மரண வாக்குமூலம்

This entry is part [part not set] of 29 in the series 20050422_Issue

ஜோசப்


கோவில் தர்மகர்த்தா ஏகாம்பரம் வீடு என்றால் அந்த ஊரில் தெரியாதவர்களே இல்லை.

ஆகவே, சிதம்பரம் பஸ்சிலிருந்து இறங்கி ஊருக்குள் நுழைந்து அவருடைய பெயர் சொல்லி விசாரித்தபோது அவனை எல்லோரும் ஏற இறங்க பார்த்தார்கள்.

அதில் ஒருவர் அவனை அதிசயமாய் பார்த்து “நீங்க அவுகளுக்கு என்ன வேணும். உறவா ?” என்று கேட்க

“இல்லையே! ஏன் கேக்கறீங்க ?” என்றான் ஆச்சரியத்துடன்.

“இல்ல.. தர்மகர்த்தாவை பேர் சொல்லி கேக்கறீங்களேன்னுதான்…”

அவனுக்கு சிரிப்பு வந்தது. ஏகாம்பரம் மாமாவைப் பத்தி அப்பா கதை கதையாய் சொல்ல கேட்டிருக்கிறான்.

“ஏகாம்பரம் சின்ன வயசுல ‘கடவுள் இல்லை. கடவுளை நம்பாதே ‘ன்னு பெரியார் கட்சியில சேர்ந்துக்கிட்டு ஊர் ஊரா போய் பிரச்சாரம் பண்ணுவான். ‘கல்யாணம் பண்ணிவச்சாத்தான் படவா உருப்படுவான் ‘னு இழுத்துக்கொண்டு போய் அவனோட அப்பா எந்த நேரத்துல அவனுக்கு கல்யாணத்த பண்ணி வச்சாரோ ஆள் அடையாளமே தெரியாம மாறிப் போயிட்டான்.”

அப்பா ‘மாறி போயிட்டான் ‘னு சொன்னது இதைத் தானிருக்கும் என்று நினைத்துக்கொண்ட சிதம்பரம் ‘தர்மகர்த்தா ‘வின் வீட்டை அடைந்தபோது வீட்டின் முன் ஒரு பெரிய கும்பலே நிற்பதைப் பார்த்து திகைத்து நின்றான்.

“என்ன தம்பி நீங்க யாரைப் பார்க்கணும் ?” தன்னை விசாரித்த வேலையாளை அலட்சியமாய் பார்த்த சிதம்பரம் “தர்மகர்த்தாவைத் தான் பார்க்கணும்.” என்றான் எகத்தாளமாய்.

“நான் அவுக தம்பிதான். நீங்க யாருன்னு சொன்னா தேவலை. அண்ணா பூஜைல இருக்காக. நன்கொடைன்னா கணக்கு பிள்ளைய பார்த்தா போறும்.”

சிதம்பரம் அவரை திகைத்துப் போய் பார்த்தான். ஏகாம்பரம் மாமாவுக்கு தம்பி இருப்பதை அப்பா சொல்லவேயில்லையே. தர்மகர்த்தாவென்றால் பெரிய வசதிபடைத்தவராயிருக்க வேண்டுமே. காவியேறிய சட்டையும் முழங்காலிலேயே நின்றுபோன வேட்டியுமாய் தன் அருகில் நின்றவரை மீண்டும் ஒருமுறை பார்த்தவன், ‘இவர் அவருக்கு தம்பியா ? ‘ என்று யோசித்தான்.

“என்ன தம்பி ஒண்ணும் சொல்லாம…”

“என் பேரு சிதம்பரம். சென்னை பட்டாபி ஐயர் வீட்ல இருந்து வரேன். நான் வர்றத ஏகாம்பரம் மாமாவுக்கு போன் பண்ணி சொல்றேன்னு அப்பா சொன்னார்.”

“ஓ நீங்கதானா அது ? மன்னிச்சிக்குங்க தம்பி. உங்களுக்காகத்தான் அண்ணா காத்திட்டிருக்கார். வாங்க ..” என்று பரபரப்பானவர் அவனை அழைத்துக் கொண்டு வீட்டுவாசலில் குழுமியிருந்தவர்களை ஒரு கையால் ஒதுக்கிவிட்டு உள்ளே போனார்.

தெருவிலிருந்து பார்த்ததற்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாமல் வீடு உள்ளே வெகு விசாலமாயிருந்தது. நடுவில் பரந்து கிடந்த முற்றத்தை சுற்றி நான்கு புறமும் அமைந்திருந்த விசாலமான அறைகளுள் ஒன்றினுள் சிதம்பரத்தை அழைத்துச் சென்று அமரவைத்துவிட்டு வீட்டின் ஒரு மூலையிலிருந்த பூஜையறையினுள் சென்று திரும்பி, “அண்ணா பூஜையில் இருக்கார். ஒரு அஞ்சு நிமிஷம் ஆகும் தம்பி. நீங்க இருங்க. காப்பி கொண்டு வரச் சொல்லியிருக்கேன்.” என்று சொல்லிவிட்டு அவனுடைய பதிலுக்கு காத்திராமல் வெளியே போனவரையே பார்த்த சிதம்பரம் தனக்கு மிக அருகில் கொலுசு சப்தம் கேட்கவே சட்டென்று திரும்பி பார்த்தான்.

மூச்சுக்காற்று தன் மேல் படும் அளவுக்கு நெருங்கி நின்று தன்னையே பார்த்துக்கொண்டிருந்த அந்த இளம் பெண்ணை பார்த்தவன் தன்னையுமறியாமல் எழுந்து நின்றான்.

“என்ன பயந்துட்டாங்களா ? சித்தப்பா, விருந்தாளி வந்திருக்காக, ஒரு காப்பி போட்டு கொண்டு குடுன்னார். நம்ம வீட்டுக்கு வர்ற விருந்தாளி யாருடான்னு பார்க்க வந்தேன். நீங்க உக்காருங்க. காப்பியும் வந்துரும் அப்பாவும் வந்துருவாரு.”

அவனுடைய பதிலுக்கு காத்திராமல் ‘சிலுங், சிலுங் ‘கென்ற கொலுசு ஒலிக்க சென்று மறைந்தவளையே பார்த்துக் கொண்டிருந்த சிதம்பரம் பூஜையறையிலிருந்து வெளியே வந்து தன்னையே பார்த்துக்கொண்டிருக்கும் ‘தர்மகர்த்தா ‘ ஏகாம்பரத்தை கவனிக்க தவறிவிட்டான்.

“வாங்க தம்பி. பயணம் எல்லாம் நல்லபடியா இருந்ததா ?”

திடுக்கிட்டு திரும்பிய சிதம்பரம் அவரைப் பார்த்து ஒரு கனம் என்ன பேசுவதென்று தெரியாமல் விழித்தான்.

“என்ன தம்பி… திகைச்சுபோனா மாதிரி இருக்கு ? சிவந்தி ஏதும் குத்தலா சொல்லிட்டாளா ? அவ விளையாட்டுத்தனமா ஏதாவது சொல்லியிருந்தா மனசுல வச்சிக்காதீங்க.. தாயில்லாப்பெண். கொஞ்சம் செல்லம் குடுத்துட்டேன்…”

ஏகாம்பரம் முற்றத்தின் குறுக்கே கடந்து எதிர் சுவரில் தொங்கிக்கொண்டிருந்த முக்கால் கை சட்டையை அணிந்துக்கொண்டு அவனெதிரிலிருந்த சாய்வு நாற்காலியில் அமர்ந்து அவனையும் அமருமாறு சைகை காண்பித்தார்.

தன்னெதிரில் வந்தமர்ந்த ஏகாம்பரத்தின் கம்பீரமான தோற்றத்தால் கவரப்பட்டவனாய் என்ன பேசுவதென்று தெரியாமல் சில நொடிகள் தடுமாறிப்போன சிதம்பரம் சுதாரித்துக்கொண்டு அவரைப் பார்த்து அடக்கத்துடன் புன்னகைத்தான்.

“அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை சார். உங்க டாட்டர் திடார்னு வந்து கேட்டதுல கொஞ்சம்…”

அவனுடைய தடுமாற்றத்தை கண்டுகொள்ளாதவராய் உள்ளே திரும்பி குரல் எழுப்பினார். “ஏய் சிவந்தி! ஒரு காப்பி கொண்டுவர இத்தனை நாழியா ? வெரசா வா.. என்ன நீ ?”

உள்புற அறைகளில் ஒன்றிலிருந்த வந்த சிவந்தி அவனை நோக்கி புன்னகைத்தவாறு வந்து காப்பி டபராவைக் கொடுத்துவிட்டு திரும்பி செல்ல அவளை நோக்கி சென்ற தன் பார்வையை வெகு சிரமப்பட்டு தவிர்த்து ஆவிபறக்கும் காப்பி டபராவை அருகிலிருந்த குறு மேசையில் வைத்துவிட்டு ஏகாம்பரத்தை நோக்கி திரும்பினான்.

“அப்பா உங்கள ரொம்ப கேட்டதா சொல்ல சொன்னாங்க..”

“ரொம்ப நன்றி தம்பி. வீட்டுல பட்டாபி அண்ணா, அண்ணி எல்லாரும் செளக்கியம் தானே ?”

“அம்மா காலமாயி ஒரு வருஷத்துக்கு மேல ஆவுது..”

“அப்படியா ? எனக்கு தெரிவிக்கவேயில்லையே ?” சட்டென்று மெளனமாகிப்போன ஏகாம்பரம் அவன் காப்பியை உறிஞ்சிக் குடிப்பதையே பார்த்துக்கொண்டிருந்தார்.

காலி காப்பி டபராவை குறு மேசையில் வைத்துவிட்டு நிமிர்ந்த சிதம்பரம் அவரைப் பார்த்து ஏதோ சொல்ல வந்து தயங்குவதை உணர்ந்த ஏகாம்பரம், “என்ன தம்பி.. சொல்லுங்க. ஏதாவது முக்கியமான விஷயமா வந்தீங்களா ? அண்ணாவும் ஃபோன்ல நீங்க வர்றீகன்னு தான் சொன்னாகளே தவிர என்ன விஷயம்னு சொல்லலே..”

சிதம்பரம் தயக்கத்துடன் அவரை ஏறெடுத்துப் பார்த்தான், “நான் சொல்றதை நீங்க தவறா எடுத்துக்கக்கூடாது..”

“எதுவானாலும் சொல்லுங்க தம்பி.. நான் என்னால முடிஞ்சதுனா செய்யப் போறேன்.. சும்மா சொல்லுங்க..”

சிதம்பரம் தன் தோளில் தொங்கிய துணிப்பையிலிருந்து நான்காய் மடித்து வைத்திருந்த செய்தித்தாள் ஒன்றை எடுத்து பிரித்து அதில் நாற்புறமும் பென்சிலால் வளைத்திருந்த செய்தியை அவரிடம் காண்பித்து அவர் அதைப் படித்து முடிக்கும் வரை அவரையே பார்த்து காத்திருந்தான்.

செய்தியைப் படித்து முடித்து விட்டு எந்த சலனமுமில்லாமல் அவனிடம் திருப்பிக் கொடுத்துவிட்டு எழுந்து நின்ற ஏகாம்பரம் சுவரில் தொங்கிய வெளிர் மஞ்சள் துண்டையெடுத்து தோளில் போட்டுக்கொண்டு அவனைப் பார்த்தார்.

“தம்பி. நீங்க பட்டாபி அண்ணாவோட மகனா வந்துருக்கீங்க. ஒரு ரெண்டு, மூனு நாள் இருந்து ஊரைச் சுற்றி பார்த்துட்டு பட்டணம் போய் சேருங்க. அதான் உங்களுக்கு நல்லது. அத விட்டுட்டு பத்திரிகைல போட்ருக்கறதுக்கெல்லாம் விளக்கம் கேட்டுக்கிட்டு உங்க நேரத்தை வீணாக்காதீங்க. என்ன நா சொல்றது ?”

அவருடையை குரலிலிருந்த முரட்டுத்தனத்தை முற்றிலும் எதிர்பார்க்காத சிதம்பரம் ஒரு கனம் என்ன சொல்வதென்று தெரியாமல் குழம்பி ஒன்றும் பேசாதிருந்தான்.

ஏகாம்பரம் வீட்டினுள் திரும்பி தன் மகளை அழைத்தார். “சிவந்தி, தம்பிக்கு குளிக்க தண்ணி விளாவிட்டு காப்பி பலகாரம் குடு. நா பஞ்சாயத்து ஆஃபீஸ் வரைக்கும் போய்ட்டு வந்திர்றேன்”

சிதம்பரத்தை மீண்டும் ஒரு முறை அமைதியாய் பார்த்தவர் முகத்தில் சற்று முன்பிருந்த கோபம் முற்றிலுமாய் மறைந்திருந்ததை பார்த்து அதிசயித்து போனான். “நீங்க குளிச்சி சாப்டு ஓய்வெடுங்க தம்பி. நீங்க வெளியே எங்காச்சும் போவணும்னா சுடலை வெளியிலேத்தான் இருப்பான். என்னைவிட அஞ்சு வயசு சின்னவன். கல்யாணம் காச்சின்னு ஒண்ணும் பண்ணிக்கலை. ஊர்ல எல்லா எடமும் தெரியும், கோயில் அப்புறம் அத சுத்தியிருக்கற மண்டபம் இதெல்லாம் எந்த ராசா காலத்துல கட்டுனது, எப்ப புதுப்பிச்சதுன்னு எல்லா சரித்திரமும் அவனுக்கு அத்துப்படி. நான் சாயங்காலமா உங்கள பாக்கறேன்.”

வாசல் வரைக்கும் போனவர் அவனை ஒரு முறை திரும்பி பார்த்தார். “அப்புறம் நா சொன்னது ஞாபகமிருக்கட்டும். அனாவசியமா எதப்பத்தியும் கவலைப்படாதீங்க. ரெண்டு நா சந்தோஷமா இருந்துட்டு போங்க. நீங்க வீட்டுக்கு ஒரே புள்ளன்னு தெரியும். அதனாலதான் சொல்றேன்.”

அவர் குரலில் மீண்டும் தொனித்த எச்சரிக்கை அச்சுறுத்த அவருடைய பார்வையைத் தவிர்த்தவாறு எழுந்து நின்று அவர் போவதையே பார்த்துக்கொண்டு நின்றான் சிதம்பரம்.

“அப்பா சொன்னா மாதிரி சுடு தண்ணி காய போட்டிருக்கேன். அதோ அந்த ரூம்ல போய் துணியை மாத்திக்கிட்டு வாங்க.” என்று தன் பின்னால் வந்து நின்ற சிவந்தி காண்பித்த அறையை நோக்கி நடந்தவன் அங்கு தான் கொண்டு வந்த பெட்டி மற்றும் காமிரா அடங்கிய கைப்பை ஆகியவை சுவர் அலமாரியில் வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்தான்.

அவன் பின்னாலேயே அந்த அறைக்குள் நுழைந்த சிவந்தி மின் விளக்கு மற்றும் மின்விசிறி ஆகியவற்றை இயக்கிவிட்டு அறையின் மையத்தில் இடப்பட்டிருந்த கட்டிலை தட்டி சுத்தப்படுத்திவிட்டு தன் மார்பின் குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு அவனைக் குறும்புடன் பார்த்து புன்னகைத்தாள்.

“நீங்க ஏதாச்சும் பத்திரிகைல ரிப்போர்ட்டரா இருக்கீங்களா ?”

பெட்டியை திறந்து தன் வேட்டி, டவலை எடுத்துக்கொண்டு நிமிர்ந்த சிதம்பரம் அவளைக் குழப்பத்துடன் பார்த்தான். “ஏன் கேக்கறீங்க ?”

“இல்ல காமிரா, செய்தித்தாள் சகிதமா வந்திருக்கீங்களே. அதான்..”

“உங்க அப்பா கிட்ட பேசுனத ஒட்டு கேட்டிட்டிருந்தீங்களா ?”

“ஆமான்னு வச்சுக்கங்களேன்..”

“அது தப்பில்லையா..”

அவன் குரலில் ஒலித்த கேலியை கண்டு கொள்ளாதவளாய், “இதுல என்னங்க தப்பு ? நீங்க ஒண்ணும் ரகசியமா பேசலையே. அதுவுமில்லாம இந்த பழங்கால வீட்டுல கூடத்துலருந்து பேசினா எல்லா ரூமுக்கும் ஸ்பஷ்டமா கேக்கும். சொல்லுங்க நீங்க எந்த பத்திரிகைலருந்து வந்துருக்கீங்க ?”

“நான் ஒரு ஃப்ரீலான்சர். சமூகத்துல நடக்கற அவலங்கள அலசி எழுதி எந்த பத்திரிகை அதை வெளியிடுவாங்கன்னு தோனுதோ அதுக்கு அனுப்புவேன். அது வெளி வர வரைக்கும் எத்தனைப் பத்திரிகைக்கு அனுப்பணுமோ அத்தனைக்கும் அனுப்பிக்கிட்டேயிருப்பேன்.” சிதம்பரம் தன் பர்ஸிலிருந்த விசிட்டிங் கார்டில் ஒன்றையெடுத்து அவளிடம் நீட்டினான்.

‘சிதம்பரம் எம்.ஏ., ஜர்னலிஸ்ட் ‘ என்று மெல்லிய குரலில் அதை வாசித்த சிவந்தி அவனைப் பார்த்து குறும்புடன் புன்னகைத்தாள்.

“சபாஷ். இப்போ எதுக்காக இங்க வந்திருக்கீங்க ?”

“அதான் ஒட்டு கேட்டாங்கல்ல ?”

“நான் அப்பா சொன்னதைத்தானே கேட்டேன் ? நீங்க அப்பாகிட்ட காண்பிச்சதை பாக்கலையே ? அதைக் காண்பிங்க, படிச்சிட்டு உங்க விசிட் சக்ஸஸ் ஆகுமா இல்லையான்னு சொல்றேன்.”

வேண்டாம் என்று தலையை அசைத்த சிதம்பரம், “இங்க குளிக்க பாத்ரூம் இருக்கா, இல்ல..”

அவனுடைய நிராகரிப்பை பெரிதுபடுத்தாத சிவந்தி அவன் முன்னால் நடந்து கொல்லைப் புறத்திலிருந்த வாணம் பார்த்த குளியலறையை காண்பித்துவிட்டு, “குளிச்சிட்டு வாங்க தோசை வார்த்து வைக்கறேன்” என்றவாறு சமையலறையுள் நுழைந்தாள்.

அவன் குளித்துவிட்டு வந்து கூடத்திலிருந்த இருக்கையில் அமர சிவந்தி கையில் இலையுடன் வந்து, “சமையல்கட்டுல ஒரு சின்ன மேசையிருக்கு. அதுல சாப்பிடறீங்களா, இல்ல இங்கேயே பாய் போடவா ?” என்றாள்.

“உங்களுக்கு டிஸ்டர்பன்ஸ் இல்லைனா சமையல் கட்டுலயே இலையை போடுங்க.”

அவளைத் தொடர்ந்து நுழைந்தவன் சகல வசதிகளுடன் பளிச்சென்றிருந்த சமையலறையைப் ஆச்சரியத்துடன் பார்த்தான்.

“வாவ்.. சூப்பரா வச்சிருக்கீங்களே. இந்த வீட்டுக்குள்ள இத்தனை அல்ட்ரா மாடர்ன் கிச்சனா ? அதுவும் இத்தனை க்ளீனா.. குட். ஐ ஆம் இம்ப்ரஸ்ட்.”

அவனைப் பார்த்து முதல் முறையாய் வெட்கத்துடன் புன்னகைத்த சிவந்தி, “தாங்க்ஸ்” என்றாள்.

சமையலறையின் ஓரமாய் இருந்த அந்த சிறிய மேசையருகிலிருந்த மர நாற்காலியில் அமர்ந்து சிவந்தி சுடச்சுட பரிமாறிய தோசையும் அவனுக்கு பிடித்தமான தக்காளி சட்டினியும் அவனுடைய பசியைத் தூண்ட வழக்கத்திற்கு மேலாகவே சாப்பிட்டுவிட்டான்.

“பரவாயில்லையே. சிட்டியிலருக்கறவங்க டையட்டுன்னு சொல்லிக்கிட்டு காலைல ஒண்ணும் சாப்பிடாமயே வயித்த காயப் போட்டுடுவாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன். நீங்க அதுல சேத்தியில்லையோ. ரொம்ப நாள் கழிச்சி என் சமையலை ருசிச்சி சாப்பிட ஒரு ஆள் கிடைச்சது எனக்கு ரொம்ப சந்தோஷம். தாங்க்ஸ். சொல்லுங்க, மதியத்துக்கு என்ன சமைக்கட்டும் ?”

அவள் தன்னை கேலி செய்கிறாளோ என்ற ஐயத்துடன் அவளைப் பார்த்த சிதம்பரம், “ஐயோ. அதெல்லாம் ஒண்ணும் வேணாங்க. நேத்தைக்கு ஏழு மணிக்கு வழியில சாப்பிட்டது. அதான் கொஞ்சம் அதிகமா..” என இழுக்க..

சிவந்தி கலகலவென உரக்க சிரித்தாள்.

“அதாவது பசியில ருசியெல்லாம் யார் பார்த்தான்னு சொல்றீங்க.. அப்படித்தானே..”

“சேச்சே. அப்படி சொல்ல வரலீங்க. எனக்கு ரொம்ப பிடிச்ச தக்காளி சட்டினியும் ஒரு காரணம்.”

“ஓகே, ஓகே. நான் தப்பா நினைக்கல. இப்போ சொல்லுங்க. மதியத்துக்கு சாம்பார் வச்சி உருளைக்கிழங்கு பொரியல், சுட்ட அப்பளம், ரசம், மோர்.. போதுமா, இல்ல..” அவளுடைய குரலில் தொனித்தது கேலியா இல்லை கரிசனமா என்று முடிவெடுக்க முடியாமல் அவன் தடுமாறிக் கொண்டிருக்க ஏகாம்பரத்தின் சகோதரர் சுடலைமுத்து சமையலறை வாசலில் வந்து நின்று அவனைப் பார்த்து புன்னகைத்தார்.

“என்ன தம்பி சிவந்தி ஏதாச்சும் வம்பு பண்றாளா ? அவ சமையலைப் போலவே அவளுடைய வம்பும் விசேஷமாயிருக்கும். ரெண்டு நாள்தானே பொறுத்துக்குங்க..”

“என்ன சித்தப்பு நீங்க ? நான் இப்ப என்ன தப்பா சொல்லிட்டேன் ?”

சுடலைமுத்து அவளைப் பார்த்து பாசத்துடன் புன்னகைத்தார். “நா உன்னைத் தப்பா சொல்வேனா. தம்பிக்கு உன் கிண்டல் புதுசில்லையா ? அவர் தப்பா எடுத்துக்கிட்டா ? விருந்தாளியாச்சே.”

சிதம்பரம் சிவந்தி கொண்டு வந்து வைத்த பாத்திரத்தில் கை அலம்பிக்கொண்டு அவள் தந்த கைத்துவாலையை தவிர்த்து தன் கையுலிருந்த கைக்குட்டையால் கைகளைத் துடைத்துக்கொண்டு அவரைப் பார்த்து லேசாய் புன்னகைத்தான். “ நீங்க கவலைப் படாதீங்க. சிவந்தி சொன்னதை நான் தப்பாவே எடுத்துக்கலை. சொல்லுங்க, இந்த ஊர்ல பாக்கறதுக்கு என்ன இருக்கு ?”

“தம்பி நீங்க பட்டணத்துலருந்து வர்றீங்க. நீங்க பார்க்காதது ஒண்ணும் இங்க இருக்கும்னு எனக்கு தோனலை. ஆனாலும் இங்கருக்கற சிவன் கோயில் ரொம்பவும் பிரசித்தமானது. ஆயிரம் வருஷங்களுக்கு மேலாச்சுதுன்னு சொல்லுவா. கோயில ஒட்டி நிக்கற நூறு கால் மண்டபமும் நீங்க பார்க்கணும். ஒவ்வொரு தூணும் ஒவ்வொரு கல். முழுசா கொண்டு வந்து செதுக்கதுன்னு சொல்லுவா. அதையும் பாக்கலாம். மத்தபடி பெருசா இந்த ஊர்ல விசேசம்னு பெருசா ஒன்னுமில்லை.”

அவர் ராகம் போட்டு பேசும் விதம் சிதம்பரத்துக்கு வேடிக்கையாயிருந்தது. ஆனாலும் அவருடைய எளிமை அவனை வெகுவாகக் கவர்ந்தது.

அவரைப் பார்த்து சிநேகத்துடன் புன்னகைத்தான். “சரி, சொல்லுவா, சொல்லுவான்னு சொல்றீங்களே, யாரைச் சொல்றீங்க ?”

அவர் வெட்கத்துடன் பேசாமல் தலையைக் கவிழ்ந்துகொள்ள சிவந்தி படபடத்தாள். “பாத்தீங்களா சித்தப்பு, நான் கிண்டலடிக்கிறேன்னு விசனப்பட்டாங்களே, இப்ப பாருங்க இவரு வயசு வித்தியாசம் பாக்காம உங்களையே கிண்டலடிக்கறார்.”

சிதம்பரம் இருவரையும் பார்த்து பொதுவாய் இல்லை என்று தலையசைத்தான். “நோ நோ. அப்படியில்லை. சும்மா தமாஷாத்தான் கேட்டேன். சாரி அங்கிள். வாங்க உங்க கோயிலை பாக்கலாம். வரேன் சிவந்தி.”

“பகல் சாப்பாட்டுக்கு வந்திரணும். சித்தப்பா அவரைக் கண்டிப்பா கூட்டிக்கிட்டு வாங்க.” சிவந்தி சிதம்பரம் அறையிலிருந்த காமிராவை மட்டும் எடுத்துக்கொண்டு போவதைப் பார்த்தாள். கூடவே சென்று வழியனுப்பிவிட்டு திரும்பி வந்தவள் சிதம்பரத்தின் தோள்பை கட்டிலின் மேல் கிடப்பதைப் பார்த்துவிட்டு அவன் மறந்திருப்பானோ என்ற எண்ணத்தில் அதை எடுத்துக்கொண்டு வாசலுக்கு விரைந்தாள்.

ஆனால் சிவந்தி வாசலை அடைந்தபோது இருவரையும் ஏற்றிக்கொண்டு சென்ற டாடா சுமோவின் பின்புறத்தைத் தான் காண முடிந்தது. வாகனம் தெருக்கோடி முனை சென்று திரும்பும் வரை நின்றிருந்துவிட்டு உள்ளே திரும்பினாள்.

அவர்கள் இருவரும் திரும்பி வருவதற்குள் பகலுணவு வேலைகளை முடித்துவிடவேண்டும் என்ற முனைப்போடு சமையலறையை நோக்கி விரைந்தவள் சிதம்பரத்தின் தோள்பையை அவனுடைய அறையில் வைத்துவிட்டு கொல்லைப்புறத்தில் தென்னை ஓலைகளை முடைந்துக்கொண்டிருந்த வேலாயியை அழைத்து சமையலுக்கு தேவையான காய் கறிகளை நறுக்க பணித்துவிட்டு அரிசியைக் களைந்து குக்கரில் இட்டு காஸ் அடுப்பில் வைத்தாள்.

சட்டென்று ஏதோ நினைவுக்கு வந்தவளாய் சிதம்பரத்தின் அறையை நோக்கி ஓடிய சிவந்தி அவனுடைய தோள்பையை துழாவி காலையில் அவன் அவளுடைய தந்தையிடம் காண்பித்த செய்தித்தாளைத் தேடி எடுத்து வெளிக்கூடத்திலிருந்த தன் தந்தையின் சாய்வு நாற்காலியிலமர்ந்து அதைப் பிரித்தாள்.

எடுத்த எடுப்பிலேயே பென்சிலால் வளைத்து ‘ஹெள கேன் திஸ் ஹாப்பன் ? ‘ என்று பெரிதாய் எழுதியிருந்த பகுதியை வாசிக்க துவங்குமுன் வாசலை ஒருமுறை பார்த்தாள். ‘நல்ல வேளை, யாருமில்ல. கடகடன்னு படிச்சிரணும். ஏதோ நம்ம ஊரைப் பத்தித்தான் போலிருக்குது. ‘ என்று தனக்குள் கூறியவாறு வாசிக்க துவங்கியவளின் முகம் படித்து முடித்தவுடன் வெளிறிப் போனது.

படித்து முடித்து வெகு நேரம் வரை சிலையாய் சமைந்து போன சிவந்தியை சமையலறையிலிருந்து வந்த குக்கரின் விசில் ஒலி திடுக்கிட வைத்தது. பரபரப்புடன் எழுந்து சமையலறையினுள் ஓடியவள் சுறு சுறுவென சுழன்று சமையல் வேலையில் ஈடுபட்டாலும் மனம் சற்று முன் செய்தித்தாளில் படித்ததையே சுற்றி வந்தது.

சிவந்திக்கு தன் தாய் மரணப்படுக்கையில் இருந்தபோது தன்னிடம் கூறிய வார்த்தைகள் நினைவுக்கு வந்தன.

சென்னையில் கல்லூரியில் சேர்ந்து ஒரு மாதம் கூட நிறைவு பெறாத நிலையில் தாய் மரண படுக்கையிலிருக்கிறாள் என்று கல்லூரி ஹாஸ்டலில் தன் இளைய தந்தை சுடலை வந்து நின்றபோது அதிர்ச்சியில் உறைந்து போனாள் சிவந்தி.

நல்ல திடகாத்திரமான உடல்நிலையுடன் தன்னை வழியனுப்பி வைத்தவளுக்கு வந்து ஒருமாதம் கூட நிறைவேறாத நிலையில் அப்படியென்ன நேர்ந்திருக்க இயலும் என்று வழி நெடுக அவள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பதிலளிக்க முடியாமல் சுடலை சித்தப்பு தடுமாறியதிலிருந்து ஏதோ விபரீதம் நடந்திருக்கவேண்டும் என்று ஊகிக்க முடிந்தது அவளால்.

வீடுவந்து சேர்ந்தவுடன் நேரே தன் தாயின் படுக்கையறைக்கு சென்றவள் அவளுடைய தோற்றத்தைக்கண்டு முற்றிலுமாய் அதிர்ந்துபோனாள். “என்னப்பா நடந்திச்சி ? ஏன் எனக்கு முன்கூட்டியே சொல்லலை ?” என்று அழுகையுடன் கேட்ட கேள்விக்கு, “எனக்கு ஒண்ணும் தெரியலைடா.. அம்மா எதையோ சாப்பிடக்கூடாததை சாப்பிட்டுட்டான்னு சொல்றார் டாக்டர். ரெண்டே நாள்ல உங்கம்மா இப்பிடியாயிட்டா. நீயே அவ கிட்ட கேட்டு சொல்லு. அவளுக்கு நா என்ன குறை வச்சேன், எதுக்கு இப்படி பண்ணான்னே தெரியலையே. ஊர்ல நா தலை நிமிந்து நடக்க முடியாம பண்ணிட்டாளே ‘ என்று தன் தாயின் உடல்நிலையை விட தன் மானமே பெரிது என்று கூறிவிட்டு அறையை விட்டு வெளியேறிய தன் தந்தையை அதிர்ச்சியுடன் பார்த்தாள் சிவந்தி.

“என்னம்மா சொல்றார் அப்பா ? நீ என்னத்த சாப்பிட்ட ?”

பதில் பேசாமல் தன்னை நோக்கி மகளை இழுத்த சிவந்தியின் தாய் மெல்லிய குரலில், “உங்கப்பா போயிட்டாரான்னு பார். உங்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்.” என்றாள்.

தன் தாயை ஒன்றும் புரியாமல் குழப்பத்துடன் பார்த்தாள் சிவந்தி. “என்னம்மா சொல்றே ? அப்பாவுக்கு தெரியகூடாத அப்பிடி என்ன ரகசியத்தை சொல்லப்போற ?”

“நீ முதல்ல போய் பாத்துட்டு வா. நா ரொம்ப நாழி பேசமுடியாது. சீக்கிரம் போ.”

தன் தாயின் முகத்தில் தென்பட்ட உறுதியைப் பார்த்து கலங்கிய சிவந்தி விரைவாய் வெளியேறி தன் தந்தை வீட்டிலில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு திரும்பினாள்.

“இப்ப சொல்லு. என்ன விஷயம் ?”

தன் தாய் அன்று திக்கித்திணறி கூறி முடித்ததை இப்போது மீண்டும் நினைவுக்கு கொண்டுவந்து பார்த்தாள் சிவந்தி.

அதற்கு பிறகு அவளுடைய தாய் பேசவேயில்லை. தன் மகள் வருவதற்காகவே காத்திருந்தவள் போல் அன்று இரவே மரித்துப்போனாள்.

ஈமச்சடங்குகள் முடியும் வரை தன் தாயின் செய்கையையும் அதற்காக அவள் தன்னிடம் கூறிய காரணத்தையும் தனக்குள்ளேயே பூட்டி வைத்திருந்த சிவந்தி மூன்றாம் நாள் தான் கல்லூரிக்கு திரும்ப முடிவு செய்திருப்பதாக தன் தந்தையிடம் அறிவித்தாள்.

“நீ என்னடா சொல்றே ? எல்லாம் முடிஞ்சி முழுசா மூணு நாள் கூட ஆவலை, யாராச்சும் கேட்டா என்ன சொல்வாங்க ?” என்ற மறுத்த தன் தந்தையை உற்றுப் பார்த்தாள் சிவந்தி.

“நீங்களாப்பா ஊருக்கு பயப்படுறீங்க ? நீங்க யாருப்பா ? இந்த ஊருக்கே தலைவர்! கோயில் தர்மகர்த்தா! உங்க வீட்ல நடக்கறத கேள்வி கேட்க இங்க யாருக்குப்பா தெம்பிருக்கு ?”

“நான் என்ன சொல்லிக்கிட்டிருக்கேன். நீ என்ன பேசறே ?”

“நான் என்ன பேசறேனா ? ஏம்பா அம்மா ஏன் செய்யக்கூடாத காரியத்தை செஞ்சிக்கிட்டான்னு உங்களுக்கு தெரியாது ?”

தன் மகளின் முகத்திலும் குரலிலிமிருந்த கோபத்தைக் கண்ட ஏகாம்பரம் தன் மகளை கைநீட்டி அணைத்துக்கொள்ள முயன்றார். அவர் கைகளைத் தட்டி விட்டு முகத்தை திருப்பிக்கொண்டு பின்னால் நகர்ந்து சென்ற சிவந்தியை பிடித்து தன் பக்கம் திருப்பியவர், “இப்போ எதுவும் கேட்காத சிவந்தி. நீ போகணும் நினைச்சா போ. நா தடுக்கலை. நீயா எதையாவது கற்பனைப் பண்ணிகிட்டு வார்த்தையை வளக்காத. எனக்கு பிடிக்காது.”

தன் தந்தையின் குரலில் இருந்த உறுதியை கவனித்த சிவந்தி இனி அவரிடம் பேசி பயனில்லையென்று தீர்மானித்தவளாய் சுடலை சித்தப்பு தடுத்தும் கேளாமல் தன் கல்லூரிக்கு புறப்பட்டு சென்றாள்.

சரியாய் ஒரு மாதம் கழித்து அவளுடைய கல்லூரி விடுதிக்கு வந்த கடிதம் அவளுடைய தாய் மரணப்படுக்கையில் அவளிடம் கூறியதை உறுதிப்படுத்தியது. அக்கடிதம் யாருடைய கையொப்பமுமில்லாமல் இருந்ததால் அவளால் அதை வைத்துக்கொண்டு ஒன்றும் செய்ய இயலாமல் போயிற்று.

அன்றிலிருந்து அவளுடைய கல்லூரி படிப்பு முடியும்வரை ஊருக்கு செல்வதை அவள் முடிந்தவரை தவிர்க்க துவங்கினாள்.

அவளுடைய இந்த நடவடிக்கை ஏகாம்பரத்தை குழப்பினாலும் அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல் தன்னுடைய இரட்டை வாழ்க்கையை தொடரலானார். தன் அண்ணாவுக்கும் மகளுக்கும் இடையில் ஏற்பட்டுவிட்ட விரிசலை கண்டும் காணாதவராய் காலம்தான் இதை சரி செய்யமுடியும் என்று விட்டுவிட்டார் சுடலைமுத்து. அவருக்கு தன் அண்ணாவின் மறுபக்கம் தெரிந்திருந்தாலும் ஒன்றும் செய்ய இயலாதவராய் மெளனியாய் போனார்.

கல்லூரி படிப்பு முடிந்து வீடு திரும்பிய சிவந்தி தன் தந்தையின் நடத்தையில் ஏற்பட்ட மாறுதலை சித்தப்பு மூலமாக அறிந்து ஆறுதலடைந்து தன் தாயின் மரணத்தையும் அதன் காரணத்தையும் தன் மனதிலிருந்து ஒதுக்கி வைத்துவிட்டு சகஜமாய் வலம் வரலானாள்.

காலத்தின் போக்கில் முற்றிலுமாய் ஆறிப்போயிருந்த ரணம் இதோ இன்று படித்த செய்தி மூலம் மீண்டும் திறந்துகொண்டதை உணர்ந்தாள் சிவந்தி.

சமையலை முடித்துவிட்டு வேலாயியை அழைத்து சமையலறையை சுத்தம் செய்ய பணித்தவள் ஒரு முடிவுக்கு வந்தவளாய் கூடத்தில் வந்து அமர்ந்து சிதம்பரத்தின் வருகையை எதிர்நோக்கினாள்.

அவளை அதிக நேரம் காத்திருக்க வைக்காமல் வந்து சேர்ந்த சிதம்பரம் வரும்போதே அவள் முகத்தைப் பார்த்துவிட்டு தான் போன பிறகு அவள் அந்த செய்தியை வாசித்திருப்பாள் என்பதை உணர்ந்துகொண்டான்.

இருந்தாலும் அதைக் கண்டு கொள்ளாமல் அவளைப் பார்த்து புன்னகைத்தான். “என்னங்க, சாப்பாடு ரெடியா ? உங்க ஊர் வெயில் என் எனர்ஜியை கம்ப்ளீட்டா உறிஞ்சிட்டது. சாப்பிட்டா சரியா போயிடும்னு நினைக்கறேன். வீட்டுக்கு வந்த விருந்தாளி இப்படி கேக்கக் கூடாதுதான். இருந்தாலும் என்ன செய்ய ? சாப்பிடலாமா ?”

அவனைப் பார்த்து அவனுடைய சிரிப்பால் கவரப்பட்டு அவளும் சிரித்தவாறு எழுந்து சமையலறையை நோக்கி நடந்தாள். “சித்தப்பு எங்கே ? உங்க கூட வரலையா ?”

“இல்லீங்க. அவர் கொஞ்சம் வேலையிருக்குன்னு கோயில்லயே தங்கிட்டார். நான் வந்து இறங்கிக்கிட்டு வண்டியை திருப்பி அனுப்பிச்சிருக்கேன். டிரைவர் போய் உங்க அப்பாவை பிக்கப் பண்ணிட்டு அப்படியே போய் உங்க அங்கிளையும் கூட்டிக்கிட்டு வருவார்னு நினைக்கறேன். அவங்க ரெண்டு பேரும் வந்ததுக்கப்புறம் சாப்பிடலாம். அவசரமில்லை.” சிதம்பரம் தன் அறைக்கு திரும்பி உடை மாற்ற ஆரம்பித்தான்.

சிவந்தி சமையலறையிலிருந்த மேசையில் இலையைக் கழுவி போட்டு உணவு பாத்திரங்களை பரப்பி வைத்திவிட்டு அவனுடைய அறை வாசலில் நின்று அவனை அழைத்தாள். “நீங்க வாங்க, நாம சாப்பிடலாம். அப்பா வீட்டுக்கு வந்தாத்தான் நிச்சயம். சித்தப்புக்கு வெத்தலையும், கோயில்ல கிடைக்கற குளிர்ந்த மோருமே போறும். பசிக்கவே பசிக்காது. நாங்க மூணு பேரும் சேர்ந்து சாப்பிட்டு எத்தனையோ மாசமாயிருச்சு.”

“அப்படின்னா ஒகே. நாம கிச்சன்லயே மார்னிங் சாப்பிட்டா மாதிரி சாப்பிடலாம். கை கால் கழுவிக்கிட்டு வந்திடறேன்.”

சிதம்பரம் கைகால் அலம்பிக்கொள்ள கொல்லை பக்கம் செல்ல சிவந்தி சமையலறையிலிருந்த இரண்டு இருக்கைகளில் ஒன்றில் அமர்ந்து அவனுக்காக காத்திருந்தாள்.

“குட். சாம்பார், ரசம்னு வாசம் பயங்கரமா தூக்குதே. இப்ப எனக்கு இறந்து போன எங்கம்மா ஞாபகம் வருது.” என்றவாறு வந்தமர்ந்த சிதம்பரம் அவள் கண்களில் துளிர்த்து நின்ற கண்ணீரைப் பார்த்து திடுக்கிட்டான்.

“என்னங்க ? நான் ஏதாவது தப்பா சொல்லிட்டேனா ?”

சிவந்தி ‘இல்லை ‘ என்று தலையசைத்தாள். “எனக்கும் அம்மா ஞாபகம் வந்திருச்சி, அதான்…. நீங்க சாப்பிடுங்க.”

சிதம்பரம் ஆதரவுடன் அவள் கரத்தைப் பிடித்து அழுத்தினான். “இஃப் யூ டோண்ட் மைண்ட், உங்கம்மா எப்படி இறந்தாங்கன்னு நான் தெரிஞ்சிக்கலாமா ?”

உணவு பரிமாறுவதில் தீவிரமாயிருந்த சிவந்தி வேண்டாம் என்பதுபோல் தலையை அசைத்தாள். “முதல்ல நீங்க சாப்பிடுங்க. அப்புறமா சொல்றேன். எனக்கும் உங்க கிட்ட கொஞ்சம் பேசவேண்டியிருக்குது.”

அவளுடைய உணர்ச்சிகளைப் புரிந்துக்கொண்டவன்போல் சிதம்பரம் மெளனமாய் சாப்பிட்டு முடித்தான். சிவந்தி பாத்திரங்களை ஒதுக்கி வைத்துவிட்டு வரும் வரை சிதம்பரம் தன் இருக்கையிலமர்ந்து காத்திருந்தான்.

“நாம இங்கேயே அமர்ந்து பேசறதுல உங்களுக்கு ஆட்சேபனையில்லேல்லே” கைகளைத் துடைத்தவாறே தன் அருகில் வந்தமர்ந்த சிவந்தியைப் பார்த்து ‘இல்லை ‘ என தலையசைத்தான்.

சிறிது நேர மெளனத்திற்கு பிறகு சிவந்தி அவனைப் பார்த்து, “நா உங்க பேக்லருந்த செய்தித்தாளைப் படிச்சேன். தப்பா நினைச்சுக்காதீங்க.” என்றாள்.

“இட் ஸ் ஓகே. நீங்க படிக்கணும்னுதான் நான் பேக்கை இங்கேயே வச்சிட்டு போனேன். உங்களுக்கு இங்க நடக்கற அசிங்கங்கள் தெரியாதுன்னு நினைக்கறேன். ஆம் ஐ கரெக்ட் ?”

“ஓரளவுக்கு, எஸ்.”

“அப்படான்னா. உங்களுக்கு தெரியும், ஆனா முழுசா இல்ல ? ஈஸ் தட் இட் ?”

“ஆமா.”

“உங்களுக்கு எந்த அளவுக்கு தெரியும்னு நான் தெரிஞ்சிக்கலாமா ?”

“மூணு வருஷத்துக்கு முன்னால அம்மா அவளோட மரண படுக்கைல ஒரு தாய் தன் மககிட்ட இந்த விஷயத்த எந்த அளவுக்கு நாசூக்கா சொல்ல முடியுமோ அந்த அளவுக்கு சொன்னா. அத கேட்டதும் எனக்கு மூர்க்கத்தனமான கோபம் வந்திச்சி. ஆனா சுடலை சித்தப்பு ‘நீ கல்யாணமாகி வேற வீட்டுக்கு போகவேண்டிய பொண்ணு. உங்கம்மாவாலேயே தீர்க்க முடியாத பிரச்சினையில நீ தலையிட்டு ஒண்ணும் ஆகபோறதில்லே. நீ காலேஜுக்கு போய் உன் படிப்பைப் பாரு. உங்கம்மாவோட மரணத்துக்கு என்ன காரணம்னு அண்ணாவுக்கு தெரியாம இல்ல. கொஞ்சம் கொஞ்சமா இந்த கூட்டத்திலருந்து விலகிடுவாரு. அதுக்கு நா பொறுப்பு ‘ன்னு சொன்னதால நா பேசாம ஹாஸ்டலுக்கு போயிட்டேன். நா படிப்பு முடிஞ்சி திரும்ம்பி வந்து மூணு மாசம் ஆகப்போகுது. சித்தப்பு சொன்னதிலேருந்து அப்பா அந்த மிராசுதார் கூட்டத்த விட்டு வ்ிலகிட்டதாத்தான் நினச்சுக்கிட்டிருந்தேன். ஆனா அப்பா உங்கள மிரட்டுனத கேட்டதுலருந்து எனக்கு அப்பா இன்னும் திருந்தலன்னு உறுதியாயிருச்சி. இப்ப நீங்க என்ன செய்யறதா இருக்கீங்க ?”

சிவந்தி சொல்லி முடிக்கும் வரை பொறுமையாய் இருந்த சிதம்பரம் அவளுடைய நேரடியான கேள்வியை எதிர்பாராததால் என்ன பதில் சொல்வது என்று சிறிது நேரம் யோசிக்கலானான்.

“என்ன சிதம்பரம் சைலண்டாயிட்டாங்க ?”

“உங்கப்பா காலையில என்ன இண்டைரக்டா வார்ன் பண்ணதென்னவோ உண்மைதான். ஆனா அதுக்கெல்லாம் மசியற ஆள் நானில்லே. ஆனா அதே சமயம் உங்க சித்தப்பா என்னோட கோயில்ல இருந்தப்போ ஒரு விஷயம் சொன்னார். அதப்பத்தி தான் யோசிக்கறேன்.”

சிவந்தி வியப்புடன் அவனைப் பார்த்தாள். இவன் பயந்து போய் பின்வாங்குகிறானோ ? வீரமெல்லாம் பேச்சில்தான் போலும்.

“சித்தப்பு அப்பிடியென்ன சொல்லிச்சி ?”

சிதம்பரம் யோசனையுடன் அவளை பார்த்தான். இவளிடம் சொல்லலாமா வேண்டாமா என்ற குழப்பத்தில் அவன் ஒன்றும் பேசாமலிருந்தான்.

சிவந்திக்கு அவனுடைய மெளனம் எரிச்சலைத் தந்தது.

“என்ன சிதம்பரம் ?”

“இல்ல.. உங்ககிட்ட சொல்லாம அவாய்ட் பண்ணமுடியுமான்னு பார்த்தேன்..”

“அப்படியென்ன விஷயம் எங்கிட்டகூட சொல்ல முடியாம ?”

“ஓகே. சொல்லிடறேன். ஆனா அதை நீங்க எப்படி எடுத்துக்க போறீங்கன்னுதான் யோசிக்கறேன்.”

“ரொம்ப யோசிக்காம சொல்லுங்க. ப்ளீஸ்..”

சிவந்தியின் குரலில் இருந்த கோபம் சிதம்பரத்துக்கு புரிந்தது. அவளுடைய இந்த கோபத்துக்குதான் அவன் பயந்தான். அவள் கோபத்தில் ஏதாவது செய்ய போக விபரீதத்தில் முடிந்து விடுமோ என்று அஞ்சினான்.

“சிதம்பரம். ப்ளீஸ். ஐ ஆம் லூசிங் பேஷன்ஸ்.”

“ஒகே. டோண்ட் கெட் அப்செட். சொல்றேன். உங்க அப்பா உங்களுக்கு திருமணம் ஏற்பாடு செய்றதுல மும்முரமாயிருக்காராம். இன்னும் ஒண்ணு அல்லது இரண்டு மாசத்துல முடிஞ்சிருமாம். இந்த நேரத்துல அண்ணா விஷயம் வெளியே வந்து போலீஸ் கீலிஸ்னு பிரச்சினை பப்ளிஷ் ஆச்சுனா உங்க வாழ்க்கை பாழாயிடுமோன்னு உங்க சித்தப்பா பயப்படறார்.”

சிவந்தி கோபத்தில் என்ன சொல்வதென்று தெரியாமல் உதடுகள் துடிக்க தடுமாறினாள். சட்டென்று எழுந்து சென்று சமையலறையிலிருந்த சன்னல் வழியாக தோட்டத்தில் தென்னங்கீற்றுகளை கீறிக்கொண்டிருந்த வேலாயியை பார்த்துக்கொண்டு நின்றாள். இந்த வீட்டுக்காக சிறிதும் ஓய்வில்லாமல் உழைத்துக்கொண்டிருந்த அவளும் தன் தந்தையால் பாதிக்கப் பட்டவள் என்பதை நினைத்தபோது சிவந்தியின் கண்கள் கண்ணீரால் நிறைந்து அவளுடைய பார்வையை மறைத்தது.

“உங்கப்பாவும் அந்த பாழாப்போன மிராசுதாரும் வேற சில பெரிய மனுஷங்களும் சேர்ந்துக்கிட்டு இந்த ஊர்ல சமைஞ்ச பொண்ணுங்கள சீட்டு போட்டு தேர்ந்தெடுத்து அனுபவிச்சிக்கிட்டுருக்காங்க சிவந்தி. இப்படியொரு விஷயத்தை வேலாயியோட அப்பா என்கிட்ட வந்து சொல்லி கதறியழுதப்போ எனக்கு என்ன பண்றதுன்னே தெரியலைடி. அதான் போய் சேர்ந்துரலாம்னு முடிவு செஞ்சிட்டேன்…” அம்மா மரணப் படுக்கையிலிருந்து ஹீனக்குரலில் தன்னிடம் கூறியதை இப்போது நினைத்து பார்க்காமல் இருக்க முடியவில்லை அவளால்.

சிவந்தியின் கோபம் சிதம்பரத்தை வெகுவாக அச்சுறுத்தியது. ‘சிவந்தியும் அவளுடைய அப்பாவைப் போலத்தான் தம்பி. கோபம் வந்த என்ன செய்வா, எப்படி செய்வான்னே சொல்லமுடியாது. அவ அம்மா இறந்து மூணுநாள் கூட ஆகாத சமயத்துல அண்ணாகிட்ட ஆவேசத்தோட இந்த விஷயத்தைப் பத்தி பேச முயற்சி பண்ணவ தான் தம்பி சிவந்தி. நா மட்டும் இடையில நுழைஞ்சி அவளை சமாதான படுத்தியிருக்கலைன அப்பவே இந்த விஷயம் விபரீதமா போயிருக்கணும். அவ கல்யாணம் செஞ்சி போயிரணும். அப்புறம் தான் இதுக்கு ஒரு முடிவு கட்ட முடியும். அதுவரைக்கும் நீங்க இத பெரிசு பண்றதில்லேன்னு எனக்கு சத்தியம் பண்ணனும் தம்பி ‘ என்று தன்னிடம் உறுதிமொழி பெற்றுக்கொண்ட அவளுடைய இளைய தந்தையை நினைத்து பார்த்த சிதம்பரம் இவளிடம் இதை கூறியது எத்தனை மடத்தனம் என்று நினனத்தான்.

தன்னுடைய இருக்கையிலிருந்து எழுந்து சன்னல் வழியே வெளியே பார்த்துக்கொண்டிருந்த சிவந்தியின் பின்னால் ஓசைப் படாமல் போய் நின்ற சிதம்பரம் சன்னல் வழியே தோட்டத்தில் வேலை செய்துக்கொண்டிருந்த பெண்ணைப் பார்த்தான். ஒரு நிமிடமும் ஓய்வில்லாமல் இயங்கிக் கொண்டிருந்த அந்த பெண்ணின் கரங்களிலிருந்த லாவகம் ஒரு கணம் அவனையும் கட்டிப்போட இருவரும் மெளனமாய் அவளையே பார்த்துக் கொண்டிருந்தனர்.

சிதம்பரத்தின் மூச்சுக்காற்று சிவந்தியின் தோள்களை வருட திடுக்கிட்டு திரும்பி மிக அருகில் நின்றுக்கொண்டிருந்த அவன்மேல் சரிந்துவிட அவளுடைய தோள்களைப் மிருதுவாய் பிடித்து அழைத்துப் போய் இருக்கையிலமர்த்திவிட்டு அருகிலேயே தன் இருக்கையையும் நகர்த்தி அமர்ந்தான்.

“ஐ ஆம் சாரி சிவந்தி. இதுக்குத்தான் உங்க கிட்ட சொல்றதுக்கு நான் தயங்கினேன். ப்ளீஸ் டோண்ட் கெட் எக்சைட்டட். இட் ஈஸ் நாட் கோயிங் டு சால்வ் த பிராப்ளம்.”

இரண்டு கண்களும் கோபத்தில் தீப்பிழம்பாய் ஜொலிக்க தன்னைப் பார்த்த அவளுடைய பார்வையில் ஒரு நிமிடம் மிகவும் அரண்டு போனான் சிதம்பரம்.

“ஹுஸ் ப்ராப்ளம் மிஸ்டர் சிதம்பரம் ? ஹுஸ் ப்ராப்ளம் ஈஸ் திஸ் ? டு யு நோ ஒன் திங் ? அதோ தோட்டத்துல தென்னம் ஓலைய கீறிக்கிட்டிருக்காளே அந்த பதினைஞ்சு வயசு பொண்ணு, அவ வயசுக்கு வந்த முதல் மூனு மாசத்துல எங்கப்பா தலைமயில இருக்கற அந்த பெரிய மனுஷங்க கூட்டம் சீட்டு போட்டு சீரழிச்சிட்டது. அவள பார்க்கும்போதெல்லாம் என் மனசு படற வேதனைய உங்களபோல ஆண்களால புரிஞ்சிக்க முடியாது சிதம்பரம். எங்க சித்தப்புவையும் சேர்த்துதான் சொல்றேன். அதனாலதான் தன்னுடைய அண்ணன் மகளோட கல்யாணம் அவருக்கு பெரிசா போயிருச்சி.”

அவளுடைய நியாயமான கோபத்தைப் பார்த்து அவளை எப்படி சமாதானம் செய்வதென்று தெரியாமல் குழம்பிப் போயிருந்த அவனுடைய மெளனம் எதிர்மறையான விளைவையே ஏற்படுத்தியது.

“என்ன சிதம்பரம் நா சொன்னதுக்கு மறு பதில் பேசமுடியாம வாயடைச்சி போயிட்டாங்க போலருக்கு ? நீங்க வெளியே போறதுக்கு முன்னால சொன்னதென்ன, இப்ப நீங்க பேசறதென்ன ? என்னோட கல்யாணத்த சாக்கா வச்சிக்கிட்டு இந்த விஷயத்தை மூடி மறைக்க நா சம்மதிக்க மாட்டேன்.”

இருக்கையிலிருந்த எழ முயன்றவளின் கையைப் பிடித்து இருத்திய சிதம்பரம் அவளைப் பார்த்து கெஞ்சினான். “ப்ளீஸ் சிவந்தி. கூல் டெளன்.”

சிவந்தியின் குரலைக் கேட்டு தோட்டத்திலிருந்து ஓடி வந்த வேலாயி சிதம்பரத்தைப் பார்த்து தயங்கி நின்றாள். “என்னாச்சிம்மா..” என்று அறையில் நுழைய முயன்றவளை தன் பார்வையாலேயே தடுத்தி நிறுத்தி ‘நீ போ ‘ என்று சைகைக் காண்பித்தான் சிதம்பரம்.

போக மனமில்லாமல் தயங்கி தயங்கி சென்றவள் சென்று மறையும் வரை மெளனமாயிருந்த சிதம்பரம் எழுந்து சென்று ஒரு டம்ளரில் குடிநீர் கொண்டு வந்து “டேக் திஸ்.” என்று அவள் கையில் திணித்தான். அவள் ஒரே மூச்சில் குடித்து முடித்து மேசையில் வைத்துவிட்டு அவனைப் பார்த்து மெலிதாய் புன்னகைத்தாள்.

“ஐ ஆம் சாரி. ஐ காட் எமோஷனல்.”

“ஐ அண்டர்ஸ்டாண்ட். ஆனா இந்த எமோஷன் நம்ம ப்ராப்ளத்தை சால்வ் பண்ணிடாது. வீ வில் ஹாவ்டு மூவ் கேர்ஃபுல்லி. இந்த நேரத்துல நீங்க அவசரப்பட்டு எடுக்கற ஒவ்வொரு முடிவும் விஷயத்த சிக்கலாக்குமே தவிர முடிவுக்கு கொண்டுவராது. நா உங்க சித்தப்பாக்கிட்ட பேசுனதுலருந்து சொல்றேன். இப்போ உங்கப்பா அல்மோஸ்ட் அந்த கும்பல் கிட்ட ஒரு ப்ரிசனர் மாதிரி மாட்டிக்கிட்டாருன்னும் பத்திரிகைல வந்திருக்கறா மாதிரி போன மாசம் நடந்த அந்த இளம் பெண்ணோட மரணத்துல உங்க அப்பாவை மாட்டி விடற சதித்திட்டம் அந்த மிராசுதார் தலைமைல ரெடியாயிருக்குன்னு சுடலை அங்கிள் நினைக்கிறார்.”

சிவந்தி மீண்டும் கோபத்துடன் குறுக்கிட்டாள். “இங்க பாருங்க சிதம்பரம். செஞ்ச தப்புக்கு மாட்டிக்கிடாதவங்க செய்யாத தப்புக்கு மாட்டிக்கிடுவாங்க. அத தான் டிலேய்ட் ஜஸ்டிஸ்னு சொல்றோம். லெட் ஹிம் கெட் காட். ஹு கேர்ஸ் ? இதனால என் கல்யாணம் தள்ளிப் போனாலோ இல்ல நடக்காமவே போனாலா எனக்கு கவலையில்லே. திஸ் ஈஸ் தி டைம் டு நெய்ல் திஸ் கேங். வித் ஆர் வித்தவுட் யுவர் ஹெல்ப். என்ன சொல்றீங்க ?”

“டேய்.. உன்னாண்ட என்னடா சொன்னேன் ? என் பொண்ணுகிட்ட இல்லாததெல்லாம் சொல்லி அவ மனசையே கெடுத்திட்டியேடா ராஸ்கல்” என்ற பெருங்குரலுடன் அவர்களிருந்த அறையினுள் நுழைந்து சிதம்பரத்தின் சட்டையை சேர்த்து பிடித்து அடிக்க எத்தனித்த ஏகாம்பரத்தின் கையை எட்டிப் பிடித்தாள் சிவந்தி.

“அப்பா. என்ன இது மிருகம் மாதிரி நடந்துக்கறீங்க ? அவர் சட்டையை விடுங்க.”

சிவந்தியின் கண்களில் தெரிந்த அதீத கோபம் ஒரு கணம் ஏகாம்பரத்தையே திடுக்கிட வைத்தது. முரட்டுத்தனமாய் இறுகியிருந்த சிதம்பரத்தின் சட்டையைப் பிடித்திருந்த தன் தந்தையின் கைகளை பிடுங்கி விலக்கிய சிவந்தி, “நீங்க உங்க அறைக்கு போங்க சிதம்பரம். ஐ அப்பாலஜைஸ் ஃபார் ஹிஸ் இண்டாசண்ட் பிஹேவியர். ஐ அம் சாரி.”

சட்டையை சரி செய்துக்கொண்டு அறையை விட்டு வெளியேறிய சிதம்பரத்தை தடுத்து நிறுத்த முயன்ற தன்னுடன் வந்த வேலையாட்களை ஏகாம்பரம் தன் பார்வையால் தடுத்து நிறுத்தினார். அறையை விட்டு வெளியேறிய சிதம்பரம் அறை வாசலில் வேலையாட்களின் பின்னால் தன்னை மறைத்துக்கொள்ள முயன்ற வேலாயியைப் பார்த்து சோகத்துடன் புன்னகைத்தவாறு தன் அறைக்கு விரைந்து சென்று தன்னுடைய விலையுயர்ந்த காமிரா உடைக்கப்பட்டு கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போய் செய்வதறியாது திகைத்து நின்றான்.

“அம்மா உங்களுக்கு ஒண்ணும் ஆகலையே ? நான் தான் நீங்க போட்ட சத்தத்தைப் பாத்துட்டு பதறிப்போய் ஐயாவை கூட்டிட்டு வந்தேன்.” என்று ஓடி வந்து தன் கரத்தைப் பற்றிய வேலாயியைக் கட்டிப்பிடித்துக்கொண்டு உச்சக்குரலில் கத்தினாள் சிவந்தி.

“பாத்தீங்களாப்பா இவ விசுவாசத்தை ? இவளோட விஷயத்தைக் கேட்டுத்தாம்ப்பா நம்ம அம்மா..” என்றவளின் வாயைப் பொத்தி முரட்டுத் தனமாய் தள்ளினார் ஏகாம்பரம். பிறகு திரும்பி வேலையாட்களைப் பார்த்து கூச்சலிட்டார். “டேய், என்ன பாத்துக்கிட்டு நிக்கறீங்க ? அந்த பட்டணத்து தம்பிய ஊர விட்டுக்கிளப்புங்கடா. போங்க.. ஏய் வேலாயி என்ன பேய் முளி முளிச்சிக்கிட்டு நிக்கறே ? போய் தோட்டத்துல கெடக்குற வேலைய பாரு. ஓடு”

அவருடைய கோபத்தின் காரணம் புரியாமல் திகைத்து கலைந்த வேலையாள் கூட்டம் மறைந்ததும் தன் மகளைப் பார்த்து பல்லைக் கடித்தார் ஏகாம்பரம். “ஏய் கடைசித் தடவையா சொல்றேன். ஒழுங்கா அடங்கியிருந்தீன்னா நல்ல எடம் பாத்து கல்யாணத்த முடிச்சி வப்பேன். அதில்லாம இந்த மாதிரி பட்டணத்து பசங்க பேச்சைக் கேட்டு ஆட நெனச்சே உங்கம்மா போன பாதையிலேயே அனுப்பி வச்சிருவேன். சொல்லிட்டேன்.”

தன் தந்தையின் திடார் ஆவேசத்தை முற்றிலும் எதிர்பார்க்காத சிவந்தி மூர்க்கத்தனமாய் அவர் தள்ளியதும் நிலைகுலைந்துபோய் கீழே விழாமலிருக்க மேசையைப் பற்றிக்கொள்ள வேண்டியிருந்தது. ‘உங்கம்மா போன பாதையிலேயே உன்னையும் அனுப்பி வச்சிருவேன்… ‘ என்ற வார்த்தைகள் அவளைச் சுற்றி சுற்றி வந்தன. அதே சமயம் வேலையாட்களின் கும்பல் சிதம்பரத்தை ஒன்றும் செய்துவிடாமலிருக்க வேண்டுமே என்ற சிந்தனையில் தன் தந்தையின் வழியிலேயே சென்று அவன் சென்னை திரும்பி செல்ல வழி செய்ய வேண்டியதுதான் தன்னுடைய முதல் கடமை என்று தீர்மானித்தவளாய் அவரைப் பார்த்தாள். “அப்பா, நான் செஞ்சது தப்புதான். இதுல அவருக்கு ஒரு சம்பந்தமுமில்லை. அவரை திருப்பியனுப்ப வேண்டியது என் பொறுப்பு. நம்ம ஆளுங்கள பிரச்சினை எதுவும் பண்ணாம போகச் சொல்லுங்க.”

சிவந்தியின் திடார் மனமாற்றம் அவருக்கு வியப்பை ஏற்படுத்தியதால் அவளை சந்தேகமாய் பார்த்தார், இவள் வேறு ஏதாவது திட்டம் வைத்திருப்பாளோ என்ற எண்ணத்துடன்.

அவருடைய பார்வையிலிருந்த ஐயத்தை உணர்ந்த சிவந்தி அவரை நெருங்கி கையைப் பிடித்து, “என்னை நம்புங்கப்பா. நா இனி இதைப்பத்தி ஒண்ணும் பேசமாட்டேன். சிதம்பரத்தை வழியனுப்பிட்டு வர என்னை போகவிடுங்க.” என்று கெஞ்சினாள்.

“சரி. ஆனா ஓண்ணு. நீ வழியனுப்ப போகவேண்டாம். சுடலை போகட்டும். நீங்க ரெண்டு பேரும் ஒண்ணா கார்ல போறத ஊர்ல வேற யாரும் பாத்துட்டா வேற விணையே வேணாம்.” என்றவர் அவளுடைய பதிலுக்கு காத்திராமல் அறையை விட்டு வெளியேறி சிதம்பரம் இருந்த அறைக்கு வெளியே நின்றிருந்த வேலையாட்களிடம் கலைந்து செல்ல பணித்தார், “டேய் யாராவது போய் நம்ம சுடலையை கூட்டிக்கிட்டு வாங்க. அந்த பையனோட பெட்டி பையையெல்லாம் வண்டியில எடுத்துவச்சிட்டு எல்லாரும் போங்க. சீக்கிரம்.”

நிமிஷத்துக்கு நிமிஷம் மாறிப் பேசும் தர்மகர்த்தா ஐயாவின் மன நிலை மீண்டும் மாறி வேறு ஏதாவது கட்டளையிடுவாரோ என்ற கலவரத்தில் வேலையாட்கள் கலையாமல் நிற்க, “என்ன முளிச்சிக்கிட்டு நிக்கறீங்க ? சொன்னது புரியலே ? சீக்கிரம் போங்க. கடைசி பஸ் போறதுக்குள்ளே தம்பி ஸ்டாண்டுக்கு போய்ச்சேரணும்..” என்று ஏகாம்பரம் கூச்சலிட அலறியடித்துக்கொண்டு ஆளுக்கு ஒரு திசையில் கலைந்து ஓடியது அந்தக் கும்பல்.

ஏகாம்பரம் சிதம்பரத்தின் அறையினுள் எட்டிப் பார்த்தார். சிதம்பரம் உடைத்தெறியப்பட்ட தன் காமிராவை வெறித்து நோக்கிக்கொண்டிருப்பதை கண்டு ஒரு கனம் அவனுக்காக பரிதாபப்பட்டார். ‘முட்டாள். தான் காலையில் கூறியபடி கேட்டு நடந்திருந்தால் இந்த பிரச்சினையை சந்தித்திருக்க வேண்டாமே. விருந்தாளியாய் வந்தவன் வில்லங்கமாய் மாறினால் பார்த்துக்கொண்டிருக்க நாங்க என்ன பேடிப்பயலுவளா ? ‘ என்று மனதுக்குள் ஓடிய எண்ணங்களை மறைத்துக்கொண்டு, “என்ன தம்பி யோசிக்கறீங்க ? அந்த காமிராக்குள்ள என்னத்த புடிச்சி வச்சிருந்தீங்க ? நம்ம ஆளுங்க முரடன்களாச்சே. நம்ம கிராமத்துக்கெதிரா எதையாச்சும் புடிச்சி வச்சிருப்பீங்கன்னு நினெச்சிருப்பானுங்க. அதான் ஒடைச்சி சின்னாபின்னாம ஆக்கிட்டானுங்க. இது பட்டணமில்லே தம்பி. நீங்க நம்ம பட்டாபியோட மவனாப் போயிட்டாங்க. இல்லேன்னா அந்த காமிரா மாதிரி நீங்களும் ஆயிப்போயிருப்பீங்க. தப்பிச்சோம்னு நினெச்சி சந்தோஷப்பட்டுக்கிட்டு ஊர் போய் சேருங்க. பட்டாபிய நா விசாரிச்சதா சொல்லுங்க.”

சிதம்பரம் அவர் பேசியதைக் காதில் வாங்கிக்கொள்ளாமல் காமிராவை கைப்பையில் வைத்து தோளில் மாட்டிக்கொண்டு பெட்டியை கையிலெடுத்துக் கொண்டு புறப்பட்டான்.

அறையின் குறுக்கே வழிமறித்தாற்போல் நின்ற ஏகாம்பரத்தை ஒருவித ஏளனத்துடன் பார்த்துவிட்டு அவரை ஒதுங்கிக்கொள்ள கையை அசைத்தான்.

“தம்பிக்கு என்னுடைய அந்தஸ்த்து இன்னும் புரியல போலிருக்கு. பேசாம வண்டியில உக்காருங்க. சுடலை வந்ததும்தான் வண்டி நகரும். என்ன நா சொல்றது ?”

“எனக்கு யார் துணையும் தேவையில்லை. உங்க வீட்டுக்கு வர வழி தெரிஞ்ச எனக்கு திருப்பி போகவும் வழி தெரியும்.”

“தெரியும். தெரியும். ஏன் தெரியாது ? தம்பிக்கு தான் எல்லாம் தெரியுமே, பெரியவங்களை மதிக்கணும், அவங்க சொல்றத கேக்கணும்கறத தவிர. எடக்கு பண்ணாம வண்டியில போயி உக்காருங்க. நா சொன்னா சொன்னதுதான். தனியா போகணும்னு நெனச்சா ஒழுங்கா ஊர் போய் சேர மாட்டாக. சொல்லிட்டேன். இதோ சுடலை வந்துட்டான். போங்க.”

சிதம்பரம் அவரோடு போராடி பலனில்லை என்பதை உணர்ந்தவனாய் புறப்பட தயாராகி எதிரே வந்துக்கொண்டிருந்த சுடலைமுத்துவைப் பார்த்து ஒரு வரண்ட புன்னகையை உதிர்த்தான். முகத்தில் எந்தவித சலனமுமில்லாமல் அவனை நோக்கி சென்ற சுடலை அவனிடமிருந்த பெட்டியை பெற்று அருகிலிருந்த வேலையாளிடம் கொடுத்துவிட்டு ஏகாம்பரத்தின் முதுகின் பின்னால் கலவரத்துடன் தன்னைப் பார்த்தவாறு நின்ற சிவந்தியைப் பார்த்து தலையசைத்து விட்டு, “வாங்க தம்பி” என்றவாறு வண்டியை நோக்கி நடக்க அவன் பின்னால் சிதம்பரம் ஒன்றும் பேசாமல் நடந்தான்.

ஏகாம்பரம் திரும்பி தன் பின்னால் நின்றிருந்த சிவந்தியைப் பார்த்து முறைத்தார். “என்னம்மா தம்பியை வழியனுப்ப வந்தீங்களோ ? உன்னைப் பார்க்கக் கூட தைரியம் இல்லாம ஓடறானே, பார்த்தங்கல்ல ? பிறகென்ன, போயி வேலைய பாரு. வேலையில்லேன்னா போயி, அடம் பிடிச்சி ஒரு கம்ப்யூட்டர் பொட்டி வாங்கினீயே, அத போயி தட்டிக்கிட்டிரு. அறிவாவது வளரும்.”

எகத்தாளத்துடன் பேசிவிட்டு செல்லும் தன் தந்தையையே வெறுப்புடன் பார்த்தவாறு நின்ற சிவந்தி சட்டென்று மின்னலென தன் மனதில் ஓடிய முடிவுடன் விரைந்து தன் அறையை நோக்கி ஓடினாள்.

அறையில் கணணி மேசையிலிருந்த, காலையில் சிதம்பரம் தன்னிடம் கொடுத்த, விசிட்டிங் கார்டை எடுத்துப் பார்த்தாள். அதில் அவனுடைய வீட்டு தொலைப்பேசி எண், கைத்தொலைப்பேசி எண் மற்றும் அவனுடைய மின்னஞ்சல் விலாசம் இருந்ததை கண்டு மகிழ்ந்து கணணிக்கு உயிரூட்டி அதன் முன் அமர்ந்தாள்.

‘இந்த கிராமத்துல எனக்கு தெரியாம ஏதாவது நடந்துருமோ அதையுந்தான் பார்ப்போமே ‘ என்று சற்றுமுன் தன்னிடம் சவால் விட்ட தன் தந்தையும் குறுக்கிட்டு நிறுத்த இயலாத மின்னஞ்சல்தான் அவருக்கு பாடம் புகட்ட சரியான வழி என்ற முடிவுக்கு வந்தவளாய், பெறுநர் பகுதியில் சிதம்பரத்தின் மின்னஞ்சல் விலாசத்துடன் துவங்கி பரபரவென்று தன் மனதில் உள்ளவற்றையில்லாம் கொட்டித் தீர்த்தாள்.

‘உங்மா போன பாதையிலேயே உன்னையும் அனுப்பிச்சிருவேன்.. ‘ அப்படியென்றால், தன் தாயின் அகால மரணத்திற்கு காரணம்… தன் தந்தையா ?… நினைக்க நினைக்க அவளுடைய அடிவயிற்றிலிருந்த புறப்பட்டு வந்த ஆவேசத்தில் வார்த்தைகள் உணர்ச்சியுடன் வந்து விழுந்தன.

கணணியின் அருகிலிருந்த தொலைப்பேசி இணைப்பை கணணியில் பிணைத்து இண்டெர்நெட் தொடர்பை ஏற்படுத்தி தான் எழுதி முடித்த மின் அஞ்சலை அனுப்பிவிட்டு பெருமூச்சு விட்டாள். மனதில் ஒரு இணம் புரியாத நிறைவு எழுந்து அவளை மகிழ்வித்தது.

சுவர் கடிகார்த்தைப் பார்த்தாள். விசிட்டிங்கார்டிலிருந்த சிதம்பரத்தின் கைத்தொலைப்பேசியின் எண்ணைச் சுழற்றினாள். சிதம்பரம் எடுத்தவுடன், “ நான் சிவந்தி. ஊர் போய் சேர்ந்ததும் என்னுடைய ஈமெய்ல படிங்க.” என்று அவசரமாய் பேசிவிட்டு இணைப்பைத் துண்டித்தாள்.

படபடக்கும் நெஞ்சுடன் அறையை விட்டு வெளியேறி கூடத்தில் தன் தந்தையோ வேறு யாராவதோ இருக்கிறார்களா என்று பார்த்தாள். நல்ல வேளை யாரையும் காணவில்லை. வேலாயிமட்டும் கொல்லைப் புறத்திலிருந்து தயங்கி, தயங்கி தன்னை நோக்கி வருவது தெரிந்தது.

கண்களில் வழிந்தோடும் கண்ணீருடன் வந்து சிவந்தியின் காலில் விழுந்தாள் வேலாயி. “என்ன மன்னிச்சிருங்கம்மா. ஐயா இப்படி நடந்துக்குவாருன்னு நான் நெனச்சுப் பாக்கல. அந்த பட்டணத்து ஐயாதான் உங்கள ஏதாச்சும் பண்ணிட்டாரோன்னு நெனச்சு நம்ம ஐயாவ போயி கூட்டியாந்துட்டேம்மா. புத்திக்கெட்டவ, விவரம் தெரியாம செஞ்சிப்போட்டேம்மா. என்ன மன்னிச்சிருங்க”

“ஏய் எழுந்திரு. உம்மேல எனக்கு எந்த வருத்தமுமில்ல. போய் வேலையைப் பாரு.” கண்களைத் துடைத்துக் கொண்டு செல்லும் அவளை சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்த சிவந்தி இவளைப் போன்ற அபலைப் பெண்களைக் காப்பாற்றவும் தன் தாயின் மரணத்திற்கு காரணமானவர்களை பழிவாங்கவும் தான் எடுத்த முடிவுதான் சரியானது என்ற திருப்தியுடன் தன் தந்தையின் அறையை நோக்கி நடந்தாள்.

***

பேருந்தில் ஏறி அமர்ந்தவுடன் தன் கைத்தொலைப்பேசி சிணுங்க எடுத்து காதில் வைத்தவன் சிவந்தியின் குரல் கேட்டு மகிழ்ந்தான். ஆனால் அவள் அவசர அவசரமாக கூறிய செய்தி அவனை குழப்பத்தில் ஆழ்த்தியது. அவள் அனுப்பிய மின்னஞ்சலின் சாராம்சத்தையாவது அவளிடம் தொலைப்பேசியில் கேட்டாலென்ன என்று நினைத்து அவளுடைய வீட்டு தொலைப்பேசி நம்பரை அழைக்கலாமென்றால் அந்த நேரத்தில் அவளுடைய தந்தை வீட்டில் இருந்து அதனால் அவளுக்கு ஏதாவது பிரச்சினை வருமோ என்று அஞ்சினான் அந்த எண்ணத்தைக் கைவிட்டான்.

“யார் தம்பி போன்ல ?” என்ற பேருந்தின் வெளியே நின்றுக்கொண்டிருந்த சுடலைமுத்துவிடம் “என் நண்பன், சென்னையிலிருந்து..” என்று பதிலளித்து விட்டு இருக்கையிலமர்ந்து கண்ணை மூடியவன் களைப்பு மோலோங்கி கண்களை அழுத்த அப்படியே உறங்கிப் போனான்.

பேருந்து புறப்படும் நேரத்தில் தான் கையைசைத்தும் கண்டுக் கொள்ளாமலிருந்த சிதம்பரத்தின் நடத்தை மனதைப் புண்படுத்த அதே சோகத்துடன் வண்டியிலேறி வீடு திரும்ப மனமில்லாமல் கால்நடையாய் கோயில் வளாகத்தில் போய் அமர்ந்தார் சுடலைமுத்து. அன்று காலை முதல் நடந்த சம்பவங்கள் அவரை வெகுவாய் பாதித்திருந்தது.

தன் சகோதரர் ஏகாம்பரமும் ஊர் பஞ்சாயத்து தலைவர் பஞ்சநாதன் மற்றும் ஊரிலேயே பெரிய மிராசுதார் வேந்தைய கவுண்டர் தலைமையில் பெரியமனுஷக் கூட்டம் அந்த ஊர் இளம் பெண்களை சூரையாடி கொட்டமடித்து வருவது தெரிந்திருந்தும் தன்னால் ஒன்றும் செய்யவியலா கோழைத்தனத்தை நினைத்து பல மாதங்களாய் அவர் வேதனைப் பட்டதுண்டு. அதைத் தட்டிக்கேட்கத் துணிந்த தன் மனைவியையே விஷம் கொடுத்துக் கொல்லவும் துணிந்த தன் சகோதரன் தன்னை ஒழித்துக்கட்ட துளியும் தாமதிக்க தயங்கான் என்பதையும் அறிந்திருந்தார் அவர். அதே சமயம் தானுமில்லாமல்போனால் சிவந்தி தனிமையில் என்ன பாடுபடுவாளோ என்ற நினைப்பில் ஏகாம்பரத்தின் அவலங்களை கண்டும் காணாத நடைப்பிணமானார் அவர்.

தன் தாய் விஷம் அருந்தி தன் உயிரை மாய்த்துக் கொண்டாள் என்று நினைத்திருக்கும் சிவந்திக்கு தன் தந்தையே தன் தாயைக் கொன்றுவிட்டார் என்று தெரிந்தால் அவள் என்ன செய்வாளோ என்ற அச்சமும் இப்போது அவரை வாட்டியெடுக்கத் துவங்கியது.

சிவந்தியை இந்த சூழ்நிலையில் தனியாய் விட்டு வந்தது தவறு என்ற நினைவுக்கு வர எழுந்து வீடு நோக்கி விரைவாய் நடக்கலானார் நடந்து முடிந்திருந்த பயங்கரத்தை அறிதாவராய்.

***

வீடு வந்து சேர்ந்தவுடன் நேரே தன் அறைக்குள் ஓடிப்போய் கணண்ியில் மூழ்கிப்போன சிதம்பரத்தின் செயல் அவனுடைய தந்தை பட்டாபி ஐயரை வியப்பில் ஆழ்த்த அவன் பின்னால் அறைக்குள் நுழைந்தார். “என்னாடாயிது வந்ததும் வராததுமா கம்ப்யூட்டரை நோண்டறே ? என்னாச்சி ? ஊருக்கு போனியே வர ரெண்டு, மூணு நாளாவும் நெனச்சா ஒரே நாள்ல வந்து நிக்கறே. ஊர்ல ஏகாம்பரம் இல்லையா ?”

“அப்பா ப்ளீஸ் லீவ் மி அலோன். கொஞ்ச நேரத்துக்கு டிஸ்டர்ப் பண்ணாதேள். அப்புறமா சொல்றேன்.”

சிவந்தியின் மின்னஞ்சலைத் திறந்து உணர்ச்சிபூர்வமாய் வந்து விழுந்த வார்த்தைகளின் வேகத்தில் திக்குமுக்காடிப் போன சிதம்பரம் அந்தக் கடைசி இரண்டு வரிகளில் சிலையாய் உறைந்து போய் வெகு நேரம் அமர்ந்திருந்தான் ஹாலிலிருந்த தொலைப்பேசி அலறும்வரை.

“டேய் சிதம்பரம் ஊர்ல என்னடா நடந்தது ? ஏகாம்பரம் உன்னை தொலைச்சுட்டுதான் மறுவேலைன்னு கத்தறான்.” என்ற தந்தையின் அலறலைக் கேட்டு ஹாலுக்கு ஓடி அவர் கையிலிருந்த ஒலிவாங்கியை பிடுங்கி காதில் வைத்தான்.

“டேய் படவா, என் பொண்ணோட சாவுக்கு உன்னையும் உங்கப்பனையும் காவு வாங்காம விடமாட்டாண்டா இந்த ஏகாம்பரம். தூக்குக்கே போனாலும் சரி.” என்று கூக்குரலிடும் குரலை இடையிலேயே துண்டித்து படபடப்புடன் மார்பைப் பிடித்துக் கொண்டு சோபாவில் அமர்ந்த தன் தந்தையை நெருங்கி அவர் கரங்களைப் பற்றினான். “நீ கவலைப் படாதேப்பா. நீ நண்பன்னு நினைச்சிக்கிட்டிருக்கற ஏகாம்பரம் ஒரு அயோக்கியன். என் கிட்ட இருக்கற சிவந்தியோட மரணவாக்குமூலமே போதும் அவனை தூக்கிலேத்த. டோண்ட் ஒர்ரி. ஹி காண்ட் டு எனிதிங் டு அஸ். நீ வேணும்னா டெல்லிக்கு போய் அண்ணா கூட ஒரு மாசம் இருந்துட்டு வா. இங்க நான் பாத்துக்கறேன்.”

அலங்க மலங்க மகனைப் பார்த்து விழித்தார் பட்டாபி. “நீ என்னடா பாவி சொல்றே, சிவந்தியோட மரணவாக்குமூலமா ? அப்படான்னா அவ… அவ அம்மா மாதிரியே..”

“இல்லப்பா. அவ அம்மா கொலையுண்டா. சிவந்தி தன் தாயோட கொலைக்கும், தன் தந்தையால சீரழிக்கப் பட்ட பல சின்ன பொண்களோட வாழ்க்கைக்கும் சேத்து பழிவாங்கற மாதிரி தன் உயிரையே மாச்சுக்கிட்டாப்பா. ஷி ஹாஸ் சாக்ரிஃபைட் ஹெர் ஓன் லைஃப் டு சீக் ரிவெஞ்.. ஷி ஈஸ் க்ரேட் டாட், ஷி ஈஸ் க்ரேட். எனக்கு இன்னைக்கு நிறைய வேலையிருக்கு டாட். நீங்க கவலைப் படாம ரெஸ்ட் எடுங்க. நான் நேரே கமிஷனர் ஆஃபீஸ்க்கு போய் சிவந்தியோட வாக்குமூலத்தைக் குடுத்திட்டு அங்கிருந்து நேரே பத்திரிகை ஆஃபீஸ்க்கு போய்ட்டு வரேன். அந்த கும்பல்ல ஒருத்தன் கூட தப்பிச்சிரக் கூடாது.”

அவசர அவசரமாய் குளித்து உடை மாற்றிக்கொண்டு தன் இரு சக்கர வாகனத்திலேறி ஓடும் மகனை தன் இருக்கையிலிருந்தே கவனித்த பட்டாபி சுவரில் தொங்கிக்கொண்டிருந்த, சில வருடங்களுக்கு முன்பு தானும் தன் நண்பன் ஏகாம்பரமும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தைப் பார்த்தார். ‘அடப்பாவி, உன்ன போய் நண்பன்னு சொல்லிக்கிட்டிருந்தேனே.. என்று முணுமுணுத்தார்.

****

‘எங்கம்மாவோட மரணம் தற்கொலைன்னுதான் நா இதுவரை நினைச்சிக்கிட்டிருந்தேன். ஆனா அதுக்கும் காரணம் எங்கப்பாதான் இன்னைக்கி தெரிஞ்சிக்கிட்டேன். இதுவரை எங்கப்பா ஒரு காமுகன்னு தான் நினைச்சிக்கிட்டிருந்தேன். ஆனா கொலை செய்யவும் தயங்கமாட்டார்னு நினைச்சதுக்கப்புறம்தான் அவரை என் உயிரைப் பணயம் வச்சே பழிவாங்கணும்னு தோணிச்சி. அதான் அவருடைய படுக்கையறையிலேயே தூக்கு போட்டுக்கப் போறேன். இது தான் என் மரண வாக்குமூலம். என்னுடைய தற்கொலைக்கு என் தந்தையின் கொலைமிரட்டல் தான் காரணம். அவளால சீரழிக்கப் பட்ட எத்தனையோ இளம் பெண்களில் என் வீட்டு வேலைக்காரி வேலாயியும் ஒருத்தி. இதுக்கெல்லாவற்றிற்கும் என் சித்தப்பு சுடலைமுத்துவும் உயிர்சாட்சி. ‘ என்று முடித்திருந்த மின்னஞ்சலைப் படித்து முடித்து சிதம்பரத்தை நிமிர்ந்து பார்த்த அவனுடைய பத்திரிகையின் நிர்வாகியும் ஆசிரியருமான எஸ்.ஏ.பி, “ஃபண்டாஸ்டிக் சிதம்பரம். இதுவரைக்கும் நீ எங்களுக்கு குடுத்த இன்வெஸ்டிகேஷன் மேட்டர்லயே இதுதான் சூப்பர். இத வச்சிக்கிட்டு கமிஷனர் ஆக்ஷன் எடுக்கல, அவரை எப்படி எடுக்க வைக்கிறதுன்னு எனக்கு தெர்ியும். நீ அப்பாவைக்கூட்டிக்கிட்டு கொஞ்ச நாள் டெல்லி போய்ட்டு வா.”

“வேணாம் சார். எனக்கொண்ணும் பயமில்லே. அப்பாவை வேணும்னா ஃப்ளைட் புடிச்சி இன்னைக்கே அனுப்பி வச்சிடறேன்.”

“உனக்கு வேண்டாம்னு படலாம். ஆனா எங்க பத்திரிகைக்கு நீ இன்னும் கொஞ்ச நாள் உயிரோட இருக்கணும். அதான் சொல்றேன். லீட் ஆர்ட்டிக்கிள எழுதிக்குடுத்துட்டு ஓடு. ஒண்ணும் பேசாத.”

ஒரு சில நொடிகள் ஆசிரியரின் முகத்தேயே பார்த்துக்கொண்டு நின்றிருந்த சிதம்பரம், “ஆஸ் யூ விஷ் சார். பட் ஐ வில் பி ஹியர் எனி டைம் யூ வாண்ட்.” என்றவாறு ஆசிரியர் காண்பித்த கணனியின் முன் அமர்ந்து எழுத துவங்கினான்.

****

Series Navigation

ஜோசப்

ஜோசப்

மரண வாக்குமூலம்.

This entry is part [part not set] of 30 in the series 20020414_Issue

எஸ். வைதேஹி.


வார்த்தைகள் யில்லாமல்
ரகசியம் பேசியது,
சாகும் போது
நான் பார்த்த
ஒரே ஒரு வண்ணத்துப்பூச்சி.

அம்மாவின் கறுப்பு நிற
சீலையில் நழுவிடும்
ஒற்றை நிலா முகம்
கரைந்து போனது.

பழைய நினைவுகளை
விரட்டி விரட்டி
நான் தேடிய அடையாளங்கள்
காணாமல் போயின.

எனைப் பார்க்கும்
என் உறவின் கண்களில்
அழியும் என் மூலக்கூறுகள்.

தூரத்து ரெட்டை நட்சத்திரங்களுக்கு
நடுவில் நான் சிரிப்பேன் என்று
நினைத்துக் கொண்டிருக்கும் போதே
தரைக்கும் எனக்குமான உறவு சரிந்து
ஈரமான காற்றின் நடுவில்
பறந்து கொண்டிருக்கிறேன்,
நேற்று கரைசல் மணல் அருகே
நானும் நீயும் சிரித்தபடி நழுவ விட்ட காற்றாடி போல்.

****

Series Navigation

எஸ். வைதேஹி.

எஸ். வைதேஹி.