நிழல் அழைத்துச்சென்ற இடங்கள்

This entry is part [part not set] of 57 in the series 20050106_Issue

எஸ். ஷங்கரநாராயணன்


—-

வேதகிரி பட்டத்துக்கு வந்தபோது இளம்பிரகாச ஆசான் என நாமரூபணம்

ஆயிற்று. நல்ல அழகன். முன்சிரைத்த குடுமி. காதில் கடுக்கன்கள் ரோஜா பூத்தாப்போல. கண்ணில் காந்தம். திமிர்ந்த தோளில் வசீகர வாலிபம். புதிய பொறுப்பு ஏற்கிற திகைப்பெல்லாம் இல்லை. ஐயோ சிரிப்பே பால்குடம் கவிழ்ந்தாற் போல இருந்தது. ஜன மொத்தமும் கன்னத்தில் பட் பட்டென்று போட்டுக் கொண்டது. மணிப்பிரவாள பிரவாகம். கணீரென்ற காண்டாமணிக் குரல். நாலாபக்கமும் பார்வையை வீசியபடி கையை அந்தஸ்தாய் எளிய நளினத்துடன் அசைத்துப் பேசுவான். பேசுவார். ஸ்ரீ இளம்பிரகாச ஆசான்.

பெரியவருக்கு முன்னைப்போல தேக உற்சாகம் இல்லை. கண்ணில் புரைகண்டு பார்வையிலும் சிறு தடுமாற்றம். என்ன தேஜஸ். விறுவிறுவென்று அவர் நடந்து போனால் தொண்டர் குழாம் பின்பற்றி கூட ஓடிவரும். அவரிடம் எந்தக் காரியத்திலும் ஒரு பளீரிட்ட மின்னல் தெறிப்பு இருந்ததாக ஜனங்களுக்கு பிரமை இருந்தது. ஸ்ரீலஸ்ரீ ஞானப்பிரகாச ஆசான். நல்ல சங்கீத ரசிகர். அவரே அழகாய்ப் பாடவும் செய்வார். பஜனைகள் நாமாவளிக் கீர்த்தனைகள் என அவர் படத்தின் முன்னால் விசேஷநாட்களில் வைபவங்களில் இன்றும் சம்பிரதாயங்கள் இருக்கிறது. திரவியமும் சால்வை மரியாதையும் பெரியவரிடம் பெறுவதை பாக்கியமாகக் கருதினார்கள் கலைஞர்கள். எத்தனையோ பாடல்கள் அவரைப்பற்றி புனைந்துருகிப் பாடி மகிழ்ந்தார்கள். அவரது பிறந்த நாள் ஊர்க் கொண்டாட்டமாக இருந்தது.

படம் எடுத்த பாம்பு பாய்சுருட்டிக் கொண்டாற்போல ஸ்ரீலஸ்ரீ உடலொடுக்கம் கண்டார். வெளியிடம் போக்குவரத்து குறைந்து கிட்டத்தட்ட இல்லை என்றாகிப் போனது. நடமாட்டமும் மடவளாகத்துக்குள்ளேயே. பூஜைகள் மாத்திரம் செய்வார். பேச்சு அறவே அற்று மனசு உட்புறம் குவிந்து கமழ்ந்தது. வில்வப்பழம். மடத்தின் நிர்வாகம் இளம்பிரகாசர் கைக்கு வந்தது.

மடத்துக்கு தனி அடையாளங்கள், விறுவிறுப்பு வந்தாப்போல இருந்தது. நியதிகள் கடிகாரக் கணிப்புகளுக்குட்பட ஆரம்பித்திருந்தன. இளம்பிரகாசர் காலக்கடிகை கட்டிக் கொள்ளவில்லையாயினும் அறையெங்கிலும் அவை கணித்தபடி இருந்தன. உஷத்கால பூஜையில் நடுவே ‘கடிகார மணி ‘ ஒலித்தது. நந்தவனத்தில் புதிய பட்சிகளின் கோலாகலம். ஓய்வுநேரங்களில் அவரே வேதபாடசாலைக்கு வந்து குழந்தைகளின் சம்சய நிவர்த்திகள் போதனைகள் என மேற்பார்வை வைத்துக் கொண்டிருந்தார். குட்டிக்கதைகள் நிறையச் சொன்னார். சிறிய அளவில் ஹாஸ்யங்களும் அவர் சொல்வார். சட்டென்று பழமொழி எடுப்பும் உதாரணத் தெறிப்புகளும் உவமை வியூகங்களும். நல்ல கலை நேர்த்தி இருந்தது அதில் –

ஜவுளிக்கடை நொடிச்சுப் போனா முதலாளி தினம் தினம் பட்டு வேட்டி கட்டுவான்!

குருடன் தண்ணிக்குப் போனா எட்டாள் வழி காட்டப் போகணும்!

மருமகள் புண்ணியம் பண்ணியிருந்தால் மாமியார் நோகாம பரலோகம் போகலாம்!

ஊருக்கு ராஜாவானாலும் குழந்தை மார்ல பயமில்லாம எத்தும்!

— யாவர்க்குமாம் இறைவர்க்கு ஒரு பச்சிலை

யாவர்க்குமாம் பசுவுக்கு ஒரு வாயுறை

யாவர்க்குமாம் உண்ணும்போது ஒரு கைப்பிடி

யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே

பெரியவர் மெளனமாய் எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தார். சில மாற்றங்கள் அவருக்கு உற்சாகமாய் இருந்தது. புதுரத்தம் பாய்ந்தாப்போல இருந்தது மடத்துக்கு. அவர் பேசும்போது கூட்ட மொத்தமும் உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டிருக்கும். மகா மெளனம் குடியமர்ந்திருக்கும். பறவைகளின் சிறகடிப்பு கூட கேட்காது. அதாவது, பக்தர்களின் காதுகளில் விழாது. மிக மெல்லிய குரலில் பெரியவர் பேசுவார். அதில் ஆசிர்வாத த்வனி இருக்கும். கருணை இருக்கும். ஒரு ஞானபீடம் அந்தக் குரலில் ஸ்தாபிக்கப் பட்டிருக்கும்…

இதுவோ சிறு விளையாட்டு போலிருந்தது. சொல் விளையாட்டு. ஆழமான கருத்துக்கள்தாம் – அவை யோசிக்க வைக்கவே செய்கின்றன. ஆனால் சொல்முறை எளிமை… அது தவறா என்று கணிக்க அவரால் முடியவில்லை…

‘ ‘குழந்தைகளோட ஹோட்டல்ல சாப்பிடப்போறோம். நாம… நம்ம காரியம்… நம்ம குடும்ப சந்தோஷம் இப்படியேதான் நம்ம அக்கறைப் படறோம். மதிய வேளை – வேண்டியதைக் கேட்டு ஆசையா – /ஜாங்கிரி, ஐஸ்க்ரீம்… என ஒரு பட்டியலை இளம்பிரகாசர் அடுக்குகிறார்/ குழந்தைகள் சாப்பிடறதை ரசிக்கிறோம். அதே சமயம் நாம சாப்பிட்ட தட்டை எடுக்கற இதேவயசுக் குழந்தைத் தொழிலாளிகள்… அவாளை நினைச்சிப் பாக்கறோமா ? அவாளுக்குப் பசிக்காதா ? அவாளுக்கும் சாப்பாட்டு நேரம்தானே… இல்லையா ?… ‘ ‘ என நிறுத்திப் புன்னகை செய்கிறார்.

வேத பாடங்கள் நடத்துகையில் இளம் பிரகாசர் முற்றிலும் வேறாளாகிப் போனாப் போலிருந்தது. தெளிவும் துல்லியமும் கம்பீரமும் களையும் வந்திருந்தது. ஒலிபெருக்கி தவிர்த்த பெருங்குரல். பிசிறற்ற குரல். சங்கீதக்குரல். சட்டென்று தமிழ் மேற்கோள்களும் சரளமாய்ப் புரண்டு மேலெழுந்து வந்தன. பெரியவரின் விளக்கங்களை மேலதிக அழுத்தமாய் அவரால் ஸ்தாபிக்க முடிந்தாப் போலிருந்தது.

ஸ்ரீ இளம்பிரகாச ஆசான் பட்டத்துக்கு வந்த ஏழாம் வருஷம் பெரியவர் காலம் கழிந்தது. நாடி ஒடுங்க ஆரம்பித்து மருத்துவ குழாம் சுற்றியமர்ந்திருக்க, வேத பாராயண முழக்கங்கள் கேட்டபடி, ஒரு முகூர்த்தப் போதில் அவர் ஆத்மா உடலைத் துறந்தது.

—-

ஸ்வாமிஜி முன்னால் பாட அந்தப் பெண் ஆசைப்பட்டது. ஒடிசலான சிற்றுடம்பு. கண்ணில் பட்டாம்பூச்சியான ஆர்வத் துடிப்பு இருந்தது – ஜெகந்நாதன் இந்திரா. பட்டிமன்றங்கள் கவியரங்கங்கள் என மடத்து வளாகங்களில் புதிய ஒலிகள். தனி மண்டபம் கட்டியிருக்கிறது இப்போது. திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி, கதைப்போட்டி, கட்டுரைப் போட்டி என இளம் சிறார்கள் உற்சாகமாய் உள்ளே வந்து கலந்து கொள்கிறார்கள். எப்போதும் கலகலப்பாகக் கிடந்தது வளாகம். பெரியவரின் மகா சமாதிமேல் அச்சசலாக அவரேபோல சுதைபிம்பம். வடித்தவன் மகா அனுபவஸ்தன். பெரியவருக்கு அழிவில்லை என நிரூபித்து விட்டானே ?

மூத்த கலைஞர்கள் இப்போதெல்லாம் இங்கே கச்சேரி என வருகிறதில்லை. பெரியவர் காலத்தோடு மாற்றங்கள் – ஸ்ரீ இளம்பிரகாசரின் பிராயத்துக்கு அவர்முன்னே பாட அவர்கள் லஜ்ஜைப்பட்டார்களோ தெரியாது. சகடபுரம் ராஜாமணி ஒரு கும்பாபிஷேகத்தில் கன ஜோராக வயலின் வாசித்துக் கொண்டிருந்தார். ஸ்ரீ இளம்பிரகாசர் திடாரென்று அந்த வளாகத்துக்குள் பிரசன்னமானார். அரங்கம் பரபரப்பானது. எல்லாரையும் உட்காரும்படி அமர்த்திவிட்டு முன்வரிசையில் புதிதாய்ப் போடப்பட்ட நாற்காலியில் அமர்ந்தார் ஆசான். கச்சேரியை ரசித்தார். அருமையாய் வாசித்தார் சகடபுரம். என்றாலும் கச்சேரியின் வீர்யத்தை அடக்கினாப்போல ஆசானின் திடார் வருகை அமைந்ததை அவர் சிலாகிக்கவில்லை போலிருக்கிறது. கச்சேரி முடிவில் தாம்பாளம் நிறைய பழங்களும் சால்வையும் அளித்து மாலையணிவித்து ஆசி வழங்கி வழக்கமான உற்சாகத்துடன் பேசினார் ஆசான். அப்பாவோட வித்தை அப்படியே பிள்ளைக்கும் இறங்கியிருக்கு, என்று பேசினார். எல்லாருக்கும் ஆச்சரியம் அதில் – ஏனெனில் சகடபுரத்தின் தந்தை வித்வான் அல்ல. வேறு எந்த வித்வானை நினைத்தபடி ஆசான் இப்படி வார்த்தையாடினார் என யாருக்கும் விளங்கவில்லை. என்றாலும் நிகழ்ச்சியும் விஷயமும் பெரிதாக்கப் படவில்லை.

ஆ அந்தக் கண்கள். சகலத்தையும் பார்வை வலைக்குள் இழுத்து விழுங்குகிற அதன் ஆர்வப் பரபரப்பு. ஜெ. இந்திரா. ‘ ‘ஸ்வாமி ஒரு விண்ணப்பம்… ‘ ‘ என முன்குவிந்து வணங்கினாள் இந்திரா. என்ன குரல். என்ன குழைவு.

‘ ‘சரி ‘ ‘ என்றார் ஆசான்.

ஜெ. இந்திராவின் கச்சேரி களை கட்டியது. நிறைய இளைய தலைமுறைப் பிரதிநிதிகள் கலந்து கொண்டார்கள். நிறைய புதிய தலைமுறைக்காரர்கள் அவர் முன் பாட முன்வருவார்கள் போலிருந்தது. இளம் கலைஞர்களை இப்படி ஊக்குவிப்பது நல்ல விஷயமாய்ப் பட்டது ஆசானுக்கு. நல்ல குரல் இந்திராவுக்கு. அவள் புதிதாய் ஒரு பாடலுக்காய் ராகச்சாயல் எடுத்தபோது ஷண்முகப்ரியாவா சிம்மேந்திர மத்யமமா என சிறு தள்ளாட்டம் ஏற்பட்டது ஆசானுக்கு. கல்யாணியும் லதாங்கியும் இப்படிக் குழப்புகிறது உண்டு. அவளுக்கு /கலாபரணி/ என விருது வழங்க வேண்டுமாய் மனசில் குறிப்பு விழுந்த கணம் அது.

பக்கத்தில் நிர்வாக அலுவல்களை மேற்பார்க்கிற தனஞ்ஜெயனிடம் மெல்ல விசாரித்தார் ஆசான். ‘ ‘பொண்ணு பாட்டே சுகமில்லை. ராக சுத்தம் இல்லை அதுங்கிட்ட… ஒருமாதிரி கலந்துகட்டித்தான் ஒப்பேத்தறது ‘ ‘ என முகஞ்சுளித்தார் அவர். எதிலும் திருப்தி காணாத மனுஷன் தனஞ்ஜெயன். பெரியவர் காலத்தில் இருந்து அவர் கொடி அங்கே உச்சத்தில். விறைத்த முதுகுடன் வளைய வருகிறவர். சமீபத்திய நடைமுறை மாற்றங்களை அவர் ரசிக்கவில்லை. மடத்துக்கென சில நியதி நிஷ்டைகள் கடமைகள் இருக்கின்றன. காலம் அவற்றைப் பறித்துவிட அனுமதிக்க முடியாது. மடத்தின் அழகே அதன் பழமைதான். இந்தச் சிரிப்பும் கலகலப்பும் அவருக்கு ஒட்டவில்லை.

ராத்திரி எட்டு மணிக்குமேல் அங்கே கொலுசு நடமாட்டம் காண முடியுமா ? மனுஷாள் தராதரம் பிரித்து அவரவர்க்கு எல்லைகள் வரையறைகள் வரைமுறைகள் இருந்த காலம் ஒன்று உண்டு.

மடத்தின் சார்பில் புதிய பத்திரிகை துவங்குகிற அளவில் முயற்சிகள் நடக்கிறது. அது முழு ஆன்மிகப் பத்திரிகையும் அல்ல! இப்போது அரசியல் பிரமுகர்கள் வந்து வந்து புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்கள். பெரியவரை இத்தனை புகைப்படம் எடுக்க முடியுமா ? மடத்துக்கு தொலைபேசி அழைப்பு வந்தால் யாராவது எடுத்துப் பேசி பெரியவரிடம் தகவல் சொல்வார்கள். பெரியவர் பதில் தருவார். அதைக்கேட்டுக் கொண்டு மறுமுனைக்குத் தெரிவிப்பார்கள். பெரியவர் தொலைபேசியைத் தொட்டதேயில்லை.

ஸ்ரீ இளம்பிரகாச ஆசானுக்கு செல்ஃபோனே உண்டு! கிளர்ச்சியான தற்கால சினிமா மெட்டில் அழைப்பொலி!

‘ ‘யாரும்மா ? ‘ ‘

‘ ‘நான் இந்திரா. பாடகி ஸ்வாமி… ‘ ‘

‘ ‘தெரியறது தெரியறது. ரொம்ப அழகாப் பாடினே. உன் சங்கீதம் அப்படியே மனசுலயே நிக்கறது… ‘ ‘ என்றவர் ‘ ‘உக்கார வெச்சுட்டேன் ‘ ‘ என்றார் நகைச்சுவையாய்.

பேசப் பிரியம் கொண்டவராய் இருந்தார் ஆசான். யாராய் இருந்தாலும் என்ன பிரச்னை என்றாலும் பெரியவரிடம் நேரில் வந்து பேசி விவாதித்துப் போவார்கள். ஃபோனிலேயே கலந்தாலோசிப்பது என்னவோ போலிருந்தது தனஞ்ஜெயனுக்கு. அரசியல் பிரமுகர்கள் என்று யார் யாரோ இரவுபகல் என்றில்லாமல் அவருடன் பேசுகிறார்கள்…

மேடையில் பேச குறிப்பெடுத்துக் கொள்கிறார் ஆசான். ஒரு பத்திரிகை வெளியீட்டு விழா என்றால் – ‘ ‘வெளில வன்முறையும் ஆபாசமும் ரொம்ப அதிகமா இருக்கு. அதை நாம கண்டிக்கறாப்ல பத்திரிகைல கதைகள் புஸ்தகங்கள் எழுதணும். சமூக மாற்றங்களைக் கொண்டுவர எழுத்தாளர்கள் பங்கு ரொம்ப முக்கியம்… ‘ ‘ என்கிற தினுசில் அறிவுரைகள் வழங்க ஆரம்பித்திருந்தார்.

ஆசானின் போக்குவரத்துக்கு என தனி கார் வாங்கியிருக்கிறது. எத்தனை கூட்டங்கள், விழாக்கள், திறப்பு விழாக்கள்.

செல்ஃபோன் அடிக்கிறது. ‘லஜ்ஜாவதியே… ‘ பாடல் மெட்டு. ஆசானின் சார்பில் தனஞ்ஜெயன் எடுத்தார். அந்தப் பெண் எழுத்தாளரின் பத்திரிகை வெளியீட்டுக்குத்தான் ஆசான் போய்வந்திருந்தார். ‘ ‘ஸ்வாமிஜி இருக்காளா ? ‘ ‘ – எல்லாருக்கும் இப்படி செல்ஃபோன் எண்ணைத் தருகிறாரே என்றிருந்தது தனஞ்ஜெயனுக்கு.

‘ ‘பத்திரிகை பாத்தேன். கொஞ்சம் இதுவாத்தான் இருக்கு… ‘ ‘

‘ ‘காலம் அப்பிடி! ‘ ‘

‘ ‘காலம் மாறிடுத்துன்னு யாரும் மூக்கால சாப்பிடறதில்லை! ‘ ‘ ஆசான் சிரிக்கிறார்.

கலாபரணி விருதை வருஷம் ஒருவருக்கு வழங்குவதாக மடத்தில் ஆலோசனை நடக்கிறது – கலாபரணி என்ற பட்டத்திலேயே மடத்தின் பதக்கப் பொலிவும் வெளியே சமூக அந்தஸ்துடன் மிளிர்கிறது. ஸ்வாமிஜி புதிய நிகழ்ச்சிகள் என எதுவும் இல்லாத ஒரு தருணத்தில் தமது பிறந்த ஊருக்கு விஜயம் செய்தார். தாம் ஆரம்பத்தில் பாடம் கற்ற பாடசாலையைப் பார்க்க ஆர்வம் திடாரெனக் கிளைத்தது ஆசானுக்கு.

பாடசாலை சிதிலமடைந்து கொண்டிருந்தது. அவருக்கு வருத்தமாய் இருந்தது. உடனே சுறுசுறுப்பாய் புனர்நிர்மாணப் பணிகளுக்கு அவர் உத்தரவுகள் இட்டார். அப்போது நிர்வாகிகள் எதிர்பாராத இன்னொரு விஷயமும் நடந்தது…

‘ ‘ஸ்வாமிஜி நமஸ்காரம்! ‘ ‘

‘ ‘இந்திரா!… உன் குரல் கேட்டு எத்தன்னாள் ஆச்சி. கல்யாணத்துக்கப்பறம் இப்பதான் பேசறே… ‘ ‘

‘ ‘என் ஹஸ்பெண்ட் புதுசா ஃபேக்டரி ஆரம்பிக்கறார். நீங்க திறந்து வெச்சி ஆசிர்வாதம் பண்ணணும்… ‘ ‘

‘ ‘வரேன் ‘ ‘ என்றார் ஆசான்.

செல்வாக்கு மிக்க ஆசான் அந்தத் திறப்பு விழாவுக்கு வந்தது எல்லாருக்கும் வியப்பாய் இருந்தது ஒரு விஷயம்.

ஜவுளிக்கடை திறப்பு விழா, உணவு விடுதி திறப்பு விழா – என சகஜமாய் அவரை அழைக்க ஆரம்பித்திருந்தார்கள். ஆசான் காலனி – என குறிப்பிட்ட சமூகத்தை இழுக்க அவர் பெயரிட்டு புதிய கட்டட வளாகங்கள், ஊரெல்லை பிளாட்களில் நகர் பெயர்கள் அறிவிக்கப் பட்டன.

காலத்தின் உருளலில் வங்கிக் கணக்கு குளறுபடிகளுக்காக இந்திராவின் கணவரது ஃபேக்டரி நடைமுறைகள் கண்காணிக்கப் பட்டன. விசாரணை என்ற பேரில் மடத்துக்குள் காவல்துறை புக ஆரம்பித்தது பிறகுதான்.

—-

storysankar@rediffmail.com

s shankaranarayanan 2/82 mugappair west chennai 600 037

ph/res 26258289 2652194

Series Navigation

எஸ்.ஷங்கரநாராயணன்

எஸ்.ஷங்கரநாராயணன்