திருவண்டம் – 2

This entry is part [part not set] of 34 in the series 20050206_Issue

ஜாவா குமார்


‘நிகர்வமா ? அப்படி ஒரு சொல்லை இதுவரை கேள்விப்பட்டதேயில்லை ஐயா! ‘

‘நும் காலச்சூழலில் மறைந்துள்ளன போலும். கோடிக்கு மேலும், பத்தின் பல மடங்குகளாய், அற்புதம், பதுமம், கர்வம், நிகர்வம், பிருந்தம் என்று பரார்த்தம் வரை எண்கள் பலவுள. அவை சொல்வதன் சூக்குமங்களே மறைந்திருக்கையில், அந்த எண்களும் தொலைந்தன போலும். போகட்டும். தொடர்வீர். ‘

‘இந்த நியூரான்கள் தத்தம் நியூரோட்ரான்ஸ்மீட்டர்களின் துணைகொண்டு பொறிகளின் தூண்டுதலில், கார்டெக்ஸ் தாலமஸ் என்ற மூளைப்பகுதிகளூடே தங்களுக்குள் செய்தி பரிமாறிக் கொள்வதே சிந்தனை ஓட்டம் என்பது ஒரு கருத்து. இதை ஆய்வகத்தில் உறுதிப்படுத்தியுள்ளோம். இந்த நியூரான் அலைகள் ஒரு குறிப்பிட்ட கால அளவில், இருபத்துஐந்து மில்லிசெகண்ட் என்னும் நொடித்துளிகளில், தொடர்ந்து பரப்பும் இந்த நாற்பது ஹெர்ட்ஸ் மின்வீச்சைப் பதிவும் செய்திருக்கிறோம். இந்த மின்னொளிவீச்சு ஒரு நிகழ்வே அன்றி இவற்றைச் செலுத்தும் காரணப் பொருள் இன்னும் கண்டுபிடிக்கப் படவில்லை. ஆக இதைப் பிரக்ஞை என்று அறுதியிட்டுச் சொல்ல முடியவில்லை. ‘

‘இது கனவிலும் நிகழுமோ ? அப்போது நனவுக்கும் கனவுக்கும் என்ன வேறுபாடு ? ‘

‘ஆம் ஐயா, இது கனவிலும் நிகழ்வது. ஆனால் கனவில் முதுகுத்தண்டுக்கு இனி உடலின் பொறிகள் யாவும் ஓய்வெடுக்க வேண்டும் என்ற செய்தி போய், மூளையின் கார்டெக்ஸ் பகுதியுடன் சென்ஸரி இன்புட் மோட்டார் அவுட்புட் தொடர்புகள் உடன் துண்டிக்கப் பட்டிருக்கும். கனவுக்கும் நனவுக்கும் இதுதான் வேறுபாடு. ‘

‘யோகரே, அங்ஙனமெனில் கனவில் நீர் பெறும் அனுபவத்தைப் பெறுவது எது என்று கண்டாரோ ? ‘

‘இல்லை, தெரியவில்லை ஐயா! ‘

‘அது தூல உடலுக்குள் கலந்த சூக்குமசரீரம்; நுண்ணுடல். ஐம்பொறிகளும் இயங்காவிடினும், அவற்றின் தன்மாத்திரைகள் ஐந்தும், மனம், புத்தி, அகங்காரம் மூன்றும் சேர்ந்த இன்பமும், துன்பமும் துய்க்கவல்ல புரியட்டக உடம்பது. ‘

‘அதுதான் ஆன்மாவா ஐயா ? ‘

மெல்லச் சிரித்தார் முதியவர்.

‘யோகரே, புரியட்டக உடல் ஆன்மா அல்ல. அதைச் செலுத்தும் புருடனே ஆன்மா. மேலே சொல்லும். ‘

‘கடந்த நாற்பதாண்டுகளில் க்வாண்டம் என்ற அதிநுண்துகளின் செயல்பாடுகளைக் குறித்த ஆய்வுகள் இந்தப் பிரக்ஞை பற்றிய ஆய்வில் பல புதிய தேடல்களுக்கு வழிவகுத்துள்ளன. ‘

‘அதற்கு முன்னால் ஆற்றல் என்பது அலைகளாய் மட்டுமே இயங்குகின்றன என்ற கோட்பாடிருந்தது. அதுவரை ஒரு பொருளின் விசை குறித்த விளக்கங்கள் ஒரு வரம்பில் நிகழ்வன என்றே அறிவியலார் கருதி வந்தனர். ஆனால் க்வாண்டம் துகளியக்கக் கண்டுபிடிப்பும், அவற்றின் கட்டுகடங்காத ப்ரோபலிடி தன்மையிலான விசை குறித்த கண்டுபிடிப்புகளும் முற்றிலும் ஒரு புதிய கண்ணோட்டத்தைக் கொண்டு வந்தன. இந்த அதிநுண்துகள் உலகத்தில் யாதொரு வரம்புமில்லை. இந்த சக்தித்துகள்களின் செயல்பாடுகள் பிரமிப்பானவை. பிரபஞ்ச முழுமையும் நிறைந்திருக்கும், ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய இந்த அதிநுண்துகள்களுக்கு இடையேயான செய்திப் பரிமாற்றம் ஐன்ஸ்டானி ன் ஒளிவேகத்தடையையும் கடந்தவை. அவற்றுக்கிடையே காலதூர அளவை என்ற கணக்குமில்லை. இந்தக் கண்டுபிடிப்புகளின் விளைவாகவே அறிவியலார் கவனம் பிரக்ஞையின்பால் திரும்பியது. ‘

‘நம் மூளையின் நியூரான்களிடையேயான சிந்தனை ஓட்டம் இந்தக் குவாண்டம் தேற்றத்துக்குப் பொருந்தி வருவதாய்க் கண்டுள்ளோம். சுருக்கமாய்ச் சொன்னால் நம் ஞாபகம் என்பதே மூளைக்குள் இல்லாமல், ஒரு புறத்தூண்டுதலால் நிகழ்வதோ என்றும் தேட ஆரம்பித்திருக்கிறோம். திடாரென்று உதிக்கும், நாம் இதுவரை அறிந்திராத புதுப்புதுச் சிந்தனைகள் இப்படிக் குவாண்டம் துகள்களின் தொடர்புகளாலேயே என்றும் கருதுகிறார்கள். ஆனால் இந்தத் தூண்டுதல்களின் மையம் மூளைக்குள் எங்கே என்று இன்னும் ஒருமித்த கருத்தில்லை. ‘

‘யோகரே, நும் கருத்தில் இது எங்கு நிகழ்வது என்று சொல்லும். ‘

‘ஐயா, என் கருத்து அறிவியலார் எர்வின் ஷ்ரோடிங்கர் மற்றும் ரோஜர் பென்ரோஸ் போன்றோர் கருத்துகளை ஒட்டியதே. மேலும் நியூரானின் சைட்டோஸ்கெலிடன் என்ற உட்கட்டமைப்பின் பகுதியான மைக்ரோட்யூபுள் என்ற அதிநுண்குழல்களே இந்தக் குவாண்டம் பரிமாற்றத்தின் மையம் என்று கருதுகிறேன். ஆனால் அதிலும் விடைகாண முடியாத சில சிக்கல்கள் இருக்கின்றன. ‘

‘தொடரும் யோகரே! ‘

****

The neuron level of description that provides the currently fashionable picture of the brain and mind is a mere shadow of the deeper level of cytoskeletal action – and it is at this deeper level where we must seek the physical basis of mind.

– Roger Penrose (Shadows of the Mind, 1994)

அவ்வுடலின் நின்றுயிர்ப்ப, ஐம்பொறிகள் தாம் கிடப்பச்

செவ்விதின் அவ்வுடலிற் சென்றடங்கி – அவ்வுடலின்

வேறொன்று கொண்டு விளையாடி, மீண்டதனை

மாறலுடல் நீயல்லை மற்று.

– மெய்கண்டதேவர் (சிவஞானபோதம் – கனவுடலை விளக்க வந்த மூன்றாம் நூற்பாவின் எ.கா. செய்யுள்)

****

தொடரும்..

****

Series Navigation

ஜாவா குமார்

ஜாவா குமார்