து ை ண :4 ( குறுநாவல்)

This entry is part [part not set] of 49 in the series 20050225_Issue

ம.ந.ராமசாமி


—-

‘அது இல்ல ராமகிருஷ்ணன், சும்மா தமாஷுக்குச் சொன்னேன். திருடினால் வேலை போய்விடும். அது அவளுக்குத் தெரியும். அது பக்கத்து நாலு வீடுகளுக்குத் தெரிஞ்சா அவங்களும் உஷாராயிடுவாங்க. அசிங்கம். அப்படியும் திருடறாள். ஏன் ?… இல்லாத கொடுமைதான்!…

அந்தத் தேவையை அவள் கேட்டுப் பெற்றிருக்கலாம். நான் இல்லைன்னு சொல்லப்போறது இல்லை. /ஆனா எல்லாரும் அப்டியிருப்பாங்கன்னு சொல்ல முடியுமா ?… முடியாது!/ ‘

‘அதான் சொல்றேன் சார். நீங்க ரொம்ப பெரிய மனுஷர்! ‘

‘கேட்கறவங்களை நான் மதிக்கிறதைக் கொள்கையா வெச்சிண்டிருக்கேன்!… எதுக்குச் சொல்ல வரேன்னா, இப்படி அனுபவப்பட்டுதான் மனுஷங்க மாறுவாங்களே தவிர, மகான்கள் சொல்லிட்டாள்ன்னு மாற மாட்டாங்க! ‘

‘… … ‘

‘இப்ப உன்கிட்ட சொல்றேன். ராமகிருஷ்ணன், கடவுள் இல்லை. நம்பாதீங்க-ன்னா நீ மாறிடுவீயாக்கும் ? ‘

அவன் பேசவில்லை. கதா காலட்சேபம் கேட்பவன் போல முதுகை நிமிர்த்தி உட்கார்ந்திருந்தான்.

‘உனக்கே அந்த அனுபவம் நிகழணும். அந்த அனுபவம் வரும்போதுதான் நீ கடவுள் இல்லைன்னு உணர்வாய்! நான் சொன்னதுனாலே நீ நம்பிடப் போறது இல்லே! ‘

‘நீங்க கடவுள் இருக்கிறான்றதை நம்பறதே இல்லையா சார்! ‘

‘இல்லே ‘

‘எப்படிச் சொல்றீங்க ? ‘

‘நான் சொல்றது எதிர்மறை. நெகேஷன்! கடவுள் இருக்கிறார்னு நீங்க எப்பிடிச் சொல்றீங்க ? ‘

‘இந்த உலகம் ஜீவராசிகள்… மரம் செடி கொடி… மனிதர்கள் சூரியன் சந்திரன் நட்சத்திரங்கள்… இந்தப் பிரபஞ்சம்… எல்லாவற்றையும் படைச்சவன் ஒருவன் இருக்கணும் இல்லையா ? ‘

‘ரொம்ப சரி ‘ நான் நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டேன். இன்றைய பொழுது நிறைவாகக் கழிய இருக்கிறது!

‘ராமகிருஷ்ணன்… நீ படைப்புன்னு சொல்றியே, அந்தப் படைக்கும் திறன் இயல்பாகவே மனுஷன்கிட்ட இருக்கு. ‘

‘எது. மனிதனால் எப்படி இந்தப் பிரபஞ்சத்தைப் படைக்க முடியும். ‘

‘படைப்பைச் சொல்லலே. படைக்கும் திறனைச் சொன்னேன்…

கடவுளுக்குப் படைக்கும் திறன் இருக்கு நீ சொல்றியே. அதுபோல மனிதனுக்கும் திறன் இருக்கு.

உதாரணமா இப்ப நாம உட்கார்ந்து கொண்டு இருக்கமே, இந்த நாற்காலி, இந்த மேஜை, அதோ அந்த மின்விசிறி, அப்றம் இந்த வீடு, இதெல்லாம் படைப்புதான். அதாவது கிரியேட் பண்ணினது. மனிதனால் உண்டாக்கப் பட்டவை. படைக்கப் பட்டவை. இல்லையா ? ‘

தலையசைத்தான் ராமகிருஷ்ணன்.

‘இப்படி மனுஷன் படைக்கிற பொருள்களை எல்லாம் பார்க்கறோம். மனிதன் பெரிய பெரிய தொழிற்சாலைகள் கட்டறான். அணை கட்டி தண்ணீரைத் தேக்கறான். மனிதனோட படைக்கும் சக்தி நமக்கு நேராத் தெரியறது… ‘

‘… … … ‘

‘மனிதன், அவனோட படைக்கும் திறன், படைத்த பொருள், இந்த மூன்றையும் நேரா கண்ணால் பாக்கறீங்க. அறிவால் உணர்றீங்க. ‘

அவன் கவனித்துக் கொண்டிருந்தான்.

‘அப்றம், செடி கொடி மரம் ஜீவராசிகள் சூரிய சந்திர நட்சத்திரங்கள், பிரபஞ்சம் — இவைகளை மட்டுமே பாக்கறீங்க. இவைகளை யாரோ படைச்சிருக்கணும்னு நினைச்சிக்கறீங்க.

இவை மனிதனால் படைக்கப் பட்டவை அல்ல. இவைகளை யார் படைச்சிருப்பாங்க. வேற யாரோ படைச்சிருக்கணும்னு எண்ணறீங்க. கண்ணுக்குத் தெரியாத சக்தி, அது படைச்சிருக்கும்னு கற்பனை பண்ணிக்கறீங்க. ‘

‘ம் ‘

‘அந்த சக்திக்கு கடவுள்னு நாம பெயர் கொடுக்கறோம். அந்தக் கடவுளுக்கு படைப்பு சக்தி இருக்குன்னு நம்பறோம்… ‘

‘ம் ‘

‘அதாவது நாம கற்பனை பண்ணிய கடவுளுக்கு, மனிதனின் படைப்புத் திறனைப் போல ஒரு திறமை இருக்குன்னு நாமே கற்பனை செய்துக்கறோம். ‘

‘பின்னே இல்லேன்றீங்களா சார்! ‘

‘அதாவது, மனிதனைவிட கடவுள் அப்படி ஒண்ணும் மேம்பட்டவர் அல்ல. விசேஷமானவர் அல்ல..ன்றேன்!

மனிதன் சின்னதாப் படைக்கிறான். கடவுள் பெரிசாய்ப் படைக்கிறார்!

– இருங்க இருங்க… அப்படி கடவுள் படைப்பதை எல்லாம் மனுஷன் படைச்சிற முடியாதுன்னு சொல்றே. ‘

‘ஆமா! நான் சொல்ல வேண்டியதை எல்லாம் நீங்களே சொல்லிடறீங்க! ‘

‘சரி. படைப்பு என்பது மனித ஆற்றல். காட்டுவாசியா இருந்து, மிருகங்களோட மிருகமா இருந்து, மெல்ல மெல்ல மனிதன் உற்பத்தி பண்ணத் தெரிந்து, நாகரிகம் அடைந்த பின் படைக்கும் திறமை பெறுகிறான்.

உற்பத்தியே படைப்புதான்! ‘

‘சரி சார். புரியுது. ‘

‘படைப்புக்கு என்ன வேணும் ? கைகள் வேணும். சில சமயம் கால்கள் வேணும்.முக்கியமா மூளை வேணும். இவை இருந்தால்தான் படைக்க முடியும். வாய்கூட வேண்டியிருக்கலாம்.

சொல்லப் போனால் மனித உடலே படைக்கும் யந்திரம்!

அப்படியிருக்கச்ச, கண்ணுக்குத் தெரியாத கடவுள், கண்ணுக்குத் தெரியற இந்த பிரபஞ்சம் சூரிய சந்திர நட்சத்திரங்கள், ஜீவராசிகள் இவற்றை எல்லாம் எப்படிப் படைக்க முடியும் ? ‘

‘கடவுள் நினைச்சாப் போதும்! ‘

நான் சிரித்தேன். ‘நினைப்புங்கறது என்ன ராமகிருஷ்ணன். ‘

அவன் என்னைப் பார்த்தான். ‘சொல்லுங்க சார்! ‘ என்றான்.

‘நினைப்புங்கறது அறிவு! மூளையில் அறிவு இருக்கு. அறிவுன்றது அனுபவம். என் அனுபவத்தை உங்க கிட்ட சொல்றேன். உங்க மூளை அதை வாங்கிக்கிட்டு அறிவைப் பெறுகிறது. புஸ்தகங்கள்ல எழுதப்பட்டதெல்லாம் அனுபவம்தான். அந்த புஸ்தகங்களை வாங்கிப் படிச்சுட்டு அறிவைப் பெறுகிறோம். ரைட் ? ‘

‘ம் ‘ என்றபடியே ராமகிருஷ்ணன் மோவாயைச் சொறிந்தான்.

‘அப்ப, கடவுள் நினைச்சாப் போறும், படைத்து விடுவார்னியே. அப்டின்னா கடவுளுக்கு மூளை இருக்கணும். மூளைதான் நினைக்கும். படைக்கும்…

கண்ணுக்குத் தெரியாத கடவுளுக்கு ஸ்துாலமான, கண்ணுக்குத் தெரியக்கூடிய, மண்டையுள் இருக்கிற, மூளை இருக்க முடியுமா ? ‘

‘சரிதான் சார்! ‘

என் கூற்றை அயவன் முழுசாய் ஏற்றுக் கொண்டானா என்பது சந்தேகமாய் இருந்தது. அவன் கேட்டான் என்பதற்காகச் சொன்னேன். நானாக வலிந்து சென்று அவனிடம் என் கருத்தை வலியுறுத்தவில்லை.

அவனுடைய அனுபவம்தான் அவனுக்கு வழிகாட்டி. புஸ்தகப் படிப்பும் அறிவுரைகளும் பரீட்சை எழுதவும், /இப்படி/ பொழுது போக்கவும்தான் உதவும்!

—-

‘இன்னிக்கு இது போதும்னு நினைக்கறேன் ராமகிருஷ்ணன். ‘

‘போதும் சார்! ‘

‘வேற எதாவது பேசலாமா ? ‘

‘பேசலாம் சார். ‘

‘என்ன பேசலாம் ? ‘

‘நீங்களே சொல்லுங்க சார்!… எனக்கு என்ன தெரியும் ? உங்ககிட்ட யிருந்து தெரிஞ்சுக்கத்தான் நான் வந்திருக்கேன்! ‘

‘அரசியல் பேசலாமா. ‘

‘வேணாம் சார். எனக்கு அதுல எதுவும் தெரியாது. ‘

‘அரசியல்லே எதுவுமே தெரியாதா! ‘

‘தெரியாது ‘

‘பத்திரிகை படிக்கிறது உண்டோ. ‘

‘அப்பப்ப பார்ப்பேன் ‘ என்றவன், ‘படிக்கறது இல்லைன்னு வெச்சுக்கலாம். எப்பவாச்சும் ஹிண்டு கிடைச்சா மேலோட்டமாப் பார்ப்பேன் ‘ என்றான்.

‘இந்திய அரசியல் சட்டம், அதன்கீழ் அமைக்கப்படும் நாடாளுமன்றம், மக்கள் சபை, ராஜ்ய சபை, மாநில சட்டமன்றம், மந்திரிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், தேர்தல், கட்சிகள், முதலாளித்துவம், கம்யூனிசம்… இதெல்லாம் பத்தி தெரியாதுன்னா சொலல வரே! ‘

‘உண்மையாவே தெரியாது சார்! ‘ என்றான் கொட்டாவிக் குரலில்.

‘தேர்தல்ம்போது ஓட்டுப்போடப் போவியா ? ‘

‘மாட்டேன்! ‘

‘ரொம்ப நல்லதாப் போச்சுன்னு உன் ஓட்டை யாராவது போட்டுடுவாங்க! ‘

‘அப்டியா! ‘

‘வாக்காளர் பட்டியல்ல உன் பேர் இருக்கானு தெரியுமா ? ‘

‘இருக்கு சார். எங்க அப்பா அம்மா பேர்கூட இருக்கு. பாட்டி பேரும் இருக்கு. ஆனா நான் ஓட்டுப் போட்டது இல்லை. அப்பா அம்மா போவாங்க. இப்பல்லாம் தேர்தல்னா ஒருநா லீவு. வீட்ல ஹாயா ரெஸ்ட் எடுப்பேன்… ‘

நான் சிரித்தேன்.

‘தேர்தல் அன்னிக்கு முந்தின்னாள் கட்சி ஆட்கள் வந்து சீட்டு கொடுத்திட்டுப் போவாங்க… என் பேருக்கும் சீட்டு வரும். ‘

‘நீ கட்டாயம் ஓட்டுப் போட்டாகணும்னு சட்டம் எதுவும் இல்லை. இது ஜனநாயக நாடு. சரி, வேற எதுல உனக்கு இன்ட்ரஸ்ட் ? ‘

‘ஆஃபீஸ் வேலையைப் பார்ப்பேன். ஆஃபீஸ்ல நல்ல பேர்இருக்கு. அப்றம்… கோவிலுக்குப் போவேன். கதா காலட்சேபம் கேட்பேன். ‘

‘அப்றம் நல்லாச் சாப்பிடுவே! ‘

ராமகிருஷ்ணன் சிரித்தான். ‘நீங்க கிண்டலாச் சொன்னாலும் அது நிஜம்! நான் நல்லாச் சாப்பிடுவேன்! ‘

‘ருசிச்சுச் சாப்பிடுவீங்க! ‘

‘ஆமா சார்! உப்பு துாக்கல், புளி கம்மி, காரம் ஜாஸ்தின்னு சொல்லிக் கொண்டு சாப்பிடுவேன். வேலைல சேருவதற்கு முன்னாடி இப்டி நான் சொன்னேன்னா, அம்மா சொம்பை எடுத்துக்கொண்டு நெத்த வருவாள். இப்ப அப்டி நெத்த வரது இல்ல. –நாளைக்கு உனக்கு வரவகிட்ட சொல்லு. சந்தோஷப்படுவள்-ங்கறா. ‘

‘நல்ல சாப்பாட்டு ராமன்! ‘

‘சாப்பாட்டு ராமகிருஷ்ணன்! — அப்பா அப்டிதான் சொல்வார்! ‘

‘தப்பு. நல்ல சாப்பாட்டு ரசிகன். எனக்கு அப்பிடித் தோணுது. ஒவ்வொருத்தருக்கும் ஏதோ ஒண்ணுல ரசனை இருக்கும்.

சிலருக்கு அரசியல் விவகாரங்கள்ல. சிலருக்கு இலக்கியத்ல. சிலருக்கு சங்கீதம் பரதநாட்டியம். சில பேருக்கு சினிமானு இருக்கறதுதான்.

உனக்கு சாப்பாட்டு ரசனை. கொடுத்து வச்சிருக்கே! ‘

ராமகிருஷ்ணன் நாணத்துடன் சிரித்தான்.

‘கதை நாவல்னு படிக்கிறது கிடையாதா ? ‘

‘ம்ஹும் ‘

‘வாரப் பத்திரிகை மாதப் பத்திரிகைன்னு வரதே… கூட இலவசம்னு பாக்கு வெத்திலை தராளே!… அதெல்லாம் பொரட்டக்கூட மாட்டேளா ? ‘

‘ஜோசியப் புக் படிப்பேன்! என் ராசிக்குப் பலன் தெரிஞ்சுப்பேன்! மத்தபடி பத்திரிகை புரட்டினா, சிரிப்பு துணுக்கு இருந்தால் படிப்பேன்! ‘

நான் என் கைக்கடிகாரத்தைப் பார்த்தேன். ‘மணி அஞ்சாகப்போறது. கதா காலட்சேபத்துக்குப் போலாமா. ‘

ராமகிருஷ்ணன் சுவரில் இருந்து கடிகாரத்தைப் பார்த்தான். ‘இப்பவே போய் என்ன சார் பண்றது. நிறைய நேரம் இருக்கு… ‘ என்றவன் ‘கார்லதானே போகப்போறோம்… ‘ என்றான்.

‘ஐய என்னால நடக்க முடியாது! ‘ என்று சிரித்தேன். ‘ஒண்ணு பண்ணுவம். நீ கோவிலுக்குப் போவாய் இல்லியா. ‘

‘போவேன் சார். ‘

‘எந்தக் கோவிலுக்கு ? ‘

‘இந்தக் கோவில்னில்லை. சன்னிதியைப் பார்த்தால் நின்னு கன்னத்ல போட்டுக்கர்றதுதான்… ‘ என்று சொல்கையில் சற்றே நாணப்பட்டான்.

‘விரும்பி எந்தக் கோவிலுக்கு அடிக்கடி போவாய். ‘

‘மலைக்கோட்டை அடிவாரப் பிள்ளையார் கோவில். ‘

‘அவ்ளவு துாரம் நடந்தா! ‘

‘ஆமா ‘

‘நடந்தே திரும்புவியா ? ‘

‘ஆமா. என்னண்ட மாருதி காரா இருக்கு ? ‘

‘தப்புதான். கேட்டது தப்புதான்! ஒண்ணு பண்ணுவம். ‘

‘என்ன சார் ‘

‘இப்ப கிளம்புவோம். நேராப் போலாம். செய்ன்ட் ஜோசப் காலேஜ் பக்கத்துல காரை நிறுத்தறேன். நீ கோவிலுக்குப் போயிட்டு வா. நான் காத்துண்டு இருக்கேன். ‘

‘சரி சார்! ‘

‘காரை வெளியே எடுத்தேன். உள்ளே உட்கார்ந்து சாவியைப் போட்டபோது ர்ர்ரென்றது கார். விழித்துக்கொண்டு குறட்டை விட்டது! ராமகிருஷ்ணனிடம் கேட்டேன். ‘ஓயாமாரி வழியாப் போலாமா, இல்லே டெளன் வழியாப்போலாமா ? ‘

‘ஓயாமாரி வழியாவே போலாம் சார். ‘

‘பயம் இல்லியே. ‘

‘பகல்லே பயம் கிடையாது! ‘

காரை பின்பக்கமாக நகர்த்தி ஷெட்டுக்கு வெளியே கொண்டு வந்து திருப்பி நிறுத்தி சண்பகத்தைப் பார்த்துத் தலையசைத்தேன்.

அவள் ஷெட்டின் கதவுகளைச் சார்த்திக் கொண்டாள்.

/தொ ட ர் கி ற து/

Series Navigation

ம. ந. ராமசாமி

ம. ந. ராமசாமி