தனிமரம் நாளை தோப்பாகும் – 3

This entry is part [part not set] of 48 in the series 20060519_Issue

எஸ். ஷங்கரநாராயணன்


பூரணியிடம் அவன் யூனியன் விஷயங்களை விவாதிக்கவில்லை. கூடாது என்பதல்ல. இதை எப்படி அவள் எதிர்கொள்வாள் என யூகிக்க முடியவில்லை அவனால். வீட்டு நிலைமை ஏற்கனவே மோசமாய் இருந்தது. ஒரு பிரகாசமற்ற வருங்காலத்தை அவளால் பயமின்றி ஏற்றுக் கொள்ள முடியுமா என்று தெரியவில்லை.

சரவணன் அவளைப் பார்த்தான். எப்போதும் புன்னகைக்கிற முகம். சிணுக்கம் காட்டாத முகம். அவளை முதல் பார்வையிலேயே பிடித்துப் போய் அவன் திருமணம் செய்து கொண்டான். எளிய கோவில்த்திருமணம். அப்போது அவள் எவ்வளவு அழகாய் இருந்தாள். காலையில் முதல் பார்வைக்கு வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருப்பாள். வாரப்படாத தலைமுடி கலைந்து பிரிந்து கிடக்கும். பொழுது சுருதி சேர்க்கும் அதிகாலை. அவள் கோலம் போட்டுவிட்டுத் திரும்புவாள். வாசலில் அவன் குத்திட்டு உட்கார்ந்திருப்பான். அவள் அவனைப் பார்த்துப் புன்னகைப்பாள்.

”கோலம் எப்பிடி?”

”இதோ, இறைவன் போட்ட கோலம்” என அவள் கன்னத்தைத் தீண்டினான்.

அவள் கருப்புதான். சாமர்த்தியமாய் எதுவும் அவள் பேசுகிறாளில்லைதான். ஆனால் எப்படியோ அவள் அழகாய் இருந்தாள். வசீகரமாய் இருந்தாள். சில சமயங்களில் அதன் காரணம் பற்றி அவன் ஆச்சர்யத்துடன் யோசிப்பான். ஆ, அவள் அன்பு மகா சமுத்திரம். அதுதான் உண்மை. அன்பு அவளுள் பூப்போல விரிந்து புன்னகைத்து வண்டுகளை வரவேற்றது. எப்போதும் அமைதியைக் காட்டுகிற கண்களின் கருணை. சாதரணமாகவே குறுஞ் சிரிப்புடனான அதரங்கள். அவளைச் சுற்றிலும் அன்பின் கிரணங்கள், ஒரு வாசனை வியூகம் அமைத்தாற் போல…

ஒருவேளை என்னைத் திருமணம் செய்யாமல், வேறொரு பணக்கார மாப்பிள்ளைக்கு வாழ்க்கைப் பட்டிருந்தால் அவள் இன்னும் சந்தோஷமாக இருந்திருக்கலாம். வெயிலில் வாடினாப் போல எப்படி ஆகிவிட்டாள். மனைவியையும் குழந்தையையும் தன்னைவிட மேலாகப் பேணவேண்டும் என்றெல்லாம் திருமணத்துக்குமுன் அவன் நினைத்திருந்தான். மீண்டும் மீண்டும் பயன்படுத்தி அவளது துணிகள் பொலிவை இழந்து விட்டன. பிளாஸ்டிக் ரோஜாவாட்டம், அவள் ஆளே வாட்டம் கண்டுவிட்டாள். ஒரு அவசரம், குழந்தைக்கு முடியவில்லை, என்றால் அவளை டாக்டர் வீட்டுக்குக் குழந்தையுடன் அனுப்பி விட்டு கடன்தேடி நண்பர்கள் வீட்டுக்கு அவன் ஓட வேண்டியிருக்கிறது. ஒருநாள் ரசாபாசமாகி விட்டது. அவள் மருத்துவருக்குக் காத்திருந்தாள். நல்ல கூட்டம். பணம் குறைவாக வாங்கிக் கொள்கிற கைராசியான மருத்துவர். இதோ அடுத்து அவள் உள்ளே போக வேண்டும். உள்ளே வரிசைக்காகவும், வெளியே இவனுக்காகவும் மாற்றி மாற்றிப் பார்த்துப் பரபரத்திருந்தாள் அவள். து¡ரத்தில் இவனைப் பார்த்ததும் சீக்கிரம் வாங்க, எனக் கையசைத்தாள்.

”வா வீட்டுக்குப் போகலாம்” என்றான். மூச்சிறைத்தது.

”ஏன்? டாக்டர்?”

”போலாம் வா” என அவன் முகத்தைத் திருப்பிக் கொண்டான். அவளுக்கும் அழுகை வந்தது. மெளனமாய்த் தெருவில் இறங்கி இருவரும் நடந்தார்கள்.

தொழிற்சாலை எப்போது திறக்கும் தெரியவில்லை. ஒருவாரம் போல ஆகிவிட்டது. பிரச்னை முடிவுக்கு வரவில்லை. பிலிப் அவர்களைப் பேசக் கூப்பிடவில்லை. ஒருவேளை காசியே அவரைத் தடுத்து விட்டானோ என்னமோ!

தோழர்கள் அதிருப்தி அடைந்திருந்தார்கள். ஒருவேளை காசி சொன்னபடி வேலைக்குத் திரும்பி யிருக்கலாம், என அவர்கள் நினைக்க ஆரம்பித்திருந்தார்கள். பலர் வெளிப்படையாகவே இவனிடம் கூறவும் செய்தார்கள். இந்நிலை தொடர்வது கவலைக்குரியது. சரவணனும் அவனது சகாக்களும் எதாவது செய்தாக வேண்டியிருந்தது. முதலாளியை உடனே பேச்சுவார்த்தைக்கு அழைக்கிறாப் போல ஏதாவது செய்தாக வேண்டும். சரவணன் யோசித்தபடி அறையில் உலாத்தினான்.

குழந்தைக்குத் தடுப்பூசி போட்டிருந்தது. காலையில் அவனும் அவளும் மார்க்ஸை டாக்டரிடம் கூட்டிப் போயிருந்தார்கள். மார்க்ஸ் முகம் பார்த்துச் சிரிக்க ஆரம்பித்திருந்தான். விளக்குகளைப் பார்த்தாலே அவனுக்கு உவகை பொங்கியது. டாக்டரைப் பார்த்ததும் மார்க்ஸ் பற்களற்ற வாய் திறந்து ஊங்… என விநோதச் சத்தத்துடன் சிரித்தான். ”நல்ல பையன், ஜிக்கு ஜிகி ஜிகி” என அவர் அவன் தொபைபையை அமுக்கினார். கெக் கெக் கெக், என குழந்தையும் சிரித்தபடி வாயில் விரலைப் போட்டுக் குதப்போ குதப்பென்று குதப்பி எச்சிலை வழிய விட்டது. டாக்டர் குழந்தை புட்டத்தில் நறுக் – வ்வீல், என அது அழுத அலறலில் பெத்தவளுக்குக் கண்ணில் கண்ணீர் கொட்டியாச்சு!

”ஒண்ணில்லடா, ஜிக்கி ஜிகி ஜிகி’ எனக் குழந்தையை வாங்கிக் கொண்டு புட்டத்தில் அழுத்தித் தேய்த்தான். ‘நீ ஏண்டி அழறே? டாக்டர் உனக்கா ஊசி போட்டாரு?” என்றான். சிரித்தார்கள்.

குழந்தைக்கு ஜுரம். ஊசிக்கு ஜுரம் வரும்தான். முகம் வீங்கி பெரிய மூச்சுக்களுடன் மார்க்ஸ் படுத்திருந்தான். து¡ளியைத் திருப்பித் திருப்பி விட்டு மூன்று நான்கு ஈரத் தீவுகள். து¡ளிக்கட்டைக்கு மேல் காற்றுக்குச் சுற்றும் காற்றாடி – குமாரசாமி வாங்கித் தந்தது. காற்றுக்குப் பாவாடையாய் அது சுழன்றது. சரவணன் து¡ளிக்குள் எட்டிப் பார்த்தான். குழந்தை து¡ங்கியிருந்தது.

அப்போதுதான் ரத்தினம் வந்து சேர்ந்தான். ”வணக்கம் தோழர்” என்றபடி உள்ளே வந்தான். தரையில் படுத்திருந்த பூரணி வெட்கத்துடன் எழுந்து கொண்டு வாங்க, என்கிறாப் போலத் தலையசைத்தாள்.

”என்ன தோழர் இந்நேரம்?” என்று பனியனைப் போட்டுக் கொண்டான் சரவணன்.

”மினிஸ்டர்டேர்ந்து பேச்சு வார்த்தைக்கு வரச்சொல்லி தந்தி வந்திருக்கு…”

”அட” என்றபடி சரவணன் அவன் கிட்ட வந்து உட்கார்ந்தான். ”எப்ப வந்தது?”

”மூணுநாளாச்சி. யூனியனுக்கும் பிலிப்புக்கும், ரெண்டு பேருக்குமே வந்திருக்குது. ஆனா…”

சரவணன் அவனைப் பார்த்தான்.

”காசி தந்தியை நம்மகிட்ட மறச்சிட்டாப்டி…”

”ஓ – ஏன்?”

”நமக்குத் தெரியாமல் இப்ப ரயிலேறப் போறான்!”

”உண்மையாவா?”

”கேளுங்க தோழர். இங்க ரயிலேறினாத் தெரிஞ்சிரும்னு வாஞ்சியூர் போயி மாறிக்கறான். அதுவரை முதலாளி ஒரு ஏற்பாடு பண்ணித் தர்றாரு…”

”அவனும் முதலாளியுமா மெட்ராஸ் போயி மந்திரி கிட்ட, நாங்களே பேசி விஷயத்தைத் தீர்த்துக் கிட்டோம்னு கேஸை செட்டில் பண்ணிருவானோ?”

‘அதேதான்!”

”பூரணி, ஒரு காபி?…”

”இதோ” என்று பூரணி உள்ளே போனாள்.

”இப்ப எதுக்கு, பால் இருக்குதோ இல்லியோ?”

”பால் பெளடர்! குழந்தை இருக்கே!” என்று சரவணன் புன்னகைத்தான். பால் பெளடர் தீரப் போகிறது. புது டின் வாங்க வேண்டும், என்று உடனே ஞாபகம் வந்தது.

ரத்தினம் குனிந்து அதிகம் சத்தமில்லாமல், ”அப்ப ராத்திரி ஒரு எட்டுமணி வாக்குல நம்ம குமாரசாமியவங்க மாமா கார் ஷெட் இருக்கில்ல… அங்க வாங்க, பேசலாம்.”

”அதான் சரி. ம·ப்டில போலிசுங்க சுத்தறாங்கன்னு கேள்வி…”

அதற்குள் பூரணி காபி கொண்டு வந்தாள். பேச்சை நிறுத்திக் கொண்டார்கள்.

>< >< இரவு முற்றியதும் சரவணன் சட்டையை மாற்றிக் கொண்டு கிளம்பினான். பூரணி குழந்தையைத் தோளோடு அணைத்தபடி வாசல்வரை கூட வந்தாள். எங்கே போகிறேன், என அவன் சொல்லவில்லை. அவளும் கேட்கவில்லை. அவனாகச் சொல்ல அவள் விரும்பினாள். எதிர்பார்த்தாள். முன்னெல்லாம் எல்லாவற்றையும் அவளுடன் அவன் பேசுவான். படித்த புத்தகம் பற்றி, ஆணாதிக்கம் பற்றி, நம்முடன் கூடவே வரும் பூர்ஷ்வா இயல்புகள் பற்றி... ''நீ என்ன நினைக்கிறே?'' ''நீங்க சொன்னாச் சரி!'' அவன் அவளை ஒரு பிரியத்தோடு பார்ப்பான். ''நீ என்னை அதிகமா மதிக்கறியோன்னு படுது...'' ''இருக்கட்டும்.'' 'இல்ல, நான் ஏதும் தப்பே பண்ண மாட்டேனா?'' ''பெரிய தப்பா எதும் பண்ணிற மாட்டீங்க!'' என்பாள் புன்னகையுடன். அவளது அதித நம்பிக்கையே அவனைச் சங்கடப் படுத்தும். ஒருவேளை தன்வட்டம் விட்டு வெளேயே வர மறுக்கிறாளோ? கொஞ்சநாளாய் திடீரென்று அவன் பேசுவதையே நிறுத்தி விட்டான். தனக்குத் தானே யோசிக்கிறான். நெடுக வீட்டுக்குள் நடக்கிறான். ''யாராவது வந்தால் நான் வெளியே போயிருக்கேன்னு...'' ''சொல்லல'' என்றாள் முகம் பார்த்து. சரவணன் தலையை ஆட்டிவிட்டு தெருவில் இறங்கினான். சீனிவாசனும் குமாரசாமியும் ஏற்கனவே வந்திருந்தார்கள். இவன் வழியில் ரத்தினத்தைப் பார்த்தான். சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு இவர்கள் ஷெட்டுக்குள் நழைந்தார்கள். ''என்ன காசி இப்பிடி ஆய்ப்போனான்?'' என்று ஆரம்பித்தான் சீனிவாசன். ''பணம். வைடமின் 'ப'!'' ''அன்னிக்கு அவனைப் பந்தாடிறலாம்னு ஒரு வெறி. அடக்க சிரமமாப் போச்சு.'' ''சரி, இப்பத்தைய விஷயம் பேசலாம்'' என்றான் குமாரசாமி. ''விஷயம் இப்ப எல்லார்த்துக்கும் தெளிவாப் புரிஞ்சிட்டது. காசி இப்ப முதலாளி சார்பா, அவர் கைப் பொம்மையா ஆயிட்டாப்ல. மந்திரிகிட்ட கூட அவன் நம்மள விட்டுக் குடுப்பான். இதுனால என்னாவும்னா...'' ''ம்'' ''பெரிசா ஒரு மாத்தமும் இருக்காது. நான் கவனிக்கிறேன். நீங்க வேலைக்குப் போங்க,ன்னு மந்திரி ஒரு அறிக்கை விடுவாரு.'' ''அப்பறம் என்ன, காக்கைக் கூட்டத்ல கல்லெறிஞ்சாப்லதான்.'' ''நிலைமை இப்பிடி முகவெடுப்பு கொள்ளுவதை நாம எப்பிடியாவது தடுத்தாகணும்.'' ''நிர்வாகம் உடனடியா நம்மை கவனிக்கணும். பணிஞ்சு வரணும்.'' ''நாளைக்கு நம்மை அலட்சியப் படுத்த அவனுக்குத் தோணக்கூடாது.'' ''எல்லா அப்பிடியே இருந்திருக்கும், இடையில இந்தக் காசி டபுள்கேம் ஆடி...'' ஷெட்டில் விளக்கை அணைத்து விட்டு இருளில் அவர்கள் உட்கார்ந்திருந்தார்கள். யார் பேசுகிறார்கள் என்று சட்டென்று பிடிபடவில்லை. ஒரே சமயம் ரெண்டு பேர் பேச ஆரம்பித்து, பின் ஒருவன் நிறுத்திக் கொண்டான். நாலுபேரில் யாரோ ஒருவன் மூலையில் இருந்த மண்பானையில் இருந்து தண்ணீர் குடிக்கிறான். ''தோழர், எனக்கும்...'' ''காசி ஊருக்குப் போவது யாருக்கும் தெரியாதில்லையா?'' ''ம்ஹ¤ம். நமக்கே டேக்கா குடுக்கறாளாச்சே? அதெல்லாம் உஷார்ப் பார்ட்டி!'' ''நைட்டு ஒரு ரெண்டு மணிப் போல கிளம்புறான். செம்பனார் ஊரணிவரை நடை.'' ''ஏன்?'' ''அங்கேர்ந்து, பிலிப்போட வண்டி நிக்கும். அதுல ஏறி...'' ''வாஞ்சியூர்.'' ''ஆமா.'' ''தோழர் ஒண்ணு பண்ணலாமா?'' என்றான் குமாரசாமி. ''நிர்வாகம் பணிஞ்சி வரணும். காசி மாதிரி ஆளுங்களுக்கு ஒரு படிப்பினையா அமையணும். அதுனால...'' ''அதுனால?'' ''காசி வெளியூர் போறதும் யாருக்கும் தெரியாது.'' ''சொல்லுங்க குமாரசாமி அதுனால என்ன?'' ''காசியை... தீர்த்துக் கட்டிறலாம்!'' ''கொலையா?'' ''இல்ல, வன்முறை. வேற வழியில்ல. மயில் போடுறாப்ல இல்ல. நாம பிடுங்கிக்க வேண்டிதான்.'' அவர்கள் யாருமே கொஞ்ச நேரம் எதுவும் பேசவில்லை. ''இது சரியா?'' ''போராட நான் எந்த ஆயுதத்தை எந்தணும்ன்றதையே நம்ம எதிரிதான் தீர்மானிக்கிறான்! படிச்சிருக்கீங்களா?'' ''எங்கல்ஸ். இல்லியா?'' ''யோசிக்க நமக்கு அவகாசமில்லை.'' ''சரி'' என்றான் சரவணன். ''தோழர் விஜயகுமார் எப்படி இறந்தான்? பிலிப் இரக்கப் படவில்லை. அ. அவரால் இந்த இறப்பைத் தவிர்த்திருன்க முடியாதா என்ன?'' ''சம்மதிக்கிறேன்'' என்று சீனிவாசன் சொல்லவும், ரத்தினம் ''விஷயத்தை என்னிடம் விடுங்கள். காசியை நான் கவனித்துக் கொள்கிறேன்'' என்றான். ''நால்வருமே செயலுக்குத் தயார்... ம், சரவணன் வேண்டாம்'' என்றான் குமாரசாமி. ''ஏன்?'' என்றான் சரவணன். ''கைக்குழந்தை.'' ''இருக்கட்டும். நீங்கள் எல்லாரும் குடும்பப் பொறுப்பு இலலாதவரா?'' ''ஆனால் நீ எங்களில் இளையவன். எங்களின் சகோதரன்...'' ''நாம் உணர்ச்சிவசப் பட வேண்டாம் என்று தோன்றுகிறது'' என்றான் சரவணன். ''நமக்கு முக்கியமான வேலைகள் காத்திருக்கின்றன.'' ''சரி, யாரென்பதைப் பிறகு பார்க்கலாம்'' என்றான் குமாரசாமி. ''தோழர் கணேசலிங்கத்திடம் சொல்லி கைக்குண்டுகள் செய்ய ஏற்பாடு செய்திருக்கிறேன்.'' ''அவருக்கு முடியுமா?'' ''போரில் காயம்பட்டு ஓய்வு பெற்றவர் அல்லவா?'' ''அவர் விஷயங்கள் அறிந்தவர்தான். நல்லது. இப்போது, திட்டம் என்னவென்றால், நான்...'' ''இல்லை, நான்தான்.' ''சரி, சீட்டுக் குலுக்கிப் போடலாம்'' என்றான் சரவணன். ஒரு மெழுகுவர்த்தி ஏற்றிக் கொண்டார்கள். ''முதலில் யாரென்று தெரியட்டும். பிறகு திட்டம்...'' என்றான் சரவணன். ''அவரவர் பெயரை அவரவர் எழுதலாம். பெயர் எதுவும் விடுபடாதிருக்கும்!'' எழுதிக் குலுக்கினார்கள். ''யார் எடுப்பது?'' ''அதையும் சீட்டெடுத்துப் பார்ப்போமா?'' என்றான் ரத்தினம். எல்லாரும் சிரித்தார்கள். பிறகு அவனே ஒரு சீட்டை எடுத்து ''ரத்தினம்'' என தன் பெயரை வாசித்தான். ''எங்கே காட்டுங்கள்?'' ''நான்தான் வாசித்துக் காட்டினேனே.'' ''குடுங்க தோழர்'' என்று சரவணன் வாங்கிப் பார்த்தான். அதில் சரவணன் பெயர் இருந்தது. ''தோழர்கள் என்னை வாழ்த்தி அனுப்ப வேண்டும்'' என்றான் சரவணன். ------------------------------------------------------- storysankar@gmail.com ¦ த ¡ ட ரு ம்

Series Navigation

எஸ்.ஷங்கரநாராயணன்

எஸ்.ஷங்கரநாராயணன்