சொர்க்கத்தில் கல்யாணம்

This entry is part [part not set] of 50 in the series 20040812_Issue

ஞானதேவன்


கி.பி. 2025.

தமிழ் உலக தொலைகாட்சியில் செய்திகள். மேக்கப் இல்லாமலே ஒரு அழகான 3D பெண் உருவம் பேசத் தொடங்கியது

‘நேயர்களுக்கு வணக்கம். இது தான் மனித இனத்தின் கடைசி நாள் என்று கூறப்படுகிறது. பூமியின் சுற்றுப்பாதையில் வந்துள்ள ‘டெர்மினேட்டர் 1 ‘ என்று அழைக்கப்படும் எரி கல்லானது இன்னும் 10 நிமிடங்களில் பூமியின் மீது மோதி, மனித இனம் வாழக்கூடிய இந்த பூமியை பல கோடி துகள்களாக சிதறடித்து, நம் அனைவரையும், முடிவற்ற பால்வெளு மண்டலத்தில் ஒன்றாய் கலக்க வைக்கப்போகிறது. எந்த விஞ்ஞானமும் இந்த அழிவில் இருந்து யாரையும் காப்பாற்ற முடியாமல் கை கட்டி நிற்கிறது. கடைசியாக செய்யப்பட்ட முயற்சியும் தோல்வியுற்றது. மக்கள் அனைவரும், தங்களின், கடைசி ஆசை, பிரார்த்தனைகளை நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றனர். கடவுளின் அருள் இருந்தால் மீண்டும் உங்கள் முன் தோன்றுவேன். வணக்கம் ‘

என்று சொல்லிவிட்டு அந்த பெண் மறைந்தாள்.

செய்தியைப் பார்த்துக் கொண்டிருந்த எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. சில மாதங்களாகவே எதிர்பார்த்துக் கொண்டிருந்தது தான் இது. ஆனால் விஞ்ஞானம் தோற்று விடும் என்று எதிர்பார்க்கவில்லை. அவ்வளவு தான். எல்லாம் முடிந்து விட்டது. இதோ இன்னும் 10 நிமிடம் தான். பிறகு …. வெறும் புகை அல்லது நெருப்பு தான் இருக்கும், நான் இருக்க மாட்டேன். அப்படியே அமைதியாய் உட்கார்ந்தேன். என்ன செய்வது என்று யோசித்தேன் ? என் கடைசி ஆசை என்ன என்று யோசித்தேன். ஒன்றும் தோணவில்லை.

எனக்கிருக்கும் ஒரே ஆசை என் கூட காலேஜ் படிக்கும் மீராவை கல்யாணம் செய்து கொள்வது மட்டும் தான். அதற்கும் இப்போது வழி இல்லை. நான் அவளை காதலிப்பது கூட அவளுக்கு இன்னும் தெரியாது. நல்ல நண்பனாய் நினைத்து பழகுகிறாள், காதலை சொன்னால் ஏற்பாளோ மாட்டாளோ என்று தான் மெளனம் சாதித்து வருகிறேன். இப்போது போய் சொல்லிப் பார்க்கலாமா ? ‘ம் ‘ என்றால் சொர்க்கத்திலாவது கல்யாணம் செய்து கொள்ளலாம், ‘இல்லை ‘ என்றால், சும்மா செத்து போய்விடலாம். முடிவு செய்து விட்டேன். மீராவை போய் பார்க்க வேண்டியது தான்.

சுறுசுறுப்பாய் எழுந்தேன், இன்னும் முழுதாய் 6 நிமிடங்கள் இருந்தது. பைக் எடுத்தால் 2 நிமிடத்தில் அவள் வீடு. 1 நிமிடம் போதும் காதலை சொல்ல.மீதி 3 நிமிடம் ரொமான்ஸ் செய்யலாம். இல்லை கடைசி பிரார்ிதனை செய்யலாம். சே இந்த வண்டி சாவி எங்கே வைத்தேன் ? கட்டில்.. மேஜை.. டிவி.. டைனிங் டேபிள், சோபா.. ஐய்யோ எங்கேயும் இல்லை.. இனியும் தாமதிக்க கூடாது.. விறுவிறுவென்று வாசலுக்கு வந்தேன்.

வானம் சிவப்பாய் தெரிந்தது, பக்கத்தில் ஒரு பெரிய நெருப்பு பந்து சிறிது சிறிதாய் பெரிதாகிக் கொண்டே வந்தது. இதை பார்த்துக் கொண்டிருந்தால் நேரம் போய்விடும், காரியம் தான் முக்கியம். பைக்கின் ரிமோட்கண்ட்ரோல் லாக்கின் வயர்களை பிடுங்கினேன். அபாய மணி ஒலிக்கத் துவங்கியது. அதையும் பிடுங்கி வீசிவிட்டு, காலால் உதைத்து கிளப்பினேன். எஞ்சின் உறுமிவிட்டு தூங்கியது. சனியனே, இப்போது காலை வாரி விடாதே.. தயவு செய்து கிளம்பு… மீண்டும் உதைத்தேன்.. உறுமல் பின் தூக்கம்… எனக்கு இயலாமையில் கோபம் மட்டும் தான் வந்தது.

என் காதலையும் சொல்ல விடாமல் செய்யும் கெட்ட மனம் கொண்ட என் வாகனமே எழுந்திரு… என்று திட்டிக் கொண்டே மீண்டும் உதைத்தேன்… ரோஷம் கொண்டு சீறியது அது.. வேகம் பொங்க அதை திருப்பினேன். கை கடிகாரத்தைப் பார்த்தேன் இன்னும் 3 நிமிடம் தான் பாக்கி…. அப்போது….திடாரென என் தலையை இரு கைகள் பிடித்து திருப்பின, அதன் மென்மையில் என் கண்கள் சொக்கியது, தேனில் மட்டுமே 18 வருடங்களாக ஊறிக்கிடந்த, கெட்டி சர்க்கரைப்பாகில் இருந்து எடுத்த செர்ரி பழம் போன்ற இரு உதடுகள், என் உதடுடன் இணைந்தது, அதன் ஈரம், என்னுள் இதமாய் இறங்கியது. பைக் என் பிடியில் இருந்து தானே நழுவி தரையில் விழுந்து மீண்டும் அதன் உறக்கத்தை துவங்கியது.

கண்ணை திறக்காமலே அந்த உதடுகளின் சொந்தக்காரியின் இடையை கட்டிப் பிடித்தேன். சத்தியமாய் இது என் மீராவே தான். அவள் இடை, என் பைக் ஹேண்டில்பாரை விட சின்னதாயிற்றே, இன்னும் இறுக்கிப்பிடித்து அவள் உதடுகளில் ஒட்டிக் கொண்டேன். நிமிடங்கள் ஓடின.. இல்லை பறந்தது.. இல்லை மின்னலாய் மறைந்தது.. கண் விழித்து பார்த்தேன்.. நெருப்பு துண்டு வெகு பக்கமாய் தெரிந்தது.

விலகிப் போ டெர்மினேட்டரே.. சில விநாடிகள் கழித்தாவது வா என்று சபித்தேன்.. என் முனகலில் அவள் விழித்து தன் உதடுகளை என்னிடம் இருந்து பிரித்து எடுத்து..

‘கண்ணா.. ஐ லவ் யூ ‘ என்று சொல்லிவிட்டு, அடுத்த மைக்ரோ விநாடியில் மீண்டும் என் உதட்டில் ஒட்டிக் கொண்டாள்.

கண் சிமிட்ட நேரம் இல்லை, டெர்மினேட்டர் தன் மொத்த எடையையும், பூமியின் மீது இறக்கியது. பூமியே பெரிய அடுப்பாய் மாறி தகிக்க ஆரம்பித்தது. நானும் என் மீராவும் கட்டி அணைத்தப்படி சாம்பலாகி விட்டோம்.

மேலுலகம்.

சித்திர குப்தன் அலுவலக வாசல்:

நம்ம ஊர் அரசு அலுவலகம் போய், கச கசவென்று இருந்தது.. பின்னே எல்லாரும் ஒட்டு மொத்தமா வந்தா இப்படி தான் இருக்கும். நானும் மீராவும் கை கோர்த்துக் கொண்டு தான் நின்றிருந்தோம். முன்னே Q போய்க் கொண்டிருந்தது. எங்கள் முறை வந்தது. வயசான சித்திர குப்தன் இருந்தார். 2004ம் வருச மாடல் கம்ப்யூட்டர் ஒன்றை வைத்து இருந்தார். ஸ்கிரீனை பார்த்தேன். அது ஆரக்கிள் 10ஜி டேட்டா பேஸ்.

‘உன் பேரு மீராவா ‘ என்றார்.

‘ம் ‘ என்றேன் நான்.

என்னை பார்த்து விட்டு,

‘உன்னிடம் கேட்கவில்லை.. நீ பேசாதே ‘ என்று சொல்லிவிட்டு அவள் பக்கம் திரும்பினார்.

‘உன் கடைசி ஆசை நிறைவேறிச்சா ‘ என்றார்.

அவள் சிறிது வெட்கத்துடன் ‘ம் ‘ என்றாள்

‘நல்லது, நீ அந்தப்பக்கம் போ ‘ என்றார்.

அவளும் சிறிது தள்ளிப் போய் நின்றாள்.

‘உன் பேரு கண்ணன் சரியா ‘ என்றார்.

‘ம் ‘ என்றேன்.

‘ உன் கடைசி ஆசை நிறைவேறிச்சா ‘ என்றார்.

‘ம் ‘ என்றேன்.

நிமிர்ந்து பார்த்தார்

‘பொய் ‘ என்றார் அழுத்தமாய்

‘இல்லை, உண்மை தான். நிறைவேறிச்சி ‘ என்றேன்.

‘மீண்டும் பொய்.. நீ அந்தப் பெண்ணிடம் உன் காதலை சொல்லப் புறப்பட்டாய், ஆனால் நீ சொல்வதற்க்கு முன் அவள் முந்திக் கொண்டாள். நீ அவளிடம் ஐ லவ் யூ சொல்லும் முன் அவள் சொல்லி உன் உதட்டை கவ்வி பிடித்துக் கொண்டாள், எனவே நீ உன் கடைசி ஆசையான உன் காதலை அவளிடம் சொல்லும் முன், பிரளயத்தில் சிக்குண்டு, சிதறி இறந்து போய் இங்கே வந்திருக்கிறாய்… ‘

நான் பிரமை பிடித்து நின்றிருந்தேன்

‘…நிறைவேறாத ஆசையுடன் ‘ என்று அழுத்தமாய் முடித்தார்.

‘எனவே… ‘ தொடர்ந்தார்.

‘நீ உன் காதலியுடன் போக முடியாது.. நிறைவேறாத ஆசையுடன் நீ ஆவியாக அலைவாயாக ‘ என்று என்னை…. என்னை… ஓ ஓ ஓ ஓ ஓ ஓ….

கதை இத்துடன் முடிகிறது… இருந்தாலும் நெகடிவ் முடிவை விரும்பாதவர்களுக்காக, பின் இணைப்பு தொடர்கிறது….

ஓ ஓ ஓ ஓ என்று ஓலமிட்டு கதறி அழுத என்னைப் பார்த்து சித்திர குப்தன்

‘சே நிறுத்து.. அழாதே.. என்னை முழுசா பேச விடு… ‘ என்றார்.

அழுகையை நிறுத்திவிட்டு அவரைப் பார்த்தேன்..அவர் என் முகத்தையும், கலங்கி போய் இருந்த என் கண்மணி மீராவின் முகத்தையும் பார்த்து விட்டு, மெதுவாய்..

‘கண்ணா கலங்காதே.. எப்போது நீயும் அவளும் ஒருவருக்கொருவர் மனமுவந்து காதலிக்க ஆரம்பித்தீர்களோ, அன்றே இருவரின் எண்ணங்களும் ஒன்றாகி விட்டது. எண்ணங்கள் ஒன்றானதால் ஆசைகளும் ஒன்றாகி விட்டது. எனவே அவளது ஆசை நிறைவேறியது என்றால், உன் ஆசையும் நிறைவேறியதாகவே அர்த்தம். போ கண்ணா, உன் இனிய காதல் வாழ்க்கையை சொர்க்கத்தில் தொடங்கு ‘ என்று புன்முறுவலுடன் ஆசிர்வதித்தார்….

அப்புறம் நிஜமாகவே எங்கள் கல்யாணம், முப்பது முக்கோடி தேவர்கள் பூச்சொரிய இனிதே நடந்தது. 🙂

நிஜமாகவே முற்றும்..

***

gyanadevan@gmail.com

Series Navigation

ஞானதேவன்

ஞானதேவன்