தொடங்கிய பத்திரிகைக்கு – ‘திரௌபதியின் போராட்டம் இன்னும் தொடர்கிறது’ என்கிற பொருளில் – ‘மகாபாரதம்’ என்று பெயரிட்டார். .. .. இனி, கேள்வி நேரம். கூட்டத்தினர் கேள்விகள் கேட்கலாம்.. .. .. இது ஒரு கலந்துரையாடல் போல் நடை பெறும்.. ..”

ஓர் இளைஞன் எழுந்து நின்று சம்மதம் பெற்று ஒலிபெருக்கிக்கு முன் வந்து நின்றான்: “வரதட்சிணை எனும் அசிங்கத்தை மாமியார் எனும் பெண் செய்வதற்கு ‘ஆண் தான் உயர்ந்தவன்’ என்பதாய் அவளை நம்பச்செய்த ஆணின் சதியே காரணம் என்றீர்கள். அப்படியே இருக்கட்டும். ஆனால், மருமகள்களை மாமியார்கள் மண்ணெண்ணெய் ஊற்றி எரிக்கிறார்களே! அதன் அடிப்படை என்ன? பெண்கள் இயல்பாகவே பொறாமை பிடித்தவர்கள் என்பதை ஒப்புக்கொள்ளுகிறீர்கள்தானே? இல்லாவிட்டால், அதற்கும் ஆண்கள் மேல் பழி போடுவீர்களா!”

“உங்கள் ஆத்திரத்தை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது, நண்பரே! ஒரு முக்கியமான விஷயத்தைக் கவனிக்கத் தவறியதால்தான் நீங்கள் இப்படி ஒரு கேள்வியைக் கேட்கிறீர்கள் என்று தோன்றுகிறது. அதாவது, மருமகள்கள் எரிக்கப்படுகிற வழக்குகளில், சம்பந்தப்பட்ட மாமியார்கள் அனைவருமே- நாம் விசாரித்து அறிந்த வரையில் – படிக்காத பெண்களாகவே இருந்துள்ளனர். ஆனால், அந்த மாமியார்களுடன் ஒத்துழைத்து இளம் பெண்களை -இன்னுமொரு பென்ணை மணக்கும் ஆசையில் – கொளுத்திய அவர்களுடைய மகன்களும், கணவன்மார்களும் – அதாவது மாமனார்களும் – பெரும்பாலும் படிததவர்களாகவே இருந்துள்ளனர். மாமனார் அரைகுறைப் படிப்பாளியாக இருந்தாலும், மாப்பிள்ளைகள் நல்ல படிப்புப் படித்தவர்களே. காவல் துறை சார்ந்த சிறு ஊழியர்கள் தொடங்கி துணைக் காவல் மேலாளர் வரை (D.S.P.) வரையிலும் உள்ள அலுவலர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள், வங்கிகளில் பணிபுரிபவர்கள், தபால், தொலைபேசித் துறை போன்ற மைய அரசு உயர் அதிகாரிகள் முதலானோர் வரையிலும் இக்கொலையாளிகளில் அடங்குவார்கள். எனவே, இதிலிருந்து என்ன தெரிகிறது? கல்வி ஆணைப் பண்படுத்துவதை விடவும் பெண்ணையே அதிகம் பண்படுத்துகிறது என்பதேயாகும்! ஏனெனில் மருமகளைக் கொலை செய்தவர்களில், நாம் ஏற்கெனவே கூறியபடி, படித்த மாமியார் ஒருவர் கூட இருந்ததில்லை. எனினும், நாங்கள் அறியாத விதிவிலக்குகள் இருக்கக்கூடும்.

“ .. .. அடுத்து, பெண்கள் பொறாமைக்காரிகள் என்பதை நான் ஒப்புக்கொள்ளுகிறேன். ஆனால், பெண்ணின் பொறாமைகள் அற்பமானவை. அதிகத் தீங்கு செய்யாதவை. இன்னொரு பெண்ணின் அழகின் மீது, அவள் அணியும் ஆபரணங்கள் மீது, தெரிந்தவர்களின் செல்வநிலை மீது, பிற பெண்களின் கணவன்மார்கள் தங்கள் கணவன்மாரை விடவும் அதிகம் சம்பாதிக்கும் நிலை மீது என்றெல்லாம் அவளுக்குப் பொறாமைகள் உண்டுதான். ஆனால் தன் கணவன் தன்னை விட அதிகம் படித்தவனாக இருப்பது பற்றியோ, அதிகம் சம்பாதிப்பது பற்றியோ அவளுக்குத் துளியும் பொறாமை கிடையாது. மாறாக அவள் அதில் பெருமையே கொள்ளுகிறாள். ஆனால், அருமை நண்பரே, ஆண்கள் அப்படியா! பெண்களின் உயர்வை அவர்கள் துளியும் சகிப்பதில்லை. தன் காதலி ஏதோ காரணங்களுக்காகக் கைநழுவிப் போய்விட்டால், அவள் கணவனையோ அல்லது அவளையேவோ கூடக் கொலை செய்கிற அளவுக்கு ஆண்கள் போகிறார்கள். பெண்கள்அப்படிச் செய்வதுண்டா? தன் மனைவி சோரம் போனால், அவளையும் அவள் கள்ளக் காதலனையும் அவள் கணவன் கொலை செய்கிற அளவுக்குப் போகிறான். அவள் சோரம் போவதை நான் சரி யென்று சொல்லுவதாக நினைக்காதீர்கள், நண்பர்களே!.. எத்தனை ஆண்கள் சின்னவீடு வைத்திருக்கிறீர்கள்! கள்ளக் காதலிகளை வைத்திருக்கிறீர்கள்! விஷயம் தெரியவரும் நிலையிலும் பெண் தன் கணவனைக் கொலையா செய்கிறாள்! இவற்றைக் குறிப்பிடுவதற்குக் காரணம் பொறாமை யாருக்கு அதிகம் என்பதைச் சுட்டிக் காட்டுவதற்காகத்தான்!”

“மணப்பெண், ‘வரதட்சிணை கேட்பவனை மணக்க மாட்டேன்’ என்று சொல்லலாமே! வாங்குபவர்கள் மட்டும்தான் குற்றவாளிகாளா? லஞ்சம் கொ¡டுப்பது குற்றம் எனபது போல், வரதட்சிணை கொடுப்பதும் குற்றந்தானே?””

“ஒப்புக்கொள்ளூகிறோம், சகோதரரே! மகாத்மா காந்தியும் அதைத்தான் சொன்னார். ஆனால் அந்த அளவுக்குப் போராடும் துணிச்சல் கொள்ளுகிற படியா நாம் பெண்களை வளர்க்கிறோம்? மீசையும் கிருதாவும் வைத்துக்கொள்ளும் ஆண்களுக்கே இல்லாத துணிச்சலைப் பெண்களிடம் எவ்வாறு எதிர்பார்க்கிறீர்கள்? திருமணத்தை ஒதுக்கி வாழப் பல பெண்கள் இதனால் முன்வந்தால், சமுதாயக் கோளாறுகள் நிறைய ஏற்படுமே! எத்தகைய கோளாறுகள் என்பதை எடுத்துச் சொல்ல நான் நிறைய நேரம் பேச வேண்டியதிருக்கும். எனவே, அது வேண்டாம். .. .. பெற்றோரின் கெடுபிடிகளைப் பெண்ணால் எப்படித் தாக்குப் பிடிக்க முடியும்? ஆண்களாலேயே முடியாத போது? எனினும் பெண்களும் முடிந்த வரை போராடத்தான் வேண்டும் என்பதே நமது நிலைப்பாடு. மொத்தத்தில், வரதட்சிணைப் பிரச்னையில் ஆண்களின் தப்பே அதிகம்!”

“வரதட்சிணை வாங்குவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அப்படி யிருக்க, ஏனிந்த ஆர்ப்பாட்டம்?”

“வரதட்சிணை வாங்காதவர்கள் யாரென்பதைக் கவனியுங்கள், நண்பரே! கவனித்தால், உங்கள் பிரமை நீங்கிவிடும். டாடா குடும்பத்தைச் சேர்ந்த மணமகன் பிர்லா குடும்பத்துப் பெண்ணை வரதட்சிணை இல்லாமல் மணப்பதில் எந்தப் பெருமையும் இல்லைதானே! ஆனால், வரதட்சிணை வாங்காமல் ஒரு பணக்காரன் ஏழைப்பெண்ணை ஏற்கிற திருமணம், ஒரு பணக்காரன் வரதட்சிணை வாங்காமல் ஒரு நடுத்தரக் குடும்பப் பெண்ணை ஏற்கிற திருமணம், ஓர் ஏழை இன்னோர் ஏழைப் பெண்ணை வரதட்சிணை கேட்காமல் செய்துகொள்ளும் திருமணம் ஆகியவை பற்றித்தான் நாம் பெருமையடித்துக்கொள்ள முடியும்! கொஞ்ச நாள்களுக்கு முன், ஓர் அரசியல் வார இதழ், ‘பொழுது விடிந்தால், பொழுது போனால், ரேடியோவும் தொலைக்காட்சியும் வரதட்சிணையைப் பற்றியே அறிவித்து அறுக்கின்றனவே! நாட்டில் வேறு பிரச்னைகளா இல்லை? இந்தச் சுண்டைக்காய் விஷயத்தை இந்த அரசு இப்படிப் பெரிது பண்ணுகிறதே! முதலாவது, இது ஒரு பிரச்னையா என்ன!’ என்று பெட்டிச்செய்தியாக வெளியிட்டு நக்கலடித்திருந்தது. ஆனால், ஒன்று சொல்லுகிறேன், சகோதரர்களே! வரதட்சிணை ஒழியாவிட்டால், நாட்டில் பால்ரீதியான குற்றங்கள், தவறுகள், தகாத உறவுகள் ஆகினவை மிகும்! பாலுறவு விஷயங்களில் நேர்மையான விதிகளைக் கடைப்பிடிக்கத் தவறுகிற மனிதக் கூட்டத்தால் ரவுடிகள் பெருமளவு உற்பத்தியாவார்கள்! கொலைகள் மிகும்! இதுதான் விளைவா யிருக்கும்.. .. ..இதை மட்டும் விவாதிக்க ஒரு தனிக் கருத்தரங்கே தேவையாயிருக்கும். இது பற்றிப் பிறகு பார்க்கலாம்.”

“பெண்கள் ஆண்களுக்கு நிகரான சந்தர்ப்பங்கள் கொடுக்கப்பட வேண்டியவர்கள் என்று உங்கள் ‘மகா பாரதம்’ பத்திரிகையில் அடிக்கடி எழுது¤கிறீர்கள். கடவுள் அவர்களது உடல் அமைப்பைப் பிள்ளை பெறுவதற்கென்று அமைத்திருக்கும் போது, அதைத் தவிர அவர்களுக்கு வேறு பணிகளில் ஆர்வம் எதற்கு? அது இயற்கையை மீறுவதாகாதா?”

துர்க்கா வாய்விட்டுச் சிரித்தாள்: “ஓ! அப்படியா! ‘பிள்ளை பெறுவது மட்டுமே அவர்கள் பணி; அதன் வளர்ப்பே அவர்கள் கடமை. வேறு எந்த வேலையும் அன்று’ என்கிறீர்கள். அப்படித்தானே! சரி. உங்கள் வாதத்துக்கே வருகிறேன். பிள்ளை பெறுவது மட்டுமே பெண்களின் வேலையாயின், அவர்களைப் பிள்ளைபெறச் செய்வதற்கான செய்கையில் இடுபடுதல் மட்டுமே ஆண்களின் வேலையா யிருத்தல் வேண்டும்! பெண்ணின் உடற்கூறு பிள்ளை பெறுவது என்றால், ஆணின் உடற்க்கூறு பெண்ணைப் பிள்ளை பெறச் செய்வதே என்றாகிறது! இதைச் செய்வதோடு நிறுத்திக்கொள்ளாமல், ஆண் தன் மூளையை உபயோகித்து ஏதேதோ சாதனங்களை மனித வாழ்வுக்குப் பயனளிக்கும் வண்ணம் கண்டுபிடித்துள்ளான். ஏன்? மனித குலத்துக்கு நாசத்தைத் தேடித் தருபவைகளையும் கண்டு பிடித்துள்ளான்! ஆனால், பெண் என்பவள் மட்டும் பிள்ளை வளர்ப்புக்கானது போக மீதமிருக்கும் பொழுதுகளில் தன் மூளையை மழுங்கடித்துக்கொள்ள வேண்டும்! கல்வியறிவு கூட அவளுக்குத் தரமாட்டீர்கள். அப்படித்தானே? பேஷ், பேஷ்! உடற்கூறு பற்றிய உங்கள் வாதம் நியாயமாயின், ஆண்டவன் பெண்களுக்கும் ஏன் மூளையைக் கொடுத்தார்? உபயோகப் படுத்தக்கூடாத ஒன்றை அவர் பெண்ணுக்கும் அளித்திருந்திருப்பாரா? அதைப் பற்றி யோசித்தீர்களா, நண்பரே? நரம்பியல் நிபுணர் ராமமூர்த்தி என்ன சொல்லி யிருக்கிறார்? ஆணின் மூளை பெண்ணின் மூளையை விட ஐந்தே ஐந்து கிராம்கள் எடை அதிகம்; ஆனால், அந்த அற்ப எடை வித்தியாசத்தை மட்டும் வைத்துப் பெண்ணின் மூளையின் தரத்தைக் குறைத்து மதிபிட்டுவிடக் கூடாது என்றல்லவோ கூறியுள்ளார்! .. .. .. இருவரும் சேர்ந்து செய்கிற ஒரு காரியத்தின் விளைவுக்கு இருவருமே பொறுப்பேற்க வேண்டும் என்பது ஓர் அடிப்படை நியாயம். ஆக, குழந்தையின் வளர்ப்பில் பெண்ணின் அளவுக்கு இல்லாவிட்டாலும், அவளுக்குச் சிறிதேனும் உதவுபவனாகவாவது ஆண் இருக்க வேண்டுமல்லவா? அதுதானே நியாயம்? இருக்கிறானா? நாளைக்கு உங்களுக்கும் பெண் குழந்தைகள் பிறப்பார்கள். அப்போது உங்கள் கண்ணோட்டம் நிச்சயமாக மாறும்! அது வரை காத்திராமல், இப்போது நான் சொன்னவற்றை விருப்பு வெறுப்பின்றி நீங்கள் அசை போட்டாலும் உங்கள் எண்ணங்கள் மாறவே செய்யும்! .. .. ..”

எதிரணியில் இருந்த இளைஞன் வெட்கப்பட்டுச் சிரித்தபின் தொடர்ந்தான்: “ஆண்களைப் பற்றிய மிக மோசமான – எங்களுக்கு எரிச்சலூட்டுகிற வண்ணமான – முறையில் உங்கள் ‘மகா பாரதம்’ இதழில் அடிக்கடி கட்டுரைகள் வருகின்றன. இதனால், ஆண்வெறுப்பு எனும் போர்க்குணத்தை நீங்கள் பெண்களின் மனங்களில் விதைக்கிறீர்கள். இது காலங்காலமாய்த் தொடர்ந்து கொண்டிருக்கும் குடும்ப அமைதியைக் குலைக்கக்கூடியது. அதைப் பற்றி நீங்கள் சிந்தித்தகுண்டா?”

துர்க்கா மறுபடியும் சிரித்தாள் : “ தாங்கள் அடிமைகளா யிருப்பது பற்றிய உணர்வு கூட இன்றிச் சேற்றில் சுகங்காணும் எருமைமாடுகள் போல் தோல் தடித்துச் சொரணையின்றிக் காலங்காலமாக வளைய வரும் பெண்களுக்கு அவர்களுக்குள்ள உரிமைகள் பற்றியும், அவர்கள் நசுக்கப்பட்டுவருவது பற்றியும் எடுத்துச் சொல்லுவது அவர்களை ஆண்களுக்கெதிராக உசுப்பிவிடும் என்பது உண்மைதான். ஆணுக்கு நியாய உணர்வு இருந்தால் அதைத் தடுக்கலாமே! பெண் என்ன, அநியாயமாகவா ஆணுடன் மல்லுக்கு நிற்கிறாள்? “

“எல்லாக் கோளாறுகளுக்கும் ஆண்களே காரணம் என்பது போல் உங்கள் ‘மகா பாரதம்’ கூக்குரலிடுகிறதே! அப்படியானால் பெண்கள் எல்லாரும் தேவதைகளா? ஆண்கள் அனைவரும் அரக்கர்களா?”

“சேச்சே! அப்படிச் சொல்லுவோமா, சகோதரரே? ஆண்களில் நல்லவர்கள் குறைந்த எண்ணிக்கையிலும் பெண்களில் பொல்லாதவர்கள் குறைந்த எண்ணிக்கையிலும் உள்ளார்கள் என்கிற அடிப்படை வேறுபாட்டை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். வ. ராமசாமி அய்யங்கார் என்று ஒரு தமிழ் எழுத்தாளர். ‘வ.ரா’ என்பது அவரது புனைபெயர். தமது நாவல் ஒன்றின் முன்னுரையில் அவர் கீழ்க்கண்டவாறு கூறுகிறார்: ‘கோதைத்தீவு எனது நீண்டகால முயற்சி. நான் இளைஞனாக இருக்கையில், ஆண்கள் நடத்தும் தர்பாரைக்கண்டு மனம் புழுங்குவேன். இந்த தர்பாரைப் பார்க்கிற யாவரும் பெண்களுக்குப் பரிந்து பேசுவது இயற்கை. ‘இதே ஆத்திர உணர்ச்சி உன் உள்ளத்தில் இருபது வருஷத்திற்கு மேலும் குறையாமல் தங்கி இருக்குமானால், நீ ஆண்க+ளைப் பற்றி இகழ்ந்து எழுதலாம்’ என்று ஒரு நண்பர் யோசனை சொன்னார். அவர் சொன்னது ஒரு வகையில் உண்மை எனக்கொண்டு, இருபது வருஷம் பொறுத்திருந்தேன். என் ஆத்திரம் தணிந்தபாடில்லை. நம்மவர்களின் வாழ்க்கை எல்லாத் துறைகளிலும் பாழாகிக்கொண்டு வருவதைப் பார்க்க என் மனம் பொறுக்கவில்லை. வீட்டை நரகமாக்கி வருவது ஆண்பிள்ளை என்பது நான் கண்ணால் பார்த்து வரும் உண்மையாகும். நமது நாட்டில் பெண் அடிமையாகப் பிறக்கிறாள், வளர்கிறாள், வாழ்கிறாள், இறக்கிறாள். வாய்விட்டுச் சொல்லச் சந்தர்ப்பமும் தைரியமும் உண்டாகுமானால், பெண்கள் என்ன சொல்லுவார்கள், என்ன செய்வார்கள் என்பதையும் ‘கோதைத் தீவு’ எனும் கற்பனையின் மூலமாக என் சகோதர ஆண்களுக்கு எடுத்துக் காண்பிக்க முயன்றிருக்கிறேன். ‘ – இவ்வாறு எழுதியுள்ளார் அறிஞர் அண்ணா அவர்களால் ‘அக்கிரகாரத்து அதிசய மனிதர்’ என்று புகழப்பெற்ற வ. ரா. அவர்கள்! இதற்கு என்ன சொல்லுகிறீர்கள்? வ. ரா. அவர்களைப் போல் நடுநிலைப் பார்வையும், நியாய உணர்வும், நல்லிதயமும் கொண்ட ஆண்கள் தம் இனத்தவர் என்பதற்காகப் பொய்களைச் சொல்லாமல் நேர்மையாகத்தான் எழுதுவார்கள்! அவர் மேலும் எழுதியுள்ளதைக் கேளுங்கள், சகோதரரே! .. .. ‘கடவுளை மணக்க விழைந்ததன் மூலம் ஆண்டாள் ஆண் உருவம் தாங்கிய மனிதப் பதரிடம் தனக்கிருந்த அலட்சியத்தைத் தெளிவகக் காண்பித்துவிட்டாள்!’ என்கிறார்! ஓர் ஆண் மகனே இப்படி யெல்லாம் எழுதியிருக்கிறார். இதற்கு என்ன சொல்லுகிறீர்கள்? இதையே ஒரு பெண் சொன்னால், நம் ஆண் சகோதரர்களுக்கு ஏன் மூக்குக்கு மேல் கோபம் வருகிறது?”

அந்தக் கணத்தில், மேடையை நோக்கி ஒரு கல் வ்¢ர்ரென்று பறந்து வந்தது. குறி வைத்து எறியப்பட்ட அது துர்க்காவின் முன்னெற்றியில் சரியாய்த் தாக்க, அவள், “அய்யோ!” என்று கூவிவிட்டாள். கூட்டத்திலும் மேடையிலும் சலசலப்பு ஏற்பட்டது. சத்தியபாமா ஓடி வந்து துர்க்காவைத் தாங்கிக்கொண்டாள்.

jothigirija@vsnl.net

Series Navigation

ஜோதிர்லதா கிரிஜா

ஜோதிர்லதா கிரிஜா

மறுபடியும் ஒரு மகா பாரதம் – அத்தியாயம் – 32

This entry is part [part not set] of 33 in the series 20060804_Issue

ஜோதிர்லதா கிரிஜா



கூடிய விரைவில் நடப்பதற்கிருந்த மாநாட்டை முன்னெப்போதையும் விட அதிகச் சிறப்பாக நடத்துவதற்கான யோசனைகளில் துர்க்கா ஆழ்ந்திருந்தாள். பெண்ணுரிமை இயக்கத்தில் ஆண்களையும் இணைத்துக்கொள்ளப் பங்கஜம் கூறியிருந்த யோசனையைச் செயல்படுத்துவது அவ்வªவு எளிதாக இருக்கவில்லை. மிகச் சிலரே அதில் ஆர்வங் காட்டினர். ஆனால் அப்படி ஆர்வங்காட்டிய ஆண்கள் பென்களைக் காட்டிலும் அதில் அதிக ஈடுபாட்டுடன் அக்கறை காட்டினார்கள்! எண்ணிக்கை குறைவா யிருந்தாலும் அத்தகைய நல்லிதயம் படைத்த ஆண்களின் துணை கொண்டு பெண்களால் வியத்தகு சாதனைகளைச் செய்ய முடியும் என்று துர்க்கா நம்பிக்கை கொண்டாள்.

நாடு தழுவிய இயக்கமாக மகளிர் இயக்கம் மலர்ந்து விட்டதால், அவ்வியக்கத் தலைவியர்க்கும், அதில் பங்கேற்ற பிற பெண்களுக்கும் நிறைய எதிரிகள் ஏற்படலாயினர். மிரட்டல்கள் நிறைந்த மொட்டைக் கடிதங்கள், தொலைபேசியில் கற்பழிப்பு-கொலை மிரட்டல்கள் ஆகியவை அன்றாடக் கசப்பு நிகழ்வுகளாயின.

எனினும் முன் வைத்த காலைப் பின் வைக்கும் தோல்வி மனப்பான்மை சிறிதும் இல்லாமல், துர்க்காவின் மகளிர் மன்றத் தலைமைச் செயலகமும், நாடு தழுவிய அதன் கிளைகளும் இயங்கிக்கொண்டிருந்தன.

அந்த மாநாட்டில், ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து வந்து பங்கேற்ற கிளைத் தலைவியின் பேச்சில் தீப்பொறி பறந்தது.

“பெண்கள் முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள் என்பது உண்மைதான். ஆனால், இந்திய நாட்டில் உள்ள பெண்களில் பெரும்பாலோர் முன்னேறிவிட்டாற்போலவும் , அதனால், ஆண்களுடன் தேவையற்ற முறையில், தங்களுக்குத் தகுதியற்ற துறைகளிலும் அவர்கள் போட்டி போடுவது போலவும் ஆண்களில் பலர் பேசவும், ஏடுகளில் எழுதவும் தலைப்பட்டுள்ளனர். பெண்ணடிமைத்தனத்தின் மிச்சம் மீதிகள் – குறிப்பாக எங்கள் ராஜஸ்தான் மாநிலத்தில் -இன்னமும் இருக்கவே செய்கின்றன. உயிரோடிருக்கும் மனைவியை – அவள் எவ்வளவு இளம் பெண்ணே யானாலும் கூட – கணவனின் பிணத்தோடு வலுக்கட்டாயமாகச் சேர்த்து எரிக்கும் வழக்கத்துக்கும், மிகச் சிறு வயதிலேயே மணமுடிக்கும் வழக்கத்துக்கும் இன்னும் அங்கே ஆதரவு இருக்கிறதே! இந்த வெட்கக்கேட்டையும் கொடுமையையும் எங்கு போய்ச் சொல்ல! இந்து மத வாதிகளும் ‘சதி’ என்னும் இந்த மனிதாபிமானமற்ற செயலைக் கண்டிப்பதில்லை என்பதோடு, இதற்கு எதிராக அறிக்கை விடவேண்டுமென்று கேட்டுக்கொண்ட சீர்திருத்தவாதிகளிடம் சில ஆசாரியர்கள், ‘அது அந்த்ப் பெண்ணின் இஷ்டம்! வலுக்கட்டாயமாய்த்தான் ஒரு கைம்பெண்ணை எரிக்கக்கூடாதே யல்லாது, அவளே கணவனின் சடலத்தோடு தானும் உயிருடன் எரிக்கப்பட விரும்பினாலோ, அந்தச் செயலை மறுதலிக்காம லிருந்தாலோ, மற்றவர்கள் அவளைத் தடுக்கக் கூடாது’ என்று பதிலளித்துள்ள கொடுமையான கூற்றை என்னவென்று சொல்லிக் கண்டிப்பது! இவர்களெல்லாம் முதலில் மனிதப் பிறவிகள்தானா! இதயம் என்பதாய் ஒன்று உள்ளவர்கள்தானா! ‘தீண்டாமை சாஸ்திர அங்கீகாரம் பெற்றதுதான்’ என்றெல்லாம் கூடவன்றோ இந்த ஆச்சாரியர்களில் சிலர் கதை விடுகிறார்கள்! சாஸ்திரங்களில் இல்லாத ஒன்றைச் சில விஷமிகள் – உயர்ந்த சாதியினர் என்பதாய்த் தங்களுக்குத் தாங்களே முத்திரை குத்திக்கொண்டவர்கள் – இடைச்செருகல் செய்து இந்து மதத்தை இழிமைப் படுத்தியுள்ள அசிங்கத்தை இவர்கள் ஏன் இருட்டடிப்புச் செய்து இந்த நாட்டுக்கே கேவலத்தைத் தேடித் தந்து கொண்டிருக்கிறார்கள்? நம் சாஸ்திரங்களில் முன்னுக்குப் பின் முரணான பல விஷயங்கள் இருப்பதும், அவ்ற்றில் அறிவுக்கும் நியாயத்துக்கும் பொருந்தாதவை இருப்பதும் இடைச் செருகல்கள் என்பதாய் மகாத்மா மாந்தி என்றோ எடுத்து உரைத்துள்ளாரே! அது மட்டுமா? நம் மத ஆசாரியர்கள் அனைவரும் ஒன்றாய்க் கூடிப் பேசி அத்தகைய அபத்தமான இடைச்செருகல்களை நம் சாஸ்திரங்களிலிருந்து நீக்கிவிடுதல் வேண்டுமென்றும் கூட அவர் அறிவார்ந்த யோசனையைச் சொன்னாரே! ஆனால், அதற்கெல்லாம் நம் மடாதிபதிகளுக்கு நேரம் ஏது? பெண்ணுக்கு எதிரான அறிக்கைகள் விடவும், அவர்களை எக்காலத்துக்கும் கட்டுப் பெட்டிகளாகவே வைத்திருக்கும் மூடப் பழக்க வழக்கங்களைப் போற்றி எழுதுவதற்கும்தானே அவர்களுக்கு நேரம் இருக்கிறது! பெண்ணாதரவுக் கருத்துகளை அகில இந்திய அளவில் மகாத்மா காந்தி வெளியிட்டார் என்றால், உங்கள் தமிழ் நாட்டில் தந்தை பெரியார் ஆண்களின் அடக்குமுறைக்கு எதிரான கருத்துகளை வெளியிட்டுள்ளார். அவருடைய கருத்துகள் மிக மிகப் புரட்சிகரமானவை! ஒரு பெண்ணால் கூட இந்த அளவுக்கு ஆண்கள் மீது ஆத்திரம் கொள்ள முடியுமா எனத் தெரியவில்லை. அந்த அளவுக்கு அவர் ஆணினத்தின் மீது வெறுப்பையும் சினத்தையும் உமிழ்ந்துள்ளார். பெண்ணாதரவுக் கருத்துகளையும், ஆணாதிக்க எதிர்ப்புக் கருத்துகளையும் அந்த அளவுக்கு ஆத்திர ஆவேசத்துடன் வேறெந்தச் சமுதாயச் சீர்திருத்தச் செம்மலும் வெளியிட்டதாகத் தெரியவில்லை.. .. அவர் விரும்பிய அளவுக்கு இல்லாவிட்டாலும், சில அடிப்படை உரிமைகளையேனும் பெண்கள் பெற வாய்த்தால் நன்றாயிருக்கும்.. .. ..” என்பது அவரது சொற்பொழிவின் சாரமாகும்.

“.. .. .. மற்ற எல்லா விஷயங்களிலும் பெற்றோரின் விருப்பத்துக்கு எதிராகச் செயல்படும் இளைஞர்கள் வரதட்சிணை விஷயத்தில் மட்டும் தாய்-தந்தையர் மீது பழி போட்டுவிட்டு ஒதுங்கி யிருப்பதேன்? .. .. .. வரதட்சிணைக் கொலைகள் விஷயத்தில் போலீஸ் ஏன் இவ்வளவு மெத்தனமாய்ச் செயல்படுகிறது? .. .. .. ஒரு பெண் தான் கனவன் வீட்டில் கொடுமைப்படுத்தப்படுவதாய்த் தன் பெற்றோரிடம் முறையிடும் போது, அவளுக்கு ஆதரவு தருவதை விடுத்து, ‘நீ இருக்க வேண்டிய இடம் புருஷன் வீடுதான். விட்டுக்கொடுத்தும், சகித்துக்கொண்டும் அங்கேயே இரு’ என்று ‘அறிவுரை’ வழங்கி, அவன் சிகரெட்டால் சூடு போடுகிற கணவனாக இருந்தாலும், அடித்துக் காயப்படுத்துகிறவனாயிருந்தாலும், அவனிடமே கட்டாயமாய்த் திருப்பி யனுப்புகிறார்களே பெரும்பாலான பெற்றோர்கள், அது நல்லதா? இரு புறங்களிலும் ஆதரவற்ற நிலையில் ஒரு பெண்ணால் என்ன செய்ய முடியும்? அவள் தற்கொலையைத்தானே நாட முடியும்? வெளியே போய்ச் சுயமாய்ச் சம்பாதிக்கும் தொழிற்கல்வி யற்றவர்களாக வன்றோ பெரும்பாலான பெண்களை வைத்திருக்கிறீர்கள்? .. ..’ என்று பஞ்சாப் மாநிலப் பெண்மணி கேள்விக் கணைகளை வரிசையாய்த் தொடுத்தார்.

மகாராஷ்டிர மாநிலப் பென்மணியின் பேச்சிலும் தீப்பொறிகள் பறந்து சிதறின.: “.. .. .. திரைப்படங்களில் பெண்களை எப்படிச் சித்திரிக்கிறார்கள் என்பது நமக்குத் தெரியும். ஆண்களாலேயே பெரும்பாலும் தயாரிக்கப்படுகிற அத் திரைப்படங்களில் இருதாரமணத்தை அங்கீகரிக்கும் – அல்லது அதற்குச் சப்பைக்கட்டுக் கட்டும் – படங்கள் அடிக்கடி வருகின்றன. ‘பெண்டாட்டி சரியாக இருந்தால் ஆண்பிள்ளை ஏன் சிவப்பு விளக்குப் பகுதிக்குப் போகவோ சின்ன வீடு வைத்துக்கொள்ளவோ, போகிறான்?’ என்று ‘டயலாக்’ (dialogue) எழுதுகிற திரைக்கதை ஆண் ஆசிரியர்கள், ‘ஆண்பிள்ளை சரியாக இருந்தால், பெண்பிள்ளை ஏன் தப்பு வழிக்குப் போகப் போகிறாள்?’ என்று மறந்தும் எழுதிவிடாதிருப்பதில் கவனம் காட்டுபவர்கள்! அப்படி எழுதினாலோ, அதில் உள்ள நியாயத்தைச் சுட்டிக்காட்டினாலோ, ஏராளமான மனைவியர் வெளியேறிவிடுவார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும் போலும்! அவர்கள் எடுத்தியம்பும் நியாயங்கள் யாவுமே ஒருவழிப்பாதை நியயங்கள்தானே! பெண் என்பவள் தாய்மையின் பிரதிநிதி என்கிற பிரக்ஞையே அவர்களுக்குக் கிடையாது. அதனால்தான் தாய்மையின் அடையாளங்களான பாலுறவு உறுப்புகளையும் அவற்றின் செயல்பாடுகளையும் கேலி செய்கிற வக்கிரப் பாடல்களைக் கவிஞர்கள் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். இந்த ஆபாசத் திரைப்படப் பாடல்கள்தான் ‘பெண் சீண்டல்’ எனும் eve-teasing செய்யும் பொறுக்கி ஆண்களுக்கும் மாணவர்களுக்கும் என்னமாய்க் கைகொடுத்து உதவுகின்றன! சும்மா யிருப்பவர்களின் மனங்களையும் கெடுத்து வம்புக்கு இழுக்கின்ற பாடல்கள் அவை. விரசமான பாடல்களுக்கு எதிராக வழக்குத் தொடுத்தால், ‘அவற்றில் விரசமே இல்லை. அந்த மறுபொருள் உங்களிடம் உள்ள வக்கிரத்துக்கேற்ப நீங்களாய்க் கற்பனை செய்வது’ என்று தீர்ப்புச் சொல்லத் தயாராயிருக்கும் நீதிபதிகளை என்ன செய்ய! புனிதமான ஒரே ஒர் அர்த்தத்தில்தான் அவர்கள் பாட்டு எழுதுகிறார்களாம்! அதற்கு இரண்டாம் அர்த்தமும் இருப்பதோ, தோன்றுவதோ தற்செயலாக நிகழ்கின்ற ஒன்றாம்! அத்தகைய கவிஞர்களின் பெண்களையும், நீதிபதிகள் வீட்டுப் பெண்களையும், படத்தயாரிப்பாளர்களின் வீட்டுப் பெண்களையும் கேலி செய்யவோ, வீண் வம்புக்கிழுக்கவோ அந்தப் பாடல் வரிகளைத் தெருப்பொறுக்கிகள் பாடினால், அப்போது தெரியும் அவர்களுக்கு அந்தப் பாடல்களின் விரசமும் வக்கிரமும்! ஒருவேளை அதையும் செரிமானம் செய்கிற அளவுக்கு அப் பாடலாசிரியர்களும், திரைப்படத் தயாரிப்பாளர்களும் பண ஆசை பிடித்து அலையும் சொரணை கெட்டவர்களோ என்னவோ!

‘மாற்றுப் பொருள் என்பதாக ஒன்றில்லாமலேயே, நேரடியாகவே ஆபாசத்தை வெளிப்படுத்தும் பாடல்களையும் அவ்வப்போது அவர்கள் எழுதுவதுண்டு. கேட்டால், ‘வயிற்றுப் பிழைப்பு’ என்று சால்சாப்புச் சொல்லுவார்கள். கோடிக் கணக்கில் பணம் சேர்த்து முடித்து விட்ட அவர்கள் அதில் வரும் வட்டியை வைத்தே ஐந்தாறு குடும்பங்களைப் பராமரிக்கக்கூடிய வசதி படைத்தவர்கள். ஆனாலும், அவர்களுக்குத் திருப்தி என்பதே இல்லை. ‘நான் எழுத மறுப்பதால், அது நின்றுவிடப் போகிறதா என்ன! அப்படி இன்னொருவன் எழுதத் தயாரா யிருக்கிறானே! அதை உங்களால் தடுக்க முடியுமா?’ என்றும் இவர்கள் எதிர்க்கேள்வி கேட்கிறார்கள்! ‘ஏண்டா அந்தப் பெண்ணைக் கற்பழித்தாய்?’ என்னும் கேள்விக்கு, ‘ஏற்கெனவே இன்னொருவன் அவளைக் கற்பழிப்பதற்கிருந்தான். அதனால் நான் முந்திகொண்டேன்!’ என்று ஒருவன் சொல்லுவதற்கும் இதற்கும் எந்த வித்தியாசமும் இருப்பதாய் நமக்குத் தெரியவில்லை. இன்னும் சிலர், ‘நான் எழுதிய ஆபாசப் பாடல்கள் மட்டும்தான் உங்கள் கண்களுக்குத் தெரிகின்றனவா? அம்மாவின் உயர்வைப்பற்றி, கடவுளைப்பற்றி, வாழ்க்கைத் தத்துவங்கள் பற்றி, தேசபக்தியைப் பற்றி எல்லாம் எத்தனை பாடல்களை நான் எழுதியிருக்கிறேன்?’ என்பார்கள்! இது எப்படி இருக்கிறதென்றால், ‘ஏன் விபசாரவிடுதி நடத்துகிறாய்?’ என்று வினவப்படும் ஒருவன், ‘ஏன்? நான் ஒரு பஜனை மடமும், பள்ளிக்கூடமும் நடத்துகிறேனே, அதெல்லாம் உங்கள் கண்களுக்குத் தெரியவில்லையா?’ என்று பதில் கேள்வி கேட்பதைப் போலிருக்கிறது! விரசம் வழியும் பாடல்கள் வெட்டப்பாடாமல் தப்பிவிடுவது நம் திரைப்படத் தணிக்கையாளர்களின் பொறுப்பின்மையையும், தணிக்கை விதிகளைச் செயல்படுத்தாமல் கையூட்டுப் பெறுவதையும்தான் தெற்றெனக் காட்டுகின்றன! தணிக்கை விதிகள் கடுமையாக இருக்கும் போதே இத்தகைய ஆபாசம் ததும்பும் பாடல்கள் இடம் பெறுவதும், வக்கிரமான அங்க அசைவுகள், இடுப்பு ஆட்டங்கள், சாடைமாடையான பிற அசைவுகள் ஆகியன கத்தரிக்கப்படாது தப்பிவிடுவதும் தணிக்கை விதிகள் மீறப்படுவதையே காட்டுகின்றன. எங்களைப் போன்ற மகளிர் அமைப்புகள் கண்டித்துப் புகார் செய்த பிறகு ஓரிரு வார்த்தைகளை நீக்குகிறார்கள். ஆனால், எல்லாப் பிரதிகளிலிருந்துமா அவை நீக்கப்படுகின்றன? இல்லை. தங்கள் வீட்டுப் பெண்களுக்குப் பின்னால் அப் பாடல்களைப் பாடிக்கொண்டு பொறுக்கிகள் பின்தொடர்வதாய்த் தணிக்கையாளர்கள் ஒரு கணம் கற்பனை செய்து பார்த்தாலும் போதும். அத்தகைய பாடல்களைத் தங்கள் படங்களில் இடம்பெறச் செய்ய மாட்டார்கள். தணிக்கையாளர்களைச் ‘சரிக்கட்டிவிட முடியும்’ என்கிற நம்பிக்கையில்தான் அவர்கள் பாடலாசிரியர்களை அத்தகைய காலித்தனமான பாடல்களை எழுதத் தூண்டுகிறார்கள். இளைஞர்களும் இளம் பெண்களும் ஒருசேரப் பயணம் செய்யும் பேருந்துகளில் அவர்கள் உங்கள் சென்னை நகரத்தில்- ஏன்? இந்தியாவின் எந்த நகரத்திலும்- சில தடவைகள் காலை, மாலை வேளைகளில் அவர்கள் பயணம் செய்து பார்க்கட்டும். நம் பெண்கள் எத்தகைய விகாரச் சேட்டைகளையும், எவ்வளவு மானக்கேட்டையும் சகித்துக்கொள்ள வேண்டி யுள்ளது என்பதை அவர்கள் புரிந்துகொள்ளுவார்கள். எங்கள் பம்பாயில், ‘சோலி கே பீச்சே க்யா ஹை?’ என்று ஒரு மாணவன் ஒரு பெண்ணிடம் பாட, வெகுண்ட அப்பெண், ‘சப்பல் சே மாரூங்கி’- செருப்பால் அடிப்பேன் – என்று கத்த, அந்த இளைஞன் சட்டென்று அவள் கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு இறங்கி ஓடி விட்டான். மக்களின் கூட்டம் செயலற்றுப் பார்த்துக்கொண்டிருந்தது! தப்புச் செய்கிறவர்களைத் தட்டிக் கேட்டால், அவ்வாறு கேட்கிறவர்களுக்கு ஆதரவுக் குரல் எழுப்ப ஆடவர்கள் தயாராயில்லை. உடல் வலிமை என்பதை ஆண்டவன் ஆண்களுக்குக் கொடுத்திருப்பதே வலிமையற்றவர்களை – அவர்கள் பெண்களாயினும் சரி, வலிமைக்குறைவுள்ள பிற ஆண்களாயினும் சரி – காப்பாற்றுவதற்குத்தானே? என்ன செய்தாலும் யாரும் தட்டிக் கேட்கமாட்டார்கள் என்கிற நிலையால்தான் இந்த நாட்டில் தப்புச் செய்கிறவர்களின் தொகை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருகிறது. திரைப்படத் தொடர்புள்ள ஆபாசச் சுவரொட்டிகள் ஊர் முழுவதையும் அலங்கோலப்படுத்துகின்றன. இவற்றுக்கு எதிரான தண்டனைச் சட்டங்கள் காவல்துறையில் ஏற்கெனவே உள்ளன. அவற்றை அமல்படுத்தத்தான் யாருமே தயாராயில்லை. ஏற்கெனவே உள்ள கடுமையான தணிக்கை விதிகளும் இவற்றுள் அடக்கம்.

“இவற்றையெல்லாம் பார்க்கும் போது, காவல் துறை அதிகாரிகள் கையூட்டுப் பெற்றுக்கொண்டு அத்தகைய அசிங்கங்களை அனுமதிக்கிறார்கள் என்றுதானே நினைக்கத் தோன்றுகிறது? இல்லாவிட்டால், சட்டத்தை அமலாக்காதவாறு அவர்களைத் தடுப்பது எது? நியாய உணர்வும் சமுதாயப் பொறுப்பு உணர்வும் உள்ள ஓரிரு பத்திரிகைகள் அப்படிப்பட்ட அயோக்கியர்களைக் கண்டித்துக் கட்டுரைகளோ தலையங்கமோ எழுதினால் உடனே அவற்றின் ஆசிரியர்களுக்குத் தண்டனை வழங்குவீர்கள்! ”- சட்டென்று அந்தப் பென்மணி முன்வரிசையில் முழுச் சீருடையில் அமர்ந்திருந்த காவல்துறை ஆணையரை நோக்கிக் கை நீட்டிச் சொன்னார். குரலில் ஆத்திரம் தெறித்த போதிலும், முகத்தில் நக்கலான புன்னகை தவழ்ந்துகொண்டிருந்தது.

கூட்டம் முழுவதும் கைடட்ட, ஆணையரின் முகம் சுருங்கி, அசடு தட்டியது. எனினும், உதடுகளை உள்மடித்துபடி மவுனமா யிருந்தார்.

அடுத்து, ஒரிஸ்ஸாவிலிருந்து வந்திருந்த பெண்ணியக்கத் தலைவி முழங்கினார்:

“ .. .. .. 1993 ஆம் ஆண்டுக்குரிய தேசியக் குடும்ப நல அறிக்கையின்படி, ஒரிஸ்ஸாவில் பெண்களின் நிலை பொதுவாக மிக மோசமாக உள்ளதென்று தெரிகிறது. பெரும்பாலான பெண் குழந்தைகள் பள்ளிக்கு அனுப்பப்படுவதில்லை. பெண் குழந்தைகளின் இறப்பு விகிதம் மிக, மிக அதிகமாக உள்ளது. ஆண் குழந்தைகளின் எண்ணிக்கையைவிட பெண் குழந்தைகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. எதனால் இப்படி ஒரு வேறுபாடு என்பதை உங்கள் ஊகத்துக்கே விட்டுவிடுகிறேன். கருத்தடைச் சாதனங்களைப் பயன் படுத்துதல் என்பது பெண்களின் மேல் தான் திணிக்கப்படுகிறது. ஆண்களின் அறுவைச் சிகிச்சை எளிதானதாகவும், பின் விளைவுகள் அற்றதாயும் இருந்தாலும், கருத்தடை அறுவைச் சிகிச்சைக்கு மிகப் பெரும்பாலான எண்ணிக்கையில் பெண்களே உட்படுத்தப்படுகிறார்கள். ஸ்டெரிலைசேஷன் (sterilization) எனப்படுகிற பெண்களுக்கான அறுவைச் சிகிச்சையின் பின் விளைவாக நூற்றுக்கு இரண்டு பெண்கள் இறந்து போகிறார்கள் என்று மருத்துவ அறிக்கைகள் கூறுகின்றன. இதை அறிந்துள்ள படித்த ஆண்களுக்குக் கூட, அவ்வாறு இறந்து போகிற இரண்டு விழுக்காட்டுப் பெண்களில் தன் மனைவியும் ஒருத்தியாக இருந்துவிடக் கூடுமே என்கிற உறுத்தலோ கவலையோ பொதுவாக இருப்பதாய்த் தெரியவில்லை. உண்மையில், மனைவிகள் மீது அன்பு இருந்தால், எளிய சிகிச்சைக்குத் தங்களை உட்படுத்திக்கொள்ளும் ஆண்களின் எண்ணிக்கையன்றோ அதிகமா யிருக்கும்? சாவு என்பது மட்டுமல்லாமல், கருப்பையில் கட்டி, புண்கள், புற்று நோய் ஆகியவற்றுக்கான சாத்தியத்தை இந்த அறுவைச் சிகிச்சை பெண்களிடம் ஏற்படுதிவிடுகிறது.

“அறுவைச் சிகிச்சை மட்டுமின்றி, கருத்தடை மாத்திரைகளும் பின்விளைவுகளைப் பெண்களிடம் ஏற்படுத்துகின்றன. இந்தக் குளிகைகள் கருப்பையில் உருக்கொள்ளும் கருவை அழிக்கவல்லவை. எனவே, கரு உருக்கொண்டதா இல்லையா என்பதை உடனடியாக அறிய வழியற்ற நிலையில், ஒவ்வோர் உடலுறவின் போதும் இக்குளிகையை விழுங்குமாறு பெண் போதிக்கப் படுகிறாள். ஆனால், கருப்பையில் அழிப்பதற்குக் கரு உருக்கொள்ளாமற் போனால், இம்மாத்திரைகள் கரு உருக்கொள்ளும் கருவகத்தையே (ovary) அரிக்க முற்படுகின்றன. இதன் விளைவாகக் கருப்பையில் புண்களும், காலப் போக்கிலான புற்று நோயும் இரத்தக் கசிவும் ஏற்படுகின்றன. இவற்றையெல்லாம் மனைவி மீதான மெய்க்காதலோடு எண்ணிப் பார்த்து விஷயமறிந்த கணவன்மார்கள் கூடத் தாங்கள் தடுப்பு உறையைப் பயன்படுத்தப் பெரும்பாலும் முன்வருவதில்லை. இவற்றை யெல்லாம் எடுத்துச் சொன்னால் நாங்கள் பொல்லாத பெண்கள்! வெட்கமற்றவர்கள்!

கருத்தடை மாத்திரைகளைத் தயாரிக்கிற பண முதலைகளிடம் கையூட்டுப் பெற்றுக்கொண்டு, அவற்றை உட்கொள்ளுவதால் எந்தப் பின்விளைவோ அபாயமோ இல்லை என்கிற மருத்துவர்களின் சப்பைக்கட்டு அறிக்கைகள் வேறு! .. .. ..

“சாப்பாட்டு விஷயத்தில், ஆணுக்குத்தான் முன்னுரிமை பல குடும்பங்களில் இன்றைக்கும் அளிக்கப்படுகிறது. நியாயப்படி, உயிர்களை உற்பத்தி செய்யும் பெண்ணே உணவு விஷயத்தில் அதிக முக்கியத்துவம் பெற வேண்டும். அப்படி யில்லாவிட்டாலும், ஆணுக்குச் சமமாகவாவது சாப்பாட்டு விஷயத்தில் அவள் நடத்தப்பட வேண்டாமா?

“.. .. .. அடுத்து, பெண்கள் அனைவருக்கும் தற்காப்புக் கலை கற்பிக்கப்பட வேண்டும். பள்ளிப் பருவத்திலேயே அவர்களுக்குக் கராத்தே சொல்லித்தரப்பட வேண்டும். மேல்நாட்டாரின் கூற்றான ‘பெண்கள் ஆண்களைவிடவும் சிறந்த பாதியினர் – The better half – என்பதை ஒப்புக்கொள்ளாவிட்டாலும், குறைந்த பட்சம் ஆண்களைக் காட்டிலும் தாழ்ந்தவர்கள் அல்லர் என்பதையேனும் ஆண்கள் ஒப்புக்கொள்ளவேண்டும்! என்னருமைச் சகோதரர்களே! இந்தக் கூட்டத்தில் என் பேச்சிடையே அவ்வப்போது சலசலப்பு ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது. நையாண்டி ஓலங்களும், நக்கல் ஊளைகளும் கேட்கின்றன. உங்களுடைய ஒத்துழைப்பு இல்லாமல், எங்களால் எங்களது இலக்கை யவைய முடியாது என்பதால்தான், நாங்கள் எங்கள் இயக்கத்தில் கணிசமான அளவுக்கு ஆண்களையும் சேர்த்துக் கொண்டிருக்கிறோம். .. .. உங்களில் இன்னும் மிகப் பெரிய அளவில் – மிக அதிக எண்ணிக்கையில் – எங்கள் இயக்கத்தில் சேர்ந்து எங்களுக்கு ஆதரவு தர வேண்மென்று பணிவன்புடன் கேட்டுகொள்ளுகிறேன். ஒரு பெண்ணின் வயிற்றிலிருந்துதான் நாம் எல்லாரும் வந்தோம் என்பதை நாம் மறத்தலாகாது. .. ..” என்று தமது மிக நெடிய சொற்பொழிவிடையே அவர் குறிப்பிட்டார்.

மேலும் சில மாநில இயக்கத் தலைவர்கள் பேசிய பிறகு, துர்க்கா பேச முற்பட்டாள்: “எனது சொற்பொழிவு முடிந்த பிறகு கூட்டத்தினர் என்னைக் கேள்விகள் கேட்கலாம். எங்கள் இயக்கம் தப்பாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. அது சம்பந்தமான கேள்விகளை வரவேற்கிறேன்.. .. ..” என்று உரையின் தொடக்கத்தில் குறிப்பிட்ட பிறகு, தனது பேச்சிடையே பின் வருமாறு குறிப்பிட்டார்:

“தாம் எழுதிய ராமாயணத்தின் பின்னுரையில் ராஜாஜி, ‘சீதையின் துயரம் இன்னும் முடியவில்லை. அது நம் பெண்களின் துயரங்களில் இன்னமும் தொடர்கிறது’ எனும் பொருள்பட மனம் வருந்தி எழுதியுள்ளார். அது உண்மைதான் என்பதையே இன்றளவும் நடந்துவரும் நிகழ்வுகள் நிரூபித்து வருகின்றன. ராவணர்களின் தொகை மட்டும் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே வருகிறது. திரௌபதிகளின் தொகையும்தான்! ராமர்களைத்தான் காணவே யில்லை! பெண் என்பவள் ஒரு நுகர்பொருளாகவே கருதப்பட்டு வருகிறாள். அது மட்டுமின்றி, அவள் ஓர் உடைமையாகவும் கருதப்படுகிறாள். ஆடுமாடுகளை விற்பது போல் அவளை விற்கும் உரிமை தங்களுக்கு உண்டு என்று இன்னமும் சில ஆண்கள் நினைப்பதாகத் தெரிகிறது. அந்த அளவுக்கு நினைக்கிற ஆண்கள் குறைவு தானென்றாலும், அவள் ஓர் உடைமை என்கிற மனப்பான்மை அவர்களில் பெரும்பாலோரிடம் இருந்து வருகிறது என்பது கசப்பான உண்மையாகும். மறைந்த நம் பிரதமர் – அஸ்ஸாமிலா, வங்களாத்திலா என்று ஞாபகமில்லை – ஒருவன் தன் குடும்பச் செலவுக்காகத் தன் சொந்தத் தங்கையை முன்னூறு ரூபய்க்கு விற்றான் என்பதை அறிந்து கண் கலங்கிய செய்தி ஒரு பத்திரிகையில் சில நாள் முன்பு வந்ததைப் படித்திருப்பீர்கள். ஆளை விற்பது என்று வரும்போது பெண்ணைத்தான் விற்கிறார்கள்! இல்லையா? தேசத்தின் ஏதோ ஒரு மூலையில் நடந்த ஒரு நிகழ்ச்சியை நான் பெரிது படுத்துவதாக நினைக்கக்கூடாது. இது போல் ஆங்காங்கு நிகழ்ந்தவாறுதான் உள்ளது. பத்திரிகைகளில் இச் செய்திகள் அரிதாக வருகின்றனவே தவிர, இவை நிகழ்வது அரிதாகவன்று. ஓர் ஆங்கில நாளேட்டின் நிருபர் ஒருவர் வடக்கே சென்று தாமே ஒரு பெண்ணை விலைக்கு வாங்கிவந்து அந்த அவலத்தை மெய்ப்பித்ததை நினைவூட்ட விரும்புகிறேன். சூதாடிகள் இன்றளவும் ஆங்காங்கு பெண்களைப் பந்தயப் பொருளாக்கி விளையாடிக்கொண்டுதான் இருக்கிறர்கள். மகாபாரதக் காலத்தில் நிலவிய அவ்வநியாயம் இன்னும் எத்தனை நாள்களுக்குத் தொடரப் போகிறதோ, தெரியவில்லை.

“.. .. அநேகமாக, எல்லாருடைய பேச்சுகளுமே வரதட்சிணையைத் தொட்டன. ஒருவன் படித்தவனாக இருப்பதற்கும், வரதட்சிணை கேட்கிற தவற்றை அவன் செய்வதற்கும் எந்தச் சம்பந்தமும் இருப்பதாய்த் தெரியவில்லை. ஆணின் படிப்பு எவ்வளவுக் கெவ்வளவு அதிகமாக உள்ளதோ, அவ்வளவுக் கவ்வளவு அவன் வாங்குகிற வரதட்சிணைத் தொகையும் அதிகரிக்கிறது! இதுவே நடைமுறையா யிருந்து வருகிறது. வரதட்சிணைக்கு மாமியாரைக் குறை சொல்லுவதும் வழக்கமாகி வருகிறது. மாமியார் ஒரு பெண் என்பதால் நான் அவளுக்குப் பரிந்துகொண்டு வருவதாக யாரும் தயவு செய்து நினைக்கவேண்டாம். தப்பு என்பது அதை யார் செய்தாலும் தப்பே! ஆனால், பிள்ளையைப் பெற்றவள் தன் மகனை இன்னொருத்திக்குக் கொடுப்பதற்கு விலை கேட்பது எதனால் என்பதை நாம் யோசித்துப் பார்த்தால், அதன் பின்னணியில் ஆண்கள் இருப்பது புரியும். பெண்ணைக் காட்டிலும் ஆணே சிறந்தவன், உயர்ந்தவன் என்று அநாதிகாலந்தொட்டு ஆண் பெண்ணுக்குச் சொல்லி வந்துள்ளான். தன் உடல் வலிமை ஒன்றால் மட்டுமே அவனால் அப்படி ஓர் எண்ணத்தைப் பெண்ணின் மனத்தில் உருவாக்க முடிந்துள்ளது. மற்ற யாவற்றிலும் அவள் ஆணைவிடவும் மேன்மையானவள் என்பதை அவன் சாமர்த்தியமாக இருட்டடிப்பும் செய்தான். அவளுக்கென்று இருந்திருக்கக்கூடிய எண்ணங்களையும் தன் உடல் வலிமை கொண்டு அவனால் வீழ்த்த இயன்றுள்ளது! கல்வி மறுப்பின் மூலம் சுய சிந்தனையும் அவளுக்கு மறுக்கப்பட்டு வந்துள்ளது. இவ்வாறு, பெண்ணை விடவும் ஆணே சிறந்தவன் என்று காலங்காலமாக நம்ப வைக்கப்பட்டுவிட்ட பெண் தான் பெறும் ‘பெண்ணைக்காட்டிலும் உயர்ந்த’ தன் மகனை மற்றொரு பெண்ணுக்குத் தருகையில் அவனுக்கு ஒரு விலையை வைக்க முற்பட்டதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை! எனவே மாமியார்க்காரியின் வரதட்சிணை வாங்கும் போக்குக்குப் பொறுபேற்க வேண்டியவன் ‘பெண்ணை விட ஆண்தான் உயர்ந்தவன்’ என்று பொய் சொன்ன ஆணே யாவான்!” என்று அவள் குறிப்பிட்டபோது பெண்கள் கைதட்டினார்கள்.

– தொடரும்

jothigirija@vsnl.net

Series Navigation

ஜோதிர்லதா கிரிஜா

ஜோதிர்லதா கிரிஜா

மறுபடியும் ஒரு மகா பாரதம் – அத்தியாயம்- 3

This entry is part [part not set] of 28 in the series 20060106_Issue

ஜோதிர்லதா கிரிஜா


வாசல் வழிநடையில் நின்றுகொண்டு தன்னைப் பார்த்து ‘இளித்த’- அவளுக்கு அப்படித்தான் தோன்றியது- வள்ளியைக் காவேரி ஓர் எரிச்சலுடன நோக்கினாள். அவளது முகம் கணத்துள் சுருங்கிப் போய்விட்டிருந்தது.

“என்ன, வள்ளி ? எதுக்கு வந்தே ?” என்ற காவேரியின் கேள்விக்கு, “வேற எதுக்கும்மா நான் வருவேன் ? அஞ்சு ரூவா குடுத்தீங்கன்னா சவுகரியமா யிருக்கும், எம் மவளுக்கு மேலுக்குச் சொகமில்லே. அதுக்குத்தான் வத்தலப் பாளையத்துலேருந்து இம்மாந் தொலவு வந்தேன்.”

பத்மநாபனும் காவேரியும் உள்ளே சென்று குசுகுசுவென்று சற்று நேரம் பேசினார்கள். பிறகு, பத்மநாபன் தமது இடுப்பிலிருந்து ஓர் ஐந்து ரூபாய்த் தாளை எடுத்ததைக் கவனித்த துர்க்கா வியப்படைந்தாள். ‘யார் இந்த வள்ளி ? எதுக்காக அடிக்கடி வந்து அப்பாட்டேருந்து பணம் வாங்கிண்டு போறா ?’

“அம்மா! தாயீ ! எங்க வீட்டுக்கு ஒரு நாளு வாறியா ?” என்று வள்ளி துர்க்காவைப் பார்த்துப் புன்சிரிப்புடன் கேட்டாள்.

வள்ளி துர்க்காவிடம் ஏதோ பேசுவதைக் கவனித்த காவேரி, “ஏய்! துர்க்கா! வாடி இங்கே.. ..” என்று மிரட்டாத குறையாக அழைத்தாள்.

“உங்காத்துக்கெல்லாம் வந்தா எங்காத்துல திட்டுவா!” என்று சுருக்கமாய்ப் பதில் சொல்லிவிட்டு அவள் உள்ளே ஓடினாள். கூடத்துக்கு வந்த அவள் ஊஞ்சலில் உட்கார்ந்த போது காவேரியும் பத்மநாபனும் இரேழியை நோக்கி நடந்தனர்.

காவேரி நீட்டிய பணத்தைப் பெற்றுக் கண்களில் ஒற்றிக்கொண்ட வள்ளி, “நீங்க நல்லாருக்கணும், தாயீ ! யாரோ செஞ்ச தப்புக்கு நீங்க இப்பிடிப் பலியாடு ஆனீங்க! எனக்குப் புரியுதும்மா. ஆனா எனக்கு உங்கள விட்டா வேற யாரும்மா இருக்காங்க ?.. .. உடம்பும் மோசமாயிருச்சு .. அப்புறமேப்பட்டு, இன்னொரு வெசயஞ்சாமி!” என்றவாறு பத்மநாபனை நோக்கிய பின் சற்றே தயக்கம் காட்டினாள்.

“சொல்லு.”

“போன வெசாளக் கெளமையன்னிக்கு எம்மவ வயசுக்கு வந்திரிச்சு.. .. அதுக்கு ஒரு நல்ல துணி கூட இல்லே.. .. கிளிசச் சேலை ஏதாச்சும் குடுத்தீங்கன்னா, அது மானமாப் போத்திக்கும். நான் பெத்த மவ வயசுக்கு வந்துட்ட சந்தோசத்தைக் கொண்டாட முடியாத பாவியா இருக்குறேன்!” என்ற வள்ளி அழத் தொடங்கினாள்.

“இத பாரு, வள்ளி. இன்னைக்கு நல்ல நாளு. நல்ல நாளும் அதுவுமா ஆத்து வாசல்ல நின்னுண்டு அழாதே. இரு, வறேன்,” என்ற காவேரி உள்ளெ சென்றாள்.

பத்மநாபன் அவளைப் பின்தொடர்ந்தார்.“` டிரங்குப் பெட்டியிலிருந்து ஒரு பழைய புடைவையை எடுத்துக்கொண்டு காவேரி வள்ளியிடம் போனாள்.

“இந்தா. பதினெட்டு மொழப் பொடவை. ரெண்டாக் கிழிச்சு மேலாக்குப் போட்டுக்கலாம். கரையில ஒரே ஒரு இடத்துல சின்னக் கிழிசல் இருக்கு. தெச்சுண்டுடு. அடிக்கடி வந்து எங்க உசிரை வாங்காதேடி, வள்ளி!”

“ரொம்ப சந்தோசந் தாயீ. .. .. எம்மவளுக்கு எப்பிடிக் கலியாணத்தை முடிப்பேனோ தெரியல்ல.”

“நோக்கென்னடி, வள்ளி ? எவனாவது பரிசம் போட்டுட்டு உம் பொண்ணைக் கல்யாணம் பண்ணிப்பான். எங்களாட்டமாவா, ஆயிரக் கணக்குல வரதட்சிணை கேட்டுப் பிடுங்குறதுக்கு ? உம் பொண்ணுக்குக் கல்யாணம் நிச்சியமானதும் வந்து சொல்லு. அய்யா பணம் தருவாரு.”

“சரிங்கம்மா. சாமிகிட்ட சொல்லிருங்க. பாப்பா! நான் போயாரேம்மா.”- வள்ளி உள்ளே தலை திருப்பிக் குரல் கொடுத்தாள்.

“சரி. போயிட்டு வாங்கோ.”

உள்ளே ஊஞ்சலில் அவளுக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்த பத்மநாபன் தாம் முதுகு சொறிந்துகொண்டிருந்த விசிறிக் காம்பால் துர்க்காவின் தலையில் இலேசாக ஒரு போடு போட்டுவிட்டு, மிகச் சன்னமான குரலில், “அவாளுக்கெல்லாம் என்னடி மரியாதை ? அசட்டுக் கழுதை! வாங்கோவாம், வாங்கோ!” என்று அழகு காட்டினார்.

“நீங்கதானேப்பா நேத்திக்குச் சொன்னேள், பெரியவாளை யெல்லாம் வா, போன்னு பேசப்படாதுன்னு ?”

‘சொன்னேந்தான். ஆனா, அதுக்குன்னு தராதரம் இல்லியா ? குப்பை அள்ற சுப்பம்மா, வாசல் தெளிக்கிற வள்ளியம்மா இவாளையெல்லாமா வாங்கோ, போங்கோன்னு சொல்றது ? மண்டூகமே! ”

துர்க்காவுக்கு ஏதோ புரிந்தது மாதிரியும் இருந்தது, எதுவுமே புரியாதது போலவும் இருந்தது. எனினும் மேற்கொண்டு அவள் எதுவும் பேசவில்லை. கொஞ்ச நாளாகவே அவளுக்கு வள்ளியைப் பற்றி அறியும் அவா இருந்து வந்தது.

“அப்பா!”

“என்ன ?” – அந்த ‘என்ன’ வின் தோரணையே அவளது வாயை அடைத்துவிட்டது.

“என்னன்னு கேட்டேனோன்னோ ?”

“ஒண்ணுமில்லேப்பா.”

துர்க்கா கேட்க நினைத்துக் கேட்காமல் விட்டது வள்ளியைப் பற்றியது என்பதை அவரால் ஊகிக்க முடிந்ததால், அதை விரும்பாத நிலையில், அவர் மேற்கொண்டு அவளை எதுவும் கேட்கவில்லை.

வள்ளியை அனுப்பிவிட்டு உள்ளே வந்த காவேரி, “என்னன்னா! இவளோட படுத்தல் வரவர ஜாஸ்தி யாயிண்டே இருக்கே ? இதுக்கு ஏதானும் ஒரு வழி பண்ணுங்கோ. இவளோட வாயை எத்தனை நாளுக்கு நாம அடைச்சு வைக்க முடியும் ? ஏற்கெனவே என்னத்தையானும் சொல்லிண்டு அலையறாளோ என்னமோ ?” என்றாள்.

“அதை யாருடி கண்டது ? அவ வாய்க்கு நாம பூட்டுப் போட முடியுமா என்ன ?”

“அது சரி. .. பொண்ணு பெரியவளாயிட்டது இவளுக்கு சந்தோஷ சமாச்சாரமாமே ? கஷ்டம், கஷ்டம்! பொம்மனாட்டிகளுக்குள்ள சாபக்கேடு இல்லியோ அது ? பொண்ணு பெரியவளாயிட்டா தாயார்க்காரி வயித்துல நெருப்பைன்னா கட்டிக்கணும் ? இவளுக்கு சந்தோஷமாமே, சந்தோஷம்! அழகுதான்!”

“காலம் காலமா அப்படித்தானே சொல்லிண்டிருக்கோம் ? அவ மட்டும் வேற மாதிரியவா சொல்லுவா ? கல்யாணம் நிச்சியம் பண்ணிட்டு வந்தான்னா கையில கொஞ்சம் பணம் குடுப்போம்.”

“நானும் சொன்னேன். என்ன இருந்தாலும் பாவம்தான். இப்பிடி ஒரு வாழ்க்கை அவளுக்கு அமைஞ்சிருக்க வேண்டாம். அவளைச் சொல்லியும் குத்தமில்லே. நம்மாத்து மனுஷாளுக்கும் புத்தி இல்லே!”- இவ்வாறு சொன்னபடியே காவேரி விருட்டென்று அங்கிருந்து அகன்றாள்.

இதை யெல்லாம் கவனியாதவள் போல் கவனித்துக்கொண்டிருந்த துர்க்காவுக்கு ஒன்றுமே புரியவில்லை. அவள் ஓரத்து விழிகளால் பத்மநாபனை ஏறிட்டாள்.அவர் முகம் சிறுத்துவிட்டிருந்தது. துர்க்காவின் மனத்தில் வியப்பு ஏற்பட்டது. அம்மா அப்பவைக் கடிந்து அவள் கேட்டதே இல்லை. அப்படி அவள் கடிந்தாலும், அவர் அதற்குப் பதிலடி தராமல் சும்மா இருந்தும் அவள் பார்த்ததில்லை!

வள்ளி வருகிற போதுகளில் மட்டுந்தான் அம்மாவின் கை ஓங்கி இருப்பதாகவும் அப்பா கொஞ்சம் குரல் தாழப் பேசுவதாகவும் கூட அவள் நினைத்தாள். வள்ளிக்கும் தங்கள் குடும்பத்துக்கும் ஏதோ சம்பந்தம் இருப்பதாகவும் கூட அவளுக்குத் தோன்றியது. பதினொரு வயதுதான் என்றாலும், வயதுக்கு மீறிய அறிவுக்கூர்மை படைத்த துர்க்கா, ‘அதை எப்படிக் கண்டு பிடிக்கிறது ?’ என்றும் கூட அவ்வப்போது யோசித்ததுண்டு. ‘அம்மாவையே கேட்டுப் பார்த்துவிட்டால்தான் என்ன ?’ என்று இன்று நினைத்தாள். வள்ளி வரும் போதெல்லாம் அம்மாவும் அப்பாவும் குசுகுசுவென்று பேசுவது நினைவுக்கு வந்ததும், தன் கேள்விக்கு உண்மையான பதில் கிடைக்காது என்று அவளுக்கு உள்ளுணர்வாய்ப் பட்டாலும், இன்று தலை வெடிக்கும் போல் ஆனதால் அப்படி ஒரு முடிவுக்கு அவள் வந்தாள்.

அடக்க மாட்டாத ஆவலுடன் ஊஞ்சலிலிருந்து இறங்கிய அவள் சமையற்கட்டை யடைந்து, “அம்மா! சாம்பாருக்கு அரைச்சுத் தரட்டுமா, அம்மா ?” என்றாள் கரிசனமாக.

“வா, வா. பாவாடையை நன்னாத் தூக்கிச் சொருகிண்டு பாங்கப் பணிய அம்மிக்கு முன்னால உக்காரு.”

துர்க்கா அப்படியே செய்தாள். பிறகு குழவியை உருட்டி உருட்டி அம்மி மீதிருந்தவற்றை அரைக்கலானாள்.

“வெறுமன உருட்டினா மசியாதுடி, மக்கு! நன்னா ஆழுத்தி அழுத்தி உருட்டணும். கைக்கு வலிக்குமோ, குழவிக்கு வலிக்குமோங்கிறாப்ல பந்து உருட்றாப்ல உருட்டாதே.. என்ன ? புரிஞ்சுதா ?”

“சரிம்மா.”

“ஆங்! அப்பிடித்தான். இன்னும் ரெண்டே மாசத்துல நீ பத்துப் பேருக்குச் சமையல் பண்ற அளவுக்குக் கத்துண்டுடணும்.”

“சரிம்மா, .. அம்மா!”

“என்னடி ?”

“அந்த வள்ளி எதுக்கும்மா சும்மாச் சும்மா நம்மகிட்டேருந்து காசு வாங்கிண்டு போறா ?”

“ரொம்ப நாளுக்கு முந்தி -அதாவது உங்க பாட்டி காலத்துல- அவ இந்தாத்துல வேலை செஞ்சவடி. அந்த இதுல வந்து தொல்லை பண்றா.”

“பாட்டி காலத்துல வேலை செஞ்சதுக்கு இப்ப எதுக்கும்மா நாம காசு குடுக்கணும் ?”

“அந்த அறிவு உங்கப்பாக்குன்னாடி இருக்கணும் ? போய் உங்கப்பா கிட்ட கேளு.”

இவ்வாறு சொன்ன மறு கணமே, “நான் சொன்னேனேன்னு உங்கப்பாட்ட போய்க் கேட்டுக் கீட்டு வைக்காதே. உன் முதுகப் பொளந்துடுவா. சரி, சரி. அம்மியைப் பாத்து அரை. ஜலம் வழியறது பாரு.”

“சரிம்மா.” – காவேரியின் பதிலால் துர்க்காவின் மனம் சமாதானம் அடையவில்லை. அம்மாவும் அப்பாவும் சேர்ந்துகொண்டு எதையோ மறைப்பதாய் அவளுக்குத் தோன்றியது.

“நகரு, சொல்றேன். பாக்கியை நான் அரைக்கிறேன். நீ அரைச்சு முடிக்கிறதுக்குள்ள பொழுது சாஞ்சுடும். இன்னும் நாலஞ்சு தரம் அரைச்சுப் பழகினா சரியா வந்துடும். எந்திரு, எந்திரு.”

துர்க்கா மகிழ்ச்சியுடன் எழுந்துகொண்டாள். .. ..

.. .. .. ரங்கநாத சாஸ்திரிகள் படை பதைக்கிற வெயிலில் தாழங்குடையைப் பிடித்தவாறு லொங்கு லொங்கென்று வத்தலப்பாளையத்தை நோக்கி நடந்துகொண்டிருந்தார். ‘நாளைக்குப் போய்ப் பத்மநாபன் தேவராஜ அய்யரோட பேசறதுக்குமுந்தி நான் அவரைப் பாத்துப் பேசிடணும். பத்மநாபன் தன்னோட வண்டவாளம் வத்தலப் பாளயம் வரைக்கும் எங்கே போயிருக்கப் போறதுன்னு நினைச்சிண்டிருப்பான்.. ..அதைச் சொல்லி ரெண்டு துட்டு சம்பாதிச்சுடணும். நேக்கும் ஒரு பொண்ணு இருக்காளே கல்யாணத்துக்கு!’

.. .. .. “வாங்கோ, வாங்கோ, சாஸ்திரிகளே! உக்காருங்கோ. அடியே, பார்வதி! சாஸ்திரிகளுக்கு மோரு கொண்டா.!” என்றபடி தேவராஜன் ரங்கநாத சாஸ்திரிகளை வரவேற்று உட்காரப் பணித்தார்.

“அப்பனே ஷண்முகா, நமச்சிவாயம், அம்மா, காமாட்சி! என்ன வெய்யில்! என்ன வெய்யில்! வெய்யிலைப் பாக்காம நான் வந்திருக்கேன். ஒரு முக்கியமான விஷயம் உங்க கிட்ட சொல்லணும்.. ..” என்றவாறு சாஸ்திரிகள் பலகையில் அமர்ந்துகொண்டார்.

“என்ன அப்படி முக்கியமான விஷயம், இந்த சுட்டுப் பொசுக்குற வெய்யில்ல வரும்படியா ? அப்ப, அது ரொம்பவே முக்கியமானதாத்தான் இருக்கணும்.”

“பின்னே ? ரொம்பவே முக்கியமான விஷயந்தான்.” -ரங்கநாத சாஸ்திரிகள் உடனே பேச்சைத் தொடராமல் தேவராஜனின் பரபரப்பை அதிகமாக்கும் முயற்சியில் தொண்டையைக் கனைப்பதில் சில நொடிகளைக் கடத்தினார்.

“சொல்லுங்கோ, சாஸ்திரிகளே!”

“சொல்றேன், சொல்றேன்.. .. ..க்க்கும்.. க்கும்.. சிலுக்குப்பட்டியில பத்மநாபன்னு ஒரு ஆசாமி. அவருக்கு ஒரே பொண்ணு. பதினொரு வயசு ஆறது. வரன் தேடிண்டிருக்கான். நாளைக்கு உங்காத்துக்கு வந்து நம்ம சிவகுருவுக்குக் குடுக்கிறதுக்கு சம்பந்தம் பேச வர்றதா யிருக்கான். மனுஷன் தங்கம்னா தங்கம். அவனோட தர்மபத்தினியும் அப்படியே. ஆனா ஒரு சின்னச் சிக்கல் இருக்கு! அது ஒண்ணும் பெரிய விஷயம் இல்லே. இருந்தாலும் உங்க காதுல போட்டுடணு மில்லியா! எத்தனை நாளத்துப் பழக்கம் நமக்குள்ள! உண்மையை மறைக்கிறது கூடப் பொய் சொறதுக்குச் சமானந்தானே ? என்ன சொல்றேள் ?”

தேவராஜன் நிமிர்ந்து உட்கார்ந்தார். விழிகள் விரிவு கொண்டன. இமைக்காமல் அவரைப் பார்த்தபடி, “என்ன சிக்கல் ?” என்றார்.

“சொல்றேன், சொல்றேன். ஆனா அது ஒண்ணும் அவா சம்பந்தம் வேண்டாம்னு சொல்ற அளவுக்குப் பெரிய விஷயம் இல்லே. இருந்தாலும் வரதட்சிணை அமவுண்ட்டை ஏத்திக் கேக்குறதுக்கும் சீர்செனத்திகளை அதிகப்படியாப் பேசுறதுக்கும் பிரயோஜனமாயிருக்கும். அதான். வேற ஒண்ணுமில்லே, ” என்ற ரங்கநாத சாஸ்திரிகள் தம் வெற்றிலைக்கறைப் பற்கள் வெளியே துருத்தப் பெரிதாய்ப் புன்னகை செய்தார்.

—-

தொடரும்

jothigirija@vsnl.net

Series Navigation

ஜோதிர்லதா கிரிஜா

ஜோதிர்லதா கிரிஜா