ஐயம், சந்தேகம், அயிர்ப்பு (இலக்கிய நாடகம் – பகுதி 8)

This entry is part [part not set] of 43 in the series 20060602_Issue

கரு.திருவரசு


காட்சி- 11

காட்சி நிகழும் இடம்: அழகிய மலைச்சாரல்.

காட்சியில் வருவோர். கவிஞர், புலவர் பக்குடுக்கை நன்கணியார்.

காட்சி நிலை. இருவரும் ஒரு குன்றின்மேல் அமர்ந்திருக்கின்றனர்.

கவிஞர்-

புலவரே! ஆணாயிருந்தாலும் பெண்ணாயிருந்தாலும் தாங்கள் மற்றவரோடு கொள்ளும் நட்பில், உறவில் தேராமல் ஒரு தெளிவுக்கு வரக்கூடாது. தெளிவுக்கு வந்தபிறகு சந்தேகப்படக்கூடாது.

புலவர்-

மெய்தான் கவிஞரே! பெண்கள் ஆண்களைச் சார்ந்துதான் வாழவேண்டும் என்ற நமது சமுதாய அமைப்பிலே, ஆண்கள் விடுதலைப் பறவைகளாக எதுவும் செய்யலாம், பெண்கள் அவர்களை ஐயப்படக் கூடாதென்றால் எப்படி?

கவிஞ- காலம் மாறிவருகிறது புலவரே! பெண்களும் விடுதலைப் பறவைகளாகப் பறக்கச் சிறகு விரித்துவிட்டார்கள். பெண் விடுதலையை ஆண்கள் தடுக்கவோ கட்டுப்படுத்தவோ கூடாது, அது முடியாது!

புல- அப்படியா, நல்ல செய்திதான்! கோவலன் மாதவி, உதயணன் வாசவதத்தை, நீங்கள் விளக்காமல் விட்ட இராமன் சீதை, இவர்களின் வாழ்க்கை நடப்பைப் பாருங்கள். ஆண்களுக்கு எவ்வளவு தன்னுரிமை! நினைத்ததைச் செய்கிறார்கள்! இந்த உலகத்தில் துரியோதனன், சீநக்கர் போல் எத்தனைபேர் இருக்கிறார்கள்?

கவிஞ- நாம் பார்த்தது பண்பு பற்றிய நிலை. இதில் கணக்கெடுப்பு, புள்ளி விவரம் எல்லாம் சரியாக வருமா புலவரே!

புல- உங்கள் ஐயம் சரிதான் கவிஞரே! வாழ்க்கை என்பது வாணிகம் அல்ல. அதைப் புள்ளிபோட்டுக் கணக்கெடுக்க முடியாது, கூடாது. ஆண் பெண் ஐயப்பாடும் அப்படித்தான்!

கவிஞ- புலவரே, என்ன சொல்லுகிறீர்கள்? இதில் என்னதான் உங்கள் நிலைப்பாடு!

புல- இதில் துலாக்கோல் போட்டு முடிவுக்கு வர முடியாது என்பதுதான் என் கருத்து. நீங்கள் தொடக்கத்தில் பாடினீர்களே திரைப்படப் பாட்டு அதுவே நல்ல தராசுதான்!

கவிஞ- எந்தப் பாட்டைச் சொல்லுகிறீர்கள்! நான் மூன்று பாடல்களின் பல்லவிகளைப் பாடினேனே!

புல- ஆமாம், அந்த மூன்றில் இரண்டைப் பாடுங்கள் போதும்! ஐயம், சந்தேகம், அயிர்ப்பு எனப் பலவாறு நாம் குறிப்பிடும் அந்தக் குணம் அறிவை அசைத்துப் பார்க்கும். சில நிலைகளில் அது தன்னைத் தானேகூட ஐயப்படும். நீங்கள் பாடுங்கள் கவிஞரே!

கவிஞ-

சந்தேகம் தீராத வியாதி- அது

வந்தாலே தடுமாறும் அறிவென்னும் சோதி – சந்தேகம்

(வேறு இசை)

தன்னைத் தானே நம்பாதது சந்தேகம் – அதற்கு

சந்தர்ப்பம் சூழ்நிலை தாய் தந்தையாகும் – தன்னைத்

(காட்சி நிறைவு – நாடகமும் நிறைவு)
thiru36@streamyx.com

Series Navigation

கரு.திருவரசு

கரு.திருவரசு

ஐயம், சந்தேகம், அயிர்ப்பு (இலக்கிய நாடகம் – பகுதி 7)

This entry is part [part not set] of 39 in the series 20060526_Issue

கரு.திருவரசு


காட்சி – 10
காட்சியில் வருவோர்: அமைச்சர் சீநக்கர், அவர் மனைவி, பொய்யாமொழிப் புலவர்.
காட்சி நிகழும் இடம். அமைச்சர் சீநக்கரின் வளமனையில் அவர் படுக்கை அறை.
காட்சிநிலை. பொய்யாமொழிப்புலவர் படுக்கையில் அமர்ந்து சுவடியிலிருந்து திருக்குறளைப் பாடலாய்ப் படித்துக்கொண்டிருக்கிறார்.
பொ, புலவர்-
தேறற்க யாரையும் தேராது! தேர்ந்தபின்
தேறுக தேறும் பொருள் (குறள் 509)
தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும் (குறள் 510)
(படித்துக்கொண்டிருந்தவர், அமைச்சரின் வருகையை எதிர்பார்த்துக் களைத்த நிலையில்)
என்ன இன்று சீநக்கர் வர இவ்வளவு தாமதம்! நேரமோ நள்ளிரவை நெருங்கும் போலிருக்கிறது. உம்,… களைப்பும் உறக்கமும் கண்ணைச் சுழற்றுகிறதே!
தேறற்க யாரையும் தேராது! தேர்ந்தபின்
தேறுக தேறும் பொருள் (குறள் 509)
தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும் (குறள் 510)
(என்று சுவடியைப் படிப்பதும் வழியைப் பார்ப்பதுமாக இருந்தவர் அப்படியே படுக்கையில் சாய்ந்துவிடுகிறார். படுத்தவர் சில நொடிகளில் படுக்கையின் உள்பக்கம் புரண்டு, வருவோருக்கு முதுகைக் காட்டிய நிலையில் உறங்கிப்போகிறார். சில நொடிகளில் அமைச்சர் சீநக்கரின் மனைவி அங்கே வருகிறார்.)
சீநக்கர் மனைவி-
(அரண்மனையிலிருந்து திரும்பிவந்த கணவர்தான் படுத்திருக்கிறார் என எண்ணி) என்ன, இவர் எப்போது அரண்மனையிலிருந்து திரும்பினார்? நம்மை அழைக்காமலே வந்து படுத்துறங்கிவிட்டாரே! உம், அமைச்சரென்றால் அவ்வளவு வேலையோ!… எழுப்பினாலும் சத்தம் போடுவார். சரி நாமும் படுத்துக்கொள்ளவேண்டியதுதான்! (என்றவாறு அவருக்குப் பக்கத்தில் மெதுவாக அலுங்காமல் படுத்துக்கொள்கிறார். சில நொடிகளில் சீநக்கர் அங்கே வருகிறார்.)
சீநக்கர்- என்ன இவள்! பேதை, பேதை! படுக்கையில் படுத்திருப்பது நானா, புலவரா என்றுகூடக் கவனியாமல் படுத்திருக்கிறாளே! (கொஞ்சம் உரக்க) இருவரும் கொஞ்சம் ஒதுங்கிப் படுக்கிறீர்களா, நானும் படுத்துக்கொள்கிறேன்!
மனைவி- (குரல்கேட்டு எழுந்து திடுக்கிட்டுப் பதற்றமாக) என்னது, என்னது! நீங்கள் இப்போதுதான் வருகிறீர்களா! அப்படியானால் இங்கே படுத்திருப்பது?… ஐயகோ! (என்ற குரல்கேட்டு புலவரும் விழித்து எழுந்துவிடுகிறார்)
புலவர்- என்ன, நான் உறங்கிவிட்டேனா! அம்மையாரும் இங்கே எப்படி? அவர்களும் படுத்துவிட்டார்களா! ஐயகோ, என்ன பிழை! என்ன பிழை! (என்று பதறுகிறார்)
மனைவி- ஐயகோ, அடிகளே! நான் தாங்கள்தான் படுத்திருக்கிறீர்கள் என… பொறுத்தருங்கள், பொறுத்தருளுங்கள்! (சீநக்கரின் மனைவி பயமும் வெட்கமும் கொண்டு எழுந்து ஓடிவிடுகிறார். புலவர் தொடர்கிறார்)
புலவர்- சீநக்கரே! உங்களை எதிர்பார்த்தபடி திருக்குறள் படித்துக்கொண்டிருந்தவன் அப்படியே உறங்கிவிட்டேன். அம்மையாரும் நீங்கள்தான் படுத்துறங்குகிறீர்கள் என நினைத்துப் படுத்துவிட்டார் போலும்…
சீநக்கர்- புரிகிறது, புரிகிறது புலவரே! நீங்கள் ஏன் எதற்காகப் பதறுகிறீர்கள்! படுத்துக்கொள்ளுங்கள். நானும் படுக்கிறேன். காலையில் பேசிக்கொள்வோம்!
புலவர்- என்ன நண்பரே, மிகவும் சாதாரணமாகச் சொல்கிறீர்கள்! அம்மையார் வேறு வெலவெலத்துப்போய் வெளியே ஓடிவிட்டார்களே!
சீநக்கர்- அதற்கென்ன புலவரே, அவளைத் தெரியாதா உங்களுக்கு , அவள் பாவம் பேதை! வஞ்சமில்லாதவள்! நீங்களும் எதிர்பார்த்தா இது நடந்தது! எண்ணம் தெளிவாக இருந்தால் எந்தப் பிழையும் நடவாது.
புலவர்- நண்பரே உங்கள் பெருந்தன்மை பெருமனதோடு பேசுகிறது. எனக்கென்னவோ நெஞ்சம் நெருடுவதுபோல இருக்கிறது!
சீநக்கர்- நெருடுகிறதா? என்னை உறக்கம் வருடுகிறது புலவரே! நீங்களும் படுத்து உறங்குங்கள். மற்றவற்றை விடிந்ததும் பேசுவோமே! இறைவா!… (என்று படுத்துக்கொள்கிறார். புலவரும் தலையை ஆட்டிக்கொண்டே படுக்கின்றனர்.)
(காட்சி நிறைவு)

—————————
thiru36@streamyx.com

Series Navigation

கரு.திருவரசு

கரு.திருவரசு

ஐயம், சந்தேகம், அயிர்ப்பு! (இலக்கிய நாடகம் – பகுதி 5.)

This entry is part [part not set] of 29 in the series 20060303_Issue

கரு.திருவரசு


காட்சி – 5

காட்சியில் வருவோர்: அரசன் உதயணன், அரசி வாசவதத்தை, அரசியின் தோழி மானனீகை.

காட்சி நிகழும் இடம். அரண்மனை அந்தப்புரத்தை அடுத்த ஆடுகளம், விளையாட்டுக்களம்.

காட்சி நிலை. வாசவத்தையையும் தோழியர் சிலரும் கூடிப் பந்தடித்து விளையாடுகின்றனர். அக் காட்சியைக் கண்ட அரசன் உதயணன், அந்தப் பெண்மான்கள் கூட்டத்திலே ஒரு புதிய பொன்மான் பந்தாடியது கண்டு அவளைக்காணவும் பேசவும் விரும்புகிறான். உதயணன் நாட்டமறிந்து, அந்தச் சந்திப்பைத் தவிர்க்க முயல்கிறாள் அவள் மனைவி வாசவதத்தை.

உதயணன்- வாசவதத்தை! இன்று உன்னோடு பந்தடித்த பூச்செண்டுகளில் ஒரு புதிய மலரும் ஆடியது கண்டேன். அவளை நான் பார்த்துப் பேசவேண்டுமே! கொஞ்சம் ஏற்பாடு செய்யமுடியுமா ?

வாசவதத்தை- யாரவள் ? அப்படியாரையும் புதிதாகச் சேர்த்துக்கொள்ளவில்லையே!

உதய- என் அன்புக்குரிய வாசமே! இந்த உதயணனின் கண்களை யாரால் ஏமாற்றமுடியும்! என்னைத் தெரியாதா உனக்கு ? மானனீகை என்னும் பெயர் கொண்ட மங்கையைத்தான் சொல்கிறேன்!

வாச- ஓ, அவளா! உண்மையிலேயே நீங்கள் மன்னரதான்! அவளோடு என்ன அப்படிப் பேசவேண்டும் ?

உதய- அவள் பாஞ்சால மன்னனிடம் பணிசெய்தவள் என்று அமைச்சர் கூறினார். அவளிடம் பேசிக் கொஞ்சம் அரசியல் செய்திகளை அறிந்துகொள்ள எண்ணினேன். வேறொன்றுமில்லை!

வாச- அவ்வளவுதானா! நான் என்னவோ ஏதோவென்று… அவள் இங்கேதான் இருக்கிறாள், நான் உடனே அழைக்கிறேன்.(அழைக்கின்றாள்) மானனீகை! மானனீகை!

மானனீகை- இதோ வந்துவிட்டேன் அரசியாரே! என்ன செய்தி ?

உதய- மானனீகை, நான்தான் உன்னை அழைக்கச்சொன்னேன். நீ பாஞ்சால மன்னனிடம் பணி செய்ததாக அறிந்தேன். அங்கு நீ என்ன பணியில் இருந்தாய் என நான் தெரிந்துகொள்ளலாமா!

மான- அரசே, நான் முன்னர் கோசல நாட்டிலே இருந்தேன். அங்கே நான் அரசதேவியின் தோழியாகப் பணியிலிருந்தேன். பாஞ்சால மன்னன் கோசலத்தின் மீது படையெடுத்து வெற்றிகொண்டபோது என்னையும் பற்றிச் சென்று தன் தேவிக்கு அதாவது அரசிக்கு என்னை வண்ணமகள் ஆக்கினார். அவ்வளவுதான். அதுதவிர அரசியல் நடப்புகள் எதுவும் நான் அறியேன்.

உதய- ஓ!.. நீ வண்ணமகளா! ஒப்பனைப்பெண்! அப்படியானால் நீ ஒப்பனைக் கலையிலே கைதேர்ந்தவள் என்று சொல்.

மான- ஆம், அரசே! ஒப்பரிய ஒப்பனைக் கலையிலே கொஞ்சம் தேர்ச்சியுண்டு.

உதய- நல்லதாயிற்று! இன்றுமுதல் என் வாசவதத்தைக்கு வண்ணமகளாக உன்னைப் பணியமர்த்தம் செய்கிறேன், இன்றென்ன, இப்பொழுதே உன்னை அமர்த்துகிறேன். கெளசாம்பி நாட்டின் பேரரசியான என் மாதரசி வாசவதத்தைக்கு நீ வண்ணமகள், மானனீகை வண்ணமகள்! மானனீகை வண்ணமகள்!

(என்று சொல்லிக்கொண்டே செல்கின்றான்) (காட்சி நிறைவு)

காட்சி 6.

காட்சியில் வருவோர்: அரசன் உதயணன், அரசி வாசவதத்தை, மானனீகை.

காட்சி நிகழும் இடம். அரண்மனை அந்தப்புரம்.

காட்சி நிலை. (அரசி வாசவதத்தை, வண்ணமகள் மானனீகை தன் முகத்திலே எழுதிப் புனைந்த புதுக்கோலத்துடன் உதயணன்முன் வந்து நிற்கிறாள்.)

வாசவதத்தை- நான் எப்படி இருக்கிறேன் அத்தான் ? என் முகத்தைப் பாருங்கள்!

உதயணன்- ஆ! ஓ!… என் முன்னே வந்து நிற்பது என் வாசம்தானா! வாசவதத்தை! ஓ, என்ன அழகு, என்ன அழகு!

வாச- நான்தான் அரசே! இது மானனீகையின் கலைத்திறன். அவள் உண்மையிலேயே சிறந்த வண்ணமகள்தான். அவள் புனைந்த புனைவுதான் இந்தப் புதுக்கோலம். உங்களுக்குப் பிடித்திருக்கிறதா இந்த ஒப்பனை!

உதய- பிடித்திருக்கிறதா! என்னைப் பிடித்திழுக்கிறது உன்பால்! அழகாக, அளவாக அவள் செய்திருக்கும் இந்தப் புனைவு என் நினைவுகளை எங்கோ, எங்கோ இழுத்துப்போகிறது. வா! இன்னும் கொஞ்சம் அருகில் வா! உன் நெற்றிக்கோலம் இதுவரை நான் பார்த்திராத புதுமை, ஆம் புதுமையான புனைவு.

வாச- இந்தப் புனைவு உங்களுக்கு அழகாய் இருந்தால் எனக்கு மகிழ்ச்சிதான்!

உதய- மகிழ்ச்சி வாசமே!…( சிறிது சிந்தித்துவிட்டு) இந்த நெற்றிக் கோலத்திலே நான் ஒரு சிறு திருத்தம் செய்கிறேன். நீ அதை அந்த வண்ணமகளிடம் காட்டு, நான் செய்யும் திருத்தத்தால் தோன்றும் மேலழகு அவழுக்குத் திகைப்பைத் தருவதை நீ காண்பாய்! இதோ, இதோ திருத்துகிறேன்!

(என்று உதயணன், வண்ணக் குழம்பினால் மிகவும் நுணுக்கமாக அவள் நெற்றியிலே தன் காதலை, மானனீகைக்குத் தெரிந்த யவன மொழியிலே கோலமாக எழுதி முடிக்கிறான். அரங்கு அப்படியே இருளாகிறது. ஓர் ஒளிவட்டம் அவளைமட்டும் தொடர வாசவதத்தை மெதுவாக நடந்து அரங்கின் மறு கோடிக்கு வருகிறாள். அங்கே அந்த ஒளிவட்டத்துக்குள் மானனீகையும் வந்து சேர்கிறாள். காட்சி தொடர்கிறது.)

வாச- மானனீகை, உன் வண்ணப்புனைவை மன்னர் மிகவும் பாராட்டினார். அவரும் புனைவுக்கலையிலே வல்லவர் என்பதைக் காட்டுவதற்காக நீ என் நெற்றியில் செய்த அழகில் சிறு திருத்தம் செய்தார். அவர்செய்த திருத்தம் சரிதானா என்று நீ கொஞ்சம் பாரேன்!

மானனீகை- திருத்தமா! எங்கே காட்டுங்கள் பார்க்கலாம்! (திடுக்கிட்டுச் சமாளித்துக்கொண்டு) என்ன இது அநியாயம் ?

(திருத்தமென்ற பெயரால் யவன மொழியில் எழுதப்பட்ட செய்தியைத் தனக்குள்ளே படிக்கிறாள், அது அரங்கில் எதிரொலிக்கிறது)

‘மானனீகை என்னும் மானே, உன்னை நான் காதலிக்கிறேன்! ‘

(வாசவதத்தையிடம்) திருத்தம் பொருத்தமாகத்தான் இருக்கிறது அரசியாரே! ஆனால், அவர் மன்னர் என்பதால் எதையும் செய்யலாம் என்ற துணிச்சல் அதிலே தெரிகிறது. அதைமட்டும் கொஞ்சம் நான் தூரிகையால் சரிசெய்துவிடுகிறேன். இதோ, இதோ!…(என்று அவள் அரசியின் நெற்றியிலே எழுதுகிறாள்.)

(வாசவதத்தை மறுகோடிக்கு நடக்கிறாள், அவளோடு ஒளிவட்டமும் தொடர்கிறது. அங்கே மன்னன் உதயணன் நிற்கிறான்)

உதய- வாசவதத்தை, என் பேரரசி! என் திருத்தத்தைப் பார்த்து என்ன சொன்னாள் அந்த வண்ணமகள் மானனீகை ?

வாச- உங்கள் திருத்தத்தைப் புகழ்ந்தாள் மன்னவரே! இருந்தாலும் திருத்தத்தில் ஒரு திருத்தம் செய்தாள் அவள். அது சரிதானா என்று பாருங்கள்! என் முகத்தைப் பாருங்கள்!

உதய- எங்கே! அந்த நிலவு முகத்தை என் கையிலே கொடு.

(என்று அவள் முகத்தைக் கையிலேந்தி, வந்த மறுமொழியை ஆவலோடு மனத்துக்குள் படிக்கிறான். அது மானனீகை குரலில் எதிரொலிக்கிறது)

மான- ‘அரசர் ஓர் அடிமைமேல் காதல் கொள்ளலாமா! அரசர் ஓர் அடிமைமேல் காதல் கொள்ளலாமா! ‘

(அரங்கம் இருளால் நிறைகிறது. இந்த நெற்றிவிடு தூது சிலநாள் தொடர்கிறது என்பதற்கு அடையாளமாக அந்த உதயணன், மானனீகை இருவரின் உரையாடலும் எதிரொலியாகவே தொடர்கிறது.)

உதய – மானனீகை என்னும் மானே! அரசன் அடிமையெல்லாம் காதல் தேசத்திலே ஏது ? அரசன் உதயணன் அடிமையின் அடிமையாகிவிட்டான் கண்ணே!

மான- அரசிக்குத் தெரிந்தால் என் நிலைமை என்ன ஆகும் மன்னவரே!

உதய- உம்… நான் உன்னையும் அரசியாக்கிவிடுகிறேன் மானே!

மான- ஒரு வண்ணமகள், வெறும் ஒப்பனைக்காரி அரசியாக முடியுமா ?

உதய- ஏன் முடியாது! என் எண்ணத்தில் இடம் கிடைத்த மறுநொடியே அந்த மகுடம் உனக்காகக் காத்திருக்கிறது, உன் சம்மதத்துக்காக அது காத்திருக்கிறது.

மான- மன்னவரே! இந்த ஏழையை என்னதான் செய்யச் சொல்லுகிறீர்கள்!

உதய- மானனீகை மானே! நான் உன்னை அடையாவிடால் என்னுயிரே ஏழையாகி இறந்தேபோகும். நான் உன்னைச் சந்தித்தே ஆகவேண்டும்.

மான- அப்படியா ? அப்படியானால், இன்றிரவு நான் நம் கூத்தப்பள்ளியின் அருகே காத்திருக்கிறேன் மன்னவரே!

உதய- நன்றி கண்ணே, இரவு நாம் சந்திப்போம்!

(காட்சி நிறைவு)

காட்சி -7

காட்சியில் வருவோர். அரசி வாசவதத்தை, அரசியின் தோழி காஞ்சனமாலை.

காட்சி நிகழும் இடம். அரண்மனை அந்தப்புரம்.

காஞ்சனமாலை- (வந்துகொண்டே) என்னை, என்னை அழைத்தீர்களா அரசி!

வாசவதத்தை- ஆமாம் காஞ்சனமாலை. எனக்கு ஓர் ஐயம் பிறந்திருக்கிறது. அது துலங்க நீதான் உதவவேண்டும்.

காஞ்- சொல்லுங்கள் அரசி, என்ன சந்தேகம்! அதற்கு நான் என்ன செய்யவேண்டும் ?

வாச- மன்னரும் அந்த மானனீகையும் சில நாட்களாக ஒரு நாடகம் நடத்துவதாக நான் ஐயப்படுகிறேன். அவர்களின் காதல் நாடகத்துக்கு என்னையே ஒரு கருவியாகப் பயன்படுத்துகிறார்களோ என்றும் ஐயப்படுகிறேன்!

காஞ்- காதல் நாடகம், அதற்குத் தாங்களே கருவியா! அதெப்படி முடியும் ?

வாச- அந்த வண்ணமகள் எனக்கு அழகு செய்ய, நான் அதனுடன் மன்னரைப் பார்க்கும்போதெல்லாம் என் முகத்திலே அழகுத்திருத்தம் செய்வதாகச் சொல்லி ஏதோ கிறுக்கி அனுப்புகிறார். அவள் எனக்கு அழகு செய்யவும், இவர் அதிலே திருத்தம் செய்யவுமாக ஏதோ ஒன்று நடப்பதாக நான் ஐயப்படுகிறேன். அதை நீதான் என்னவெனக் கண்டுபிடித்து உதவவேண்டும்.

காஞ்- நானும் அந்த ஓவியத்தூதைக் கவனித்துவிட்டேன், அது என்னவென்றும் கண்டுபிடித்துவிட்டேன் அரசி. உங்களுக்குச் சந்தேகமே ஏற்படாதபோது நான் அதைச் சொன்னால் என் கண்டுபிடிப்பு வீணாகிவிடும் என்றுதான் காத்திருந்தேன்.

வாச- என்ன அது, என்ன கண்டுபிடித்தாய் ? அது ஒரு காதல் நாடகமா ?

காஞ்- ஆமாம் அரசியாரே! நம் அரசர்தான் அதில் பேரரசராயிற்றே! மன்னரும் மானனீகையும் அவர்கள் காதலைப் பேசிக்கொள்ளும் முறை இருக்கிறதே, அது எனக்குத் தெரிந்தவரை எங்கும் நடக்காத புதுமை! புதுமை!

வாச- என்ன, காதலைப் பேசிக்கொள்கிறார்களா!…

காஞ்- ஆமாம், இருவருக்கும் யவனமொழி எழுதப் படிக்கத் தெரிந்திருக்கிறது. அரசர் அவர் ஆசை மனைவியின் முகத்திலே, அதாவது உங்கள் முகத்திலே தன் காதலை அவளுக்கு எழுதுகிறார். அவளும் உங்கள் முகத்திலேயே அதற்கு மறுமொழி எழுதி அனுப்புகிறாள். இப்படி ஒரு மனைவிவிடு தூது இதற்குமுன் எங்கும் நடந்ததாக நான் கேள்விப்பட்டதே இல்லை.

வாச- எனக்கு அவர்கள்மேல் சந்தேகம் வந்தது. ஆனால், அது என்ன, எப்படி என்றுதான் எனக்குப் புரியவில்லை. கொடுமை, கொடுமை! ஆமாம். இதெப்படி உனக்குத் தெரிந்தது ?

உனக்கு அந்த மொழி தெரியுமா ?

காஞ்- கொஞ்சம் தெரியுமம்மா!

வாச- அந்தக் கொடுமையான தூதின் கடைசி நிலவரம்தான் என்ன காஞ்சனமாலை ?

காஞ்- ஆகக் கடைசியாக அந்த வண்ணமகள், இல்லை இல்லை, அந்த வஞ்சமகள் எழுதியது என்ன தெரியுமா அம்மா ? ‘இன்றிரவு நான் நம் கூத்தப்பள்ளியின் அருகே காத்திருக்கிறேன் மன்னவரே! ‘

வாச- (கோபமாக) ‘கூத்தப்பள்ளியின் அருகே, இன்றிரவு காத்திருக்கிறேன். ‘ நீ சொன்னது

போல அந்த வஞ்சமகளை… நான் என்ன செய்கிறேன் பார்!

(காட்சி நிறைவு)

thiru36@streamyx.com

Series Navigation

கரு.திருவரசு

கரு.திருவரசு

ஐயம், சந்தேகம், அயிர்ப்பு! (இலக்கிய நாடகம், பகுதி மூன்று)

This entry is part [part not set] of 46 in the series 20060217_Issue

கரு.திருவரசு


காட்சி – 3

காட்சியில் வருவோர்: கோவலன், மாதவி.

காட்சி நிகழும் இடம். இந்திரவிழாவின் உச்சமாகக் கடலாடல் நிகழும் கடற்கரை.

காட்சி நிலை. ஓவியத்திரைகள் சூழ அமைக்கப்பட்ட தற்காலிகக் குடில். அழகிய கட்டிலின்மேல் கோவலனும் மாதவியும் அமர்ந்திருக்கின் றனர். அருகிருந்த யாழை வணங்கி எடுத்துக் கோவலனிடம் தருகிறாள் மாதவி.

மாதவி- அத்தான்! இந்த யாழை மீட்டி ஒரு பாடல் பாடுங்களேன்!

கோவலன்- பாடுகிறேன் மாதவி, பாடுகிறேன். உனக்கில்லாத பாட்டா ? (என யாழைச் சுருதி மீட்டிப் பாடுகிறான்)

திங்கள் மாலை வெண்குடையான் சென்னி செங்கோல் அதுஓச்சிக்

கங்கை தன்னைப் புணர்ந்தாலும் புலவாய் வாழி காவேரி!

கங்கை தன்னைப் புணர்ந்தாலும் புலவா தொழிதல் கயல்கண்ணாய்!

மங்கை மாதர் பெருங்கற்பென் றறிந்தேன் வாழி காவேரி!

மாத- (தனக்குள்ளாகவே பேசிக்கொள்கிறாள்) என்ன இவர் பாடுகிறார் ?

‘காவிரிப்பெண்ணே, உன் கணவன் கங்கை எனும் மங்கையைக் காதலித்து அவளைச் சேர்ந்தாலும் நீ அவனை வெறுப்பதில்லை, மறப்பதில்லை. காவேரியே! அது உன் கற்புநெறி, பெருங் கற்புநெறி என்று நான் அறிந்தேன். நீ வாழ்க ‘ என்று பாடுகிறாரே! இவர் மறைமுகமாக எனக்கு என்ன சொல்கிறார்!…

கோவ- (தொடர்ந்து பாடுகிறான்)

மன்னும் மாலை வெண்குடையான் வளையாச் செங்கோல் அதுஓச்சிக்

கன்னி தன்னைப் புணர்ந்தாலும் புலவாய் வாழி காவேரி!

கன்னி தன்னைப் புணர்ந்தாலும் புலவா தொழிதல் கயல்கண்ணாய்!

மன்னும் மாதர் பெருங்கற்பென் றறிந்தேன் வாழி காவேரி!

மாத- (தனக்குள்) ‘காவேரிப் பெண்ணே, உன் கணவன் கன்னி எனும் குமரியைக் காதலித்து அவளைச் சேர்ந்தாலும் நீ அவனை வெறுப்பதில்லை, மறப்பதில்லை. காவேரியே! அது உன் கற்பு நெறி, பெருங் கற்புநெறி என்று நான் அறிந்தேன். நீ வாழ்க! ‘ என்று பாடுகிறாரே! கங்கையும் குமரியும் அவனை வெறுத்துக் கைவிடாத மாதரசிகள் என்ற புகழ்ச்சியின் பொருள் என்ன ? கண்ணகிக்கும் மாதவிக்கும் கற்பைச் சொத்தாக விட்டுவிட்டு இவர் வேறொரு மலருக்குத் தாவுகிறாரோ! பெண்ணுக்குமட்டும்தான் கற்பு நெறியா ? ஆணுக்கு இல்லையா ? இதற்கு நான் மறுப்புச் சொல்லவேண்டும். (கோவலனிடம்)

அடிகளே! உங்கள் பாட்டின் உட்பொருள் சூல்கொண்ட மேகம்போல இருந்தாலும் கொஞ்சம் எனக்கும் விளங்குகிறது. நானும் மறுமொழியாகப் பாடவிரும்புகிறேன், அந்த யாழை இப்படிக் கொடுங்கள்!

கோவ- ஓ… தாராளமாகப் பாடலாம்! இதோ…( என யாழை மாதவியிடம் கொடுக்கிறான்.)

மாத- (யாழை வாங்கி இசைமீட்டிப் பாடுகிறாள்)

மருங்கு வண்டு சிறந்தார்ப்ப மணிப்பூ ஆடை அதுபோர்த்து

கருங்க யல்கண் விழித்தொல்கி நடந்தாய் வாழி காவேரி!

கருங்க யல்கண் விழித்தொல்கி நடந்த தெல்லாம் நின்கணவன்

திருந்து செங்கோல் வளையாமை அறிந்தேன் வாழி காவேரி!

பூவர் சோலை மயில்ஆலப் புரிந்து குயில்கள் இசைபாடக்

காமர் மாலை அருகசைய நடந்தாய் வாழி காவேரி!

காமர் மாலை அருகசைய நடந்த தெல்லாம் நின்கணவன்

நாம வேலின் திறம்கண்டே அறிந்தேன் வாழி காவேரி!

கோவ- (தனக்குள்) என்ன பாடினாள் இவள் ? ‘காவேரிப் பெண்ணே, நீ பெருமையாகக் கைவீசி நடப்பதன் காரணம், உன் கணவன் ஆற்றல் மிக்கவனாய் இருப்பதால்! உன் கணவன் செங்கோல் வளையாமல் அவன் நேர்மையாளனாய் இருப்பதால்! ‘

எனக்கு முன்னாலே இன்னொரு ஆடவனைப் புகழ்ந்து பாடுகிறாளே! மனத்தில் மற்றொருவனை வரித்துவிட்டாளா! (மாதவியிடம் கோபமாக) மாதவி! உன் குலவித்தையை என்னிடமே காட்டுகிறாயா ? என்ன இருந்தாலும் நீ ஆடல் மகள்தானே! நாடகக்காரி! நாடகக்காரி! (என்று எழுந்து வேகமாகப் போய்விடுகிறான்)

மாத- அத்தான்! அடிகளே! அடிகளே! அவசரப்படாதீர், கொஞ்சம் இருங்கள்! (தனக்குள்) ஐயகோ, போய்விட்டாரே!

(கோவலன் ஒரு கோடியில் சென்று மறைந்ததும் அரங்கு இருளாகிறது. அங்கே ஒளிவட்டத்துள் கவிஞரும் புலவரும் மீண்டும் தோன்றுகின்றனர்)

கவிஞர்- என்ன கொடுமை! அவன் மற்றொரு பெண்ணை நினைத்துப் பாடுவதுபோல் பாடினான். அதற்கு மாற்றாக அவளும் ஏதோ பாடினாள். தூய்மையான காதல் மகளான மாதவியை ஆடல்மகளென்று சொல்லி அவமானப்படுத்திவிட்டுப் போகிறானே கோவலன்!

புலவர்- ஆமாம் கவிஞரே! இந்தக் கடலாடு காதையில் கானல்வரிப் பாட்டோடு பிரிந்தவன் கண்ணகியிடம் போனான், மதுரைக்குப் போனான், தொடர்ந்து உலகைவிட்டே போனான்!

கவிஞ- மாதவியின்பால் கோவலன் கொண்ட சந்தேகத்தின் விளைவு கொடுமையானது.

புல- பெண்ணின் சந்தேகம் பாட்டோடு போனது. ஆணின் சந்தேகம் அவன் வாழ்க்கையோடு போனது. இங்கே பெண்ணின் ஐயத்தைவிட ஆணின் ஐயம் மிகவும் தூக்கலாகிப் போனதே கவிஞரே!

கவிஞ- ஆமாம் புலவரே! சிலப்பதிகாரக் கதைத்தலைவனான கோவலன் சந்தேகப்படுவதிலும் தலைவன்தான்! இதற்கு நேர்மாறாகத் தோற்றம் தருகிறான் மகாபாரதத்திலே வரும் துரியோதனன்.

புல- துரியோதனன் மனைவியும் கர்ணனும் சொக்கட்டான் ஆடிய காட்சியைச் சொல்கிறீர்களா ?

கவிஞ- ஆமாம் புலவரே! மகாபாரத்திலே வரும் ஒரு சுவையான காட்சி இது. துரியோதனன் கர்ணன் இருவரும் கதை நெடுக நட்புக்கு இலக்கணமாக வருகிறார்கள். இறக்கும்வரை நண்பர்களாகவே இருந்து சிறந்த, அந்த நண்பர்களின் வாழ்க்கையிலே நடந்த ஒரு சிறிய காட்சிதான் இது. தெளிந்த நட்புக்கும், எந்த நிலையிலும் நண்பர்களுக்கிடையில் சந்தேகம் என்பது வரக்கூடாது, வராது என்பதற்கும் சாட்சியாக வரும் காட்சி.

புல- ஆண்மகன் ஐயத்துக்கு அப்பாற்பட்டவன் என்பதை விளக்கும் அருமையான காட்சிதான்.

கவிஞ- துரியோதனன் அரண்மனையில் துரியோதனன் மனைவி பானுமதியும் அவன் நண்பனான கர்ணனும் என இருவர்மட்டும் அமர்ந்து சொக்கட்டான் ஆடுகின்றனர். ஒரு நண்பனும் நண்பன் மனைவியும் தனியே இருந்தாலே ஐயப்படும் இந்த உலகத்திலே இவர்கள் இருவரும் தனியே அமர்ந்து சொக்கட்டான் எனும் தாய விளையாட்டு விளை யாடுகின்றனர்.

(காட்சி நிறைவு, நாடகம் தொடரும்)

thiru36@streamyx.com

Series Navigation

கரு.திருவரசு

கரு.திருவரசு

ஐயம், சந்தேகம், அயிர்ப்பு! (இலக்கிய நாடகம் – பகுதி இரண்டு)

This entry is part [part not set] of 32 in the series 20060210_Issue

கரு.திருவரசு


காட்சி 2.

காட்சி நிகழும் இடம்- வண்ணப் பூஞ்சோலை.

காட்சியில் வருவோர்: சங்கக் காலத்து இளங் காதலர் இருவர்.

(சிறிய கட்டுக்குடுமிகொண்டு, அக்குடுமியில் பூச்சூடிய இளைஞன். அழகிய இளம்பெண்.)

காட்சி நிலை: புன்னை மரத்தடியில் காதலர் சந்திப்பு.

ஆண்- (அச் அச்சென்று தும்முகிறான்.)

பெண்- வாழ்க வாழ்க! அத்தான் உங்களை யாரோ நினைக்கிறார்கள் போலிருக்கிறதே! யாரோ என்ன, எவளோ உங்களை நினைக்கிறாள். அதுதான் உங்களுக்குத் தும்மல் வருகிறது. யாரவள், யாரவள் ? நான் இனி உங்களோடு பேசமாட்டேன். (என்று ஊடல் கொள்கிறாள்)

ஆண்- அப்படியெல்லாம் ஒன்றுமில்லை கண்ணே! என் மூக்கில் ஏதோ துரும்பு பட்டுவிட்டதுபோலும், அதுதான்… (என்றவன் மீண்டும் தும்மல் வருவதுபோல் தோன்றவே கையால் மூக்கை அழுத்தி அதை அடக்க முயல்கிறான்.)

பெண்- தும்மினால் அது எனக்குத் தெரிந்துவிடுமோ என்று தும்மலை நீங்கள் அடக்கப்பார்க்கிறீர்கள்.(சிணுங்கிக் கொண்டே) எனக்குத்தெரியும், அவள் மீண்டும் மீண்டும் உங்களை நினைக்கிறாள்.

ஆண்- இல்லை கண்ணே, அப்படியெல்லாம் எதுவுமில்லை. நான் எனக்கு வரும் தும்மலை அடக்கவில்லை. அந்தத் தும்மல்தான் வருவதுபோல் வருகிறது, அப்புறம் வரமாட்டேன் என்று மூக்கிலேயே சிக்கிக்கொள்கிறது. ஆங், ஆங்…அச்! அச்! (என்று தும்முகிறான்)

பெண்- (தன்னைமறந்து வழக்கம்போல வாழ்த்துகிறாள்) வாழ்க! நலமே வாழ்க!

ஆண்- எனக்குத் தெரியும் உன் கோபமெல்லாம் வெறும் பொய்க்கோபம். கண்ணே, என்னைத் தவறாக நினைக்காதே, சந்தேகப்படாதே! நாம் பிரிந்திருக்கும்போது நீ என்னை நினைக்கிறாயோ இல்லையோ, நான் எப்போதும் உன்னைத்தான் நினைப்பேன்!

பெண்- பார்த்தீர்களா பார்த்தீர்களா! ஒருவருக்கு எப்போது நினைவு வரும் ? ஒன்றை மறந்தால்தானே அது நினைவுக்கு வரும். நீங்கள் அடிக்கடி என்னை மறக்கிறீர்கள், அந்த மறதிக்குப் பிறகு – மறதிக்குப் பிறகு என் நினைவு வருகிறது. உம்…

ஆண்- இல்லை கண்ணே, எனக்கு மறதியே இல்லாத உறுதியான நினைவு. அதுவும் எப்போதுமே உன் நினைவு.

பெண்- அது சரி, அது சரி. உங்கள் அழகிய குடுமியில் ஒரு மாற்றம்.(கொஞ்சம் நிதானித்து அவன் குட்டைக் குடுமியைத் தொட்டுப்பார்த்து) என்றுமில்லாத காட்சியாய் இன்று பூச்சூடி வந்திருக்கிறீர்களே, ஏன் ? யாரோ ஒருத்திக்கு அழகு காட்டத்தானே இந்தப் பூச்சூடல்!

ஆண்- அம்மவோ அம்மவோ! அப்படியெல்லாம் எதுவும் இல்லை. பூவும் உனக்குத்தான் இந்தக் கோவும் உனக்குத்தான்! என் கண்களை உற்றுப்பார்! (என்று அவளை இவன் உற்றுப் பார்க்கிறான்)

பெண்- நீங்கள் என்னை உற்று உற்றுப் பார்ப்பதன் பொருள் எனக்கு நன்றாக விளங்குகிறது!

ஆண்- என்ன விளங்குகிறது ?

பெண்- எவளோ ஒருத்தியின் அழகோடு என்னழகை ஒப்பிட்டுப் பார்க்கிறீர்கள். எனக்குத் தெரியாதா… அதுதான்! அதுதான்!

ஆண்- ஐயகோ ஐயகோ! ஐயப்படுவதற்கும் ஓர் அளவில்லையா!… நான் என்ன செய்வேன்!

(அந்தக் காதலர் இருவரின் காட்சி அப்படியே இருளில் மறைய, அரங்கின் மறுகோடியில் வட்டமான ஒளியில் புலவரும் கவிஞரும் வருகின்றனர். அவர்களின் முன்னைய உரையாடல் தொடர்கிறது)

புலவர்- ஊடுதல் காதலுக்கு இன்பம்தான். அதுவே கூடுதலாகிவிட்டால் என்ன ஆகும் ?

கவிஞர்- என்ன ஆகும், நீங்கள் சொன்னதுபோல் கூடுதல், அதாவது கூடல்!

ஊடுதல் காமத்திற் கின்பம்! அதற்கின்பம்,

கூடி முயங்கப் பெறின்! (குறள் 1330)

புல- அது சரி கவிஞரே! நாம் இங்கே பார்த்த காதலரில் ஆண்மேல் பெண் கொள்ளும் ஐயம் உணவில் உப்புப்போல என்று சொல்லப்படும் ஊடலின் பாற்படுமேயன்றி ஐயத்தின் பாற்படுமோ!…

கவிஞ- ஆமாம் புலவரே! காதலர் என்ற நிலையில் அதற்குப்பெயர் ஊடல். காதல் முற்றிக் களவுமணம் வரை சென்று தொடரும் வாழ்க்கையிலே அது நடந்தால், அது கானல்வரிக் காட்சிபோல் ஆகிவிடாதா ?

புல- தமிழ்க்காவியங்களில் மணிமுடியான சிலப்பதிகாரத்தில் வரும் கானல்வரிக் காட்சியைத்தானே சொல்லுகிறீர்கள்!

கவிஞ- ஆமாம் புலவரே! இளங்கோ தந்த சிலம்பின் கதைப்படி கோவலன் மனைவி கண்ணகியின் வாழ்வை அறிந்தோ அறியாமலோ எடுத்துக்கொண்ட மாதவியின் காதல் வாழ்வைக் கானல்வரிப் பாடல் வடிவிலே வரும் ஊடல் இடறுகிறது.

புல- ஊடலுக்கு ஐயம்தான் முதல் ஊற்றுக்கண். ஆண் பெண் இருவருக்குமே ஊடல் வரும். ஊடல் நேரத்தில் பெண் பொறுமை காக்கிறாள். ஆண் ஆத்திரப்படுகிறான், அவசரப்படுகிறான்!

கவிஞ- ஆமாம் புலவரே! கோவலன் மாதவி ஊடல் காட்சி அப்படித்தான் முடிகிறது. இந்திரவிழாவின் உச்சமாக நிகழும் காதல் விளையாட்டுகளில் ஒன்றுதான் கோவலன் மாதவி பாடும் கானல் வரி. கோவலன், தான் யாரோ ஒரு பெண்ணை நினைத்துப் பாடுவதுபோல முதலில் பாடுகிறான். அந்தப் பாடலை வாங்கி, ஏங்கி அவளும் அப்படியே பாடுகிறாள்.

(வட்ட ஒளியில் தெரிந்த புலவரும் கவிஞரும் இருளில் மறைய, மொத்த அரங்கையும் இருள் மூடுகிறது.)

(காட்சி நிறைவு, நாடகம் தொடரும்)

—-

thiru36@streamyx.com

Series Navigation

கரு.திருவரசு

கரு.திருவரசு