தவறாக ஒரு அடையாளம்

This entry is part [part not set] of 50 in the series 20040902_Issue

மாலதி


—-

காலால் ஒரு உதை.பெருவிரலால் ஒரு நெம்பு. கதவு தடாலென்று விழுந்தது.இந்த சாவி ஸுட்கேசோடு தொலைந்து போகாமல் இருந்திருந்தால் கதவை இப்படித் திறந்திருக்க வேண்டாம்.

எதிர் ப்fளாட் மிஸஸ் ஜகாரியா அதிர்ச்சியுடன் நின்றிருந்தாள். பார்த்து விட்டிருக்கிறாள்.

திரும்பிப் பார்த்து அசட்டுச்சிரிப்பு சிரிக்க முயன்றேன். முடியவில்லை.இந்த மீசை முகத்தில் அசடு வர மாட்டேன் என்கிறதே!

‘பேடியாகிப்போ!பெண்மையை அவமதித்தவனே!பெண்கள் மத்தியில் அசடும் குழப்பமுமாய் நகைப்புக்கிடம் வைத்துப் பேடியாகிப் போ! ‘நீனா சபித்தது இன்று போல் இருக்கிறது.நான் என்ன செய்வேன்!ருத்ரபதியின் போட்டி தான் என்னை எப்போதும் ஆட்கொண்டிருந்தது.வியூகம் வியூகம். திரும்பிய இடமெல்லாம் வலை.குட்டிப் பெட்டியும் லாப்டாப்புமாய் விமானம் விமானமாய் ஏறி இறங்கி முறியடிக்க வேண்டி வந்தது.கடைசியில் ருத்ரபதியின் ‘பாசுபதா ஆன் லைன் ‘ என்னுடையதாயிற்று. அவனுடைய சினேகமும் தான்.

என் பார்ட்னர் துவாரகா நாத்தின் அருகாமை போலவே ருத்ரபதியின் அருகாமையில் ஏதோ இருந்தது.பிறகு நானும் அவனும் சமமாகவே வளர்ந்தோம். இப்போது திரும்பவும் ஓட்டம். பங்காளிச் சண்டையில்.இது விசித்திரமான பங்காளிச்சண்டை.

சண்டை விவரம் அப்புறம் சொல்கிறேன்.

அதற்குள் சாபம் பலித்ததைச் சொல்ல வேண்டும்.பலித்ததென்றா சொன்னேன் ?ம்..ஏறக்குறைய அப்படித்தான்.மும்பை விட்டுக் கிளம்பிய ராஜதானியில் அந்த அலிகள் கூட்டத்தில் மாட்டினேன்.நானும் அலிதான் என்று சூளுரைத்தேன்.அந்த இடத்தில் ஜிம்ப்பாப்வேயில் சந்தித்த ஆப்கானியன் அருளிய ‘காண்டம் ‘தயவு. நன்றிகள் அவனுக்கு.அலியாக பாவாடை தாவணியில் ஏழு தீரர்களைப் புரட்டிப் போட்டு விரட்டியடித்தேன்.அலிகள் போர்வையில் இருந்த தீவிர வாதிகளைக் காட்டிக் கொடுத்தேன். சொல்லவந்த தென்னவென்றால் அலியாகவும் நான் அசடு வழியவில்லை.

இப்ப என்ன செய்யப் போகிறேன் ? வாசல் மெயின் மல்லாந்து கிடக்கிறது.கொலாப்ஸிபிள் ஷட்டரை இழுத்து உள்பக்கம் பூட்டிக் கொண்டு வீட்டில் நுழைந்தேன்.

போட்டது போட்டபடி விட்டுச்சென்றிருக்கிறாள் என் மனைவி சுபத்ரா.அண்ணண் மகள் திருமணம் என்றால் சும்மாவா ?

துவாரகி ஏதேதோ புலம்பினான் போfனில். ‘வத்சுவுக்குப் பார்த்த இடம் சரியில்லைடா ,பாவி, சீக்கிரம் வா, உன் சிங்கப்பூரும் நீயும் ‘ என்றான்.

இதோ…இப்ப பொடிசா ஒரு சமையல் பண்ணிச் சாப்பிட்டுக் கிளம்ப வேண்டியது தான்.ரெண்டு நாளில் கல்யாணம். நாற்பது கிலோ மீட்டர் தள்ளி….பயணத்துக்கு ‘மாடிஸ் ‘ போதும்.

இந்த ‘கப்போ நூடுல்ஸ் ‘ எங்கே ?எப்போதும் நிரப்பி வெச்சிருப்பாளே கப்போர்ட் முழுக்க! கிடைத்தால் ஒரு டம்ளர் வென்னீர் ஊற்றினால் தீர்ந்தது வயிற்றுப்பாடு.

‘உங்க சாப்பாடே சரியில்ல…என்னத்த சாப்பிடறீங்க நீங்க ?ஒரு வாரம் தங்குங்க,திருவண்ணாமலையிலெ,நான் நல்ல சாப்பாடு செய்து போடறேன் ‘உருகுவாள் தீவிரி.கால் மணி நேரம் கொடுத்தால் போதும். கடுகிச் சமைப்பவள்.அட்சய பாத்திரம் ஏதாவது வைத்திருக்கிறாளா என்று சோதனை போடவேண்டும்,ஒரு தடவை.துவாரகி இவளுக்கும் கடவுள்.

‘ஆ! ஒருவாரம் இங்கேயா ?உன் ஏ,பி,ஸி,டி..க்கெல்லாம் என்ன பதில் சொல்வே ?ஒரு வாரம் அப்பாயிண்ட்மெண்ட் உண்டா எனக்கு ? ‘

‘அப்பாயிண்ட்மெண்ட் கேக்கற ஆளா நீங்க ?போன வருஷம் அப்படித்தானே ‘தரம் மேத்தா ‘ வந்திருந்தப்ப ‘என் ப்ராஜெக்ட் பைfலை வெச்சிட்டுப் போயிட்டேன் ‘னு துழாவி எடுத்திட்டுப் போனீங்க ?அதற்கப்புறம் பதினெட்டு மாசம் விட்டு இப்பத்தான் வர்றிங்க ‘

‘நெருப்பே!உனக்கு எப்படிச் சொல்வேன் ?உன்னில் எனக்குக் குளிரி விறைக்கும்.நான் பனிக்கட்டியாய் உறைந்து கெட்டித்து மலராமலே போகிறேன் சகியே!உன்னைப் பிரியாமையை எங்கே யாசித்து விடுவேனோ என்று பயந்து தானே ஓடுகிறேன் ?பெண் அரசியே!உன்னை விட்டு ? ‘

அந்த கம்பீரமும் அந்த அழகும் அடிக்குமென்னை. அப்பப்பா!

சுபத்ரா சொன்னபடி சமையலறை ஷிப்fடிங் செய்து முடித்தேன். மாடியும் கீழுமான உள்புற படிகளமைந்த டூப்ளெக்ஸ் ப்fளாட் எங்களுடையது.மேலும் கீழும் இரு பேண்ட்ரிஅமைப்புகள் உண்டு.தச்சனை வரவழைத்து வாசல் கதவைச் சரி செய்தேன். அவனை விட்டே ப்fரிட்ஜை மேலேற்ற வைத்தேன். சுபத்ராவுக்கு திடாரென்று மாடி சமயலறையில் சமைத்துப் பார்க்க ஆசை வந்து விட்டது.முதலிலேயே சொல்லி வைத்திருந்தாள் எனக்கு. ‘உங்க வீட்டுக் கும்பல் எல்லாம் வரும் கல்யாணத்தைச் சாக்கிட்டு.என்னாலே கீழே புழங்க முடியாது. அட்லீஸ்ட் மேலே சமையல் என்று வந்து விட்டேனானால் உங்க பெரியம்மா பிடுங்கல்லேருந்து தப்பலாம்.

பெரியப்பாவுக்குத்தான் கண் போயிடுச்சுன்னால் இவங்களுக்கென்ன ?தானும் கூடவே கண் தெரியல்லேன்னு…பாடு…அத்தனையிலே …உள்ளே நடக்கிறது சகலமும் தெரிஞ்சாகணும்…கொள்ளிக் கண்ணு வேற,,,சே!..உங்கம்மா ஒத்துக்க மாட்டாங்க… மரியாதை கொடு…பணிவா நடந்துக்க…ன்னு உபதேசம்…ப்fளைட் விட்டு இறங்கி அடிச்சிப் பிடிச்சி ஓடி வர வேண்டாம்.சமையல் ரூமை ஷிப்fட் பண்ணிட்டு வாங்க…கல்யாண வேலை எல்லாம் எங்கண்ணன் துவாரகி பார்த்துப்பான்.இருக்கிற திரிசமன் எல்லாம் உங்க ரெண்டுபேருக்கும் அத்துப்படி தானே ? ‘

பேச விட்டால் நான்ஸ்டாப் என் சகதர்மிணி.

தச்சன் மாய்ந்து மாய்ந்து போனான். ‘அதெப்படி இப்படி விழுந்தது கதவு ?கொள்ளை போயிடுச்சா ?எத்தினி பேரு ? என்ன என்ன போச்சு ? ‘

நான் பதில் சொல்லவில்லை.

ப்fரிட்ஜை இழுத்த பிறகு தான் தெரிய வந்தது.ப்fரிட்ஜ் சூப்பர் சைஜ்.மாடியில் செருகிடம் மீடியம் சைஜுக்கான ப்ரொவிஷன்.கூர்ந்து பார்த்தேன். நல்ல வேளையாக ஸ்லாப்பில் ஒரு இடுக்கு இருந்தது. தட்டினேன்.

அழகாகக் கையோடு வந்தது.தச்சனைக் கூப்பிட்டுச் சைகை காட்டினேன் ப்fரிட்ஜை வைக்கும்படி.

‘நீ…நீங்களா ? எப்படி ஐயா எடுத்தீங்க ? ‘

‘அட,நீ வேற…அது முன்னமேயே வீக்..கா ஆடிக்கிட்டிருந்தது… ‘

கூலியே பேசாமல் கொடுத்ததை வாங்கிப் போனான் தச்சன்.

உள்ளே போய் கணினி முன் அமர்ந்தேன்.ஈமெயிலைப் பிரித்தால் ஏகப்பட்ட குப்பை.செம்பாதியில் காதல். கடவுளே!அழகான பெண் காதலுக்கேற்றவள் என்று ஆண்களும் கெட்டிக்காரனெல்லாம் கில்லாடிகள் என்று பெண்களும் நினைத்துத் தொலைக்கிறார்களே! அது வைஸ் வெர்ஸா அம்மணியரே!

யார் நம்புகிறார்கள் நான் சொன்னால் ?பெண் பாகங்களில் என் புரிதலோ அறிதலோ இல்லை. தெய்வமே! என் உடல் செல்களிலெல்லாம் பிடி!பிடி!

வெற்றி! என்கிற கோஷம் தானிருக்கிறது.அதிலும் மனசு இருக்கிறதே! அது ஒன்றி ஒன்றி பரத்தில் முடிகிறது. சிலநேரம் ருத்ரபதியாகவோ சிலநேரம் துவாரகாநாத் ஆகவோசொர்க்க லாபங்கள் என்னை மடியில் கிடத்தி அறிவைத் தூக்கிப் போட்டுக் கூத்தாட்டுகின்றன.

சொல்கிறாள் என் தோழி, ‘யேய்,நடிக்காதே!முழு பெண்ணியவாதி என்று சொல்லிக்கொண்டு நான் உன்னை விரும்புகிற கர்வம் உனக்கு.நீயாக வாயைத் திறந்து சொல்ல மாட்டாய்,ஐ லவ் யூ,.. ‘

‘ரமா,விளையாடாதே!என்னால் உனக்கு என்ன கிடைக்கும் ?நான் திருமணமானவன்,ஒரு குடும்பம் கூடத் தர முடியாது உனக்கு நான்,உன் கூட இருக்க முடியாது நான் நினைத்தாலும்.,, ‘

ராட்சசி முறைத்தாள்.

‘உன்னை யார் இருக்கச் சொல்றாங்க ? இருக்காதே,போய்த்தொலை,உன்னை தினமும் தாங்கமுடியாது ‘

நான் நிராதரவாய் விழித்தேன்.

‘என்ன சொல்கிறாள் இவள் ?வேண்டாம் என்கிறாள்,லவ்யூ சொல்லு என்கிறாள்…இவங்கள எல்லாம் புரிஞ்சுக்க என்னடா வழி ? துவாரகி!கார் ஓட்டிக்கிட்டே எனக்குச் சொல்லிக்கொடுடா!பெரிய சமஸ்தானம் மாதிரி பிஸினஸ் சாம்ராஜ்யத்தையும்,திரும்பின இடமெல்லாம் விசிறிகள் கூட்டத்தையும் வெச்சுக்கிட்டு ஒரு புfல் டைம் டிரைவர் மாதிரி எனக்கு பார்ட் டைம் கார் ஓட்டுவான் என் துவாரகி.உலகத்து விஷயம் அத்தனையையும் விரல் நுனியில் வைத்திருப்பான்.ஒரு முறை மாஜிக் ஷோ நடத்தினான்.பிறகு விசில் கச்சேரி.பிfலிம்களில் கூட மயக்கினவன்.என் பிஸினஸ் டிரிப்களில் கூடவே அவனும்.சிலசமயம் தூதனாக.பலசமயம் நானே அவனாக,அவனே நானாக.நான் ஒடிந்து ‘எல்லாம் வேண்டாம் ‘ என்று ஒதுங்கும்போது ‘நோ,வேண்டும்,நீ ஜெயிக்க வேண்டும் ‘என்று என்னைத் தயார் செய்வான்.

‘துவாரகி!என்னை விடத் தகுதியாய் எத்தனை பேர் உனக்குண்டு ?ஏன் என்னையே காப்பாற்றித் திரிகிறாய் ?உன் மைத்துனன் நான் என்பதால் தானே ? ‘

‘போடா!மடையா!எனக்கு வேறு மச்சானே இல்லாத மாதிரி.நீ என்னுடைய பிரதிநிதி.என் வெற்றிகளை உன்னைக் கொண்டு அடைவது எனக்கு சந்தோஷம்.நான் சக்தி,நீ கருவி…அப்புறம்…கவனம்..முழுகவனம்..அதி தீவிர கவனம்…உன்னிடம் மட்டும் தான் நான் பார்த்தேன்.அதற்கப்புறம் உன்னிடம் உள்ள பொறாமையின்மை.யாரைப் பார்த்தும் உனக்கு வராத அசூயை.அது என்னை மெய் மறக்க வைக்கிற உன் குணம்.அந்த பொறாமையின்மை எங்கிருந்து வருகிறது தெரியுமோ ?துறவிலிருந்து.உன் மனசு முற்றும் துறந்திருக்கிறது.எதிலும் ஒட்டாமல் துறந்து,அந்தத் துறவினுக்குள்ளும் ஒவ்வொரு நடைமுறை சோகத்துக்கும் கண்ணீர் சிந்தும் கருணை யணிந்தவன் நீ…. ‘துவாரகா நாத் சொல்லச் சொல்ல ‘நானா ?நானா ?சந்யாசி ?கருணைவள்ளல் ?அடா!அடா!என் நண்பனின் இந்த அபிப்பிராயத்தைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமே! ‘என்று துடித்துப் போவேன்.

நாலு ஆலு பேட்டாஸ்,ரெண்டு ஸாண்ட்விச் பீஸ்,ஒரு வாட்டர் மெலான் பீஸ்,ஒரு ஆரஞ்சு சாப்பிட்டுப் பிரமாதமாய் ஒரு குளியல் போட்டேன்.

குளிக்கிற போது அம்மா ஞாபகம் வந்தது.மும்பையில் காடு கெட்டப்பில் வால் பேப்பர் ஒட்டப்பட்ட எங்கள் புராதன ப்fளாட்டில் இன்னுமிருந்தாள் அம்மா.

‘நம்ம வீட்டிலெ மட்டும் ஏம்மா இப்படி ? ‘

‘இப்ப இல்லடா,நீ பிறக்கிற முன்னாலயே ஸ்பெஷலா உங்கப்பா வரவழைச்சு வால் பேப்பர் ஒட்ட வெச்சார்.உன்னை நான் இந்த இயற்கையிடமிருந்து தான் பெற்றேன்.தைரியசாலியாக வெற்றி வீரனாக நீ உருவாக விரும்பித் தான் வேண்டிப் பெற்றேன் உன்னை ‘

இப்படி ஒரு அம்மா யாருக்குக் கிடைப்பாள் ?

தலை துவட்டி உள்ளே நுழையும்போது போfன் சிணுங்கியது.யாருக்குத் தெரியும் இன்று நான் வந்து சேர்ந்தது ?பார்டர் செக்யூரிட்டி போfர்ஸ் பிரிகேடியர் பேசினார்.

‘யங் மேன்!உன் வேலை படு துல்லியமாக இருந்தது.படம் போட்டு நுழைச்சிருந்தியே பார்டரையே மென்பொருளில்,இன்னொரு கார்கில் தவிரும்…இன்னொன்று…ஆமா…ஒன்று பண்ணிக்கொடு…என்ன வேணும்னு சொல்றோம்.வரும் உன்னிடம்..பைfல் வரும்,பாரு…ஓகே… ‘

இதைத் தான் சொன்னேன்.பங்காளிச் சண்டை என்று.பார்டரில் நடப்பது துன்மார்க்கம்.பரப்பு அதிகம் வைத்திருக்கும் மெத்தனக்காரருக்கும் துன்மார்க்கம் அதிகம் வைத்திருக்கும் சந்தர்ப்பவாதிகளுக்கும் அரசியலை மத்தியில் வைத்து எப்போதும் நடந்து வரும் நிழல்சண்டை….தீவிரிக்கு வாக்கு தந்திருக்கிறேன்.பார்ட்டிஷனில் தொடங்கி பாதிக்கப்பட்ட குடும்பத்தில் கார்கில் வழி ஒற்றையாக்கப் பட்டவள்.தானும் தூதரகத்தில் அவமானங்களைச் சுமந்தவள்.

ஒரு பட்டு வேட்டி சட்டை,ஒரு ஜிப்பா பைஜாமா ரெண்டு செட் பாfர்மல் எடுத்து வைத்துக் கொண்டேன்.

இன்னிக்கு என்ன தேதி ?….ஆபீசுக்கு ஒரு நடை போயிட்டு அப்புறமா கல்யாண வீட்டுக்குப் போனாலென்ன ?வத்சு கல்யாணத்திலே வில்லங்கம் ஏதாவது வந்தால் துவாரகி ஏதாவது ஐடியா வெச்சிருப்பான்.நான் போய் என்ன பண்ணப் போறேன் ?வத்சுவுக்குப் பொருத்தமாய் எங்கள் வீட்டில் பையனில்லை.சுபத்ரா வத்சலாவை விட எட்டு வயது தான் பெரியவள்.ரெண்டு பொடிக்குட்டிகள் எனக்கு.பையன் வேண்டாம் என்று சொல்லி விட்டேன்.விளையாட்டாக இப்படிச் சொன்னேன்.எனக்கு அபிமன்யூவும் வேண்டாம் ஜெயத்ரத வதமும் வேண்டாம்.உபத்திரவமில்லாமல் பெண்குழந்தைகளை வளர்ப்பேன்.நல்லா படிக்கும் விவேகமா இருக்கும்.பாசம் பொழியும் வேறென்ன வேணும் ?னேன்.

இப்போதைக்கு கல்யாண வீட்டில் சுபத்ரா உயிரை எடுத்துக்கொண்டு அலைவாள்கள்.நான் போனால் தான் சரிப்படும்.சரி…ஆபீஸ் போய் எட்டிப்பார்த்து அந்த அக்கவுண்டண்ட் கம்மெர்ஷியல் அக்கெளண்ட்ஸை முடிச்சானா,ஆடிட்டர் வில்லன் பார்த்துப் போனானா… என்று…

ஆறாவது மாடியில் என் சேம்பர் முன் நிற்கிறேன்.அதற்குக் காத்திருந்த மாதிரி கால் வருகிறது.

‘நான் ரமா… ‘

‘என்ன…தொண்டையைக் கிணத்துலெ போட்டுட்டயா ?..நான் வந்து எடுத்துத் தரணுமா ?…. ‘

‘இல்ல…நான்…நான்… ‘

‘சொல்லும்மா.. ‘

‘எனக்கு ஹார்ட்டிலே பிளாக் இருக்காம்.ஆஞ்சியோபிளாஸ்ட் பண்ணப் போறாங்க… ‘

‘எங்க…எங்க…எங்கிருந்து பேசறே ? ‘

‘அது…மால்யா ஹாஸ்பிட்டல்லேருந்து..பூமா வந்தா..அவ ஸெல்ல பிடுங்கிக்கிட்டு பேசறேன்…இப்ப போகணும்…உள்ள கூப்பிடறாங்க… நீ லவ் யூ சொல்லாமயே தப்பிச்சிட்ட… ‘

‘இரு,நா இப்ப வர்றேன்… ‘

‘நோ,எனக்கு பயமாயிருக்கு…அதுக்குள்ள நான் இருப்பேனோ இல்லியோ… ‘ ‘ரமா,அப்படிச் சொல்லாதே,இதுக்கெல்லாம் யாரும் சாக மாட்டாங்க,ஐ லவ் யூ ரமா,ஐ வாண்ட் யூ,ஐ லவ் யூ,ஐ லவ் யூ… ‘

ஸெல்லைக் கையில் பிடித்தபடி என் குரலின் உச்சத்தில் அலறிக்கொண்டே ஓடினேன்.

வழியெல்லாம் என் ஸ்டாப்f அதிர்ந்து நிற்கிறார்கள்.

சுருக்கென்று கிசுகிசுப்பாய் ஒரு வார்த்தை அம்பு… ‘பொம்பளைப் பொறுக்கி ‘….

எந்த மூலையிலிருந்தோ…

‘சாட்சாத் அர்ஜுனன் தான் ‘

—-மாலதி

சதாரா

==== malti74@yahoo.com

Series Navigation

மாலதி

மாலதி