நீலக்கடல் – ( தொடர்) – அத்தியாயம் -41

This entry is part [part not set] of 46 in the series 20041014_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


மாதாவுடல் சலித்தாள் வல்வினையேன் கால்சலித்தேன்

வேதாவுங் கைசலித்து விட்டானே – நாதா

திருவிருப்பையூர் வாழ்சிவனே யின்னமோ ரன்னை

கருப்பையூர் வாராமற் கா

– பட்டினத்தார்

—-

நண்பனே! உனக்கொரு விடுகதை போடுவேன். சிவஞான சித்தியார் எனது செவியிலிட்ட விடுகதை. எனக்கும் உனக்குமுள்ள இடைவெளியை விஸ்தாராமாய்ச் சொல்லும் விடுகதை, எனது கதை, ஆம்.. ஆன்மா தொழிற்படும்கதை..

ஓர் அரசன் அமைச்சர்களோடும், தனது படைத்தலைவர்களோடும், பரிசனங்களோடும் உலாச்சென்று திரும்பி அரண்மனையினில் புகும்பொழுது வாயில்தோறும் அவர்களை விடைகொடுத்து நிறுத்திவிட்டு, அந்தப்புரத்தில் தனித்துச் செல்கின்றான்.

யாரந்த அரசன் ? அவனது படைத்தலைவர்களும், பரிசனங்களும் யார் ? யோசித்துவை. நேரம்வரும்போது சொல்கிறேன்.

….

இருபதாம் நூற்றாண்டு….

‘பெர்னார் இவைகளெல்லாம் என்ன ? ‘ – ரிஷார்.

‘ஓலை நறுக்குகள்; இரண்டு மூன்று நூற்றாண்டுகள் தென்னிந்தியர்கள் எழுத உபயோகப்படுத்திய ஏடுகள். ‘ – பெர்னார்.

‘அப்படியா இவற்றில் இருப்பது என்ன ? பண்டைய தமிழ் இலக்கியத்தின் மூலமா ? ‘

‘இல்லை. சொல்லப்போனால், இதுவும் ஒருவகையில் ஆனந்தரங்கப்பிள்ளையின் நாட்குறிப்பினைப்போன்றதே. பதினெட்டாம் நூற்றாண்டின் இடைப் பகுதியில், மாறனென்கிற புதுச்சேரித் தமிழரால் எழுதப்பட்டிருக்கிறது. தங்கள் சினேகிதர் பெர்னார் குடும்பத்தைச் சேர்ந்த மனிதரொருவர் சம்பந்தமான தகவல்கள் இவ்வோலை நறுக்குகளில் உள்ளன. அடடா..ஆனால் இதனைக் கொண்டுவருவதற்கு, நான் பட்டபாடு இருக்கின்றதே.. எப்படிச் சொல்வேன் ?. -வேலு.

‘ழெ நெ கொம்ப்ரான் பா சே கில் தி, கே தீத்-தோன் அமி ? ( Je ne comprends pas ce qu ‘il dit. Que dit-ton ami ? -அவர்சொல்வது எனக்கு விளங்கவில்லை. உன் நண்பர் என்ன சொல்கிறார். ‘ – ரிஷார்.

‘ரிஷார், செத் உய்ன் பர்த்தி ட் ‘அழாந்தா தன் தமுல் எக்ரி, சுய்ர் தெ ஃபேய் தெ பால்ம், கீ எத்தே யூத்திலிசே பர் செ ஆன்சேஸ்த்ர், ழெ தெ ‘எக்ஸ்ப்ளிக்கிறே பாந்தான் லெ தினே ( Richard, C ‘est une partie de l ‘agenda d ‘un tamoul, ecrit sur des feuilles de Palmier qui etaient utilisees par ses ancetres. Je t ‘ expliquerai pendant le diner-) வேலு சற்றுமுன் சொன்னதை பெர்னார் பிரெஞ்சில் மொழிபெயர்த்தான். பிறகு தன் பிரெஞ்சு நண்பனிடம், ‘எல்லாவற்றையும் சொல்லவேண்டுமென்றால், இப்போது நேரமில்லை, இரவு உணவின்போது தெரிவிக்கிறேன் ‘, என்பதாகத் தெரிவித்தவன், உள்ளூர் சிநேகிதனிடம், ‘வேலு! நீ மேலே சொல்லு. முழுவதையும் படித்துப்பார்த்தாயா ? நான் எதிர்பார்க்கும் செய்திகள் இதில் உண்டா. மாறன் யார் ? ‘ தொடர்ச்சியாகக் பெர்னார் கேள்விகளை அடுக்குகிறான்..

‘பெர்னார் உன் கேள்விகளை ஓரளவு ஞாபகம் வைத்துக்கொண்டு அதே வரிசையில் பதில்களைச் சொல்ல முயற்சிக்கிறேன் ‘. முழுவதும் படித்தாயா ? என்று கேட்டாய். படித்தேன் என்பதைவிட மேலோட்டமாகப் பார்த்தேன், என்றுதான் சொல்லவேண்டும். படித்தவரையில் நான் யூகித்தது என்னவென்றால், இதுவொரு முடிவும் ஆரம்பமும் இல்லாத நாட்குறிப்பு. இதுவரை கிடைத்துள்ள ஓலை நறுக்குகள், மூன்று அல்லது நான்கு நாட்களுக்கான குறிப்புகள் என நினைக்கிறேன். வேம்புலி நாயக்கர் நண்பரிடம், ‘நன்கு தேடிப்பார்க்குமாறு சொல்லியிருக்கிறேன். வேறு ஓலை நறுக்குகள், கிடைக்குமாயின், அவசியம் என்னிடம் கொண்டுவருவார்கள். இவ்வோலைச் சுவடிகளில் நீ எதிர்பார்க்கின்ற செய்திகளிருக்கின்றதா என்பதை நீதான் உறுதி செய்யவேண்டும். தவிர, இந்த நாட்குறிப்பு எழுதியது மாறனென்பதால், அவனைச் சுற்றியே வலம் வருகிறது என்பதையும் நாம் மனதில் நிறுத்தவேண்டும். இறுதியாக, இந்த ‘மாறன் ‘ என்பவன் யார் என்கின்ற கேள்வி எனக்குமுண்டு. உன் மூதாதையர் பெர்னார் குளோதன் நண்பர்களில் ஒருவனா ? அல்லது அவரது அலுவலக ஊழியர்களில் ஒருவனா என்பது தெளிவாகவில்லை. அதே சமயம், குளோதனின் நெருங்கிய வட்டத்துக்குள் இருந்திருக்கிறான். குளோதனைப்பற்றிப் பேசும்போதெல்லாம், தெய்வானை என்கின்ற தமிழ்ப் பெண்ணொருத்தி வருகிறாள். இந்த நாட்குறிப்பில் குளோதனுக்கும் தெய்வானைக்குமுள்ள காதல் பேசப்படுகிறது. ஆனால் கிடைத்துள்ள ஓலைச்சுவடிகளை வைத்து இப்போதைக்கு, அவ்விருவருடைய காதலுக்கு ஏற்பட்ட முடிவினைக்குறித்தோ, அல்லது குளோதனின் இறப்புக் குறித்தோ ஏதும் சொல்வதற்கில்லை. நமக்கு அதிர்ஷ்டமிருந்து, வேறு ஓலைச்சுவடிகள் கிடைத்தால், கூடுதல் தகவல்கள் பெறலாம். ஓலைப்படிகளைத் தேதிவாரியாக வரிசைபடுத்தி யிருக்கிறேன். உனக்கு விருப்பமென்றால் இப்போதே படித்துப்பார்க்கலாம் ‘- வேலு.

‘இரு வருகிறேன் ‘, என்ற பெர்னார் அருகிலிருந்த அறைக்குச் சென்று, பேனாவும், ஒரு சில வெள்ளைத் தாள்களும் எடுத்துவந்தான். ‘மணி மூன்று டா போட்டுக்கொண்டுவா! ‘ எனப்பணியாளிடம் கட்டளையிட்டுவிட்டு, வேலு எதிரே வசதியாக உட்கார்ந்து கொண்டான். ‘எங்கே முதலாவது கட்டினைப் பிரித்துப்படி, கேட்போம் ‘, என்றான்.

அங்கே திடாரென்று ஒருவிதமான அமைதி நிலவியது. ஓடிக்கொண்டிருந்த மின் விசிறியின் சத்தம், ஓங்கி ஒலிக்கிறது. முதற் கட்டினுடைய கயிற்றினைப் பிரித்து, சுற்றியிருந்த துணியின் முடிச்சினை அவிழ்த்தான். பெர்னார் படிப்பதற்கு வசதியாக எழுந்து சென்று மேசை விளக்கை, வேலுவின் அருகில் வைத்தான். ஓலைச்சுவடியைப் பிரித்து வரிசையாய் ஓலைப்படிகளை வாசிக்க ஆரம்பித்தான்.

ஓலை -1

பிரத்தியேகமான மாறன் தினப்படி சேதிகுறிப்பு: ருத்ரோத்காரி(1743ம்) வருடம் ஆனி(சூன்)மாதம் 26ந்தேதி புதன்கிழமை:

இந்தநாள் புதன்கிழமை காலமே வில்லியனூர்ச்சாவடிக்கு நொண்டிக்கிராமணியுடன் போய், சாவடிக்காவலன் வசமிருந்த எனது குதிரையைப் பிடிப்பிச்சுக்கொண்டு எனது வளவு சேர்ந்தேன். சாயங்காலம் மூன்றுமணிக்குமேலே வைத்தியரில்லம் புறப்பட்டுப் போனேன். நான் போனவேளை, துண்டினைத் தலையில்கொடுத்து, வைத்தியர் திண்ணையில் ஒருக்களித்து நித்திரைகொண்டிருக்கிறார். வாணியானவள் தகப்பானாருக்கு வெற்றிலைமடித்துக் கொடுத்துக்கொண்டிருக்கிறாள். என்னைப் பார்த்தமாத்திரத்தில், அவள் தகப்பனாரிடத்தில் தெரிவித்திருக்கவேணும், படுத்திருந்த சபாபதிப் படையாட்சி எழுந்துகொண்டார்.. நான் குதிரையை வீட்டெதிரே இருந்த கிச்சிலிமரத்தருகே காணிக் கல்லொன்றில் கட்டிப்போட்டு வரவும்,

ஓலை -2

‘வாடாப்பா மாறன் ? ஏது பார்த்து கனகாலம் ஆவுது. உன்னைகுறித்துத்தான், சித்தேமுன்னே நாங்கள் பேசலாச்சுது. பிராஞ்சு தேசத்துக்குப் கப்பலேறிவிட்டாயோ என்பதான சமுசயம் எங்களுக்கு ‘, என்றவரிடம்; ‘அந்தப்படிக்குத்தான் நடந்திருக்கவேணும்,. ஆனால் தெய்வரெத்தனத்தாலேயன்றி மனுஷர் எத்தனத்தில் ஏதும் நடப்பதில்லையென ‘ என்று சொல்ல அதைக்கேட்டுப்போட்டு, ‘ஏன் ? என்ன சங்கதி ? ‘ என்றவரிடம், புதுச்சேரிபட்டணத்திலே ஆட்கடத்துபவர்களிடம் துபாஷ் பலராம் பிள்ளையும் நானும் சிறைப்பட்டிருந்த வயணம் தொடங்கி, கும்பெனி அரசாங்கத்தால் மீட்க்கப்பட்ட வயணம்வரை ஆதியோடந்தமாக சொல்லலாச்சுது. இந்தச் சங்கதிகளை, சுறுக்காக அல்லாமல் இப்படிச் சொல்லும் நிமித்தியம் என்னவெனில், ‘இன்றையதினம் வாணியின் பூர்வோத்திரத்தை எப்படியாயினும் வைத்தியர் வாயால் அறியவேணும், எனது பட்ஷம் யோகமெனில், ஓரிரு வார்த்தைகளேனும் வாணியண்டை பேசவேணும் என்பதாகும்.

ஓலை – 3

எனது மனதிலிருப்பதை வைத்தியர் படித்திருக்கவேணும். இன்றிரவு, இங்கே போஜனம் பண்ணிவிட்டு நீ புதுச்சேரி பட்டணம் திரும்பலாமே ‘ என்றபோது நான் சம்மதி சொன்னேன். போஜனத்தின் போது, விளக்கொளியில் ஜொலித்த வாணி முகம் என்னைச் சங்கடப்படுத்தலாச்சுது. எல்லாவற்றையும் உதறிப்போட்டு, இந்தக் கணமே, அவள் கரம்பிடித்து வனாந்தரம், மலைகளென லோகமெங்கும் வலம்வரவேணுமென நினைப்பு கொண்டது வாஸ்த்தவம். இரவு முதல் ஜாமத்திற்குப் பிறகு, சபாபதி படையாச்சியும், நானுமாய் உப்பரிகையில் பாய்போட்டு அமர்ந்து, தாம்பூலம் தரித்தமாத்திரத்தில், ‘மாறன்! என்ன கவையாய் வந்தாய் ? எனக் கேழ்க்கவும், நான் தாமதமின்றி அவரிடத்தில், வாணியின் பிறப்புப் பற்றிய சந்தேகங்களை நிவர்த்திசெய்யவேணுமாய் கேட்டுப்போட்டேன். வைத்தியர் ஒருவேளை சொல்லுவாரோ, சொல்லமாட்டாரோவென்று நானிருந்து யோசனை பண்ணுகிறேன். அந்தமட்டில் வைத்தியர் என்பேரிலே மிகுந்த ஓய்வுபண்ணி, ‘நீ இது ரகசியம் வேறொருவர் அறியாமல் காத்தாயெனில், விபரமாய்ச்சொல்லமுடியும் என்றார். நான் அவ்வாறே சம்மதிபண்ண, அவர் தெரிவித்த வயணம்:

ஓலை -4

பதினைந்து பதினாறு வருடங்களுக்கு முன்னே, வைத்தியர் குடும்பம் கும்பகோணத்தில் ஜீவிதம்பண்ணி வந்திருக்கிறது. அவரது வளவிற்கு எதிர் வளவில், மதுரைநாயக்கர் நிருவாகத்தின் திருச்சிராப்பள்ளிக் கணக்கனாக உத்தியோகம் செய்த சீனுவாசநாயக்கர் என்பவர் வசித்துவந்திருக்கிறார். அதுசமயம் அவர்களது வீதியிலேயே குடித்தனம் பண்ணிவந்தவள் தாசி பவளமல்லி. இவள் குலத்தில் தாசியென்றாலும், தொழிலை வெறுத்து சங்கீதம், நாட்டியம் பக்தியென வாழ்ந்துவந்தவள். அவளுக்குத் தேவலோகத்துக் கன்னிகையையொத்த செளந்தர்யமும், நல்ல குணநலமும் வாய்க்கப்பெற்ற மங்கையொருத்தி குமுதவல்லி என்பதானப் பெயரில் பிறந்து, தாயைப்போலவே கணிகையர் தொழிலில் நாட்டமின்றி சங்கீதம், நாட்டியம் எனத் தேர்ந்து, சதா சர்வகாலமும் கும்பேசுவரர் ஆலயத்திற்குச் சேவகம் செய்துக்கொண்டு இருந்திருக்கிறாள். வைத்தியர் சபாபதிப்படையாட்சிக்கு உடன்பிறந்தவர்கள் எவருமில்லாததால், தாசி பவளமல்லி குமாரத்தி குமுதவல்லியை தன் உடன்பிறந்தாளாகப் பாவித்து வந்துள்ளார்.

ஓலை -5

திருமலை நாயக்கர் காலத்திலும், இராணி மங்கம்மாள் காலத்திலும் செல்வாக்குடனிருந்த மதுரை நாயக்கர் வம்சம், அவர்களின் பெயரன் விஜயரங்க சொக்கநாதன்* காலத்தில் அபகீர்த்தியை அடைந்திருந்த காலம். அவனுடைய தளவாய் கஸ்தூரிரங்கய்யாவும், பிரதானி வெங்கடகிருஷ்ணய்யாவும், அமைச்சர்கள் நரவாப்பையா, வெங்கடராகவாச்சாராயாவின் துணையுடந்தானே, ஜனங்களிடம் பலவாறான வரிவிதித்து, இம்சித்துக்கொண்டிருந்திருக்கிறார்கள். அது எதனாலெனில், வாலிபப் பிராயத்தில் முடிசூடிக்கொண்ட மன்னன் விஜயரங்க சொக்கநாதன் குணம் வித்தியாசமாய் இருந்திருக்கிறது. தெற்கிலிருந்த கோயில்களில் அவன் விஜயம் பண்ணாத ஸ்தலங்கள் இருக்க முடியாதென்று சொல்கிறார்கள். வடக்கே திருக்கழுக்குன்றம் வரை சென்றுவந்திருக்கிறான். இரண்டுவருடத்திற்கொருமுறை தமது பரிவாரங்களுடன் ஸ்ரீரங்கம், ஜம்புகடேஸ்வரம், திருநெல்வேலி, ஆழ்வார் திருநகரி, ஸ்ரீ வைகுந்தம் என யாத்திரை மேற்கொண்டு, கோவில்களுக்கும் மடங்களுக்கும் மானியங்கள், நிவந்தமென்று வாரிக்கொடுத்தவன், ஸ்த்ரீ லோலனாகவும் இருந்திருக்கிறான்..

ஓலை -5

ஒருநாள் இரண்டாம் சொக்கநாதன் கும்பேஸ்வரரைச் தரிசணம் பண்ணவரச்சே, கோவிலில் நாட்டியம் பழகிக்கொண்டிருந்த குமுதவல்லியைக் கண்டு மோகித்திருக்கிறான். அப்படி இருக்க, அவளைக் காணவென்று கும்பகோணம் தவறாமல் வர ஆரம்பித்திருக்கிறான். தாசி குலவழக்கிற்கு மாறாக, எந்த ஆடவருக்கும் இணங்கமாட்டேனென்று வாழ்ந்த குமுதவல்லி, கர்ப்பமுறலாச்சுது.. தன் கர்பத்திற்குக் காரணமான ஆடவன் யாரென்ற ரகசியத்தை எவரிடத்தும் தெரிவிப்பதில்லையென்று உறுதியாய் இருந்திருக்கிறாள். கிழவி பவளமல்லியும் பலவாறாகத் தன் மகளிடம் நிர்ப்பந்தித்தும் பிரயோசனமில்லை. கர்ப்பமுற்றவள் உரிய காலத்தில் இரட்டைப்பேறாக ஆண்மகவொன்று, பெண்மகவொன்று பிரசவித்து, ஆணுக்குக் கைலாசமென்றும், பெண்ணுக்கு வாணியென்றும் பேர்சூட்டியிருக்கிறாள். பிள்ளைகள் வளர, வளர அவர்களிடம் ராஜ குடும்பத்துக் களையிருப்பதைக் கண்டு வைத்தியர் குடும்பமும், மற்றவர்களும் அதிசயித்திருக்கிறார்கள். இந்த நேரத்திலே வைத்தியர் வளவிற்கு தன் பிள்ளைகளுடன் குமுதவல்லி வந்திருக்க, திருச்சினாப்பள்ளியிலிருந்து வந்திருந்த, சீனுவாச நாயக்கரானவர் குமுதவல்லியின் பிள்ளைகளைக் கண்டு, அப்பிள்ளைகளுக்குத் தகப்பன் ஆராக இருக்கவேணுமென்கிற சேதியை ஒருவாறு ஊகிக்கலாச்சுது..

ஓலை -6

அதன்பிறகு, வைத்தியம் பார்த்து ஜீவனம் பண்ணலாமென்று சபாபதிப் படையாட்சி புதுச்சேரி பட்டணத்திற்கு புறப்பட்டு வந்துபோட்டார். மன்னன் இரண்டாம் சொக்கநாதன் சரீர சுவஸ்தமில்லாதபடியினால், அவனிடம் சகாயமேதுமின்றி, இரண்டுபிள்ளைகளை வைத்துக்கொண்டு குமுதவல்லி கஷ்டஜீவனத்திலிருப்பதை அறிந்தமாத்திரத்தில், சீனுவாச நாய்க்கர் ஐந்துவயது பாலகனான கைசாலத்தினை அழைத்துவந்து, புதுச்சேரி வைத்தியரிடம் சேர்ப்பித்திருக்கிறார். அன்றுமுதல், கைலாசம் வைத்தியர் வளவில் அவரது புத்திரன்போன்ற அன்னியோன்யத்துடன் இருந்திருக்கிறான்.

ஓலை -7

இரண்டு வருடங்களுக்குப் பின்பு, ஒருநாள் ராத்திரி, சீனுவாச நாயக்கருக்கு வேண்டுதல்பட்டவரென்று, முதியவர் ஒருவர் வில்லியனூலிருந்த வைத்தியர் வளவுக்கு வந்திருக்கச்சே, அன்னாருடன் ஐந்துவயது மதிக்கும்படியான ஒரு சிறுமியும், சிறுவயதென்றாலும், முகத்தில் முதிர்ச்சி தெரிந்த பெண்ணொருத்தியும் இருந்திருக்கிறார்கள். அச்சிறுமியைக்காண, கும்பகோணம் குமுதவல்லியின் மகளைப்போல இருந்திருக்கிறது. வைத்தியர் அம்முதியவரிடம், ‘இதென்ன நீர் குமுதவல்லியின் மகள் வாணியை கூட்டிவந்திருக்கிறீர் ? குமுதவல்லியும் அவளது தாயாரும் என்னவானார்கள் ? இந்தப்பெண்மணி ஆர் ? என்று கேழ்க்கவும், அவர் சொன்ன விசேஷம்: ‘வைத்தியரே! நான் சீனுவாச நாயக்கரின் சினேகிதன். இதோ உம்மெதிரே இருக்கின்ற சிறுமிக்குப் பெயர் தேவயானி, மதுரை நாயக்கர் வம்சத்தின் வாரிசு. இப்பெண்மணியோ ராணி மீனாட்சியின் ஒன்றுவிட்ட சகோதரி காமாட்சி அம்மாள், ‘ எனத் தெரிவித்துப்போட்டு.

ஓலை -8

மன்னன் இரண்டாம் சொக்கநாதன் அகால மரணமடைந்துவிட்டானெனவும், பிள்ளைபேறற்ற அவனது பட்டமகிஷி ராணி மீனாட்சி, தனதுவாரிசாகப் பங்காருதிருமலையின் மைந்தன் விஜயகுமாரனை அறிவித்துப்போட்டாளென்றும், பங்காருதிருமலை, தளவாய் வெங்கடாச்சார்யாவோடு கூடிக்கொண்டு மதுரை ஆட்சியை தான் அபகரிக்கவேணுமென்கிற அபிலாஷையில் இருப்பதாகவும், குமுதவல்லியும், அவளது புத்ரி வாணியும், தளவாய் வெங்கடாச்சார்யா ஆட்களால் சிறைவைக்கபட்டிருக்கிறார்களெனவும், இப்படியான சமயத்தில்ில் தேவயானியையும், காமாட்சி அம்மாளையும் காப்பாற்றவேணுமானால், இவர்களை வைத்தியரிடம் சேர்ப்பிப்பது அவசியமென நாயக்கர் தீர்மானம் பண்ணியதாகவும், இந்தப்பக்கம் மீனாட்சியும், அந்தப்பக்கம் பங்காரு திருமலையும், ஒருவரையொருவர் நிர்மூலம் ஆக்குவதென்று சஙகற்பம் செய்துகொண்டிருக்கிரார்களென்றும், அரசுரிமைக்குப் பாத்தியதையாக உள்ள மற்றவர்களையும் சங்கரிக்க நினைப்பதாகவும், வருந்திக்கொண்டு கிழவர் சொன்ன மாத்திரத்திலே, வைத்தியர் அவருக்கு மிகுந்த உபசரணயான வார்த்ததைகள் சொல்லி அனுப்பி வைத்திருக்கிறார்..

ஓலை -9

ஒரு சில மாதங்களுப் பின்பு, வைத்தியர் வளவிலிருந்த காமாட்சி அம்மாளும், சிறுமி தேவயானியும், சீனுவாச நாயக்கரும் அவர்களுடன் கைலாசமும் பிரெஞ்சுத் தீவுக்குப் புறப்பட்டுப் போயிருக்கிறார்கள். அவ்வாறு புறப்படும்போது நாயக்கர், தேவயானி, கைலாசம், வாணி ஆகியோரின் பிறப்பு ரகசியங்களை ஒருவரும் அறியக்கூடாதென, வைத்தியரிடம் வார்த்தைப்பாடு வாங்கிக்கொண்டவர், தம் ஆட்களிடம் குமுதவல்லியையும் அவளது புத்ரியைக் குறித்தும் தகவல்கள் அறியுமாறு வேண்டியிருப்பதாகவும், அப்படியான தகவலெதுவும் கிடைக்குமெனில், அவர்களைக் காப்பாற்றி, நாயக்கர் பிரெஞ்சுத் தீவிலிருந்து திரும்பி வரும்நேரம் ஒப்படைத்து ஆனமாத்திரம் சகாயம் செய்யவேணுமாய் வைத்தியர்சபாபதி படையாட்சியைக் கேட்டிருக்கிறார். அவ்வாறே பிரெஞ்சுத் தீவுக்குக் காமாட்சியம்மாள், சீனுவாசநாயக்கர், தேவயானி, கைலாசம் முதலானோர் புறப்பட்ட சில நாட்களிலேயே, குமுதவல்லி சீனுவாச நாயக்கர் ஆட்களின் உதவியால், தளவாய் வெங்கடாச்சார்யாவிடமிருந்து தப்பித்தவள், வாணியை வைத்தியரிடம் சேர்ப்பித்துப்போட்டாள். ‘ என்று ஆதியோடந்தமாக வைத்தியர் கூறிப்போட்டு, பின்னையும் இந்தச் சேதி அந்நிய மனுஷர்கள் அறியக்கூடதென்று சொல்லி என்னை எச்சரித்துப்போட்டார்..

ஓலை -10

வைத்தியரிடம் உத்தரவு வாங்கிக்கொண்டு நான் புறப்பட்டபொழுது, இரவு மூன்றாம் சாமத்தை நெருங்கியிருந்தது. தெரியவேண்டிய சங்கதிகள் அறிஞ்சவனானபடியினால், இந்தத் தினம் மனதிற்குச் சந்தோஷமென்றே சொல்லவேணும். வைத்தியர் சொன்ன வயணத்தினால் பெர்னார்குளோதன் தேடுகின்ற தெய்வானை ஆர் என்றறிந்தேன். தெய்வானையும், வாணியும் சகோதரிகளாகவேணும் என்று சொன்னால், குளோதன் அதிசயப்பட்டுப்போவான். ஆனால் இப்போதைக்கு அவனிடம் உண்மையைச் சொல்லமுடியாது. வைத்தியரிடம் கொடுத்த வார்த்தையின்படி நடக்கவேணும். வளவிலிருந்து புறப்பட்டபோது, எனக்காக வாணி நித்திரைகொள்ளாமல் இருந்திருக்கவேணுமென நினைத்தேன். அவளைச் சந்திக்கவேணுமென்று மனதிலேற்பட்ட தாபத்தினை தணித்துக்கொண்டேன். வீதிக்கு வரச்சே, நிலா வானில் பாசாங்குடன் சிரிக்கிறது.

/தொடரும்/

* .History of the Nayaks of Madura – R Sathyanatha Aiyar

Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா

நீலக்கடல் – தொடர் – அத்தியாயம் – 5

This entry is part [part not set] of 33 in the series 20040205_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


காலை யிளம்பரிதி வீசுங் கதிர்களிலே

நீலக் கடலோர் நெருப்பெதிரே சேர்மணிபோல்

மோகனமாஞ் சோதி பொருந்தி முறைதவறா

வேகத் திரைகளினால் வேதப் பொருள்பாடி

வந்து தழுவும் வளஞ்சார் கரையுடைய

செந்தமிழ்த் தென்புதுவை……. குயில்பாட்டு – பாரதியார்.

கிழக்கே வங்காள விரிகுடாவிற்கு மேலே அக்கினிக்கோளமாய்ச் சிவந்திருந்த சூரியன். அதனைச்சுற்றி கும்மட்டியிலிட்ட வெள்ளியாய் மேகம். அடிவயிற்றில் சூரியனைச் சுமக்கின்ற சுகத்தில் வெளுத்திருக்கும் வானம். அவ்வழகில் ஈர்க்கப்பட்டுத் தலை உயர்த்திப் பின்னர் நீலத்திரையில் முகம் மறைக்கும் அலைகள். அவற்றினூடே கிழக்குத் திசையில் தலையை உயர்த்தி நீந்திச் செல்லும் படகுகள். அதிகாலைக்கு ஆரத்தி எடுக்கும் கடலோர நுரையலைகள். கடலையொட்டி வரிசையாக நிறுத்தபட்டிருந்த பீப்பாய்களை நிரப்ப, செம்படவப் பெண்கள் தள்ளியிருந்த கிணறுகளிலிருந்து சும்மாடுகளில் பருத்த மார்புகள் அசைய குடங்களில் நீர்சுமந்து ஊற்றிக்கொண்டிருக்க, அவற்றில் தலையை நனைத்து, பின் சிலிர்த்து எழுந்தோடும் நீர்க்காகங்கள். தைமாத சாம்பல்வண்ணமேகங்கள், வெண்பனிச்சாரல். கோட்டைக்குள்ளிருந்து ஒலிக்கும் தேவாலயமணி, வேதபுரீஸ்வராலயத்தில் ஓதுவார் பாடும் தேவாரம், வரதராசபெருமாள் ஆலயத்திலொலிக்கும் ஆழ்வார் திருமொழி, வழுதாவூர்ச்சாலையை ஒட்டியுள்ள தென்னந்தோப்புகளில் இடையிடையேயிருக்கின்ற ஆலமரங்களிலிருந்தும், இலவமரங்களிலிருந்தும் வைகறைக் குரலெழுப்பும் காக்கைகள், குயில்கள், வெளவால்கள், தூக்கணாங்குருவிகள் – அடடா..புதுச்சேரி விழித்துக் கொண்டது.

புதுச்சேரித் துறைமுகத்தில் வந்து சேர்ந்திருந்த ‘லெ பொந்திஷேரி ‘ என்கின்ற வணிகக் கப்பலும், பாதுகாப்பாக வந்திருந்த போர்க்கப்பல்களான ‘கொர்சேர் ‘ கப்பல்களும் கரையிலிருந்து பாதுகாப்பாக மிகவும் விலகி நங்கூரமிட்டிருந்தன. அப்படி நிற்கக் காரணமிருந்தது. அக்டோபரிலிருந்து ஜனவவரிவரை சில நேரங்களில் பிப்ரவரியிற்கூட வீசுகின்ற புயற்காற்றுக்குப் பயந்தாகவேண்டும். ‘லெ பொந்திஷேரி ‘யிலிருந்து பொதிகள் இறக்கபட்டுச் சுற்றிலும் சூழ்ந்துநின்ற ஷெலேங்கு(Chelingue)படகுகளில் சுறுசுறுப்பாக ஏற்றப்பட்டன. படகுகள் செலுத்தும் செம்படவர்களின் குரலும், பொருட்களை இறக்குந் தினக் கூலிகளின் குரல்களும் கோட்டைக்குள்ளிருந்த கிடங்குகள்வரை தொடர்ந்தன.

கடற்கரைக்கு நேர் எதிரே, ஆபத்தைத் தவிர்க்கின்றதோ இல்லையோ அழகாகப் பிரான்சிலுள்ள ‘வொபான் ‘ கோட்டைகளின் சாயலில் வடிவமைக்கபட்டிருந்த சென் – லூயி(Saint-Louis)க் கோட்டை. ஐந்து கொத்தளங்களும் இரண்டு பெரிய கதவுகளுடன்கூடிய வாயில்களும் இருந்தன. முதல்வாயில் பிரதானவாயில். குவர்னர், அவரது குடும்பத்தினர், பிரஞ்சு இந்திய குழுமத்தின் முக்கிய நிர்வாகிகள், துபாஷ், மதகுருமார், அரசின் முக்கிய விருந்தினர்களென அரசின் நன்மதிப்பைப் பெற்றவர்களின் உபயோகத்திலிருந்த வாயில். இதரதரப்பினருக்கும், அடிக்கடி சண்டைபிடித்துக்கொண்டு பிரெஞ்சு நிர்வாகத்திடம் தஞ்சம் புகும் துக்கடா இராசாக்களுக்கும், நிலவில்லாப்பின்னிரவுகளில் மூடிய பல்லக்குகளில் தாசிகள் வந்துபோகவும் உபயோகத்திலிருந்தது, இரண்டம்ாவாயில் எனவழைக்கபட்ட டெல்பின் வாயில். கோட்டைக்குள்ளே குவர்னர் மாளிகை. அதனையடுத்து சொல்தாக்களின் (படை வீரர்களின்) ‘கசெர்ன் ‘ எனவழைக்கப்படும் குடியிருப்புகள். ‘கப்புசென் ‘ தேவாலயம், வணிகவளாகமென வெள்ளையர்களுக்கான இதயப்பகுதி. இப்பகுதிகளையொட்டி வடக்குத் தெற்காகப் பரவியிருந்த பறங்கியர்களுக்காக ஒதுக்கப்பட்ட ‘வெள்ளையர் குடியிருப்பு ‘ (La Ville blanche) அதனைத் தொடர்ந்து தமிழர்களுக்கான ‘கறுப்பர் குடியிருப்பு ‘(La Ville noire). இவ்விரு பகுதிகளையும் பாதுகாக்கின்றவகையில் சுமார் ஏழு மீட்டர் உயரத்திற்குப் பலமான சுவர்கள். இச்சுவர்களுக்கிடையில் சிப்பாய்களின் பாதுகாப்புடன் கூடிய மூன்று சிறிய வாயில்கள். அவை முறையே வில்லியனூர், வழுதாவூர், மதராஸ் வாயில்கள் எனப்பட்டன. கோட்டையை ஒட்டி குவர்னர் துய்மா ஏற்படுத்தியிருந்த அகழியை, அவருக்குப் பின் பொறுப்பேற்றிருந்த குவர்னர் துய்ப்ளெக்ஸ் முடித்திருந்தார்.

பெர்னார் தங்கியிருந்த குடியிருப்பு, பிரஞ்சுக் கிழக்கிந்திய கம்பெனியின் புதுச்சேரிப் பிரிவின் துணை நிர்வாகி வேன்சான் குடியிருப்புக்கருகே, ஒதுக்கப்பட்டிருந்தது. அனைத்துப் பறங்கியர்க்கான குடியிருப்பைப்போலவே முகப்புடனும், உயர்ந்த தூண்களில் நிறுத்தப்பட்டு, கீழைநாடுகளுக்கேயுரிய செடிகள், கொடிகள், மரங்களின் அடர்த்தியில் – சூழலில், சற்றே ஒளிந்து, கடலைப்பார்த்த வராண்டாவுடன் அமைந்த குடியிருப்பு.. உயர்ந்த தளம். எப்போதாவது, குறிப்பாக சித்திரை, வைகாசி மாதங்களில் எதிர்பாராதவிதமாக வீசுகின்ற மண்காற்றினைத் தடுப்பதற்காக தொங்கவிடப்பட்ட மிகவும் தடித்த வெட்டிவேராலான திரைகள். குளிர்காலமென்பதால் அவை மேலேசுருட்டப்பட்டு உத்தரத்தில் கட்டபட்டிருந்தன. நடுக்கூடத்தில் இருக்கைகளுக்குமத்தியில் ஒரு பங்கா. அதன் நீண்டகயிறு கிழக்கேயிருந்த சன்னலையொட்டிக் கட்டப்பட்டிருந்தது. கீழை நாடுகளின் பட்டுவிரிப்புகள், புதுச்சேரியில் தீட்டபட்ட வண்ணத் துவாலைகள், சீன, பாரசீக ஓவியங்களென என நம்மை ஆச்சரியமூட்டும் அலங்காரம். இதுபோதாதென்று, பித்தளைப் பூண்களும் – முகப்புகளும் கொண்ட தேக்கு, மஹோகனி, கருவாலி மரங்களாலான, தந்தங்கள் அல்லது முத்துச் சிப்பிகள் பதிக்கப்பட்ட, மேசை நாற்காலிகள், அலமாரிகள், நிலைபெட்டிகள். தேவையான இடங்களில் காகித்தாலான சீனப் பரவான்கள். மொத்தத்தில் நேர்த்தியும் வசதியும் நெருங்கியிருந்த குடியிருப்பு.

இவனது குடியிருப்பைக் கவனித்துக் கொள்வதற்காக இரண்டு சிறுவர்களை குப்பன்- சுப்பன் பெயர்களில் பக்கத்துக் குடியிருப்பிலிருக்கும் நிர்வாகி அனுப்பியிருந்தார். அவர்களிருவரும் புதுச்சேரிக்குத் தென்மேற்கேயிருந்த பாகூரிலிருந்து பஞ்சகாலங்களில் விலைக்கு வாங்கப் பட்டிருந்த அடிமைககள். இது தவிர அரசாங்கம் ஏற்பாடு செய்திருந்த கீழ்சாதித் தமிழர்கள் இருவரும் பணியிலிருந்தனர். பறங்கியர்களுக்கு இஇப்படியான தமிழர்களை வைத்துக் கொள்வதிலொரு செளகரியமிருந்தது. மற்றவர்களென்றால் அடிக்கடி தலையைச் சொறிகின்ற ரகம்.. தோட்ட வேலை செய்பவன், தோட்டி வேலையை மறுப்பான், துணிதுவைப்பன் முடி வெட்டினால் தன் சாதிக்கு அவமானமென்பான். இவர்கள் முகம்ஞ்சுளிக்காமல் எல்லா வேலைகளையும் செய்தார்கள். இவர்களைத் தவிர, இதர வெள்ளையர்களின் குடியிருப்புக்களையொப்ப தமிழர்களுக்கும், பறங்கியருகுமிடையில் இருந்துகொண்டு ஊழியர்கைளை வேலைவாங்கவும், எஜமான் பறங்கியனின் இந்தியச் சம்பந்தமான அலுவல்களைக் கவனிக்கவும், மொழி பெயர்க்கவும் இங்கேயும்மொரு ‘துபாஷ் ‘ (Dubash or Doubachi பெயர் -பலராம் பிள்ளை.

துபாஷ் பலராம்பிள்ளை வெளியே அதட்டிக் கொண்டிருந்தார்.. அவர் குரல்கேட்டு பெர்னார் விழித்துக் கொண்டான். கப்பற் பயணக் களைப்பு உடலில் அப்படியே ஒட்டிக்கொண்டிருந்தது. இஇலவம் பஞ்சினாலான மெத்தை, பருத்தி விரிப்புகள் அவனைக் கூடுதலாகக் கண்ணயருமாறு வற்புறுத்தின. பின்னிரவுக் கனவில் தெய்வானை. அவள் நிலவு முகமும், நிலம் நோக்கிய பார்வையும், இருளொத்த கூந்தலும் இரண்டாய்ப் பிளந்த மாதுளை அதரங்களும், உலகின் எந்தப் பகுதியில் இருப்பினும் அவனைத் தேடிவருபவை. அவன் உயிரிற் கலந்த மூச்சுஅவை. அம்மூச்சுக்காக, இவனது உயிர், ஆற்றவேண்டிய காரியங்கள் வரிசையாகவுள்ளன. கட்டிலிருந்து எழுந்து சப்பாத்தணிந்து, கிழக்கேவிருந்த பெரிய சன்னலையொட்டி நின்றான். திரையினை நீக்கியதும் கண்கள் முழுக்க நீலக்கடல். ஆர்ப்பரிக்கும் அலைகளால் விடுக்கும் அழைப்பு. அதில் இறங்கி வா! எங்கள் தேவதை தெய்வானையிடம் சேர்ப்பித்து விடுகிறேன் என்கின்ற உறுதிப்பாடு. ‘நிலம் கடந்து, நீரிறங்கி தெய்வானையைக் கைபிடித்து வானமேறி யுகங்கள்தோறும் ஜீவிக்கவேண்டும் ‘ இயலுமா ? ‘இயேசுவே ‘ முணுமுணுத்தான்.

‘ஐயா.. கபே….. ‘

சீனப் பீங்கான் குவளையில் பால் கலவாத கறுப்பு காப்பியும், கிண்ணத்தில் சர்க்கரையுடனுமான தட்டத்தினைப் பணிப்பெண் தாழ்த்திப் பிடித்தாள். பெர்னார் காப்பியுடனான குவளையையும், ஒரு கரண்டியும் சர்க்கரையையும் எடுத்துக்கொண்டு அவளை அனுப்பிவைத்தான். வணங்கியவாறு பின்சென்றவளிடம்

‘ பலராம்பிள்ளையை உள்ளே வரச்சொல் ‘ என்றான்.

இவன் குரலுக்காகவே காத்திருந்ததுபோலப் பலராம்பிள்ளை உள்ளே ஒடிவந்தார். குனிந்து வணங்கினார். குனிந்ததால் தலைப்பாகை அவிழ்ந்து விழுந்தது. அதனை எடுத்து இருகைகளிலும் பிடித்துக்கொண்டு மீண்டும் பணிவாகக் குரலைத் தாழ்த்திப் பிரஞ்சில் கேட்டார்.

‘ ஏதாவது காரியம் ஆகவேண்டுங்களா ‘

‘மிஸியே பல்ராம் புள்ளே. உடனடியாக நான்செய்யவேண்டியது, புதுச்சேரி குவர்னரைச் சந்தித்து, பிரஞ்சுத்தீவின் குவர்னரிடமிருந்து கொண்டுவந்துள்ள கடிதத்தைச் சேர்ப்பிக்கவேண்டும். பிறகு மேன்மைமிகு புதுச்சேரி குவர்னர் வற்புறுத்தினால் அவருடன் மதிய உணவு. பயணக் களைப்பிலிருந்து நான் முழுவதுமாக விடுபடவில்லையென்பதால்.அதன்பிறகு கொஞ்சம் ஓய்வு.. பிற்பகல், புதுச்சேரியைச் சுற்றிப்பார்த்துவரலாமென்கிற எண்ணம்.. நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக பார்த்தது. இது தவிர உடனடியாக எனக்கு இரண்டு காரியங்கள் ஆகவேண்டும். முதலாவதாக, புதுச்சேரியிலிருக்குவரை நம்பகமான இளைஞன் ஒருவன் துணைக்கு வேண்டும். இரண்டாவதாக ஒரு நல்ல அராபியக் குதிரையொன்று எனது உபயோகத்திற்காக புதுச்சேரி நிருவாகத்திடம் கேட்கப்படவேண்டும்.. ‘

‘பிரான்சுவா துரை அனுப்பியதாகக் கூறிக்கொண்டு காலையிலிருந்து உங்களுக்காக தேவராசன் என்கின்ற சிப்பாய் ஒருவன் காத்திருக்கின்றான் பிரபு!.. ‘

‘மிஸியே பலராம் புள்ளே.. நாமிருவரும் தனித்திருக்கும்போது நீங்கள் என்னை பெர்னார் என்றே அழைக்கலாம். நான் வயதில் சிறியவன் ‘

‘ இல்லை துரை.. என்னவிருந்தாலும் நாங்கள் உங்களை அண்டிப் பிழைக்கின்றவர்கள். ‘

‘வேண்டாம் புள்ளே எனக்கந்தச் செயற்கை மரியாதைகளில் விருப்பமில்லை. வேண்டாமென்றால் வேண்டாம். அப்படி அழைப்பதுதான் விருப்பமென்றால், நீங்கள் வேறுயாரிடமாவது துபாஷாகவிருக்கலாம் ‘

‘ஐயா..! ‘

‘ சரி.. சரி இனி அப்படியென்னை அழைக்கமாட்டார்களென்றே நம்புகிறேன். நான் சொன்னவற்றை செய்யுங்கள் ‘

‘பிரான்சுவா துரை அனுப்பிய தேவராசன்பற்றித் தங்களிடம் விண்ணப்பித்தேனே ‘

‘மன்னிக்கவும். அவனை நேற்றே வரவேண்டாமென்று சொல்லியிருந்தேனே. ஏதேனும் காரணங்கள் எடுத்துரைத்து அவனைப் பக்குவமாக அனுப்பிவிடுங்கள். எனக்கு வேறொரு நம்பகமான ஆள் வேண்டும். ‘

‘அப்படியே! தங்கள் மனசுபோல நடக்கிறேன். வெளியே பல்லக்குடன் பல்லக்குத் தூக்கிகள் காத்திருக்கிறார்கள். நீங்கள் எப்போது வேண்டுமானாலும் குவர்னர் சமூகம் செல்லலாம். நான் வெளியே காத்திருக்கிறேன். ‘ மீண்டும் துபாஷ் பல்ராம்பிள்ளை பணிவாகத் தனதுப் பதிலினைத் தெரிவித்தார்.

‘பல்லக்கு வேண்டாம்.! இங்கிருந்து குவர்னர் மாளிகைக்குச் செல்வதற்குப் பல்லக்கு எதற்கு ? நடந்தே போகலாம்.. நீங்கள் இங்கேயே இருந்து நான் சொன்ன மற்ற ஏற்பாடுகளைச் செய்யுங்கள். முத்தியால்பேட்டைவரை சென்று வேலாயுதமுதலியார் என்பவர் பற்றிய முழுத் தகவல்களை அறிந்துவாருங்கள். இது ரகசியமாக இருக்கட்டும். மாலை நாம் இருவரும், இரவு உணவிற்குப் பிறகு முழுவதுமாக பேசுவோம். ‘

‘ அவ்வாறே ஆகட்டும் மிஸியே ‘

‘இல்லை, அப்படி இல்லை பெர்னார் எனவழையுங்கள் ‘

‘ அவ்வாறே ஆகட்டும் பெர்னார் ‘ தயங்கியவாறே கூறிவிட்டுச் சென்ற பலராாம் பிள்ளையை நினைத்துப் பெர்னாருக்குச் சிரிப்புவந்தது.

காலை பதினோருமணிக்கு, பெர்னார் குவர்னர் மாளிகையை அடைந்தபோது, குவர்னர் துய்ப்ளெக்ஸ், மதாம் ழான் அல்பெர்த் துய்ப்ளெக்ஸ் பொறியியல் வல்லுனர் பராதீ, குவர்னருக்கு வேண்டப்பட்டவனும் சீனா, பிலிப்பைன்ஸ் வணிகக்கப்பல்களோடு பயணிப்பவனுமான பிரான்சுவா கார்வாலே, பெத்ரோ கனகராயமுதலியார், மற்றும் பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பெனி நிருவாகிகள் வட்டமாகக் கடலைப் பார்த்தவாறு உட்கார்ந்து மதுவருந்திகொண்டிருந்தனர். முதலியாரைத்தவிர அனைவரது கைகளிலும் மதுக் கோப்பைகளிருந்தன. துணைக்குப் பொரித்த மீன்கள், முதலியார் தனது இல்லத்திலிருந்து கொண்டுவந்திருந்த இறைச்சி உருண்டைகள், பிரான்சிலிருந்து வந்திருந்த ‘சொஸ்ஸிஸ்ஸோன். ‘

‘மேன்மைமிகு கவர்னருக்கும் மற்றவர்களுக்கும் வணக்கம் ‘ கூறியவன், அருகிலிருந்த மதாம் ழான் துய்ப்ளெக்ஸ் வலது கரத்தை மெல்லப்பற்றிக் குனிந்து முத்தமிட்டுத் தன் வணக்கத்தை அவளுக்கும் தெரிவித்துவிட்டு, எதிரிலிருந்த இருக்கையில் அமர்ந்தான்.

‘உட்கார்! பிரெஞ்சுத் தீவிலிருந்து வந்துள்ள சாராயத்தைத்தான் குடித்துக் கொண்டிருக்கிறோம். நீயும் பருகு ‘ குவர்னர் துய்ப்ளெக்ஸ்

‘நன்றி. இப்போது எனக்கு வேண்டாம். ‘

‘அப்பெரித்திஃப் ‘ ஆக கொஞ்சமேனும் பருகு. எங்களுக்கும் உற்சாகமாகவிருக்கும். நன்கு ஓய்வெடுத்தாயா ? ‘

‘நன்கு தூங்கினேன். உங்களைக் காணவேண்டுமென்ற கடமையுள்ளதல்லவா ? அதனால் வந்திருக்கிறேன்.

‘ இச்சாராயம் மிகவும் அருமை. பிரஞ்சுத் தீவுத் தயாரிப்பா ?. ‘ பராதி.

‘ உண்மை!. மிஸியே பராதி! இது பிரஞ்சுத் தீவிலிருந்து வந்துள்ள சாராயம். கரும்பிலிருந்து தயாரித்திருக்கின்றார்கள் குவர்னர் லாபொர்தெனே எனக்காகவென்று ஐம்பது போத்தல்களைக் கொடுத்துவிட்டிருக்கிறார். ‘

‘மிகவும் அருமை. இதுவரை இப்படியொன்றை அருந்தியதில்லை. கூடுதலாகச் ‘சொஸ்ஸிஸ்ஸோன் ‘ வேறு. ‘ கார்வாலே ஆமோதித்தான்.

‘பிரஞ்சுத் தீவில் குறிப்பாக போர் லூயி (Port Louis) யின் கட்டுமானப் பணிகள் எவ்வாறு உள்ளன. ? ‘

‘ இந்தியாவிலிருந்து வந்திருக்கின்ற தமிழர்களின் திறனால் வேலைகள் மிகத் துரிதமாக, மேன்மை மிகு குவர்னர் எண்ணத்தைப் போல நடந்து வருகின்றன. நமது தாய்நாட்டிலிருந்தும் பொருளீட்டுவதற்கெனத் தீவுக்கு அவ்வப்போது இரண்டொரு குடும்பங்கள் ஆர்வத்துடன் வந்த வண்ணமிருக்கின்றனர். திவீல் எங்கே கால்டி எடுத்து வைத்தாலுல் கட்டுமானப் பணிகள். எல்லாவற்றையும் செம்மைப்படுத்தவேண்டியுள்ளதால், சற்று கடுமையான வாழ்க்கை. ‘

‘ மிஸியே பராதி.. புதுச்சேரி நாணயச்சாலை வேலைகள் எவ்வாறுள்ளன ? முன்னேற்றம் கண்டுள்ளதா ? ‘ – பெர்னார்

‘குறிப்பிடத்தக்கவகையில் முன்னேற்றம் உள்ளது.. ஓரளவு உபயோகத்திலும் இருக்கிறது. எனினும் முழுவதுமாகக் கட்டி முடிக்கக் கூடுதலாக இரண்டு மூன்று ஆண்டுகள் பிடிக்கும். ‘ – பராதி

‘ பெர்னார் அங்கே பெண்கள் கிடைக்கின்றார்களா ? ‘ மதாம் ழான் சிரித்தவாறு கேட்டுக் கண்ணைச் சிமிட்டினாள் ‘

‘ இல்லை ஷெரீ. நமது பெர்னார் நல்ல பிள்ளை. அவ்வாறான தப்பெல்லாம் செய்யமாட்டான் என்று கேள்வி ‘

‘தங்கள் அபிப்ராயம் முற்றிலும் உண்மை பிரபு. என்னை மணக்கவிருப்பவளுக்கு நான் உண்மையானவனாக இருக்கவேண்டுமல்லவா ?. ‘

‘ அப்படியா சந்தோஷம். நமது பிரபுவிற்கு குடித்து முடித்தால் வெத்திலைமெல்லும் தாசிகளும், கவிச்சியடிக்கும் செம்படவப் பெண்களும் தேவையாகின்றது. ‘ என்று சொல்லிவிட்டு மதாம் துப்ளெக்ஸ் குவர்னரைப் பார்த்தாள். ‘

பராதி உரையாடலை வேறுதிசைக்குத் திருப்ப விரும்பினான். ‘ஐரோப்பாவில் நடக்கும் ஆஸ்திரியா வாரிசு உரிமைப் போர், கவலை கொள்ள வைத்திருக்கிறது. இங்கே நாம் ஆங்கிலேயர்களிடம் கவனமாயிருத்தல் அவசியம். ‘

‘உண்மை மறுப்பதற்கில்லை. இது விஷயமாகக் குவர்னர் லாபொர்தெனேவிற்குத் தகவல் போயிருக்கிறது. நமக்கேனும் பிரச்சினையெனில் அவரது உதவியை எதிர்பார்க்கலாம். ‘ என்ற குவர்னர் துய்ப்ளெக்ஸ் எதிரே அமர்ந்திருந்த பெர்னாரைப் பார்த்தார்.

‘பிற்பகலுக்கு ஏதேனும் பிரத்தியேகப் பணிகள் இருக்கின்றதா ?. குதிரைகள் கேட்டிருந்தாக அறிந்தேன் ‘

‘ புதுச்சேரியைச் சுற்றிப் பார்த்துவரலாம் என்கின்ற விருப்பமின்றி வேறல்ல ‘

‘ அப்படியா நல்லது. அதிகதூரம் போவது உசிதமல்ல. சரி சரி நேரமாகின்றது. பெத்ரோ..! பரிசாரகனை உணவினைக் கொண்டுவரச் சொல்லுங்கள். ‘

நீண்ட வேலைப்பாடுமிகுந்த அம்மேசையிலிருந்த போத்தல்களும், குப்பிகளும் அகற்றப்பட்டு புதிய விரிப்பு இடப்பட்டது, சீனப் பீங்கான் தட்டுகளும் கொண்டுவரப்பட்டன. முட்கரண்டிகளும், கத்திகளும் அவற்றின் இருபுறமும் வைக்கப்பட்டன. முட்டை சலாட், நெருப்பில் வாட்டப்பட்டிருந்த இரண்டு பெரிய வான் கோழி, ஆலிவ்வுடன் கூடிய பன்றி இறைச்சி, ஒரு தட்டில் இத்தாலியன் பாஸ்த்தா, பாதாமில் செய்யப்பட்டக் கேக், சிவப்பு ஒயின் வரிசையாகக் கொண்டுவரப்பபட மேசை நிரம்பியது..

பெர்னார் அவைகளை வியப்போடு பார்த்துகொண்டிருந்தபோது அது நிகழ்ந்தது. தட்டங்களில் பறிமாறப்பட்ட உணவுகளுக்குப் பதிலாக பாம்புகளும் தேள்களுமாக உயிர்பெற்று மெள்ள அவனை நோக்கி ஊர்ந்துவந்தன. அதிர்ச்சியில் உறைந்துபோனான்.

/தொடரும்/

*

Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா