விழிப்பு

This entry is part [part not set] of 39 in the series 20050203_Issue

மாதங்கி


சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் பயணிகள் வந்திறங்கும் தளத்தில் உள்ள வெயிட்டிங் லவுஞ்சில் அமர்ந்திருந்தவாறே மேலே இருந்த தட்டைத் திரை தொலைகாட்சிப்பெட்டியில் சென்னையிலிருந்து கிளம்பிய ஏர் இந்தியா விமானம் காலை ஏழரைக்கு குறித்த நேரத்தில் வந்துவிடும் என்பதை அறிந்து கொண்ட பின், பரவாயில்லை, இன்னும் அரை மணி இருக்கிறது என்று தனக்குள் சொல்லிக்கொண்டார் பாலகுருநாதன்.

ஸ்வென்சனில் குளிர்ந்த பால் குடித்து விட்டு பூக்கொத்துக் கடையில் ஹாலந்திலிருந்து தருவிக்கப்பட்ட டூலிப் மலர்க்கொத்தை வாங்கிக்கொண்டார்; அருமைத்தங்கை நீருவும் குட்டி நீருவும் வருகிறார்களே; நீரு கல்யாணமான புதிதில் ஒருமுறை கைலாஷூடன் வந்தாள். குட்டி நீரு வருவது முதல்முறை.

இந்த சாங்கி விமான நிலையத்திற்கும் அவர் வாழ்க்கைக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளதாகவே நம்பினார். வருடத்தில் எத்தனை முறை தான் இங்கிருந்து இங்கிலாந்து, ஐக்கிய அமெரிக்க நாடுகள், மத்திய கிழக்கு நாடுகள், சீனா, ஜப்பான், மற்று விடுமுறை ஆண்டுக்கு ஒரு முறை இந்தியா என்று இதனுடன் பிணைத்துக்கொண்ட வாழ்வு இன்னும் தொடர்ந்து வருகிறது.

முதன்முதலாக அவர் கையில் மிகசொற்பமான டாலரோடு ஆனால் நெஞ்சு நிறைந்த தன்னம்பிக்கையுடனும் சீரான பழக்க வழக்கங்களுடனும் இளம் இஞ்சினியராக இதே விமான நிலையத்தில் பதினைந்து வருடங்களுக்கு முன்னர் வந்திறங்கியதை நினைத்துக்கொண்டார்.

இன்று சாங்கி விமான நிலையம் டர்மினல் ஒன்று, இரண்டு என்று பிரம்மாண்டமாக விரிவடைந்து, மூன்றாவதை நோக்கி வெற்றிநடை போடுகிறது- அதே சீரான ஒழுங்கு முறை மற்றும் தரக்கட்டுப்பாட்டுடன்.

நல்ல ஒற்றுமைதான், தனக்குள் சொல்லிக்கொண்டார். கடுமையான உழைப்பு, பகுதி நேர மேல் படிப்புக்கள், அவரை இன்று பொருளாதாரத்தில் உச்சாணிக்கொம்பில் உயர்த்திவிட்டது. தலைசிறந்த அமெரிக்க கம்பெனிகளுக்கு, கண்ட் ரோல் ஸிஸ்டம்ஸ் தயாரிக்கும் நிறுவனத்தில் இன்று அவரே மிக இளைய வைஸ் ப்ரெசிடெண்ட். காப்பி, தேநீர், புகை, மது, அசைவ உணவு என்று எந்தப் பழக்கமும் இன்றி அன்று போலபே 5 இன்றும் மாறாமல் தாம் இருப்பதை எண்ணி பெருமிதம் கொண்டார். ஆரம்பகாலத்தில் சிறிது கேலி கிண்டல் முதலியவற்றை அவர் சந்தித்தது உண்மைதான் என்றாலும் நாட்பட எல்லோரது நன்மதிப்பையும் பெற்றதுநிஜம்.

‘இன்னோரு பெரிய ஒற்றுமை, அதை முதலில் சேர்த்துக்கோங்க, சாங்கியும் ராத்திரி முழுக்க பகல் போல இருக்கும், உங்களுக்கும் ராத்திரி என்பதே கிடையாதே ‘ என்று ரேவதி சொல்லி வருத்தத்துடன் சிரிப்பதை எண்ணிக்கொண்டே வெவ்வேறு விமானங்களில் தூக்ககலக்கத்துடன் இறங்கி வரும் பயணிகளிடையே குழந்தைகள் முகம் மட்டும், எந்த ஒப்பனையும்மின்றி பூத்த பூ போல இருப்பதை எண்ணி நூறாவது முறைய ாக ஆச்சரியப்பட்டார்.

பெரிய பதவியும் பொறுப்பும் வந்த பிறகு இரவு படுத்தவுடன் தூக்கம் என்பது அவருக்கு எட்டாத கனவாகியது. படிப்படியாக அவர் பதவி உயர்வு பெற்று, இன்று கிட்டத்தட்ட ஐம்பது ப்ராஜக்ட் மானேஜர்கள் வெவ்வேறு நாட்டைச் சார்ந்த நிறுவனங்களுக்குத் கண்ட் ரோல் சிஸ்டம்ஸ் செய்து தர, ஒவ்வொரு ப்ராஜக்ட்டின் லாப நஷ்ட கணக்குகள், மற்றும் பொறியியல் சோதனைகள் அனைத்திற்கும் இவரே பொறுப்பு. ஒவ்வொரு ப்_ c3ாஜக்ட் மேனேஜருகும் அவர்கள் கீழே திறமைவாய்ந்த பொறியிலலாளர்கள் இருந்தாலும் அவர்கள் இந்திய, சீன மலாய், பிலிப்பைன்ஸ், ஐரோப்பியர், ஐப்பானியர் மற்றும் ஆப்பரிக்கர் என்று பல மத, இனத்தைச் சார்ந்தவர்களாக இருக்கையில், பொறியியல் அறிவோடு நிர்வாகத்திறமையும் மிகச் சிறப்பாக இருந்தால் தான் நிறுவனத்தை போட்டிக்கம்பெனிகளைவிட சிறப்பாக கொண்டுவர இயலும்.

கைத்தொலைப்பேசி கிணுகிணுக்க, முதலில் ரேவதி- வெல்கம் பார்ட்டிக்கு குட்டி நீருவிற்கு எல்லாம் தயார் நிலையில் உள்ளது தெரிவிக்கப்பட்டது. அடுத்து பரி என்ற பரிமேலழகன், சென்னையில் இருவரும் ஒரே கல்லூரி; இவர் இயந்திரவியல் பரி மின்னணுபொறியியல் வெவ்வேறு நிறுவனம் ஆனாலும் இன்னும் அதே கல்லூரி இளமையைக் கட்டிக்காக்கும் தோழன்.

‘பாலா , உனக்கு ஒரு குட் குட்மார்னிங் நியூஸ், உன் தூக்க ப்ராபளம் தீர்ந்தது,.. ‘

‘கமான் பரி, பி சீரியஸ், ஒரு பெக் போடு, தாய்மசாஜ்ஜுக்குப் போன்னு எல்லாம் கடிக்காதே; ‘

‘ பாலா, அடுத்த வாரம் நேராக டோக்கியோ போ, ஜப்பான்காரன் கடை திறக்கப்போறான், அரை மணியில தூங்க வைக்கறாங்களாம், ஜஸ்ட் நாற்பத்தேழாயிரம் சிங்கப்பூர் டாலர் ‘

‘வரவர ரொம்ப கிண்டல் பண்ற பரி ‘ பேசிக்கொண்டே வரவேற்குமிடத்தில் தயாராக நின்று கொண்டார்.

‘கமான் பாலா சுத்த சந்நியாசி ட்ரீட்மெண்ட், படுக்கை நெட்டுகுத்தா இருக்குமாம், காட்டுல ஆறு ஓடுறதை பெரிய டிவீல காட்டுவானாம்; அப்படியே ரூம் வெளிச்சம் மெல்லக்குறையுமாம், டிவியும் அணையுமாம், ஆறுமட்டும் ஓடுற சத்தத்தை நிறுத்த மாட்டானாம், படுக்கையும் மெல்ல சாஞ்சுகிட்டே, முதுகெலும்ப மசாஜ் பண்ணுமாம்; எட்டு மணிநேரம் இரவுத் தூக்கம் விற்பனைக்கு ;காபி ஷாப் மாதிரி தூக்க ஷாப் எப்படி; செ_ c1மூளைடா ‘

‘தூக்கம் கூட விற்பனைக்கு வரும் நிலைமை. கிரியேடிவ் இன்வென்ஷன் என்று கூறிக்கொண்டு பேச்சை சுருக்கமாக முடித்துக்கொண்டு மறுநாள் தொடருவதாக கூறி முடித்துக்கொண்டார். சிறிது நேரம் கழித்து ட் ராலியில் சாமானுடன் நீரு தள்ள, குட்டி நீரு ஒரு முயல் குட்டி போல துள்ளி வருவதை பார்த்து அவர் மனமும் துள்ளியது.

செல்லத் தங்கை நீரு கல்யாணமாகி பத்துவருடம் ஆகியும் குழந்தைக்காக பர்டிலிடி ட் ரீட்மெண்ட் ஒரு பக்கம் , சகல தெய்வங்களுக்கு மனமுருகி பிரார்த்தனை ஒரு பக்கம், என்று எல்லாம் போராடிகொண்டிருக்கையில் திடாரென்று அவருக்கு அவளிடமிருந்து கச்சிதமாக ஒரு இ மெயில் வந்தது, ‘அண்ணா, பத்துநாள் பெண்குழந்தையை தத்து எடுத்துகொண்டிருக்கிறேன் நம் அம்மா பெயரையும் என் மாமியார் பெயரையும் இணைட் 2து ஸ்வர்ணபூரணி என்று பெயரிட்டிருக்கிறோம்; உன் ஆசீர்வாதம் தேவை, என்றவுடன் ஏகப்பட்ட பரிசுகளுடன் குடும்பத்துடன் குழந்தையைப் பார்த்துவிட்டு வந்தார், அதிலும் அவர் மகன் காஷ்யப், ஸ்வர்ணா என்றால் கோல்ட் இந்த பேபியும் நம்வீட்டு கோல்டன் ட் ரெஷர் என்றபோது எல்லோர் கண்களும் பனித்தது.

இப்போது காஷ்யப் இங்கில்லை, ஆஸ்திரேலியாவில் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருக்கிறான். அத்தையும் ஸ்வர்ணாவும் வரும்போது தான் அங்கு இல்லை என்பதில் அவனுக்கு மிகவும் கோபம்; என்ன கோபத்தை வழக்கம் போல் படிப்பதில் தீவிரம் காட்டில் ஏ ஸ்டார் வாங்குவது அவன் வழக்கம். இந்த செமஸ்டர் பரிட்சை முடியும் தருவாயில் இருப்பதால் அடுத்தவாரம் விடுமுறையில் வருவதாகக் கூ_ c8ியுள்ளான்.

தொலைபேசியில் அடிக்கடி பேசுவதிலும், கணிணியில் வீடியோ கான்பரன்ஸ் முறையில் பார்ப்பதாலும் குழந்தை அவரிடம் தாவி வந்தது. தயாராக வைத்திருந்த மலர்க்கொத்தையும் சுவிட்சர்லாந்தின் புகழ்பெற்ற லிண்ட் இனிப்புப் பெட்டியையும் அவர்கள் கையில் தந்து பரஸ்பர விசாரிப்புக்கு பின், தான் முன்யோசனையுடன் வாங்கி வைத்திருந்த கார் சீட்டரில் குழந்தையை உட்கார்த்தி பெல்ட் கட்டினார். நீருதான் சற்று காது வலி என்று காதை பிடித்துக்கொண்டிருந்தாள் தங்கையையும் அமரச் செய்து சாமான்களை பின்புறம் வைத்து விட்டு தானும் பெல்ட் அணிந்து கவனமாக கிளப்பிய கார் நகரை நோக்கி வழுக்கிக்கொண்டு சென்றது.

காபி ஷாப், 24 மணி நேரமும் இயங்கும் மினிமார்ட், டென்னிஸ் கோர்ட், நீச்சல்குளம், ஜிம், கன்வென்ஷன் ஹால், ஸ்பேஸ் ஆப்சர்வேட்டரி, ஸ்பா, கச்சிதமான ஆனால் பாதுகாப்பான நவீன திறந்த குழந்தைகள் விளையாட்டுக் கூடம் என்று சகல வசதிகளும் கூடிய காண்டோமினியத்துள் நுழைந்து அவர்கள் அபார்ட்மெண்டை அடைந்தபோது ரேவதியின் திட்டப்படி, பொம்மை, பலூன், என்று ஒரு குட்டி வரவேற்பு பார்ட்டி நடந்தது.

அண்ணா, அண்ணிக்காக தான் ஆசையுடன் செய்து மற்று வாங்கி வந்த பொருட்களைக் கொடுத்து வணங்கி ஆசிர்வாதம் பெற்றாள் நீரஜா. அதன் பின் குழந்தையை குளிப்பாட்டுவது, அவள் குளிப்பது, எல்லோரும் உணவு உண்பது என்று அவர்களுக்கும், புதிய இடம் புது சூழ்நிலை புது பொம்மைகள் என்று குழந்தை ஸ்வர்ணாவும் மகிழ்ச்சியில் ஆழ்ந்திருக்க எல்லாரும் செந்தோசாவிற்கு கேபில் காரில் போய் வந்தார்கள். இரவு ை_ baவ உணவகமான மெட்ராஸ் வுட்லாண்ட்ஸ் கங்காவில் இண்டர்காண்ட்டினட்டல் பூபே சாப்பிட்டார்கள்.

மதியம் சற்று நேரம் ஸ்வர்ணா அயர்ந்து தூங்கிவிட்டதால் இரவு வீட்டுக்கு வந்தபிறகுகூட குழந்தை நல்ல உற்சாகத்துடன் இருந்தாள். விழித்திருக்கும் நேரத்தில் வாய் ஒரு நிமிடம் கூட சும்மா இருக்காது; அப்படி ஒரு துறுதுறுப்பான பேச்சு. ஏன் எப்படி என்று ஏகப்பட்ட கேள்விகள். சிறு குழந்தைதானே என்று எண்ணாமல், மெழுகு அருங்காட்சியகம், டால்பின் லாகூன், ஆழ்கடல் உலகம், பட்டுப்பூச்சி உலகம், மெர்லையன் என்று ஒவ்வொரு இடத்தையும் பொறுமையுடன் விவரித்தார்கள்.

பாலா மாமா, பாலா மாமா, ரேவதி மாமி என்று நொடிக்கொரு முறை அழைத்து பாசத்துடன் ஒட்டிக்கொண்டாள் குழந்தை ஸ்வர்ணபூரணி.

‘இன்னிக்கு நான் தூங்கினாப்பலதான் ‘ என்று நீரு பிரயாண அலுப்புடன் கூற, பாலகுருநாதன் உற்சாகமடைந்தார்.

‘நீரு, இன்னிக்கு நீ ரொம்ப களைப்பா இருக்கே, நீ தூங்கு, மத்த இடங்களையெல்லாம் நீயும் ரேவதியும் உங்கள் செளகரியப்படி பார்த்துக்கொள்ளுங்கள். ஸ்வர்ணாவை நான் தூங்கவைக்கப் பார்க்கிறேன். ‘ என்றார்

‘அண்ணா உங்களுக்கு நாளை அலுவலகம் இருக்கு, ஏற்கனவே தூக்கம் வராமல் கஷ்டப்படறீங்க ‘

‘அதுக்கென்னம்மா பண்ணறது, மூலிகைமணி, ஹெல்த் எக்ஸ்ப்ரஸ் லேந்து யாஹூ, கூகில் (google) ன்னு நெட்டுலயும் வலைவீசித் தேடி ஓரளவு எல்லாம் பண்ணிப்பாத்தாச்சு, உடற்பயிற்சி, சரியான உணவு எல்லாம் கடைபிடிக்கிறேன்; இரண்டு மூன்று மணியானும் ஆகணும்; பேசாம நீங்க இரண்டு பேரும் இங்க தூங்குங்க நான் குழந்தைய பாத்துக்கறேன் என்றவாறு அவர் ஆசையுடன் கூப்பிட்டவுடன் ஓடி வந்த குழந்தையை தூக்கிக்கொண்டு, பல் 7தய்த்துவிட்டு, பாத்ரூம் அழைத்துப்போய், இரவு உடை போட்டு, பால் குடிக்க வைத்து தங்கள் படுக்கையில் குழந்தையின் படுக்கையை விரித்து தலையணை போட்டு பக்கத்தில் உட்கார்ந்து கொண்டார்.

‘ம் கதை சொல்லுங்க மாமா ‘ என்று அவர் கழுத்தைக் கட்டிக்கொண்டு கொஞ்சியது.

அவரும் காக்கா கதை என்று ஆரம்பிக்க, கஜேந்திர மோட்சம், நோவாஸ் ஆர்க், குரான் கதைகள் எல்லாம் எனக்குத் தெரியுமே என்று அசத்திக்கொண்டே போக என்ன கதை சொல்வது என்றே அவருக்குத் தெரியவில்லை; புராணக் கதைகள், பல சமயங்களைச் சார்ந்த பெரியவர்களின் கதைகள், புதுமைக் கதைகள் என்று எல்லாமே ஓரளவுக்கு அதற்குத் தெரிந்திருக்க பாலகுருநாதன் திணறிப் போனார்.

‘தெரியாத கதை தான் வேணும் ‘ என்று செல்லம் கொஞ்சியது.

கண்களை உருட்டி மிரட்டியது.

என்ன சொல்லலாம் சட்டென்று யோசித்தார்;

தொழில் நிர்வாகத்தில் முதுகலைப்பட்டம் பெற்று பின் அவரது நிறுவனதிலேயே அவரது இயந்திர இயல் துறை பணியைத் தவிர சில சமயங்களில் நிர்வாக வகுப்புகளும் எடுப்பார். நிர்வாக வகுப்புகளின் சுவாரசியத்திற்காகவும் எளிமையாக புரியவைப்பதற்காகவும் குட்டிகுட்டி கதைகள் சொல்லுவார். எனக்கே சவாலா. அதிலிருந்து சிலதை எடுத்துவிட்டு அசத்தலாம் என்றவாறு முதல் கதையைத் துவங்கின_ a1ர்.

‘ஊஹூம் நீங்களும் என்னோடு என்னை பாத்துகிட்டே படுத்துக்கணும் ; பிஞ்சுக்கை அவரை இழுத்தது.

‘ப்ரான்சு நாட்டில் ஒரு குட்டிப்பையன் இருந்தானாம்; அவனுக்கு ரெயின்போ ஐஸ்காண்டி தின்ன ஆசையாக இருந்ததாம். அவனிடம் கொஞ்சம் ரூபாய் இருந்ததாம்,.. ‘

‘தப்பு தப்பு மாமாவுக்கு ஒண்ணுமே தெரியலே, ப்ரான்சுல ப்ராங்குதான் சொல்லணும்; ‘ அவர் தலைமுடியை கையால் ஆட்டி தோளில் தட்டி குதூகலித்தது.

அவருக்கு பெருமை தாங்கவில்லை ,வாயாற குழந்தையை மெச்சிவிட்டு, ‘ஆமாம் ப்ராங்குதானே, அப்புறம்,

அவன் ஒரு காண்டி கடைக்குப் போனானாம். ஒரு டேபிளில் உட்கார்ந்தவுடன் மெனு கார்டை வெயிட் ரஸ் கொண்டு வந்தாளாம். ரொம்ப அழகான கலர்படம் போட்ட ரெயின்போ காண்டி ஒன்றரை ப்ராங்க் என்று இருந்ததாம். சாதாரண காண்டி ஒரு ப்ராங்க் என்று போட்டிருந்ததாம் ‘

வெயிட் ரஸ் ‘ வாட் வுட் யூ லைக் ஸர் என்று கேட்டாளாம் ‘

அவள் சட்டை ரொம்ப பழையதாக இருந்ததாம்

ஐயோ பாவம் மாமா நாம எதாவது வாங்கித் தரலாமா ‘

கேளு கதையை; குட்டிப்பையன் தன் சட்டைப்பையிலிருந்த காசுகளை என்ணிப்பார்த்தானாம்

ஒன்றரை ப்ராங்க் இருந்ததாம் உடனே ஒரு ப்ராங்க் சாதாரண காண்டியை ஆர்டர் செய்து வெயிரஸ் கொண்டு வந்தவுடன் அதை சாப்பிட்டுவிட்டு அரை ப்ராங்கை டிப்ஸாக வைத்துவிட்டு எழுந்தானாம்,.. ‘

‘குட் பாய், குட் பாய் ‘ என்று கத்தியபடி படுக்கையிலிருந்து உற்சாகத்துடன் குதித்தெழுந்து கைகளைத் தட்டியது குழந்தை.

‘படு, படு கதை முடிஞ்சுபோச்சு ‘

‘மாமா, மாமா, ப்ளீஸ், ப்ளீஸ் கதை சொல்லுங்கோ சமத்தா தூங்கறேன், ‘ மீண்டும் படுத்துக்கொண்டது.

சரி என்று வெற்றிப்புன்னகையுடன், ‘ ஒரு ஊரில் ஒரு வியாபாரி செறுப்பு விக்க ஒரு தீவுக்கு போனாராம் என்று ஆரம்பிக்க குழந்தை ‘ இது வேண்டாம் இன்னிக்கு ரெயின்போ ஐஸ்கிரீம் கதைதான் திருப்பித் திருப்பி வேணும் குழந்தை கட்டளையிட்டது.

பாலாவும் சரியென்று மீண்டும் அதை ஆரம்பித்தார். முடிந்தவுடன் மீண்டும் அதையே சொல்லு என்று ஆணையிட்டது. சரியென்றார்; தொடர்ந்தார். இப்படியே போய்க்கொண்டிருந்தது.

நீருவுடன் அவள் அறையில் பேசியவாறே படுத்துத் தூங்கிவிட்ட ரேவதிக்கு சிறிது நேரம் கழித்து தூக்கம் கலைந்தது. மணி பதினொன்றுதான். ஏஸி குளிர்ச்சியில் தொண்டை வரள தண்ணீர் குடிக்க சமையலறைக்கு வந்த போது மாஸ்டர் பெட் ரூமில் ஏதோ சத்தம் கேட்கவும், கதவைத் திறந்து எட்டிப் பார்த்தாள்.

குழந்தை ஸ்வர்ணபூரணி இரவு விளக்கு வெளிச்சத்தில் படுக்கையில் உட்கார்ந்துகொண்டு மாமாவின் செல்போனை ஹலோ கிட்டி பொம்மைகள் முதலியவற்றை தலையணை மீது வைத்து ஏதோ பேசிக்கொண்டு தானாகவே விளையாடிக்கொண்டிருந்தாள்.

பாலகுருநாதன் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தார்.

madhunaga@yahoo.com.sg

Series Navigation

மாதங்கி

மாதங்கி

விழிப்பு

This entry is part [part not set] of 50 in the series 20040715_Issue

வை கலைச்செல்வி


உயரப்பறக்க ஆசை
ஊர்க்குருவி அல்லநான் !

உறுதியான சிறகிருந்தும்
உதிரத்தில் திறனிருந்தும்

உண்மையில் பருந்தென்று
உணராமற் போனதனால்

எடுத்துரைக்க எனக்கென்று
எவருமில்லாக் காரணத்தால்

என்பிறப்பின் உண்மைகூட
எட்டாதவொரு ரகசியமே !

எந்தத்தேவன் உரைப்பாரோ ?
எப்போதுஅவர் வருவாரோ !

விண்ணில் சூரியன்
உடைந் திருந்தால்
விழியின் தவறென்று
ஒதுக்கி விடலாம்

என்னை நானே
உணரா திருந்தால் ?
உலகம் என்னைத்
தவிர்த்து விடலாம்

விழிப்பு எனக்கு
தொடுவானமோ
தொடும்தூரமோ
தெரியாது நிச்சயமாய்

ஆனாலும்கூட

உயரப்பறக்க ஆசை
ஊர்க்குருவி அல்லநான் !

**** வை கலைச்செல்வி சிங்கப்பூர் ****

Series Navigation

வை கலைச்செல்வி

வை கலைச்செல்வி

விழிப்பு

This entry is part [part not set] of 41 in the series 20040708_Issue

சந்திரவதனா


இரவு ஒருமணிக்குப் பின் வீட்டுக்குள் நுழைந்த சங்கரைப் பார்த்து ‘நீங்கள் செய்யிறது உங்களுக்கே நல்லா இருக்கோ.. ? ‘ இந்து குமுறினாள்.

‘இதுதான் இதுக்குத்தான். எனக்கு வீட்டுக்கு வரவே பிடிக்கிறேல்லை. பெண்டாட்டி எண்டால் வீட்டுக்கு வாற கணவனை அன்பா சிரிச்ச முகத்தோடை வரவேற் கோணும். ‘ சினந்தான் சங்கர்.

அவன் ஸ்ரெபியுடன் சுற்றி விட்டுத்தான் இவ்வளவு தாமதமாக வருகிறான் என்பது அவளுக்கு நன்கு தெரிந்ததால் ‘அந்தஆட்டக்காரியோடைதானே இவ்வளவு நேரமும் சுத்திப் போட்டு வாறிங்கள். எனக்குத்தெரியும். ‘ என்றாள் எரிச்சலும் கோபமுமாக.

‘சும்மா காகம் கத்திற போலை எப்பவும் கத்திக் கொண்டிராதை. குடும்பம் எண்டால் இப்பிடிக் கனக்க இருக்கும். பொம்பியைள்தான் இதையெல்லாம் அனுசரிச்சுப்போகோணும். ஏன் உனக்கு கொம்மா இதொண்டும் சொல்லித் தரேல்லையே ? என்ன வளர்ப்பு வளர்த்திருக்கிறாவோ ? ஒரு நல்ல பழக்கங்கள் கூடப் பழக்காமல்….! உன்னைப் போய் கலியாணம் கட்டினனே..! ‘ சங்கர் வழக்கம் போலவே வக்கிரத்தனமாகக் கதைத்தான்.

இந்துவால் அவனது அலட்சியம கலந்த வக்கிரப் பேச்சை அணுவளவேனும் ரசிக்க முடியவில்லை. செய்வதையும் செய்து விட்டு அதற்கு வேறு நியாயம் தேடும் அவனது நியாயமற்ற பேச்சு அவளை கோபத்தில் கொதிக்க வைத்தது.

ஏற்கனவே மனதை வதைத்துக் கொண்டிருந்த வேதனைக்கும் ஏமாற்றத்துக்கும் கோபம் தூபம் போட ‘நானும் இப்பிடி வேறொருத்தனோடை சுத்திப் போட்டு வந்தால் நீங்கள் பொறுத்துக் கொள்ளுவிங்களோ ? அல்லது உங்களாலை சகிக்கத்தான் முடியுமோ ? ‘ சீற்றத்துடன் கேட்டாள்.

சங்கருக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்து விட்டது. ‘என்னடி கதைக்கிறாய் ? ஆம்பிளையள் எண்டால் அப்பிடி இப்பிடித்தான் இருப்பினம். அது சகயம். அதுக்காண்டி பொம்பிளையளும் அப்பிடிச் செய்யிறதோ ? ‘ கத்தினான்.

‘ஏன் செய்யக் கூடாது. ‘ கோபம் அழுகையாக வெடிக்க கேவலுடன் வார்த்தைகளை வீசினாள் இந்து.

‘பெண் எண்டால் தாய். தாய் தெய்வத்துக்குச் சமமானவள். அந்த தெய்வத்துக்குச் சமமான தாய் பிள்ளையளைப் பெத்து பாலூட்டி, சீராட்டி வளர்த்து ஆளாக்க வேண்டியவள். அவள் அப்பிடிச் செய்யக் கூடாது. ‘ கோபம் கொப்பளிக்க சங்கர் இன்னும் சத்தமாகக் கத்தினான்.

இந்துவும் விடவில்லை. ‘பெண்ணெண்டால் தெய்வம் என்பது உங்களுக்குத் தெரியுது. நீங்கள் செய்யிறது ஒரு செய்யத் தகாத வேலை என்பதும் உங்களுக்குத் தெரியுது. இருந்தும் அப்பிடியொரு வேலையைச் செய்து பெண்ணென்ற தெய்வத்துக்கு துரோகம் செய்யி….! ‘ இந்து சொல்ல வந்ததைச் சொல்லி முடிக்கவில்லை.

அதற்கிடையில் இடைமறித்த சங்கர் ‘இப்ப கதையை நிப்பாட்டு. விட்டால் கதைச்சுக் கொண்டே போவாய். புருசன் வந்திருக்கிறன். சாப்பிட்டியோ குடிச்சியோ எண்டு கூடக் கேட்காமல் …., உன்னை இங்கை கூப்பிட்டன் பார். அது என்ரை பிழை. ஊரிலையெண்டால் இப்பிடிக் கதைப்பியே ?. வாய் வெத்திலை போட்டிருக்கும்;….! நீ திரும்பி ஊருக்கே போயிடு. ‘ என்றான். அவன் வார்த்தைகளில் நையாண்டியும் அதிகாரமும் தொக்கி நின்றன.

இந்து கொதித்துப் போனாள். ‘இப்பிடியே போனால் நான் தற்கொலை செய்து செத்துப் போடுவன். அதுக்குப் பிறகுதான் உங்களுக்கு என்ரை அருமை தெரியும். ‘ என்றாள்.

இப்போது சங்கர் பெரிய நையாண்டிச் சிரிப்பொன்றைச் சிரித்தான். இந்துவுக்கு அவனைப் பார்க்கவே அருவருப்பாக இருந்தது. சிரித்தது போதாதென்று ‘நீ எங்கை சாகப்போறாய் ? நீ செத்தாயெண்டால் அதையிட்டுச் சந்தோசப் படப் போற முதலாள் நானாத்தான் இருக்கும். ‘ என்றான்.

இந்துவை அவன் வார்த்தைகள் தீயாகச் சுட்டன. சங்கர் தொடர்ந்து ‘போன முறையும் இப்பிடித்தான் சாகப் போறன் எண்டு சொல்லி மருந்துகுடிச்சியே! அப்ப நான் உன்னைத் தூக்கிக் கொண்டு ஓடிப் போய் கொஸ்பிட்டல்லை போட்டனே! அதுதான் நான் செய்த பெரிய தப்பு. ‘ என்றான்.

மகன் கோகுலை கிண்டர் கார்டனில் விட்டுவிட்டு பகுதி நேர வேலைக்குப் போய்க் கொண்டிருந்த இந்துவின் மனதில் நேற்று சங்கருடன் நடந்த சண்டையும் சங்கரின் கர்ணகடுரமான ஈவிரக்கமற்ற வார்த்தைகளுமே சுழன்று கொண்டிருந்தன. கோபத்தில் உடம்பு கொதிப்பது போல் இருந்தது.

போனவருடம் இப்படித்தான். சண்டையில் வாக்குவாதம் உச்சக் கட்டத்துக்கு வர இந்து தற்கொலை செய்யப் போவதாகச் சொன்னாள். உடனே சங்கர் ‘நல்லாச் செய். அப்பாடா ஒரு சனியன் துலைஞ்சுது எண்டு நான் நிம்மதியா இருப்பன். ‘ என்றான்.

கோபம் தலைக்கேற இந்து ஓடிப்போய் மலசலகூடம் கழுவும் மருந்தை எடுத்துக் குடித்து விட்டாள். மருந்து உள்ளே போகும் போதுதான் தான் செய்தது எத்தகையதொரு மடைத்தனமான வேலை என்பதை உணர்ந்தாள். உணர்ந்து என்ன பயன் ? உடலுக்குள் தீப்பற்றி எரிவது போன்ற வேதனையில் துடித்து விழுந்தாள்;.

சங்கர் இதைச் சற்றும் எதிர் பார்க்கவில்லை. பயந்து போய் விட்டான். வேதனையில் புரளும் இந்துவைத் தூக்கிக் கொண்டு ஓடிப்போய் காரில் ஏற்றினான். இந்து அப்படியே மயங்கி விட்டாள்.

அவள் மீண்டும் கண் விழித்த போது மருத்துவமனையில் கட்டிலில் படுத்திருந்தாள். உடம்பெல்லாம் புண்ணாய் வலித்தது. எழும்ப முயற்சித்தாள். அவளால் அசையக் கூட முடியவில்லை. நடந்த விடயங்களை மெல்ல அசை போட்டுப் பார்த்தாள். மனசை சோகம் நிறைக்கக் கண்கள் கலங்கின. அழக் கூட அவளால் முடியவில்லை. அசதியில் மீண்டும் தூங்கி விட்டாள்.

மீண்டும் அவள் கண் விழித்த போது சங்கர் கோகுலுடன் வநதிருந்தான். கோகுல் சோகமாய் இருந்தான். இந்துவின் கைகளைப் பிடித்த படி அழுதான். ‘எப்ப அம்மா வீட்டை வருவீங்கள் ? ‘ என்று ஏக்கத்துடன் கேட்டான். இந்துவால் பதில் எதுவும் சொல்ல முடியவில்லை. நா உலர்ந்திருந்தது. அவனை அணைத்;துக் கொள்;ள எண்ணி கைகளை நீட்ட எத்தனித்தாள். அவளால் கைகளை அசைக்கவே முடியவில்லை. சங்கரைப் பார்த்தாள். கொஞ்சம் கலைந்து போய் இருந்தான்.

‘தவறுதலா மருந்தைக் குடிச்சிட்டன் எண்டுதான் டொக்டரிட்டைச் சொல்லு. பிறகு ஏதாவது ஏடாகூடாமாச் சொல்லி என்னை மாட்டிப்போடாதை. ‘ என்றான்.

இந்து அவனுடன் எதுவுமே பேசவில்லை. அவளுக்கு கோகுலைப் பார்க்க மிகவும் பாவமாக இருந்தது.

சங்கர் போன பின் நேர்சைக் கேட்டு வேறொரு நகரில் இருக்கும் அண்ணன் மாதவனுடன் ரெலிபோனில் தொடர்பு கொண்டு நடந்தவைகளைச் சொன்னாள். அவன் அடுத்த சில மணிகளிலேயே பதறியடித்துக்கொண்டு ஓடி வந்தான். ‘நான் சங்கரை என்னென்று கேட்கிறன். நீ கவலைப் படாதை. ‘ என்றான். பக்கத்தில் இருந்து ஆறுதலாகக் கதைத்தான். ஆனால் கடைசியில் போகும் போது ‘இந்து இனி இப்பிடியான வேலையளைச் செய்து போடாதை, என்னெண்டாலும் பொம்பிளையள்தான் அனுசரிச்சுப் போகோணும் ‘ என்று சொல்லி விட்டுப் போனான்.

பின்னர் இந்து நோர்வேயில் இருக்கும் அண்ணனுடன் தொடர்பு கொண்ட போது அவனும் மாதவனைப் போலவே பதறினான். சங்கர் மேல் கோபம் கொண்டு திட்டினான். ஆனால் கடைசியில் ‘இந்து! ஆம்பிளையளெண்டால் அப்பிடி இப்பிடித்தான் இருப்பினம். பொம்பிளையள்தான் கெட்டித்தனமா அதுகளை உணர்ந்து நடக்கோணும.;….! உனக்கு கெட்டித்தனம் போதாது ‘ என்று சலித்தான். ரேலிபோனை வைக்கும் போது ‘இந்து இனி இப்பிடி புத்தி கெட்ட முடிவுகளை மட்டும் எடுத்துப் போடாதை. சங்கரைத் திருத்தப்பார். ‘ என்றான்.

இந்துவுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. ‘எல்லாரும் என்னிலைதானே பழியைப் போடினம். சங்கரின்ரை தவறு ஒருத்தருக்கும் தவறாத் தெரியேல்லையே! சங்கராவது என்ரை நடவடிக்கையாலை திருந்தினானோ எண்டு பார்த்தால் அவன் கூடத் திருந்தினதாத் தெரியேல்லையை ‘ மனசுக்குள் பெரிதும் குழம்பினாள்.

சங்கர் இந்துவைப் பார்க்க இடைக்கிடை மருத்துவமனைக்கு வந்து போனான். மாதவன் வந்து இந்துவைப் பார்த்துப் போன மறுநாளே கோகுலை மாதவன் வீட்டில் கொண்டு போய் விட்டு விட்டான். பொறுப்பான அப்பாவாக வீட்டில் நின்று கோகுலைப்பார்க்கவில்லை. எல்லாவற்றையும் மருத்துவமனையின் தனிமையில் இருந்து யோசித்துப் பார்த்த இந்துவுக்கு கோகுலை நினைக்க நினைக்க அழுகையாக வந்தது. சங்கருக்காக கோகுலைத் தண்டிச்சுப் போட்டனோ என்ற நினைவு அவளைப் பாடாய்ப் படுத்தியது.

இப்படியே சிலவாரங்கள் ஒடி இந்துவும் ஒரளவு குணமாகினாள். ‘மிஸிஸ் சங்கர்..! உங்கடை குடல் மிகவும் பலவீனமாப் போயிட்டுது. இந்த முறை ஏதோ அதிர்ஸ்ட வசமாத் தப்பீட்டிங்கள். இன்னொருக்கால் இப்பிடி நீங்கள் மருந்தைக் குடிச்சால் எங்களாலை உங்களைக் காப்பாற்றேலாமல் போயிடும். இது உங்கடை உடம்பு நீங்கள்தான் உங்கடை உடம்பிலை கவனமாயிருக்கோணும்….! ‘ என்ற அன்பான கண்டிப்பான பல நிபந்தனைகளோடு டொக்டர் அவளை வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.

வீட்டுக்கு வந்த பின் சங்கரிடம் தென்பட்ட சில மாற்றங்களை வைத்து சங்கர் திருந்தி விட்டான் எனறே நினைத்தாள். அவளின் அந்த நம்பிக்கையெல்லாம் சில நாட்களுக்குத்தான். நாட்கள் போகப் போக அவன் திருந்தவில்லை என்பதை நன்கு உணர்ந்து கொண்டாள். தாங்க முடியாமல் அடிக்கடி குமுறினாள். அந்தக் குமுறலின் பிரதி பலிப்புத்தான் நேற்றைய காரசாரமான சண்டையின் காரணமானது.

மீண்டும் தனக்கும் சங்கருக்கும் இடையில் மனதளவில் இவ்வளவு தூரம் விரிசல் ஏற்பட்டு விட்டதில் அவளுக்குச் சரியான கவலையாக இருந்தது. நேற்று அவன் சொன்ன வார்த்தைகள் ‘நீ செத்தால் அதையிட்டுச் சந்தோசப் படப்போற முதல் ஆள் நானாத்தான் இருக்கும் ‘ அவளுக்குள் திரும்பத் திரும்ப அந்த வார்த்தைகள் ஒலித்துக் கொண்டே இருந்தன.

இந்தச் சண்டை நடந்த போது கோகுல் நித்திரை என்றுதான் இந்து நினைத்துக் கொண்டிருந்தாள். ஆனால் சண்டை முடிந்து சங்கர் போய்ப் படுத்த பின் அவள் வெகுநேரமாக அந்தக் கதிரையிலேயே இருந்து அழுது கொண்டிருந்தாள். அப்போது கோகுல் வந்து ‘அம்மா அழாதைங்கோ வந்து படுங்கோ ‘ என்றான். அவன் கண்கள் நீண்ட நேரம் அழுததற்குச் சான்றாக வீங்கிச் சிவந்திருந்தன.

அதை நினைக்க நினைக்க இந்துவுக்கு ஒரே கவலையாக இருந்துது. ‘கோகுல் மீது பச்சாத்தாபம் ஏற்பட்டது. ஏன்தான் அவனுக்கு இந்தத் தண்டனையோ ? என்ன பாவம் செய்து எனக்குப் பிள்ளையாப் பிறந்தானோ ? எப்ப பார்த்தாலும் சண்டை போட்டுக் கொண்டிருக்கிற அழுமுஞ்சி அம்மா, யாரோ ஒருத்தியோடு நாளெல்லாம் ஊர் சுற்றி விட்டு நேரங் கழித்தே வீட்டுக்கு வரும் அப்பா. இவைகளையெல்லாம் பார்த்துப் பார்த்து அந்தப் பிஞ்சு மனசிலை என்னென்ன காயங்கள் ஏற்பட்டிருக்குமோ….! ‘ என்ற நினைவுகளெல்லாம் வந்து அவளைக் குழப்பின.

‘இவ்வளவு நாளும் நான் இதைப்பற்றிச் சொட்டுக் கூடச் சிந்திக்காமல் இருந்திட்டனே! ‘ என்று வெட்கப் பட்டாள். கலங்கினாள். கோகுலுக்காக மனங் கசிந்தாள். ‘சங்கர்தான் இப்பிடி விட்டேற்றியாக பொறுப்பற்றவனாக கோகுலின் பிஞ்சு மனசு பற்றி கிஞ்சித்தேனும் சிந்தித்துப் பாராது தன் பாட்டில் திரிகிறான் என்றால் எனக்கு மட்டும் அறிவு எங்கை போயிட்டுது ? ‘ என்று தன்னையே தான் கேட்டு மனசுக்குள் நொந்து கொண்டாள். தனது இந்தச் செய்கையால் கோகுலின்வாழ்க்கை நரகமாகிக் கொண்டிருப்பதைப் புரிந்து கொண்டாள்.

அவளுக்குத் தன் மீதே கோபம் கோபமாக வந்தது. ‘எனக்கென்ன அறிவில்லையோ ? அல்லது அழகில்லையோ ? அல்லது கெட்டித்தனம்தான் இல்லையோ ? சங்கர் ஏன் என்னை விட்டிட்டு இன்னொரு பெண்ணோடை சுத்தோணும். இப்பிடிப் பட்ட ஒரு சுயநல விரும்பிக்காக ஏன் நான் என்ரை வாழ்க்;கையையும் கோகுலின்ரை வாழ்கையையும் வீணாக்கிக் கொண்டிருக்கோணும். ‘ என்று தனக்குள்ளே பொருமினாள். வாய் விட்டுச் சத்தமாக அழவேண்டும் போல சோகம் அவளைப் பிசைந்தெடுத்தது.

இந்த உலகத்து ஜீவராசிகள் அத்தனையுமே சந்தோசமாக இருப்பது போலவும் தான் மட்டும் தனிக்காடொன்றில் விடப்பட்டு தண்டிக்கப் படுவது போலவும் உணர்ந்தாள். ஓடிப் போய் அம்மாவின் மடியில் அப்படியே முகத்தைப் புதைத்து வைத்து அழவேண்டும் போல அவளுக்கு இருந்தது.

இந்து தாயகத்தில் அம்மா அப்பாவின் அன்பிலும் நல்ல வழி நடத்தலிலும் மிகவும் ஒழுக்கமாகவும் வசதியாகவும் வாழ்ந்தவள். ஏழு வருடங்களுக்கு முன் அண்ணன்மார் பேசிய கல்யாணத்தில் சங்கர் குடி இல்லை சிகரெட் இல்லை, அருமையானவன் என வர்ணிக்கப்பட்டு எலலாப் பெண்களையும் போல மணாளனின் நிய முகமும் சுய குணமும் தெரியாமலே ஏதோ ஒரு குருட்டு நம்பிக்கையில் வாழ்க்கையின் இனிமைகளைப் பற்றிய கனவுகளை மட்டுமே சுமந்து கொண்டு யேர்மனிக்கு வந்து சேர்ந்தவள்.

சங்கருடனான அவளது ஆரம்ப நாட்கள், வாரங்கள், மாதங்களாய் இனிப்பாகத்தான் இருந்தன. எப்போது மாறியது என்றே தெரியவில்லை. எல்லாமே மாறிப்போய் விட்டன.

அவளுக்கு சங்கரை விட்டுவிட்டு யார் கண்ணிலும் படாது எங்கேயாவது ஓடி விடவேண்டும் போலிருந்தது. எங்கே… ? அதுதான் தெரியவில்லை. என்ன வந்தாலும் போகும் போது கோகுலை தன்னோடு கூட்டிக் கொண்டு போய் விட வேண்டுமென்று நினைத்துக் கொண்டாள்

ஆனால் போய் என்ன செய்வது ? எப்பிடி வாழ்வைத் தொடருவது ? என்ற கேள்விகள் அவளைக் குடைந்து கொண்டே இருந்தன. இங்கு யேர்மனியில் இப்படியான நிலையில் சமூகநல உதவிகள் கிடைக்கும்தான். அத்தோடு சங்கரும் கோகுலின் செலவுக்குப் குறிப்பிட்ட அளவு பணம் கொடுக்க வேண்டும் என சட்டப் படி தீர்மானிக்கப் படும். ஆனால் அவளுக்கோ இதற்கு மனம் ஒப்பவில்லை. சங்கரை விட்டுப் போக நினைத்த பின் அவனின் பணத்தை எடுக்க விருப்பம் வரவில்லை. ‘யாரிடமும தங்கி நான் வாழக்கூடாது ‘ என்று எண்ணிக் கொண்டாள். முக்கியமாகச் சங்கரைச் சாரக் கூடாதென மனதுக்குள் உறுதி எடுத்துக் கொண்டாள்.

அன்று வேலையிடத்தில் வேலைகளின் மத்தியிலும், வேலை முடிந்து வீடு திரும்புகையிலும், கோகுலைக் கிண்டர் கார்டனால் கூட்டிக் கொண்டு வரும் போதும் இது பற்றி நிறையவே சிந்தித்தாள். இறுதியில் தீர்க்கமானதொரு முடிவுக்கு வந்தாள்.

‘நான் நல்ல வேலையொண்டு எடுக்கோணும். அதுக்கு ஏதாவதொரு தொழில் சம்பந்தமாப் படிக்கோணும்;. எல்லாத்துக்கும் முதல்லை நான் டொச்சைப் (யேர்மன் மொழியைப்) படிக்கோணும். ‘நினைவுப் படிகளை அடுக்கத் தொடங்கினாள். தான் எடுத்துக் கொண்ட முடிவைச் செயற்படுத்தி வெற்றிச் சிகரத்தைத் தொட்டுக் கொள்ள.

தற்போது அவளுக்குத் தெரிகின்ற யேர்மன் மொழி ஒரு தொழிற்கல்வி கற்பதற்குப் போதுமானதா ? என்பது அவளுக்கே தெரியவில்லை. அன்றே அவள் இது சம்பந்தமான அலுவலகங்களுடன் தொடர்பு கொண்டு தனக்குத் தெரிந்த டொச்சில(யேர்மன் மொழி) ஆலோசனைகள் கேட்டாள். அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அடுத்த நாளே வேலைக்கு விடுப்பு எடுத்து விட்டுப் போய் அவர்களை நேரடியாகச் சந்தித்தாள்.

இந்து யேர்மனிக்கு வந்து ஏழு வருடங்கள் ஆகிவிட்டதால் யேர்மனியச் சட்டப்படி அவள் டொச்(யேர்மன் மொழி) படிப்பதற்கு அவர்களால் எந்த விதமான பண உதவியும் செய்ய முடியவில்லை. ஆனால் அவளுக்கு எந்த ஒரு நிலையான தொழிலும் இல்லாததால் அதுவும் அவள் அகதி அந்தஸ்து பெற்ற நிலையில் இருப்பதால் யேர்மனியச் சட்டப்படி அவள் தொழிற்கல்வி கற்பதற்கான செலவை மட்டும் ஏற்றுக் கொள்ள முன் வந்தார்கள். அவளுக்கு ஓரளவு டொச் தெரிந்ததால் இன்னும் நான்கு மாதங்களில் தொடங்க இருக்கும் கொம்பியூட்டர் கோர்ஸ் இல் அவள் இணைந்து கொள்வதற்கான வாய்ப்பு இருப்பதையும் சுட்டிக் காட்டினார்கள்.

இருள் நிறைந்த தன் வாழ்விலும் ஒளி வீச வாய்ப்புண்டு என்பதைக் கண்டு இந்து உற்சாகமானாள். கலக்கமான முகத்துடன் அவள் உள் நுழைந்த நேரத்திலிருந்து அவளையே கவனித்துக் கொண்டு அங்கு கடமையிலிருந்த இன்னொரு பெண் இவள் ஏதோ பிரச்சனையில் இருக்கிறாள் என்பதை நன்கு உணர்ந்து கொண்டவளாய், இவள் நன்றி சொல்லிக் கொண்டு அவர்களிடம் இருந்து

விடை பெறும் போது ‘மிஸிஸ் இந்து உங்களுக்கு விருப்பமெண்டால் இந்த நாலு மாசமும் நீங்கள் உங்கடை செலவிலை ஒரு டொச் கோர்ஸ் செய்து உங்கடை டொச் அறிவைக் கூட்டிக் கொள்ளுங்கோ. ‘ என்று ஆலோசனை கூறினாள்.

‘தனக்கு ஆலோசனை கூறவும், தனக்கு உதவி செய்யவும், தன்னுடன் இன் முகத்துடன் பேசிக் கொள்ளவும் கூட இந்த அந்நிய தேசத்தில் மனிதர்கள் இருக்கிறார்கள். ‘ என்ற நியத்தை நினைத்து இந்து நியமாகவே மகிழ்ந்தாள்.

நேரங்களையோ காலங்களையோ வீணடிக்காமல் உடனடியாகவே தனது பகுதி நேர வேலைக்; காசில் டொச் படிப்பதற்கான ஆயத்தங்களைச் செய்தாள்.

இம்முறை அவள் முடிவு அவளுடையதாகவே இருந்தது. கணவன் என்ற பெயரில் அவளைக் கலங்க வைக்கும் சங்கரிடமோ, பெண் என்றால் வாய் மூடி மெளனியாக வாழ வேண்டுமென்று நினைக்கும், இன்னும் பழமையிலேயே ஊறிப் போயிருக்கும் அண்ணன்மாரிடமோ அவள் எந்த ஆலோசனையும் கேட்கவில்லை. அவர்கள் ஏதாவது சொல்வார்களே என்று பயப்படவும் இல்லை. ‘இது என் வாழ்வு. என் மகன் கோகுலின் வாழ்வு. நாமிருவரும் வாழாது ஊருக்குப் பயந்து நரகத்துழல்வது வீண். ‘ தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள்.

சங்கர் இம்முயற்சிக்குத் தடைக்கல்லாக இருந்தால் அடுத்த கணமே அவனை விட்டுப் பிரிந்து போகவும் தன்னைத் தயார் படுத்திக் கொண்டாள்.

அன்று படுக்கைக்குப் போகும் போது இந்துவின் மனசு மிகவும் லேசாக இருந்தது. அன்றும் வழமை போல நேரங்கழித்தே இந்துவுடன் சண்டை போடத்தயாராக வீட்டுக்குள் நுழைந்த சங்கர் ‘இப்போதாவது விழித்துக் கொண்டேனே! ‘ என்ற புத்துணர்வு தந்த திருப்தியிலும் எதிர் காலத்தைப் பற்றிய நம்பிக்கை தந்த பலத்திலும் நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருந்த இந்துவைப் பார்த்து ஒன்றுமே புரியாமல் விழித்தான்.

-முற்றும்-

சந்திரவதனா

யேர்மனி

1997

Series Navigation

சந்திரவதனா

சந்திரவதனா