பிறழ்வு

This entry is part [part not set] of 29 in the series 20050902_Issue

அரியநாச்சி


நாடக பாத்திரங்கள்:-

குரல்கள்

காவல்காரர்கள்: மாற்றியன், சுபந்தரவன்

கைதிகள்: தாதிக்குரவன், இருளிடியான், யக்ஞப்பன்

மக்கள்: கல்குள்ளி, பசுபாதி, மரவேல், சக்காமர்

பெருங்கைதி: கோட்புழுதி

தலைமைக் காவலன்

தலைமை நீதிபதி

வழக்குரைஞர்: காட்பினார்

பத்திரிக்கைக்காரன்: பனுவலாரன்

மேடையும் மேடைப்பொருட்களும்

காட்சி-1

மேடை பல தளங்களைக்கொண்டிருக்கிறது. உயரமான மையமேடைத்தளம். இது சிறையைக்குறிப்பதாக அமைக்கப்பட்டிருக்கிறது. வலது மேடைத்தளம். அதில் மூன்று நாற்காலிகள் போடப்பட்டிருப்பது நீதிமன்றத்தைக் குறிப்பதாக அமைக்கப்பட்டிருக்கிறது. இடது மேடைத்தளம். வலது மேடைத்தளத்தைவிட சற்றே குறைந்த உயரத்தில் அமைக்கப்பட்டிருந்தாலும் வலது மேடைத் தளத்தைவிட அகலவாக்கில் அதிகமாக இருக்கிறது. அங்கே காவல்துறையினர் கைதியை விசாரிப்பதற்காக அமைக்கப் படுவதைப்போல் இருக்கிறது. மேடையில் மேற்சொன்னத் தளங்களைத் தவிர வேறெதுவும் இல்லை. சிறிது நேரத்திற்குப்பின் பின்னரங்கிலிருந்து மெல்ல வண்டிகள் மேடையை நோக்கி வருவதைப்போன்ற ஒலி. கூடவே சில குரல்கள். பின் பல குரல்கள். வண்டிகள் மேடையை நெறுங்கியதும் பின்னரங்கிலிருந்து குரல்கள் புரியும்படிக் கேட்கிறது.

குரல் 1: இப்படியும் நடக்குமா ?

குரல் 2: இது அடுக்குமா ? இப்படிப்பட்டவரை. . .! இப்படி . . .!

குரல் 3: அதுவும் இந்த வண்டியில்.

குரல் 4: யாரு போகவேண்டிய வண்டி யாரு போராப்பாரு.

குரல் 3: எனக்கு என்னமோ பெருசா தோணல.

குரல் 1: எந்த புத்துல என்ன பாம்பு இருக்கோ ? யாருக்குத் தெரியும். இப்படா ஏதாவது நடந்தா தான் நாம் பாம்புப்புத்துல வாழுறோம்னு புரியுது.

குரல் 2: இருந்தாலும். . .

குரல் 3: தப்பு இப்பெல்லாம் பகிரங்கமா தெரியிது. படிக்கிறாங்கல்ல…

குரல் 4: இறங்குறாரு இறங்குறாரு.

குரல் 1,3: எப்பயோ இறங்கியாச்சு.

குரல் 2: இல்ல, வண்டிலதான் இருக்காரு.

குரல் 1: யாரு, வண்டில இருக்கான்னு பாரு. ஒரு முறை ஒருத்தர ஒரு இடத்துல பாத்துட்டா, அவரு அங்கேயே தான் இருப்பார்ன்னு கண்ண மூடிக்கிட்டு சொல்லிடக்கூடாது.

குரல் 2: யாரு நீ ? உன் கிட்டயா நான் கேட்டேன் ?

குரல் 4: உன் கிட்டயா நான் சொன்னேன் ?

குரல் 1: தோ தோ அந்தாப்ல போறாரு.

குரல் 3: ஆமா பின்பக்கமா கூட்டிட்டுப்போறாங்க.

குரல்கள் ஓய்கிறது. சிறிது நேரத்திற்குப்பின், மேடைக்குள் மாற்றியனும் சுபந்ரவனும் மிடுக்காக வருகின்றனர். கையில் தடியுடன் வாட்டசாட்டமாக, காவற்கார உடுப்போடு. மாற்றியனின் மீசை மிக அடர்த்தியாக கருகருவென முறுக்கிவிடப்பட்டு இருக்க சுபந்தரவன், மீசை வழித்துக் காணப்படுகிறான். இருவரும் முன் மேடைக்குள் வந்து,

மாற்றியன்: எல்லாரும் வந்துட்டாங்களா.

சுபந்ரவன் : (மற்றவர்கள் அவனைக் கவனிக்கக்கூடாது என, முகத்தை முடிக்கொண்டு, மாற்றியனைப் பர்த்து) வந்துட்டாங்கன்னு பாத்துட்டுத்தான உள்ள வந்தோம்.

மாற்றியன் : சரி சரி. வந்துட்டாங்க இல்லையா. இனி நடக்கறத நல்லாப் பாத்துக்கங்க. ஆனா குறுக்கக் கேள்வி கீள்வி கேட்டு நடக்கயிருக்கறத தொந்தரவு செய்யதீங்க.

சுபந்ரவன் : என்ன நடக்கப்போவுதுன்னு இப்படி பேசற.

மாற்றியன் : சும்மா. எல்லாரையும் ஒரு கட்டுக்குள்ள கொண்டாரதுக்கு இப்படி பொதுவா ஒரு பொய்யச் சொல்றதில்லையா அதான் . . ., இது.

சுபந்ரவன் : இப்ப ஏன் இவ்ளோ கூட்டம் கூடியிருக்கு.

மாற்றியன் : கோட்புழுதி, கைதாகிட்டதா நெனச்சி எல்லோரும் வேனத் துரத்திக்கிட்டு வந்து எப்படியாச்சும் பாத்துடனும்னு வாசல்ல காத்திருக்காங்க.

சுபந்ரவன் : கோட்புழுதிய இன்னும் கைது பண்ணவே இல்லியே!

மாற்றியன் : அது தெரியாது இவங்களுக்கு. ஆனா கைது பண்ணி கோட்புழுதிய வேன்ல கொண்டு வந்ததாகவும் அவர பின்புற வாசல் வழியா சிறைக்குள்ள கொண்டுபோய் அடச்சிருக்கறதாவும் வதந்தி பரவியிருக்கும். அத நம்பித்தான் இப்படி…

சுபந்ரவன் : இப்ப என்ன செய்யறதா உத்தேசம் ?

மாற்றியன் : நாம என்ன செய்யனும்னு உத்தர போடப்பட்டிருக்கோ அதச் செய்வோம்.

சுபந்ரவன் : கூட்டத்தக்கலைக்கனும் அவ்வளவுதான. இதோ ஒரு நிமிசத்துல கலச்சிடுறேன் பாரு. (பின்மேடையைப் பார்த்து) மக்களே! நீங்க நெனக்கிற மாதிரி ஒன்னும் கோட்புழுதிய கைது பண்ணல. அப்படி செஞ்சிருந்தா அவரே நேரா வந்து பேட்டிக்கொடுத்துட்டுத்தான் உள்ள வருவாரு. அவரோட கொணம் தெரியாதா உங்களுக்கு ?

மாற்றியன் : அதனால இப்ப இந்த இடத்த விட்டு கிளம்புங்க. எங்களுக்கு சிறைக்குள்ள நெரைய வேல இருக்கு. உள்ளயிருக்கறவங்களுக்கு சாப்பாடு போடனும்.

சுபந்ரவன் : அதெல்லாம் ஏன் அவங்ககிட்டு சொல்லிக்கிட்டு இருக்க. போன்னு சொன்னாலே போயிடுவாங்களே.

மாற்றியன் : ஆமா நாம காவல்காரங்கயில்லையா!

(சுபந்ரவன் சிரிப்பை அடக்க முடியாமல் சப்தமாக சிரித்துவிடுகிறான். பின் மாற்றியனும் அவனுடன் சேர்ந்து சிரிக்க அவர்களோடு சேர்ந்து சிரிப்பதாக பின்னரங்கிலிருக்கும் மக்களின் சிரிப்பொலியும் கேட்கிறது. பின் மக்களின் சிரிப்பொலி அடங்கி மறைந்ததும், மாற்றியன், சுபந்ரவனைப் பார்த்து)

என்னயிருந்தாலும் சொல்லு, நம்ம மக்க சொல்லுக்குக் கட்டுப்படற மக்கத்தான்.

(மீண்டும் இருவரும் சிரிக்கிறார்கள். ஆனால் சற்று சப்தம் குறைவாக. பின் அவர்கள் சுற்றுமுற்றும் ஒரு முறை பார்த்துவிட்டு பின்மேடைக்குள் சென்று மறைந்துவிடுகின்றனர். மேடைக்குள் கொலைக்குற்றவாளி காரியாலுகரும் திருட்டுக்கைதி தாதிக்குரவனும் இடது மேடைக்குள் வருகின்றனர்.)

திருட்டுக்கைதி தாதிக்குரவன் : இத மாதிரிப் பாத்தோம்னா உள்ள இருக்கறவனுங்கள விட்டுட்டு வெளியில இருக்கறவனங்கள அப்டியே வளைச்சுப் போட்டு சிறையா மாத்திடனும் அப்பத்தான் சரியா இருக்கும்.

கரியாலுகர் : இருக்கலாம். அப்ப சட்டமே மாறிடும். இப்ப இருக்கிற நியாய தர்மங்கள் குற்றமா பாக்குற நெலைக்குப் போயி நேர்மைங்கிறது திருடறதும் கொலை செய்யறதும்ங்கறது மாதிரி ஆயிடும்.

தாதிக்குரவன் : (அடக்கமுடியாமல் சிரிக்கிறான்) அப்டி சொல்லு.

மாற்றியனின் குரல் பின்னரங்கிலிருந்து: பாத்தியா சோம்பேறிப் பயலுங்கள. இடங்கிடைச்சதும் தத்துவம் பேச உக்காந்துட்டாங்க. டேய் ஏந்திரிங்கடா ?

(கரியாலுகரும் தாதிக்குரவனும் சட்டென எழுந்திருந்து குரல் வந்த திசையைப் பார்க்கின்றனர். மாற்றியனும் சுபந்ரவனும் உள்ளே வருகின்றனர்.)

மாற்றியன் : என்னங்கடா இங்க பண்ணிக்கிட்டு இருக்கீங்க.

கரியாலுகர் : ஒண்ணுமில்லிங்க சார்.

மாற்றியன் : ஒண்ணுமில்லன்னா ஒழுங்கா வேளையப் பாத்துக்கிட்டு இருக்கவேண்டியதுதான.

கரியாலுகர் : இல்லிங்க. கொஞ்சம் அசதியா இருந்துச்சா. அதான் செத்த இப்படி உக்காந்தோம். கொஞ்ச நேரம்தான் தோ போயிடுறோம்.

தாதிக்குரவன் : யேன் சார். கோட்புழுதிய கைதா செஞ்சிருக்கீங்க. ?

சுபந்ரவன் : உனக்கு ரொம்ப அவசியந்தான்.

கரியாலுகர் : அவசியமில்லன்னா விட்றுங்க.

மாற்றியன் : இப்பத்தான் வெளியில சொல்லிட்டு வந்தோம். இங்கையும் வேறயா. பரவாயில்ல. உங்கிட்ட சொல்லலன்னா உள்ள போயி எல்லார்கிட்டேயும் தாறுமாறா ஏதாவது சொல்லி கொழப்பத்த உண்டு பண்ணிடக்கூடாதில்லையா அதனால சொல்றேன் கேளு. உன்னையும்தான் தாதி. நீயும் நல்லக்கேட்டுக்கோ. கரியாலுகன ஒரு வகையில நம்பினாலும் நம்பலாம் ஆனா உன்ன நம்ப முடியாது.

தாதிக்குரவன்: ஏன் சார். நான் அப்படி என்ன சார் செஞ்சிட்டேன்.

மாற்றியன் : ஒண்ணும் செய்யாமத்தான் இப்ப உள்ள இருக்க ?

தாதிக்குரவன் : உண்மைய சொன்னா நான் ஒண்ணும் செய்யலசார். அதனான் உண்மை. யாரையோ காப்பாத்ரதுக்காக இப்படி என் புள்ளக்குட்டி குடும்பத்த எல்லாம் விட்டுட்டு இங்க கெடக்கேன்.

சுபந்ரவன் : எப்பப்பாத்தாலும் இதையே தான் சொல்றே. என்னிக்காவது கேக்கனம் கேக்கனும்னு நெனச்சிக்கிட்டு இருந்தேன். இப்ப கேக்குறன் சொல்ல. அந்த உண்மை தான் என்ன ?

தாதிக்குரவன் : சொன்னா இப்பவே என்ன வெளிய விட்றுவீங்களா.

சுபந்ரவன் : இதான வேணாங்கிறது. கெஞ்சினா கொஞ்சிறியே.

தாதிக்குரவன் : சரி சார். சொல்றேன் கேளுங்க. நான் இங்க வந்து எத்தன மாசம் ஆவுது.

மாற்றியன் : மூணு மாசம் இருக்குமா,

தாதிக்குரவன் : நீங்க தான பாக்குறிங்க. என்னிக்காவது நான் யாருக்காவது தொந்தரவு கொடுத்திருக்கனா. இல்லல்ல. இதுமாதரியே தான் சார் வெளியிலேயும். ஒருத்தருக்கும் தொந்தரவு இல்லாம இருந்து வந்தேன். அந்த பாழாப்போன மாக்கிரேயனால இப்ப நான் கம்பி எண்ணிக்கிட்டு இருக்கேன்.

மாற்றியன் : யாரு மாக்கிரேயன்.

தாதிக்குரவன் : அவன யாருக்கும் தெரியாது சார். ரொம்ப பிரபல்யம்லாம் இல்லசார். சாந்திநகருல கட வச்சிருந்தான். மளிகைக்கட. அவன்கிட்டத்தான் அந்த நகர்ல இருக்கிறவங்கல்லாம் பலசரக்கு வாங்குவாங்க. நானும்.

மாற்றியன் : சொல்லு. சொல்லு.

தாதிக்குரவன் : நான் ஒரு தனியார் கம்பெனியில எடுபிடியா வேல செய்றேன். வர்ற வருமானமோ மாசத்துல பாதி மாசத்துக்குத்தான் வரும். அதுவும் ஒருத்தனுக்கு. ஆனா மாசம் முழுசும் வேல செய்யனும். இன்னும் கொடும என்னன்னா என்னமாதிரியான புள்ளகுட்டிக்காரனுங்களுக்கு இந்த சம்பளம் எவ்வளவுதான் பத்தும் சொல்லுங்க பாப்போம். பத்தல. இத்தனைக்கும் கரிகாய் போட்டுக் கொழம்பு வக்கிறதே இல்ல. அப்படி வச்சா அன்னிக்கு என் வீட்டில தீபாவளிப் பொங்கல்தான். இப்படி இருக்கச்சே குடும்பத்த சமாளிச்சாகனுமே மாக்கிரேயன் கிட்ட கடனுக்குப் பொருளு வாங்க ஆரம்பிச்சேன். கொடுக்கிற பணத்துக்காண பொருளு வராது. பத்து ரூபாவுக்கு பொருளு வாங்கினா அவன் கொடுக்கிற பொருளோட நெச அடக்கம் இரண்டு ரூவா தான் இருக்கும். என்னய்யா இப்படி பண்ணிரியே கொஞ்ச சம்பளக்காரன் நான் இத மாதிரி வாங்கினா நான் என்ன ஆவுறதுன்னு அவன்கிட்டயே கேட்டேன். அதுக்கு என்ன சொன்னான் தெரியுமா. காசு கொடுத்து வாங்கிறவனே ஒண்ணும் பேசல கடன் வாங்கிற உனக்கு நொட்டனம் தேவையான்னு சொல்லி அன்னிலேர்ந்து கடனுக்கு கொடுக்கிறத நிறுத்திட்டான். கொடுக்க வேண்டிய கடனுக்கு என் வீட்ல இருந்த அண்டான் குண்டான எடுத்துக்கிட்டுப் போயிட்டான்.

மாற்றியன் : சரி இங்கே எப்படி வந்தேன்னு தான் கேக்கிறோம். அதவிட்டுட்டு எதையெதையோ சொல்லிக்கிட்டுப் போறியே.

தாதிக்குரவன் : அதத்தான் தான் சொல்றேன். ஒரு நாள் பசியோட திண்ணையில உட்காந்திருந்தப்போ எதிர்விட்டுத் திண்ணையில் அந்த வீட்டுக்காரர் வயித்துல ஈரத்துணிய போட்டு உக்காந்திருந்தாரு. என்னப்பான்னு சைகையில கேட்டேன். காசில்ல பசி யாயிருக்கின்னாரு. அப்படிச் சொன்னவரு அக்கம் பக்கத்தில கொஞ்சம் எட்டிப்பாருன்னு சைகை செய்ய வெளியே தெருவுக்கு வந்து பாத்தா அந்தத் தெருவுல எல்லாவீட்டு ஆண்களும் வயித்துல ஈரத்துணியோடு எங்கையோ வெறிச்சுப்பார்த்துக்கிட்டு இருந்ததபத் பாத்தேன். இதுக்குகெல்லாம் ஒரு தீர்வு வேணும். உடனே வீட்டுக்குள்ளப் போயி படுத்துக்கிட்டேன்.

மாற்றியனும் சுபந்ரவனும் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.

தாதிக்குரவன் : ஏன் சிரிக்கிறீங்க.

மாற்றியன் : எல்லாருக்கும் நல்லது செய்யனும்னுட்டு வீட்டுக்குள்ளாறப் போயி படுத்துக்கிட்டேன் சொன்னியே அதக்கேட்டு சிரிப்பு வராம என்ன வரும்.

தாதிக்குரவன் : அப்பவே போயி துாங்கினாத்தான ராத்திரி முழுவதும் முழுசியிருக்க முடியும்.

(மீண்டும் மாற்றியனும் சுபந்ரவனும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். கூடவே கரியாலுகரும் அவர்களோடு சேர்ந்துகொண்டான். தாதிக்குரவன் தானும் அவர்களோடு சேர்ந்து சிரித்துவிட்டு மீண்டும் தொடர்ந்தான்.)

தாதிக்குரவன் : அன்னைக்கு ராத்திரி மாக்கிரேயன் கடைக்குள்ள கண்ணம் வச்சு புகுந்து எனக்கும் மத்த எல்லாருக்கும் தேவையானத திருடிக்கொண்டு வந்தேன். சாந்திநகர் மக்க ஒவ்வொருத்தர் வீட்லயும் ஒவ்வொரு மூட்டைய கொண்டு கொண்டுவந்து போட்டேன். அவங்களும் அத அப்பவே பிரிச்சு அந்த அர்த்த ராத்தி சமயத்துல அந்தத்தெருவில இருந்த எல்லா வீட்லயும் அடுப்ப எரிஞ்சுது. எல்லாரும் வயிறார சாப்பிட்டு படுத்துத்துாங்கியாச்சு. அப்புறந்தான் வந்துது வென.

மாற்றியன் : காலையில எல்லாரும் காலலும்ப தண்ணியில்லாம என்னப் பண்ணுவாங்கன்னு யோசிச்சியா.

தாதிக்குரவன் : இல்லிங்க. போலீசு நேர என் வீட்டுக்கு வந்து கைது பண்ணி இங்க கொண்டு வந்துட்டாங்க.

மாற்றியன் : அவங்களுக்கு எப்படித்தெரியும் நீதான் திருடினன்னு ?

தாதிக்குரவன் : எல்லாரும் மாட்டிக்குவோம்னு என்ன அந்த தெருக்காரங்களே காட்டிக்கொடுத்துட்டாங்க.

சுபந்ரவன் : அப்படின்னா நீ திருட்டத்தொழிலா செய்யல.

தாதிக்குரவன் : இல்லிங்க. ஆனா.

சுபந்ரவன் : என்ன ஆனா.

தாதிக்குரவன் : தொழிலா செஞ்சா நல்லதுன்னு நெனக்கிறேன்.

மாற்றியன் : வெளிய போணா அதத்தான் செய்யப்போறியா.

தாதிக்குரவன் : இல்லிங்க.

மாற்றியன் : தொழிலா செஞ்சா நல்லதுன்னியே அதுக்கு என்ன அர்த்தம்.

தாதிக்குரவன்:: உங்கள மாதிரி நல்ல இடத்துல இருக்கறவங்க ஆதரவு தந்தா நிச்சயம் நான் அந்தத் தொழில வெற்றிகரமா செய்யமுடியுங்க.

(நால்வரும் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள். கொள்ளைக் கைதி இருளிடியான் மேடைக்குள் ஓடிவருகிறான்.)

இருளிடியான் : யக்ஞப்பன் மயங்கி வழுந்துட்டான். ஓடியாங்க. ஓடியாங்க

(என சொல்லிவிட்டு அவன் இடது மேடைவிளிம்புக்கு சென்று மறைய, நல்வரும் அவனோடு அவன் சென்ற திசைக்குள் சென்று மறைகின்றனர். மேடைக்குள் யக்ஞப்பனை கரியாலுகரும் தாதிக்குரவனும் துக்கி வர மாற்றியனும் சுபந்ரவனும் யக்ஞப்பனைப் பார்த்தபடி வருகின்றனர். யக்ஞப்பனை வலது மேடைத்தளத்தில் வைக்க அவனைச்சுற்றி நால்வரும் மண்டியிட்டு அமர்ந்துகொண்டு அவனை தட்டி எழுப்ப முயற்சிக்கின்றனர்.

சுபந்ரவன் : என்ன ஆச்சு

இருளிடியான் : என்னமோ தெரியல. காலையிலேர்ந்து தல சுத்துது தலை சுத்துதுன்னு சொல்லிக்கிட்டே இருந்தாரு. செத்த முன்னாடி கல்லுஒடச்சிக்கிட்டு இருக்கச்சே டப்புன்னு மயங்கி விழுந்துட்டாரு.

மாற்றியன் : சரி சரி அவன எழுப்பப்பாரு.

(அவனை பலவாறாக எழுப்ப முயற்சித்து பின் அவனே எழுந்திரிக்கட்டும் என விட்டுவிட்டு நால்வரும் ஆசுவாசப்படுத்திக்கொள்பவர்களாக அமர்கின்றனர். கைதிகளோடு காலவர்கள் அமராமல் தனியே நிற்க, அதைக்கண்ட தாதிக்குரவன் பக்கத்தில் இடது மேடைத்தளத்தில் இருந்த நாற்காலிகளை எடுத்துவரப் போகும் போது சுபந்ரவன் தடுத்து நிறுத்தி

சுபந்ரவன் : விணைய வெல குடுத்து வாங்கிறியா ?

தாதிக்குரவன் : நிக்கிரீங்களேன்னுட்டு . . .

சுபந்ரவன் : அத இங்கக்கொண்டு வந்துட்டான்னா அப்புறம் நான் நின்னுக்கிட்டே இருக்கவேண்டியதுதான். இப்ப என்ன, என் வேல நேரம் வரையும்தான் நிக்கப்போறேன். அப்புறம் வீட்டுக்குப்போனா கால அமுக்க ஒரு ஆளு, கையமுக்கு ஒரு ஆளுன்னு ஆளாலுக்கு பாத்துக்கப்போறாங்க. விடு, நிக்கிறோம். நீங்க உட்காருங்க.

தாதிக்குரவன் : இந்த மனசுதாங்க நீங்க உண்மையிலேயே காவக்கரர்தானான்னு சந்தேகத்த எழுப்புது.

சுபந்ரவன் : ஏன் ?

தாதிக்குரவன் : காவக்காரர்னா சிடுசிடுன்னு மூஞ்ச வச்சிக்கிட்டு பொண்ட்டிப்புள்ளக்குட்டிகளக்கூட அதட்ற விதம்னு நெனச்சிருந்ததால.

கரியாலுகர் : அப்பத்தான் அவர காவக்காரர்னு எல்லாரும் மதிப்பாங்க. இப்படி மொசமொசன்னு இருந்தா எப்படி.

சுபந்ரவன் : அப்ப நான் காவக்காரர் மாதிரி இல்லையா ?

இருளிடியான் : மனசுள்ள காவக்காரர்.

சுபந்ரவன் : சரி சரி ரொம்ப ரொம்பத்தான் . . .

இருளிடியான் : அதான சார் நெசம். கொள்ளக்காரனா இருந்தாலும் மனசனோடத்தான சார் வாழறேன். எதுக்காக கொள்ள அடிக்கனும் ? கொள்ள அடிச்சத என்ன செய்யறதுக்கு. என்னோட எனக்கு புடிச்சவங்க மனசு சந்தேசமா இருக்கனுங்கறதுதான.

சுபந்ரவன் : இத கொள்ளக்காரன் தத்துவம்னு எடுத்துக்கவா.

இருளிடியான் : அப்படியே எடுத்துக்கலாம் சார். உங்களையே எடுத்துக்கங்க. நல்ல மதிப்பான வேல. நல்ல சம்பளம். உங்கள நம்பி இருக்கறவங்கள காப்பாத்தப் போதுமானதா இருக்கறதனால தான சார் நீங்க நிம்மதியா இருக்கீங்க. இது இல்லன்னா என்ன செஞ்சிருப்பீங்க.

சுபந்ரவன் : என்ன செஞ்சிருப்பேன். எங்கியாவது மூட்டத்துாக்கி சம்பாதிச்சிக்கிட்டு இருந்திருப்பேன்.

இருளிடியான் : பேச்சக்கு வேணா அப்படி சொல்லலாம் சார். மூட்டத்துாக்கறவரா இருந்தா, இப்ப இந்த யக்ஞப்பன துாக்கிக்கிட்டு வந்திருக்கலாமில்ல. தனியா வேணாம். எங்களோட சேர்ந்து ஒரு கை கொடுத்திருக்கலாமில்லயா. இல்லையே. கைதிதான விழுந்தான். தப்பு செஞ்சவன் தான. தப்பு செஞ்சவன் வெறயாராவது அவன துாக்கட்டுமேன்னு ஐம்முன்னு விரைப்பா கூட வந்தீங்களே.

சுபந்ரவன் : ஒருத்தன துாக்கறதுக்கு எதுக்கு மூணுநாலுபேருன்னு . . .

இருளிடியான் : (இடைமறித்து) துாக்க வேணாம் சார். ஆனா கூட வந்தீங்களே அதுவே போதும். இதக்கூட வேறயாருகிட்டயும் எதிர்பார்க்கமுடியாது சார். உங்கள கொற சொல்லல. ஆனா செளகரியமா இருக்கறவங்க ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமான மொதலாளிக் குணத்தோடத்தான் இருக்காங்க. ஆனா ஒண்ணுமில்லாத அண்ணக்காவடியா . . . என்ன மாதிரி . . . காரியாலுகர் மாதிரி . . . தாதிக்குரவன் மாதிரி . . . எவ்வளவோ பேர் இருக்காங்க. நாங்க தப்பு செஞ்சிருக்கோம் உள்ள இருக்கோம். ஆனா அந்த அண்ணக்காவடிங்க வெளியில கைதியா அலைஞ்சிகிட்டுடு இருக்காங்க தெரியுமா ? பாதுகாப்புங்கறது எல்லாம் இருக்கவங்களுக்குத் தான் கெடைக்குது. மத்தவங்க, மானத்துக்கும் உயிருக்கும் பாதுக்காப்பில்லாம, கவனிக்க ஆளில்லாம தன்தோன்றியா திரியறது தெரியுமா ? அப்படித் திரியும்போது சந்தர்ப்பம் வந்தர் பாதுகாப்ப அவங்களே ஏற்படுத்திக்கிறாங்க. என்ன அதுங்கிரீங்களா. திருடறதும் கொள்ளையடிக்கிறதும் தான். இருக்கிற இடத்திலேர்ந்துதான் திருடமுடியும். அங்கதான் தேவப்படுறது கெடக்கிறது. மெதமிஞ்சிக் கெடக்குது. இருக்கிறவனுக்கிட்டேர்ந்து அவனுக்குத் தெரியாமல் எடுத்துக்கொள்ளப்படுகிறது.. இதத்தான் திருடு கொள்ளைன்னு சொல்றாங்க. தெரிஞ்சி எடுக்க முடியாது. அப்படித் தெரிஞ்சிட்டா திருடினவன அவன் சமூகத்திலேர்ந்து பிரிச்சு இப்படி உங்கள மாதிரியான பாதுகாவலர்கள் மத்தியல வாழ வச்சிடுவாங்க. அப்புறம் அவன் திருடத்தேவையில்ல இல்லையா. இங்கத்தான் யாரும் திருடி கொள்ளையடிச்சு வாழ அவசியமில்லம இருக்கு. இங்கேயும் நடந்துடிச்சின்னா அப்புறம். . . இந்த திருடறது கொள்ளையடிக்கிறதுங்கறதுக்கு அர்த்தமே அகராதியில இருக்காது.

(அப்போது யக்ஞப்பன் மெல்ல கண்விழிக்கிறான் சுற்றுமுற்றம் பார்க்கிறான். அருகில் அனைவரும் அவனையே பார்த்துக்கொண்டிருப்பதைக் கண்டதும் சட்டென எழ முயற்சிக்கிறான்: முடியாமல் போக, கரியாலுகர் மடியில் சாய்ந்துகொள்கிறான். சுற்றிலும் நடப்பதைக் கவனித்துக்கொண்டே)

மாற்றியன் : பெரிய பிரசங்கி மாதிரி பேசறப்பா ? படிச்சிருந்தா நல்ல நெலமைக்கு வந்திருப்ப.

சுபந்ரவன் : ஒரு வேல நாங்க உனக்குக்கீழ வேல செய்திருப்போம்.

இருளிடியான் : சந்தேசமா இருக்கு சார்.. இதே சந்தோசம் தான் நான் முதமுத திருடிட்டு வந்து என் குடும்பத்தோட கடன அடச்சப்போ என் மனைவி சொன்னா.

சுபந்ரவன் : என்னன்னு சொன்னா ?

இருளிடியான் : சொன்னா சார். நெறையா. அவ ஒரு போதி மரம் சார்.

மாற்றியன் : என்னப்பா நாங்க தெரிஞ்சிக்கக்கூடாதா ?

தாதிக்குரவன் : சொல்லுங்க எங்ககிட்டக்கூட உங்க மனைவியைப் பத்தி இப்படிச் சொல்லலிலே.

சுபந்ரவன் : வேறெப்படி சொல்லியிருக்கான்.

தாதிக்குரவன் : சொல்லட்டுங்களா. (இருளிடியானைப் பார்த்து. அவன் அதைக் கண்டுகொண்டவனாக இல்லாமல் யக்ஞப்பனைப் பார்த்துக்கொண்டிருக்க, தாதிக்குரவன் காவலர்களைப் பார்த்து) இவரது மனைவியைப் பற்றி இதுக்கு முன்னாடி நல்லதா ஒரு வார்த்தைகூட சொன்னதில்லை. அசிங்கசிங்கமா பேசுவார். எல்லாமே காமம் சம்பந்தமானதுதான். அதயே மாத்தி மாத்தி அடிக்கடி வேறவேறவிதமா சொல்வாரு. எல்லாரும் சிரித்து சந்தோசமா கேப்பாங்க. இவரு அந்த விசயத்தப்பத்தி பேசத்தொடங்கிட்டா. ஆனா எனக்கு என்னமோ இவரு மனசுக்குள்ள வேவொண்ண வச்சிக்கிட்டு பேச்சுக்கு ஒண்ணு பேசறாருன்னு தோணிச்சி. இன்னிக்குத்தான் இவருகிட்டேர்ந்து உண்மை வெளிவருது. என்ன சொல்றாருன்னு பாப்போம்.

இருளிடியான் : என்னமோ நான் உங்களுக்கெல்லாம் வாழ்க்கைய பத்தி வகுப்பு எடுக்கமாதிரி இருக்கு. எனக்கு என்ன யாரு பாராட்டினாலும் நான் அவங்களுக்கு அடிமையா மாறிடறதாலதான் எல்லாம் எனக்கு எதிரா நடந்துடுது. என் மனைவிதான் என்னோட தேடலோட உந்துதல். ஆனா நான் தான் சரியானதத் தேடல. (வருத்தமடைந்தவனாக சிறிது நேரம் தலைகவிழ்ந்து இருந்து கண்களைத் துடைத்துவிட்டு) அவ ஒரு பெரிய இடத்துப்பொண்ணு. நகை நட்டோட சீர் செனத்தியோடு யாராவது நல்ல ஒழுக்கமான வாழ்நா பூரா இவள மகாராணி மாதிரி வச்சிக் காப்பத்தக்கூடியவன கட்டிகிட்டு வாழ வேண்டியவ. (சிறிது மெளணம். பின் தொடர்கிறான்) அப்பல்லாம் நான் சின்னச் சின்ன திருட்டுகளத்தான் செஞ்சிவந்தேன். முத முறையா எனக்கு நெறையா பணம் தேவப்பட்டது. அதுக்காக ஒரு பெரிய திருட்டச் செய்யலாம்னு திட்டம்போட்டேன். சட்டுன்னு ஒரு இடத்துக்குப்போனா, ஒருவேள எனக்குத் தேவப்பட்றது கெடைக்காது. எனக்குத் தேவயான தொகை இருக்கிற ஆள முதல்லப்பாத்து வச்சிக்கிட்டு, அங்கிருந்து அவனுக்கு ஆசையான எதையாவது கடத்திக்கிட்டுப் போயி, பணங்கறக்கலாம் திட்டம் போட்டு ஒரு பெரிய பணக்காரனோட மகள, அதாவது பின்னால என் மனைவியா வரப்போரவள கடத்திக்கிட்டு ஒரு மோட்டார் சைக்கிளில ஏத்திக்கிட்டு ஊரவிட்டு ரொம்ப துாரம் வந்துட்டேன். ஒரு ஆளரவமற்ற ஒரு இடத்தில அவள இறக்கிவிட்டு ஒண்ணுக்கிண்ணுக்கு போகணும்னா போயிட்டு வான்னு சொன்னேன். அவ என்னையே பார்த்தா. ஏன் அப்படி பாக்குறன்னு கேட்டதுதான் என்னோட முதல் பேச்சு. அதுக்குப்பின்னால அவ என்னக்கேட்டது. என்ன மாத்த முயற்சித்தது. நான் வேளைக்குப்போயி சம்பாதித்தது. சம்பாதியத்துல வீடு கட்டு புள்ளகுட்டிகளோடு வழ்ந்தது. எல்லாம் நடந்தது. நான் அதுக்குப்பின்னால திருட்டுத்தொழிலை தொடரவேயில்லை. விட்டுட்டேன். ரொம்ப நாளைக்குப்பின்னால் அவளுக்கு பக்கவாதம் ஏற்பட்டு படுத்தப்படுக்கையா இருக்கறச்சே அவளுக்கு சிக்கிச்சை செய்ய லட்சக்கணக்கில் பணம் தேவைப்பட்டது. ஒரு சில லட்சத்திற்கு இருக்கிற வீட்டையும் சுத்திபத்தியுள்ள மக்கள்டேர்ந்து கடனையும் வாங்கி சிகிக்சையை ஆரம்பிச்சிட்டேன். மேலும் மேலும் பணம் தேவைப்பட்டதால என்னால சமாளிக்க முடியல. என் பழைய தொழில்லதான் எப்பத்தோவைப்படுதோ அப்ப எடுத்தக்கூடிய வசதியிருக்கே. அதையே செய்ய திட்டமிட்டு நெனச்சபடி செஞ்சும் முடிச்சிட்டேன். அவ இப்ப நல்ல இருக்கா. ஆனா நான் கொள்ளயடிச்சிக்கொண்டு போன பணத்தால இல்ல. திடார்னு ஏற்பட்ட ஒரு அதிர்சியால குணமாயிட்டா. என்ன அதிர்ச்சிங்கிறீங்களா நான் கொள்ளையடிக்கப்போயி கொள்ளயடிச்சப்பணத்தோடு கைதாகிட்ட விசயத்தக் கேள்விப்பட்டு.

சுபந்ரவன் : பத்தியா உன் நல்ல மனசுக்கு உன் மனைவி குணமாக நீ கொள்ளையடிச்சப்பணம் தேவப்படல. அவளே குணமாயிட்டடா.

இருளிடியான் : இல்ல. என் கொள்ளைத்தொழில் தான் அவளக் காப்பாத்தியிருக்கு.

(யக்ஞப்பன் மெல்ல எழுந்து வந்து இருளிடியானைக் கட்டியனைத்துக்கொள்கிறான்.)

(அப்போது அவசர அவசரமாக ஒரு காவலன் மேடைக்குள் ஓடிவருகிறான். மாற்றியனையும் சுபந்தவனையும் பார்த்து)

காவலன் : கைது பண்ணிட்டாங்க. இங்கத்தான் நேரா வர்ராங்களாம். தயாரா இருக்க உத்தரவு வந்திருக்கு.

(என சொல்லிவிட்டு யாரையும் எதிர் பார்க்காமல் வெளியேறிவிடுகிறான். அவன் சென்றதும் காவலர்கள் இருவரும் மற்றக்கைதிகளை விட்டுவிட்டு சென்றுவிடுகின்றனர். பின் நான்கு கதைகதிளும் ஒருவரையொருவர் மாறிமாறிப் பார்த்து மெல்ல புன்னகைத்துக்கொள்கின்றனர். பின் சப்தமாக சிரிக்கின்றனர். சிறிது நேரத்திற்குப் பின் அவர்களது சிரிப்பு மீண்டும் புன்னகையாகி அமைதியாகிறது. அப்போது )

இருளிடியான் : செஞ்சிருக்கலாம். இல்ல.

யக்ஞப்பன் : எது என்ன ஆகப்போவுது ?

தாதிக்குரவன் : என்ன ஆனாத்தான் என்ன ?

கரியாலுகர் : ஆனா இவங்க நம்மல நம்புறதனால நாம அப்படிச் செய்யக்கூடாது. வெளியேப்போனா வெளிய உள்ள சிறை. நமக்கு எங்கப்போனாலும் சிறைதான். ஆனா நம்மள தப்பிக்கவிட்டுட்டாங்கன்னு இவங்களோடு வேல போயிடும்.

தாதிக்குரவன்: வேல மட்டும் போனாப்பரவாயில்லியே. நம்ம மேல உள்ள வழக்கெல்லாம் அவங்க மேலத்திரும்பிடும். அப்புறம் என்ன, நாம அனுபவிக்க வேண்டிய தண்டனைய அவங்க அனுபவிப்பாங்க. பாவமில்லியா.

இருளிடியான் : நாமாவது மனசோட நடந்துக்கனும். ஆனா இன்னொன்ணு வரப்போற கோட்புழுதிக்கு அப்புறம் துளிர்விட்டுப்போயிடும்.

கரியாலுகர் : நாம இங்கேர்ந்து போயிட்டாவா ?

இருளிடியான் : ஆமா. அவன் பயங்கர ஆசாமி.

யக்ஞப்பன் : உனக்கு ஏற்கனவே தெரியுமா.

இருளிடியான் : உனக்குத் தெரியாதா ?

யக்ஞப்பன் : தெரியும். ஆனா நெறுக்கமா இல்ல. அவன் ஒரு இதுக்கு தலைவன். அவன எல்லாரும் சாமியாட்டும் கும்புடுறாங்க. எங்கப்பாத்தாலும் எதுபாத்தாலும் அவன் தான் இருப்பான். அப்ப அந்த நிலமையில எல்லாருக்கும் எப்படி அவன் தெரிவானோ அதுமாதிரி தான் எனக்கும்.

இருளிடியான் : அப்படித்தான் எனக்கும். அத வச்சுத்தான் சொல்றேன் அவன் படுபயங்கரமான ஆளுன்னு.

கரியாலுகர் : பாப்போம். பாக்கிறதுக்கு முன்னாடி இப்படி ஒருத்தரப்பத்தின மத்தவரோட கருத்தக் கேட்டுப்புட்டா அப்பறம் அவரு என்னத்தான வேறுபட்டவரா இருந்தாலும் சொன்னவரப்போலத்தான் அவரு நமக்கு தோணுவாரு. அதனால, நாம அவரப்பத்தின கருத்த அப்புறமா பேசிக்குவோம். இப்ப அவருக்காகக் காத்திருப்போமா.

(மேடையில் ஒளி குறைகிறது)

காட்சி -2

(மேடையில் மீண்டும் ஒளி வருகிறது. காவலர்கள் வருவதும் எல்லோரையும் ஒரு சுற்று, சுற்றிப் பார்ப்பதும் பின் சென்றுவிடுவதுமாக இருப்பது அந்த சூழலை பரபரப்பாக ஆக்குகிறது. காவலர்கள் கயிறுகளை எடுத்துவருவதும் அதனால் மூன்று தளங்களையும் சுற்றிச்சுற்றிக் கட்டுவதும், ஆயுதங்களைக் கொண்டுவருவதும் ஆங்கேயிங்கே என குறிவைத்துப் பார்த்துவிட்டு மீண்டும் பின் மேடைக்குள் செல்வதும், அவ்வப்போது கைதிகள் உள்ளே வந்து எட்டி எட்டிப் பார்ப்பதும், மக்களில் – கல்குள்ளி, பசுபாதி, மரவேல், சக்காமர் போன்றோர் மேடைக்குள் வந்து வந்து எட்டிப்பார்ப்பதும் செல்வதும் ஆக இருப்பது . . . சில நொடிகள் நீடித்து, இறுதியாக கல்குள்ளியும் சக்காமரும் மட்டும் மேடையில் இருக்க, மேடையில் ஒளி முழுமையாக ஒளிர்கிறது. பின்னரங்கில் பரபரப்பான பேச்சுகுரல்களும், வண்டிகள் வருவதும் போவதுமான ஒலிகள் கேட்கிறது. பின்னரங்க ஒலிகள் அடங்கி மெல்ல ஒளித்துக்கொண்டிருக்க, மக்களின் பிரதிநிதிகளான கல்குள்ளியும் சக்காமரும் பார்வையாளர்களைப் பார்த்து)

கல்குள்ளி : என்னயிருந்தாலும் இப்படி ஒரு மனுசன விலங்கும் கையுமா கொண்டுவர்றது ! எப்படி இருந்த மனுசன். இருந்த இடத்துக்கு மறியாத கொடுக்காட்டியும் வயசுக்காவது கொடுக்கலாமில்லியா ?

சக்காமர் : எல்லாம் கெட்ட நேரம். கெட்ட நேரம் ஒருத்தனுக்கு வந்துட்டா அப்புறம் அவன் பட்றபாட்ட ஊரே கூடி நின்னு கைகொட்டி சிரிக்கும். அது இந்த மனுசனுக்கு நுாத்துக்நுாறு பொறுந்தமா அமஞ்சிடுச்சு.

கல்குள்ளி : ஆமாங்கிறேன். இத கேக்க ஆளேயில்லையா.

சக்காமர் : ஏன் இல்ல. நீயும் நானும் கேக்கல ? ஆனா ஒரு வித்தியாசம். நாம நமக்குள்ளாறத்தான் இப்படி கேட்டுக்க முடியும். பெரிய இடத்துச் சமாச்சாரங்கள பெரிய இடந்தான் கேக்கனும்.

கல்குள்ளி : கைது செஞ்சி இவ்ளோ நேரமாவது யாரும் ஒண்ணும் சொல்லலியே.

சக்காமர் : சொல்வாங்க. எல்லாம் கூடிப்பேசி ஒரு முடிவுக்கு வந்து, அதுக்கப்புறமா ஒரு கருத்தச் சொல்வாங்க. நீ வெணும்நா பொறுத்திருந்துபாரு.

(அப்போது பசுபாதி உள்ளே வருகிறான்.)

பசுபாதி : கேட்டியா சேதி! கோட்புழுதிய கைது செஞ்சிட்டாங்க.

கல்குள்ளி : அதப்பத்தித்தான் பேசிக்கிட்டு இருக்கோம்.

பசுபாதி : என்னத்தப் பேசினீங்க போங்க. அங்க ஒரே கலேபரமா இருக்கு. ஒருத்தன் தீக்குளிக்க கேனோடு நடுரேட்ல நின்னு ஆர்பாட்டம் செஞ்சிக்கிட்டிருக்கான். எல்லா சாணல்களிலேயும் இதே செய்திதான். பரபரப்பா இருக்கு உலகம்.

சக்காமர் : பரபரப்பா இருக்கா ? எதுக்குப் பரபரப்பா இருக்கு. இப்படி ஒரு செய்தி வந்திருக்கேன்னா. இல்ல . . . இப்படிப்பட்ட ஒருத்தர் இப்படிச் செஞ்சிட்டார்ன்னு கைது செஞ்சிருக்காங்களே, அதுக்கா ?

பசுபாதி : ரெண்டும் தான். ஆனா அவருமேல இவ்ளோ பேரு பாசமா இருப்பாங்கன்னு, நான் நெனச்சிக்கூடப் பாக்கல.

(அப்போது மரவேல் உள்ளே வருகிறான் அலுப்போடு காணப்படுகிறான்)

மரவேல் : ரொம்பத்தான் ஊதிப்பெருசாக்கிறாங்க.

கல்குள்ளி : என்னத்தச் சொல்ற ?

மரவேல் : கோட்புழுதியப் பத்தித்தான்.

பசுபாதி : என்ன அப்படிப் பெருசாக்கிறாங்கன்ற. கோட்புழுதிய கைதி செஞ்சது பெரிய விசயமில்லியா ?

மரவேல் : கோட்புழுதிய கைது பண்ணினது காவல்துறை. அவரு இன்னன்ன தப்பு செஞ்சிருக்காருன்னு சொல்லி கைது செஞ்சிருக்காங்க. அவரு சுத்தம்னா, வழக்கு பேசட்டும். வெளிய வரட்டும். அதுக்குள்ள அவர குத்தம் சொல்லக்கூடாதுன்னா எப்படி ? நீ தப்பு செஞ்சா, விட்டுறுவாங்களா. அப்படியே விட்டுட்டா நாட்ல மனுசனுங்க, மனுசனுங்களாத்தான் வாழ முடியுமா ? இத கேக்கக்கூடாதாங்கறனுவோளே ?

சக்காமர் : எனக்கென்னமா இவன் சொல்றதும் சரீன்னுதான் தோணுது. அவருமேல குற்றம் சுமத்தியிருக்காங்க. அந்த குத்தத்த மறுத்து அவரு வாதாடட்டும். வெளிய வரட்டும். இவன் யாரு அவருக்காக நடுத்தெருவுல போயி மண்ணென்ணெய உத்திக்கிட்டு, சாகப்போறேன் சாகப்போறேன்னு ஆர்பாட் டம் செய்யறது.

கல்குள்ளி : அவரு மேல உள்ள அபிப்பிராயந்தான்.

சக்காமர் : என்ன கன்றாவி அபிப்ராயமோ. ஒருத்தன் இன்னொருத்தன தண்டிக்கரச்சே தற்கொலை செஞ்சிக்கிறது! இல்லன்னா பாக்கிறவனெயெல்லாம் அடிச்சு வெறட்டுறது! இல்ல கடத்தெருவுல உள்ள கடைங்கள ஒடச்சிக் கொள்ள அடிக்கிறது!, இதெல்லாம் பாக்குறச்சே. இது உலகந்தானான்னு சந்தேகம் வருது.

மரவேல் : என்ன செய்யறது. இப்படி தப்பு செஞ்சதா கைது பண்ணிக்கொண்டுபோற பெரிய மனுசன, கையில விலங்கு மாட்டிக்கொண்டு போறாங்க, கூண்டுபோட்ூட வண்டியில ஏத்தியிருக்காங்க, அவரோட முகம் வாடியிருக்கும், கண் கலங்கராரு, சோந்துபோயிட்டாரு, நடையும் தளந்துபோயிடுத்து, இனிமே யாரு அந்த இடத்துக்கு வரமுடியும், அவரில்லாட்டி இந்த உலகமே இயங்காதே , அப்படி இப்படின்னு ஊதி ஊதி செய்திகள் தொடர்ந்து வெளிவந்து ஒவ்வொருத்தரோடு செவிப்பாரையையும் தகர்த்துக்கிடே இருந்தா என்ன ஆவும் ? இப்படித்தான், செய்தியினோட உசுப்பால போதையேறி என்ன செய்யறோம், எதுக்காக செய்யறோம்னு நெனவில்லாம கூறுகெட்டத்தனமா இப்படி செய்யவானுங்கத்தான். இதெல்லாம் செய்திங்களாலத்தான். இவனுக்குப் பிடித்த பத்திரிக்கையும், தொலைகாட்சிச் சாணல்களும், இவனுக்கு எதிரான பத்திரிக்கைகளும், சாணல்களும் என இரண்டு மூன்று திசையில் நின்றுகொண்டு மக்களோட அன்னாட வாழ்க்கையை அலை கழிக்கிற போக்கிலிருந்து யாராலாதான் மீள முடியும். யாரத்தான் மீட்கமுடியும். யார்தான் சுயமா சிந்திக்க முடியும். எல்லா சிந்தனையும் கவர்ச்சிகரமான மிரட்டலோடான செய்திகளைத்தான் முன்ன வைக்குது. அந்த செய்திங்கள மக்க மூலமா செயலாக்கம் செய்ய வைக்கிறது. நம்மீதே நமக்குச் சந்தேகம் வருகிறது. நாம் யாரோ ஒரு சக்தியின் விசையால் ஈர்க்கப்பட்டும் உந்தப்பட்டும் வாழ்கிறோம். சுவாசம் மட்டும் நம்முடையது மற்றதெல்லாம் வலுவுடையவனுடையது, அந்த வலுவுடையவன் தவறென குறிப்பிடப்பட்டால் உலகமே ஸ்தம்பித்துவிடும். அதுதான் இந்தக் கொலைவெறி படைத்த உயரிடத்து கோட்புழுதியின் ஸ்தானம்.

(மாற்றியன் உள்ளே வேகவேகமாக வருகிறான். மேடையில் நால்வரும் பேச்கொண்டிருப்பதைக் கண்டதும், அவர்களை நோக்கி வேகமாக வந்து,)

மாற்றியன் : தோ பாருங்க. எல்லாரையும் விரட்டிட்டேன். எதாயிருந்தாலும் போயி பேப்பரோ டி.வியோ பாத்து தெரிஞ்சிக்குங்க. முதல்ல இடத்தக் காலி பண்ணுங்க.

பசுபாதி : என்ன சார் இது. சார், ஆர்பாட்டமா செய்யறோம்.

சுபந்ரவன் : ஆர்பட்டம் செய்யத்தான் வந்திருக்கீங்களா.

பசுபாதி : சார் நாங்க ஆர்பாட்டமா செய்ய வந்திருக்கோம்! சும்மா என்ன நடக்குதுன்னு வேடிக்கப் பாக்க வந்ேதுாம்னு சொன்னா . . .

மாற்றியன் : டேய் என்னடா எங்கிட்டேயே தர்க்கம் பண்றியா. புடிச்சி உன்னையும் உள்ள போட்றுவேன். ஓடிபோயிடு முதல்ல.

(பின்னரங்கிலிருந்து அழுத்தமான இசை. மெல்ல எழுந்து பயப்படுத்தும் விதமான ஒலி. அதைத்தொடர்ந்து கலடியோசை. டங் டங்கென்று இடைவெளிவிட்டு கேட்கும் ஒலி, மேடையை நோக்கி வருவதாக இருக்கிறது. மாற்றியனும் சுபந்ரவனும் சுதாரித்துக்கொண்டு இடத்தை ஒரு வலம் வந்து எல்லா ஏற்பாடுகளும் சரியாக இருப்பதைத் ஊர்ஐிதப்படுத்துவதாக அவர்களது செயல்கள் இருக்கிறது. சிறிது நேரத்திற்குள் காலடி ஓசை நெறுக்கமாகக் கேட்கிறது. இருவரும் எல்லாம் சரியாக இருப்பதை வெளிபடுத்தி, அதனால் திருப்தியடைந்தவர்களாக, தத்தம் இடங்களில் வந்து நிற்கின்றனர். பின் இருவரும் ஒருவருக்கொருவர் தொடர்பில்லாமல் சிலையாக நிற்க, மேடைக்குள் மேலும் இரு காவலர்கள் நுழைய, அவர்களைத் தொடர்ந்து கோட்புழுதி வருகிறான். அவனைத் தொடர்ந்து மேலும் இரு காவல்கள் வருகின்றனர். மெல்ல அவர்கள் மைய மேடைத்தளத்தில் கோட்புழுதியை நிறுத்திவிட்டு அவனது கைவிலங்கை அவிழ்க்கின்றனர். அப்போது அவரைக்கொண்டு வந்த முதல் இரண்டு காவலர்களில் ஒருவன், மாற்றியனிடம் எதையோ சொல்ல அவன் சொல்வதை ஒப்புக்கொள்பவனாக தலையை ஆட்டிக்கொள்கிறான். பின் கோட்புழுதியைக் கொண்டு வந்த காவலர்கள் வெளியேறிவிடுகின்றனர். கோட்புழுதி மைய மேடைத்தளத்தில் இருக்க, இடது மேடைத் தளத்தின் முன் விளிம்புகளில் மாற்றியனும் சுபந்ரவனும் அசையாமல் சிலையாக நிற்கின்றனர். கோட்புழுதி மெல்ல தன்னை உலுக்கிக்கொண்டு நின்ற நிலையிலேயே சுற்றும் முற்றும் பார்க்கிறான். பின் மெல்ல அந்தத் தளத்திலேயே அங்குமிங்கும் உலவியபடி இருந்துவிட்டு பின் சம்மனம் போட்டு அமர்ந்துகொண்டு யோசனையில் ஆழ்கிறான். வெகுநேரம் அங்கே ஒருவித நிசப்தம் நிலவுகிறது. அப்போது வெளியிலிருந்து குரல்கள் வருகிறது.)

குரல் 1: டேய்!, யாருன்னு நெனச்சே. தொளச்சிடுவேன் தொளச்சி.

தலைமைக் காவலன் : போயா போ. உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணிப்பாரு. போ.

குரல் 1: டேய்!, நாளைக்கே வெளிய கொண்டுவந்துடுவோம் பாரு.

தலைமைக் காவலன் : தப்பு செஞ்சிருக்கிறது ஊர்ஐிதமாயிட்டா வெளிய வரவேமுடியாது பாத்துக்க.

குரல் 1: யாரு யாரு தப்பு செஞ்சதா சொன்னது.

தலைமைக் காவலன் : இப்ப உன் கிட்டச் சொல்லனும். போடா. சாட்சியக் களைக்கிறதுக்கா. அது மட்டும் நடக்காதுங்கறேன் எங்கிட்ட. இங்கேர்ந்து ஓடிடு.

குரல் 1: (அவரை விட்டு விலகிச் செல்வது அவனது பதில் கரைந்துகொண்டே இருப்பதில் இருந்து அறிந்துகொள்ளப்படுகிறது) எப்படி விசயத்த வாங்கமுடியுமோ அப்படி வாங்கிட்டா போவது.

பனுவலாரன் :சார் இத அப்படியே பத்திரிக்கையில போட்டுறட்டா.

தலைமைக் காவலன் : போடு. ஆனா அப்படியே இந்த இந்த நுாறு ரூபாவ வச்சிக்கோ.

பனுவலாரன் : ஏதுக்கு சார்.

தலைமைக் காவலன் : எனக்கு மாலை போட உனக்கு காசு வேணாம். உன் காசில வாங்குற மால ரொம்ப கணக்கும். என் பணத்த வச்சிக்கோ. அதில வாங்கிப்போடு.

பனுவலாரன் :என்ன சார் இப்படி சொல்றீங்க.

தலைமைக் காவலன் :பின்ன என்னப்பா. தப்பு செஞ்சதா ஒருத்தன் தாக்கல் செய்யறான். அதனாலதான் கைது செஞ்சிருக்கோம். என்னமோ என் வீட்டு, உப்பு புளிக்காக நான் அப்படி செஞ்சிருக்கதா என்ன மெரட்டிட்டுப்போறான் பாரான் அவனே.

பனுவலாரன் : அவன் கெடக்கான் விடுங்க சார். இந்த தலைவன் இல்லன்னா வேறொருத்தன் வந்தா, புதுசா வந்தவனுக்காக பேசப்போறவன் தான அவன்.

தலைமைக் காவலன் : என்னுமோ போ. ஆனா அதுக்காக உன்ன நம்பி நான் நட்டாத்துல குதிக்கப்போறதில்ல. நீ உன் வேலையப் பாத்துக்கிட்டுப்போ.

பனுவலாரன் : என்ன நம்புங்க சார்.

(மேடைக்குள் ஒரு காவல்காரர் வருகிறார். வந்தவர் நேராக கோட்புழுதியைப் பார்க்க கோட்புழுதி தையைத் திருப்பிக்கொள்கிறான். பின் அவர் மாற்றியனிடம் )

தலைமைக் காவலன் : சாப்பிட்டாரா ?

மாற்றியன் : இல்லிங்க சார்.

தலைமைக் காவலன் : கேக்கவேண்டியதுதான.

மாற்றியன் : உத்திரவு இல்லிங்க சார்.

தலைமைக் காவலன் :இவர நல்லா கவனிச்சிக்கிங்க. என்ன வேணும்னு கேக்கராரோ அத எங்கிட்ட சொல்லிட்டு அதன் படி நடந்துக்கங்க. இவரு யாரு தெரியுமில்ல ?

சுபந்ரவன் : தெரியும் சார்.

தலைமைக் காவலன் : என்னன்னு தெரியும் ?

சுபந்ரவன் : இவரு பெரிய . . . ?

தலைமைக் காவலன் : பெரியல்லாம் இல்ல. சின்னன்னு சொல்லு. கொலைய செஞ்சிட்டு வந்திருக்காரு. இருந்தாலும் வெளிய பெரிய மனுசன், ஆனா இங்கயில்ல. புரிஞ்சி நடங்க. ஏதாவது எக்குத்தப்பா செஞ்சிக்கிட்டார்னா அப்புறம் உன்னையும் என்னையும் ஊர்ல நார்நாரா கிழிச்சிடுவானுங்க. ஐாக்கிரதை.

(என சொல்லிவிட்டு அவர் விறுவிறென சென்றுவிடுகிறார்)

(அவர் சென்றதும் கோட்புழுதி திடாரென ஒரு விநோதமான ஒலியை எழுப்பிக்கொண்டே சிறு நடனம் போன்ற ஒரு அசைவை வெளிப்படுத்துகிறான். அவனது அசைவு வெகுவிநோதமாக இருக்க இருவரும் அவனைச்சுற்றி சுற்றி வந்து அவனது ஆட்டத்தை அடக்க முயற்சிக்கின்றனர். அவனது ஆட்டம் மேலும் மேலும் ஆக்ரோசமடைகிறது. ஆடும்போதே சில வார்த்தைகளையும் உதிர்க்கிறான்.)

ஆயிரமாயிர ஆண்டுகளாகட்டும் என் வீட்டின் நிழலுக்கடியில் புதையுண்ட அனைத்து ஐீவராசிகளும் உங்களை நோக்கியொரு பெரும் படையொன்றை திரட்டிக்கொண்டு வரும். எல்லாம் தவிடுபொடியாகும். அப்போது ஐகத்தின் நாச நிலையை எடுத்துரைபார் யாரும் இருக்கமாட்டார். ஒருவரும் மிஞ்சப்போவதில்லை என்னைத் தவிர . நான் நடந்து வரும் வழி நெடுக்க, பாதை பஞ்சுமெத்தையாக ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கும். என் பாதம் பதியும், விரோதிகளின் உடளடுக்களில் ஒன்றைக்கூட என்னால் குனிந்து பார்க்க நேரமிருக்காது. கேட்டுக்கோ காட்டுப் பேயே கேட்டுக்கோ. என்னை இப்போது விட்டுவிட்டால் தப்பித்தது உன் உயிர். உன் சனம். உன் சந்ததி, இல்லையேல் என் சாபத்தின் வலிமையை பின்னால் புலம்பிப் பயனிருக்காது கேட்டுக்கோ. கேட்டுக்கோங்கிறேனே. கேள். கேளு. கேளுன்னா. கேட்டுத்தான் ஆகனும், கேள். கேள். கேள்.

(என அவன் ஆக்ரோசமாக ஆடிக்கொண்டிருக்க மற்ற கைததிகளான கரியாலுகர் யக்ஞப்பன் இருளிடியான் தாதிக்குரவன் ஆகியோரும் மேடைக்குள் வந்து காவலர் இருவரோடு சேர்ந்து கோட்புழுதியை அடக்குகின்றனர். சிறிது நேரம் மேடையில் அமைதி நிலவுகிறது.)

மாற்றியன் : என்னமா கனக்கிறான். ஜய்யய்யோ. நம்பலால முடியாதுப்பா.

சுபந்ரவன் : (முணுமுணுப்பாக) நாமலே இப்படிச் சொல்லக்கூடாது. இப்படி மத்த கைதிங்க சுத்தி இருக்கறச்சே.

மாற்றியன் : மன்னிச்சிக்கோப்பா. உணர்ச்சிவசப்பட்டுட்டேன்.

சுபந்ரவன் : சரி சரி. இவன சாப்பிட வச்சிடுவோம். அப்புறமா மத்தலெல்லாம் பாத்துக்குவோம். (மற்ற கைதிகளைப் பார்த்து) ரொம்ப நன்றி. இனி நாங்க பாத்துக்குறோம். நீங்க உங்க இடத்துக்குப் போங்க.

கரியாலுகர் : இல்ல சார். இவரு சாப்பிடட்டும் அப்புறமா நாங்க போறோம். இப்படிப்பட்டவனுங்க சாப்பாட்டப்பத்தான் ரொம்ப கலாட்டா செய்வானுங்க, சின்னபுள்ளளைங்களாட்டம்.

மாற்றியன் : நீ சொல்றதும் சரிதான். ஏன்னா முதமுத இங்க வந்தப்ப நீயும் இப்படித்தான பண்ணின.

(எல்லோரும் விழுந்துவிழுந்து சிரிக்கிறார்கள். கோட்புழுதியைத் தவிர)

இருளிடியான் : (கொட்புழுதியைப் பார்த்து) யாப்பா. சிரிக்கிறது ? ம். உனக்கு, இங்க வேற எந்த பொழப்பும் இருக்கப்போறதில்ல. இப்பவே சேந்துக்கலன்னா அப்புறமா யாரும் உன்னோட சேரமாட்டாங்க, நீ சிரிக்கனும்னு நெனச்சா, தானா சிரிச்சிக்கிட்டு இருக்க வேண்டியதுதான். ஆமா உன்ன ஒண்ணு கேக்கணும்னு நெனச்சேன். நல்ல மதிப்போடத்தான இருந்த ? உன்ன மக்க தெய்வமாயில்ல கும்புட்டாங்க. இப்படிக் கேவலமான வேலயெல்லாம் உனக்குத் தேவைதானா ?

(கோட்புழுதி அவனை கடுமையாக முறைத்தான். )

இருளிடியான் : ரொம்ப முறைக்காத உன் மொரைப்பெல்லாம் இங்க செல்லாது. கேட்டுக்கோ நான் கொள்ளக்காரன், (காரியாலுகரைக்காண்பித்து) கொலைகாரன், (யக்ஞப்பனைக் காண்பித்து) இவரு காமப்பேயி (தாதிக்குரவனைக் காண்பித்து) இவன் சின்னச் சின்ன திருட்டெல்லாம் செய்யறவன். இப்ப நீ கொலைகாரன். நம்பிக்கக்கொலை செஞ்சிருக்க. உன்ன நம்பி உன்னோட இருந்தவனையே கொலை செஞ்சிருக்க. என்ன காரணம். எப்படி நடந்தது. நீதான் செஞ்சியாங்கிறதெல்லாம் இனி தான் தோண்டப்போறாங்க. அதுவரைக்கும் நீ உன்ன ”நான் குற்றவாளி இல்லப்பா, ரொம்ப ரொம்ப யோக்கியன்பா” ன்னு என் இங்க சுத்திச் சுத்தி வரலாம். ஒண்ண மட்டும் தெரிஞ்சிக்கோ. இங்க இருக்கறவங்கள விட ரொம்பப்பெரிய தப்பச் செஞ்சிட்டு வந்திருக்கே நீ. அது உனக்கேத் தெரியும். மட்டுமருவாதையா வாலட்டாம அடக்க ஒடுக்கமா சொன்னத கேட்டு நடந்துகிட்டான்னா ஒழுங்கா இருக்கலாம். இல்ல. அப்புறம் அனுபவிக்க வேண்டியதுதான்.

(மாற்றியன் இருளிடியானை அடக்கிவிட்டு கோட்புழுதியை நோக்கி)

மாற்றியன் : சாப்ட்ரியா ?

(எனக்கேட்டதும் மீண்டும் கோட்புழுதி தலையைத் திருப்பி அமர்ந்துகொள்கிறான்.)

தாதிக்குரவன் : விடுங்க சார். எனக்கு சாப்பாடு பத்தல இதையும் சாப்ட்டுர்றேன். பசிச்சிதுன்னா இவனா சாப்படப்போறான். அப்பப் பேட்டுக்குங்க.

சுபந்ரவன் : சும்ம இர்றா.

சுபந்ரவன் : (கோட்புழுதியிடம்) சாப்பிட்ருங்க. சாப்பிடலைன்னா உடம்பு கெட்டுப்போயிடும்

யக்ஞப்பன் : சாப்பிடலைன்னா உடம்பு கெட்டுப்போயிடும். சாப்பிட்டுட்டா இந்த சிறையே கெட்டுப்போயிடும் சாப்பிட்ருங்க இவரே.

(எல்லோரும் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள். மாற்றியன் எல்லோரையும் ஒரு அதட்டு அதட்டிவிட்டு)

மாற்றியன் : இங்க பாருங்க நீங்க சாப்பிடலைன்னா. நாங்க தான் உங்களுக்கு சோறு தண்ணி போடாம கொடும படுத்துறோம்னு பேப்பர்ல போட்டுறுவானுங்க. அப்புறம் எங்கள தண்ணியில்லா காட்டுக்கு துாக்கிப்போட்டுறுவாங்க. இங்க வந்தும் இங்கிருக்கறவங்களைத் தொந்தரவு செய்யதீங்க. இது வேற மாதரியான இடம். ஒரு வகையில புனிதமான இடமும் கூட. இங்க வந்த நெரைய பேர் கடவுளா சமூகத்துக்குத் திரும்பிப்போயிருக்காங்க. நல்லபடியா ஒழுக்கத்தோடு நடந்துக்கங்க. அதான் இப்போதைக்கு என்னால சொல்ல முடியும்.

தாதிக்குரவன் : சார் விடுங்க சார் நாங்க பாத்துக்கிறோம்.

மாற்றியன் : தோ, பத்து நிமிசத்துல வந்துட்றோம். அதுக்குள்ளாற சாப்பிட்றுக்கனும். இல்ல. ஊசி போட்றவேண்டியதுதுான்.

யக்ஞப்பன் : போயிட்வாங்க சார்.

(இருகாவலர்களும் வெளியேறுகிறார்கள். யக்ஞப்பனும் தாதிக்குரவனும் கோட்புழுதியை நெறுங்கி அமர்ந்துகொள்கிறார்கள். அப்போது காரியாலுர் மெல்ல எழுந்து)

கரியாலுகர் : (பார்வையாளர்களைப் பார்த்து) இப்பப் பாருங்க. எப்படி சாப்ட்றாருன்னு . (என சொல்லிவிட்டு அவன் கோட்புழுதியிடம் சென்று) என்ன இவரே சாப்டாட்டி எல்லாம் சரியாயிடும்னு நெனக்கிறியா. உண்ணவிரதமில்லாம் இப்ப வெறும் பேச்சின்னு ஆயிடுச்சு. யாரும் அத மதிக்கிறதில்லை. அதுக்கான மதிப்பும் இல்லாம போயிடுச்சி. நீ சாப்டாட்டி எனக்கு பசிக்காது. அப்படி நீ சாப்ட்டாலும் எனக்கு செரிக்கப்போறதில்லை. நான் எனக்கு சாப்ட்டாகனும். நீ உன்ன எப்படி வச்சிக்கனும்னு நெனக்கிறியோ அதப்பொறுத்துதான் நீ இருக்க முடியும். தெரிஞ்சிக்க. இன்னொன்னும் சொல்றேன். நீ இப்ப சாப்டுட்டு சாப்டலன்னு வெளிய செய்தி தெரிச்சிவிட்டுறு. அப்ப நீ சாப்டாதமாதிரியும் இருக்க நீ நெனச்ச உன் ஆசையும் நிறைவேறும். அதே சமயம் வெளிய உன்னப்பத்தி ஒரு பரிதாப அல பாயும். இதுல ஒரு செளகரியம் இருக்கு தெரியுமா. நீ சாப்ட்டுட்டு தெம்பா அடுத்து என்ன செய்யனும்னு திட்டம்போடலாம்.

தாதிக்குரவன் : கோட்புழுதீ ஒண்ணமட்டும் தெரிஞ்சிக்கோ நீ எவ்ளோ பெரிய ஆளாயிருந்தாலும் இங்க நீ ஒரு கைதி. ஒருவேள குத்தம் ஊர்ஐிதமாயிடுச்சின்னு வச்சிக்கோ அப்புறம் இங்கதான் இருக்கப்போற. இப்ப உன்னோட செல்வாக்க – ஒருவேள அந்த செல்வாக்கு இப்ப இருக்கோ இல்லியோ! அது வேரவிசயம். இருக்குதுன்னே வச்சிக்குவோம். நீயும் இருக்கறதா நம்பி அதயித இப்ப பேசிட்டன்னு வச்சிக்கோ. அப்புறம் சொன்னமாதிரி குத்தம் ஊர்ஐிதமாயிட்டப்புறம், இங்க உடுப்ப மாத்திக்கிட்டு வரும்போது நீ தான் படாதபாடுபடப்போற. இப்பவே கொஞ்சம் அடக்கி வாசிக்க பழகிக்கோ. என்ன. ஒழுங்கா சாப்டு. இல்லன்னு வச்சிக்கோ ஜயா சொன்னமாதிரி அப்புறம் ஊசித்தான் போடுவாங்க. நீ ருசி கண்ட ஆளு. ஊசில என்ன ருசியிருக்கப்போவுது சொல்லு. அதனால் கொடுத்திருக்கறத சாப்டுரு.

இருளிடியான் : இவரு நாம இங்க இருக்கறதனால சாப்ட வெக்கப்பட்றாரு போல கொஞ்சம் வெளிய போயிட்டு வருவோம் சாப்ட்ருக்காரான்னு அப்ப பாப்போம்.

(என சொல்லிவிட்டு மற்றவர்களோடு வெளியேறி பக்கவாட்டு மேடையிலிருந்து கோட்புழுதியின் செயல்பாட்டை வேடிக்கைப்பார்க்கிறார்கள்)

(கோட்புழுதி மெல்ல எழுந்து அத்தளத்தில் சுற்றிசுற்றி வருகிறான் பின்னால் கைகளைக் கட்டிக்கொண்டு. அவ்வப்போது மோட்டுவளையைப் பார்த்துவிட்டு தரையைப் பார்க்கிறான். பின் மெல்ல தன் பழைய இடத்துக்கே வந்து உணவோடு இருந்த தட்டை எடுத்து அதையே உற்றுப்பார்த்து கண்களங்குகிறான். கண்களைத் துடைத்துவிட்டு, சாப்பாட்டில் ஒரு வில்லை எடுத்து வாயில் போடப்போனவன் மீண்டும் உணவை தட்டிலேயே வைத்துவிட்டு மீண்டும் மோட்டுவளையைப் பார்த்து)

இதுகாலமும் உச்சியிலிருந்து பொழிந்த மழையை இப்போது என்னுள்ளிலிருந்து கீழறக்கச் செய்யும் சூட்சியால் உனக்கு என்ன பயன் ? சொல். நான் உன் இடைத்தரகனா இருந்தது என்னமோ உண்மை. அதற்காக என்னை இப்படி கேவலப்படுத்தலாமா ? உனக்கு நான் என்ன கேடு செய்தேன். (பார்வையாளர்களைச் சுட்டிக்காட்டி) நானும் இவர்களைப் போல் வேடிக்கைப் பார்த்திருந்தால் எனக்கு இந்தக் கதி வந்திருக்குமா. இவர்களுக்காக நான் என்னவெல்லாம் செய்திருக்கிறேன். என்னை மறந்தல்லவா. இதுகாலமும் இவர்களுக்குள் ஊடாடிவந்திருக்கிறேன். இப்போது இவர்களே என்னை வேடிக்கைப் பார்க்கும்படி வைத்துவிட்டாயே. தவறுகள் இயல்பென்று சொன்ன நீ, தவறுகளால் தான் இந்த உலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது என்று சொன்ன நீ, நீயே தவறு செய்யலாம் என்பதற்கு எதிராக தவறுசெய்யலாமா ? நீ தவறித்தான் அங்கே இருக்கிறாயோ! ஒருத்தர் ஒருத்தரை அனுசரிப்பதும். மன்னிப்பதும், ஏற்பதும், வெறுப்பதும் எல்லாம் தவறால் தான் என்பதை அறியச் செய்தாய். தவறையும் செய்ய வைத்தாய். தவறால் இந்த கூட்டத்தை இணைத்தாய். தவறால் தவறுக்காக ஒன்றிணைந்திருக்கும் இந்த மானிடக்குழுவை சமப்படுத்தும் சூத்திரமே தவற்றின் வேறுபாட்டால் தானா ? நான் இப்போது என்னவிதமான தவற்றில் வேறுபட்டுவிட்டேன். ஒரு கொலை. நான் செய்ததாகச் சொல்லப்படும் கொலை. என்னாலும் கொலை செய்யமுடியுமா ? நான் செய்திருப்பேனா ? நீ நம்புகிறாயா ? நானே நம்பவில்லை . நீ நம்புகிறாயா ? ஆம் என்றால் என்னிடம் மட்டும் சொல். இல்லையென்றால் எல்லோருக்கும் தெரியும்படி உன் வித்தையைக் காட்டு.

(என பேசியவன் மெல்ல சோர்ந்துபோய் அமர்ந்துவிடுகிறான். சிறிது மெளனத்திற்குப் பின் மீண்டும் தட்டைப் பார்க்கிறான்)

இந்த உணவின் பொருள் என்ன. நான் உயிர் வாழவேண்டும் என்ற கரிசனத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் இந்த தர்மத்தின் பொருள் என்ன. நான் இறந்துவிட்டால் உயிரோடு வந்த நான் இங்கிருந்து உயிரோடுதான் போகவேண்டும் என்ற விதிக்கு மாறுபட்டுவிடும் என்பதாலா ? அப்படி மாறுபட்டுவிட்டால் கடமையைச் செய்தவர்கள் சீரழியவேண்டிவருமா ? அவர்களது சீரழிவில் என் வாழ்வு போற்றத்தக்கதாக மாற வழியிருக்கிறது. அப்படியானால் இதை நான் சாப்பிடப்போவதில்லை. இந்த கேள்விகளுக்கு நீ பதிலளிக்க வேண்டும். பதிலளிக்கவில்லை என்றால் நான் சாப்பிட்டுவிடுவேன். உண்மையாகச் சொல்கிறேன். இனியும் நீ பதில் சொல்லாமல் மொளனம் சாதித்தால் சாப்பிட்டுவிடுவேன். எல்லாவற்றையும் சாப்பிட்டுவிடுவேன். நானும் மனிதன் தானே. மனிதர்கள் மத்தியில் நான் தெய்வமாக, போற்றத்தக்கத் தலைவனாக இருந்தாலும் . . . உனக்குக் கட்டுப்பட்டவன் தானே என்று என்னை மேன்மேலும் அவமானப்படவைக்காதே. என்ன பதில் சொல்லமாட்டாயா ? இதோ சாப்பிட்டுவிடுகிறேன்.

(என சொல்லிவிட்டு கோட்புழுதி கடகடவென்று சாப்பாட்டை முழுவதுமாக முடித்துவிடுகிறான். மறைவிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தவர்கள். தாங்கள் நினைத்தவாறு நடந்துவிட்டது எனும் சந்தோசத்தில் ஒருவருக்கொருவர் வெற்றியைப் பகிர்ந்துகொள்கிறார்கள், கைகுலுக்கியபடி. கோட்புழுதி முழுதுமாக உண்டுவிட்டு ஏப்பம் விடும்போது மறைந்திருந்த தாதிக்குரவன் இருளிடியான் கரியாலுகர் ஆகியோர் மீண்டும் கோட்புழுதி முன் வருகிறார்கள். அவர்களைப் பார்த்ததும் கோட்புழுதி திரும்பிக்கொள்கிறான். தன் முகத்தைத் தட்டால் மூடிக்கொள்கிறான். அப்போது தாதிக்குரவன் அவனை நெறுங்கி)

இதுதான் சமுத்திரம்

இதற்குள் ஆயிரம் மீன்கள்

கடற்கானகத்து வாசிகளுக்கு, வீடுமாற ஆசை.

வாழ ஒரு நதிக்கிடைத்தபோது

கடல் மீன்களுக்கு நதிதான் புதுவீடு.

புதுவீட்டில் உப்பில்லை

ஆர்பரிக்கும் அலையுமில்லை

அலுத்துப்போன ஒரு மீனின்

முதுகில் ஒட்டிக்கொண்ட நத்தையின் பாடல்தான்

வரவேற்பேன் என்ற இடத்திற்குள் சென்றோம்

வாசலில்லா வீடு கண்டோம்

வரவேற்கவுமா ஆள்லில்லை!

வறுத்தமுற்ற எங்கள் முகத்தத்தினை

முதல் விருந்தினன் வரவேற்று மலரச்செய்ய,

அடுத்தவனை வரவெற்க

வரவேற்கப்பட்டவன் வரவேற்றான்.

விருந்தும் நடந்து

வருத்தமின்றி

நத்தையின் நாகரீகம்

நாடெங்கும் பரவும் போது…

நரகமான இங்கும் பதிந்தது அச்சரித்திரம்.

உன்னை நாங்கள் வரவேற்கிறோம் .

(என அவன் உரக்கப் பாடப்பாட, கோட்புழுதி காதைப் பொத்திக்கொண்டு கால் மடக்கி அதற்குள் தலையை நுழைத்துக்கொள்கிறான்.)

(இருளிடியான் கோட்புழுதியின் தலையைத் துாக்கி )

இருளடியான் : இப்பப் பார் உலகத்தை. நீ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி பேசினது போல் சொல்லனும்னா. (குரலை மாற்றி) அடே நீ யாருடா என்னை இங்கே இப்படி அல்லாட வச்சி என்ன சுகத்த பாக்கப்போற. எதுக்குடா என்ன இப்படி சின்னபின்னமாக்குற. என்னமோ நான் எல்லாருக்கும் நல்லது செய்யனும்னு கொண்டு போயி விட்டியே அது வா உலகம். இதோ பாருடா, இந்த உலகத்த. இங்க எல்லை எதுன்ன தெரியுது. எப்ப எதுசெய்தால் நியாயம்… எதை எதிர்த்தால் அநியாயம்லாம் சட்டம் இருக்கு. இந்த உலகம் சட்டத்துக்குள் சுத்துர அழகப்பாரு. எப்போதும் உன்னவிட கண்ணுங்கருத்துமா ஒவ்வொருத்தரும் கண்காணிக்கப்பட்ற புனிதத்தைக் கொஞ்சம் நீயும் படிச்சிக்கோ. உன்னை நீ மாற்றிக்கொள்ளலாம். நீ மாற மாட்டய். ஆனா எல்லோரையும் மாத்தி மாத்தி களைச்சிப்போட்டு விளையாடிக்கிட்டே இருப்ப. உன்கிட்டப் போய் சொல்கிறேன். பார்.

(கோட்புழுதியைப் பார்த்து அவன் பேசிய விதத்தால், கோட்புழுதி கவரப்பட, மெல்ல இருளிடியானைப் பார்த்துப் புன்னகைக்கிறான்.)

கோட்புழுதி : இந்த உலகைப் பற்றியான பிரக்ஞையில்லாமல் இருக்கிறேன். வெறும் எழுத்துக்கள் மூலம் மட்டும் இதைப் பற்றி அறிந்திருக்கிறேன். மற்றதெல்லாம் என்னை சந்திக்கவரும் விடுதலையானவர்களின் கதைகளின் அழுகையின் மூலம் தெரிந்தததுதான். அப்போது அவர்களுக்கு நான் சொன்னதையெல்லாம் இப்போது எனக்கே சொல்லிக்கொள்ள முடியமா என்று யோசிக்கிறேன். எனக்கு அது எந்த விதத்திலும் பயன்படாதுஎனத் தான் உணர்கிறேன்.

யக்ஞப்பன் : இந்த இடத்தப்பத்தியான வீரியத்தை உணரத்தான் முடியும். யாரும் யாருக்கும் இதபத்தி சொல்லிப் பாடம் நடத்தமுடியாது. இந்த இடம் உங்கள என்னவெல்லாம் பண்ணப்போவுதுன்னு பாரு.

(அப்போது மாற்றியன் உள்ளே வருகிறார். நால்வரும் மேடையில் இருக்கும் விதத்தைக் கண்டதும் சற்று வேகம் குறைந்து சாதாரணமாக அவர்களை நோக்கி வருகிறார்)

மாற்றியன் : என்ன தட்டுல சாப்பாட்டக் காணமே ? (தாதிக்குரவனைப் பார்த்து) தாதிக்குரவா சொன்னமாதிரி நீயே சாப்டுட்டியா சாப்பாட்டுத்தடியா ?

தாதிக்குரவன் : இல்லிங்க சார். கோட்புழுதிதான் சாப்ட்டாரு.

மாற்றியன் : நெசமாலேவா ? நம்பமுடியலியே. ஏங்க நீங்க தான் சாப்டாங்களா ?

(கோட்புழுதி மெல்ல ஆமாம் என்பதாக தலையை ஆட்டி ஒப்புக்கொள்ள, மாற்றியன் தொடர்ந்து)

மாற்றியன் : நடக்கப்போறது நடந்துதான் தீரும். ஏன்னா. அது நம்மல மீறி நம் மல சுத்தி உள்ளங்க கையில போயிடுத்து. அதுக்கு நாம என்ன செய்யமுடியும் சொல்லுங்க.

கோட்புழுதி : ஆமாம் கை நழுவி போயிடுத்து. கை நழுவிப்போனது எல்லாருக்கும் தெரிந்தும் போயிடுத்து. தனியாளா நான் ஒன்னும் செய்யமுடியாது. நடக்கறது நடக்கும். இப்பத் தெளிவா இருக்குறேன்.

மாற்றியன் : இங்க எங்ககிட்ட இருக்கவரைக்குமாவது உங்களோடு பழய குணத்தக் காட்டாம ஒத்துழச்சீங்கன்னா உங்களுக்கும் நல்லது எங்களுக்கும் நல்லது.

(என சொல்லிவிட்டு அவர் சென்று விட மற்றவர்களும் கோட்புழுதியை விட்டுவிட்டு சென்றுவிடுகின்றனர். கோட்புழுதி மட்டும் மேடையில் அமர்ந்திருக்கிறான். மேடையில் ஒளி மெல்ல குறைகிறது)

காட்சி-3

(மேடையில் ஒளி மீண்டும் வருகிறது. சுபந்ரவன் கையில் ஒரு தினசரியோடு மேடைக்குள் வருகிறான். அப்போது கோட்புழுதி யோகமுத்திரையொன்றில் இருக்கக்கண்டு, தளத்தின் விளிம்பில் அமர்ந்துகொண்டு தினசரியைப் படிக்கிறான். சிறிது நேரத்திற்குப்பின் கோட்புழுதி சுபந்ரவன் இருப்பதைக்கண்டு மெல்ல கணைக்கிறான். சுபந்ரவன் அவனிடம் தினசரியின் ஒரு பகுதியைக் கொடுக்க கோட்புழுதி அதை வேகமாகப் படிக்கிறான்)

கோட்புழுதி : இதுகாலமும் அங்கே என்ன நடந்து என்ற தெரியாமல் இருந்த புதிர் இப்போது வெட்டவெளிச்சமாகிவிட்டது. கோட்புழுதியின் கொடூரச் செயல்பாடுகள் இப்போது வெட்டவெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. கொலை கொள்ளை கற்பழிப்பு வழக்குகளில் சிக்கிக்கொண்ட கோட்புழுதிக்கு இப்போது சிறையில் முதல்தர சிறை வசதிகள் செய்துதரப்பட்டிருப்பதைக் கண்டித்து இன்ன இன்ன குழுக்கள் தெருமுனைப் பிரச்சாரங்கள் செய்து வருகின்றனர்.

சுபந்ரவன் : (தன் பகுதியிலிருந்து) கோட்புழுதி காவல்துறைக்கு ஒத்துழைக்க மறுக்கிறார். அவரிடம் கேட்கப்பட்டக் கேள்விகளுக்கு மெளனம் சாதிக்கிறார். சில சமயங்களில் மட்டும் ஆம் இல்லை என்பதாக தலையை அசைக்கிறார். அதனால் வழக்கு விவகாரங்கள் சற்றே தாமதமாகக் கூடும் என்று கருதப்படுகிறது. இருந்தாலும் அவர் மீதான குற்றச்சாட்டு அவரைக் குற்றவாளி என்பதற்கான போதுமான ஆதாரங்கள் இருப்பதாக காவல் துறை கருதுகிறது.

கோட்புழுதி :(தன் பகுதியிலிருந்து) இவரால் இவரோடு இதுகாலமும் தொடர்ந்து வந்த இவரது அபிமானிகள் அனைவரும் பீதியில் இருக்கிறார்கள். அவர்களில் சிலர் இப்போது தலைமறைவாகியிருப்பதாக அவரது ஊரில் உள்ளவர்கள் பேசிக்கொள்கிறார்கள். (சிறிது சிந்தனைக்குப் பிறகு சட்டென சுபந்ரவனைப் பார்த்து ஏதோ சொல்ல வந்தவன் அவன் ஏதோ அவனிடம் சொல்ல வருவதைக் கண்டு தான் சொல்ல நினைத்ததை நிறுத்திவிட்டு) சொல்லுங்க. என்ன ?

சுபந்ரவன் : ஏதோ நினைத்தேன் சட்டுனு மறுந்துடு. நீங்க ஏதோ சொல்ல வந்த மாதிரி இருந்துச்சே.

கோட்புழுதி : நான் சொல்வதற்கு என்ன இருக்கிறது. எல்லாம் தான் எழுத்திட்டாங்களே. (தினசரியைச் சட்டிக்காட்டி) நீங்க சொல்லுங்க. மிகவும் ஆர்வமாக வந்தீங்களே. சொல்லுங்க. என்ன நினைத்தீர்கள்.

சுபந்ரவன் : உங்களப் பாத்தோன்னே எல்லாம் மறந்துடிச்சி.

கோட்புழுதி : இப்படித்தான் நிறைய பேர் சொல்லுவாங்க. சொல்லியிருக்கிறார்கள். அது எல்லாமே உண்மையில்லை. அவர்கள் சொல்லவந்ததை சட்டென அவர்களது மூளை தனக்குள் பொரித்தட்டி கிளர்ந்தெழுந்து சொல்லவேண்டாம் என்றதும் சொல்லவந்ததை சொல்லாமல் விட்டுவிடுகிறார்கள். நீங்களும் அப்படித்தான்.

சுபந்ரவன் : சொல்றதுக்கு என்ன ? சொல்றேன். நீங்க சொல்ல வந்ததும் உங்கள சொல்லவிட்டுட்டு அப்புறமா சொல்லலாம்னு நெனச்சேன். இப்ப சொல்றேன். (தினசரியைப் பரித்து வைத்து) இதுல நெரையா விசயங்கள, சம்பவங்கள, எழுத்துக்களா கொட்டி விக்கிறாங்களே. அவங்க என்ன ஒழுக்கத்தக் கடபிடிக்கிறாங்க, சொல்லுங்க ? ஒரு பக்கம் அரசியல். ஒருபக்கம். விபத்தும் தொலைந்த செய்திகளும். இன்னொரு பக்கம் கொலையும் கற்பழிப்பும், இன்னொரு பக்கம் சினிமாவும் காமமும்னு ஒரே பத்திரிக்கையில இத்தனை நல்லதையும் கெட்டதையும் ஒண்ணாக்கிறாங்களே. சரியா. சின்ன பசங்க பாத்து பாத்து கெட்டுப்போகுதுங்க. எப்படி கொலை நடந்தது, எப்படி கற்பழிப்பு நடந்ததுன்னும் விளக்கம எழுதறாங்க. அடுத்தப் பக்கத்துக்காரங்களான சினிமாக்காரங்க அதை படமா வேற பிடிச்சு, காட்சியா வெளியிட… இன்னும் ரொம்ப மோசமா போகுது. சரியா இது. ?

கோட்புழுதி : (சிரிக்கிறான்.)

சுபந்ரவன் : தெரியலிங்களா. வியாபாரம் தான். வித்து காசு சேக்கனும். அதனால அவனும் தான் பாதிக்கபடுறான். அது அவனுக்கேத் தெரியல. அந்த பாதிப்ப சரி செய்ய அதனால சம்பாதிச்ச பணத்த அதுக்கே செலவு செஞ்சு சரி செய்யறான். அப்ப அந்த பணத்தோட மதிப்பு என்னாச்சு பாதிங்களா. இது அவன் முதல்லேயே நல்லத கொடுத்து நல்லதப் பரப்புனான்னா நல்லா இருக்கலாம்மில்லையா ? குறைந்தபட்சம் மன அழுத்தம் இல்லாம!

கோட்புழுதி : (சிரித்துக்கொள்கிறான்.)

சுபந்ரவன் : உங்ககிட்டப்போயி இதப் பேசுறேன் பாருங்க. உங்களுக்கும் ஒரு பக்கத்த ஒதுக்கி உங்க விவகாரத்தயும் வித்துக்கிட்டு இருக்காங்க. தெரியுமா ? தெரிஞ்சு என்ன செய்ய முடியும். நீங்க செஞ்சது நியாயமில்லன்னு உங்களுக்கேத்தான் தெரியுமே ?

கோட்புழுதி : (அமைதியாக தலை கவிழ்ந்துகொள்கிறான். பின் அவனை நோக்கி . . .) இதுபோல ஒரு நாளும் நான் கனவினை அறுத்துக் காயப்படுத்தியதில்லை. அப்படித்தான் இப்போதும் இருப்பதாக நினைக்கிறேன் ஒருவேளை எனக்குத் தெரியாமலேயே இந்தக் கொலையைச் செய்திருப்பேனோ என்று கூட எண்ணத்தோன்றுகிறது. அதனால் எவ்வப்போதெல்லாம் கற்பனை வறண்டு போகிறதோ அப்போதெல்லாம் என் மனித குணம் அற்றுப்போய் மிருகமாக அலையத் தொடங்கிவிடுகிறேன். அலையத் தொடங்கின சில நொடிகளுக்கெல்லாம் அவசர அவசரமாக சில கவிதைகளை எழுதித்தள்ளிவிட்டு உணவிருக்கும் இடம் தேடி வேகவேகமாக ஓடுகிறேன். அங்கே ஆயிரமாயிரமான பேர் உண்ட வயிற்றோடு தள்ளாடித்தள்ளாடி நடந்து ஒரே திசையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றனர். பானை வயிற்றை தடவித்தடவி ரசித்தபடி. சில சமயம் அதைச் செல்லமாகத் தட்டி அதிரச் செய்து குலுங்கிக்குலுங்கி சிரித்தபடி. அவர்களோடு நானும் செல்லவா. அல்லது அவர்கள் சென்று மறையும்வரை இருந்துவிட்டு வேறு திசையில் நான் மட்டும் பயணிக்கவா. நான் மட்டும் பயணிக்கும் அந்த திசையில் வேறுயாராவது இருந்தால் . . . அவர்கள் ஏற்கனவே இருந்தவர்களாக இருப்பின் நலம். அந்த நலம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். கழுத்தை அறுத்து குருதி கொப்பளிக்க கண்கள் துருத்தி நா வெளிதள்ளி உயிர்போகும் அந்த சுகமாக இருந்தாலும் . . . இதுபோன்ற என்னவோட்டத்தோடு நானும் ஒரு வேளையில் ஈடுபட முடியுமா என்பதுதான் எனது சந்தேகம். ஒருவேளை வேலைகள் அனைத்தும் இதைவிட கொடூரமான அபத்தக் கனவின் உயிர் நிலைதானோ என்னவோ. அப்படிப்பார்த்தால் நான் சைவம் தான். நான் மிதவாதி தான். நான் காட்டுமிராண்டியில்லைதான்.

சுபந்ரவன் : உங்களிடம் ஏதா பேசவேண்டும் என்று எனக்குத் தனிப்பட்ட ஆர்வம் ஏற்பபட்டதால் இவ்வளவு நேரமும் என் கடமையையின் கடுமையை மறந்து மனசோடு பேச ஆசைப்பட்டேன். ஆனால் நீங்கள் சொல்வது எனக்கு ஒன்றும் புரியவில்லை. வருகிறேன்.

(அப்போது மாற்றியன் வருகிறான்)

மாற்றியன் : என்ன சொல்கிறார். (தினசரியைப் பார்த்துவிட்டு) என்ன இன்னிய செய்தியையெல்லாம் படிச்சீங்களா. எல்லாம் உங்களப் பத்தித்தான். வெளிய இருக்கும் போதும் உங்களப்பத்தியே தான் பேச்சு வரும்… உள்ளவந்த பிறகும் பக்கம் பக்கமா கலர் கலரா போட்டோவோடு… எப்படிங்க இப்படியெல்லாம் பிரபல்யத்த உங்களால தக்கவச்சுக்கமுடியுது ?

சுபந்ரவன் : (மாற்றியனைப் பார்த்து) வாங்க சார். பாத்தீங்களா ஆச்சர்யத்த கோட்புழுதி சாப்டுட்டாரு. என்ன அதிசயம் பாருங்க. ஒரே நாள்ல நம்மல புரிஞ்சிக்கிட்டு நாம சொன்னமாதிரி கேக்க ஆரம்பிச்சிட்டாரு.

மாற்றியன் : தெரியும். ஆனா இவரையெல்லாம் அவ்வளவு சீக்கிரமா மாத்திட முடியாது. நம்மல வேணும்னா அவரு தன்னோட வழிக்குக்கொண்டு வந்திடுவாரு. அந்தவழிய மடடும் நாம கத்துக்கிடோம்னு வச்சிக்கோ அப்புறம் நாம இருக்கவேண்டிய இடமே வேறயா இருக்கும்.

(சிரித்துக்கொண்டே)

சுபந்ரவன் : இருக்கவேண்டிய இடம். இதுதான் ( எனஅழுத்தமாக சொல்லிவிட்டு அவனும்சிரிக்க கோட்புழுதி அவர்கள் இருவரையும் ஒரு முறை முறைத்துப்பார்த்துவிட்டு தலையைக் கவிழ்ந்துகொள்கிறான்.)

மாற்றியன்: நான் சொல்லவந்ததே வேர, வேற எதையோபேசிக்கிட்டு இருக்கோம். இதோ பார். கோட்புழுதியை பார்க்கிறதுக்காக அவரோட வக்கில் வந்திருக்கிறாரு. நீ கொஞ்சம் பக்கத்திலேயே இருந்து ரெண்டுபேரையும் கவனமா பாத்துக்கோ. ஏதாவது சிக்கலா இருந்தா எனக்கு உடனே தெரிவி. என்ன ? (என்று சொல்லிவிட்டு அவன் அவசர அவசரமாக வெளியேற முற்படும் போது கோட்புழுதி தலையைத் துாக்கி)

கோட்புழுதி: நான் யாரையும் சந்திக்க விரும்பல.

மாற்றியன்: என்ன சொன்னீங்க ?

கோட்புழுதி: நான் யாரையும் சந்திக்க விரும்பலன்னேன்.

மாற்றியன் : (மாற்றியனைப் பார்த்து) அப்ப சரி. நான் சொல்லிட்றேன். நீ எதுக்கும் இங்கேயே இரு. (என சொல்லிவிட்டு வெளியேற முற்படும்போது, மீண்டும் கோட்புழுதி)

கோட்புழுதி: நான் என் வெள்ளையனப் பாக்கனும்.

சுபந்ரவன் : யாரு வெள்ளையன் ?

கோட்புழுதி: வேணாம். நான் யாரையும் பாக்க வேணாம். விட்ருங்க.

மாற்றியன் : (தலையில் அடித்துக்கொண்டு வெளியெறிவிடுகிறான். பின் சுபந்தரவன் கோட்புழுதியிடம்)

சுபந்ரவன் யாருங்க, வெள்ளையங்கிறது ?

கோட்புழுதி: ஜயோ. அவனை நான் பார்க்கப்போவதில்லையே. பிறகு ஏன் என்னைக் குடைகிறீர்கள்.

சுபந்ரவன் : சொல்ல வேண்டாம்னா சொல்லவேண்டாம்.

(என சொல்லிவிட்டு அவன் அருகில் இருந்த தினசரியைப் பிரித்துப் படிக்கத்துவங்குகிறான். படித்துக்கொண்டிருந்தவன் சட்டென கோட்புழுதியின் பக்கம் திரும்பும் போது கோட்புழுதி அவன் படிக்கும் பக்கத்தை அவனுக்குப் பின்னால் நின்றுகொண்டு படித்துக்கொண்டிருப்பதைக் காண்கிறான். பின்)

சுபந்ரவன் : இவரத்தான் நீங்க பாக்க நெனச்சீங்களா.

கோட்புழுதி: ஆமாம். ஆவனை நான் பார்க்க வேண்டும் என்பது உயிரோடல்ல, பிணமாக. அவனைக் கொல்ல நினைக்கிறேன். இங்கே வைத்து அவனைக் கொல்ல எனக்கு உதவ முடியுமா ? (சுபந்தரவன் கோட்புழுதியை அதிசயமாகப் பார்க்கிறான். கோட்புழுதி தொடர்ந்து) கொலை செய்ய விரும்புகிறேன். முதல் முறையாக. இதற்கு முன் அந்த எண்ணம் இல்லாத போது இறந்துபோன ஒருவனை நான் தான் கொலை செய்ததாக என் மீது பழி சுமத்தியிருக்கிறீர்கள். இப்போத அதைச் செய்ய நினைக்கிறேன். என்ன செய்ய முடியும் உங்களால். இதற்குச் சாட்சி வைத்து நிரூபிக்க முடியுமா, நான் நினைத்தேன் என்று ? ஒருகால் இப்போது அவன் கடலின் சீற்றத்திற்கு ஆளாகி பேரலையொன்றிற்கு இறையாகிப்போனால் அவனை நான் கொன்றதாக ஆகாது இல்லை. அவன் பெருகன்னியால், தெரியுமா பெருங்கன்னி என்றால் என்னவென்று ? சுனாமி என்கிறார்களே அதுதான். அந்தப் பெருங்கன்னி அலை அவனை இழுத்துச் சென்றுவிடும். ஒருவேளை அதுஇப்போது இழுத்துச் சென்றுகொண்டிருக்கலாம். அவன் ஜயோ அம்மா, அப்பா என அலறிக்கொண்டு அலையின் அடிவயிற்றில் சுற்றிச்சுற்றி உருண்டுகொண்டு கொஞ்சம் கொஞ்சமாக உயிரை இழந்துகொண்டிருக்கலாம். பாரு. சொல்லி முடிப்பதற்கு முன்பே அவனைப் பற்றிய செய்தி வந்தாலும் வரும்.

(அப்போது மாற்றியன் வேகவேகமாக ஓடிவருகிறான். கோட்புழுதியைப் பார்த்து )

சுபந்ரவன் : நீங்கள் வெள்ளையனை இனி சந்திக்கவே முடியாது. அவன் இறந்துவிட்டான்.

மாற்றியன்(ஆர்வத்தோடு வேகமாக): எப்படி இறந்தான் அவன் ?

மாற்றியன் : (மாற்றியனை சந்தேகத்தோடுப் பார்த்துவிட்டு) சற்றுமுன் தான் அவன் கடற்கரையில் நடைபயின்றுகொண்டிருந்த போது சீற்றங்கொண்ட கடலின் மிக்பெரிய அலையான பெருங்கன்னி அலை அவனை அப்படியே வாரிச்சுருட்டி உள்ளே இழுத்துச் சென்றுவிட்டது. பார்த்தவர்கள் சொன்னார்கள். அவனைக் காப்பாற்ற நினைத்து ஒருவன் கட்டையொன்றை அவனுக்கு முன் போட்டானாம். வெள்ளையானால் அதைப் பிடிக்கமுடியவில்லை. அவன் பிடித்திருக்கலாம். ஆனால் அவனால் முடியவில்லை. கைகால்கள் படக்படக்கென அப்போது அடித்துக்கொண்டது என சொல்லக் கேள்விப்பட்டேன். அவன் இறந்துவிட்டான். இனி அவனை கோட்புழுதி பாக்க முடியாது.

(சுபந்தரவன் உடனே கோட்புழுதியைப் பார்த்து)

சுபந்ரவன் : இது எப்படி சாத்தியம்.

(கோட்புழுதி அவனை அமைதியாக இருக்கும்படி சைகை செய்துவிட்டு சுபந்தரவனைப் பார்த்து)

கோட்புழுதி: இப்போது நான் என் வழக்குரைஞரைப் பார்க்கலாம். அவர் இருந்தால் வரச்சொல்லுங்கள். (என்றவனையும் படபடப்போடு காணப்படும் சுபந்ரவனையும் மாறி மாறி ஆச்சர்யத்தோடு பார்த்துவிட்டு மெல்ல மெல்ல தயக்கத்தோடு வெளியேறுகிறான் மாற்றியன்)

சுபந்ரவன் : எப்படி எப்படி இது சாத்தியம். நீங்கள் இங்கே இருந்துகொண்டு எது நடக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அது அங்கே நடந்துவிடுவது எப்படி. எந்த தொடர்புமே இல்லையே. நீங்களும் நானும் மட்டும் தான் இருக்கிறோம். (சிறிது யோசனைக்குப்பிறகு) பெருங்கன்னி உங்களுக்கு கட்டுப்பட்டவளா. உண்மையில் பெருங்கன்னி என்ற அலை உண்டா. இருக்காது. மாற்றியன் சொல்கிறானே. கடல்தான் இழுத்துச் சென்று கொன்றிருக்கும், என்று. ஆனால் இது எப்படி சாத்தியம் ? (எனச்சொல்லிவிட்டு சற்று படபடப்ப அடங்கியவனாக மீண்டும் வந்து தன்இடத்தில் அமர்ந்துகொள்கிறான். அப்போது கோட்புழுதி)

கோட்புழுதி: உன்னை விட நான் உயர்ந்தவன் என்பதை இதைப்போன்ற புரியாத – இப்படித்தான் என்று அனுமானிக்க முடியாத செயல்களால்தான் சாத்தியம். அதை நான் செய்கிறேன். அதனால் உயர்ந்த இடத்தில் இருக்கிறேன். என்னை யாரும் அண்ட முடியாத இடம் என்னுடைய இடம். என் இடம். யாருக்கும் புரியாத இடமும் கூட. தெரியாததும் கூட. (சிறிது மெளனத்திற்குப்பின்) இப்போது சிலர் புரிந்துகொண்டதாக பாவனை செய்ததால் தான், நான் இப்போது குழப்பத்தின் முடிவால் சிறைபிடிக்கப்பட்டிருக்கிறேன். இந்த குழப்பம் நீடிக்க வேண்டும். நீடிக்கும். புரிதல் வந்தால் தானே குழப்பம் நீங்கும். புரிதலுக்குத் தேவையான எல்லாம் என்னிடம் இருக்கிறது. வெற்றுக்குடத்தை வைத்துக்கொண்டு எல்லோருக்கும் தண்ணீர்குடமென்று கூவிக்கொண்டிருக்கிறார்கள். இது சீக்கிரம் எல்லோருக்கும் புரிந்துவிடும். குழப்பம் இருந்துகொண்டேதான் இருக்கும். குழப்பத்திற்கு இறப்பே இல்லை.

(சுபந்தரவன் அவனையே ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டிருக்க, கோட்புழுதி தனது பிரசங்கத்தை தொடர்கிறான். வார்த்தைகளற்ற பிரசங்கம். அசைவுகளால் மாற்றியனுக்கு விசயங்கள் கோட்புழுதியால் இறக்கப்படுகிறது. வெகுநேரம் நடக்கும் அந்த அசைவுப் பிரசங்கம் மெல்ல ஓய்கிறது. கோட்புழுதி அசந்து அமர்கிறான். சுபந்தரவன் உறைந்த நிலையிலிருந்து மெல்ல விடுபட்டு மெல்ல மெல்ல எழுகிறான். அந்தத் தளத்திலேயே நடக்கிறான்.)

கோட்புழுதி: (ஒரு வீநோதமான உடலசைவோடு பாடுகிறான்)

ஏய் . . .

காவலனே காடு தெரிகிறதா ?

காட்டில் உலவும் கன்றுகளின் பஞ்சுரோமங்கள் அசைகிறதா. . . ?

அருகிலொரு மரக்கிளையில் ஆயிரமாயிரம் குருவிகள் பாடுகின்றதே, அந்த சேர்ந்திசையைத் தனியாகப்பாடு.

நான் கேட்கிறேன் பாடு…

பாடு என் கவலனே! பாடு!

(சுபந்ரவன் அவனது மாயக்குரலுக்கு கட்டுபட்டவனாக அவனை ஒருதிணுசாகப் பார்த்துவிட்டு மெல்ல அசைந்தபடி உரக்கப் பாடுகிறான்.

சுபந்தரவன்: தாம் தரிகிட தீம் தரிகிட

தீம் தரிகிட தாம்

ஆறப்பறந்து வா குருவி

ஆறப்பறந்து வா

துாரத் தொட்டு

ஒரு பாடல் பாடியொரு

கனவை விரித்து வை குருவி

விரித்து வை

(இதையே அவன்திரும்பத் திரும்பப்பாடுகிறான். பின் கோட்புழுதி கண்மூடி அமர்ந்துவிட மாற்றியனும் அவ்வாறே அமர்ந்துவிடுகிறான்.

(மேடையில் ஒளி மங்குகிறது)

காட்சி -4

(மேடையில் மெல்ல ஒளி வர அங்கே மாற்றயனும் சுவந்தரவனும் அமைதியாக வலது தளத்தில் அமர்ந்திருக்கின்றனர். இருவரும் ஏதோ யோசனையில் இருப்பவர்களாக தென்படுகிறார்கள்.)

சுபந்ரவன் : எதுவும் இப்போது ஸ்தீரமாக இருப்பதாகத் தோன்றவில்லை. மாற்றத்தின் வீச்சு அதிகமாயிருக்கிறது. எல்லாம் மாறுகிறது. பகலும் இரவும் போல ஒருவித தாளகதியில் மாற்றம் நடந்துகொண்டே இருக்கிறது.

மாற்றியன் : நீ மாறுர. உன்னோடைய போச்சும் நடையுடையும் கூட மாறுது. சுபந்தரவா என்னாச்சு உனக்கு. நீ இந்த மாதிரி பேசறவனுமில்ல. கிறுக்குத்தனமா நடந்துக்கிறவனுமில்லை.

சுபந்ரவன் : இதைத்தான் மாற்றமென்கிறேன். உன்னால் இதை உணர முடிகிறதா. முடியாது. நீ இருக்கமான ஒருவிதப் பெட்டிக்குள் அடைபட்டுக்கிடக்கிறாய். அதிலிருந்து யாரும் உன்னை மீட்க முடியாது நீயாகவேத்தான் வெளியேறவேண்டும். வெளியேறினபின் தான் வெளியே இன்னொரு உலகம் இருப்பதும், ஏன் வெளியே பல்லாயிரக்கணக்கான உலகம் நம்மை ஏற்று வாழவைப்பதற்காக சூழல்கிறது என்று உன்னால் பார்க்க முடியும்.

மாற்றியன் : சுபந்தரவா. எனக்கு பயமா இருக்கு. உனக்கு என்னாச்சு. என்ன சாப்பிட்ட.

சுபந்ரவன் : என்னன்னவோ சாப்பிட்டிருக்கேன். இப்போ நான் செரிமானத்துக்குத் தயாராகிவிட்டேன். கசடெல்லாம் கழியப்போகுது. உனக்குத் தெரியாது. அதைப் பற்றி எனக்கு கவலையுமில்லை. நான் உனக்கு புது உலகைக்காட்டுகிறேன். வா நான் பார்க்கின்ற திசையைப் பார்.

மாற்றியன் : வேணாம். சொல்லிட்டேன். அப்புறம். தப்பு செஞ்சிட்டேன் மாற்றியான்னு அழுதீன்னா அப்ப என்னால உனக்கு காப்பாத்த முடிஞ்சா நீ தப்பிச்சிக்கலாம். முடியாம போயிடுச்சி… அப்புறம் அவ்வளவுதான் உன்பாடு. ஒழுங்குமரியாதையா நடந்துக்க முயற்சி பண்ணு.

சுபந்ரவன் : இதுவரையிலும் நான் பயணித்த காட்டுப்பகுதியில் சந்தித்த மிருகங்களை எல்லாம் திரும்பிப்பார்த்து நேரத்தை என்னால் வீணடிக்க முடியாது. எனக்கு கடமைகள் அதிகம். நான் இந்த உலகைக் காப்பாற்ற வேண்டும். முடிந்தால் உடன் வா. இல்லேயேல், நடப்பதை வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இரு.

(என சொல்லியவன் எழுந்திருக்கும் போது பத்திரிக்கையாளன் பனுவலாரன் உள்ளே வருகிறான். வந்தவன் மெல்ல இடது மேடையில் ஏறி நின்றுகொண்டு வலது மேடைத்தளத்தில் இருக்கும் இருவரையும் பார்த்து)

பனுவலாரன் : சார். கோட்புழுதி எப்படி இருக்காரு.

மாற்றியன் : யார் நீ.

சுபந்ரவன் : (சுபந்தரவன் முந்திக்கொண்டு) நன்றாக இருக்கிறார். உனக்கு என்ன வேண்டும்.

பனுவலாரன் : நான் இன்ன பத்திரிக்கையாளன் என்பதை நானே சொல்வதைவிட நீங்கள் கையில் வைத்திருக்கும் தினசரியைப் பார்த்தாலே தெரியும். அதுதான் நான் பணியாற்றும் பத்திரிக்கை. ஒருவகையில் அதன் ஆசிரியரும் நானே.

மாற்றியன் : உனக்கு என்ன வேணும் இப்போ ?

பனுவலாரன் : கோட்புழுதிய பத்தி சேதி வேணும்.

சுபந்ரவன் : என்ன செய்திவேணும்னாலும் நீயே கற்பனை செய்து எழுதிக்கொள். அவரை நீ பார்க்க முடியாது. அவர் இப்போது ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார். அவரைத் தொந்தரவு செய்யமுடியாது.

பனுவலாரன் : அவரைத் தொந்தரவு செய்ய வேணாம். நீங்கள் அவரைப் பற்றிச் சொன்னால் போதும். எப்படியிருக்கார்.

(சுபந்ரவன் முந்திக்கொண்டு முந்திக்கொண்டு பதில் தரும் விதத்தால் அதிர்ந்துபோய் உறைந்துபோகிறான் மாற்றியன்.)

சுபந்ரவன் : அவர் நன்றாகத் தான் இருக்கிறார். நல்லவர்கள் எப்போதும் நல்ல மனநிலையோடுதான் இருப்பர்கள். நெறுப்பில் போட்டால் வெந்துபோகாதவர்களை நீ கேள்விப்பட்டதில்லையா. மற்றவர்களுக்காக வாழ்க்கையை அர்பணித்தவர் இன்னமும் மற்றவர்களின் நல்வாழ்விற்காகத்தான் சிந்தனை செய்துகொண்டிருக்கிறார். வேறு ஏதாவது வேண்டுமானால் கேள்விகளைக் கேள் நான் சொல்கிறேன். ஆனால் சொன்னதை மட்டும் எழுது. இல்லையேல், கேள்வியே கேட்காமல் உன் விருப்பப்படி எழுது. கேள்வி கேட்டுவிட்டு என் பெயரையும் போட்டு இன்னார் இன்னார் இப்படிச் சொன்னர் என்று கற்பனையாக எதையும் எழுதாதே. என்ன ?

பனுவலாரன் : சரிங்க. முதல் கேள்வி. அவர் இங்கு என்னவாக இருக்கிறார். ?

மாற்றியன் : (சுபந்தரவனைப் பார்த்து) கேள்வியப் பாத்தியா. அவரு என்னவா இங்க இருக்காருங்கறான். என்னாவா இங்க இருக்க முடியும் ?

சுபந்ரவன் : அவர என்னவாகவும் நீ பார்க்கலாம். நீ எப்படிப் பார்க்க ஆசைப்படுகிறாயோ அவ்வாறேத்தான் இங்கு இருக்கிறார். (பெருமிதமாக மாற்றியனைப் பார்த்து தான் புத்திசாலித்தனமாக பதிலளித்துவிட்டதாக அவனது தோரணை இருக்கிறது)

பனுவலாரன் : கைதியாக பார்க்கிறோம். ஆனால் உங்களது பதிலைப் பார்த்தால் அவர் என்னமோ விருந்தினர் மாளிகைக்கு ஓய்வெடுக்க வந்திருப்பவர் போலல்லவா தோன்றுகிறதே.

மாற்றியன் : (அவசர அவசர மாக) ஏய் சுபந்தரவா. ரொம்ப மோசமான கேள்வி இது. கண்டபடி உளறாதே. அப்புறம் நான் இங்க உன்னோட இருக்கமாட்டேன். என்ன நான் காப்பாத்தியாகணும். மேற்கொண்டு பதில் சொல்லாதே.

(சுபந்ரவன் அதைப் பொருட்படுத்தாதவனாக பதில் சொல் முற்படும்போது மாற்றியன் வெளியேறிவிடுகிறான். வெளியேவந்தவன். பக்கவாட்டு மேடையிலிருந்தபடி அவர்களது சம்பாசனை கவனிக்கிறான்.)

சுபந்ரவன் : கைதி என்று அவருக்கு இன்னும் தீர்பு வழங்கப்படவில்லை. அப்படியே அவருக்கு அப்படியொரு தீர்ப்பு வந்தாலும் அவர் மட்டுமல்ல இங்க இருக்கும் யாரையும் நாங்கள் கைதிகள் போல நடத்துவதில்லை. அனைவருக்கும் இங்கே தகுந்த மரியாதை கொடுக்கப்படுகிறது. அவர்கள் தம் தவறை திருத்திக்கொள்ள வாய்ப்புகள் தரப்படுகிறது. தவறுகளை முற்றிலும் உணர்ந்து திருந்தியவர்கள் கொடுக்கப்பட்ட தண்டனையைக் குறைத்துக்கொண்டு வெளியேறி உங்களோடு நல்ல முறையில் வாழ்ந்து வருவதெல்லாம் தெரியாதா ?

பனுவலாரன் : அவர்கள் பிழைப்புக்காக தவறுகள் செய்தவர்கள். இவனைப்ற்றித்தெரியாது. இவன் பிழைப்புக்கு தவறுசெய்யவில்லை. யாரும் பிழைக்கக்கூடாது என்பதற்காக தவறிழைத்திருக்கிறான். இவனோடு கூட்டு வைத்திருந்தவர்களின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. தெரியாதா. பத்திரிக்கையைக் கையில் வைத்துக்கொண்டிருப்பது விசிறிக்கொள்ளவா. படிக்கவேணும். அதுவும் தெளிவாக படிக்கவேணும். இவனை மட்டும் நம்பினால் பிறகு உங்களது வாழ்க்கையின் திசை, மாறிவிடும். வாழ்க்கையின் நிதானத்தை இழந்து பலருக்கு கேடு விளைவிக்கும் விதமாக உங்களது சமூகத்தில் நீங்கள் வளவ நேரும். அழிவது நீங்கள் மட்டுமல்ல உங்களது சமூகமும் தான். அதைப் புரிந்துகொண்டால் தப்பித்துக்கொள்ளலாம்.

சுபந்ரவன் : அப்படி என்ன அவர் மேசமான காரியத்தைச் செய்திருக்கிறார்.

பனுவலாரன் : அப்படிக் கேளுங்கள். சொல்கிறேன். அவர் என்ன தவறான காரியத்தைச் செய்யவில்லை என்று கேட்டிருந்தால் நிறைய சொல்லலாம். இருந்தாலும் பரவாயில்லை. நீங்கள் உஙகளது கள்ளங்கபடமற்ற இதயத்துள்ளிருந்ததானே கேள்வி கேட்கிறீர்கள். அங்கே என்ன இருக்கிறதோ அதன் படிதானே கேள்விவரும்! அதனால் தான் அப்பிராணியாகக் கேட்கிறீர்கள். சொல்கிறேன் கேளுங்கள். (குரலை கணைத்துக்கொண்டு) அந்தரத்தில் தொங்கும் நட்சத்திரக்கூட்டத்துள் ஒரு சில என்னிடம் மண்டியிட்டுப்பாடிய பாடலின் வரிகளைச் சொல்கிறேன் கேளுங்கள்.

தாம் தரிகிட தீம் தரிகிட

தீம் தரிகிட தாம்

ஆறப்பறந்து வா குருவி

ஆறப்பறந்து வா

துாரத் தொட்டு ஒரு

பாடல் பாடியொரு கனவை

விரித்து வை குருவி

விரித்து வை

(என உரக்கப்பாடினவன். மெல்ல சுபந்ரவனையும் தன்னோடு சேர்ந்து பாடவைக்கிறான். அப்போது இருவரும் ஒருவதி நடன அசைவுகளோடு தனித்தனி தளங்களில் ஆட, ஆட்டம் உச்சத்திற்குச் சென்று சட்டென அறுபட்டு நிற்க: இருவரும் உறைகின்றனர். பின் சிறிது நேரத்திற்குப்பின் பனுவலாரன் முதலில் சுதாரித்துக்கொண்டு சுபந்ரவனைப் பார்க்கிறான். அவனும் சுயநினைவு பெற்றவனாக அவனை நோக்கி வருகிறான்.)

சுபந்ரவன் : நேத்திலேர்ந்துன்னே தெரியவில்லை. நான் என்னென்வோ பேசிட்டன்போல. கடசியா அந்த கோட்புழுதிகிட்ட கொஞ்ச நாழி பேசினேன். அவ்ளோதான். அப்புறம் என்ன நடந்துன்னே தெரியலியே.

பனுவலாரன் : அப்படியே விட்டிருந்தா. இன்னும் மோசமான நெலைக்குப்போயிருப்பே.

(அப்போது மறைவிலிருந்து பார்த்துக்கொண்டிருந்த மாற்றியன் உள்ளே வருகிறான்.)

மாற்றியன் : (நேராக பனுவலாரன் அருகே வந்து அவன் கைகளைக் குலுக்கியவாறு) ரொம்ப நன்றிங்க. பத்திரிக்கைக்காரரா இருந்து இப்படி ஒரு மீட்பை செஞ்சிருக்கீங்களே. ரொம்ப நன்றிங்க.

சுபந்ரவன் (மாற்றியனிடம்) என்ன நடந்து ?

மாற்றியன் : இரு சொல்றேன். என்ன நடந்துன்னா கேக்குற. எதுவோடயோ எதுவோ சேர்ந்தா என்னமோ திங்குமாமே அதுமாதிரி நீ திங்க ஆரம்பிச்சிட்டே.

சுபந்ரவன் : கோச்சிக்காதப்பா.

மாற்றியன் : விடு. இனிமே எப்படி நடந்துக்கணும்னு பாத்து நடந்துக்கோ.

(சுபந்ரவன் தலை ஆட்டிக்கொள்கிறான்)

பனுவலாரன் : என்னமோ பத்திரிக்கைக்காரனா இருந்து இதச் செஞ்சதுக்காக பாராட்டுறேன்னா சொன்னீங்க. தப்புங்க. உங்க இந்த வார்த்தைங்க தப்பு. இனிமே அப்படிச் சொல்லாதீங்க. உலகமே இப்ப எங்க ஊடகத்தால தான் இயங்குது. இப்ப இவரப்பத்தின விசயத்தை தினசரியில போடுறோம். ஏன் ? எல்லாரும் தெரிஞ்சிக்கனும்னுதான். அப்படித்தெரிஞ்சிச்சின்னா இதமாதிரியான ஆளுங்கக்கிட்ட ஏமாறமாட்டாங்க பாருங்க. இது ஒரு சேவைங்க. இங்கையே எடுத்கங்களேன். நான் மட்டும் அவரு மத்தவங்கள ஏமாத்தின உத்திய விரிவுபடுத்தி விளக்கினதால தான, அவரப்பத்தி உங்களுக்குத் தெரியவந்திருக்கு. நீங்க காப்பத்தப்பட்டிருக்கீங்க. உங்கள நீங்க பாதுகாத்துக்கிட்டாங்க. அசிங்கத்துக்கிடேயிருந்து. ஆபத்திலேர்ந்து. சரிதான நான் சொல்றது.

சுபந்தவன்: (மெல்ல எழுந்து வெளிய செல்ல நடக்கிறான். அப்போது பகுவலாரன் அவனைப் பார்த்து)

பனுவலாரன்: ஏன் நான் பேசினது உங்களுக்குப் பிடிக்கலியா ?

சுபந்ரவன் : இல்லிங்க. எனக்கு என்னமோ படபடன்னு இருக்கு. கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கனும்னு தோணுது. அதான் கொஞ்சம் வெளியில போயிட்டுவரலாம்னு.

பனுவலாரன் : சரிசரி. ஆனா அந்த ஆளுகிட்டு கொஞ்சம் ஐாக்கிரதையா இருந்துக்கங்க. இதுக்கப்பறம் பயப்படவேணாம். இனி உங்கள யாராலயும் வசப்படுத்த முடியாது. நல்லவங்களத்தவிர. ஏன்னா. நீங்க நல்ல மனசு உள்ளவருன்னு எனக்கு தெரிஞ்சதால சொல்றேன்.

(அவனைத்தொடர்ந்து மாற்றியனும் வெளியேறுகிறான், நண்பனுக்குத் துணையாக. அவர்கள் இருவரையும்பார்த்து பனுவலாரன் புன்னகைத்துவிட்டு மெல்ல திரும்பியவன் கணைப்புஒலி கேட்டு திரும்புகிறான். மையமேடையில் கோட்புழுதி யாருக்கும் தெரியாமல் வந்து நிற்கிறான். கோட்புழுதி அவனை கோபமாகப் பார்க்கிறான். பனுவலாரன் அதை அலட்சியப்படுத்துபவன் போல சிறிது நேரம் இருந்துவிட்டு சகஐநிலைக்கு தன்னை கொண்டு வந்து நிறுத்திக்கொண்டு, கோட்புழுதியைப் பார்த்து)

பனுவலாரன் : எப்படியிருக்கீங்க.

கோட்புழுதி (தன்கோபப் பார்வையை மாற்றிக்கொண்டு சாதாரணமாக அவனை நோக்கி) இருக்கேன்.

பனுவலாரன் : ஏன்கிட் ட பேசற மொழிக்கும். வேறுபாடு இருக்கே!

கோட்புழுதி: ஆளு வேறுபடறாங்க இல்லியா. அவங்கவங்களுக்கு புரியற மாதிரி பேசினாதான நாம் சொல்லவந்தது அவங்க புத்திக்குள்ள போகும். இல்லன்னா நாம நெனைக்கிறது நடக்குமா என்ன ?

பனுவலாரன் : நீங்க நெனைக்கிறது நடக்கனும். அதுக்கான உத்திதான் இது. ஆமா அப்படி என்னத்தத்தான் நீங்க நெனைக்கிறீங்க. கொலப்பன்றதையும் கற்பழிக்கிறதையுமா ?

கோட்புழுதி (கோபப்படாமல் சிரித்துக்கொண்டே): அப்பப்ப அசைவந்த தொட்டுக்கனும். எப்போதும் சாப்ட்டா கொடலுக்கும் கேடு செலவுக்கும் செலவு.

பனுவலாரன் : நீங்க ஏற்கனவே மாட்டியிருக்கனும். தப்பிச்சிட்டாங்க.

கோட்புழுதி : எப்ப ?

பனுவலாரன் : நீங்க எப்பொப்போ அசைவம் சாப்பிடாங்களோ அப்பல்லாம்.

கோட்புழுதி : (சப்தமாகச் சிரிக்கிறான்) சிரித்தபடியே. நீ நல்ல விகடகவியா இருக்கியே. முன்னமே ஏன் என்னப் பாத்திருக்கக்கூடாது ? உனக்கு என்னவெல்லாம் செஞ்சி என்கூடவே வச்சிருப்பேனே, நான்.

பனுவலாரன் : வச்சிருப்ப. ஆனா அப்பவும் நான் உன் கேவலத்தயெல்லாம் வெட்வெளிச்சமாயிருப்பேன். இப்பயவிட இன்னும் தெளிவா. அனுமானமே இல்லாம எல்லாம் சாட்சியத்தோட. நீயெல்லாம் ஒரு பெரிய மனுசன்னு கோடிகோடியான மக்கள நம்பவச்சிக் கழுத்தருத்திட்டிருக்கியே. உன் பொண்டாட்டிப் புள்ளக்குட்டியெல்லாம் நடுத்தெருவுலதான் நிக்கப்போவுது பார்.

கோட்புழுதி : இப்ப மட்டும் எங்க நிக்கிறாங்களாம். நீ வேணும்னா வெளியில போயிப் பாரு. நடுத்தெருவுலதான் இருப்பாங்க.

பனுவலாரன் : சீ நீயும் மனுசனா. உன்கூட நானும் இவ்வளவு நேரம் பேசிக்கிட்டு இருக்கன் பாரு. நாளைக்கு கோர்ட்டுக்கு வருவல்லே வரும்போது தெரியும் உன்னபத்தி நான் என்ன எழுதப்போறன்னும், அது நாளைக்கு என்ன மாத்தத்தத் தரப்போவதுன்னும். உன்னல்லாம் சுட்டுக்கொல்லனும். விசிலடிச்சி கைத்தட்டி கையெடுத்துக்கும்பிட்டானுங்க பாரு அவனுவோ கெரகம் தான்இதெல்லாம். ஆனா நாளைக்கு இருக்கு உனக்கு. நீ நெனைக்கிறதுக்கு மாறா. உன்ன வெளியில கொண்டாற தவிச்சிக்கிட்டு இருக்கற அத்தன உன் அபிமானிங்களும் உனக்கு எதிரா மாறப்போறாங்கப் பாரு. பாரேன்.

(என சொல்லிவிட்டு அவன் வெளியேறிவிடுகிறான். கோட்புழுதி அமைதியாக அவனையே பார்த்துக்கொண்டு)

கோட்புழுதி : இதொன்னும் எனக்குப் புதுசு இல்ல மக்களே. (எனச் சொல்லிவிட்டு முன்மேடைக்கு வந்து பார்வையாளர்களைப் பார்த்து. பின் மேடைக்குள் மையத்தளத்தில் நடந்தவாறு இருக்கிறான். சிறிது நேரத்திற்கெல்லாம் அவனது வாழக்குரைஞர் விரிவினி வருகிறான். அவனோடு நான்கு பேர் வருகிறார்கள். அவர்களில் கோட்புழுதியின் செயளர் சாம்பரூரான், மகள் செம்புழுதி, மனைவி கருவிருத்தாள், அவனது நெருங்கிய நண்பர் தருததாமன் ஆகியோர் இருக்க, கோட்புழுதி அவர்களை நோக்கி வேகவேகமாக வந்து கடுமையான குரலில்)

கோட்புழுதி : இருக்கனான்னு பாக்க வந்தீங்களா. தோ! இருக்கேன் பாத்துக்கோங்க. உசிரோட தான் இருக்கேன். நன்றி கெட்ட சென்மங்களா உங்களுக்கெல்லாம் செஞ்சிஅழுதேன் பாரு. (என சொல்லி தலையில் அடித்துக்கொள்கிறான். பின் சகஐநிலைக்கு வந்தவனாக) சரி என்ன ஆச்சு. என்ன செஞ்சிருக்கீங்க. என்ன நெலமையில இருக்கு.

சாம்பரூரான் : இல்ல நாளைக்கு வழக்கு இருக்கு . . .

கோட்புழுதி : எடுத்தோடனே இல்லன்னு ஆரம்பிச்சிட்டியா. சரிதான். இல்லன்னே போகப்போவது எல்லாம்.

விரிவினி : அதாவதுங்க

கோட்புழுதி : அதான் ஆயிடுச்சே. ஆவப்போறது தெரியுமா. தெரிஞ்சா சொல்லு.

விரிவினி : நாளைக்கு கோர்ட்டுல நீங்க சொல்றத வச்சித்தான் எல்லாமும்னு சொல்ல வந்தேன்.

கோட்புழுதி : அப்ப நீ எதுக்கு ?

விரிவினி : அதுக்குத்தாங்க.

கோட்புழுதி : செத்தமுன்ன நான் சொன்னதுக்கா ?

விரிவினி : இல்லிங்க. (கோட்புழுதி தலையில் அடித்துக்கொள்கிறான்) ஜயோ எதச்சொன்னாலும் எக்குத்தப்பாவே எடுத்துக்கிறீங்களே. இப்படி இருந்தா நாளைக்கு எல்லாத்தையும் கவுத்துடுவீங்க போலிருக்கே.

செம்புழுதி : அப்பா உங்களுக்காக இல்லாட்டியும் எங்களுக்காக கொஞ்சம் காதுகொடுத்துக் கேளுங்க.

கருவிருத்தாள் : என்னங்க. (என அவள் ஆரம்பித்ததும், அவளைப் பேசவேண்டாமென சைகைக் காட்டிவிட்டு, விரிவினையை நோக்கி கோட்புழுதி)

கோட்புழுதி : போதும் போதும்ூ. சொல்லும் விரிவினி சொல்லு. நாளைக்கு நான் என்ன செய்யனும்.

விரிவினி : முதல்ல அவங்க கேக்கற கேள்விகள நல்லா காதுல போட்டுக்குங்க. அப்புறமா. ஆமாம் இல்லைன்னு மட்டும் தலைய தலைய ஆட்டி சைகையால சொல்லிடுங்க. அதுக்கப்புறம் நான் பாத்துக்கறேன். இன்னொன்னு. குத்தத்த ஒப்புக்குற மாதிரி எந்த சைகையையும் செஞ்சிடாதீங்க.

கோட்புழுதி : சரி. அப்புறம்.

விரிவினி : ரொம்ப அழுத்தமா இருக்காதீங்க. அமைதியா. எப்போதும் இருக்கற மாதிரி இருந்துகிட்டு பதில சொல்லுங்க. முடிஞ்சா சந்தோசம ஏதாவது பேசி சபைய சிரிக்க வைங்க. அத உங்ககிட்ட சொல்ல வேண்டியதில்லை. ஆனா இப்ப இருக்கற நெலமையில சொல்லனும்னுதோணுது.

செம்புழுதி : அப்பா.

கோட்புழுதி : என்ன ?

செம்புழுதி : நீ சீக்கிரம் வெளியில வந்துடனும்னு நான் கேட்டுக்கல. ஆனா நாங்க எல்லாரும் உள்ள வந்துடக்கூடாதுன்னு தான் இந்த எற்பாடெல்லாம். யாரையும் காட்டிக்கொடுத்து எல்லாரையும் இங்கே கொண்டு வந்து குடும்பம் நடத்தாலாம்ன்லாம் நெனைக்காதீங்க.

கோட்புழுதி : (புன்னகைக்கிறான்) நீ என் பொண்ணுமா.

செம்புழுதி : இதத் தான் விதின்னு சொல்லுவாங்க போல.

கோட்புழுதி : நான் உன்ன என் பொண்ணுன்னு சொல்றதையா.

செம்புழுதி : அதையும் நான் உன் கிட்ட என்ன காப்பத்துங்கன்னு வந்து கேட்டு நிக்கிறதையும். இத என் வாழ்க்கையில நடந்த மிகப்பெரிய ஒரு விபத்தா நெனைக்கிறேன். ஏதோ ஒரு வேகமா வர்ற வண்டியினோட டயருக்கடியில விழுந்து, டயர் என் தலமேல ஏறிடக்கூடாதேன்னு பயந்து தவிக்கிற அந்த நொடியில என்னன்னமோ யோசிக்கிற மாதிரியிருக்கு இங்க உங்க முன்னாடி நிக்கிறது. ஆனா அப்பா, நீ நல்லவரா இருந்திருக்கீங்க. எனக்கு பிடிச்ச மாதிரி மட்டும் இல்லாம நெசமாலமே எல்லாரும் விரும்பமாதிரி மனசாற வாழ்த்துற மாதிரியெல்லாம் இருந்திருக்கீங்க. ஆனா இப்போ. பணம். காசு. புகழ் ஆரவாரம்னு சேந்தொடனே எல்லாம் தலைகீழா ஆயிடுச்சு. நீங்க யாரோ மாதிரி தெரியறீங்க. சில சமயங்கள்ல உங்க கடந்து போகும் போது நீங்க என் கண்ணுக்கே தெரிய மாட்டேங்கிறீங்க. உங்க பின்னாடி உள்ள சுவரு கூட தெரியுது ஆனா நீங்க தெரியல. ரொம்ப வலிக்குதுப்பா இப்படி வாழ்றது. செத்துடலாம்னுகூட தோணுது. செத்துட்டா எல்லாம் சரியா போயிடுமா. நீங்க திருந்திடுவீங்களா. (அவரைப்பார்த்து வாஞ்சையோடு) இத ஒரு வாய்ப்பா எடுத்துக்கிட்டு மாறிடுங்கப்பா. நல்ல அப்பாவா. நல்ல கணவரா நல்ல பொருப்புள்ள குடிமகனா மாறிடுங்கப்பா. நெஞ்சு அடைக்குது என்னால இதுக்கு மேல இங்க நிக்க முடியல. நான் போறேன். போறவ போறவதான் திரும்பமாட்டேன், நீங்க மாறலைன்னா. என்ன நீங்க பாக்க முடியாது. ஆனா ஒண்ணே ஒண்ண மட்டும் எடுத்துக்கிட்டுப்போறேன்.

கோட்புழுதி : என்னம்மா ?

செம்புழுதி : எனக்காக நீங்க ஆசையா வாங்கித்தந்த மரப்பாச்சிய மட்டும் எடுத்துக்கிட்டுப்போறேன். சின்ன வயசுல வேலைக்குப்போனப்புறம் பொண்ணுக்குத் துணையா பொண்டாட்டிய விட்டுட்டுப் போனாலும் தான் இருக்கற உணர்வோடு தன் பொண்ணு இருக்கனும்னு ஆசையா வாங்கி கொடுத்த அந்த மரப்பாச்சிய என்னால மறக்க முடியல. உங்களுக்கு இதயம் இருக்குப்பா. மரப்பாச்சி மாதிரி. எப்போதும் மனசுக்குள்ளேயே குடியிருக்கற மாதிரி. மனசு இருக்குப்பா.

(எனச் சொல்லிவிட்டு அவள் அழுகையை அடக்க முடியாமல் வெளியே ஓடிவிடுகிறாள். அவளைத் தொடர்ந்து கருவிருத்தாள், கோட்புழுதியின் மனைவியும் வெளியேறும் போது)

கோட்புழுதி : மகளே நான் திருந்தித்தாமா இருக்கேன். நீ தான் கொழம்பிப்போயிருக்கே. கருவிருத்தா கேளுடி. நான் எப்போதும் போலத்தான் இருக்கேன். எங்கிட்ட பேசுடி கருவிருத்தா. ஓரேயொரு வார்த்தயப் பேசிட்டுப்போடா.

(இருவரும் வெளியேறிய பின்னும் அவர்கள் சென்ற திசையையே பார்த்துக்கொண்டிருக்கிறான். பின் விரிவினியைப் பார்த்து)

கோட்புழுதி : நான் எப்படியாவது வெளியே வரனும். அதுக்கு என்ன செலவானாலும் செய்யத்தயார். யார வேணும்னாலும் பாரு. நான் வெளிய வந்தாகவும். என் பொண்ணே இப்படி பேசிட்டா பாத்தியா. நான் யாருக்காக இதயெல்லாம் செஞ்சேன். செத்துடுவாளாமே. நான் செத்தா மட்டும் எல்லாத்தையுமா கொண்டுபோயிடுவேன் ? எல்லாம் அவளுக்குத்தான.

விரிவினி : அவங்க நல்ல விதத்துல சொன்னாங்க. நீங்க மாறனும்னு சொன்னாங்க. அதுல ஒண்ணும் தப்பில்லையே.

கோட்புழுதி : அதுல தப்பில்லையா. அப்ப நீதான் இவளுங்கள இங்க கூட்டு வந்து நாடகம் நடத்துறியா. உசிற வாங்கிறதுக்குன்னே வந்துருக்காளுவோ. பாரேன். வெளிய வந்ததும் இவளுகள பாரு. என்ன ஆவப்போறாளுங்க. விரிவினி, உடனே வேளையப் பாரு. இப்ப சில பேரச் சொல்றேன். அவங்களப் போயி பாரு. (என்றவன் விரிவினி காதில் ஏதோ ரகசியமாகச் சொல்கிறான். அவன் பயற்துபோய் கேட்டுவிட்டு அமைதியாக வெளியேறிவிடுகிறான்)

காட்சி-5

(மேடையின் இடது தளத்தில் மூன்று நாற்காலிகளில் மூன்று கருப்பு உடையணிந்த வழக்குரைஞர்கள் அமர்ந்துகொண்டு காகிதக்கட்டுகளைப் பிரித்தபடியும், தீவிரமாகப் படித்துக்கொண்டும் இருக்கிறார்கள். அப்போது கல்குள்ளி பசுபாதி மரவேல் சக்காமர் ஆகியோர் பார்வையாளர் பகுதியில் அமர்ந்துகொண்டு பேசிக்கொண்டிருக்கிறார்கள்.)

பசுபாதி : இன்னைக்கே தெரிஞ்சிடுமா.

மரவேல் : தெரியலாம். தெரியாமலும் போகலாம்.

பசுபாதி : எனக்கு சந்தேகமா இருக்கு. கோட்புழுதி படுபயங்கரமான பேர்விழி. டப்புடப்புன்னு பல்டியடிப்பான். அவன மடக்கவே முடியாது.

சக்காமர் : நீ அப்படி நெனச்சிக்கிட்டு இருக்க. ஆனா இந்த அரசுதரப்பு வக்கீல் இருக்காறே. தெறமையானவர். என்ன மாதிரியான வழக்கெல்லாம் தீர்த்து வச்சிருக்காறு தெரியுமா ?

பசுபாதி : (பின்மேடையைக் காட்டி) அதோ வர்றாங்க.

(எல்லோரும் பின்மேடையைப் பார்க்கிறார்கள். மாற்றியனும் சுபந்ரவனும் கோட்புழுதியை அழைத்துவருகிறார்கள். அவன் வந்ததும் மேடை சுறுசுறுப்படைகிறது. வக்கீல்கள் காகிதங்களை மூடிவிட்டு அவனையே பார்க்கின்றனர். அவர்களில் விரிவினியும் ஒருவன். இன்னொருவர் அரசு வக்கீல் காட்பினார் ஆவார். இருவரும் பக்கவாட்டு நாற்காலிகளில் அமர்ந்திருக்க, மைய நாற்காலியில் நீதிபதி அமர்ந்திருக்கிறார். அவர் விநோதமான உடையில் வினோதமான முக ஒப்பனையுடன். அந்தத் தோரணை அவரை இன்னவர் என்று குறிப்பிடும்படியான அடையாளம் தெரியாதவாறு அந்த அமைந்திருக்கிறது. காவலர்கள் கோட்புழுதியைக் கொண்டு வந்து நீதிபதி முன் நிறுத்த விரிவினி அவனைப் பார்த்து மெல்ல புன்னகைக்கிறான். அவர் நேரே நீதிபதியைப் பார்த்தவாறு இருக்க.)

நீதிபதி : வழக்கைத்தொடரலாம்.

(காவலர்கள் சற்றே பின் தள்ளி நின்றுகொள்ள, வழக்குரைஞர்களில் காட்பினார் எழுந்து கோட்புழுதி அருகில் வந்து)

காட்பினார் : நீங்கள் தானே கோட்புழுதி

கோட்புழுதி :(அவரையே உற்றுப்பார்க்கிறான். பின் பார்வையாளாகள் பக்கம் பார்த்து) இதுதானே கோர்ட்டு.

(என்றதும் அனைவரும் விழுந்து விழுந்து சிரிக்கின்றனர். காட்பினாரும் சிரித்துவிடுகிறான். பின் கட்டுப்படுத்திக்கொண்டு)

காட்பினார் : கோட்புழுதி அவர்களே நீங்கள் எதற்காக இங்கே கொண்டு வரப்பட்டிருக்கிறீர்கள் என்று தெரியுமா ?

கோட்புழுதி : என்னிடம் காவலர்கள் சொன்னது, உங்களை நாங்கள் கொலை மற்றும் கற்பழிப்புக்குற்றத்திற்காக கைது செய்கிறோம் என்றது. நீங்கள் வேறுஏதாவது காரணம் வைத்திருக்கிறீர்களா.

காட்பினார் : அதுதான் காரணம். கொலையைப் பற்றி நீங்கள் என்ன சொல்கிறார்கள்.

கோட்புழுதி : கொலையை கொலை என்று தான் சொல்ல முடியும். இல்லையென்றால் கொலையை பிரியாணி என்றோ, குதிரையேற்றம் என்றோ சொல்லமுடியாதே. (சபையில் சிரிப்பொலி. சிரிப்பொலி அடங்கியதும்.) ஒருவெளை இங்கே அப்படிச் சொல்லலாமோ என்னவோ. (மீண்டும் சிரிப்பொலி)

காட்பினார் : (நீதிபதியைப் பார்த்து) இவர் விகடம் பேசாமல் பதிளிக்கமுடியுமானால் கேள்விகளுக்கு பதில் பெறலாம்.

நீதிபதி கோட்புழுதியைப் பார்த்து: திரு.கோட்புழுதி வழக்காடுவதற்கு ஒத்தாசையாக இருந்தால் வழக்கினை அதன் போக்கிலேயே தெளிவாகக் கொண்டுசெல்ல முடியும். ஒத்துழையுங்கள்.

கோட்புழுதி : (சரி என்பதாகத் தலையை ஆட்டிக்கொள்கிறான்)

காட்பினார் : கொலையைப் பற்றி உங்கள் அபிப்பிராயம்.

கோட்புழுதி : (இல்லை என்பதாக தலையை ஆட்டுகிறான்)

காட்பினார் : கொலை நடந்தது தெரியுமா ?

கோட்புழுதி : (தெரியாது என்பதாக உதட்டைப்பிதுக்கி சைகை செய்கிறான்)

காட்பினார் : இதற்கு என்ன அர்த்தம். தெரியும் என்பதா ? தெரியாது என்பதா ?

விரிவினி : (குறுக்கிட்டு) உதட்டைப் பிதுக்கி இப்படி என்றால் (செய்துகாட்டுகிறான்) தெரியாது என்று அர்த்தம். (என சொல்லிவிட்டு உட்கார்ந்துவிடுகிறான்.)

காட்பினார் : (சிரித்துக்கொண்டே) உதட்டைப்பிதுக்கி இப்படி என்றால் (அவனும் செய்துகாட்டுகிறான்) தெரியாது என்று அர்த்தமாம். இது எனக்குத் தெரியாது. வார்த்தைகளால் பதில் வேண்டும். இது நீதிமன்றம். சரியான வார்த்தைகள் சரியான பதிலாக ஏற்கப்படுமிடம். அசைவுகளும் நடனங்களும் இங்கே எந்த அர்த்தமும் பெறுவதில்லை. அதனால் வார்த்தைகளால் பதில் தாரும். (எனக் கடுமையாகச் சொல்லிவிட்டு மீண்டும் ) கொலை நடந்தது தெரியுமா ?

கோட்புழுதி : தெரியாது.

காட்பினார் : இதுவரையிலும் தெரியாதா . . . ?

கோட்புழுதி : கொலை நடந்தது தெரியாது.

காட்பினார் : கொலை நடந்ததைத்தான் பத்திரிக்கையில் வெளியிட்டார்களே!

கோட்புழுதி : எனக்குத் தெரியாது. கொலை நடந்தது தெரியவில்லை.

காட்பினார் : கொலை நடந்தது தெரியவில்லை என்றால் . . .

கோட்புழுதி : என் பார்வையின் முன் கொலை நடக்கவில்லை.

காட்பினார் : அப்படியானால் கொலை நடந்ததும் அதைப்பற்றியான செய்தி கேள்பட்டார்களா.

கோட்புழுதி : இல்லை.

காட்பினார் : இல்லையா.

கோட்புழுதி : இல்லை.

காட்பினார் : உண்மையாக.

கோட்புழுதி : பொய்யாக எப்படிச்சொல்வது. நான் உத்தம புத்திரன். எனக்கு பொய் என்றால் என்ன என்ற தெரியாது. அதனால் உண்மை என்வென்றும் எனக்குத் தெரியாது. நான் சொல்வது உண்மை என்று எடுத்துக்கொள்ளலாம். உண்மை என்பது நான் சொல்வதுபோல இருந்தால். பெய்யாக மட்டும் இருக்காது. ஏனெனில் நான் நடந்ததை நடந்ததாக கேட்டதை கேட்டதாக பார்த்ததை பார்த்ததாக அப்படியே வெளிப்படுத்துபவன். கற்பனை கூட என்னிடம் இல்லை, புனைவு செய்து பேசுவதற்கு. அதனால் நான் சொல்வதை உண்மையாகவே எடுத்துக்கொள்ளுங்கள்.

(சபையில் கோட்புழுதியின் சொல்வண்மை ரசிக்கப்படுகிறது)

காட்பினார் : அருமையாகப் பேசுகிறீர்கள்.

கோட்புழுதி : நன்றி. அப்படியானால் நான் வீட்டிற்குப் போகலாமா.

(மீண்டும் சபையில் சிரிப்பு. எல்லோரும் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள். காட்பினார் கோபமுறகிறான். கோட்புழுதியைப் பார்த்து)

காட்பினார் : யாரைக்கொலை செய்தார்கள் ? தெரியுமா ?

கோட்புழுதி : எப்போது ?

காட்பினார் : கடந்த மாதம் ?

கோட்புழுதி : எங்கே ?

காட்பினார் : உன் வீதியிலேயே ?

கோட்புழுதி : யார் ?

காட்பினார் : உன் விசுவாசி.

கோட்புழுதி : யார் கொலை செய்தது ?

காட்பினார் : நீ.

கோட்புழுதி : (கோபமாக) அப்படியானால் என்னைத் துாக்கில் போட வேண்டியதுதானே. எதற்காக இங்கே கொண்டு வந்து அலைகழிக்கிறீர்கள்.

(சபையில் சிறிது நேரம் மெளனம் நீட்டிக்கிறது. அனைவரும் இருவரையும் மாறி மாறி பார்க்கின்றனர்)

காட்பினார் : (பெருமூச்சுவிட்டு) கொலையைப் பற்றி நீங்கள் என்ன நிினைக்கிறர்கள்.

கோட்புழுதி : அதெல்லாம் கிடக்கட்டும். நான் குற்றவாளி என்று நீ சொன்னபிறகு. நான் மேற்கொண்டு எதைச் சொல்லவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள். என்னைத் துாக்கிலிடுங்கள். நான் உடனே இறந்தாகவேண்டும். இப்போதே என் உயிர் என்னைவிட்டு விலகிக்கொண்டே இருப்பதாக உணர்கிறேன். அதனால் தயவு செய்து மேற்கொண்டு கேள்விகள் கேட்டு குழப்பாமல் என்னைக் கொன்றுவிடுங்கள்.

நீதிபதி : (தலையிட்டு) திரு.கோட்புழுதி அவர்களே நீங்கள் இன்னும் குற்றவாளி என்று தீர்ப்பு பெறவில்லை. அரசு தரப்பு வக்கீல் உங்களை விசாரிக்கும் விதம் உங்களை அப்படி எண்ணத்தோன்ற வைத்திருக்கிறது. நீங்கள் குற்றவாளியில்லை.

கோட்புழுதி : (சட்டென) அப்படியானால் நான் வீட்டுக்குப்போகிறேன். என்னை விடுதலை செய்யுங்கள். (என்ற வேகத்தைக் கண்டு அனைவரும் விழுந்து விழுந்து சிரிக்கின்றனர். சபை களைகட்டுகிறது. சிறிது நேரத்திற்குள் காட்பினார் சட்டென எழுந்து)

காட்பினார் : நீ யார். அவனுக்கும் உனக்குமான தொடர்பு என்ன. எதற்காக கொலை செய்தாய். அவனை எவ்வளவு நாட்கள் உனக்குத் தெரியும். கொலை செய்யும் அளவிற்கு அவன் என்ன செய்துவிட்டான். அவன் செய்த தவறென்ன. (பின் அவன் கேட்ட கேள்விகள் அனைத்து வார்த்தைகள் புரியாத நிலையில வெறும் கூச்சலாக இருக்க எல்லோரும் காட்பினாரையே அதிசயமாகப் பார்க்கின்றனர். அவனை வைத்தக்கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருக்கும் அனைவரும் அவன் அவ்வாறு பேசிப்பேசி களைப்படைந்து மயங்கிவிழுந்து காவலார்கள் அவனைத்துாக்கிச் சென்றதைக்கூட அறியாமல் உரைந்துபோயிருக்க, கோட்புழுதி மெல்ல நீதிபதியின் அருகில் சென்று)

கோட்புழுதி : நான் வீட்டுக்குப்போகலாமா ?

நீதிபதி (அவனை முறைத்துவிட்டு): நாளை மறுநாள், வழக்கு தொடரும். (என சொல்லிவிட்டு தான் மேலும் அங்கே இருக்க பிடிக்காததை மற்றவர்களிடம் வெளிப்படுத்திவிட்டு வெளியேற மேடையில் கோட்புழுதியும் மக்களில் நால்வரான கல்குள்ளி பசுபாதி மரவேல் சக்காமர் இருக்க, உடன் கோட்புழுதியின் வழக்குரைஞர் விரிவினி இருக்கிறான். விரிவினி அவசர அவசரமாக எதையோ எழுதிக்கொண்டிருக்கிறான். அப்போது)

பசுபாதி : கோட்புழுதி

கோட்புழுதி : யாரு ?

பசுபாதி : உண்மையான நீதிபதி.

கோட்புழுதி: செத்தமுன்ன வெளியே போனவரு.

கல்குள்ளி : அவரும் நீதிபதி. (பசுபாதியைக் காட்டி) இவரும் நீதிபதி. ஏன் நானும் நீதிபதிதான்.

கோட்புழுதி : வேடிக்கப்பாக்க வந்தவனுங்களெல்லாம் நீதிபதியாயிட்டா அப்புறம் வழக்கு என்ன ஆவுறது.

சக்காமர் : உங்கிட்ட எந்த வழக்கு, இப்படி முறையா நேர்மையா நடந்தா தீர்வுக்கு வரும் ?

கோட்புழுதி : என்ன சொல்ற ?

மரவேல் : உனக்கு நாங்க தீர்வத் தரப்போறோம்.

கோட்புழுதி : ஏய். ஏதாவது முட்டாத்தனமா செஞ்சிடாதீங்க. அப்புறம்.

கல்குள்ளி : என்னடா அப்புறம். நேர்மையா ஒருத்தன் உங்கிட்ட கேள்வி கேட்டா தெரியும் தெரியாதுன்னு சொல்லவேண்டியதுதான. நீ பாட்டுக்க எல்லாரையும் கிண்டலடிச்சிக்கிட்டு கேலி பண்ணி வெறுபேத்தி அனுப்பிட்டியே. உன்ன என்னவேனும்னாலும் பண்ணலாம், தெரியுமில்ல ?

பசுபாதி : (மற்றவர்களைப் பார்த்து ஒப்புதல் பெறும்விதமாக) இவனக் கொன்னுடுவோமா.

கல்குள்ளி : ஆமா (கோட்புழதியைப் பார்த்து) இவனேக் கேட்டானே நீதிபதிக்கிட்ட. என்னக்கொன்னுடு என்னக்கொன்னுடுன்னு. கொன்னுடுவோமா.

கோட்புழுதி : ஏய். ஏய். வேணாம். வேணாம். சொல்லிட்டேன்.

மரவேல் : என்னத்தச் சொல்லிட்ட. கொலை செஞ்சது நீதான.

கோட்புழுதி : அதுமட்டும் இல்லை.

விரிவினி : என்னங்கடா நானும் பாத்துக்கிட்டிருக்கேன். இவர போட்டு கலைச்சிக்கிட்டு இருக்கீங்க. இவரு யாருன்னு தெரியாம விளையாடிறீங்க நீங்க.

சக்காமர் : யாருன்னு தெரியலன்னா வெளையாட முடியாது கண்ணு. நல்லத் தெரிஞ்சு தான் வந்துருக்கோம். விளையாடறத்துக்கு.

(அப்போது காவலர்களான மாற்றியனும் சுபந்ரவனும் உள்ளே வருகிறார்கள். நேரே கோட்புழுதியை அழைத்துக்கொண்டு வெளியேறும் போது கல்குள்ளி )

கல்குள்ளி : சார். அவனுக்கு சோறு தண்ணிக் காட்டாதீங்க சார். கொடுமக்காரன். இங்கப்பாத்தீங்களா. வாதட வந்த வக்கீலியே மயக்கடிச்சு விழ வச்சிட்டான். சும்மா விடாதீங்க. முட்டிக்கு முட்டி தட்டுங்க.

(உடனே மாற்றியன் கோட்புழுதியின் கலைப்பார்த்து பிரம்பால் ஒருஅடி விட்டு)

மாற்றியன் : இப்படியா.

(கோட்புழுதி அளறிக்கொண்டு கீழே விழுந்தான். அப்போது அங்கிருந்த மக்களில் நால்வரும் கடகடவென்ற சட்டைகளைக் கிழித்துக்கொண்டு ஜய்யய்யோ ஜயோ ஜய்யய்யோ என அலற வெளியிலிருந்து நாலைந்துபேர் உள்ளே ஓடிவர அவர்களோடு இன்னும் இரண்டு காவலர்களும் உள்ளே வர. பத்திரிக்கையாளர்கள் வர அவர்களின் பனுவலாரனும் வருகிறான். அந்தக் காட்சியைப் படம் பிடித்துக்கொண்டு)

பனுவலாரன் : என்ன ஆச்சு. ஏன் இந்த கலேபரம்.

மரவேல் : கோட்புழுதி அடிச்சிட்டான் சார்.

சுபந்ரவன் : சட்டையை கிழிச்சிட்டான் சா.

பசுபாதி : கொலை பண்ணிடுவேன்னு மிரட்டுரான் சார்.

கல்குள்ளி : ஜயோ பயமா இருக்கே. நான் என்ன பண்ணுவேன்.

கோட்புழுதி : (எல்லோரையும் தள்ளிக்கொண்டு அவர்களிடம் வந்து) ஏய் நானாடா உங்கள அடிச்சேன் (என ஆத்திரத்தோடு காலைத்துாக்கி எட்டி உதைக்க முயற்சிக்கும் போது அதை போட்டோ எடுத்துக்கொள்கிறான், பனுவலாரன். பின் அவன் அங்கிருந்து சென்றுவிட அனைவரும் வெளியேறிவிடுகிறார்கள். கோட்புழுதி வெளியேறும்போது பனுவலாரனிடம், உன்னை நான் சந்திக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு சென்றுவிடுகிறான். மேடையில் நால்வரைத் தவிர)

கல்குள்ளி : நல்லத நல்லதுன்னு சொல்றதுக்க என்னனென்லாம் செய்ய வேண்டியிருக்குப் பார். போலியான பேர்விழிங்களால உலகம் முட்டாளாக்கப்பட்டு சீரழிஞ்சிவருதே இதுக்கு என்னதான் செய்யறது . . .

(மிகச் சோகமாகத் தோன்றும் கல்குள்ளியை பசுபாதி நெருங்கி)

பசுபாதி : நம்மல நாம நல்லவங்கன்னு நம்பும்போது செய்யறத துணிச்சலா செஞ்சிடனும். இதுக்கு எதிரான செயல்பாடுகள் இருக்கத்தான் செய்யும். அத மீறி செயல்படனும். இல்லன்னா உண்மைக்கு வேறபேரு வந்துடும். பொய்யின்னு. யாராவது முன் வரணும் இல்லியா. அந்த யாராவதுங்கறது யாருன்னு கேக்கும் போது அது நாம இருக்கோங்கறது நெனைக்கும் போது மனசுக்கு இதமா இருக்குல்ல.

மரவேல் : ஆமாம். இருந்தாலும் இந்த கோட்புழுதி மாதிரியான ஜயோக்கினுங்கள தோலுரிக்க நாம தோலுரிச்சிக்க வேண்டியிருக்கேன்னு நெனைக்கும்போது தான் கொஞ்சம் வலியா இருக்கு.

சக்காமர் : எல்லா சரித்திரக் கதையிலும் நாயகர்கள் இருப்பார்கள். அவர்களுக்கு எதிரான வில்லன்ங்களும் இருப்பார்கள். அப்படி எதிரிடை இல்லன்னா நாயக பாத்திரங்களோ இல்லாம போயிருக்கும்.

கல்குள்ளி : நாம நாயகர்கள் தான். நால்வர் படை. மக்களில் நாலு பேர் சேர்ந்துட்டா . . . அதுவும் நல்லதுக்கு சேர்ந்துட்டா எல்லாருக்கும் நல்லதுதான் நடக்கும். என்னென்னைக்கும் நிலைக்கிற நல்லது அது. அத நாம செய்யறப்போ சரித்திரத்துல நாம இடம்பெறப்போறோம். இன்னொன்னு. இந்த யோசனைக்கும் சிந்தனைக்கும் காரணமான பனுவலார பத்திரிக்கைக்காரனத்தான் பாராட்டனும். எதுக்கும் ஒரு காரண காரியம் இருக்கத்தான் செய்யுது இல்ல ?

பசுபாதி : அவருமட்டும் நேத்து நம்மல சேத்து கூட்டம்போட்டு உண்மைய விளக்கலன்னா இன்னிக்கு இன்னும் கோட்புழுதி எல்லாரையும் கேவலப்படுத்தியிருப்பான்.

கல்குள்ளி : அவன் தான் நாயகர்களுக்கெல்லாம் நாயகன்.

மரவேல் : ஒரு விசயத்த தொடங்கிட்டோம். இதோட விட்றக்கூடாது. அப்படி விட்டுட்டோம்னா பின்னால நாம பயந்துட்டோம்னோ, நாம எடுத்துக்கிட்டதுக்கு நியாயம் இருக்கிறமாதிரியும் ஆயிடும். அதனால பிடிச்சக்கொம்ப கெட்டிமா பிடிச்சிக்கிட்டு தீர்பு வர்ற வரைக்கும் தொடரனும். அப்பத்தான் நமக்கு முழுமையான வெற்றி கிடைக்கும்.

பசுபாதி : நேத்திக்கு கோட்புழுதியோட மகள் செம்புழுதி, சொன்ன விசயத்த கொஞ்சம் அலசலாம்.

கல்குள்ளி : ஆமாம் சொல்ல மறந்துட்டோம்.

பசுபாதி : நேத்தி நம்ம கிட்ட தான் மறைமுகமா உங்களுக்கு உதவுறேன்னு அவ சொன்னதாலதான் பனுவலாரன் தைரியமா இந்தத் திட்டத்தப்போட்டான்.

கல்குள்ளி : மாம். மாம். னா செம்புழுதிய, இன்னிக்கு சபையில காணோமே.

பசுபாதி : அவ மானஸ்த்தி. நல்ல தமிழ் பெண். கொலைக்கும் கற்பழிப்புக்கும் எதிரான கன்னியமான பெண். எப்படி அவ இவனுக்கு மகள பொறந்தா ?

மரவேல் : யாரு யாருக்கு வேணும்னாலும் மகளா பொறக்கலாம், இல்ல மகனாவும்பொறக்கலாம். னா இந்த சமூகத்தோடு இயக்கம் பொறுத்துத்தான் எல்லோரட மனசும் இயங்கும். நம்ம சமூகத்தோட இயக்கம் கட்டுப்பாடானாது. கேவலங்கல அடையாளங்கண்டு உடனுக்குடனே அழிக்கிற கொணம் கொண்டது. அதனால தான் இங்க அமைதி தொடர்ந்து நிலைச்சி நிக்கிறது. இன்னிக்கு என்னமோ கோட்புழுதியால சலசலப்பு எற்பட்டிருக்கு சீக்கிரமே இதுவும் சரியாகிடும். ஒண்ணுமட்டும் உண்மை. இங்கே கெட்டவங்களோட நல்லவங்களோட எண்ணிக்கைதான் அதிகமா இருக்கு.

(நால்வரும் சந்தோசமாக இந்தக்கூற்றைப் பகிர்ந்துகொண்டு வெளியேறுகிறார்கள்)

காட்சி -6

மேடையில் கோட்புழுதி மட்டும் இருக்க அவனை நோக்கி மாற்றியனும் சுபந்ரவனும் ளுக்கொரு தடியை எடுத்துக்கொண்டு வேகவேகமாக வருகிறார்கள். அப்போது கோட்புழுதி அவர்களை விநோதமாகப் பார்க்கிறான். பின் அவர்களை நோக்கி சப்தமாக

கோட்புழுதி : நேற்று வழக்கு எப்படி. அசத்தலாக இருந்ததா. என்ன நெனச்சிக்கிட்டு என்ன கோர்ட்ல நிக்க வச்சிக்கிருக்கானுங்க. ஒருத்தனாலும் என்ன ஒண்ணும் பன்னமுடியாது. நீ என்ன நினைக்கிற மாற்றியா.

மாற்றியன் : மாற்றியாவா. என்ன கோட்புழுதி, கொழுப்பா ?

கோட்புழுதி : கோட்புழுதின்னா கூப்பிட்ட.

மாற்றியன் : கூப்பிடல. எச்சரிக்கிறேன். நீ கைதியா இங்க இருக்க. என் கட்டுப்பாட்டுல இருக்கங்கற கைதி நீ மறந்துடாத.

கோட்புழுதி : (உடனே பவ்யமாக கைகளைக் கட்டிக்கொண்டு) சார். என்ன சார். நீங்களா இப்படி பேசறது.

மாற்றியன் : இப்படித்தான் பேசியிருக்கனும் முன்னமே. தப்பு செஞ்சிட்டேன். கொஞ்ச மயக்கத்துல இருந்ததால குழம்பிட்டேன். இனி என்ன நீ ஒன்னும் செய்யமுடியாது.

கோட்புழுதி : சுபந்ரவன் சார். என்ன இவரு இப்படி பேசாறு.

சுபந்ரவன் : அவரக்கேளு என்னக்கேட்டா.

கோட்புழுதி : உங்க நண்பர்தான சார்.

சுபந்ரவன் : நண்பரா யார் சென்னது ?

கோட்புழுதி : எல்லாம் சொல்லிக்கிட்டாங்களே சார்.

சுபந்ரவன் : அதெல்லாம் கிடையாது. இவரு ஒரு கவலர் நானொரு காவலன். ரெண்டுபேரும் ஒரு இடத்துல வேல செய்யறோம். அவ்வளவுதான். இதனால இவரு என்னோடு நண்பரு, மச்சான், மாமன்னு உறவு ஏற்படுத்தாத.

கோட்புழுதி : னா அவரோடு நிங்க தெளிவா இருக்கீங்க சார்.

சுபந்ரவன் : அப்படியா.

கோட்புழுதி : மா சார். உங்க பொறுமை ரொம்ப அர்புதம். சார்.

சுபந்ரவன் : என் பொறுமை அர்புதம்…அப்புறம் ?

கோட்புழுதி : அமா சார். இப்படி கராரா இருக்க வேண்டிய தொழில்ல இருக்கறவங்க மொகமெல்லாம் தடிச்சித்தான் இருக்க, பாத்திருக்கேன். உங்க மொகத்துல கருண தெரியுது சார்.

சுபந்ரவன் : ங்!

கோட்புழுதி : சும்மா சொல்லல சார். உங்க கண்ணு இருக்கே கண்ணு. அத ஒரு கொலைகாரன் ஒரேயொரு நொடி பாத்துட்டான்னா போதும். அவனும் ஒரு யோகியாயிடுவான் சார்.

சுபந்ரவன் : நல்லருக்கே கேக்கறதுக்கு.

கோட்புழுதி : அமா சார். இப்படித்தான் ஒரு முறை நான் காட்டுக்குள்ள அலைஞ்சி திரிஞ்சிக்கிட்டு இருந்தப்ப ஒரு ளப்பாத்தேன். தாடியும் கழியுமா. னா கம்பீரமான உடம்போட அலைஞ்சி திரிஞ்சிக்கிட்டிருந்தவரப் பார்த்தேன். அவரு யாருக்கிட்டயும் பேசமாட்டாறுன்னு கேள்வி பட்டிருக்கேன். னா அவரு என்னப் பாத்தோடன்னே பேச ரம்பிச்சாட்டாரு, தெரியுமா ? என்னப்பத்தி விசாரிச்சாரு. அப்பத்தான் அவரு தான் ஒரு ராணுவ வீரனா மேலிடத்து உத்திரவா அந்த காட்டுக்கு வந்ததாவும் அங்க இருந்த ஒரு வேட்டக்காரனை பிடிக்க கொஞ்ச நாள் அலைஞ்சதாவும் சொன்னாரு. னா பாருங்க யார அவரு பிடிக்கப் போனாரோ அவன் அவரோடயே இரண்டு நாள் கூடவே இருந்ததும், அவருக்கு வேண்டியத எல்லாம் செஞ்சிக்கொடுத்து நல்லா பழகிட்டு அவர விட்டுப்போனப்பறம், ஒரு ளவிட்ட நான் தான் நீ தேடிக்கிட்ட வந்த ளு. உன்னப்பாத்தா நல்லவன்னு தோணுது. னா நானும் நல்லவன்கிறத நீயே அந்த ரெண்டு நாளும் சொன்னத யோசிச்சிப்பாரு ன்னு சொல்லச் சொன்னது கேட்டதுலேர்ந்து இவரு-அதான் அந்த ராணுவ வீரரு, வேட்டக்காரனத் தேடி அவனோட சேர்ந்துக்கனும்னு அலைஞ்சிக்கிட்டு இருக்கறதா அவரே சொன்னத கேக்க நேர்ந்தது. அந்த ராணுவ வீரனாட்டும் என்னையும், அந்த வேட்டக்காரராட்டும் உங்களையும் பாக்குறேன்.

சுபந்ரவன் : கா ற்புதம். உங்களுக்கு நான் ஏதாவது செஞ்சாகனுமே.

கோட்புழுதி : அதெல்லாம் ஒண்ணும் வேனாம். நீங்க சந்தேசமா இருந்தா போதும்.

சுபந்ரவன் : அதுக்குத்தான்.

கோட்புழுதி : உங்க இ–ட்டம் விருப்பப்பட்டு கேக்குறீங்க. செய்யுங்க என்ன வேணும்னாலும் செய்யுங்க.

(என்றதும் இருவரும் கோட்புழுதியைக் கட்டிப்போட்டுவிட்டு, சரமாரியாக அடித்து நொறுக்குகிறார்கள். அவன் ஜய்யோ குய்யோன்னு அலருகிறான். நன்றாக அவனை நையப்புடைத்துவிட்டு அசந்து அமர்கிறார்கள். கோட்புழுதி கிழிந்த துணியாக தொப்பென்று மயங்கி விிழுகிறான். சிறிது நேர சுவாசத்திற்குப்பின்)

மாற்றியன் : அப்பா.

சுபந்ரவன் : இப்பத்தான் சரியாக இருக்கு. இத்தன நாளா உள்ள உருட்டிக்கிட்டிருந்த த்ரமெல்லாம் கரைஞ்சிடுச்சு. என்னமா வேல செய்யறான். முதல வாயில கூட தல வச்சுத்துாங்கலாம் போலருக்கே. இவன் நெனப்போட என்னால ஒரு நா கூட துாங்க முடியல மாற்றியா. இப்பத்தான் மனசு லேசா இருக்கு. சின்னதா றெக்க முளைச்ச மாதிரியும் இருக்குப்பா.

மாற்றியன் : நான் அவன் நெனச்ச மாதிரியில்லன்னு தெரிஞ்சதும் பாத்தியா, உன்ன தான் பக்கம் திருப்ப நெனச்சத!

சுபந்ரவன் : அதான் ஒட்டிக்கு ரெட்டியா வாங்கிக்கட்டிக்கிட்டான். னா ஒன்னு, விழுந்த அடில்லாம் உள்ளடித்தான். யாரும் வெளியிலேர்ந்து பார்த்தா, ஜயா கோட்புழுதி அடிவாங்கினதா தெரியாது.

(மாற்றியன் சிரித்துக்கொள்கிறான். பின் கோட்புழுதியைப் பார்க்க, கோட்புழுதி அங்கே மயக்கம் தெளிந்து மெல்ல எழுந்திரிக்க முயற்சித்துக் கொண்டிருப்பதைப் பார்க்கிறான். பின் மெல்ல அவனருகில் சென்று அவனைக் கைத்தாங்களாக சற்று முன்மேடைக்கு கொண்டு வந்து கிடத்துகிறான். பின் அவனிடம்)

மாற்றியன் : ஏய், தெரியுமா ? நாங்க எத்தனக் கொலைகாரன்கள, எத்தன கொள்ளக்காரனுங்கள பாத்துக்கிட்டு வர்றோம்! எங்ககிட்ட நீ வாலாட்ட முடியாது, பொடியனே. எத்தனைவிதமான குற்றவாளிங்க, எத்தவிதமான குற்றங்கள், என்ன நெனச்சிட்டே! இருந்தாலும் என்னையே அசசிட்டியே! எப்படி, எப்படி அது ? இத எங்கேர்ந்து கத்துக்கிட்ட ? யாரு உனக்கு குரு ? அவன நான் பாக்குனுமே. உன்னால எப்படித்தான் புள்ளக்குட்டிங்கள பெத்து மனவி மக்களோடு வாழ முடிஞ்சிதோ! பாவம்டா உன் குடும்பம். அவங்களையும் உன் அசிங்கத்த ஏத்துக்கிற மாதிரியோ இல்ல, அந்த அசிங்கங்களுக்கு துணையா இருக்கிற மாதிரியோ உன்னால மாத்தியிருக்க முடியும். இருந்தாலும் பாவம், அவங்க. உசிருங்கள இப்படி அதனோட தன்ணுணர்ச்சி மறந்துட்டு உன்னோடு எண்ணங்களுக்கு டுற மாதிரி மாத்திட்ற உன்னவிட பயங்கரமான விசம் எந்த உலகத்திலேயும் இருக்காது.

கோட்புழுதி : மாம். நான் விசம்தான். உன் கூட இருக்கேன்ல நான் விசமா இல்லாம வேற எப்படி இருக்க முடியும்.

சுபந்ரவன் : மாற்றியா, பேசவிடாத அவன.

மாற்றியன் : பேசட்டும். இப்ப என்ன பேசறான்னு கேப்போம். இவன பாத்துக்கறதுதான நம்ம வேல. பாத்துக்குவோம். நீ பேசு கோட்புழுதி நீ பேசு. எல்லாத்தையும் பேசு. இப்பவாவவது மனச விட்டுப்பேசு.

கோட்புழுதி : பேசறேன். பேசித்தான் கனும். னா அதுக்கு முன்னாடி ஒண்ணே ஒண்ணு கேட்டுக்கிறேன். என்ன கொண்டுடாதீங்க. நான் விடுதலையாகி வெளிய போக சப்படுறது, பழையபடி இந்த ஏமாத்துவேளைங்கள செய்யறதுக்காக இல்ல. வேறொன்னுக்காக. என்ன கொண்டமாட்டாங்களே.

சுபந்ரவன் : இல்ல கொல்ல மாட்டோம். நீ பேசு.

கோட்புழுதி : (மாற்றியனைப் பார்த்து) நீங்க தான் ரொம்ப கோவமா இருக்கீங்க. நீங்க சொல்லுங்க. என்ன ஒண்ணும் பண்ணமாட்டாங்களே.

மாற்றியன் : இல்ல சொல்லு.

கோட்புழுதி : நான் மோசமானவன் கிடையாது. மோசமானவனாத் தெரியறேன். எது மோசங்கிறீங்க. நான் அந்தக் கொலையைச் செய்யல. இதுவரைக்கும். நாளைக்கோ வேறெப்போதோ நான் தான் கொலை செஞ்சேன்னு தீர்ப்பு வரலாம். அல்லது நான் நிரபராதின்னும் கூட வரலாம். அதுவரைக்கும் நான் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டிருக்கிறேன். விசாரணைக்காக. விசாரணையின் போக்கில் எதுவேணும்னாலும் நடக்கலாம். நான் கொலை செஞ்சிருந்தாலும் செய்யலன்னும் கலாம். செய்யாமயிருந்தாலும் இருந்தாலும் செஞ்சதாகவும் கலாம். இதுதான் எப்படி நடக்குதுன்னு கொஞ்சம் யோசிக்கனும். யாரும் யோக்கினில்ல இந்த உலகத்தில. அதே சொல்ல எதிராகவும் சொல்லலாம் யாரும் கெட்டவன் கெடையாது உலகத்துல. நான் இரண்டாவத எடுத்துக்கறேன். எவனும் கெட்டுப்போகனும், சீரழிஞ்சிப்போகனும்னு வாழல இங்க. எல்லாரும் தான் நல்லா இருக்கனும் னு நெனக்கிறான். அதமாதிரிதான் வாழ்க்கையைத் தொடங்குறான். பிறந்துதிலேர்ந்து. னா என்ன குது. ஒருத்தன் கெட்டவன் இன்னொருத்தன் நல்லவன்னு பாகுபாடோட மனுசனுங்க உலவுர நெலமை ஏற்பட்டுடுது. நீங்களே யோசிச்சுப்பாருங்க. நான் நல்லவனா கெட்டவனான்னு வெளிய தெரியறதுக்கு நான் காரணமில்ல. நான் என்னவா இருந்தாலும். இந்த சூழலோடு செயல்பாடும் நம்பிக்கையும் தான் நான் இன்னவன்னு சொல்லுது. அதுக்காக நான் செய்யவேண்டியத செய்யாம இருக்க முடியாது. அப்படி செய்ய ரம்பிக்கும் போது இந்த சூழல் வந்து முன்னாடி உக்காந்துகிட்டு செய்யவிடாம செய்யிது. அதனாலதான் அத நான் மீறவேண்டியிருக்கு. மீறுறேன்னு நான் தான் சொல்றேன். சூழல் சொல்லல புரிஞ்சிக்குங்க. சூழல் ஏத்துக்கிட்டதும் நான் என் விருப்பப்படி செய்யறேன். திடார்னு சூழல் மாறிடுது. முன்ன இருந்த சூழல் முன்ன இருந்ததுக்கு எதிரா மாறிடறதால நான் ஒதுக்கப்பட்றேன். தவறானவனாயிட்றேன். நீங்க பாருங்க. அடுத்த மாற்றத்தின் போது நான் இங்கே குற்றவாளியா இருக்கமாட்டேன். தியாகியாயிடுவேன். இந்த கொலை கற்பழிப்பு வழக்கெல்லாம் என் கொள்கைக்கு எதிரா என் மீது திணிக்கப்பட்டதா சொல்லப்பட்டு நான் போற்றப்படுவேன். அப்ப நீங்க இந்த இங்கயே இருந்தீங்கன்னா. ஏன் எங்க இருந்தாலும் என்ன வந்து பாருங்க. இல்ல ஒரு கடிதம் போடுங்க. நான் உங்கள வந்து பாக்கிறேன். இதுதான் உண்மை. இதுதான் நடக்குது. இது தான் இயல்புன்னும் மக்களும் ஏத்துக்கிட்டாங்க.

மாற்றியன் : உனக்கு வாயே வலிக்கிலியா. எவ்ளோ அடிவாங்கின இன்னும் விட்டா நீ பேசிக்கிடே இருப்பப்போலிருக்கே.

கோட்புழுதி : நான் பேசல என் மனசு பேசு. மனசுக்கு உடம்புவலி ஒரு பொருட்டில்ல. இத எல்லா சாதனையாளர்களிடேயும் பாக்கலாம்.

சுபந்ரவன் :(கேலியாக) நீ சாதனையாளன். அடச் சீ . . . சீ . . .

கோட்புழுதி தலையைக் குணிந்துகொள்கிறான். பின் மேடையில் சிிறிது நேரம் அமைதி நிலவுகிறது.

காட்சி-7

மேடையில் மெல்லிய ஒளி பரவியிருக்க கோட்புழுதி மட்டும் மெல்ல நடந்துகொண்டிருக்கிறான். அப்போது அவனைச் சற்றி மாற்றியனும் சுபந்ரவனும் அசையாமல் அமர்ந்தநிலையில் இருக்கின்றனர். அவர்களின்மீது மட்டும் ஒளி சற்றுக்குறைவாக இருக்கலாம். அப்போது இடது புறத்து மேடையிலிருந்து பனுவலாரன் மெல்ல உள்ளே வருகிறான். வந்தவன் மெல்ல முன் மேடைக்கு வந்து மூவரையும் பார்க்கிறான். பின் மாற்றியனுக்கு அருகில் சென்று அவனை தன் சுண்டுவிரலால் நகரும் படிக்கான அசைவைக்கொடுக்க அவன் பொம்மைபோல் மெல்ல நடந்து பனுவலாரன் காட்டிய இடத்தில் சென்று நிற்கிறான். அவன் நின்றதும் பனுவலாரன் முன்மேடை விளிம்பில் சென்று பார்வையாளர்கள் பக்கம் பார்த்தபடி அமர்ந்துகொள்கிறான். சுற்றி வந்துகொண்டிருந்த கோட்புழுதி, மாற்றியன் இடம் மாறி நின்றுகொண்டிருப்பதைக் கண்டதும் சந்தேகத்தோடு சுற்றுமுற்றும் பார்க்கிறான். முன்மேடை விளிம்பில் இருந்த பனுவலாரனைப் பார்த்ததும் தான் எதையோ கண்டுபிடித்துவிட்டதாக பாவனை செய்து சுபந்ரவனை தனது சுண்டுவிரலால் திசைகாட்டி நிற்கச் சொல்ல சுபந்ரவனும் பொம்மைபோல் கோட்புழுதி காட்டிய இடத்தில் போய் நின்று கொள்கிறான். பின் அதைக் கண்ட பனுவலாரன் சுபந்ரவனை விளிம்பில் நின்றவாரே கைவிரல் சுடக்கி வேறு இடத்திற்கு கொண்டுபோய் நிறுத்துகிறான். கோட்புழுதி, சுபந்ரவனை தன் பழைய இடத்திற்குக் கொண்டு வர முயற்சிக்கிறான். முடியாமல் போக பனுவலாரனைப் பார்த்து வியக்கிறான். பின் பின்னரங்கிலிருந்து கரியாலுகர் யக்ஞப்பன் இருளிடியான் தாதிக்குரவன் கியோரை பொம்மைகளாக உள்ளே வரவழைத்து அவர்களை தன்னோடு நிற்க வைத்துக்கொண்டதும், பனுவலாரன் அந்த நால்வரையும் அவனுக்கெதிராக மு–ட்டியை மடித்துக்காட்டும் படி மாற்றுகிறான். கோட்புழுதி மிரண்டு போய் பனுவலாரனை நோக்கி வர பனுவலாரன் சற்றே நகர்ந்துகொள்கிறான். கோட்புழுதி அவனது கால்களைப் பிடித்துக்கொண்டு,)

கோட்புழுதி : என்னைக் காப்பாற்று. நீ தான் என்னைக் காப்பாற்ற முடியும். உன்னால் தான் நான் இங்கிருந்து வெளியேற முடியும். நிரபராதியாக.

பனுவலாரன் : உன்னை நான் ஏன் காப்பாற்றவேண்டும். நீ யார். உனக்கும் எனக்கும் என்ன உறவு.

கோட்புழுதி : உறவில்லாமலா இங்கு வந்திருக்கிறாய்.

பனுவலாரன் : வந்தது நீ அழைத்ததின் பேரில்.

கோட்புழுதி :(பொம்மைகளைக் காட்டி) இந்த விளையாட்டு

பனுவலாரன் : இது விளையாட்டல்ல. என் சக்தியை நான் சோதித்தேன்.

கோட்புழுதி : நான் பார்க்கவா.

பனுவலாரன் : நீ பார்த்தால் எனக்கு என்ன லாபம்.

கோட்புழுதி : இப்போதுதான் நீ உண்மையாகப் பேசுகிறாய். உனக்கு எது லாபம் என்று தோன்றுகிறதோ அதைச் செய்து தருகிறேன்.

பனுவலாரன் : என்ன செய்வாய்.

கோட்புழுதி : உனக்கு என்ன பிடிக்குமோ அதை.

பனுவலாரன் : எனக்கு நீ சாகவேண்டும் என்றுத் தோன்றுகிறது. உன் உண்மையான முகத்தை வெளிச்சம் போட்டுக்காட்டவேண்டும். மக்கள் உன்னை அடையாளம் காணவேண்டும். அதுதான் வேண்டும். முடியுமா ?

கோட்புழுதி : சரி அதைச் செய்கிறேன். னால் நீ என்னைக் காப்பாற்ற வேண்டும்.

பனுவலாரன் : நீ சாகவேண்டும் என்று சொல்கிறேன். காப்பாற்ற வேண்டும் என்ற என்னிடமே கேட்கிறாயே. நீ வி‘மமான ள்தான்.

கோட்புழுதி : இல்ல உங்கிட்ட திறமையிருக்கு. எங்கிட்ட கொஞ்சம் பணம் இருக்கு. ஏன் என் பணம் உனக்கு உதவக்கூடாது. இல்ல ஏன் உன் திறமை எனக்கு உதவக்கூடாது.

பனுவலாரன் : சரி உங்க பணத்தால எனக்கு முதல்ல உதவி செய்யுங்க. அப்புறம் என் தெறமைய பாத்துக்கலாம்.

கோட்புழுதி : சரி நீ வெளிய போனதும் என் பணம் உன் முன்னாடி இருக்கும். எவ்வளவு வேணும்னாலும் எடுத்துக்கலாம். சரியா.

பனுவலாரன் : சரி.

கோட்புழுதி : அப்ப நான் சாகவேண்டாமில்லயா.

பனுவலாரன் : இருக்காதுன்னு நெனக்கிறேன்.

கோட்புழுதி : மாறிட்டியா! மாறினமாதிரி நடிக்கிறியா ?

பனுவலாரன் : நான் எப்படியா இருந்தாலும் இப்பத்திக்கு நீங்க என்ன நம்பித்தான் கனும்.

கோட்புழுதி : விதீ . . .

பனுவலாரன் : இதவொரு விதமான விதி.

கோட்புழுதி : நம்புறேன்.

பனுவலாரன் : பாவம்.

கோட்புழுதி : பரவாயில்லை. மாத்தத்த நாளைக்கு பாக்கலாமா ?

பனுவலாரன் : மாத்தம் வரும்போது தெரிஞ்சிக்கிங்க.

கோட்புழுதி : இவங்கள என்ன பன்றது.

பனுவலாரன் : இப்படித்தான் இருப்பாங்க. இப்படியே இருக்கட்டும்.

கோட்புழுதி : இப்படியேன்னா அசையாம, பேசாமலா ?

பனுவலாரன் : இவங்கள்லாம் அசஞ்சா அப்புறம் நமக்குத்தான் பத்து.

(இருவரும் சிரித்துக்கொள்கிறார்கள். அப்படி சிரித்துக்கொண்டே பனுவலாரன் சுண்டுவிரலால் சைகை செய்ய முன்பிருந்த நிலைக்கு மாற்றியனும் சுபந்ரவனும் சென்றுவிட, மற்ற நால்வரும் வந்தவழியாகவே பின்மேடைக்குள் சென்று மறைந்துவிடுகிறார்கள். அப்போது கோட்புழுதி பனுவலாரனிடம்)

கோட்புழுதி : நீ . . .

பனுவலாரன் : இவ்ளவும் பேசினபிறகு. இவ்வளவும் நடந்தபிறகு நான் யாருங்கற சந்தேகமா.

கோட்புழுதி : நீ அந்த பத்திரிக்கைக்காரன் தான். இருந்தாலும். . .

பனுவலாரன் : பயப்படவேண்டாம். அனேகமா வெளியில சந்திக்க முயற்சிப்போம்.

கோட்புழுதி : யப்பா. என்ன கொண்டுபோயிடுப்பா.

பனுவலாரன் : அதுக்குத்தான், இப்பவே நான் சீக்கிரம் போயாகவேண்டும். (வெளியேற சில அடிகள் எடுத்துவைத்தவன் அப்படியே நின்று கோட்புழுதியைப பார்த்து) எனக்கென்னமோ உன்கிட்ட எதுவோ பேசுனும்னு தோணுச்சி. னா இப்ப அத மறந்துட்டு உன் பணத்த என் பணமா க்குறதுக்கு அவசரஅவசரமா வெளிய போயிகிட்டு இருக்கேன்.

கோட்புழுதி : அதான் பணம்.

பனுவலாரன் : வறேன்.

(என சொல்லிவிட்டு அவன் விறுவிறென வெளியேறிவிடுகிறான். மேடையில் ஒளி மெல்ல குறைகிறது.)

காட்சி-8

மேடையில் யாருமில்லை. சிறிது நேரத்திற்குப்பின் பின்னரங்கிலிருந்து பேச்சொலி சலசலப்போடு கேட்கிறது. வார்த்தைகள் புரியாமல் னால் பேசுபவர்கள் ஏதோ அதிசயத்தைப்பற்றியோ, ச்சர்யப்பட்டதைப் பற்றியோ பேசுவதுபோல் இருக்கிறது. அப்போது வலது மேடையிலிருந்து விரிவினியும் அரசு வக்கீல் காட்பினாரும் கையில் வக்கீல் கோட்டை ஏந்திக்கொண்டு முன்மேடை வழியாக இடது மேடை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள். விரிவினி முகத்தில் சந்தோசம் களைகட்டுகிறது.

விரிவினி: (நடந்துகொண்டே) பாத்தீங்களா.

காட்பினார் : படிச்சேன் படிச்சேன். அந்தக் கன்றாவியச் செய்தியப் படிச்சேன்.

விரிவினி : என்ன செய்தியப்போயி கன்றாவிச் செய்திங்கிறீங்க.

காட்பினார் : வேறென்ன உன் கட்சிக்காரன் எவ்வளவு பெரிய ஜயோக்கியன் அவன எல்லாப்பத்திரிக்கையும் கிழிச்சிக்கிட்டு இருக்கறச்சே, இதே பத்திரிக்கைக்காரன் தான அதிகமா, கோட்புழுதிய கிழிகழின்னு கிழிச்சான். இன்னிக்கு அப்படியே தலைகீழா மாத்தப் பாக்கறான் பாத்தியா. இதெல்லாம் நியாயமா. உனக்கேக் தெரியும் உன் கட்சிக்காரன் மோசமானவன்தான்னு ஏதோ தொழிலச் செஞ்சி வயித்தக் கழுவுறதுக்கு நீ அவன் பக்கம் வாதாடற. இது சரியா விரிவினி ?

விரிவினி : சரீன்னுதான் தோணுது. கோட்புழுதி யாரும் ஒண்ணும் பன்னமுடியாதுங்கறதுக்கு இது ஒரு உதாரணம்.

(என அவர்கள் பேசிக்கொண்டே இடது மேடைக்குள் சென்று மறைகிறார்கள். அப்போது பின் மேடையிலிருந்து கல்குள்ளியும் மரவேலும் உள்ளே வருகின்றார்கள். படபடப்புடன்.)

கல்குள்ளி : எங்கடா பசுபாதி ? எங்க சக்காமர்.

மரவேல் : இதோட பத்துவாட்டி கேட்டுட்ட. நானும் உங்கூடத்தான வர்றேன் என்னயே கேட்டுக்கிட்டிருந்தா… கேட்டுக்கோ. அதுக்கு பதில் வந்தாதான. இப்ப அவங்கள பாத்து என்ன செய்யப்போற. அவங்ககிட்டயும் சொல்லனுமா.

கல்குள்ளி : சொல்லவேணா பின்ன. உனக்கு பயமாயில்லியா.

மரவேல் : பயமாத்தான் இருக்கு. என்ன பண்றது. எதுத்துட்டோம். இனி பாதுகாத்துக்க வேண்டியதுதான்.

கல்குள்ளி : என்னமோ அன்னிக்கு நாலுபேர் ஒண்ணா சேர்ந்துட்டா எதுவேணும்னாலும் சாதிக்கலாம், அத நல்லதா மட்டும் இருக்க பாத்துக்கணும்னு பேசப்பட்டதே. இன்னிக்கு என்னாச்சி. நாலுபேர் என்ன நாலாயிரம் பேர் வந்தாலும் அந்த ஒத்த மனுசன ஒன்னும் பண்ணமுடியாதுங்கறத நிரூபிச்சிட்டான் பாத்தியா. இனி அவ்ளோதான். நாளைக்கோ நாளண்ணைக்கோ வெளியில வந்துடுவான். நாம மேல போயிசேந்துடுவோம். ஜயோ நான் என்ன பண்ணுவேன். அவன் உள்ள இருக்கறான்ற தைரியத்துல நான் பாட்டுக்கு என்னன்னவோ பேசிட்டேனே. அவன் கரம்வச்சிக்கிட்டே இருப்பான். பாம்போட மோசமா ? தொலைஞ்சேன். போ. போ. அவனுங்க ரெண்டு பேரையும் கூட்டுக்கிட்டுவா. அவனுவோளுக்கு விசயம் தெரிஞ்சிதோ இல்லியோ. விசயம் தெரியாம வெளியில எதையாது மேலும் மேலும் உளறிக்கொட்டப்போறானுங்க. போயி பாரு. உடனே அழச்சிக்கிட்டு வாடா மரவேலு. உடனே அழச்சிக்கிட்டு வா.

மரவேல் : அண்ணே என்னாச்சு. உங்களுக்கு என்னாச்சிண்ணே. பயப்படாதீங்க. தர்மம் வெல்லும்ண்ணே.

கல்குள்ளி : அடப்போடா. வயித்துல நெறுப்பக்கட்டிக்கிட்டு இருக்கேன். இப்பப்போயி இப்படிப்பேசறியே.

(மரவேல் அவர்களைத் தேடி வெளியே சென்று விடுகிறான். கல்குள்ளி மட்டும் மேடையில் உலாத்திக்கொண்டிருக்கிறான். சிறிது நேரத்திற்கெல்லாம். பசுபாதியும் சக்காமரும் வருகின்றனர்.)

பசுபாதி : (உள்ளே நுழையும் போதே சப்தமாக) கல்குள்ளீ . . . தெரியுமா சேதி.

கல்குள்ளி : (தெரியும் என்பதாகத் தலையை ட்டிக்கொள்கிறான்)

பசுபாதி : சாச்சிப்புட்டான்பா அந்த பத்திரிக்கக்காரன்.

கல்குள்ளி : (ச்சயர்யத்தோடு தலையை நிமிர்த்தி) என்ன சொன்ன ?

பசுபாதி : பத்திரிக்கக்காரன் நம்மள முட்டாளாக்கிட்டான்பா.

கல்குள்ளி : என்னய்யா சொல்ற.

சக்காமர் : மாம். இன்னய சேதி தெரியுமோ உனக்கு ? (கல்குள்ளி தெரியுமென்பதாக தலையை அட்ட) எந்த பத்திரிக்கன்னு தெரியுமா ?

கல்குள்ளி : யாரு பனுவலாரன் பத்திரிக்கையா ?

சக்காமர் : மாம்பா. நம்பமுடியிதா உன்னால ?

கல்குள்ளி : அவனா இப்படி எழுதியிருக்கான்.

பசுபாதி : வேற உங்கப்பனா எழுதினான். அவன் தான். நம்மல எல்லாம் கோட்புழுதிக்கு எதிரா வேலசெய்ய வச்சானானே அதே புண்ணியவான் தான் கோட்புழுதிக்கு தரவா எழுதியிருக்கான்.

கல்குள்ளி : இது எங்க கொண்டுபோயி விடப்போவுதோ. நாமல்லாம் அவ்வளவுதான். கூண்டோட காலி. இல்லன்னா ஏதாவதொரு லாரி வேகமா வந்து நம்ம நாலுபேரு மேலையும் ஏறப்போவது. என்னய்யா செய்யறது.

சக்காமர் : ஒண்ணும் செய்ய வேணாம். இதமாதிரி முன்னுக்கு பின்னா ஏதாவது நடக்கும்போது சட்டுனு இருக்கறதெல்லாம் போட்டுட்டு ஓரு ஓரமா உக்காந்துடனும். எல்லாம் ஞ்சி ஓஞ்சி அடங்கினப்பறம் எழுந்திருச்சி நம்ம வழி தெளிவா இருந்தா அப்பறமேட்டுக்கு போயிகிட்டே இருக்க வேண்டியதுதான்.

பசுபாதி : பனுவலாரன கொண்ணா என்ன ?

சக்காமர் : கொன்னுட்டு . . .

பசுபாதி : ெஐயிலுக்கு போறது . . .

கல்குள்ளி : என்னுமோ பழத்த வாங்கித் திண்ணுட்டு கொட்டைய துப்பிட்டுப் போறமாதிரி பேசறான் பாரு. துடுக்கா எதையும் செய்யம பாதுகாத்துக்க. எதையாவது செஞ்சிடப்போறான்.

சக்காமர் : சரி சரி. எங்க மரவேல் ?

கல்குள்ளி : உங்கள அழச்சிவரத்தான் அனுப்பினேன். எந்த லாரி அவன் மேல ஏறுச்சோ ?

சக்காமர் : சும்மா இருப்பா. தெம்பா இருக்கறவனையும் தொவள வச்சிடுவ போலிருக்கே.

பசுபாதி : இதோ பாருங்க. இப்பத்திக்கு நாம ஒண்ணும் செய்யத் தேவலைன்னேத்தான் தோணுது. அதனால சொன்னதுமாதிரி சும்மாவே இருப்போம். னா பயமில்லாம தெம்பா, என்ன. வரட்டா. நான் கெளம்புறேன்.

(என சொல்லிவிட்டு அவன் போய்விட மற்றவர்களும் வெளியேறிவிடுகின்றனர். அப்போது மாற்றியனும் சுபந்ரவனும் மேடைக்குள் சென்றவர்களைத் தொடர்ந்து அவர்களைக் கவனித்தவர்களாகவும் மிகவும் சிந்தனையில் இருப்பவர்களாகவும் வருகிறார்கள். வந்தவர்கள் நேரே மேடையின் மையத்தில் வந்து அமர்ந்துகொண்டு, இருவரும் தம் இடுப்பில் சொருகி வைத்திருந்த பத்திரிக்கையை தம் முன் விரித்து வைத்து அதைத் தீவிரமாகப் படிக்கின்றனர். வரி விடாமல் படிப்பவர்களாகக் காணப்படுகிறார்கள். அவர்கள் சுற்றுமுற்றும் பார்க்காமல் படித்துக்கொண்டிருக்கும் தினசரியிலேயே கவனம் செலுத்திக்கொண்டு இருக்கிறார்கள். கரியாலுகர் யக்ஞப்பன் இருளிடியான் தாதிக்குரவன் கியோர் மேடையில் படித்துக்கொண்டிருக்கும் இரண்டு காவலர்கள் அருகே வந்து அவர்கள் என்ன படிக்கிறார்கள் என்பதை எட்டி எட்டிப் பார்க்கிறார்கள். வெகுநேரம் அவர்கள் இரண்டு காவலர்களின் நினைவற்றுப் படிக்கும் விதத்தைக் கேலி செய்தவாரு இருந்தவர்களில் ஒருவன் தும்பினதும் காவலர்களின் கவனம் கலைகிறது. சட் டென எதிலிருந்தோ விடுபட்டு மீண்டும் பயத்தால் நடுங்குபவர்கள் போல சிலகணங்கள் காணப்பட்டுப் பின் சுதாரித்துக்கொண்டு சாதாரண நிலைக்கு வந்தவர்களாக கைதிகளோடு மெல்ல தொடர்புகொள்ள முயற்சிக்கின்றனர்)

மாற்றியன் : செ. உலகத்துல மனுசனே இருக்கமுடியாதா ?

கரியாலுகர் : இருக்க முடியாது சார். உலகம் மனுசனுக்கான இடம் இல்ல சார். முதல்ல மனுசன் வந்ததே ஏதாவதொரு கொளருபடியால இருந்திருக்கும் சார். தப்பா தவறுதலா உலகத்துல பூந்திருப்பான். ஒரு முறப்பூந்துட்டவன அப்பயிலேர்ந்து வெளியேத்த முயற்சி நடந்துகிட்டே இருக்கு சார். வறட்சின்னும், வெள்ளமுன்னும் பூகம்பம்னும் என்னனவோ வந்தும் அவன மெரட்ட முடியல, விரட்ட முடியல. மீறி மீறி நிக்கிறான். எல்லாத்தையும் சாப்ட்டுட்டு செறிச்சிட்டு வளமா சுத்திசுத்தி வற்ரான். இங்கெதான் அவன் இருக்க முடியும்னு இல்ல எல்லா இடத்துலயும் அவனால வாழ முடியிது. பனியில பாறையில, பாலைவனத்துல பாம்பும் தேளும், புலியம் சிங்கமும் வெறியோட அலையிற காட்டுலயும், அவனால எங்கயும் வாழமுடியிது. அதனாலதான் மனுசனத்தவிர மத்த உயிரெல்லாம் அவனக்கண்டு பயப்படுது. ஓடுது. ஒதுங்குங்குது. இது மனுசனோட உலமே இல்லசார். அப்படியாயிருந்தா அவனோட மத்த உசிரெல்லாம் உரிமையா அவனோட வாழ்க்கையில பங்கெடுத்திருக்கும். முடியல. அது முடியாதுன்னுதான் தோணுது சார்.

சுபந்ரவன் : மனுசனுக்கு மனுசனே இப்படிச்சொல்ல நேர்றத என்னன்னு சொல்றது காரியாலுகா ? நேத்தியிருந்தவன் நண்பனாட்டம் தெரிஞ்சான். இன்னிக்கு அவன் எதிரியாயிடரான். அவனப் பாத்து அந்த மிருகங்க மாதிரி ஓடுறோம். ஒளியறோம். இத என்னால புரிஞ்சக்கவே முடியல காரியாலுகா ?

கரியாலுகர் : எதப்புரிஞ்சிக்கனும் நெனக்கிறீங்க. இங்க எதுவும் புரிஞ்சிக்கற அளவுல இல்ல. எல்லாம் புதுமையா இருக்க.

மாற்றியன் : பழகினதும் புதுசா காலம் மாறிச்சின்னா புதுசுன்னு தெரியறதுதான்.

கல்குள்ளி : பழசுன்னு ஒன்னுமே இல்லல்ல இல்லிங்களா. எல்லாமே புதுசு. நேத்தி இவருக்கு நண்பனா இருந்தவன் இன்னிக்கு வேறஒருத்தனா மாறியிருக்கற புதுசு மாதிரித்தான். எதையும் போட் டோ மாதிரி ணியடிச்சி மாட்டி அழகு பாத்துக்கிட்டே இருக்க முடியாது சார். அப்படி நீங்க போட்டோதானன்னு நெனச்சி மாட்டினாலும் அந்த போட்டோவும் கணத்துக்கு கணம் வெவ்வேற விதமான மாறி, பாதிப்ப ஏற்படுத்தும் சார்.

யக்ஞப்பன் : இங்க நீங்க எல்லோரும் பேசிக்கிட்டிருக்கறத பாத்தா பனுவலாரன் செய்தியாலன்னு நெனக்கிறேன். உண்மையா ?

மாற்றியன் : மாம். இன்னேரம் எல்லாருக்கும் இந்த செய்தியப் பத்தியான யோசன குடஞ்சிக்கிட்டே இருக்கும். பனுவலாரன் சரியானத எழுதியிருக்காணா, இல்ல… திடார்னு ஏதாவது பல்டி அடிக்கிறானான்னு தெரியல. னா. அவன் இப்படி செய்வான் நான் நெனக்கில. பாருங்களேன். இந்த செய்திய.

(நால்வரும் மாற்றியனின் தினசரியையும் சுபந்ரவனின் செய்தியையும் இரண்டிரண்டு பேராகப் பிரிந்து படிக்கிறார்கள். அவர்களில் தாதிக்குரவன் சப்தமாக)

தாதிக்குரவன் : சிறையில் ஒரு வெள்ளைப்புறா.

யக்ஞப்பன் : சிறையெலாரு வெள்ளப்புறாவா ?

தாதிக்குரவன் : அதான் கோட்புழுதி. கோட்புழுதிதான் வெள்ளப்புறா. வெள்ளயடிச்சிக்கிட்டப் புறா. மேல படிக்கிறன் கேளு. கொலை கற்பழிப்புக்குற்றவாளி என்று சிறைப்படுத்தப்பட்டு விசாரணையில் இருக்கும் கோட்புழுதி இன்றோடு சிறையில் இரண்டுவாரமாக இருந்தும் குற்றம் நிரூபிக்கப்படவில்லை. சாட்சிகள் சரியானபடி பதிலளிக்க முடியாமல் கோர்ட்டில் திணறுகிறார்கள். இதனால் அந்த சாட்சிகள் யாவும் ேஐாடிக்கப்பட்ட சாட்சிகளாகவும் குற்றமும் ேஐாடிக்கப்பட்டதுமாக தோன்றுகிறது. கோட்புழுதியை பழிவாங்கும் பொருட்டு, அவரது செல்வாக்கை சீரழிக்கவேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு யாரோ வேண்டுமென்றே போட்ட பொய்வழக்கு எனும் தோணலை மக்களுக்கு ஏற்படுத்துக்கிறது. (சில வரிகள் வார்த்தைகளற்ற வெவ்வேறு ஒலிகளால் கடந்துவிட்டு) கையால் இந்த வழக்கில் குற்றம் சாற்றப்பட்டு சிறையில் இருக்கும் கோட்புழுதி வெகுவிரைவில் வெளிவர வாய்ப்பு இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மாற்றியன் : நானும் படிச்சேன் இந்த பகுதிய. யாரு நம்பத்தகுந்த வட்டாரம் ? எந்த சாட்சி சரியா சொல்ல ? அவசரமா எதுக்கு முடிக்கணும் பனுவலாரன் எதிர்பாக்கிறான் ? என்னவோ எங்கயோ தப்பு நடக்குறதா தோணுதுப்பா. னா எங்கன்னுதான் தெரியல. அதனாலதான் சொன்னேன் இந்த உலகத்தல என்னப்போல, மனுசனுங்க யாரும் வாழமுடியலன்னு.

யக்ஞப்பன் : போங்க நீங்க வேற. நீங்கன்னு இல்ல. உங்களமாதிரி இருக்கறவங்கதான் நெரையா. னா இந்த கோட்புழுதி மாதிரியும் பனுவலாரன் மாதிரியும் ஒருத்தர் இரண்டுபேர்த்தான் இருக்காங்க. அவங்கதான் அத்தன பேரையும் பயமுறுத்தி ஒரு வலைக்குள்ளாறயே வச்சிருக்கானுங்க. நாமும் அதுக்குள்ள பயத்தோட சுத்தி சுத்தி வற்ரோம்.

சுபந்ரவன் : இல்ல அன்னைக்கு நாங்க கோட்புழுதிய பின்னுபின்னுன்னு பிண்ணினோம். இன்னிக்கு பனுவலாரன் கோட்புழுதிய பத்தி இப்படி எழுதியிருக்கான். அதான் யோசிக்கிறோம்.

இருளிடியான் : பயமா ?

மாற்றியனும் சுபந்ரவனும் ஒன்றாக: பயமில்ல. (இருவரும் ஒருவரையொரு பார்த்துவிட்டு மீண்டும் ஒருத்தர் சொல்ல நினைத்து இருவருமாக சேர்ந்து) பயமில்லாம் ஒண்ணுமில்ல.

சுபந்ரவன் : கோட்புழுதி வழக்கு நெனச்சமாதிரி போகாம திசை மாறுமோன்னு ஒரு தோணல் அவ்ளோதான்.

(எல்லோரும் சிறிது அமைதியாக இருக்க மேடையில் ஒளி மெல்ல குறைந்து மீண்டும் கூடுகிறது. அங்கே கரியாலுகர் இருளிடியான் யக்ஞப்பன் தாதிக்குரவன் கியோர் யாருக்காகவோ காத்திருப்பதைப்போல் காத்திருக்கிறார்கள். அப்போது)

கரியாலுகர் : ரெண்டு நாளா ஒண்ணும் தெரியலியே. கோட்புழுதியக் கூட வெளியிலக் காணோம். அவனப்பாக்க வர்றவங்க. எப்ப வர்றாங்க எப்ப போறாங்கண்ணும் தெரியமாட்டேங்குது. என்ன தான் நடக்குது. அவன வெளியில விட்டுட்டாங்களா. ஏய் அங்க பாரு அட, என்ன அது. பகல்லயே இப்படி இருட்டிக்கிட்டுவருது ஏன் காத்து ஒரு மாதிரியிருக்கு. மூச்சு முட்டுத்துப்பா எய்ய்… ஏய்…

(அனைவரும் அவனைப்போல விநோத சூழலை உணர்ந்து மேடைக்குள் அங்குமிங்குமாக சுற்றியலைந்து இறுதியாக வெளியேறிவிடுகின்றனர். மேடையில் ஒளி மெல்ல குறைகிறது. மீண்டும் ஒளி மீண்டும் மேடைக்குள் வர கைதிகள் அவர்களது மைய மேடைத்தளத்திலும் மாற்றியன் மற்றும் சுபந்தரவன் இடது மேடைத்தளத்திலும் நான்கு பொதுமக்களான கல்குள்ளி பசுபாதி மரவேல் சக்காமர் கியோர் இடது மேடைத்தளத்திற்கு அருகேயும், விரிவினி காட்பினார் நீதிபதி கியோர் இடதுமேடைத்தளதிலும் இருக்க)

நீதிபதி : க, இந்த வழக்கின் பல சாட்சியங்களின் வாக்குமூலங்களின் படியும், கோட்புழுதியைச் சார்ந்த அமைப்பினரே கோட்புழுதிக்கு எதிராக முன் வந்து அவனின் கொடூரமான செயல்களையெல்லாம் பட்டவர்த்தனமாக்கியதின் படியும், கோட்புழுதியே பல சந்தர்ப்பங்களில் கொலையில், தான் சம்பந்தப்பட்டிருப்பதை உறுதிசெய்யும் விதமாகக்கொடுத்த பதில்களின் அடிப்படையிலும், கோட் புழுதியைக் குற்றவாளி என இந்த மன்றம் ஒப்புக்கொண்டு, அவருக்கு அதிகபட் சமாக யுள் தண்டனை வழங்குகிறது. பொதுவாழ்வில் ஈடுபடுவர்கள் குற்றம் செய்தால் அது மக்களை எந்தளவிற்கு பாதிக்கும் என்பதையும், மக்களின் நன்னெறியை கேலிக்கூத்தாக்குவதாக கோட்புழுதி விளங்கியது போல், இனி ஏற்படாமல் இருக்க அனைவரும் இந்தவிதமான சமூகவிரோதிகள் வெளிவருவதை முலையிலேயே கிள்ளி எறிய அரசுக்கு உதவவேண்டும் என கேட்டுக்கொண்டு, இந்த வழக்கு முடிந்தது என அறிவிக்கிறேன்.

(நீதிபதி வெளியேற அவரைத்தொடர்ந்து இரண்டு வழக்குரைஞர்களும், பின்னால் கோட்புழுதி இரண்டு காவல்களைத் தொடர்ந்து வெளியேறிவிடுகிறார்கள். அப்போது மேடைக்குள் பனுவலாரன் வருகிறான். அவனைக் கண்டதும். கல்குள்ளி ஓடோடி வந்து அவனைக் கட்டியணைத்துக்கொண்டு.)

கல்குள்ளி : என்னமோன்னு நெனச்சிட்டோம்பா. உன்ன. முந்தா நாள் கோட்புழுதிய துாக்கிப்பிடிச்சி எழுதி மறுநாள் அவன அப்படியே கவுத்தியே. நீ சாமர்த்தியசாலி தான்பா. உன்ன எப்படி பாராட்றது. வா. உனக்கு எங்க ஊர்ல பெரிய பாராட்டு விழா எடுத்துட்றோம்.

(அவன் பனுவலாரனை பாராட்டிக்கொண்டிருக்கும் போது மற்றவர்கள் வந்து பனுவலாரனைப் பாராட்டுக்கிறார்கள். இப்படியாக ஒவ்வொருவரும் வந்து அவனைப் பாராட்டிவிட்டுச் சென்றதும் மேடையில் ஒளி குறைகிறது.)

காட்சி -9

மீண்டும் மேடைக்குள் ஒளி வர. அங்கே மேடையின் மையத்தில் பனுவலாரன் மட்டும் அமர்ந்திருக்கிறான். பின்னரங்கில் மெல்லிய இசை. அழுத்தமான இசை. நேரமாக நேரமாக ஏதோ ஒருவித மோன நிலைக்குள் தள்ளிவிடுபடியான இசை. இசை ஒலித்துக்கொண்டே இருக்கிறது. சிறிது நேரத்தில் பனுவலாரன் மெல்ல எழுந்து பார்வையாளர்களிடம் வந்து)

உங்களோட நான் கொஞ்சம் பேசனும். நான் யாருன்னு இங்க வந்துபோன… என்னோட பேசினவங்கள வச்சித் தெரிஞ்சிக்கிட்டிருப்பீங்க. நான் பத்திரிக்கக் காரன்தான். னா என்கிட்ட உள்ள ஒரே கெட்ட குணம். நான் நெனக்கிறத எழுதறதுதான். அததான எல்லாரும் ரசிக்கிறாங்க. ரசிக்க ரசிக்க விசத்த வித்துக்கிட்டே இருக்க வேண்டிய நிர்பந்தத்தால தான் இப்ப நான் வாழ்ந்துகிட்டு இருக்கேன். ஒரு கொலை ஒரு கற்பழிப்பு கொஞ்சம் சினிமா கொஞ்சம் கிசுகிச இதனால்லாம் வாழ்க்கையினோட தரம் ஒசந்திடறதா எனக்கே நம்பிக்க இல்ல. னா செய்யவேண்டிய நிர்பந்தத்த ஏற்படுத்திட்டாங்க. இல்ல ஏற்படுத்திக்கிட்டேன். னா ஒரு கட்டத்துல இந்த கோட்புழுதிய எப்படியாவது சிறையில அடச்சிடனும் கங்கணம் கட்ட வேண்டியதாயிட்டது. எப்படியென்றால் அது கோட்புழுதியினோட ணவத்தால. அவன் என்ன, கேவலமா ஒரு வார்த்த சொல்லிட்டான். நீ சாதாரண மூணாந்தர பத்திரிக்கக்காரன்தான்டா போடா போன்னு. விடுவனா. விடலியே. அததான் நீங்க பாத்தீங்களே. னா முதல்ல அவனப்பத்தின உண்மைகள சேகரிச்சு அவனுக்கு எதிரா எழுதி, அடுத்து அவனுக்கு தரவா எழுதினேன். அப்படி அவனுக்கு நான் தரவா இருந்தப்போதான் அவன் எங்கிட்ட சில உண்மைகளை சொல்ல நேர்ந்தது. அதவச்சித்தான் மேற்கொண்டு கடுமையா அவன் தப்பிக்கவே முடியாத அளவுக்கு திட்டம் போட்டு அவன் உள்ளப்போக காரணமாயிருந்தேன். இது சரிதானுங்கள. இதுதாங்க. உண்மை. இது பனுவலாரங்கர பத்திரிக்கக்காரன் சொல்ல உங்களோட குரலா உங்ககிட்ட உங்க மனசோட பேசறன். இத நான் பேசலன்னா நான் இன்னைக்கு நிம்மதியா துாங்கமுடியாது. அதனால தான். வரட்டுங்களா.

(என சொல்லிவிட்டு அவன் சென்றுவிடுகிறான். மீண்டும் ஒளி குறைகிறது.)

காட்சி -10

சிறிது நேரத்திற்குப்பின் பின்னரங்கிலிருந்து மெல்ல வண்டிகள் மேடையை நோக்கி வருவதைப்போன்ற ஒலி. கூடவே சில குரல்கள். பின் பல குரல்கள். வண்டிகள் மேடையை நெறுங்கியதும் பின்னரங்கிலிருந்து குரல்கள் புரியும்படிக் கேட்கிறது.

குரல் 1: இப்படியும் நடக்குமா ?

குரல் 2: இது அடுக்குமா. இப்படிப்பட்டவரை . . . இப்படி . . .

குரல் 1: அதுவும் இந்த வண்டியில்.

குரல் 2: யாரு போகவேண்டிய வண்டி யாரு போராப்பாரு.

குரல் 1: எனக்கு என்னமோ பெருசா தோணல.

குரல் 2: எந்த புத்துல என்ன பாம்பு இருக்கோ யாருக்குத் தெரியும். இப்படா ஏதாவது நடந்தா தான் நாம் பாம்புக்காட்டுல வாழுறோம்னு தோணுது.

குரல் 1: இருந்தாலும். . .

குரல் 2: தப்பு இப்பெல்லாம் பகிரங்கமா தெரியிது. படிக்கிறாங்கல்ல. . .

குரல் 1: இறங்கிறாரு இறங்கிறாரு.

குரல் 2: எப்பயயோ இறங்கியாச்சு.

குரல் 1: இல்ல வண்டிலதான் இருக்காரு.

குரல் 2: யாரு வண்டில இருக்கான்னு பாரு. ஒரு முறை ஒருத்தர ஒரு இடத்துல பாத்துட்டா அவரு அங்கேயே தான் இருப்பார்ன்னு கண்ண மூடிக்கிட்டு சொல்லிடக்கூடாது.

குரல் 1: யாரு நீ. உன் கிட்டயா நான் கேட்டேன்.

குரல் 2: உன் கிட்டயா நான் சொன்னேன்.

குரல் 1: தோ தோ அந்தாப்ல போறாரு.

குரல் 2: மா பின்பக்கமா கூட்டிட்டுப்போறாங்க.

(குரல்கள் பேசிக்கொள்வது சப்தமாகக் கேட்டு பின் மெல்ல ஒலிகுறைந்து முற்றிலுமாக மறைந்துவிட, மேடைக்குள் தாதிக்குரவன் வேகவேகமாக ஓடிவருகிறான். மேடையினைச் சுற்றி மற்றவர்களைத்தேடி அங்குமிங்குமாக அலைந்து பிறகு பின்மேடைக்குள் சென்று மறைய இருளிடியான் ஓடிவருகிறான். அவனும் அவ்வாறே தேடிக்கொண்டிருக்கையில் யக்ஞப்பன் மெல்ல நடந்தவாரே தேடிக்கொண்டு வருகிறான். யக்ஞப்பன் இருளிடியானைக் கண்டதும்.)

யக்ஞப்பன் : இருளிடியா என்னடா இது ?

இருளிடியான் : அதாண்ணே எனக்கே ச்சர்யமா இருக்கு.

தாதிக்குரவன் மீண்டும் மேடைக்குள் அவசரஅவசரமாக ஓடிவந்து மற்ற இருவர்களைப் பார்த்து

தாதிக்குரவன் : அப்பாடி. இங்கதான் இருக்கீங்களா. பனுவலாரனக் கைதுபண்ணிட்டாங்களாம். தெரியுமா.

(கரியாலுகர் வலது மேடையிலிருந்து நுழைந்தவாறே)

கரியாலுகர் : அப்பன்னா அவ்ளோதான். நாமல்லம் அவ்ளோதான்.

இருளிடியான் : என்ன சொல்றீங்க.

கரியாலுகர் : அவரக் கைதுபண்ணிட்டா அவரோட கூட்டாளிங்கள எல்லாமில்ல புடிச்சிடுவாங்க.

தாதிக்குரவன் : நீங்க அவரோட கூட்டாளியா.

கரியாலுகர் : இல்லியா பின்னே. அவர் கோட்புழுதிய கைது பண்ணறதுக்கு கோட்புழுதிய நம்மல விட்டு வேவுபாக்கச்சொன்னரே. ஞாபகமில்லியா. மறந்துட்டியா.

தாதிக்குரவன் : துயில்ல. அவர அதுக்காக புடிக்கலையாம்.

கரியாலுகர்: வேற எதுக்காம்.

தாதிக்குரவன் : சொல்றேன். சொல்றேன்.

யக்ஞப்பன் : கைதானதுதான் எங்களுக்கும் தெரியும். அதப்பத்தி விளக்கமா தெரியாது. தாதிக்குரவா நீ சொல்லு. னா புரியும்படி நிறுத்தி நிதானமா சொல்லு.

தாதிக்குரவன் : சொல்றேன்ணே. பெரிய கதைண்ணே அது. நீங்கள்ளாம் நம்ப மாட்டாங்க. நாங்கூட முதல்ல நம்பல. சாட் சிய கண்ணாலப் பாத்ததும் தான் நம்பினேன். கொடுமன்னே. பனுவலாரன் வீட்ல எல்லாரும் விசத்துக்குடிச்சிட்டு ஒட்டுமொத்தமா தற்கொலை செஞ்சிக்கிட்டாங்க தெரியுமா ? இவன் அப்படி செஞ்சிருக்கவே கூடாதுண்ணே. எப்படித்தான் மனுசனுக்கு இப்படியெல்லாம் புத்தி வருதோ. காசு பணத்துக்காக இப்படி பெத்தவங்களும் கூட பொறந்தவங்களையும் காவுகொடுப்பானா எவனாவது. அப்புறம் அவன் சம்பாதிச்சது எதுக்கு. சொல்லுங்க பாப்போம்.

இருளிடியான் : உண்மையாவா. பனுவலாரனா அப்படி.

தாதிக்குரவன் : அவன் தான் அப்படி. நாமல்லாம் ஒண்ணுக்கும் லாயிக்கில்லன்ணே. அவன் படுபயங்கரமான ள். தெரியுமா கோட்புழுதியவிட படுபயங்கரமான விசம் அவன் தான்.

யக்ஞப்பன் : அதுசரி. அவங்கல்லாம் தற்கொலை பண்ணிக்கிடதுக்குக் காரணம் ?

தாதிக்குரவன் : பனுவலாரன் தான்.

யக்ஞப்பன் : எப்படி ?

தாதிக்குரவன்: பனுவலாரன் புத்திசாலி. காரணம். அவனோட அப்பனாத்தாங்களும், அவன் வளர்ந்த சூழலும். அவங்க எல்லோரும் நல்லவங்க. காசுபணத்துக்காக யாருக்கும் கொடும செய்யமாட்டாங்க. அவங்களோடு நேர்மையான ஒழைப்புக்கு எவ்வளவு கெடைக்கிதோ அதவச்சிக்கிட்டு கெளரவமா ஊர்ல எல்லாரும் மதிக்கறமாதிரி வாழ்ந்தாங்க. பனுவலாரனும் அப்படித்தான். அவனோட புத்திசாலித்தனுக்காக அவன் கடகடன்னு மேல வந்துகிட்டு இருந்தான். அப்பத்தான் இந்த கோட்புழுதியோட கைதுவிவகாரம். கோட்புழுதிய எப்படியும் தண்டன வாங்கவச்சேத் தீர்வேன்னு சொல்லி முழுமூச்சா ராவுபகலு பாக்காம செய்தி சேகரிச்சு, பரபரபாக்கி சிறைக்குள்ள போகக் காரணமா இருந்தான். அப்புறம் கோட்புழுதியத்தான் நம்ம எல்லோருக்கும் தெரியுமே. அவன் முன்னாடி யாரு இருந்தாலும் அவன கோட்புழுதி தனக்குச் சாதகமா ஏதாவது செய்ய வச்சி அனுபவிப்பான்னு. அது பனுவலாரனுக்கும் தெரியும். அப்படியொருநாள் கோட்புழுதி பனுவலாரன முயற்சி பண்றப்ப, பனுவலாரன் கோட்புழுதிய தன்வசப்படுத்திட்டான். பனுவலாரன் சொல்றத கேட்கற நிலமைக்கு கோட்புழுதியும் மாறிட்டான். அப்பத்தான் முதமுறையா பனுவலாரன் கோட்புழுதிய பத்தி புகழ்ந்து அவன் வெளியவரணும்னு சொல்லி தினசரியில எழுதறான்.

கரியாலுகர் : எப்படிப்பா அப்படி ஒரு பல்டி அடிக்க முடியும்.

தாதிக்குரவன் : பணம். பணந்தான். கோட்புழுதி பனுவலாரனுக்கு நெறைய பணம்கிடைக்க ஏற்பாடு செஞ்சான். பனுவலாரன் மறுநாளே புகழ்ந்து தள்ளிட்டான். எவ்வளவுக்கு அவன் புகழ்ந்து தள்ளினானோ அந்த அளவு கோட்புழுதியோட சொத்து கரஞ்சிது. கோட்புழுதியோட எல்லா சொத்தையும் காலி செஞ்சிட்டான் பனுவலாரன் ஒரே நாள்ல. எல்லாத்தையும் தன் பேருக்கு மாத்திக்கிட்டான். பனுவலாரன் கிட்ட ஏது இவ்வளவு பணம்னு அவனோடு குடும்பத்தல கேக்கும்போது அவன் எல்லாத்தையும் சொன்னானாம். அதே சமயம் இன்னொன்னையும் சொல்லியிருக்கான். இப்ப என்ன, கோட்புழுதிக்கு எதிரானவங்க வெல பேசறாங்க. நான் அவன் கிட்டேயிருந்து பணத்த வாங்கப்போறன். எப்படித்தெரியுமா ? இன்னிக்கு கோட்புழுதிகிட்டேர்ந்து பணத்த வாங்கிக்கிட்டு அவன புகழ்ந்த மாதிரி நாளைக்கு அவங்ககிட்ட பணத்த வாங்கிககேிட்டு கோட்புழுதிய அழிக்கிறதுக்கு. கோட்புழுதிய பத்தி நாளைக்கே கேவலமாக எழுதி. இன்னும் பல சாட்சியங்கள அறிமுகப்படுத்தி அவன, தண்டனைய நாளைக்கே வாங்கிடற அளவுக்கு. இதக்கேட்ட அவனோட குடும்பத்தாரு எப்டியோ பழி வரப்போவது அதுக்கு முன்னாடி போய்ச் சேந்துடுவோம்னு போய் சேந்துட்டாங்க. சும்மா இல்ல. பனுவலாரன பத்தி ஒரு பெரிய கடுதாசிய எழுதி காவல் துறைக்கு அனுப்பிவிட்டு.

(பின்னரங்கிலிருந்து குரல்கள்)

அடப்பாவி. நீயும் மனுசனா.

சீ சீ

உன்னல்லாம் நம்பினோமடா.

சீ சீ.

(குரலொலிகள் அடங்க, மேடைக்குள் பனுவலாரனை மாற்றியனும் சுபந்ரவனும் அழைத்து வருகிறார்கள். மைய மேடைக்கு வந்து அவனது கைவிலங்குகளை அகற்றிவிட்டு, அந்த நிசப்தத்தை விரட்டும்விதமாக மாற்றியன் பனுவலாரனைப் பார்த்து)

க்ற்ற்ற்ற்த்துா . . . . சீ . . . சீ . . . . மனுசனாடா நீ. க்ற்ற்ற்ற்த்துா . . . . (என பனுவலாரன் முகத்தில் காரியுமிந்ததும் அவன் தன் முகத்தை மூடிக்கொள்கிறான். மேடையில் ஒளி மெல்லக்குறைகிறது.)

திரை

அரியநாச்சி, பாண்டிச்சேரி

ariyanachi67@yahoo.com

Series Navigation

அரியநாச்சி

அரியநாச்சி

பிறழ்வு

This entry is part [part not set] of 42 in the series 20030615_Issue

ஆதர்ஷ் ராவ்


நேற்றைய நிகழ்வுகளின் நாளைய விளைவுகள்
என் இன்றைய நிஜத்தை மறைக்கின்றன

சென்றதும் வருவதுமான காலங்களின் பயங்கள்
என் நிகழ்கால நொடிகளை நிறைக்கின்றன

நேற்றைக்கான ப்ராயச்சித்தங்களிலும் நாளைக்கான
ஆயத்தங்களிலும் இதோ இந்த நொடி போயேபோச்சு

காலத்தில் முன்னோக்கியும் பின்னோக்கியும் செல்வதில்
நான் நிகழ்காலத்தில் நிற்பதே இல்லை

நான் பயப்படும் விஷயங்கள் நடப்பதேயில்லை
இருந்தும் பயங்களை நான் விடுவதாயில்லை

பழைய பயங்களகன்று புதிய நம்பிக்கைகள்
தோன்றவில்லை; புதிய பயங்களே முளைக்கின்றன

பயங்களுக்குப் பழகிவிட்டதால் பயமில்லாமல் இருப்பதற்கே
நான் பயப்படத் தொடங்கிவிட்டேன்

சேற்றுக்குள் உழலும் பன்றிபோல பயத்தில்
உழன்றுகொண்டு நிதரிசனங்களை மறுக்கிறேன்

பயச்சுழல்கள் முடிந்து நான் விடுபடுமுன்
என் வாழ்க்கை முழுவதும் தொலைத்திருபேன்

இது அத்தனையும் கேட்டுவிட்டு, உனக்கு
மனச்சிதைவென்று சொல்வீர்களென பயப்படுகிறேன்

itsaadharsh@hotmail.com

Series Navigation

ஆதர்ஷ் ராவ்

ஆதர்ஷ் ராவ்