நீலக்கடல் -(தொடர்)- அத்தியாயம் -55

This entry is part [part not set] of 47 in the series 20050120_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


மரணமிலாப் பெருவாழ்வில்

வாழ்ந்திடலாம் கண்டார்

புனைந்துரையேன் பொய் புகலேன்

சத்தியம் சொல்கின்றேன்

பொற்சபையில் சிற்சபையில்

புகுந்தருணம் இதுவே

-இராமலிங்க அடிகளார்

—-

நண்பனே! மனித உடம்பு மாயையினின்று தோன்றியது. உடல் காரணமாகவே ஆசையும், வெறுப்பும், இன்பதுன்பங்களும் உண்டாகின்றன. கன்மம், ஆணவம் இரண்டும் ஆன்மாவான எனக்கு மாயையாகின்றன. ஆதலால் மாயையும் பாசமாகும். மாயை உயிரின் அனுபவத்திற்காக பல கருவிகளையும், பொருள்களையும் அமைத்துத் தருகிறது. தனு, கரண, புவன போகங்கள் அனைத்தும் மாயையே. ஆனால் மாயை ஒரு ஜடம். இதனை மேய்ப்பதும், காப்பதும் நாடோடியான உன்னால் தனித்து இயலாது. உன்னால் ஆகக்கூடியது ஒன்றுண்டு. மாயையில் சுத்தம் எது அசுத்தமெது என்பதை இனம் காணுவது. தெளிவான பாதையும், அறிவுடன் பக்தியும் இல்லாதவரை எனக்கு விடுதலை இல்லை, உனக்கு இருந்தாலுங்கூட…

….

இருபதாம் நூற்றாண்டு….

வைத்தீஸ்வரன்கோவிலுக்குச் சென்று வந்ததற்குப் பிறகு இரண்டு மாதங்கள் கழிந்திருந்தன. இந்த இரண்டுமாத இடைவெளியில் பெர்னார் ஃபோந்த்தென் நண்பன் வேலுவுக்கு வேம்புலி நாயக்கர் மருமகளின் இரண்டாவது புருஷன் என்கிற புதிய உத்தியோகம் கிடைத்திருந்தது. இப்புதிய உத்தியோகத்தின்படி, சில செளகரியங்களும் அசெளகரியங்களும் வேலுவுக்கு வாய்த்திருந்தன. செளகரியப்பட்டியலில் பிரெஞ்சு குடியுரிமை, புதுச்சேரி அரசின் பொதுப்பணிதுறையில் முக்கிய ஒப்பந்ததாரர் என்கிற அந்தஸ்து. சங்கரதாஸ் வீதியிலிருக்கும் வேம்புலி நாயக்கர் பூர்வீக வீடு, வெங்கட்ட நகரில் இரண்டு கிரவுண்டில் கட்டப்பட்ட ஒரு வில்லா, உழவர்கரையில் பம்பு செட்டுடன் கூடிய ஒன்றரை ஏக்கர் நஞ்சை… இத்யாதிகளை பராமரித்துக்கொண்டு, அவ்வப்போது வேம்புலி நாயக்கர் மருமகளையும் அவளது சிறப்பு ஆணைபேரிலே மராமத்து செய்யவேண்டியிருக்கிறது. இது தவிர, மாலையில் ஒதியஞ்சாலை கிரவுண்டில் உள்ள கிளப்புக்குச் சென்று சோம்பேறி சொல்தாக்களுடன் பெந்தான்க் என்கிற இரும்பு குண்டு ஆட்டம், எட்டு மணிவரை விஸ்கி, வாரத்தில் ஏழுநாட்களும், மீன், கோழி, ஆடு என்று சாப்பிடுகின்ற செளகரியங்களும் உண்டு. அசெளகரியமென்று சொன்னால், முன்னைப்போல அவனது பொதுவுடமைத் தத்துவத்திற்காக வாதிட முடிவதில்லை என்பதைச் சொல்லவேண்டும். ஆனால் அதுகூட இப்போதெல்லாம் செளகரியப் பட்டியலில் சேர்ந்துவிட்டதென்று அவனது மனச்சாட்சி சொல்கின்றது.

காலை எட்டுமணி. வேலுவும் அவனது புதுமனைவியும் பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகளை ஆட்டோவில் ஏற்றி வழி அனுப்பிகொண்டிருக்கிறார்கள். இன்னும் சிறிது நேரத்தில் ‘புல்லட்டை ‘ எடுத்துக்கொண்டு, வில்லியனூர்வரை போய் வரவேண்டும். அங்கே இருபதுலட்ச ரூபாய் ஒப்பந்தத்தில் கட்டிவருகின்ற மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி ஒன்றினைப் பார்த்து வரவேண்டும். பதினோரு மணிக்கு அண்ணா நகரில் இரண்டு சொல்தாக்களின் வீடுகள் கட்டப்படுகின்ற சைட்டைப் பார்த்து வரணுமென்று காலை அலுவல்களை நினைத்த வண்ணம் திரும்பியவன் எதிரே, பெர்னார் ஃபோந்த்தெனின் அம்பாசடர் கார் வந்து நின்றது.

‘ஏங்க உங்க வெள்ைளைக்காரக் கொப்பன் (நண்பன்) காலங்காத்தால வந்திருக்கான். இனி இன்றைக்கு உருப்படியா எதையும் செய்யப்போறதில்லை ‘, என்ற வேம்புலி நாயக்கர் மருமகளைப் பார்வையால் அடக்கிவிட்டு, நண்பனைத் தேடிக் காரருகே சென்றான்.

‘என்ன பெர்னார் ? எப்படி இருக்கிற ? எங்க திடார்னு இந்தப்பக்கம் வந்திருக்கிற. ‘

‘தோழரைப் பாக்கிறது சுலபத்திலே இல்லையே. காஞ்சிபுரம் வரைக்கும் போறேன். அதற்கு முன்னே உன்னை அவசியம் பார்க்க வேண்டியிருந்தது. ‘

‘நானுந்தான் இரண்டு மூன்று நாட்களாக உன்னைப் பார்க்கவேண்டுமென்று நினைத்திருந்தேன். அது சரி நீ தேடிவந்ததற்குக் காரணம் இருக்கணுமே. ‘

‘நிறைய இருக்குது. எனக்கு காலையிலே ஒரு மணிநேரம் ஒதுக்க முடியுமா ? ‘

‘எத்தனை மணிக்கு ? ‘

‘முடிஞ்சா இப்பவே. ‘

‘எங்க காஞ்சிபுரத்திற்கா ? ‘

‘பயப்படாதே. இப்போதிருக்கிற சூழ்நிலையில, உன்னை முன்னை மாதிரி அழைச்சுப் போக முடியாது என்பதெல்லாம் எனக்குத் தெரியும். ‘

‘என்னைச் சரியா பத்துமணிக்கெல்லாம் விட்டுடணும். சைட்டைப் போயி பார்க்கவேண்டியிருக்கிறது. ‘

‘பயப்படாதே! காரில உட்காரு. ஒன்பது மணிக்கெல்லாம் விக்கினமில்லாம, வீட்டுல சேர்த்துடறேன். ‘

உத்தரவுக்காக, தன் புது மனைவியைத் தேடியபொழுது, அவள் ஏற்கனவே வீட்டிற்குள் நுழைந்து கதவை அடைத்திருந்தாள். எல்லாம் நல்லதற்கே என்று நினைத்தவன், நண்பனின் காரில் பின்புறம் அமர, கார் வல்லபாய் படேல் சாலையைப் பிடித்து, கடற்கரை திசைக்குப் பயணித்தது.

‘வேலு! மாறன் எழுதிய ஓலைகள் ஏதேனும் மறுபடி கிடைச்சுதா. வைத்தீஸ்வரன்கோவிலிலிருந்து நாம் திரும்பிய பிறகு சுத்தமா என்னை நீ மறந்துட்டியே.. ‘

‘பெர்னார், இன்னும் நீ அந்த பிரச்சினைகளிலிருந்து விடுபடல்லியா ? வைத்தீஸ்வரன்கோவில் குருக்கள் சொன்னது நாலில் இரண்டுகூட உனக்குச் சரிண்ணு தோணலியா ? அன்றைக்கு உன் பேச்சில் ஓரளவு திருப்தி தெரிஞ்சுதே. ‘

‘எனக்குத் தெரிய வேண்டியது பெர்னார் குளோதன் முடிவு சம்பந்தமான தகவல்கள். என் கனவுகளைப் பொறுத்தவரையில் சில முடிச்சுகள் நாடி சோதிடத்தால் அவிழ்க்கப்பட்டிருக்கிறது என்பதை நான் மறுக்கலை. ஆனால் பெர்னார் குளோதன் முடிவுதான் இன்னும் விடுபடாத புதிராக இருக்குது. நமக்குக் கிடைதுள்ள மாறன் ஓலைகளின் அடிப்படையில், 1744ம் ஆண்டு மேமாதம் இறுதிவரை காரைக்கால் கோட்டையில் பெர்னார் குளோதன் இருந்தார் என்பதை, நம்மால் உறுதியாகச் சொல்ல முடியும். அதற்குப் பிறகு என்ன நேர்ந்திருக்குமென்பதை ஆனந்தரங்கம் பிள்ளை நாட்குறிப்பைவைத்து ஓரளவு யூகிக்கிறேன். ஆனால் அந்த ஊகத்தை உறுதிப்படுத்த என்னிடம் போதிய ஆதாரங்கள் இல்லை. ‘

‘பெர்னார், உன் மனதில் உள்ள சந்தேகம் என்ன ? ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பில் 1744ம் ஆண்டு சூன் மாதம் 9ந்தேதி காரைக்கால் கோட்டையில் நடந்ததாகச் சொல்லப்படுகிற வெடிமருந்துக் கிடங்கு தீ விபத்தில் உன் எள்ளுப்பாட்டன் பெர்னார் குளோதன் இறந்திருக்கலாம் என்பதுதானே ? அந்தச் சந்தேகத்தினை உறுதிபடுத்திக்கொள்ளும்வகையில் ஆதாரம் இருக்கின்றது. ‘

‘எப்படி இவ்வளவு உறுதியாகச் சொல்ற. ‘

‘கடந்தவாரத்தில் புதுப்பாக்கத்திலிருந்து கிருஷ்ணபிள்ளை என்பவர் வந்திருந்தார். வந்தவர் சும்மா வரலை. மாறன் எழுதிய ஓலை நறுக்கு ஒன்றினையும் கொண்டுவந்திருந்தார் ‘

‘அடப்பாவி! முதலிலேயே சொல்லக்கூடாதா ? அதனைக் கையோடு கொண்டுவரச் சொல்லியிருப்பேனே. அந்த ஓலையில மாறன் என்ன சொல்றார். தீவிபத்துலதான் பெர்னார் குளோதன் இறந்திருக்கலாம் அவரும் நம்புகிறாரா ? ‘

‘ஒரு வகையில அப்படித்தான். இப்போ கிடைத்துள்ள ஓலை 1745ம் ஆண்டு சூன் மாதம் 9ந்தேதி எழுதப்பட்டிருக்கிறது. அதாவது தீவிபத்து நடந்து சரியாக ஒரு வருடம் கழித்து. அதிலே, ‘தீ விபத்துல, நண்பணை இழந்து இன்றைக்கு ஒருவருடம் முடியப்போகிறது ‘, என மாறன் நினைவு கூர்கிறார். மாறன் குறிப்பிடும் விபத்தினை ஆனந்தரங்கபிள்ளை நாட்குறிப்பில் வருகிற தீவிபத்தென்று கொள்ளலாம். ஆனால் இந்த ஓலையில், ரங்கப் பிள்ளை தன் நாட்குறிப்பில் எழுப்பாத சந்தேகத்தை, மாறன் எழுப்புகிறார். ‘

‘என்ன சந்தேகம் ? ‘

‘தீ விபத்தே ஒரு சதியாக இருக்கலாம் என்பது அவர் ஐயம். புதுச்சேரி மற்றும் பிரெஞ்சுத் தீவு குவர்னர்களிடம் நெருக்கமாகப் பழகியதால் பல உண்மைகள் பெர்னார் குளோதனுக்குத் தெரிஞ்சிருக்குது. புதுச்சேரிக்கும் பிரெஞ்சுத்தீவுக்குமாக நடந்த ஆட்கடத்தல் விவகாரம், கிழக்கிந்திய கும்பெனியின் முதலீட்டில், குவர்னர்கள் நடத்திய சொந்த வியாபாரம், கும்பெனிக்கு ஒரு கணக்கும், சொந்தமாக ஒரு கணக்கும் வைத்துக்கொண்டிருந்தது, என கவர்னர்களின் தில்லுமுல்லுகளை அவ்வப்போது பாரீஸில் இருந்த கும்பெனியின் தலைமைக்குக் குளோதன் தெரியப்படுத்தி வந்ததாக மாறன் நம்புகிறார். ஆக பெரிய இடத்து பொல்லாப்பு குளோதனுக்கு இருந்திருக்கிறது. தவிர விபத்து நடந்த அன்று மாறன், குளோதனின் எதிரியான பிரான்சுவா ரெமி காரைக்காலுக்குக் குதிரையில் சென்றதையும் கண்டிருக்கிறார். ‘

‘அடடே நான் எதிர்பார்த்ததைவிட சுவாரஸ்யமாயிருக்கே; எனக்கு அவசியம் அந்த ஓலை வேண்டுமே. வேறு ஏதேனும் தகவல்கள் இருக்கா ? ‘

‘இன்னொரு தகவல் இருக்குது. அது எந்த அளவிற்கு உனக்கு உதவும்னு தெரியலை. ‘

‘என்ன, தெளிவாச்சொல்லு ‘

‘அதாவது தன் சினேகிதனுடைய ஆத்ம சாந்திக்காக மணக்குள் விநாயகர் கோவிலுக்குச் சென்று பிரார்த்தனை செய்த மாறன் கூடவே தன்னுடைய மனைவியையும் குழந்தையையும் கோவிலுக்கு அழைத்துபோனதாக ஓலை நறுக்கில் சொல்றார். அவரது மனைவி வேறு யாருமல்ல, இதற்கு முன்னாலே, அவரது ஓலை நறுக்குகளில் பேசப்பட்ட வாணி என்பவளே. அதுபோகட்டும், இப்போ நீ காஞ்சிபுரம் போவதன் அவசியம் என்னன்னு நான் தெரிஞ்சுக்கலாமா ? ‘

‘பிரான்சுல இருந்து என் சினேகிதன் ரிஷார் வந்திருந்தானே ஞாபகமிருக்கா ? அவனிப்போ ஆப்கானிஸ்தானத்திலே இருக்கான். அங்கிருந்து, காஞ்சிபுரத்திற்கு போயிருந்த சமயத்திலே எடுத்த போட்டோக்கள் சிலதை அனுப்பி இருக்கான். ‘

‘எதனால ? ‘

‘என் கனவுல வர வீடு மாதிரியே ஒன்றை, காஞ்சிபுரத்திலே பார்த்திருக்கான். ‘

‘ம் .. போட்டோவைப் பார்த்தியா ?. உன் கனவுல வருகிற வீடு மாதிரி இருக்கிறதாலே, பார்த்துட்டு வர்லாம்னு உடனே கிளம்பிட்டியாக்கும். ‘

‘உண்மை. வெளிநாட்டுச் சுற்றுலாவாசிகளை கவருவதற்காக, ஒரு பழைய வீட்டைப் புதுப்பித்து அதற்குக் ‘காஞ்சிமனை ‘ யென்று பெயரிட்டு, அத்துடன் புராதன வீட்டு உபயோகப் பொருட்களை பொருத்தமாகச் சேர்த்து அழகுப் படுத்தியிருக்கிறார்கள். ‘காஞ்சிமனை ‘ என் கனவில் வருகின்ற வீடென்பதில் சந்தேகமில்லை ‘

‘சரி போயிட்டு வந்து உன் அனுபவத்தைச் சொல்லு, இப்போதைக்கு என்னை வீட்டில விட்டுடு. நாளைக்கு கடைசியாய் கிடைத்த மாறன் ஓலை நறுக்கோட, உன்னை வந்து பார்க்கிறேன். ‘

அன்றுமாலை பெர்னார் ஃபோந்த்தென் பயணித்த அம்பாசடர் இறுதியாக காஞ்சிபுரத்தின் எல்லையைத் தொட்டபோது பயணவலி குறைந்து, பதிலாக நெஞ்சத்தில் கோடை மழையில் நனைந்த விடலைப் பையனின் சந்தோஷம் கிடைத்தது. தூரத்தில் கனவில் கண்ட விண்ணைச் சீண்டும் கைலாசநாதர் கோபுரம், அதைத் தொட்டு விளையாடும் புறாக் கூட்டம், சூரியனுக்கு முன்னே வர வெட்கப்பட்டு தன் முறைக்காக காத்து நிற்கும் நிலா அனைத்துமே அவனுக்குப் புதியதல்ல, முன்பே பழகியிருந்தவை. மனம் வழிகாட்டக் காரைச் செலுத்தினான். வழியில் ஒருவர் சொன்ன விபரப்படி சங்கீதவித்வான் நைனார்பிள்ளை வீதியை கண்டுபிடித்து காரைத் திருப்பினான். இறுதியாகக் காஞ்சி மனை ‘யைக் கண்டு, காரை நிறுத்தி இறங்கினான்.

‘ராசா! குறி சொல்லட்டுங்களா ? ‘ திரும்பிப் பார்த்தான்.

கோடாலி முடிச்சுக் கொண்டை, முகம் முழுக்க மஞ்சள், நெற்றி நிறையக் குங்குமம், தோள்வரை இறங்கி – தங்கட்டி சுமக்கும் காதுமடல்கள்,. கையில் முழங்கை நீளத்திற்கு ஒரு பிரம்பும், கண்டாங்கிச் சேலயுமாய் நடுத்தர வயதுப் பெண்மணி. ஒரு வருடத்திற்கு முன், இப்பெண்மணியை புதுச்சேரி கடற்கரையில் வைத்துக் கண்டதும், அவள் வார்த்தைகளும், வேலுவின் குதர்க்கமான பதிலும் ஞாபகத்தில் வந்தது.

‘ஏம்மா இங்கே வா. ‘ குறிபார்க்கும் பெண்மணி இவனை நெருங்கி வந்தாள். இப்போதுதான் முதன் முறையாக அவனைப் பார்ப்பதுபோல பார்த்தாள். அவன் நீட்டிய கையை ஒரு சில விநாடிகள் அவதானித்தவள். ‘தொரைக்கு ஜென்ம வினையால விபரீத ராசயோகம், கவனமா இருக்கணும். முன்ஜென்ம கன்னியால கூடிய சீக்கிரம் பிரச்சினைகள் வருமுங்க. ‘ எனச் சொல்லிக்கொடுத்ததுபோல வார்த்தைகளை ஒப்பித்தாள். ஒப்பித்தவள் இந்தமுறை, இவன் நீட்டிய ஐந்து ரூபாயை வேண்டாமென்று சொல்லிவிட்டு நடந்து செல்வதை அதிசயத்துடன் சிலவினாடிகள் பார்த்துவிட்டு, தலையைத் திருப்பினான்.

‘காஞ்சி மனை ‘ என்று எழுதி இருந்தது. சிற்றோடு வேய்ந்த வீடு, வீட்டிற்கு முன்னே சிறிது நேரம் நின்று கனவில் வந்த படிமங்களோடு ஒப்பிட்டுப் பார்த்தான். மனம் அங்கீகரித்த திருப்தியில் கதவைத் அழுந்தத் தள்ளினான், திறந்துகொண்டது. எதிர்ப்பட்ட பெண்ணிடம் கேட்டான்.

‘கச்சியப்ப சிவாச்சாரியார் இல்லந்தானே ? ‘

‘ஆமாம். உள்ளவாங்க. இந்த வீட்டின் வரலாறு அப்படித்தான் சொல்லுது. ‘ வரவேற்ற பெண்ணை தொடர்ந்து சென்றான். இருபுரமும் திண்ணைகள். திண்ணையை ஒட்டி நடை. காஞ்சிபுரத்தின் தலவரலாறு தட்டச்சில் பழுத்து கிடக்கிறது. வலப்புறத்தில் சாளரத்துடன் கூடிய அறை. மணமக்கள் கோலத்தில் இரு பொம்மைகள், குடை, செருப்பு, பிறகு கூடம்- குளுகுளுவென்றிருக்கிறது. இடையில் பெருத்த இரு பெரிய தூண்களை இணைத்த ஊஞ்சல். ஊஞ்சலில் துலக்கிய முகத்துடன் அவள். கலகலவென்று சிரிக்கிறாள். அதரம் சிரிக்கிறது, அதரத்திற்கு மேலே அரைகுறையாய்த் தெரிந்த பல்வரிசையில் சிரிப்பு. அளவாய் இறங்கிய நாசியில் சிரிப்பு. காது மடல்களில் சிரிப்பு, கருவிழிகளில் சிரிப்பு, கைவளைகளில் சிரிப்பு, ஊஞ்சற்பலகை உயரும்போது வெளிப்படும் வெள்ளைக்கால்களில் சதிராடும் காற் சலங்கைகளில் சிரிப்பு.. மயில்கள் சிரிக்கிறன, புறாக்கள் சிரிக்கின்றன. புவனம் சிரிக்கிறது, இவனும் சிரிக்கிறான்.

‘சார் இது முற்றம் ‘- மயக்கத்திலிருந்து மீண்டான். மத்தியில் திறந்திருந்த வெளிவழியாக நுழைந்திருந்த சூரியஒளி முற்றம் முழுக்க இருந்தது. நான்கு பக்கங்களிலும் தூண்களைக்கொண்ட திறந்த வெளி. அவ்வீட்டில் அமைப்புக்கு இசையாத கருங்காலி நாற்காலிகள். வலப்புறம் அசட்டையாய் இலைபோட்டு, மணை, சொம்பு நிறைய தண்ணீர். முற்றத்திலிருந்து தொடரும் சிறுவழியில் நுழைந்து அவள் போக, இவனும் நடக்கிறான். ஒரு சாய்வு நாற்காலி, நடைவண்டி, தூளி, உரல் உலக்கை.. முன்னே நடக்கின்ற பெண் ஆங்கிலத்தில் ஏதோ சொல்லிக் கொண்டு போகிறாள். இவனுக்கு அயர்வாக இருக்கிறது.

மீண்டும் கூடத்திற்குத் திரும்புகிறான். ஊஞ்சலைப்பார்க்கிறான். இம்முறை ஊஞ்சலில் வயதான கோவில் அர்ச்சகர் ஒருவரின் மெலிந்த தேகம், மூக்கில் நீர்வடிந்தவண்ணம், ஈக்கள் மொய்த்துக்கொண்டு, உலர்ந்த கைகளால் அவற்றை மாற்றி மாற்றி ஓட்டிக்கொண்டு, சுருண்டுக் கிடக்கிறது. அருகே சென்றான், குனிந்தான்.

‘அய்யா என்னை மன்னிக்கவேணும். இப்படியொரு அசம்பாவிதத்தை நான் எதிர்பார்க்கவில்லை ‘

‘பாபி..! எங்கே நானும் செத்துபோயிருப்பேனென்று நினைத்துவந்தாயா ? அருமை மகளைப் பறிகொடுத்த பிறகும், எனது ஜீவன் பிழைத்திருப்பது யாருக்கென்று நினைக்கிறாய் ? பிரபு சுப்ரமண்யருக்காக! சண்டாளா! நீ எங்கே வந்தாய் ? என் கண்முன்னே நிற்காதே. ‘

ஊஞ்சலிற் கிடந்த அர்ச்சகரின் கால்களில் விழுந்தான். ‘ ‘ஐயா! என்னை மன்னித்தேன் என்றொரு வார்த்தை சொல்லுங்கள். ‘ பெரியவர், கண்களைச் சுருக்கிக்கொள்கிறார், வாய் அசைபோடுவதுபோல, தன்பாட்டுக்கு செயல்படுகிறது, உலர்ந்து சோம்பிக்கிடந்த கரத்தினைக் தலைக்குக்கொடுத்து, ஊமையாய்க் கிடக்கிறார். விழிகள் மாத்திரம், இவன் அருகில் நிற்கின்றானா ? என்பதை உறுதிப்படுத்த நினைத்ததுபோல, மூடித் திறக்கின்றன. ‘ஐயா! ஏனிப்படி மெளனம் சாதிக்கிறீர்கள் ? ஏதாவதுச் சொல்லுங்கள். ‘ ஊஞ்சலைப் பிடித்து ஆட்டுகிறான்.

‘சார் என்ன ஆச்சு. ? ‘ திடார்னு ஏன் ஊஞ்சலைப் பிடித்துக்கொண்டு உணர்ச்சிவசப்படறிங்க ? ‘, பெர்னார் கண்களைத் துடைத்துக் கொண்டான். வெற்றூஞ்சல் முன்னும் பின்னுமாக அசைந்துகொண்டிருக்கிறது, திரும்பினான். சற்றுமுன் இவனைக் காஞ்சி மனையின் வாயிலில் நின்று வரவேற்ற பெண். அவள், இவனது செய்கைக்குக் காரணம் புரியாது குழப்பத்துடன் கொஞ்சநேரம் நின்றாள்.

‘சார்! கொஞ்சம் எழுந்திருங்க. ‘காஞ்சி மனை ‘ யைப் பற்றிய உங்கள் அபிப்ராயத்தை இந்தப் பார்வையாளர் புத்தகத்தில் ஒரு சிலவார்த்தைகள் எழுதமுடியுமா ? ‘ நோட்டையும் பேனாவையும் நீட்டியவண்ணம், கேட்டாள்.

‘அற்புதமான வீடு, மறக்கமுடியாத அனுபவம் ‘ என ஆங்கிலத்தில் எழுதியவன், பெர்னார் என்று கையொப்பமிட்டான்.

‘தென்னிந்திய முறைப்படியான மதிய உணவினை பார்வையாளர்களுக்கு ஏற்பாடு செஞ்சிருக்கோம். உங்களுக்கு விருப்பமிருந்தால் சாப்பிட்டுப் பார்க்கலாம். ? ‘

வேண்டாமென மறுத்துவிட்டு ‘காஞ்சி மனை ‘யை விட்டு வெளியேறினான். வெளியேறியவன் தயக்கத்துடன் திரும்பினான், கேட்டான். ‘நீங்கள் ? ‘

‘நானா ? தேவயானி ‘காஞ்சி மனை ‘யின் நிர்வாகி. அடுத்தமுறை காஞ்சிபுரம் வந்தால் அவசியம், நீங்க வரணும் ‘, என்றவளின் கண்களைப் பார்க்கிறான், அவள் கண்களின் ஊடாக முகமொன்று தெரிகிறது: குவிந்த முகவாய், பேசத் துடித்து ஊமையாய் ஒட்டியும் ஒட்டாமலும் இருக்கின்ற சிவந்த, ஈர அதரங்கள். ரோஜா மொக்காய் நாசி. அதனிருபுறமும் சிறிய மல்லிகை மொட்டாய் மூக்குத்தி, நெற்றியின் மத்தியில் பவளச் சிவப்பில் ஒருபொட்டு. இமைக்க மறந்த மையிட்ட சோகக் கண்கள், கண்ணீர்த் துளிகள் மையிற் கலந்து யோசித்து சிவந்திருந்தக் கன்னக் கதுப்பில் இறங்க அதனைத் துடைக்க மனமின்றி வீதியைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள்….

(அடுத்த இதழில் நிறைவுறும்)

—-

Na.Krishna@wanadoo.fr

Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா

நீலக்கடல் -(தொடர்)- அத்தியாயம் – 52

This entry is part [part not set] of 44 in the series 20041230_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


பொன்னி வளைத்த புனல்சூழ் நிலவிப் பொலிபுலியூர்

வன்னி வளைத்த வளர்சடை யோனை வணங்கலர்போல்

துன்னி வளைத்தநம் தோன்றற்குப் பாசறை தோன்றுங் கொலோ

மின்னி வளைத்து விரிநீர் கவரும் வியன்முகிலே.

-(திருக்கோவையார்)- மாணிக்கவாசகர்

நிதானமாக, யாழினை வாசித்தவண்ணம் பாடுகிறாள். பாடலில் மாத்திரமல்ல யாழினை மீட்டுகின்ற விரல்களிலும், விரல்வழிபிறந்த யாழின் சுருதியிலும் சோகம் பிசைந்திருக்கின்றது. காதல் அனுபவமற்ற மானுடம் உணரவொண்ணா சோகம். கண்களிளிலிருந்த நீர்முத்துக்கள், கன்னக் கதுப்புகளில் உதிர்ந்து ஈரத்தினை மெழுகுகிறது. அதனை உலர்த்தும்வண்ணம், நெஞ்சத்திலிருந்து பந்தாய் எழுந்த அக்கினிமூச்சு, அவளை யாகக் குண்டத்திலிட்டு, தீ நாக்குகளாய்த் தகிக்கிறது.

அந்திவேளை, வானம் இருண்டு கருநீலவண்ணத்திலிருக்கிறது. கறுத்த மேகங்கள் கண்ணுக்கெட்டியவரை திரண்டிருக்க, கூட்டத்தினின்று தனித்த பறவையாக இருக்கவேண்டும், மெதுவாய்த் தெற்கு வடக்காகப் பறக்கின்றது. தேவயானிக்குப் பறக்கும் வரம்கிடைத்தால் அதன் ஏகாந்தத்தைத் தவிர்த்து உடன் பறக்கலாம், மனதை அழுத்தும் பாரத்துடன், வரம் கிடைத்தாலும் பறக்க இயலுமாவென்கிற ஐயம். குளிர் காற்று வீச ஆரம்பித்தது. மரங்கள் யோசனைக்குப்பின் தலையை அசைக்கின்றன. கார்காலம் தொடங்கியிருக்கிறது. மேகத்தைக் கண்ட ஆனந்தத்தில் கிணற்றருகே ஆண்மயில்கள் தோகை விரிக்க ஆரம்பித்துவிட்டன. பெண்மயில்கள் அகவிக்கொண்டு அங்குமிங்குமாக ஓடி தங்கள் காதலைத் தெரிவிக்கின்றன. அக்காட்சியை விரும்பாதவள்போல, கையிலிருந்த யாழினை ஓர் ஓரமாகச் சுவற்றில் சாத்திய தேவயானி, குடிலைவிட்டு வெளியேறி மயில்களை ‘சோ ‘ ‘சோ ‘ வென்று துரத்துகிறாள். குளிர்காற்றில் உடலைச் சிலிர்த்தவண்ணம் இருந்த மானொன்றை மெல்ல நெருங்கிப் பார்த்திபேந்திரன் நினைவில் அணைத்துக்கொள்கிறாள்.

‘தேவயானி..உன்னுடைய சொக்கேசன் வந்திருக்கிறேன் ‘, குனிந்து அவளைச் சொக்கேசன் தீண்டினான். அத்தீண்டலைச் சகியாதவள்போலத் தேவயானியின் சரீரம் ஒரு முறை குலுங்கிச் சில நாழிகைகள் அதிர்ந்தது. பார்த்திபேந்திரனுடனான கனவுகளிற் கலந்த, அவளது மயக்க நிலையை கலைத்துப்போடும் வன்மத்துடன் வார்த்தைகள் வந்தன:

‘சண்டாளன் பார்த்திபேந்திரனுக்காக, ‘கருமாறிப் பாய்வதற்கு விரதமிருப்பதாக அறிந்தேன். உப்பில்லாமல் உண்டு நோன்பு இருக்கின்றாயாமே ? காமகோட்டம் மேல்நிலையிலையினின்று சக்கர தீர்த்தத்தில் விழுந்து உயிரைவிடத் துணிந்திருக்கும் உனது கடுமையான விரதத்திற்கு, அவன் உகந்தவனென்றா நினைக்கிறாய். ‘

‘…. ‘

‘உன் தந்தை என்னிடம் எவ்வளவு வருத்தப்பட்டார் தெரியுமா ? ‘சிவஞான பானு ‘, ‘மகாகவி, ‘ ‘ஞான பண்டிதர் ‘, என்று இக்காஞ்சி மாநகரமே அவரைத் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுகிறது, கந்தபுராணத்தின் அரங்கேற்ற தினத்தை எதிர்பார்த்து, தமிழ்ப் புலவர்களும், கல்விமான்களும் காத்திருக்கிறார்கள். இப்படியான நேரத்தில், அவர் மனம் வருந்தும்படியான காரியங்களைச் செய்யலாமா ? ம்… ‘

‘…. ‘

‘எழுந்திரு! சீதளக்காற்றில் இருப்பது சரீரத்திற்கு நல்லதல்ல. மழைவருவதற்கான அறிகுறிகள் தெரிகின்றன, குடிலுக்குத் திரும்பலாம். ‘ சொக்கேசன் மீண்டும் அவளிடம் கைகளைக் கொண்டு சென்றான். தேவயானி ஆவேசமுற்றவளாய், அவனது கரங்களை அவசரமாய் விலக்கினாள்.

‘பெண்ணே!..கணவன் இறந்தபின்பு தீப்பாய்ந்து உயிர்விடத் துணிவதும், துணியாதவர்கள் பருக்கைக்கற்களால் அடுக்கப்பட்ட படுக்கையில், பாய்கூடப் போடாமல் படுத்துக் கைம்மை நோன்பு நோற்பதும் பத்தினிப் பெண்கள் காட்டும் வழி. வேதமுறைப்படி உன்னை விவாகம்பண்ணிக்கொண்டவன் உயிரும் உடலுமாக இருக்கிறேன். கற்புடைப் பெண்களுக்குக் கணவன் மீதான காதல் மிகப்பெரிதென்பதை நமது சாஸ்திரங்களும் வற்புறுத்துகின்றன. நடவாததை நடக்குமென்று கற்பனைசெய்து, வதைபடுவது பேதமை. உனக்கும் பார்த்திபேந்திரனுக்கும் காதலுள்ளதை ஊர் நம்புகிறது. உன் தந்தை சந்தேகிக்கிறார். பார்த்திபேந்திரனுடைய சிநேகிதன் பேசும்பெருமாள் மெய்யென்கிறான். எனக்கு நம்பிக்கை இல்லை. மதங்க முனிவரின் புத்ரியை ஒப்ப, கச்சியப்பர் தவப்பயனாய் பிறந்திருப்பவள் நீ. புத்தியில் மேன்மையும், இனிமையான வாக்கு சாதுரியமும் வரமாகப் பெற்றிருக்கிறாய். எல்லா வித்தைகளையும் ஓதாது உணர்ந்தவள். ஒருபோதும், சிவாச்சாரியாருக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் செயல்களைச் செய்யமாட்டாய். நீயொரு பத்தினிப்பெண் என்பதை மனதிற்கொண்டு என்னிடம் வார்த்தை கொடு. பார்த்திபேந்திரன்மீது உனக்கேதும் பிரேமையில்லை என்பதுதானே உண்மை ? ‘

சொக்கேசன் கால்களிற் தேவயானி தடாலென்று விழுந்தாள், ‘சுவாமி! என்னை மன்னித்தருள வேண்டும். பார்த்திபேந்திரனையன்றி வேறொரு புருஷரை, என் நெஞ்சத்தில் நிறுத்த மனம் பதறுகிறது, உடல் நடுக்கமுறுகிறது. என்னுள் அவரும், அவருள் நானும் ஆத்மாவும், சரீரமுமாய் அவதாரமெடுக்கிறோம். எங்கள் ஆத்மாவுக்கு விடுதலை கிடைக்கும்வரை, எனக்கு அவர் சரீரமென்றும் அவருக்கு நான் சரீரமென்றும் விதிக்கப்பட்டிருக்கிறது. ‘

‘தேவயானி!..பதிவிரதா நெறியை மீறுகிறாய். வேண்டாமடி, இது தர்மமல்ல. உனக்கு நினைவிருக்கிறதா ? அக்கினி சாட்சியாய், பெற்றோர் மடியில் அமர்ந்து ஸ்ரீமான் சொக்கேசனான எனக்கும், செளபாக்கியவதி தேவயானியான உனக்கும் கலியாணம் நடந்தபோது, எனக்கு ஆறு வயது, உனக்கு நான்கு வயது. நாம் சிறு பிள்ளைகளாக இருந்தகாலத்தில் நடந்தவைகள் எனது இதயத்தில் கல்லின்மேல் செதுக்கிய எழுத்துகளாகப் பதிந்துள்ளன, என் நினைவு சாளரத்தை திறக்கின்றபொழுது, எதிர்ப்படும் படிமங்கள் தேவயானியென்கின்றன. நீயும் நானும் பதியமிட்ட மல்லிகைக்கொடி முதல்மொட்டு விட்டபோது, ஓடிச் சென்று நீ பார்த்தது அம்மொக்கினை. நான் பார்த்து ஆனந்தித்தது உனது முகத்திற் படிந்த சந்தோஷத்தை. கறந்த பாலை திருட்டுத் தனமாக நீ பருகியிருக்க, உன் தந்தையிடம் என்னைக் குற்றவாளியாக ஒப்புக்கொண்டது நினைவிருக்கிறதா ? நீ ஆசைப்பட்ட மாங்கனிக்கு ஆரூரார் மாந்தோப்பில், கள்ளத்தனமாக நுழைந்ததும், நீ அடம்பிடித்த தாமரை மொக்கொன்றிற்காக, குளத்திலிறங்கி தாமரைக்கொடிகளிற் சிக்குண்டு உயிர் பிழைத்ததுங்கூட உனக்காகத்தான் பெண்ணே. வைகறையில் எழுந்திருந்து திண்ணைப் பள்ளிக்கு நீ முந்தி நான் முந்தியென்று ஓடியது, குமரகோட்டக் கோபுரவாசலில் கண்களைக் கட்டிக்கொண்டு உன்னைத் தேடியது, சோமஸ்கந்தனின் திருக்கல்யாண உற்சவத்தில் சடங்குகளை வரிசை மாறாமல் மனதிற்பதித்து, சினேகிதர்கள் படை சூழ உலகாணித் தீர்த்தத்துப் படித்துறையில், நீயும் நானுமாய் மாலைமாற்றிகொண்டது, பூக்குடலையைச் சுமந்துகொண்டு நாமிருவரும் ஓடிப் பிடித்து விளையாடியது, ஆலயப் பூங்காவனத்திலிருந்து முல்லை, மல்லிகை, திரு ஆத்தி முதலியவற்றைப் பறித்து மாலை செய்து சூடிக்கொண்டது, மணல்வீடு கட்டி மகிழ்ந்தது, அதிரசத்தையும், தினை அடையையும் புன்னை மரத்தடியில் உண்டு மகிழ்ந்ததென்று இன்னும் எத்தனை எத்தனையோ. ‘

‘இல்லை சுவாமி. என்னை மன்னிக்கவேணும், பார்த்திபேந்திரன் மாத்திரமே என் நெஞ்சத்தில் வியாபித்திருக்கிறார். வேறு ஞாபகங்கள் இல்லை. ‘

‘பாதகி, பொய் சொல்லுகிறாய். பத்தினிப் பெண்களின் வார்த்தைகளல்ல அவை. பாபத்தை விலை கொடுத்து வாங்குகிறாய். உன்னைப் போன்ற கணவனை வஞ்சிக்கும் பெண்கள் கண்ணிழந்து வருந்தும்படியாக, மூன்றாம்வகை நரகமான அந்ததாமிச்ரம் நகரம் – வாய்க்குமென்று நமது புராணங்கள் சொல்கின்றன. வேண்டாம், அப்படியான எண்ணத்தை விட்டுவிடு. கெளதமர் அகலிகைக் கதை மறந்துவிட்டதா ? வித்தையும், விவேகமும் பெற, வடதேசங்களுக்கு நான் சென்றிருந்த நேரத்தில், இங்கே பார்த்திபேந்திரனென்கிற இந்திரனும் அப்படித்தான் தன் பைசாச விருப்பத்திற்காக உனக்குத் தூண்டிலிட்டிருக்கிறான். நல்லவேளை, தகாதெதுவும் நடப்பதற்கு முன்பாக வந்திருக்கிறேன். ‘

‘முருகா! ‘ காதுகள் இரண்டையும் அவசரமாகப் பொத்திக்கொண்டாள். கண்கள் சிவக்க, துர்க்கைபோல முகம் இறுகியது. ‘இப்படியான வார்த்தைகளைக் கூற நீங்கள் மனம் துணியலாமா ? ‘. எனக் குரலை உயர்த்தியவள் தணிந்தவளாக, ‘அகலிகைக்கு நேர்ந்த அனுபவங்களுக்கு கெளதமரும் பொறுப்பல்லவா ? தேசாந்தரம் போய்விட்டுத் திரும்பிவந்து கேட்பதற்கு நானொன்றும் உடமை அல்லவே, எலும்பும், தசையும், இரத்தமும், நரம்பும் கொண்ட உயிர். எனக்கு பார்த்திபேந்திரனோடு நேர்ந்திருப்பது உயிரனுபவம். அவை ஒன்றிரண்டு அல்ல உரித்து எடுப்பதற்கு, பல படிமங்களாக மடிந்து கிடக்கிறது, அதன் முறையான நிரல்களை, வேத சாட்சியங்களைக்கொண்டு சிக்கலாக்க எண்ணுகிறீர்கள். தங்களைப் போன்ற முனிபுங்கவர்களுக்குக் காத்திருக்க பழகிய ரிஷிபத்தினிகளுக்கா இந்தத் தேசத்தில் பஞ்சம். அப்படியானப் பெண்கள், பாலாற்றங்கரைக்கு அதிகாலை நேரத்தில் கக்கத்தில் குடத்துடன் நீராடவருவார்கள், அவசரமென்றால் காஞ்சி மாநகரிலேயே அர்ச்சகர் குடில்களில்கூட முயற்சி செய்யலாம்.. ‘

‘தேவயானி! எனது பொறுமையை சோதிக்கிறாய். உனக்கும் எனக்குமான விவாகத்தை எவர் தீர்மானித்தார்கள் என்று நினைக்கிறாய் ? நீ சற்றுமுன் நாமகரணம் சூட்டிய விதியல்லவா ? அவ்விதியை மாற்றி எழுதுவேண்டுமென்று நினப்பது புத்தியீனமடி. பார்த்திபேந்திரனும் நீயும் ஆத்மாவும் சரீரமும் என்கிறாயே எப்படி முடியும் ? உனக்கு மாங்கல்யம் கட்டியவன் என்ற வகையில் உன் ஆத்மாவாகிய பசுவுக்கு, பாசமும் பதியும் நானன்றி, வேறெவர் ? ‘

‘…. ‘

நீயும் நானும் மேலானவர்கள். பூவுலகில் மேலான மக்கள் சந்ததிகளை விருத்தி செய்யப் படைக்கப்பட்டவர்கள். தாந்திரிகத்து பரப்பிரம்மமே பூரணமானது, மேலானது, ஈடற்றது. சிவனும் சக்தியுமாக ஒன்றிணைந்து பெறவேண்டியது. நான் கற்ற யோக நெறியும் தியானமும், பருவுடலின் வழி செல்வது. நாயகன் நாயகி மார்க்கம். பேரின்பம் பெறுவதற்கான எளியவழி. நாம் அறிந்தவற்றிலிருந்து அறியாதவற்றினை அடையும் வழி. அதற்குப் பொருத்தமானவள் உன்னையன்றி வேறொருத்தி இருக்க முடியுமா ? உன்னைத் துணையாகக்கொண்டே தாந்திரிகத்தில், நான் ஜெயிக்க வேண்டும். ‘

‘…. ‘

‘நாமிருவரும் வைகறையில் எழுந்திருக்கவேண்டும், புனித நீராடவேண்டும். மண்குடத்தில் நீரும், துடைப்பமும், குடைலை வழியப் பூக்களுமாக நமது மனவாலயத்திற்குள் புகவேண்டும், அதுவே தியானம்: அங்கே என்னயிருக்குமென்று நினைக்கிறாய், ஆண்டுகள் பலவாக அகற்றமறந்த குப்பைகள், நல்லவை தீயவையென நமது மனப்பக்குவத்தின்படி தீர்மானித்தவை:உறவு, பாசம், விருப்பு, வெறுப்பு, ஆசை, அகங்காரம்….தூசும் தும்புமாகப் படிந்திருக்கின்றன. அவற்றைக் கூட்டி ஒழித்தாகவேண்டும். அவற்றின் விளைவுகள்குறித்து எச்சரித்த குரலை, நரவாழ்வில் நமக்கு வைக்கப்படும் கண்ணிகளை இனம் காட்டிய குரலை உதாசீனம் செய்திருக்கிறோம்; இனியாகிலும் கேட்க வேண்டும். அதனை இருவருமாக செய்யவேண்டும். இருவரென்றால் சிவனும் சக்தியுமாய், நீயும் நானுமாய், எதிருமாய் புதிருமாய், கேள்வியும் பதிலுமாய், சொக்கேசன் தேவயாணியாய், ஒருவர் மற்றவரை ஆலீங்கனம் செய்தவண்ணம் பூர்த்திசெய்யப்போகிறோம், பேரின்பத்தைப் பெறப்போகிறோம். ‘

‘சுவாமி, நீங்கள் கூறிய வார்த்தைகளேதும் எனக்கு விளங்கவில்லை. இச் ஜென்மத்திற்கு மாத்திரமல்ல, இனியெடுக்கின்ற ஜென்மங்களிலும் பார்த்திமேந்திரனையன்றி வேறொருவர் மணாளனாக வரிப்பதில்லையென தீர்மானித்திருக்கிறேன். பார்த்திபேந்திரன் வெற்றி வாகையுடன் மீண்டும் வருவார். எனக்கு மாலை சூடுவார், நம்பிக்கை இருக்கிறது ‘

‘ ‘ஆவது விதியெனில் அனைத்தும் ஆயிடும் / போவது விதியெனில் எவையும் போகுமால்/ தேவருக்கு ஆயினும் தீர்க்க தக்கதோ/ ஏவரும் அறியொணா ஈசற்கு அல்லதே ? ‘ நான் சொல்லவில்லை, உன் தந்தை கச்சியப்பர் கச்சியப்பர் சொல்வது. உனது விதி மாத்திரமல்ல எனது விதியும் பார்த்திபேந்திரன் விதியும் அவ்வாறே எழுதப்பட்டிருக்கவேண்டும். அவ்வாறில்லையெனில் உன் முடிவில் இவ்வளவு பிடிவாதம் காட்டுவாயா ? அவன் வெற்றியுடன் திரும்ப, நீ உயிரை மாய்த்துகொள்வேன் என்பதும், இறந்த உனக்கு மாலை சூடுவான் என்பதும் விநோதமாக இல்லை. நீ இறந்த பிறகு, அவன் மாலைசூட வருவானென்பது எதற்கென்று யோசித்தாயா ? ஒருவேளை வரும் பிறவியிலா ? ஹஹ்ஹா…பெண்ணே எத்தனை பிறவிகளென்றாலும், நானும் வருவேன், உன் அறிவு மயக்கத்தை தெளியவைப்பேன். உன்னை ஆட்கொள்ளுவது நானாகவே இருக்கமுடியும்.. ‘

அமானுஷ்யக் குரலில், கண்களைப் பெரிதாக்கிக்கொண்டு, சொக்கேசன் விட்டு விட்டுச் சிரிக்கிறான். மாறாக, உக்கிரமுற்றவள்போல தேவயானி கால்களை அழுந்தப்பதித்து அசையாமல் நிற்கிறாள். காத்திருந்தது போல வானம் பேரிரைச்சலிட்டுக் கொண்டு முழங்கியது. கீழ்வானில் மின்னல்கள் வெட்டி ஒளிர்ந்தன. மரங்கள் வேரோடு பெயர்ந்துவிடுவதுபோல ‘உய் ‘ ‘உய் ‘யென்று தலையை அசைத்து சண்டமாருதம் புரிந்தன. சடசடவென பெய்ய ஆரம்பித்த மழை, பூமியை கரைத்துவிடத் துணிந்ததுபோல அருவியாய்க் கொட்டி ஊழித்தாண்டவத்தை நினைவூட்டியது.

/தொடரும்/

Na.Krishna@wanadoo.fr

Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா

நீலக்கடல் -(தொடர்)- அத்தியாயம் -50

This entry is part [part not set] of 52 in the series 20041216_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


கற்றின வீழ்பனி தூங்கத் துவண்டு துயர்கஎன்று

பெற்றவ ளேஎனைப் பெற்றாள் பெடைசிற கான்ஒடுக்கிப்

புற்றில வாளர வன்தில்லைப் புள்ளும்தம் பிள்ளைதழீஇ

மற்றினம் சூழ்ந்து துயிலப் பெறும்இம் மயங்கிருளே.

-(திருக்கோவையார்)- மாணிக்கவாசகர்

பதினான்காம் நூற்றாண்டு….

‘கச்சியப்ப சிவாச்சாரியார் இல்லந்தானே ? ‘

‘ஆம். தாங்கள் ? ‘

வார்த்தைகளில் சங்கீதம் தொனிக்கிறது. வடிவத்தில் யெளவனம் கொழித்திருக்கிறது. கோடி சூரியன் பிரகாசத்துடன் பெண்மை ஜொலிக்க, நேரிட்டுப் பார்த்ததில் கண்கள் கூசுகின்றன. தேனில் நனைந்த வார்த்தைப் பலாச்சுளைகள். அவற்றை உச்சரித்து ஓய்ந்த இதழ்களைப் பார்க்கிறான். இதழ் சுமக்கும் சிவந்த கன்னங்களைப் பார்க்கிறான். இமைக்க மறந்த, இரு கருவிழிகளைப் பார்க்கிறான். கண்ணின் மணியைப் பார்க்கிறான். செவ்வலரி சூடிய நீண்ட கரியகூந்தலைப் பார்க்கிறான். ஜென்ம ஜென்மமாய் ஒருவர் மற்றொருவருக்காக காத்திருப்பதை இவன் மாத்திரமல்ல அவளும் உணர்ந்திருக்கவேண்டுமென்றே நினைத்தான்.

‘என் கேள்விக்கு மறுமொழியில்லையே ? ‘

‘மன்னிக்கவும். என் பெயர் பழனிவேலன்(பொய்). உத்திர மேரூர் பெரு நிலக்கிழார் ஆரூரார் மைந்தன்(பொய்..பொய்). ஸ்ரீ குமரக் கோட்டம் ஆலயத்திலிருந்து வருகிறேன். மஹா அபிஷேகத்திற்கென்று தொண்டைமண்டல அதிகாரிகள், பெரு நிலக்கிழார்கள், இறை அதிகாரி குமரக்கோட்ட தக்கார் என எல்லோரும் காத்திருக்கிறார்கள். கச்சியப்ப சிவாச்சாரியாரை உடனே அழைத்து போகவேண்டும் (உண்மை) ‘

‘தந்தைப் புறப்பட்டுச் சென்று ஒரு நாழிகை ஆயிற்றே! கந்தபுராணத்தை எழுதி முடிக்கும் ஆவலில் தனது அன்றாடப் பணிகளைக் கூட மறந்து விடுகிறார் ‘ எனத் தடுமாற்றத்துடன் கூறியவள் மெல்ல நிமிர்ந்ததும் வெட்கமுற்றவளாய், முகம் கவிழ்ந்து மெள்ள கதவடைத்துவிட்டு விடுவிடுவென்று உள்ளேபோகத்தான் செய்தாள். ஆனால் இவன் மன வாசலைத் திறந்துகொண்டு கால் பதித்தவள் உள்ளத்துக்குள்ளே அல்லவா உட்கார்ந்து கொண்டாள்.

அப்பெண்ணைச் சந்தித்த தினத்திலிருந்து, இரு கிழமைகளாக அச்சமும் பரவசமும் இரு வேறு இழைகளாக அவனிடம் பின்னிக்கொண்டிருக்கின்றன. வார்த்தைகளை முன்பின்னாக மொழிகிறான். வாட் பயிற்சியில் தடுமாறுகிறான். உணவு கொள்ளவில்லை, உறக்கம் கொள்ளாமல் நள்ளிரவு வெகுநேரம் பனியில் நனைந்தவண்னம் கால்போனபோக்கிலே நடக்கிறான். தனிமைப் பூங்காவைத் தேடித் தஞ்சம் புகுந்துவிடுகிறான்.

அப்பூங்காவில், இவன் மனதிற்கென்றெரு தாடாகமுண்டு. படித்துறையில் அமர்ந்தவண்ணம் தடாகநீரில் நடக்கும் கூத்துகளில் லயிக்கிறான். குளிர்ந்த நீரில் சலசலத்துக்கொண்டு நீராடுகின்ற அப்பெண்ணின் நிலவு முகம்; நீர்த் திவலைகள் தெறிக்க துள்ளும் மீன் விழிகள்; நீரில் விழுந்த கருமேகமொத்து, பரவி அசையும் கூந்தல். அன்றலர்ந்த அச்செந்தாமரையொத்த அவளது வதனத்திற்குத் தோழிகளாய் வெண்தாமரை, நீலோற்பலம், செங்கழு நீர் மலர்கள். சிலநேரங்களில் இவனைக் கண்டு, அர்ச்சகர் பெண் மெல்ல முறுவலிப்பாள். அம்முறுவலுக்கிடையில் ஒளிரும் பற்களின் வெண்மைக்கு நாணி, குளக்கரையிலிருக்கின்ற கொக்குகள் சிதறிப் பறக்கும், இவன் மாத்திரம் பறக்காமல் இருப்பதை நினைக்க, இவனுக்குள் வியப்பு. துருவநட்சத்திரத்தைக் குறிவைத்து பயணிக்கும் மரக்கலத்தினைப்போல, நெஞ்சம் அப்பெண்ணைக் குறிவைத்து பயணிக்கிறது. நெருங்கிவிட்டோமென்று நெஞ்சம் குதூகலிக்க, அவள் நிலவு முகம் அவனிடமிருந்து விலகிப் போகிறது. சில நேரங்களில் ஆழ்கடலிலும், சில நேரங்களில் வெட்டவெளியிலும் இவ்வாலிபனை எறிந்துவிட்டு ஒளிந்துகொள்கிறது.

அருகிலிருந்த மரமல்லி மரத்திலிருந்த இரு குயில்கள், ஆணும் பெண்ணுமாயிருக்கவேண்டும். அணைந்து உட்காருகின்றன. பார்த்திபேந்திரன் காதற்குளிகையை மனதிற் அடக்கி ஆண்குயிலாக வடிவெடுத்திருக்கிறான், தன் இறகுயர்த்தி அணைத்தவண்ணம், காதற்சில்மிஷங்களில் இறங்குகிறான். அணைப்பிற்குள்ளான குயில் அசப்பில் அர்ச்சகர் பெண் போலவே வெட்கப்படுகிறது, கண்களிலோ பளபளக்கும் தாபம். கழுத்துப் பிடரியிலிருந்த கேசம் சிலிர்த்துக்கொள்ள, வாலை உயர்த்தி அணைப்பிலிருந்து விடுபட விருப்பமுள்ளதுபோலப் பாவனை செய்கிறது. இவன் ‘குக்கூ, குக்கூ ‘ வென்கிறான். அவள் ம்க்கூம், ம்க்கூம் என்று மறுத்தவண்ணம் ஒதுங்குவதும், ஒட்டி உரசுவதுமாயிருக்கின்றாள்; விளையாட்டு சிறிதுநேரம் நீடித்தது. முடிவில் பார்த்திபேந்திரன்குயில் தாபத்துடன், அர்ச்சகர்பெண்குயிலை அணைக்க, மரக்கிளையிலிருந்து இரண்டும் தடுமாறி பறக்க சக்தியற்று காதல் மயக்கத்துடன் விழுகின்றன. தங்கள் காதலுக்கு இடந்தராத மரமல்லிகை மரத்தின்மீது இவனுக்கு அடக்கமுடியாத சினம்.

மரமல்லிமரத்தினை வேருடன் சாய்க்கத் தீர்மானித்தவனைப்போல தன் பலத்தினைப் பிரயோகித்து அசைக்கிறான். சிரசில் சொரிந்த மரமல்லிகைப் பூக்கள் கபாலத்தில் நுழைந்து, அடிமனத்தைத் தேடி, இவன் சேமித்துவைத்திருந்த அவளது இரு சொற்களை பூஜிக்கிறது. ‘ஆம்.. தாங்கள் ? ‘ என்று அவள் உதிர்த்த வார்த்தைகள், குவிந்த முகவாய், பேசத் துடித்து ஊமையாய் ஒட்டியும் ஒட்டாமலும் இருக்கின்ற சிவந்த, ஈர அதரங்கள். ரோஜா மொக்காய் நாசி. அதனிருபுறமும் சிறிய மல்லிகை மொக்காய் மூக்குத்தி, நெற்றியின் மத்தியில் பவளச் சிவப்பில் சாந்துப்பொட்டு ‘, அவன் மனதிற்பதிந்த ஷணநேர காட்சி பின்பனிக்கால நள்ளிரவு பனிஊசிகளாய் உடலிற் தைத்து பரவசமூட்டுகிறது.

‘பார்த்திபேந்திரா!… இப்படியே எத்தனை நாட்களுக்கு, அப்பெண்ணை எண்ணி வருந்திக்கொண்டிருக்கப்போகிறாய். ஒன்று அவளைப் பற்றிய நினைப்பினை உன் மனதிலிருந்து முற்றாக விலக்கியாகவேண்டும். இயலாதென்றால், அவளை அடைவதற்கான முயற்சியில் இறங்கியாகவேண்டும். ‘ ‘ கேட்டவன் அவனது நெருங்கிய தோழனும், தொண்டைமண்டல அதிகாரிகளுள் ஒருவனுமான உத்திரமேரூர் மூவேந்த வேளாளன் இளைய குமாரன் பேசும்பெருமாள்.

பார்த்திபேந்திர பல்லவரையன் தன் சிநேகிதன் வார்த்தையில் உள்ள நியாயத்தினை உணர்ந்தான்.

‘என்ன செய்யலாம் ? ‘ சொல்.

‘அந்தப் பெண்ணிண் மீதுள்ள காதலால், பல்லவ சாம்ராச்சியத்தை மீண்டும் ஸ்தாபிக்கவேணுமென்கிற உன் மனோராச்சியத்திற்கு ஆபத்திருக்கிறது என்று சொல்லவந்தேன். அர்ச்சகர் பெண்ணை நெஞ்சத்தில் வைத்து, மனக் கவலைகளை வளர்க்கும் பட்ஷத்தில், நாம் நினைத்ததைச் சாதிக்க முடியாது. கூடிய சீக்கிரம் நடக்கவிருக்கும் தொண்டைமண்டலப்போரில், சம்புவரையர்களை ஒய்மாநாட்டு முந்நூற்றுப்பள்ளிக்கே துரத்துவேன் என்று நீயிட்ட சங்கற்பம் பொய்யாய்ப் போகும். அம்மன்னர்களுக்கு அடங்கிய குடியாகப் பல்லவரினம் தொடர்ந்து இருக்க வேண்டிவரும்.

‘அப்பெண்ணின் நினைப்பிலிருந்து என்னால் மீளமுடியாது போலிருக்கிறது. ‘

‘மீள முடியாதென்றால் அப்பெண்ணைக் கைப்பிடிக்க முயலவேண்டுமேயன்றிச் சராசரிச் சனங்களைப்போல சோர்ந்து போகக்கூடாது. ‘

‘உன் யோசனைதான் என்ன ? ‘

‘மீண்டும் அர்ச்சகர் வீட்டிற்குப் போகவேணும். அந்தப் பெண்ணிடம் உன்னுடைய பிரேமையைத் தெரியப்படுத்தவேணும். ‘

‘இது நடக்குமா ? அவள் அர்ச்சகர் பெண், நான் அரசகுமாரன். அவள் சம்மதிப்பாளா ? ‘

‘சம்மதிப்பாள், அதற்கு சிறிதுகாலம் பிடிக்கலாம். அதுவரை உத்திர மேரூர் பெரு நிலக்கிழார் ஆரூரார் மைந்தன், பழனிவேலனாகவே நீ நடிக்கவேணும். ‘

‘என்ன காரணத்தினை முன்வைத்து அவர்கள் வளவிற்குள் நுழைவது. ‘

‘சிவாச்சாரியாரிடம் உன்னைச் சீீடனாக ஏற்றுக்கொள்ளவேணுமென்று வற்புறுத்தவேணும். ஆம்.. அதுவொன்றே அவர் இல்லத்துக்குள் நீ நுழைவதற்கான வாய்ப்பினைத் தரமுடியும். ‘

‘என்ன கற்கப் போகிறேன் ? ‘

‘சிவாச்சாரியாரிடம் பயில்வதற்கு விஷயங்களா இல்லை. அவருக்கு வடமொழி வேதங்கள் தெரியும், தேவார திருவாசகங்கள் தெரியும். சைவ ஆகமங்களில் கிரியா காண்டமும், ஞான காண்டமும் தெரியும். சிவபெருமானின் இளையகுமாரன் அவர் கனவிற் தோன்றி ஸ்கந்த புராணத்து ஆறு சங்கிதைகளுள் சங்கர சங்கிதையின் முதற்காண்டமாகிய சிவரகசிய காண்டத்திலுள்ள அவரது சரித்திரத்தைக் கந்தபுராணம் எனப் பெயரிட்டுத் தமிழிலே பெருங்காப்பியமாகப் பாடவேண்டுமெனக் கேட்டுக்கொண்டதாகச் சொல்லிக் கொள்கிறார்கள். ஒவ்வொரு நாளும் நீராடி விட்டு நித்திய கருமங்களை முடித்துக் கொண்டு குமர கோட்டம் சென்று வடிவேல் முருகனை வழிபட்டபின் புராணம் பாடுகிறாராம். நாள்தோறும் நூறு செய்யுட்களைப் பாடியபின் எழுதிய ஏட்டையும், எழுத்தாணியையும் அர்த்தஜாம பூஜைக்குப் பிறகு இறைவன் திருவடிகளில் வைத்துவிட்டு, கதவைத் திருக்காப்பிட்டுக்கொண்டு இல்லம் திரும்புகிறாரென்றும், மறுநாள் கோயிலுக்குச் சென்று ஏட்டை எடுத்துப்பார்த்தால், அதில் முருகப்பெருமான் திருத்தங்கள் செய்திருப்பது தெரியவருமென்றும் சொல்லிக்கொள்கிறார்கள். அரசாளுபவர்களைக் குறித்தோ, அவர்களின் அபிலாஷைகள் குறித்தோ அக்கறை கொள்ளாத மனிதர். முருகப்பெருமான் மாத்திரமே அவரது அக்கறை.

‘நீர் சொல்வதை வைத்துப்பார்த்தால், அவர் ஞானவிற்பன்னரென்றும், கடவுள் அநுக்கிரகம் பெற்றவரென்றும் ஆகிறது. அத்தகைய மனிதரை, பொய் சொல்லி நெருங்குவதென்பது முறையான காரியமாகுமாவென்று யோசிக்கிறேன். ‘

‘நீ நினைப்பதை அடையவேணுமென்றால் அப்படித்தான் நடந்து கொள்ளவேணும். ‘

பேசும் பெருமாளும், பார்ந்திபேந்திர பல்லவரையனும் மதிய உணவு முடித்த இரண்டு நாழிகைகளுக்குப் பிறகு புறப்பட்டு காஞ்சிபுரம் வந்து சேர சூரியன் மேற்கில் மறைந்து கொண்டிருந்தான். சினேகிதர்கள் இருவரும் குதிரைகளைத் தங்களுக்குப் பரிச்சயமான காஞ்சி மண்டல அதிகாரி இல்லத்தில் கட்டிப்போட்டுவிட்டு, அவருடைய வற்புறுத்தல் பேரில் ஓய்வெடுத்தார்கள். காஞ்சிபுரம் வந்திருந்த காரணத்தினை பேசும்பெருமாள், மண்டல் அதிகாரியிடம் தெரிவித்தான். மண்டல அதிகாரி சினேகிதர்களிடம், ‘இரவு முதற் சாமம் பிறந்து மூன்று நாழிகையாகப் போகிறது. வந்ததற்குச் சிரமபரிகாரம் செய்துக்கொண்டு, இரவுத் தங்கியிருந்து காலையிற் சென்று சிவாச்சாரியாரைச் சந்திக்கலாமே. அதுவன்றி கந்தபுராணமெழுதும் சிவாச்சாரியார் அர்த்தசாமத்திற்குப் பிறகே வளவிற்குத் திரும்புவதாகப் பேச்சு. ‘, என்பதாக வற்புறுத்திப்பார்த்தார். பார்த்திபேந்திரன், இரவே அர்ச்சகர் இல்லம் போவதென்று குறியாய் இருந்தான். மண்டல அதிகாரியைச் சமாதானப்படுத்திவிட்டு, நண்பர்களிருவரும் அரை நாழிகை கழித்து ஏகாம்பரேசுவரர் கோவில் கோபுர திசைக்காய் இறங்கி நடந்தார்கள்.

தூரத்தில் கோபுரம் தெரிந்தது. கோபுரத்தைத் தலையிற் சுமந்திருந்த வீதியின் இரு புறமும் தெரிந்த வீடுகள் மகுடத்தை ஒட்டிய குழைமாதிரி அடங்கிக் கிடக்கின்றன. வீட்டிலிருந்த நிலைமாடங்கள் விளக்கேற்றுவதற்குத் தயாராகின்றன. வாசல் தெளித்து கோலம் போட்டிருக்க, இரவு சுவாமி வீதி புறப்பாடிருப்பதை உறுதிசெய்தது. எதிரேவந்த இரண்டொரு மனிதர்களிடம், ‘சிவாச்சாரியார் இல்லம் இன்னும் எவ்வளவு தூரமிருக்கவேணும் ‘, என்று பேசும்பெருமாள் விசாரித்தான். ‘கூப்பிடு தூரந்தான் ‘, என்றார்கள். சிறிது தூரம் நடந்திருப்பார்கள், கண்ட சில குறிப்புகளை வைத்து அர்ச்சகரில்லத்தை நெருங்கிவிட்டோமென்று பார்த்திபேந்திரன் உணர்ந்தான். உணர்ந்தமாத்திரத்தில், அவனுள்ளத்தில் படபடப்பும், பரவசமும் கலந்து எழுந்தது.

அகன்றவீதியில், அர்ச்சகர் கச்சியப்ப சிவாச்சாரியார் குடில், நெற்றியிலிட்ட சாந்தினைப்போல பூர்வபட்ச நிலவில் பளிச்சென்று நின்றிருக்கிறது. விழல் வேய்ந்த கூரை, மண்சுவர். சுவரெங்கும் வெண்புள்ளிகள், அவற்றைச் சுற்றி எழுதப்பட்ட கோட்டோவியங்கள். இடை இடையே கோழியைப்போல, மயிலைப்போல சித்திரங்கள். மத்தியில் சிற்ப வேலைபாடுகள் நிறைந்த தடித்த ஒற்றைக் கதவு. சினேகிதர்கள் நெருங்கிய மாத்திரத்தில், யாழ்நரம்புகளின் சிணுங்கல்களுக்குகிடையில் தேனிற் பிசைந்த குரல் வெளிப்பட்டு இவற்கள் வாசற்படியில் கால்வைக்க இசைமாலை சூட்டுகிறது.

‘ஆறிரு தடந்தோள் வாழ்க அறுமுகம் வாழ்க வெற்பைக்

கூறுசெய் தனிவேல் வாழ்க குக்குடம் வாழ்க செவ்வேள்

ஏறிய மஞ்சை வாழ்க யானைதன் அணங்கு வாழ்க

மாறிலா வள்ளி வாழ்க வாழ்க சீரடியார் எல்லாம் ‘

பாடியவள் முடித்தபோது தோழர் இருவருக்கும் பிரந்தாவனத்தில் கோபிகைகளுக்கு ஏற்பட்ட அனுபவம். இசைமயக்கத்திலிருந்து மீண்ட பார்த்திபேந்திரன் மெல்ல பாடல்வந்த வீட்டின் உட்புறம்நோக்கிக் குரல் கொடுத்தான்.

‘ஐயா ? ‘

‘யாரு ? ‘ அகல் விளக்கொன்று மெல்ல அசைந்து இவர்களை நோக்கி முன்னேறுகிறது வாசற்கதவினை ஒட்டி நிற்கின்றது.

‘தந்தை இராக்கால பூஜைக்காக கோவிலுக்குச் சென்றிருக்கிறார், வருவதற்கு சில நாழிகைகள் ஆகும் ‘ எனச் சொல்லியவண்ணம் அகல் விளக்கை ஏந்தியிருந்த தனது வலது கையினை உயர்த்திப்பிடித்தாள். ‘ ‘இவர், சில தினங்களுக்கு முன் உச்சிவேளை பூஜைக்காக, தந்தையைத் தேடி வந்தவர் அல்லவா ?, இந்த நேரத்தில் எதற்காகத் தன் சினேகிதருடன் வந்திருக்கிறார் ? ‘ என்றெண்ணியவளாய்த் தன்னைத் திடப்படுத்திக்கொண்டு பார்த்தாள், வெடுக்கென்று தலை குனிந்தாள், மீண்டும் ஏறிட்டுப் பார்த்தாள், நீண்ட பார்வையைப் பார்த்திபேந்திரன் முகத்திற் பதித்தாள், வியர்த்தாள். நெருக்கத்தில் நின்ற வாலிபனின் முகமும், விட்ட பெருமூச்சும், பெண்மனதில் இடி இடித்து மழையைப் பெய்வித்தது. அடைமழையில் நனைந்தவளைப்போல சரீரத்தில் நடுக்கங் கண்டாள். அதற்குமேலும் அவ்விடத்திலிருந்தால் தனக்குக் குளிர்காய்ச்சல் வரலாம் என்றஞ்சியவளாக, அகல் விளக்கைத் தவறவிட்டுவிட்டு சலங்கை சத்தமிட ஓடி, இருட்டில் கலந்தாள்.

‘தோழர்கள் இருவருக்கும், நடந்து முடிந்த நாடகத்தின் பிரமையிலிருந்து மீள்வதற்குச் சில நாழிகைகள் பிடித்தன. இரவு நேரத்தில் வந்திருக்கக் கூடாது. பகற்பொழுதில் வருவதுதான் உத்தமமென்று நண்பர்கள் முடிவுக்கு வந்தார்கள். ‘

‘பெண்ணே!.. ? ‘ பேசும்பெருமாள், உட்கூடத்தை நோக்கிக் குரல்கொடுத்தான். ஆமணக்கு எண்ணெயில் விளக்கொன்று அமைதியாய் எரிந்துகொண்டிருக்கிறது. வெளிச்சமும், இருட்டும் சம விகிதாச்சாரத்தில் உள்ளேப் பரவிக்கிடக்கிறது. குடிலில், சற்றுமுன்பு இல்லாத நிசப்தம். உள்ளிருக்கும் பெண்ணிடம் சுவாசத்தின் வேகம் கூடியிருப்பதை, இவர்களிருக்குமிடத்திலிருந்து கேட்க முடிகிறது.

‘பெண்ணே!.. நீ எங்கிருக்கிறாய் ? நாங்கள் அழைப்பது செவியில் விழுகிறதா ? இல்லையா ? ‘ –பார்த்திபேந்திரன்.

இம்முறை வளையோசையும், அதனைத் தொடர்ந்து காற் சலங்கையும் கலகலக்கிறது.

‘பெண்ணே உன்னைத் தொந்தரை செய்ததற்காக மன்னிக்கவேணும். நாங்கள் அருகிலிருந்த எங்கள் சினேகிதரில்லத்தில் இரவைக் கழித்துவிட்டு, நாளைக்குக் காலையில் சிவாச்சாரியாரைச் சந்திக்கிறோம் ‘ – பார்ந்திபேந்திரன்

‘போகவேண்டாம், திண்ணையில் இருங்கள். தந்தையைச் சந்தித்துவிட்டே நீங்கள் போகலாம். ‘

‘இந்த நேரத்தில் வந்திருக்கக்கூடாது, ஏதோ ஓர் ஆர்வத்தில் புறப்பட்டு வந்துவிட்டோம். சிவாச்சாரியார் வர நேரமாகுமோ ? ‘. பேசும் பெருமாள் குரலில், இவர்கள் மீது அவளுக்கு நம்பிக்கை வேண்டுமென்கிற விண்ணப்பமிருந்தது.

‘தந்தை, இப்போதெல்லாம் இரவு நேரங்களில் அர்த்தஜாமப் பூஜைப்பணிகை¢கு மாத்திரமே குமர கோட்டத்திற்கு செல்வது வழக்கம். இராக்கால பூஜையை மற்ற அர்ச்சகர்கள் பார்த்துக்கொள்வார்கள். இன்றைக்கு என்னவோ புறப்பட்டுப் போயிருக்கிறார், வருகின்ற நேரந்தான் ‘

உள்ளேயிருந்து வந்த குழைவான வார்த்தைகள் தந்த பரவசத்தில் பார்த்திபேந்திரன், தன் தோழன் பேசும்பெருமாளுடன் காத்திருந்தான்.

/தொடரும்/

Na.Krishna@wanadoo.fr

Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா

நீலக்கடல் -(தொடர்)- அத்தியாயம் -46

This entry is part [part not set] of 51 in the series 20041118_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


படமுடியா தினித்துயரம் படமுடியாதரசே

பட்டதெலாம் போதுமிந்தப் பயந்தீர்த்திப் பொழுதென்

உடலுயிரா தியவெல்லாம் நீயெடுத்துக் கொண்டுன்

உடலுயிரா தியவெல்லாம் உவந்தெனக்கே யளிப்பாய்;

– வள்ளலார்

சூரியோதயத்திற்கு இன்னும் ஐந்து நாழிகை இருக்கலாமென வைத்தியர் சபாபாதிப்படையாட்சி அபிப்ராயப்படுகிறார். நிலவு, இன்னும் காய்ந்துகொண்டிருக்கிறது. நேற்று ராத்திரி சுக்கிலபட்ஷ ஏகாதசி. ஸ்ரீரங்கம் சுவாமியைத் தரிசனம் பண்ணாமல் திருச்சினாப்பள்ளிக்குள் நுழைந்தது அசுபமாக மனதை உறுத்திக்கொண்டிருக்கிறதென்று அங்கலாய்க்கிறார். திருச்சினாப்பள்ளி தெற்கே மதுரைக்கடுத்து பெரிய பட்டணம். கண்ணில்படுகின்ற படுகைகளில் வானத்தின் விழுதுகளைப்போலத் தென்னைகள். பரவிக்கிடக்கின்ற வாழைத் தோட்டங்களில், குலை குலையாய் வாழைத்தார்கள், என்னவோ, மிச்சமிருக்கும் வைகறை இருட்டில் பருத்துச் சரிந்த மார்புகளுடன் புறப்பட்டு வந்திருக்கும் ஆயிரக்கணக்கான பூதகிகளைப்போல. அறுவடைமுடிந்த நெற்கதிர்களின் அரிகிடை தங்கரேக்குகளையொத்துக் கற்றை கற்றையாய் வயல்களில் மின்னுகின்றன. மற்றொருபுறம் சேடை கூட்டப்பட்டு நடவுக்குத் தயாராகவிருந்த வயல்களின் முகத்தில் முதலிரவுக்குக் காத்திருக்கும் பெண்களின் பூரிப்பும், எதிர்பார்ப்பும். சமயபுரத்து ஆத்தாளின் நெஞ்சில் கிடக்கும் வைரஅட்டிகை மாதிரி வளைந்தும் நெளிந்தும், வைகாசிமாதமென்பதால் ஆர்ப்பாட்டமின்றியும், அமைதியாய் சலசலக்கும் காவிரி. வைகறையில், ஆற்றில் ஸ்நானம் செய்து, கடவுளைத் தியானித்து, பக்தி சிரத்தையுடன் புறப்படும் பார்ப்பனர்கள். ஏர்கலப்பைகள், உழவுமாடுகள், அரிவாள் சகிதம் எதிர்ப்படும் விவசாய குடிகள். காவிரி, மற்றுமொரு கங்கை, கரைமுழுக்கக் கற்பகச் சோலை.

இவ்வளவு ஐஸ்வர்யங்களிருந்தும், கடந்த சில வருடங்களாகத் திருச்சினாப்பள்ளி சோபையிழந்து கிடக்கிறது. ஆடலில்லை பாடலில்லை, உற்சவங்கள் இல்லை, ஊர்வலங்கள் இல்லை, கொடியேற்றங்களில்லை, கொண்டாட்டங்களில்லை. ஊரைக் கூட்டும் தேரில்லை, உற்சாகமாய் இழுத்துவரும் சப்பறங்களில்லை, ஆடிப்பெருக்கில்லை, ஆடை அலங்காரங்களில்லை, கூடிமகிழ்தலில்லை, குடும்பம் குடும்பமாய் கூடி கூட்டாஞ்சோறும், சித்திரான்னமும் தின்று பசியாறுதலில்லை. திருமலை நாயக்கரோடு எல்லாம் முடிந்தது. மதுரை மீனாட்சியம்மன் கோயில், இராமேசுவரம் கோயில், தில்லைக்கோயிலென்று திருப்பணிகளும், காஞ்சி ஏகாம்பரநாதர் கோபுரமும், மதுரை ஆயிரங்கால் மண்டபமும் கட்டியெழுப்பிய வம்சம், நாயக்கர்வம்சம். ஆனால் அவர்கள், தளவாய், பிரதானி, மண்டலேசுவரர், இராயசம், உள்ளூர் பாைளையகாரர்கள், கர்ணம், மணியக்காரர், தலையாரி என்கிற அதிகாரிகள் ஏணியில் அவரவர் விருப்பம்போல மக்கைளைச் சுரண்ட அனுமதித்ததுதான் அழிவாக முடிந்தது.

‘ ‘திருமலை நாயக்கனுக்குப் பின்னால் பதவிக்கு வந்த முத்துவீரப்பநாயக்கன் தந்தை திருமலைநாயக்கனைவிட வீரத்தில் சிறந்தவன். இவன் ஆட்சிக்காலத்தில் மொகலாயப் பேரரசராகவிருந்த ஒளரங்கசீப் தென்னாட்டு அரசுகளின் கீழ்ப்படிதலைவேண்டித் தமது காலணிகளில் ஒன்றினை ஒருயானை மீதேற்றிப் பவனிவரச் செய்து அவ்வணிக்கு அரசர் யாவரும் வணங்குதல்வேண்டும் என்று பணிக்க அதனை அவமதித்த முத்துவீரப்பன், எமக்கு ஒரு ஜோடி செருப்புகள் வேண்டியிருக்க ஒற்றைச் செருப்பை அனுப்பியிருக்கும் உம்மன்னன் அறிவிழந்தவனோ என்று கொக்கரித்து முகம்மதிய படைகளைக் சிதறடித்துக் கொன்றதாக கதைகள் உண்டு. ஆனால் இம்முத்துவீரப்பன் ஆடம்பரம் சிற்றின்பங்ககளில் தனது உடல் நலத்தினைத் தொலைத்து சீக்கிரமே காலமானான். அவன் மகன் விசயரங்க சொக்கநாதன், பதினாறுவயதில் பட்டத்திற்கு வந்தான். வீரத்தில் தகப்பனை ஒத்திருக்காமல் போனாலும், மற்றக் குணாதிசயங்களில் தகப்பனுக்கு நிகராகவே இருந்தான். பாட்டி மங்கம்மாளிடம் வளர்ந்த முத்துவீரப்ப நாயக்கன் மகன் மிகுந்த சமயப்பற்றுடையவன். கோவில்களுக்கும் பெருந்தொகையான பூசாரிகளுக்கும் ஏராளமான நன்மைகளைச் செய்தான். அரசாங்கத்தை மதுரையிலிருந்து திருச்சிராப்பள்ளிக்குக் கொண்டுசென்றான். இவன் தகப்பன்காலத்திய தளவாய் கஸ்தூரிரங்கையன், பிரதானி வேங்கடகிருஷ்ணையன் இருவரும், இவன் பலவீனத்தைப் புரிந்துகொண்டனர்.மக்களுக்குப் பல கொடுமைகள் செய்தனர். குடிமக்களை ஏய்த்துக் கொள்ளை அடித்தனர். விசயரங்கன் ஆட்சித்திறன் அற்றவன். அரசாங்ககஜானாவைக் காலிசெய்து கோயில்களுக்கும், பல்வேறு அறக்கட்டளைகளுக்கும் செலவிட்டதோடு, ஆடம்பர வாழ்விலும் ஈடுபட்டான். அவன் ஆட்சி முழுவதும் நாட்டில் கொலை, கொள்ளை மலிந்தன. மக்கள் ஆங்காங்கே கிளர்ச்சியில் ஈடுபட்டனர். கி.பி. 1710ல் இறையிலி நிலத்துக்கு வரி விதித்ததால் எதிர்ப்பைத் தெரிவித்து ஓர் உழவன் கோபுரத்திலிருந்து பாய்ந்து உயிர்விட்டான். 1732ல் விசயரங்க சொக்கநாதன் காலமானான்.* அவனை அடுத்து கி.பி.1732முதல் அவன் மனைவி மீனாட்சியே ஆட்சிப்பொறுப்புகளை மேற்கொண்டாள். இராணி மீனாட்சியோ சுவாதீனமான அரசியாகவே நாயகத்தை ஆண்டாள். இவள் காலத்தில் மதுரை நாயக்கராட்சி தன் வலிமையை முற்றிலுமிழந்துவிட்டது….பிறகு ஆற்காடு நவாப், மராத்தியர்களென்ற கொள்ளைக்கூட்டத்திடம் சிக்குண்டு, கர்நாடகத்தின் மற்ற ராசாங்கங்களைபோலவே, திருச்சினாப்பள்ளி சீரழிந்து கிடக்கிறது. ‘ நீண்டதொரு பிரசங்கத்தை வைத்தியர் சபாபதிப் படையாட்சி மாறனிடம் நடத்திமுடித்தார்.

காவிரிக் கரையொட்டி, ஒதுக்குப்புறமாக வண்டியை நிறுத்தச் செய்து இருவரும் இறங்கிக்கொண்டார்கள். மலஜலாதி முடித்து, பல்துலக்கி, ஆற்று நீரில் குளித்து முடித்தார்கள். வண்டிக்காரன் ஏர்க்காலை உயர்த்திப்பிடித்து மாடுகளை அணைத்து, நுகத்தடித் தும்பில் பூட்ட, வைத்தியர் சபாபதி படையாட்சியும், மாறனும் பிக்பக்கமாய் ஏறி அமர்ந்துகொண்டார்கள். நகரத்தின் குறுக்காகக்கடந்து மலைக்கோட்டைக்குப் பின்புறம் அடங்கியிருந்த, வீட்டின்முன் இறங்கிக் கொண்டார்கள்.

வாசல்நடையைக் கடக்க கூடத்தில் பெண்மணியொருத்தி கட்டிலில் நார்போலப் பிராண அவஸ்தையுடன் கிடக்கிறார். அந்தப் பெண்மணியைச் சுற்றிலும் ஆணும் பெண்ணுமாக, விசனத்துடன் அமர்ந்திருந்தார்கள். அந்தக்கும்பலில் வாணியும், குமுதவல்லியையும் பிரித்து அறியமுடிகிறது. படுத்திருக்கும் பெண்மணி அருகில், அழுதழுது முகம் சிவந்து, வெற்றிலைக் கொடிபோலத் துவண்டுகிடக்கும் இளநங்கை ஆர் ? ஒருவேளை அப்படியும் இருக்குமோ ? வாணியின் முகத்தை அப்படியே கொண்டுள்ளாளே ? இவள்தான் தெய்வானையோ ? என்றவண்ணம் யோசித்தவனாய், மாறன் வைத்தியர் சபாபதிபடையாட்சியைப் பின்தொடர்த்து சென்றான். இருவரையும் பார்த்தமாத்திரத்தில், உட்கார்ந்திருந்த மனிதர்களிடத்திலேயிருந்து பெரியமனிதர் ஒருவர் இவர்களை நோக்கி எழுந்து வருகிறார்.

‘வைத்தியர் சபாபதி வாங்கோ!.. நல்ல நேரத்தில் வந்து சேர்ந்தீர்கள். அந்த அம்மாள் சரீரம் மெத்தவும் மோசமாச்சுது. உள்ளூர் வைத்தியருக்கு ஆளனுப்பிபோட்டுக் காத்திருக்கிறோம். வைகாசி மாசத்திலே சூரியோதயத்தில் நாடிபார்க்கவேணுமில்லையா ? ‘ என்றவரைப் பின் தொடர்ந்து, வைத்தியர் சபாபதி படையாட்சியும் மாறனும், படுத்திருந்த பெண்மணியண்டை நெருங்கவும், அருகிலிருந்தவர்கள் விளங்கிக் கொண்டவர்களாய், தள்ளி நின்றனர்.

வைத்தியர், கட்டிலிற் கிடந்தவர் பெண்மணி என்பதால், அவரது இடது கையினைப் பிடித்து நாடி பார்த்தார். பார்த்தவர் முகத்திலே, துக்கரேகைகள். நெருக்கமாய் அமர்ந்திருந்த பெண்கள் உணர்ந்திருக்கவேணும், மெத்தவும் விசனப்பட்டுப்போனார்கள்

வைத்தியர் குறிப்பினை முகத்தால் உணர்ந்திருந்த நாயக்கர், ‘நீண்டதூரம் வில்வண்டியிற் பயணம் செய்த அலுப்பிருக்கும், வாருங்கள் உள்ளே போகலாம். ‘ எனவழைக்க, வைத்தியரும் அவரைத் தொடர்ந்து மாறனும் சென்றர்கள்.

‘இந்தப்பிள்ளை ? ‘

‘நமக்கு மிகவும் வேண்டியவன், பெயர் மாறன். ‘

‘அப்படியா ? இந்தப்பிள்ளையாண்டானை வைத்துக்கொண்டு… ? ‘

‘வீண் கவலைகள் வேணாம். நானதற்கு உத்தரவாதம். எப்போதும்போல நீர் எம்மை நம்பலாம். ‘ என்பதாக நாயக்கருக்கு வார்த்தைபாடு கொடுத்த வைத்தியர் மாறனிடம், ‘மாறன்!…இவர் சீனுவாசநாயக்கர். விசயரங்க சொக்கநாதனிடம் கணக்கராக இருந்தவர். பிரதானி வேங்கடகிருஷ்ணனின் தில்லுமுல்லுகள் அறிந்து, உத்தியோகத்தை உதறியவர். கையிற் தொழிலிருக்க, காமாட்சி அம்மாளுக்கு ஒத்தாசையாக, பிரெஞ்சுத் தீவுக்குப் புறப்பட்டுப் போனவர், நமது தேசத்துக்கு காமாட்சி அம்மாளுடன் திரும்பவும் வந்திருக்கிறார். ‘ என நாயக்கர்மீதான வசனங்களை இரத்தினச் சுருக்கமாக முடித்துக்கொண்டார்.

மூவரும் உட்கூடத்து அறையொன்றிற்கு வந்திருந்தார்கள். தரையில் போட்டிருந்த பாயில் அமர்ந்தார்கள்.

வைத்தியர், முதலில் அலுப்பு தீர்வதற்கு ஏதேனும் குடியுங்கள் என்றவர், ‘ ஆரங்கே, உள்ளே பத நீர் இருக்கிறது, வார்த்துக்கொண்டுவந்து கொடுங்கள் என அதிகாரமாய்ச் சொல்ல, பெண்ணொருத்தி இரண்டு குவளைகளில் பதநீர் கொண்டு வந்தாள். மாறனும், வைத்தியரும் குடித்து முடிக்கட்டும் என்று காத்திருந்து, சீனுவாச நாயக்கர் ஆரம்பித்தார்.

‘வைத்தியரே! நாடி என்ன பேசுது ? எதையும் ஒளிக்கவேணாம். சொல்லுங்கள். ‘

‘கண்ணும் பல்லுந்தான்கறுத்து கருதுமூச்சு வாய்திறந்து

உண்ணும் வயிற்றில் சேத்துமமுமோடி மிகவேதான் நடந்தால்

பண்ணும் மருந்துபலியாது பண்பாய் சுவாசமேல்வாங்கும்

மண்ணும் விண்ணுந் தானறிய மரணமாவார் கண்டாரே.

என்பதாக யூகிமாமுனிவர் பாடுவார். கண்ணும் பல்லும் கருமையாகி, மூச்சு மூக்கின் வழியாக அல்லாமல் வாய்வழியாக மேல்நோக்கி வாங்கி உந்தியில் சிலேத்துமம் மிகுந்தால் மரணம் நிச்சயம். பகலில், காலை ஆறுமணி முதல் பத்துமணிவரை வாத நாடியும், பத்துமணியிலிருந்து பகல் இரண்டு மணிவரை பித்த நாடியும், இரண்டுமணியிலிருந்து ஆறுமணிவரை சிலேத்தும நாடியும் பேசவேணும். அவ்வாறே இரவிலும் தொடரவேணும். அதாகப்பட்டது இரவு இரண்டுமணிமுதல் காலை ஆறு மணிவரை சிலேத்தும நாடி பேசவேணும். இதில் மாற்றமேற்படும் பட்சத்தில் மரணம் ஏற்படும். ஆக, ஒளிப்பதற்கென்ன இருக்கிறது. காமாட்சி அம்மாளுக்கு மரணம் நிச்சயம். ‘

‘உண்மைதான் கடவுளெத்தனத்திலாயேயன்றி மனிதரெத்தனத்தில் என்ன இருக்கிறது ? ‘

‘நாயக்கரே!.. அந்த அம்மாள் இப்படித் திடாரென்று நோய்வாய்ப்பட்ட முகாந்திரமென்ன ? ‘

‘ஒன்றா இரண்டா ? காரணங்களுக்குக் குறைவில்லையென்றுதான் சொல்லவேணும். கைலாசத்தினைப் பிரிந்ததால் நேர்ந்த வியாகூலம், பிறகந்தக் கைலாசம் அறியாமல், தேவயானியின் ஜனனஜாதகமெழுதிய ஓலை நறுக்கினை, பெர்னார் குளோதனென்கிற வெள்ைளைகாரனிடம் கொடுத்துவிட்டானே என்கிற வியாக்கூலம். இந்த வியாக்கூலத்தோடு நீண்டதூரம், கடற்பயணம் செய்ததால் ஏற்பட்ட உடற் பலவீனத்துடன், இங்கே வந்தபிறகு நடந்திருக்கிற சம்பவங்களேதும் தமக்கு உகந்ததாக இல்லையென்கிற கஸ்தியும் சேர்ந்துகொள்ள, அந்த அம்மாள் படுக்கையில் வீழ்ந்துபோனார். ‘

‘இங்கென்ன நடந்தது ? ‘

‘நாங்கள் பிராஞ்சுத்தீவு குவர்னர் லாபூர்தொனேயை இந்த விஷயத்தில் பெரிதும் நம்பியிருந்தோம். திருச்சினாப்பள்ளி நிர்வாகத்தை மராத்தியர்களிடமிருந்து மீட்டுவிடலாமென்று நம்பினோம். பிரெஞ்சுத் தீவு குவர்னர் லாபூர்தொனே, புதுச்சேரியில் பிரான்சுவாரெமியும், அவன் மூலமாக புதுச்சேரி குவர்னர் பெண்சாதி மதாம் ழான்ன் துப்ளெக்ஸும், தேவனாம்பட்டணத்தில் துரைத்தனம் பண்ணிக்கொண்டிருக்கும் மிஸியே மோன்சோனும்(M. Monson) உதவுவார்களென்றார். இவ்விடம் வந்தால் கடவுள் சித்தம் வேறாக இருக்கிறது. ‘சென்னைப்பட்டணத்தில் துரைத்தனம் பண்ணியவன் சீமைக்குப் புறப்பட்டுப்போக, புதிதாக மிசியே மோர்ஸ்(M.Morse) என்பவனை சென்னைக்கு நியமித்திருக்கிறார்கள். அவன் என்னடாவென்றால், தனக்கு துணையாக இன்னொருவர் வேணுமென்று, தேவனாம்பட்டணத்திலிருந்த மிஸியே மோன்சோனை சின்னத்துரைத்தனத்துக்கென்று நியமித்துகொண்டான். தேவனாம்பட்டனத்திற்குப் புதிதாக மிஸியே இந்த்(M.Hind) என்பவனை நியமித்துப்போட்டார்கள். புதுச்சேரி துரைசானியோ, எங்கே அதிகமாய் பணம் பவிசுகளை பார்க்கமுடியுமோ ? அவர்களிடத்திலே சோரம்போகிற சிறுக்கி. நவாப்புகள் புதுச்சேரிகுவர்னருக்கு, வண்டிவண்டியாய் வெகுமானங்களை அனுப்பிச்சுவைப்பது நாடறிந்த சங்கதி. அவர்கள் நாயக்கர்கள் ராச்சியத்தினை அபகரிப்பதென்று ராணிமீனாட்சி காலத்திலேயே தீர்மானித்தவர்கள். பங்காருதிருமலை கூலிகொடுத்து வைத்துக்கொண்ட சூன்யம். ராணி மீனாட்சியைப் அரசு பதவியிலிருந்து துரத்துவதற்கு, துலுக்கரிடம் உதவிகேட்டு, அவர்களைச் திருச்சினாப்பள்ளி சிம்மாசனத்தில் உட்காரவைத்ததும், பிற்பாடு அவர்களைத் துரத்த மராத்தியரை அழைத்து, அவர்களிடம் ராச்சியத்தைப் பறிகொடுத்துவிட்டு ஒழிந்துபோனதும் உலகமறிந்தது. இப்போதிந்த துலுக்கர், புதுச்சேரி குவர்னர் பெண்சாதிக்கு எப்படியான வேப்பிலை அடித்தார்களோ ? அவள் நமக்குச் சாதகமாக இல்லை. நவாப் ஆசப் ஜா என்பவன், திருச்சிராப்பள்ளி மராத்தியன் முராரிராயனுக்குப் பணமும், வெகுமதியுங்கொடுத்து ஆயக்கட்டிருக்கிறான். ஆகத் திருச்சினாப்பள்ளி கோட்டை மறுபடியும் துலுக்கர் வசமாச்சுது ‘. ‘#

‘…. ‘

‘இந்தப் பெண் தேவயானி என்னடாவென்றால், தான் இந்துதேசத்துக்குப் புறப்பட்டு வந்ததே, பெர்னார் குளோதனைக் காண்பதற்கென்றும், வேறு சாம்பிராச்சிய சுகங்களெதுவும் அனுபவிப்பதற்கில்லையென்றும் சாதிக்கிறாள். பெர்னார்குளோதனை கும்பெனி அரசாங்கம் சிறையில் வைத்ததையும் பின்னை அவனைத் தீவுக்குப் பயணப்படவைக்க காரைக்கால் பட்டணதிற்கு அனுப்பி வைத்துள்ளதையும் அறியவந்ததுமுதல், ‘என் தமையனும், எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து பழகிய சனங்களும் அங்கே தீவில் இருக்கச்சே நானொருத்தி இங்கிருந்து என்ன அனுபவிக்கப்போகிறேன். என்னைக் காரைக்கால் பட்டணத்திலே கொண்டு போய் சேர்த்திடுங்கோ, நான் பெர்னாரோடு பிராஞ்சுத் தீவுக்குப் போய்ச் சேருகிறேன் என்பதாய்ப் பிதற்ற ஆரம்பித்துவிட்டாள். நானும் அந்தபடிக்குச் சம்மதித்து அவளைக் காரைக்கால் கொண்டுபோய் சேர்ப்பதாக வார்த்தைப்பாடு கொடுத்திருக்கிறேன். எல்லாம் ஈசன் செயல். கடவுள் திட்டப்படி எல்லாம் நடக்கிறது. புதுச்சேரியிலிருந்து சேதிகள் உண்டா ? தளவாய் வெங்கிடாச்சாரியின் வேறு திட்டங்கள் வைத்துள்ளானா ? மதுரைநாயக்கர் அரசுரிமை விவகாரத்தினைக் காட்டிலும், தேவயானி வேறெந்தவகையில் அவனுக்குப் பாதகமாக இருக்கிறாளென்று நினைக்கிறான் ? அறியவேணும். வைத்தியரே!, இதுவரை உம்மிடமிருந்து பெற்ற சேதிகளை வைத்துப்பார்த்தால் சில நேரங்களில் அவன் தெய்வானை விஷயத்தில் ஏதோ பந்துமித்ர குணநலத்துடனும், சில நேரங்களில் சத்ருபோலவும் நடந்துகொள்கிறான். உண்மையில் அவன் யார் ? எம்மால், காரைக்காலுக்கு இந்தப் பெண்னைப் பத்திரமாகக் கொண்டு சேர்க்கமுடியுமா ? ‘

‘உண்மையில் தளவாய் வெங்கடாச்சாரி ஆர் ? எனக்கும் குழப்பமாகத்தான் இருக்கிறது. ராஜதந்திரங்கள் அறிந்த சாணக்கியனா ? அல்லது சித்தும் யோகமும் அறிந்த இருடியா ? ‘, வைத்தியர் தனது தரப்பில் கேள்விகளைக் கேட்டு நிறுத்தவும், குழப்பமான மனத்துடனே, அண்டையிலிருந்த, மாறன் இரண்டுபேரையும் பார்க்கிறான்.

‘இந்தப் பிள்ளைக்குக் கொஞ்சம் விஷயத்தைத் தெரிவிக்கவேணும்.. நேரம் வரும்போது எல்லாவற்றையும் விளக்கிச் சொல்வதாக ஏற்கனவே கூறியிருந்தேன். நீர் உத்தரவு கொடுத்தீரென்றால் சிலதைச் சுருக்கமாகவும் சிலதை விரிவாகவும் தெரிவித்துவிட்டு, உம்முடைய கேள்விக்கு வருகிறேன். ‘

‘ சரி சரி உமது இஷ்டப்படி சொல்லும் ‘, என நாயக்கர் உத்தரவிடவும், வைத்தியர் செருமிக்கொண்டு கூற ஆரம்பித்தார்.

‘மாறா.. நீ ஏற்கனவே விசயரங்க சொக்கநாதன் இறப்பிற்குப்பிறகு, ஏற்பட்ட அரசியல் குழப்பங்களை அறிவாய். மறந்திருந்தால் மீண்டும் ஞாபகப் படுத்துகிறேன். கணவன் இறந்தபிறகு மீனாட்சி தன்னை ராணியாக அறிவித்துப்போட்டு, ராச்சிய பரிபாலனம் பண்ணுகிறாள். பிள்ளை இல்லாதவள் தன் வாரிசாக திருமலை நாயக்கரின் இளைய சகோதரன் குமரமுத்துவின் பேரனும் பங்காரு திருமலையின் மைந்தனுமாகிய விசயகுமாரனை சுவீகரமெடுத்துக்கொண்டு அறிவிக்கிறாள். ஆனால் பங்காருதிருமலைக்கு, ராணி மீனாட்சிய நீக்கிப்போட்டு, ராச்சியத்தினைக் அபகரிக்க எண்ணியவன், தளவாய் வெங்கடாச்சார்யாவுடன் கூட்டு சேர்ந்துகொண்டான் ‘ என்பதுவரை நீ அறிவாய். இனி நீ அறியாத பிற தகவல்களுக்கு வருகிறேன். ராணி மீனாட்சிக்கு ஆதரவாக அவளது சகோதரன் வெங்கடபெருமாள் நாயக்கர் உதவிக்கு வருகிறான். திருச்சினாப்பள்ளிக்கோட்டையைக் கைப்பற்ற நினைத்த பங்காருதிருமலையின் ஆரம்ப முயற்சி தோல்வியென்றுதான் சொல்லவேணும். ஆனாலும், இவர்களுக்குள் ஏற்பட்ட குழப்பத்தினைப் பயன்படுத்திக்கொண்டு ஆற்காடு நவாப் தன் பிள்ளை சப்தர் அலியை, தனது மருமகன் சந்தாசாகிப் துணையுடன் மதுரை, தஞ்சை அரசுகளை, நவாப் அரசாங்கத்தின் ஆணைக்குட்ப்பட்டு வரிசெலுத்தவேணுமென்று நிர்பந்திக்க அனுப்பி வைக்கிறான். திருச்சிராப்பள்ளிக் கோட்டையை முற்றுகையிடவந்த சப்தர் அலியை பங்காருதிருமலை பணங்கொடுத்து தன்பக்கம் திருப்பியபோதிலும், சப்தர் அலி தந்திரமாக மீனாட்சியையும், பங்காருதிருமலையும் பிரித்தாள சதி செய்கிறான். இவன் எண்ணத்தை ஓரளவு ஊகித்த மீனாட்சி சப்தர் அலியின் தலையீட்டினைத் தவிர்க்கிறாள். பங்காருதிருமலைக்குச் சாதகமாக நடந்து கொள்ளுமாறு சந்தாசாகிப்பிற்குச் சொல்லிவிட்டு, சப்தர் அலி திருச்சினாப்பள்ளி விவகாரத்திலிருந்து ஒதுங்கிக் கொள்கிறான். ரானி மீனாட்சி தனது நலனுக்குச் சாதகாமாக சந்தா சாகிப் நடந்துகொள்வானென்றால் ஒருகோடி ரூபாயளிப்பதாக ஒப்பந்தம் செய்துகொள்ள அவனும் குரான் மீது சத்தியம் செய்துகொடுத்தத்தாகச் சொல்லப்டுகிறது. அதற்குப்பிறகு சரியான தகவல்கள் இல்லை. கிடைத்ததெல்லாம் வதந்திகள்தான். அதிலொன்று மீனாட்சி பங்காருதிருமலையுடன் சமாதானமாகி, அவரையும், விசயகுமாரனையும் சந்தாசாகிப்பிடமிருந்து காப்பாற்றவேணுமென்கிற உத்தேசத்துடன் மதுரைக்கு அனுப்பிவைத்ததாகச் சொல்கிறார்கள். ஆனால் .1736ம் வருடம் திரும்பவும் திருச்சினாபள்ளிக்கு படையெடுத்துவந்த சந்தா சாகிப் ராணிமீனாட்சி சத்ருக்கள் பயமின்றி இருக்கவேணுமென்றால், அவளது எதிரிகளை நிர்மூலம் செய்யவேணுமென்கிறான். பலவீனமான நிலையிலிருந்த ரானி மீனாட்சியும் சாந்தசாகிப்பின் செயற்பாடுகளுக்கு ஒத்துப் போகிறாள். ராணிக்கு ஆதரவான கோவிந்தையா, ராவணய்யா என்பவர்கள் தலைமையில் புறப்பட்ட எண்பதினாயிரம் வீரர்களைக் கொண்ட படையொன்று மிகச் சுலபமாய்த் திண்டுக்கல்லை கைப்பற்றிய பிறகு மதுரைமீது படையெடுத்துபோகிறது. திண்டுக்கல்லில் தோற்றிருந்த பங்காரு சில பாளையக்காரர்களைத் துணைக்குச் சேர்த்துக்கொண்டு எதிர்க்க அம்மைய நாயக்கனூரில் நடந்த சண்டையிலே, மீண்டும் பங்காரு தோற்று சிவகங்கையில் ராஜாவிடம் தஞ்சம் அடைகிறான். துலுக்கர் படை மதுரையையும் கைப்பற்றுகிறது. சந்தா சாகிப்பின் சூது பிறகு தெரியவருகிறது. மீனாட்சியின் எதிரிகளை வீழ்த்துவதாகப் புறப்பட்டவன், கடைசியில் திருச்சினாபள்ளியில், மீனாட்சியையும் சிறைவைக்கிறான். சிறையில் வாடிய மீனாட்சி விஷமருந்தி உயிரை மாய்த்துக்கொண்டதாகச் சொல்லிக்கொள்ளுகிறார்கள். மீனாட்சியின் முடிவு இவ்வாறிருக்க, மராத்தியர்களைப் பங்காருதிருமலை உதவிக்கு அழைக்க, அவர்கள் சந்தா சாகிப்பை சிறைபிடித்ததோடு, திருச்சினாப்பள்ளியையும் தங்கள் வசமாக்கிகொண்டார்கள். பங்காரு திருமலையும் அன்வாருதீன் என்பவனால் கொலைசெய்யப்பட்டபிறகு, அவனது மகனும், ரானி மீனாட்சியின் சுவீகார புத்திரனுமாகிய விசயகுமாரன் தன் தகப்பனைப்போலவே சிவகங்கைக்குத் தப்பி ஓடிவிட்டான். அவனும் அவன் வழிவந்தவர்களும் சிவகங்கையில் ஒளிந்து வாழவேணும். ‘ **

‘…. ‘

‘பிறகு இந்த தளவாய் வெங்கிடாச்சாரி விஷயத்திற்கு வருவோம். பங்காருதிருமலைக்குக் கூட்டாளியாகவிருந்த இந்த மனுஷர்மீது வெகுதினங்களாக எந்தத் கபுறுமில்லை. சிலபேர் அம்மையநாயக்கனூர் போரிலேயே மோசம்போனதாகச் சொன்னார்கள், மற்றபேர், சிவகங்கையில், பங்காரு திருமலையுடன் அஞ்ஞாதவாசம் செய்து இறந்துபோட்டாரெனச் சொல்வதாகவும் கேள்வி. நாயக்கர் விஜயரங்கசொக்கநாதருக்கு அரசியல் பாத்தியதை கொண்டாடுகின்ற பெண்மகவு இருப்பதை அறிந்திருந்த தளவாய் துவக்கத்திலிருந்து எதிர்த்துவந்ததும், பங்காருதிருமலைக்கும் அவனது குடும்பத்தாருக்கும் அவர் விசுவாசமாக இருந்ததும் நாங்கள் அறிந்தததுதான். ஆனாலும், சில வருடங்களாக அவர் சம்பந்தமான சங்கதிகள் எங்களுக்கு மர்மமாய் இருந்ததென்றே சொல்லவேணும். இப்படியானதொரு சமயத்திலே, நமது நாயக்கருடைய ஆட்கள் சிவகங்கையிலிருந்து சமுசயத்துக்குரிய துறவியொருவர் அடிக்கடி புதுச்சேரி பட்டணத்திற்கு வந்துபோகிறாரென்றும், அவரது கவனம் மதுரை திருச்சினாப்பள்ளி ராஜாங்கத்தின்மீது இருப்பதாகவும் சேதி சொல்ல, அதன்பேரிலே, நான் அந்தத் துறவியண்டைபோய், அவரது உள் மனுஷர்களின் ஒருவனாக, நமது நாயக்கர் உபாயத்தின்படி சேர்ந்துகொண்டேன். நாங்கள் எதிர்பார்த்தவண்ணம் அந்தத் துறவிக்கும், பிராஞ்சு தீவுக்கும் சேர்மானமிருந்ததை அறிந்தமாத்திரத்தில் எங்கள் சந்தேகம் ஊர்ஜிதமாச்சுது.

‘ஆக உங்கள் வர்த்தமானங்களின்படி, துறவி சொக்கேசன் என்பவர்தான் தளவாய் வெங்கிடாச்சாரியோ ? ‘-மாறன்

‘ஆமாம். உன் அநுமானத்தில் தவறில்லை. துறவி சொக்கேசனும், தளவாய் வெங்கிடாச்சாரியும் ஒருவரே. அவர், இன்னும் பங்காருதிருமலையின் மகன் விசயகுமாரனுக்கோ அல்லது அவன் வாரிசுதாரர்களுக்கோ பட்ஷமாக இருக்கவேணும்.. ஆனாலும் நாயக்கர் சொல்கின்றவண்ணம், அந்த மனுஷரிடம் தளவாய் வெங்கடாச்சாரி, துறவி சொக்கேசன் அல்லாமல் மூன்றாவதாய் ஒரு நபர் இருக்கிறான். அந்த நபருக்கு இந்தப்பெண் தேவயானிமீது ஏதோ ஒருவகையில் பிரீதி இருக்கின்றது. தேவயானிக்கு எதிராக காய்கள் நகர்த்தியது வாஸ்த்துவமென்றாலும், அவனது திட்டங்களெல்லாமே அவளது சரீரத்திற்கோ, உயிருக்கோ சேதமிருக்ககூடாது என்பதாவே இருந்திருக்கின்றன. ஆம், அவன் அடி மனதில் தேவயானிமீது ஒரு தினுசான விருப்பம் நீறுபூத்த நெருப்பாக இருந்ததென்பதை அறிந்திருக்கிறேன். ஏன் ? எதற்காக ? என்பதை அந்த எம்பெருமான்தான் அறிந்திருக்கவேணும் ‘.

வைத்தியர் சொல்லிமுடித்தபோது அம்மூவர் மனத்திலும் எழுந்தகேள்வி – தளவாய் வெங்கடாச்சாரியாகவும், துறவி சொக்கேசனாகவுமாக இருக்கின்ற அம்மனிதர் உண்மையில் ஆர் ?

/தொடரும்/

# ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு

* தமிழகம் -புதுவை வரலாறும் பண்பாடும் – முனைவர் சு. முல்லைவனம்

*.* History of the Nayaks of Madura – R. Sathyanatha aiyar

Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா

நீலக்கடல் -(தொடர்)- அத்தியாயம் – 37

This entry is part [part not set] of 45 in the series 20040916_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


….Les mouvements revolutionnaires ont toujours ete antipersonnalistes, c ‘est-a-dire reactionnaires, c ‘est-a-dire defavorables a la liberte de l ‘esprit, de la personne, des jugements personnels. Tout en etant diriges contre le despotisme et la tyrannie, les revolutions ont toujours abouti, a un certain moment qui etait un moment de deception, a la dictature et a la tyrannie, a la suppression de la liberte…

-Nicolas Berdiaeff, De l ‘esclavage et de la liberte de l ‘homme, 1939

போல் பிரபுவின் பண்ணை அளவுக்கதிகமான விபரீதத்தைச் சந்தித்த அடையாளமின்றிக் காரிருளில் மூழ்கிக் கிடக்கிறது. உயிர்தப்பிய பண்ணை அடிமைகள், தட்டி வாசலை அடைத்துவிட்டு, தூக்கமின்றி, நேற்றைய பயங்கரத்தை நினைத்தவண்ணம், உடல் நடுக்கத்துடன் விழித்தபடி இருக்கிறார்கள். தீ நாக்குகளுக்குத் தப்பிய, விளைந்தகரும்புகளின் சோலைகள் காற்றில் உரசிக்கொள்வதோ அல்லது கபானுக்குக்கு வெளியே ாட்டுப் பூனைகளின் நடமாட்டமோ இவர்களைத் தூக்கமில்லாமல் செய்துவிடுகிறது. பகலில் பண்ணை மேஸ்திரிகளுடைய சவுக்கடிகளின் உடற் தழும்புகளுக்குப் பழகியிருந்த அடிமைகள், இரவுகளில், மரூன்களின் மனதுகளில் ஏற்படுத்திய பயப்புண்களை ஆற்றும் வகைதெரியாது ஈயோட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

மனவியையும், பெண்ணையும் மிஸியே மதாம் தெலக்குருவா தங்கள் பண்ணைக்கு அழைத்துச் சென்றிருக்கிறர்கள். இவரையும்கூட அழைத்திருந்தார்கள். நாசூக்காக மறுத்துவிட்டார். இவருக்கு அமைதி வேண்டியிருந்தது.

நேற்றிரவு நடந்த சம்பவத்தைத் தனக்குச் சாதகமாகத் திசைதிருப்ப நினைத்து, செய்த முட்டாற் தனமான காரியங்களினால், தேவையின்றி தனது அடிமைகளக் கொல்ல நேர்ந்தது. புதுச்சேரியிலிருந்து கள்ளத்தனமாக ஆட்கள் கொண்டுவருவதில் இடி விழுந்திருக்கின்ற நேரத்தில் இப்படியான காரியங்கைளைச் செய்வதற்குமுன் தீர யோசிச்சிருக்கவேணும்.

தன்மகன் செய்த காரியத்திற்கு இந்திய நீக்ரோக்களான காத்தமுத்துவையும் கமலத்தையும் தண்டிப்பதாக நினைத்து, நடந்த சம்பவத்தைத் திரித்து மலபாரிகள் ஆப்ரிக்க இனத்தவரிடையேயான கலவரமாய் காட்டவேணுமெண்ணு நினைத்தது முட்டாள்தனம். Il ne faut pas tuer son chien pour une mauvaise annee…தம்பிரானிடம் கலந்து ஆலோசித்திருக்கலாம். அவன் மலபாரி என்று நினைத்து, ஆப்ரிக்கன் லூத்தரை வரச் செய்து, காட்டிலிருந்த நமது ஆட்களை விடுதலை செய்து அழைத்துவந்து, எனது அடிமைகளை வெட்டிப்போட நானே ஏற்பாடு செய்திருக்கக்கூடாது.

பண்ணை வீட்டிற்கு வெளியே நாற்காலி ஒன்றைப் போடச் செய்து, உட்கார்ந்திருந்தார். எதிரே சிறிய மேசையில், சாராயப் போத்தல் திறக்கப்பட்டு இருக்கிறது. அடிமைப் பெண் சமைத்திருந்த, இந்துக்கள் மசாலவில் பிரட்டிய பன்றிக்குடல், பக்கத் தீனிக்கென்று தட்டு நிறைய இருக்கிறது. ஏற்கனவே இரண்டு போத்தல்கள் உள்ளே இறங்கியிருந்தன. கொதித்துக்கொண்டிருக்கும் மனதிற்கு சாராயம் இதமாக இருக்கிறது. வயிறு பெருத்து இருந்தது. அருகிற் குனிந்துப் பார்த்தார். மூத்திரம் போவதற்கான சீனப் பீங்கான் குடுவை நிறைந்திருந்தது. இவர் செய்கையை அடிமைப் பெண்ணொருத்தி தூர இருந்து கவனித்திருக்கவேண்டும். ஓடோடிவந்தாள். நிறைந்திருந்த குடுவையை ஊற்றிவிட்டுவந்தவள், இவர் மூத்திரம் போவதற்கு ஒத்தாசை செய்தாள். அந்தரங்கத்தைத் துடைத்தபின் மீண்டும் இருட்டில் போய் நின்றுகொண்டாள். எசமானின் தேவைகளுக்காகக் காத்திருந்தாள்.

மேலே வெள்ைளை நிலாவை விரட்டிச் செல்வதுபோலக் கறுப்பு மேகங்கள். கோபம் வந்தது. கோபம் மேகத்தின் மீதல்ல அதன் கறுப்பு வண்ணத்தின் மீது. கறுப்பு நிறத்தின் மீதான துவேஷத்தினை சிறுவயதிலிருந்தே மனதிற் பதியமிட்டுப் பராமரித்து வந்ததில் அது வளர்ந்து விருட்ஷமாகி இருக்கிறது. இன்றைக்கு அதனை வீழ்த்த ஆயிரம் கோடலிகளாலும் முடியாது. பால்ய வயதில் கறுப்புப் பூனை ஒன்றினை ஆணி சுத்தியல் சகிதம், சிலுவையில் அறைந்து, அது துடிதுடித்து மரணமடந்ததை வெகுநேரம் காத்திருந்து போல்பிரபு ரசித்திருக்கிறார்.

நேற்று நடந்த சம்பவங்கள் எளிதாய் மறந்து விடக்கூடியதல்ல. அநியாயமாகத் தம் மகனைக் கறுப்புநாய்கள் கடித்து குதறுமெனக் கற்பனை செய்து பார்த்ததில்லை. இவர் மட்டும் கொஞ்சம் முந்திகொண்டிருந்தால் மகனைக் காப்பாற்றி இருக்கமுடியும். மலபாரிகளை உடனே தண்டிக்க அவருக்கு விருப்பமில்லை. அவர்கள் உடல்களிலிலிருந்து கடைசித் துளி ரத்தம் சொட்டும்வரை பொறுமையோடிருந்து, ஆர்வமாய் முடிந்த இடத்திலெல்லாம் ஆயுதபிரயோகங்கள் செய்து, செய்வித்து மகிழ்ந்தார். அதுபோலவே, கமலத்தோடு வேண்டும்போதெல்லாம் சித்திரவதைசெய்து உறவு கொண்டு ஆனந்தித்ததைக் காட்டிலும், அடிமைகளை அவள் உடல் மீது நேற்று பிரயோகபடுத்தியதால் கிடைத்த சந்தோஷம் அதிகமென்றுதான் சொல்லவேணும். கடல் வாழ்க்கையில், சக மத்தலோக்களுடன் வைத்திருந்த ஓரினச் சேர்க்கை இச்சை ஞாபகத்திற்குவர, அவசரமாய் தூக்கிலிடுவதற்கு முன்னால் காத்தமுத்துவை கபளீகரம் செய்தார். ம்…இல்லை, அப்படியும் .உள்ளிருக்கும் மிருகக் குணம் அடங்கவில்லை, உறுமிக்கொண்டிருக்கிறது. கும்பெனி அதிகாரம் கைவசம் இருக்கும் பட்சத்தில், தீவிலுள்ள அத்தனை கறுப்பு மனிதர்களையும் சுலபமாய்க்கொன்று போடலாம் என்ற எண்ணம் வரத்தான் செய்கிறது..

வழக்கம்போல மகள் பிரிஜித் இவருடன் சண்டை பிடித்தாள். உண்மையில் என்ன நடந்திருக்குமென்பது தனக்குத் தெரியும் என்று வாதிட்டாள். இவரது பதில் அவளுக்குத் திருப்திகரமாக இல்லை. பண்ணை பிரபுக்கள் அனைவரும், ஈவிரக்கமற்ற மனிதர்களென்றால், தன் தந்தையும், சகோதரனும் மிகவும் கொடியவர்கள் என்றும், அவர்களுக்கு பாவ விமோசனம் இல்லையென்றும், நரகமே காத்திருப்பதாகவும், சபித்திருந்தாள். அவளுக்கு வழக்கம்போல கறுப்பின மக்கள்மீது தேவையற்ற கரிசனம். அவளுடையக் கண்களும், சற்றே பழுப்பு கலந்த உடலும், நடையும், பல வருடங்களாக பண்ணையில் அடிமையாகவிருந்த மொசாம்பிக் கறுப்பன் ஒருவனை ஞாபகப்படுத்த, தன் பெண்ஜாதியைத் தொடுவதற்கு தைரியமின்றி, சம்பந்தப்பட்ட கறுப்பனை, இப்படித்தான் ஓர் இரவு குடித்து ஓய்ந்தபின், காத்தமுத்துவைக் கொல்வதற்கு உபயோகித்த உத்திகளையும் ஆயுதங்களையும் பயன்படுத்தியிருக்கிறார். மகளானவள், பிரெஞ்சுத்தீவில் இனி இருக்கப்போவதில்லையென்றும், பிரான்சு தேசத்துக்குத் தன் தாயாருடன் திரும்பவிருப்பதாகவும் கூச்சலிடும்வேளை, தெலக்குருவா குடும்பத்தினர் வந்திருந்து அவளைச் சமாதானம் செய்கின்ற வகையில் அழைத்துச் சென்றார்கள்.

எதிரேயிருந்த மேசையில் போத்தல் முடிந்திருந்தது. சாராயத்தை முச்சூடும் குடித்திருந்தார். வயிறும் உடலும் எரிந்தன. வயிற்றின் தேவையைப் பன்றிக்குடலைத் தின்று முடித்துக்கொண்டார். திணவெடுத்திருந்த உடலுக்கு அடிமைப் பெண்களின் முரட்டு உடல்கள் தேவைப்பட்டன.

‘யாரங்கே ? ‘

‘மிஸியே.. ‘

‘இரண்டு அடிமைப்பெண்களை என்னறைக்கு அழைத்துபோ! ‘

‘உத்தரவு ஐயா.. ‘

அடுத்து சில நாழிகைகளில், மற்றொரு அடிமையின் துணையுடன், மதுவின் போதையில் தள்ளாடியபடி கட்டிலை நெருங்கினார். அடிமைப்பெண்கள், மெழுகு திரியின் வெளிச்சத்தில், இரூட்டிற் பிடித்த சிலைகளாக நின்று கொண்டிருக்கிறார்கள். அழைத்துவந்த அடிமையை அவ்விடம் விட்டு நீங்குமாறு சைகை செய்கிறார். பணிவாய்க் குனிந்து வெளியேறுகிறான்.

இவரைப் பார்த்தமாத்திரத்தில், பகல்முழுக்க உழைத்திருந்த களைப்பில் சோர்ந்திருந்த பெண்களிருவரும், அனிச்சையாய்த் தங்கள் ஆடைகளைக் களைந்து, நிர்வாணமாக நின்றார்கள். அப்பெண்களிடம் இவர் எதிர்பார்க்கின்ற கிளர்ச்சியூட்டும்வாடை. அவ்வாடையின் ஈர்ப்பில், மனதிலேற்பட்ட விட்டில் பூச்சியின் மயக்கத்துடன், அருகிலிருந்த பெண்ணை நெருங்கினார். கர்பத்தின்காரணமாக, குயவன் சூளையில் அப்போதுதான் சுட்டெடுத்த கரும்பானையையை ஒத்து, மின்னிய கன்னங்களும், புடைத்திருந்த முலைகளும் இவரது உடலைச் சங்கடப்படுத்தின. கறுப்பு வண்ணத்தின் மீதான கசப்பு ஒளிந்துகொண்டது, அவளை இழுத்து அணைத்துகொண்டார். இவரது தொந்தியும், அவளது வீங்கிய வயிறும் அதிகமான நெருக்கத்தைத் தவிர்த்தன. அப்பெண்ணிடமிருந்து, ஆழமாக வெளிப்பட்ட பெருமூச்சு இவர் மார்பில் உஷ்ணமாகப் பரவியது. அம்மூச்சிலிருந்த தாகத்தை உணர்ந்தவராய், அவளது தடித்த உதடுகளில், சாராய மூச்சுடனானப் தனது பற்களைப் பதித்தார். வலி பொறுக்கமாட்டாமல் விலகிக்கொண்டாள். இமைகளை மூடியிருந்தாள், மென்மையாக முனகல்களை வெளிப்படுத்தினாள். அவளது கைகள், நாடகத் தனத்தோடு இவரை இறுக்கிக்கொள்ள காரணமிருக்கிறது. அடுத்து சில நாட்களுக்கு பண்ணையில் இவர்களுக்கு மக்காச் சோளமோ, மரவள்ளிக்கிழங்கு மாவோ கூடுதலாக வழங்கப்படும். இவர் நீட்டும் சுட்டுவிரல் அசைவைப் புரிந்தவளாய், இன்னொருத்தி தற்காலிகமாக கிடைத்த தகுதியை நழுவவிடாமல் அவசரமாய் கட்டிலில் ஏறி கால்களைப் பரப்பித் தன் முறைக்காகக் காத்திருக்கிறாள். மீண்டும் நின்றிருந்தவளிடம் விட்ட இடத்திலிருந்து தொடர்வதுபோல நடந்துகொள்கிறார். சிறிது நேரம் தலைமுதல் கால்கள் வரை அவதானித்தவர், கண்ணிமைக்கும் நேரத்தில், அணிந்திருந்த இரவு ஆடையை களைந்துவிட்டு முழு நிர்வாணத்துடன் அவள் எதிரே கபகபவென்று சிரிக்கிறார். அப்பெண்மணியைத் தம் கால்களுக்கிடையில் அவசரப்படுத்துகிறார்..

சுவரிலிருந்த நிலைக்கடிகாரம் பதினோருமுறை அடித்து ஓய்ந்திருந்தது. பிரபு விழித்துக்கொண்டார். அடிமைப் பெண்கள் இருவரையும் காணவில்லை. காவலர்கள் அவர்களை எழுப்பி அழைத்துச் சென்றிருக்கவேண்டும். உடலில் அயற்சியிருக்க, ஒண்ணுக்குப் போகவேணும்போல இருந்தது. கீழே இருந்த குடுவையை எடுத்துப் போனார். வயிற்றிலிருந்த சுமை குறைந்தது. காற்றில் ஜன்னல்கள் மூடுவதும் திறப்பதுமாக இருந்தன. குளிர்ந்த காற்றும், தொடர்ந்து மழைச்சாரலும் உள்ளே விழுந்தன. அவசரமாய் எழுந்திருந்து ஜன்னற் கதவுகளைச் சாத்துகிறார். இவரைச் சாத்தவிடாமல் வெளியிலிருந்து கைகள் நீண்டு வருகின்ற கைகள் தடுக்கின்றன. ஆளுக்கொரு கையுடன் அங்கே நிற்பது, காத்தமுத்துவும், கமலமும், மூன்றாவதாய் நீலவேணியும்.. நோ(ன்), ழெ நெ க்ருவா பா.. பொய்., வீண்கற்பனை.. என்று சமாதனப்படுத்திக்கொண்டவராய்க் கட்டிலில் விழுந்தார். வேர்த்தது.

‘கிறிஸ்தோஃபெர் கொண்டெண்ட்(Christopher Condent)* … ‘

‘சே..கீ..(C ‘est qui – யாரு) ?

‘என்னைத் தெரியவில்லை ?… ‘

‘கீ யே துய், கொமான் துய் சே மோன் நோ(ம்) (Qui est tu ? Comment tu sais mon nom -யார் நீ எம்பேரு உனக்கெப்படித் தெரியும்) ? ‘

‘எம்பேரு மதுரை, இந்திய மத்தலோ(Matelot -sailor). இருபத்தைந்து வருடத்துக்கு முன்னால அட்லாண்டிக் கடலில் என்ன நடந்ததுண்ணு ஞாபகமிருக்கா ? ‘ -குரலுக்குடைவன் மெல்லப் போல்பிரபுவை நோக்கி நடந்து வருகிறான். இருட்டு, மனித பிம்பத்தைத் துப்பிவிட்டு ஒதுங்கிக் கொள்கிறது.

‘நீ..நீ…. அனாக்கோ அல்லவா ?. தம்பிரானிடம் எடுபிடியாக இருந்தவன் தானே ? ‘

‘நான் அனாக்கோ இல்லை. மதுரை. எனக்கும் உனக்குமுள்ள இருபத்தைத்து ஆண்டுகாலக் கணக்கைத் தீர்க்க வந்திருக்கேன். ‘

‘நான் நம்ப மாட்டேன். மதுரையை என் கைகளாற் கொன்றிருக்கிறேன். நீ தம்பிரானிடம் இருந்தவன். உனக்கும் மதுரைக்கும் கொஞ்சம் உருவ ஒற்றுமை இருப்பதை வைத்து என்னை மிரட்டுகிறாய். தம்பிரானோடு உன்னை முதன்முறை பார்த்தபோது சந்தேகித்தது வாஸ்த்துவம். ஆனால் நீ அவனில்லை..தம்பிரான் அனுப்பினாரா ? ‘

‘கொண்டெண்ட்.. இனியும் என்னால் காத்திருக்கமுடியாது. இருபத்தைந்து ஆண்டுகளாக உன் ஈரலுக்காக பசியோடிருக்கிறேனடா.. அசையாமல் படுத்தாயானால், அதிக வதையின்றி, இரத்தசேதமில்லாமல் எடுத்துக்கொள்வேன். தம்பிரான் கபானிலிருந்து இதற்காக மசாலா கொண்டுவந்திருக்கிறேன். ‘

‘என்னைப் பயமுறுத்தாதே.. இதற்கெல்லாம் அச்சப்படுபவனல்ல நான். உண்மையைச் சொல், நீ யார் ? ‘

‘எந்த உண்மையை ? உங்களோடு மத்தலோவாக பணியிலிருந்த என்னை மற்றக் கடற்கொள்ளைக்காரர்களுடன் சேர்ந்துகொண்டு ஒவ்வொரு நாளும், நான் கறுப்பன் என்பதால், சாட்டையால் அடித்தும், காலால் உதைத்தும், இரும்புமுட் கூண்டில் வாரக்கணக்கிற் பூட்டிவைத்தும் பட்டினி போட்டுச் சித்திரவதை செய்த உண்மையைச் சொல்லவா ? அட்லாண்டிக் பெருங்கடலில் பயணம் செய்யும்போது, ஒரு நாள் வதைகளைத் தாங்கமாட்டாமல், கப்பலில் இருந்த வெடி மருந்துக் கிடங்கிற்குத் தீ வைக்கப்போகிறேன் என்று நான் மிரட்டவும், பேடியைப்போல என் பின்புறமிருந்து சுட்டதும் அல்லாமல் வெறிகொண்ட மிருகத்தைப்போல மார்பினைக் கிழித்து, இதயத்தையும் ஈரலையும் பறித்து, வேகவைத்துத் தின்றாயாமே அந்த உண்மையைச் சொல்லவா ?

‘…! ‘

அல்லது இரண்டு ஆண்டுகள், இந்தியக் கடலோரங்களிலும், செங்கடலிலும் கடற்கொள்ளைக்காரனாக ஆட்டம்போட்டுவிட்டு, பூர்போன் குவர்னரைப் பணத்தால் மயக்கி, அவர் மைத்துனியை மணந்து, பிரெஞ்சு அரசாங்கத்தின் பொது மன்னிப்பைப் பெற்ற கதையைச் சொல்லவா ? அல்லது பிரான்சு தேசத்துக்கு மீண்டு, பிராத் (Pirate)தாகத் திரிந்த கிறிஸ்தோபர் கொண்டெண்ட்* என்கின்ற இரத்தவெறிபிடித்த ஓநாய், இன்றைக்குப் பிரெஞ்சுத் தீவில், போல்அஞ்ஞெல் பிரபு என்கின்ற அந்தஸ்துடன் வலம் வருகின்ற உண்மையைச் சொல்லவா ? இவற்றுள் எந்த உண்மையைச் சொல்ல ?

‘நீ… ‘

‘மிருகத்தைப்போல வேட்டையாடித் தின்றாயே, அந்த மலபாரி இந்தியன், மதுரை என்பவனின் புத்திரன். நீ நினைப்பது போல, தம்பிரானிடம் இதுநாள்வரை சேவகம் செய்து, உன் உயிரை வாங்கக் காத்திருந்த அனாக்கோ என்பதும் உண்மைதான். உன்னோடு கடற்கொள்ளை நடத்தியவனும், உன்னுடைய சதியால் மரூன் முத்திரை குத்தப்பட்டு மடகாஸ்கருக்கும், மொரீஸியஸ் தீவுக்குமாக தற்போது அலைந்து கொண்டிருக்கும் இங்கிலாந்து (Englaand), என்பவன் உன்னைபற்றிய முழு உண்மைகளையும் தெரிவித்துப்போட்டான். ‘

‘அனாக்கோ நான் சொல்வதைக் கேட்டாயானால், உணக்கு வேண்டிய பணமும், மடகாஸ்கருக்குத் தப்பிச் செல்வதற்கான ஏற்பாட்டினையும் செய்வேன் ‘

‘பைத்தியக்காரா!. என் தந்தையைக் கொன்ற கொடூரத்தின் சங்கதி அறிந்தநாள் முதல், இந்தப் பிச்சுவாவைத் தீட்டிப் பதம் பார்த்துவைத்திருக்கிறேன். நேற்று அப்பாவி காத்தமுத்துவையும், கமலத்தையும் கொன்றதற்கு நீ குவர்னரிடமும், மலபாரிகளிடமும் கூறிய பொய் காரணங்களைக் கேட்டுமென் ஆத்திரம் கூடியிருக்கிறது. பாதகா! நேற்று உன் பண்ணையில் ஈவிரக்கமின்றி அடிமைகளை வெட்டிப்போட்டதும், காட்டிற் பதுக்கிவைத்திருந்த ஆட்கள்தானே ? இனியும் உன்னை உயிரோடு விட்டுவைத்திருப்பது ஆபத்து. ‘

‘ ஏய் கிட்டே நெருங்காதே, என் ஆட்கள் சுற்றிலும் இருக்கின்றார்கள். .. ‘

‘கூப்பிடேன்! சொல்லப்போனால், அவர்கள் வெளியே என் அழைப்பிற்காகக் காத்திருக்கிறார்கள்… ‘ அனாக்கோ கையைத் தட்டுகிறான்.

ஒன்று, இரண்டு, மூன்று நான்கு பேர். நான்கு அடிமைகள் வரிசையாக வந்து நின்றார்கள். போல்பிரபுவிடம், உதைபட்டும், சாட்டை அடிகள் வாங்கியும், சேவகம் செய்பவர்கள். இவருக்காக மரூன்களை ஆயுதங்களுடன் விரட்டி ஓடுபவர்கள். வேட்டையின் போது புதர்களைக் கலைத்து காட்டுக்கோழிகளைத் துரத்துபவர்கள், சுடப்பட்டக் காட்டுப் பன்றியின் வாய்க்கும் குதத்திற்குமாக, முளைசீவிய மூங்கிற் கழியைச் செருகித் தூக்கிவருபவர்கள். இவர் மலசலம் கழித்தால் சுத்தம் செய்பவர்கள், பயமற்று எதிரே நிற்கின்றார்கள். சிரிக்கிறார்கள். நடக்கவிருக்கும் விபரீதத்தை உண்ர்ந்தமாத்திரத்தில், முதுகுத் தண்டில் சில்லென்ற உணர்ச்சி, உடல் முழுக்க எறும்புகள் ஊர்கின்றன. ஓடுவதற்கு முயற்சி செய்தவர், முடியாமற்போக அப்படியே உட்கார்ந்துகொள்கிறார். ஒருவன் அவர் கையைத் தொட்டு இழுக்கிறான். ஒருவன் அவர் சிவந்த உடலை ஆங்காங்கே கிள்ளிப்பார்க்கிறான். மற்றொருவன் ஓங்கி அறைகிறான். நான்காமவன் தனது முழு பலத்தையும் உபயோகித்து இவரது கால்களுகிடையில் எட்டி உதைக்கிறான்.

போல் பிரபு பைத்தியம் பிடித்தவர்போல தலையை இருகைகளுக்கிடையில் இறக்கிக்கொண்டு வலமும் இடமுமாக ஓடுகிறார். இருவர் பிடித்துக்கொள்ள, ஓர் அடிமை அங்கு நிரம்பிக்கிடக்கும் மூத்திரக் குடுவையை அவரது வாயில் சாய்க்கிறான். மூத்திரம் பிரபுவின் வாயில் நிரம்பி வழிகிறது. அடிமைகள் ஒதுங்கிக் கொள்ள, அனோக்கா, கண்கள் முழுக்கக் கொலைவெறியுடன், பிச்சுவாவை உயர்த்திய வேகத்தில் பிரபுவின் மார்பிற் செருகி வெளியே இழுத்தான்..

/தொடரும்/

*Piractical History of Madagascar, Author: Chris Rule

Na.Krishna@wanadoo.fr

Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா

நீலக்கடல் -(தொடர்)- அத்தியாயம் – 32

This entry is part [part not set] of 50 in the series 20040812_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


L ‘homme n ‘a point de port, le temps n ‘a point de rive:

Il coule, et nous passons

– Alphonse de Lamartine

நேற்றுராத்திரி போல்பிரபுவின் பண்ணையிலிருந்து வந்திருந்த ஆள் அருணாசலத்தம்பிரானை, காலங்காத்தாலே பண்ணைக்கு வரவேண்டுமென்று சேதி தெரிவித்திருந்தான். தம்பிரானுக்கு, போல்அஞ்ஞெலிடம் உள்ள நெருக்கத்தினை தீவிலுள்ள மற்றவர்கள் அறிந்திருப்பார்களா என்பது சந்தேகமே. இருவரும் தங்கள் முறையற்ற நடவடிக்கைகளுக்காகக் கள்ளத்தனமாகக் காட்டில் சந்திக்கும் வழக்கமேயன்றி, ஒருவர் மற்றவர் ஜாகைக்குச் செல்வதைத் தவிர்த்தே வந்திருக்கிறார்கள். மோரீஸ் குவர்னர் லாபூர்தொனே, போல்அஞ்ஞெலுக்கு உறவினன் என்பதும், குவர்னரின் சொந்த ஊரான பிரான்சு நாட்டின் சென்மாலோப் பிரதேசத்தைச் சேர்ந்தவன் என்பதும், பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கும்பெனியின் சட்டத்திட்டங்களிலிருந்துக் தன்னைக் காப்பாற்றிவிடாது என்பதனைப் போல்பிரபு அறிந்தே இருந்தான். உண்மை தெரியவரின் குவர்னர் உட்பட எல்லோருக்குமே பாதகமாக முடியும் என்பதும் உள்ளங்கை நெல்லிக்கனி.

காலை ஆகாரமாக நீராகாரம் எடுத்துக்கொண்டு, கிழக்கில் சூரியன் உதிப்பதற்கு முன்னால் அருணாசலத் தம்பிரான் பாம்ப்ள்மூஸ் புறப்பட்டிருந்தார். அவர் நடந்துசெல்ல, அவரது நடைக்கு ஈடுசெய்ய முடியாமல் கறுப்பன் அனாக்கோவும், காத்தமுத்துவும் நடப்பதும், ஓடுவதுமாக இருக்கிறார்கள். முடிந்த இடங்களில் தம்பிரானுக்கு வலம் இடமாகவும், முடியாதவிடங்களில் அவருக்குப் பின்னாலேயும் போய்க்கொண்டிருந்தார்கள். தீவீல் பாம்ப்ள்மூஸுக்கு வண்டிகள் செல்வதற்காக சாலையொன்று வடிவமைக்கபட்டு, உபயோகத்திலிருக்கிறது. தம்பிரான் அந்தச் சாலையினை எச்சரிக்கையாகத் தவிர்த்துவிட்டு, தீவிலிருக்கும் பூர்வீகக்குடிகளின் உபயோகத்திலிருந்த காட்டுவழியைத் தேர்வு செய்திருந்தார். சூரியனுதித்த சில நாழிகைகளுக்குப் பிறகும் இவர்கள் தேர்ந்தெடுத்த வழியானது இருள்மண்டிக் கிடக்கின்றது. மேற்கு திசைக்காய், இந்து மகாசமுத்திரத்தின் இரைச்சல். உடலிற் போர்த்தியிருந்த துண்டையும் மீறி, நடுங்க வைக்கும் குளிர். காடுவாழ் உயிரினங்கள் விழித்துக்கொள்ள ஆரம்பித்துவிட்டன என்பதற்கு அடையாளமாக இவர்களோடு பயணிக்கின்ற நானாவித ஓசைகள். செடிகொடிகளை ஒதுக்கிக்கொண்டும், சிலவேளைகளில் தாழ்ந்த மரங்களின் கிளைகளில் இடித்துக்கொண்டும் முன்னேற வேண்டியிருக்கின்றது. எலுமிச்சைகள் நதித் (River Citrons) திசைக்காய் நடந்து கொண்டிருந்தார்கள்.

காத்தமுத்துவை அழைத்துப்போவது, புள்ளைப்பூச்சியை மடியிற் மடியில் கட்டிக்கொண்டு போவதுபோல. மிஸியே தெலாகுருவாவின் பண்ணையிலேயிருந்து சில கிழமைகளுக்கு முன்னாலே தப்பியிருக்கிறான். பொதுவாகப் பண்ணைகளிற் தப்புகின்ற கறுப்பின மனிதர்கள், மற்ற அடிமைகளை வெட்டிப்போட்டும், பண்ணையிலுள்ள தட்டுமுட்டுச் சாமான்களை அழும்பு செய்தும் ஓடிப்போவார்கள். அவ்வாறான காரியமேதும் காத்தமுத்து செய்தவனில்லை, எனினும், அவனுக்கு மரூன் முத்திரை குத்தப்பட்டிருப்பதாகக் கும்பெனி தண்டோரா மூலம் அறிவிக்கலாச்சுது. பிடிபட்டால் அவன் மாத்திரமின்றி அவனுக்கு உதவியவர்களையும் கைகள் கால்களைப் பிணைத்து இருண்ட கிட்டங்கியில் போடுமாறு உத்தரவாகியிருக்கின்றது. முதன் முதாலாகக் குற்றம் செய்தவன் என்கிற வகையில் காத்தமுத்துக்கு உயிர்ச் சேதமெதுவும் ஏற்படப்போவதில்லை. பிடிபட்டானெனில் இருகாதுகளையும் அறுத்துப்போட்டுக் கிட்டங்கியில் போடுவார்கள். மிஸியே தெலக்குருவா பண்ணையில் அவனது அடிமை ஒப்பந்தக்காலம் நீட்டிக்கப்படும். காத்தமுத்துக்குத் துணைபோனவர்கள் என்கின்றவகையில் தம்பிரானையும் கிட்டங்கியில் போட்டுவிடுவார்கள். சூரியஒளி புகாத கிட்டங்கிக் கைதிகளைக் குறித்து தீவில் உலவும் கதைகளுக்குக் குறைவில்லை. அதற்குப் பிறகு சீவன், சிறையிலேயேகூடப் போய்ச் சேரலாம். போல்அஞ்ஞெல் சுலபமாய்த் தப்பித்துவிடுவான். இதுவரை பறங்கியர்களைக் கைது செய்ததாகவோ தண்டனை வழங்கியதாகவோ தீவில் எவரும் பேசக்கேட்டதில்லை. இந்தமாதிரியான நேரத்திலே, காத்தமுத்துவை உடன் அழைத்துப் போவது, வேலியில் கிடக்கும் ஓணானைக் கோவணத்தில் முடிந்து செல்கின்ற கதையன்றி வேறென்ன ?.. ஆகக் காட்டில் ஆபத்து, விலங்குகளால் மாத்திரமின்றி மனிதர்களாலும் நேர்வதற்கு சாத்தியங்கள் இருந்தன. குளிர்ந்த காற்றிற்கு நடுங்காத உடல், இந்த எண்ணம் மனதிலுதித்த மாத்திரத்தில் நடுங்குகிறது.

கறுப்பன் அனாக்கோ பலவாறாக யோசித்துக்கொண்டுவந்தான். முன்னே நடந்துகொண்டிருக்கிற தம்பிரானைப் பாம்பென்றும் கொள்ள முடியவில்லை, பழுதையென்றும் நெருங்கமுடியவில்லை. அவனுக்குப் போல் அஞ்ஞெலிடம், தனது தகப்பனுக்காக நேர் செய்து கொள்ளவேண்டிய கணக்கொன்று உள்ளது. அந்தக் கணக்கின் பொருட்டு, போல் அஞ்ஞெலை மாத்திரம் கொன்றால் போதாது. அவனது குடும்பம் முச்சூடையும் பழிதீர்த்துக்கொள்ளவேணும். அவர்களின் மார்பைக்கிழித்து உள்ளிருப்பதைப் புசிக்கவேணும், இரத்தம் குடிக்கவேணும். வெறி, வெறி, பொறுமையாகக் காத்திருக்கிறான். அதற்கான காலம் கனிந்துகொண்டிருக்கிறது. கூடிய சீக்கிரம் தம்பிரான் மூலம் நிறைவேறப்போகிறது. அதுவரை பொறுக்கவேண்டும். பதட்டங்கூடாது. பதினோரு வருஷங்களாக, இவனது தகப்பனின் சினேகிதன் சொன்ன வர்த்தமானத்தை அடைகாத்து வைத்திருக்கிறான். போல் அஞ்ஞெலை நெருங்குவதற்குச் சமயம் பார்த்திருந்தான். ஒரு லஸ்கர்மூலம் தம்பிரானுக்கும், போல் அஞ்ஞெலுக்கும் உள்ள நெருக்கத்தை அறிந்து முன்னவரிடம் தந்திரமாக ஒட்டிக்கொண்டான்.

தம்பிரான் விந்தையான மனிதராக இருக்கிறார். ஒருபுறம் மலபாரிகளிடத்தில் மரியாதைக்குரியவராக இருந்துகொண்டு அம்மக்களின் பூசை புனஸ்காரங்களை முன்னின்று நடத்துகிறார். மற்றொருபுறம் அயோக்கியன் போல்அஞ்ஞெலின் கூட்டாளியாக இருந்துகொண்டு, புறம்பான காரியங்களில் ஈடுபடுகிறார். கடந்த சிலமாதங்களாக இவரது நடவடிக்கைகளைத் தெரிந்திருப்பதால், அதிசயமான ஆளென்று சத்தியம்பண்ண முடியும். விரைவாக நடப்பதும், பாதையில் ஓடுவதும் ஆச்சரியமான விஷயம். அவ்வாறான சமயங்களில் சொப்பனம் கண்ட மனிதர்களைப்போலப் பிதற்றுகிறார். பிதற்றலில் தேவயானி என்கின்ற சொல்லை அதிகமாக உதிர்க்கிறார். மாரணம், தம்பனம், வூடு போன்ற கறுப்பினமக்களின் அச்சமூட்டும் கலைகள் தெரிந்திருக்குமோவென சந்தேகம் இவனுக்கு உண்டு. சில நாட்களில் இரவு வெகுநேரம் தனிமையில் உட்கார்ந்து பூசைகள் செய்வதைப் பார்த்திருக்கிறான். பூசை செய்யும் தம்பிரானிடம் நரம்புகளும் எலும்புகளும் புடைத்து நிற்கின்றன. உடல் நீலம் பாரிக்கின்றது. மார்பின் ஏற்ற இறக்கமும், ஒட்டிய விலாவும், இறுகிய முகமும், மின்னுகின்ற கண்களும் பசியோடு அலையும் காட்டுவிலங்கினை நினைப்பூட்டுகிறது. பூசைமுடித்துப் பிரசாதமென்று, மார்பில் அடித்துததும் மாயமாக வரும், விபூதியையும் கற்கண்டினையும் எடுத்துக் கொடுக்கிறார். விழித்தெழும்போது, இதுகளைக்குறித்த பிரக்ஞையற்ற மனிதராக, வழக்கம்போல சாதுவான தம்பிரானாக மாறிப்போகிறார்.

காத்தமுத்து மனதில் பெரிதாக எண்ணமேதுமில்லை. அவன் என்றைக்கு தீவுக்கு கப்பலில் வந்து இறங்கினானோ, அன்றைக்கே தனது சீவனைத் தொலைத்திருந்தான். புதிதாகத் தொலைப்பதற்கு ஒன்றுமில்லை. கப்பலில் வந்ததும், தீவில் இறக்கப் பட்டதும், ஒரு வண்டியில் அடைத்து ராவோடு ராவாக ஒரு பண்ணையில் இவனைக் கொண்டுபோய் விட்டதும், அங்கே புதுச்சேரியில் இவனது கிராமமான உடையார்பண்ணை உழவுமாடுகளைக் காட்டிலும் கேவலமாய்க் கண்ட வாழ்க்கையும், அங்கிருந்து தப்பி ஓடியதும் இவன் தீர்மானம் பண்ணியதல்ல. கொஞ்சகாலமாய் சுதந்திரமாகச் சுவாசிக்கிறான், பசிவந்தால் சாப்பிடுகிறான், அசதியாகவிருந்தால் நித்திரை கொள்கிறான். இந்தச் சுதந்திரத்தினை புதுச்சேயில் உடையார் பண்ணையிற் கண்டதில்லை. தம்பிரான் தயவால் எல்லாம் சுபம்.

தம்பிரான், கறுப்பன் அனாக்கோ, காத்தமுத்து மூவருமாக பாம்ப்ளுமூஸ் போய்ச் சேர்ந்தபோது காலமே மணி எட்டாகியிருந்தது. மிஸியே போல்அஞ்ஞெல், அவரது பெண்ஜாதி மதாம்அஞ்ஞெல், மகன் பிரான்ஸிஸ்அஞ்ஞெல், மகள் மத்மசல் பிரிஜித்அஞ்ஞெல், அவர்கள் செல்லப்பிராணி நாய் சகிதம், காலை உணவை முடிக்கின்ற நேரத்திலே, பண்ணைக் காவலன் ஒருவன் அஞ்ஞெல் குடும்பத்தினர்முன் தம்பிரானையும் மற்றவர்களையும் கொண்டுபோய் நிறுத்தினான்.

‘வாருங்கோ தம்பிபிரான்! சொன்னபடி வந்துள்ளீர்கள், சந்தோஷம். ‘ என்ற போல்பிரபு காவலனிடம், ‘இவர்களை அழைத்துக் கொண்டு கபினேக்குப் போங்கள், சில நாழிகைகளில் வருகிறேன். ‘ -என்பதாக உத்தரவு பிறப்பித்தான்.

அழைத்துவந்த காவலன் மூவரையும் கபினேக்கு அழைத்துச் சென்றான். தம்பிரானுக்கு மாத்திரம் ஒரு நாற்காலி போடப்பட்டது. மற்ற இருவரும் நின்றுகொண்டார்கள்.

சிறிது நேரத்தில், போல் அஞ்ஞெல் அங்கே வந்து சேர்ந்தான். வந்தவனுக்கு, தம்பிரான் இரண்டாவது முறையாக எழுந்து கைக்கூப்பினார். போல்பிரபு உட்காருமாறு கையசைத்தான். சிறிது நேரம் அங்கே மெளனம் நிலவியது. தம்பிரான் தொண்டையைச் செருமிக்கொண்டு சம்பாஷனையை ஆரம்பித்தார்.

‘துரை என்னை அவசரமாய் வரசொன்னதின் முகாந்திரமென்ன ? அவ்விடத்தில் ஏதாவது துர்ப்பாக்கியமான சம்பவங்கள் நடந்திருக்குமோ ? ‘

‘மிஸியே தம்பிரான்! அப்படித்தான் சொல்லவேணும். மொக்காவுக்கு வந்துகொண்டிருந்த நெப்த்யூன் (Neptune)கப்பலை, சில அவசர தேவைகள் நிமித்தம், கடலிலேயே தடுத்து நிறுத்தி, நமக்காக கடத்திவரப்பட்ட ஆட்களை மீட்குமாறு எமது ஆட்களிடம் சொல்லியிருந்தேன். அவர்களும் ஐந்தாறு கப்பல்களுடனே அதனைச் சுற்றியிருக்கின்றார்கள். கப்பலில் கப்பித்தேன் மிஸியே தெ பொக்காழ்(M. de Bocage). இவனோடு கப்பலில் இருந்த, மிசியேக்கள் கூர்பெசார்த்ரூ (M.Courbezartre), தெஃபிரெஸ்ன் (M. Desfresnes) ஆகியோர் நமது அனுகூல சத்ருக்கள் என்பதாலே, எண்ணப்படி யாவும் நடக்குமென்று திட்டம் செய்திருந்தேன். ஆனால் நடந்தது வேறுவிதம். கப்பலில் வந்தவர்கள், பீரங்கிகளையும் துப்பாக்கிகளையும் நமது ஆட்கள் மீது பிரயோகம் செய்திருக்கிறார்கள். அதிஷ்டவசமாக இவர்கள் அதனைச் சமாளித்திருக்கிறார்கள். கப்பித்தேன் கொஞ்சம் முரண்டு பிடித்திருக்கிறான். அவனை வெட்டி இருக்கிறார்கள். நடந்ததைக் கண்ட மிஸியே கூர்பெஸாத்ரு தண்ணியிலே குதிக்க முயற்சிபண்ணியிருக்கிறான். நமது ஆட்களில் சிலர் விபரந்தெரியாமல், அவனை விட்டால் ஆபத்தென்று, கண்டந்துண்டமாய் வெட்டிப்போட்டார்கள். கப்பலிலிருந்த வேறு சில மத்தலோக்களையும் நமது ஆட்கள் காயபடுத்திப்போட்டு, கப்பலில் கடத்தப்பட்ட ஆட்களை மீட்கறச்சே, நமது போறாதகாலம் அவ்வழியாக வந்த போர்ச்சுகீசியர்களின் கண்ணில் படலாச்சுது. அவர்கள் அதிகப்படியானப் பீரங்கிகளுடன் நமது ஆட்கள்மீது தாக்குதல் நடந்த, இவர்கள் தப்பித்து ஓடவேண்டியதாகிவிட்டது. அதற்கு பிறகு நெப்த்யூன்* கப்பலை, போர்ச்சுக்கீசியர்கள் கொண்டுபோயுள்ளதாகச் சொல்கின்றார்கள். ‘

‘ஈஸ்வரா.. இதென்ன இப்படி ஆச்சுது. நெப்த்யூன் கப்பலில் கடத்தப்பட்டிருந்த, மனிதர்கள் என்னவானார்கள் ‘

‘ஆவது என்ன ? அவர்கள் தற்சமயம் போர்ச்சுக்கீசியர்வசம் உள்ளார்கள். பிரெஞ்சு தேசத்து கப்பல் என்று தெரியவந்தவுடன் புதுச்சேரி கும்பெனியிடம் அவர்கள் முறையாக ஒப்புவிக்கக் கடிதம் எழுதக்கூடும். சரக்குகளுக்குச் சேதமில்லை என்பதால், கும்பெனிக்கு நடந்து முடிந்த விவகாரத்தால் பெரிதாக நட்டமேதுமில்லை. ஆனால் கப்பலில் இருக்கும் கடத்தல் மனிதர்கள் விவகாரத்தை கும்பெனி அறியவந்தால் நமக்கு ஆபத்து. ‘

‘ஏன் ? ‘

‘இப்போது நெப்த்யூன் கப்பலில் ஏற்றிக் கொண்டுவரப்பட்டிருக்கும் மனிதர்கள் மாத்திரம் நமக்கு நட்டமல்ல. இனி புதுச்சேரியிலிருந்து சிலவருடங்களுக்கு இம்மாதிரியான விவகாரங்களை நம்மால் செய்யமுடியாது என்பதும் ஒரு வகையில் நட்டம்ந்தானே ?. ‘

‘…. ‘

‘தவிர, இந்த ஆட்கடத்தல் ரகசியத்தைப் புதுச்சேரிக் கும்பெனி நிருவாகம் அறியும் பட்ஷத்தில், எல்லோருக்குமே ஆபத்து. இனி இந்த விவகாரத்தினை புதுச்சேரியிலிருக்கும் என் உறவினன் பிரான்சுவாரெமி எப்படிக் கையாளுகிறான் என்பதைப் பொறுத்தே எனது எதிர்காலம் இருக்கிறது. குவர்னருக்கும் இதுவிபரமாகக் கடிதாசி அனுப்பியிருக்கிறேன். ‘

‘பிரபு.. உம்மனதிலுள்ள வியாகூலங்கள் தெரியாமல் இல்லை. இதுபோன்ற காலத்திற்றான், மனத்தைத் திடமுடன் வைத்திருக்கவேண்டும். தலைக்குமேலே வெள்ளம் வந்திருக்கிறது. அது சாண் போனாலென்ன ? முழம் போனாலென்ன ? முடிந்தமட்டும் மூச்சைப் பிடித்து சீவிதமாயிருப்போம். தேவரீருக்கு கர்த்தர் அனுக்கிரகம் எப்போதும் உண்டு என்பது அறிந்ததுதானே. ‘

‘என்னவோ நீர்ச் சுலபமாய் சமாதானம் சொல்லுகிறீர். லூர்து மாதாவிடம் திரு யாத்திரை வருகிறேன் என்பதாய் நேர்ந்துகொண்டேன். இந்த இக்கட்டிலிருந்து மாதாதான் என்னைக் காபந்துசெய்யவேணும். மனிதர்கள் பிரயாசையால் ஏதும் நடப்பதில்லை. ‘

‘பிரபு..நன்றாய்ச் சொன்னீர்கள். தைரியமாக இருவுங்கள். வேறு சேதிகள் கிடைக்குமென்றால் தவறாமல் தெரிவியுங்கள். ‘

‘எங்கே புறப்பட்டு விட்டார்கள். மதியம் போஜனம் பண்ணிவிட்டுப் போகலாம். எங்கள் வில்லாவில் மலபாரி ஒருத்தி இருக்கிறாள். உங்கள் ஊர், உணவினைச் சுவையாகச் சமைக்கிறாள். எம்மனைவி மக்கள் அவளுடைய கைப்பக்குவத்திற்கு அடிமை என்றுதான் சொல்லவேணும். பிரெஞ்சு உணவுப்பதார்த்தங்களில், உங்கள் ஊர் மசாலாக்களைக் கலந்து அவள் சமைப்பதை சாப்பிடுவதற்கென்றே, அடிக்கடி விருந்தினர்கள் வந்து விடுகின்றார்கள். ‘

‘பிரபு.. தங்கள் உபசாரத்திற்கு மிக்க வந்தனம். ஆனால் விருந்து சாப்பிடுவதற்கு இது நேரமல்லவே ? ‘

‘தம்பிரான். நாங்கள் துன்பம் நேருங்கால் சோர்ந்துபோகும் மனிதர்களல்ல. அதை அப்போதே மறந்துபோனேன். ‘

‘ம் .. எங்கள் ஊர் பூங்குன்றனார்:

….

வாழ்தல்

இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்

இன்னாது என்றலும் இலமே,

….

என்று பாடியிருக்கிறார். ‘வாழ்தல் இன்பமானது என்று யாம் மகிழ்ந்ததும் இல்லை. வெறுப்பால், வாழ்க்கை துன்பமானது என்று ஒதுங்கியதும் இல்லை. ‘ என்பதாகப் பொருள். ‘

‘கேட்க நன்றாக இருக்கிறது. இன்னும் இரண்டுமணிநேரத்திலே மதிய போஜனம் ஏற்பாடு செய்கிறேன். நீங்கள் சைவம்தானே ? ‘

‘ஆமாம்..! ‘

போல்அஞ்ஞெல் தனது மேசையிலிருந்த சிறிய மணியை ஆட்ட, கறுப்பன் ஒறுவன் சல்யூட் அடித்துவிட்டு நின்றான்.

‘மிஸியே. ‘.

‘ஃபேத் ஆந்த்ரே மதாம் கமலா (திருமதி கமலாவை அனுப்பிவை) ‘

‘உய் மிஸியே.. மீண்டும் சல்யூட் அடித்துவிட்டு அகன்றான்.

சிறிது நேரத்தில் ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி அங்குவந்து நின்றாள்.

‘மதாம் கமலா, தம்பிரானுக்கு, அரிசிச் சோறு, வெந்தயக்குழம்பு, மிளகுதண்ணிர், பிரண்டைத் துகையல் தயார் செய்துவிடு. எல்லோரும் சாப்பிடலாம். என்மகன் பிரான்சிஸ்சுக்கு மட்டும் தனியாகச் சமைத்துவிடு. உங்கள் மசாலாக்களைக் கண்டால் காததூரம் ஓடுகிறான். மகள் பிரிஜித் அப்படியல்ல. காரத்தை எங்களுக்கு குறைத்துப் போட மறந்திடாதே ?என்ன புரிந்ததா ? ‘

அப்பெண்மணி தலையாட்டினாள். அமைதியாக அவ்விடம்விட்டு நீங்கிச் சென்றாள்.

‘என்ன பேசமாட்டாளா ?, ஊமையா ? ‘

‘அவள் நமது தீவுக்கு தனது இளவயது மகளோடு வந்திருக்கிறாள். கிடங்கில் தாயும் மகளும் பிரிந்திருக்கிறார்கள். ஒப்பந்தக் கூலிகளை அழைத்துப்போகவந்தவர்கள் அன்றைய ராத்திரி இவளை மாத்திரம் பண்ணைக்கு அழைத்துவந்திருக்கிறார்கள். வழியில் தன் மகளைக் காணாது இவள் போட்டக்கூச்சலை, வண்டியோட்டிகள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இங்கே வந்த புதிதில், கொஞ்ச காலம் பித்துப்பிடித்தாற்போல இருந்தாள். பிறகு ஏதோ தீர்மானம் செய்ததுபோல பேசாமல் இருக்கிறாள். இடுகின்ற வேலைகளை மறுப்பின்றி ஒழுங்காக செய்து கொண்டிருக்கிறாள். எங்களுக்கு வேறென்ன வேண்டும் ? அடிமைகள் வாய் திறந்தாற்றான் ஆபத்து. ‘

போல்பிரபு, ஏதோ பகடியைக் கூறியதுபோல கடகடவென்று சிரித்தான். கேட்டுக்கொண்டிருந்த காத்தமுத்து தலை நிமிர்ந்து அந்தப் பெண்மணியைப் பார்த்தான். இவனுடன் புதுச்சேரியிலிருந்து தீவுவரைப் பயணப்பட்டப் பெண்மணி. ஆச்சரியமாகவிருந்தது, அவளை தான் மறுபடியும் சந்திக்க நேருமென நினைத்ததில்லை.

மதியத்துக்குமேலே தம்பிரான், போல்பிரபுவிடம் சொல்லிக்கொண்டுப் புறப்பட்டார்.

‘தம்பிரான் அந்த மரூனை இங்கேயே விட்டுவிட்டுப் போங்கள். நான் பார்த்துக்கொள்கிரேன் இங்கே வில்லாவில் போதிய ஆட்கள் இல்லாமல் தவித்துக்கொண்ருக்கிறோம். ‘

காத்தமுத்துக்கு அதைக்கேட்க இரண்டுவிதத்தில் சந்தோஷமாக இருந்தது. முதலாவதாக தனது தேகத்திற்குஞ் சரி, ஆயுளுக்குஞ் சரி இப்போதைக்குச் சேதமில்லை என்பது. தான் மரூன் என்கின்ற படியாலே போல்பிரபு, தன்னுடைய வில்லாவுக்குள்ளேயே கட்டாயமாக இவனை வைத்திருக்கவேணும். போல் பிரவுடைய வில்லாவில் பணிபுரிகின்ற பெண்மணியை இரண்டாவது முறையாகச் சந்திக்கவிருப்பது அடுத்த சந்தோஷம். விதி வேறாகத் தீர்மானித்திருக்கிறது என்பதை அப்போது அவன் உணர்ந்திருக்கவில்லை.

பின்னேரம் நான்குமணி அளவில் பாம்ள்மூஸ் – போர் லூயி சாலையில் தம்பிரானும், கறுப்பன் அனாக்கோவும், மொக்காவுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்கள். சாலையில் ஒரு காக்காய் குருவி கூட இல்லை. எப்போதாவது ஒரு சில குதிரைகளும், கட்டைவண்டிகளும் எதிரே வந்தன. ஒரு சில கறுப்பர்கள் தங்கள் எசமானர்களை தோளிற் சுமந்துகொண்டு ஓடுகிறார்கள். என்ன செய்வது ? எல்லா இடங்களையுமா சாலைகள் இணைக்கின்றன. காட்டு வழிக்கும், சிதறிக்கிடக்கும் மலைகளில் ஏறி இறங்கவும் மனிதவாகனங்களைத்தான் சில பிரபுக்கள் பெரிதும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.காத்தமுத்துவை, போல் பிரபு வில்லாவிலேயே விட்டுவிட்டுப் புறப்பட்டிருந்தது, தம்பிரானுக்குச் சற்று நிம்மதியாக இருந்தது. அவனால் உடனடி ஆபத்துகள் ஏதுமில்லை.

போல் வில்லாவில் கண்ட பெண்மணியை இதற்குமுன் எங்கோ பார்த்ததாக ஞாபகம். தம்பிரானும், அனோக்காவும் எலுமிச்சை நதியை கடந்து போர்லூயிக்கு இரண்டு கல் இருக்கும்போது, அங்கிருந்த மலை அடிவாரத்தில் சுனைக்கருகில், பாறையின்மீது ஆணும் பெண்ணுமாக இருவர். பார்த்தமாத்திரத்தில் அவர்கள் இளம் வயதுத் தமிழர்கள் என்பதற்கான அடையாளங்கள் தெரிகின்றன. ஆச்சரியமாக இருந்தது. தீவில் பூர்விகக் குடிகளின் இளம்பிராயத்தினரை, ஆணும் பெண்ணுமாகச் சேர்த்து கண்டிருக்கிறார். தமிழர்களை இப்படியானச் சூழ் நிலையில் சந்தித்ததில்லை. கைலாசமும், தெய்வானையும் அண்ணன் தங்கைகள் என்ற வகையில் ஆட்ஷேபம் எதுவும் சொல்ல முடியாது. கைலாசம், கிறேயோல் இனத்துப்பெண் சில்வியுடன் சேர்ந்து சுற்றுவதினாலும் தமிழருக்கு இழுக்கேதும் வந்துவிடாதென நினைத்தார். நெருங்கிச் சென்று பார்த்துவிடுவதெனத் தீர்மானித்தார். காதலர்கள் இருவரும் அமர்ந்திருந்த பாறையின் பின்புறம் நின்றார்.

‘யாரங்கே ? ‘ தம்பிரான் குரல் கேட்டு, இருவரும், அதிர்ச்சியுடன் எழுந்து நின்றார்கள்.

‘நீ பொன்னப்பஆசாரிதானே. உனக்குத் துறை முகத்தில்தானே வேலை. இங்கே என்ன செய்கிறாய் ? அட.. இந்தப் பெண் நீலவேணி அல்லவோ. நமது சீனுவாச நாயக்கரின் வளர்ப்புமகள் ஆயிற்றே ? ‘

காதலர் இருவரும், தம்பிரான்மேலுள்ள மரியாதை நிமித்தம் அமைதியாக இருந்தார்கள்.

‘இப்படியெல்லாம் நடப்பது முறையா ? நான் நாய்க்கரிடம் பேசுகிறேன். அவளுக்கு கழுத்தில் ஒரு தாலியைக்கட்டிவிட்டு காடு மேடென்று இழுத்துக்கொண்டு அலை. யார் வேண்டாமென்கிறது. பெண்ணே! நீ உடனே புறபட்டாகணும். ‘

தம்பிரான் வார்த்தையில் இருந்த நியாயத்தை ஏற்று லஸ்கர் பொன்னப்பஆசாரி துறைமுகத் திசைக்காய் நடந்தான். நீலவேணி குனிந்ததலை நிமிராமல் போர் லூயியில் மலபாரிகளின் குடியிருப்பு பகுதிக்காய்ச் சென்றாள். தம்பிரான், காத்திருந்த அனாக்கோவை அழைத்துக்கொண்டு மொக்கா (Moka) திசைநோக்கி தென் கிழக்காக நடந்தார். நீலவேணி கொஞ்சம் துடுக்கானபெண். ஆனால் அவள் பொன்னப்ப ஆசாரியிடம் மையல் கொண்டிருப்பது ஆச்சரியம். அவள் முகம்.. அடடா புதிருக்கு விடை கிடைத்துவிட்டது.. போல்பிரபு வீட்டிற் கண்ட பெண்மணியின் மகளா இவள். கடவுள்தான் எம்மாதிரியான லீலைகளை நடத்துகிறான். நாளைக்காலமே போர்லூயிக்குச் சென்று இந்தச்சேதியை நீலவேணியின் வளர்ப்புத் தந்தையான நாயக்கர் காதில்போடவேண்டும், அவர் மெத்தவே சந்தோஷப் படுவார், என்று நினைத்தார்.

நீலவேணி போர்லூயி திசையில் தனித்துப் போய்க்கொண்டிருப்பது தெரிந்தது. அப்போது அவர் பின்பக்கத்திலிருந்து ஒரு குதிரை அவள் போகும் திசைக்காய் பாய்ந்தோடுவதைக் கவனித்தார். குதிரையிலிருப்பவன் போல்பிரபு மகனாக இருக்கவேண்டும்.. இவன் இதுவரை, பொன்னப்ப ஆசாரியும் நீலவேணியும் இருந்த பாறையருகேதான் ஒளிந்து இருந்திருக்கவேண்டும். எதற்காக அந்தப் பெண்போகும் திசையில் குதிரையை விரட்டிக்கொண்டு போகிறான். குவர்னரிடம் ஏதவது அலுவல் இருக்கலாமென்று தன் மனதைச் சமாதானப்படுத்திக்கொண்டார். மொக்காவின் திசைக்காய் நடந்தார். அவருக்குப் பின்னே அனோக்கா ஓடினான்.

தம்பிரான்; -அன்றைக்குமாத்திரம் – போல்பிரபுவுடைய மகன் குதிரையின் பின்னே, அனாக்கோவை அழைத்துக்கொண்டு ஓடிப்போய்ப் பார்த்திருந்தால், அடுத்த நாள் தீவீல் நடக்கவிருந்த மிகப்பெரிய விபரீதத்தைத் தடுத்திருக்கமுடியும்.

/தொடரும்/

* ஆனந்தரங்கப் பிள்ளை நாட்குறிப்பு – தொகுதி -1

Na.Krishna@wanadoo.fr

Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா

நீலக்கடல் -(தொடர்) அத்தியாயம் 21

This entry is part [part not set] of 54 in the series 20040527_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்

பல்விருக மாகி பறவையாய்ப் பாம்பாகிக்

கல்லாய் மனிதராய்… … … ..

செல்லா அநின்றஇத் தாவர சங்கமத்துள்

எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்

-சிவபுராணம் 26 -31

இருபதாம் நூற்றாண்டு….

புதுடில்லி ‘, ஏப்ரல் 17 1999 -வாஜ்பாய் தலைமையிலான அரசு மக்களவையில் நடத்தபட்ட

நம்பிக்கை வாக்கெடுப்பில் ஒரே ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. வாஜ்பாய்

அரசு மீது நம்பிக்கை தெரிவித்து 269 எம்பிக்களும் எதிர்ப்பு தெரிவித்து 270 எம்.பிக்களும்

ஓட்டளித்தனர். இதனால் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் பரதிய ஜனதா அரசு கவிழ்ந்தது.

13வது மக்களவை தேர்தலுக்குப் பிறகு, மத்தியில் பாரதிய ஜனதா தலைமையிலான

கூட்டணி அரசு கடந்த ஆண்டு (1998) மார்ச் மாதம் பதவி ஏற்றது. 13 மாதங்கள்

ஆன நிலையில் பிரதமர் வாஜ்பாய் அரசுக்கு அளித்துவந்த ஆதரவை 18 எம்.பி.க்களைக்

கொண்ட அ.தி.மு.க. விலக்கிக் கொண்டது. இந்திய ஜனநாயக வரலாற்றில் ஒர் அரசு

ஒரு ஓட்டு வித்தியாசத்தில் நம்பிக்கை ஓட்டெடுப்பில் தோல்வி அடைந்தது இதுவே முதல்

முறையாகும். மேலும் கடந்த 8 ஆண்டுகளில் மக்களவையில் நடந்த 7வது நம்பிக்கை

வாக்கெடுப்பு ஆகும். ‘

‘மணி! என்ன இந்த நேரத்துல இப்படி சத்தம்போட்டுப் பேப்பர் படிக்கிற ? ஏதாவது முக்கியமான செய்தியா ? வேலுவந்தா எங்கிட்ட உடனே சொல்லணும். மறந்திடாதே. உள்ளே, பெரியவர் சம்பந்தத்தோட பேசிக்கொண்டிருக்கிறேன். அரை மணி நேரத்துலே முடிஞ்சிடும். ‘

‘சரி மிஸியே. அப்படியே இண்ணைக்கு என்னையும் கொஞ்சம் சீக்கிரம் அனுப்பிடுங்க ‘.

‘என்ன ? இன்றைக்கும் சினிமாவா ? உருப்படமாட்டே ‘ செல்லமாக அவனை கண்டித்துவிட்டு, பெர்னார் ஃபோந்தேன், இந்தியவியல் மையமிருக்கும், பகுதிக்கு மீண்டும் திரும்பினான்.

கடந்த இருவாரங்களாக பிரெஞ்சு இந்தியவியல் (Indology) கூடத்திலேயே இரவு பகலாக அவன் இருக்கவேண்டிய நிர்ப்பந்தம். நித்திரையும் இல்லை. அதனைத் தொடர்ந்த கனவுகளும் இல்லை. பிரெஞ்சு இன்ஸ்டிட்ட்யூட்டின் இயக்குனரும் பேராசிரியருமான கிரிமால் எழுதியுள்ள பவபூதியின் மாலதிமாதவம் வியாக்கியானம் விரைவில் வெளிவர இருக்கிறது. அதுசம்பந்தமாகத்தான், பெர்னார் இந்தியவியல் மையத்தின் முக்கிய ஆய்வாளர்களோடு விவாதித்துக் கொண்டிருக்கிறான்.

பெர்னார்ருடைய ஆர்வம், சமகாலத் தமிழ்ப் படைப்புலகைப் பற்றியது. தமிழிலுள்ள சிறந்த புதுக்கவிதைகளை பிரெஞ்சில் மொழிபெயர்த்துக் கொண்டுபோகணும் என்கிற ஆர்வம். பிறகு சில கிழமைகளாக வட்டார வழக்குகளையும், இந்திய ஆய்வாளர்கள் உதவியோடு பார்க்கணும் என்பதில் குறியாகவிருந்தான்.

கடந்த சில வாரங்களாக சைவ சித்தாந்தத்திலும் ஆர்வம் காட்டுகிறான்.

பனையோலைச் சுவடிகளில், தமிழ்நாட்டில் பலநூற்றாண்டுகளாகத் தழைத்திருந்த சைவசித்தாந்தத்தின் சிந்தனைக் கருவூலங்கள் வேறு எங்காவது இவ்வளவு எண்ணிக்கையில் பார்க்க முடிந்தால் ஆச்சரியம். 8600 ஓலைச் சுவடிகளும், அவற்றுள் 120000 உரைநடைகுறிப்புகளும் இருந்தன. இருந்தவற்றுள் அறுபதுசதவீதம் திராவிட லிபியான கிரந்தத்தில் உள்ளதாகச் சொல்லப்பட்டது. மற்றவை பெரும்பாலும் சமஸ்கிருதத்திலும், தமிழிலும், குறைந்த எண்ணிக்கையில் துளு, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடத்திலும் இருப்பதாக அறிய நேர்ந்தது.

செல்லரித்து, முனைகள் நைந்து, உடைந்து, தொடர்பற்று, பல சமயங்களில் முடிவையும் ஆரம்பத்தையும் தொலைத்து, கட்டினை அவிழ்க்கும்போதே காற்றில் பறக்கும் தன்மைகொண்ட ஓல நறுக்குப் பொக்கிஷங்கள் இங்கே இலக்கப் பதிவாக்கபட்டுக் கணிணிகளிற் சேர்ப்பிக்கப்படுகின்றன.

பிரெஞ்சு அரசாங்கத்துடைய கல்வித் துறையின் அக்கறையும், நுண்புலமும், நிதிவளமும், இந்திய வளங்களை சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் எடுத்துச் சென்றதற்குப் பிராயச்சித்தமாக நமது மூதாதயர்களின் சிந்தனைகளை மீட்க முயலுகின்றது.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்புவரை ஆண்டிருந்தவர்கள் பரம்பரையில் வந்த பிரான்சுவாகுரோ, கிரிமால், பெர்னார், நிக்கோலாஸ் போன்ற மேற்கத்தியர்களின் அறிவு, அவர்களிடம் அடிமைப் பட்டிருந்த இனத்தின் வாரிசுகளான கோபாலய்யர், சம்பந்தம், சுப்பிரமணியன், மரியதாஸ் போன்ற கிழக்கத்தியர்களின் அறிவோடு ஓர் இயல்புப் புணர்ச்சியை நடத்திக்கொண்டிருக்கிறது

அவ்வோலைகளில் சைவ ஆகமங்களோடு, வானசாஸ்திரம், சித்தவைத்தியம்,புராணங்கள், வேதங்கள், இதிகாசங்கள், சமஸ்கிருத இலக்கியம், தமிழிலக்கியமென எல்லாத் துறைகளைப்பற்றியும் பேசப்பட்டது.

பிரெஞ்சு அரசின் கீழைக்கலாச்சார மையத்தின் இந்தியவியல் துறை, 1955ம் ஆண்டிலிருந்து சத்தம் போடாமல் சைவ சித்தாந்த ஆகமங்களை தென் இந்தியாவின் பல மூலைகளிலிருந்து சேகரித்து இந்தியர்களின் பூர்வீகச் சிந்தனைச் சொத்தைக் காப்பாற்றி வருகின்றது. அவற்றுள் சிலவற்றை பெர்னார் ஃபோந்தேன் ஆர்வத்தோடு வாசிக்க ஆரம்பித்திருக்கிறான்.

யோகபாதத்தில் பேசப்படும் ஆன்மசுத்தி, அந்தர் யாகம் முதலியனவும், ஞானபாதத்தின் பசு-பதி பாச லட்சணங்களும், தத்துவ ரூபம், தத்துவ தரிசனம், தத்துவ சுத்தி, ஆத்மரூபம், ஆத்ம தெரிசனம், ஆத்ம சுத்தி, சிவ ரூபம், சிவதெரிசனம், சிவபோகம் என்கின்ற தசாகாரியங்களின் இலக்கணங்களூம், இவனது புத்தியைக் காடு மேடென்று அழைத்துச் சென்று; கடைசியில் நீர் சுழித்து ஓடும் ஆற்றங்கரையில் நிறுத்தியிருந்தது.

மறுகரையில் வண்ண வண்ணமாய் மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. பட்டாம் பூச்சிகளும், வண்டுகளும் ஒவ்வொரு மலராய் உட்காருவதும் எழுவதுமான காட்சிகள். குயில்கள் பாடுகின்றன, மயில்கள் ஆடுகின்றன. ஆற்றினையொட்டி, மல்லிகையும் முல்லையும் படர்ந்திருக்கும், முடிவற்ற சாம்பல்வண்ண மலைத்தொடர். படிகம்போன்றொரு சுணை. சிங்கம், புலி, மான்கள், முயல்கள், அணில்கள், புறாக்கள், கழுகுகளென ராஜஸ, ராட்சஸ உயிர்கள். அவைகள் இனங்களாற் பல, வண்ணங்களாற் பல, பிறப்பாற் பல, உடல்களாற் பல, இயக்கங்களாற் பல. அனைத்தும், வேனிற்காலத்து கானல்கள், மாயையின் அவதாரங்கள். அந்தக்கூட்டத்தில் பெர்னார்குளோதன் இருக்கலாம். வேம்புலிநாய்க்கர் இருக்கலாம். இவன்கூட ஏதோவொன்றாய், உண்டு, உறங்கி உயிர்வாழலாம். துள்ளி ஓடலாம். சோர்ந்திருக்கலாம். எங்கே இருக்கின்றான் ? அதுதான் கேள்வி. தேடித்தேடி கண்கள் பூத்ததுதான் மிச்சம். இன்று பொய்யாகவும், நாளை உண்மையாகவும் அங்கே உலாவரலாம். மறுகரையின் அனுபவங்கள் உண்டென ஞானம் சொல்கிறது. மறுபடியும் இவனை எதிர்பார்த்து காத்திருப்பதாகத் தகவல் வந்திருக்கிறது. ஆற்றில் விழுந்து நீந்திச் செல்ல தைரியம் வேணும். அல்லது இரு கரையையும் இணைத்திருக்கும் கயிற்றைப் பிடித்து ஆற்றில் விழுந்துவிடாமல் முதலைகளின் வாயிற் சிக்காமற் கடந்தாக வேண்டும். ஏதேனும் படகொன்று கிடைத்தாற் கூட அக்கரைக்குப் போக முடியும். துடுப்பின்றிக் காத்திருக்கிறான். சுமைகளோடு காத்திருக்கிறான். தலையிலும், தோளிலும், கைகளிலும் சுமைகள். இறக்கிவைப்பதற்கு மாறாகத் தினந்தோறும் சிப்பம் சிப்பமாய் இவனிடம் சேர்ந்துகொள்ளும் சுமைகள். வேண்டியவர்கள் கொடுத்துவிட்ட கட்டுச்சோறு மூட்டையும் அதிலடக்கம். தயிர், புளி, எலுமிச்சை, தேங்காய் என்று அவரவர் பிரியத்திற்கேற்ப கொடுத்திருக்கிறார்கள். காலம் காத்திருக்க முடியாதென்று சொல்லிவிட்டது. உரியகாலத்திலே உண்டு முடித்திருக்கவேண்டுமாம். நேற்றுவரை, கமகமவென்று வாசம் தந்தைவை, இன்றைக்கு துர் நாற்றமெடுக்கின்றது. புழுக்களை உற்பத்தி செய்திருக்கிறது. தலையெங்கும் புழுக்கள் வழிகின்றன. பிறகவை மானுடப் பிறப்பை எய்தலாம். மறுபிறப்பைத் தொடரலாம்.

மரணமிலாப் பெருவாழ்வை என்பது மறுபிறப்புக் குறித்துச் சொல்லப்படுவதா ? அணுக்கள் கூட உயிர்களென விஞ்ஞானம் சொல்வது இதைத்தானா ? முட்டையை அலகாற் குத்தி குஞ்சு வெளியே வரவும், பிறந்த குழந்தை முலைதேடவும், கூட்டுப் புழு பட்டாம்பூச்சியாகவும், புலியைkகூட முறத்தாலடித்து விரட்டிய பெண், கரப்பான் பூச்சிக்கு அஞ்சி ஓடி ஒளிவதும் எதனால் ? எப்படி ? இவையெல்லாம் எங்கே கற்பிக்கபட்டது. இவை அைனைத்துமே ஆன்மாவின் பல முகப் பயணத்திற்கான ஆதாரங்களா ? இதனாற்தான் சைவ சித்தாந்தம் இறப்பைக்கண்டு அஞ்சுவதில்லையா ? எனது பிறவிப்பயனத்தில் இளைப்பாறுதல் என்பது எப்போது ? ஆற்றின் கரையை கடந்தபிறகா ?

‘யானேதும் பிறப்பு அஞ்சேன், இறப்பதனுக்கு என் கடவேன் ‘ என்று மணிவாசகர் பாடுவதென்பது இறப்பினை வரவேற்கும் மனநிலையா ?

—-

எனது உலகத்தில் உறக்கமில்லை. உறக்கமில்லாததால் விழிப்புமில்லை., உடலென்று ஒன்று இல்லாததால் அதற்குப் போஜனம் வேண்டியதில்லை. போஜனம் வேண்டப்படாததால் கழிவுகளில்லை. என் பயணமும் எளிதானது, பிறவிகள் தோறும் உன்னைத் தொடர முடிந்தது. தொடக்கமென்றிருந்தால் முடிவு வேண்டாமா ?

சிந்தனைகளைத் துண்டித்துக் கொள்ளாதே!… தொடர்ந்து சிந்தனைகளில் பயணித்தால் நான் யாரென்பதை அறிய முடியும். நீ அதிகமாகச் சிந்திப்பதாக அறிகிறேன். சிந்திக்கச் சிந்திக்க எனக்கான விடுதலை காலமும் நெருங்கிக் கொண்டிருக்கிறது. உண்மை யென்பது சிந்னையின் மையத்தில் இருக்கிறது.

பிறவிகள் அறுக்கும் உபாயமென்பது வேறொன்றுமில்லை. ஏற்கனவே நான் பலமுறை சொன்னதைப்போல ஆணவம் களையப்படவேண்டும்.. ஆணவத்திற்கு அதற்கான தேவைகளை முதலில் நிறைவேற்றப்படவேண்டுமென்கிற சுயநலங்கள் உண்டு. அது எதனைப் புரிந்துகொள்ள இயலுமோ, எங்கே அதற்குச் செளகரியம் செய்துக் கொடுக்கப்படுகிறதோ அதனை, அங்கே மட்டுமே போற்றும்.

நண்பனே! செக்குமாடுகள் ஊர்போய்ச் சேர ஒரு போதும் உதவாது.

—-

‘மிசியே பெர்னார்… வேலு வந்திருக்கிறார். ‘ . பணியாள் மணி எதிரே நின்றிருந்தான். பெர்னர் சிந்தனையிலிருந்து விடுபட்டிருந்தான். இந்தியவியல் நண்பர்கள் புறபட்டுச் சென்றிருந்தார்கள்.

‘Bien, tu vas. Je viens dans quelques minutes ‘ மணி தலையைச் சொறிந்து கொண்டு நின்றான்.

பெர்னாருக்குத் தன் தவறு புரிந்தது. அவசியமிருந்தாலொழிய பிரெஞ்சு மொழியை இந்தியர்களிடத்தில் உபயோகிப்பவன் அல்ல.

‘மன்னிச்சுக்கதம்பி.. வேலுவை இருக்கச் சொல்லு. ஒரு சில நிமிடங்களில் வந்திடறேன்.

முகத்தை அலம்பி, தேங்காய்ப் பூ துவாலையால் துடைத்துக்கொண்டு புறப்பட்டான்.

வழக்கம்போல வேலு சைக்கிளில் காத்திருந்தான்.

‘வணக்கம் வேலு. வந்து வெகு நேரமாகிறதா ? ‘

‘இல்லை, கொஞ்ச முன்னாலதான் வந்தேன். ‘

‘என்ன நிறைய வேலைகளா ? ‘

‘ம்.. அப்படி சொல்லமுடியாது. எப்போதும் போலத்தான். ‘

‘எங்கே போகலாம். களைத்திருக்கிறேன். எனக்கு ஒரு பியர் குடிக்கவேண்டும். லிபர்டிக்குப் போகலாமா ? ‘

‘ம்.. ‘

மணி பெர்னாருடைய சைக்கிளை, பிரெஞ்சு மையத்தின் உள்ளேயிருந்து இதற்குள் எடுத்துவந்திருந்தான்.

‘என்ன நடந்தது ? வேம்புலி நாயக்கர் மருமகளைப் பார்த்தாயா ? பெர்னார் குளோதன் பற்றிய தகவல்கள் அவளுக்கு ஏதேனும் தெரிந்திருக்குமா ? ‘

‘இல்லைப் பார்க்கலை. ஒருவன் இறந்தபிறகு, இந்துக்கள் வழக்கத்திபடி சில சடங்குகள் உள்ளன. அதற்குப் பிறகுதான் பார்க்கமுடியும். ‘

‘நமக்கேற்பட்ட அனுபவங்கள்குறித்து உன்னோட அபிப்ராயமென்ன ? ‘

‘எதைச் சொல்ற ? ‘

‘இறந்திருந்த வேலு நாயக்கர், நம்மோடு பேசினாரே ? ‘

‘அவர் இறந்திருந்தார்னு எப்படிச் சொல்ற ? ‘

‘அவரோட மருமகள் சொன்னாளே ? ‘

‘அவர் இறக்காமலிருந்து, அவள் அவசரபட்டு அப்படியான முடிவுக்குவந்திருக்கலாமில்லையா ? ‘

‘நாம்தானே சுவாசத்தைச் சோதித்தோம். இறந்திருந்தது உண்மைதானே ?. ‘

‘சிக்கல் இறப்பைப் பற்றியதல்ல. இறந்த நேரம் குறித்து. எனக்கென்னவோ நம்ம்பிடம் பேசியபிறகே அவர் இறந்திருக்க வேண்டும். இறந்த பிறகு பேசியிருந்தால் கூட, அதற்கும் விஞ்ஞான பூர்வமா ஏதேனும் காரணமிருக்கலாம். இதுமாதிரியான அனுபவங்களுக்கெல்லாம், வறட்டுக் கற்பிதங்களைக் கொள்ள நான் தாயாரில்லை. ‘

ஐந்து நிமிட சைக்கிள் பயணத்தில் லிபர்டி ஓட்டல் வந்திருந்தது. சைக்கிளை நிறுத்தி பூட்டிவிட்டு. உள்ளே சென்று ஓர் ஓரமாக இருக்கைப் பிடித்து அமர்ந்தனர்.

மது, சிகரெட், மசாலாகளின் மணம், இவர்களின் வருகைக்காகக் காத்திருந்தது மாதிரி சுவாசத்தை அடைத்துக்கொண்டது. சந்தைப் பேச்சு, மதுபுட்டிகள், உடையும் சோடா,. தீனியை அவசர அவசரமாக வாயிற் போட்டு, எலும்பைத் துப்பி, மூக்கைச் சிந்தி கைக்குட்டையிலோ, வேட்டியிலோ அக்கறையாய் துடைத்துக்கொண்டு இந்தியச் சகோதரர்கள், மேசைகள் முழுதும் வருடக்கனக்கில் சாப்பிடாததுபோல இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

‘வேறு எங்கேனும் போகலாமா ? ‘ வேலு.

‘பரவாயில்லை, வந்துட்டோம். ‘

விசாரித்த பையனிடம் வேலு, ‘ஒரு கல்யாணி, பிரிஜ்ஜில வச்சதா இருக்கட்டும். கொண்டு வா. ‘, என்றான்.

‘வேற என்ன சார் கொண்டு வரட்டும் ? ‘

‘முந்திரிப் பருப்பு இருக்கா ? இருந்தா கொண்டுவா. இப்பொதைக்கு இது போதும். ‘

கல்யாணி பீர் பாட்டிலையும், முந்திரிபருப்பையும் கொண்டுவந்தவன், ஊசிப்போன கொத்து கடலையையும் கொண்டுவந்தான்.

போத்தலைத் திறந்து இரண்டு கண்டாடி கிளாசில், நுரையோடு பியரை நிரப்பினார்கள். பெர்னார் ஒரு தம்ளரை எடுத்தான்

‘ஆ வோத்ர் சாந்த்தே ‘ (A votre sante – உன் உடல் நலனுக்காக), என்றான்.

பதிலுக்கு வேலு தன்னுடைய கிளாஸை எடுத்து அவனுடையதில் மெல்லத் தொட்டு ‘ ஆ வோத்ர் ‘ (உனக்காக) வென்றான்.

‘விஸ்கிக்கு ஆர்டர் பண்ணலாமா ? ‘ வேலு.

‘பியருக்கு மேலேயா ? என்ன ரசனை இது ? ‘ என்னோட ஜாகைக்கு வா. நேற்றுதான் பிரெஞ்சு கான்சுலேட்ல வேலை செய்யுற என் நண்பன்

இரண்டு பிளாக் லேபில் கொடுத்து விட்டிருக்கான். ‘ தனியா எப்படி குடிக்கிறதுண்ணு யோசனைச் செய்துக் கொண்டிருந்தேன்.

தீடாரென்று வேலு அழத்தொடங்கினான்.

‘ஏய்.. என்ன ஆச்சு ? இந்த பியருக்கா இத்தனை ரியாக்ஷன் ‘

‘ஈ.எம்.எஸ் ஞாபகத்தில இருக்கேன் ‘.

‘யார் அவரு ? ‘

‘என்ன மாதிரி உழைக்கும் வர்க்கம். எண்ணமெல்லாம் மக்கள்னு வாழ்ந்தவர். இறந்து ஒருவருடம் ஆகுது. அவரது நினைவா ஒரு கருத்தரங்கம் நடத்தினோம். அந்த நினைப்புல… ‘

‘நான் ஒண்ணு சொல்வேன் வருத்தப் படக்கூடாது ‘.

‘என்னது ? ‘

‘ஈ.எம்.எஸ்ஸோ அல்லது நீ அடிக்கடி பேசுகின்ற புதுச்சேரி சுப்பையாவோ, பொதுவாக கம்யூனிஸ்டுகளைப் பற்றி எனக்கு நல்ல அபிப்ராயங்கள் உண்டு. அரசியல்வாதிகளிலேயே அதிக பட்ச யோக்கியர்கள் எங்க இருக்கிறாங்கண்ணு கேட்டா, அங்கதாண்ணு கைகாட்டுவேன். இப்படி யோக்கியர்களாக இருப்பாதாலேயே என்னவோ அவர்களும் உருப்படமாட்டாங்க அடுத்தவங்கைளையும் உருப்படுத்த மாட்டாங்க ‘.

/தொடரும்/

Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா

நீலக்கடல் -(தொடர்)- அத்தியாயம் -18

This entry is part [part not set] of 48 in the series 20040506_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


ஆசைக்கோர் அளவில்லை! அகிலமெல் லாங்கட்டி

யாளினுங் கடல் மீதினிலே

ஆணை செல வேநினைவர்…. – தாயுமான சுவாமிகள்

அவனது கவனம் சற்றே பிசகும்படி நேர்ந்துவிட்டது.

கடந்த அரைமணித் தியானமாக, எதிரே நிற்கும் வேப்பமரத்து அணிலொன்று அங்கு நிற்கும் மனிதர்களை அசட்டை செய்து, அநேகம்விசை இறங்கிவருவதையும், சாலையை ஒட்டி விரித்திருந்த கோரைப்பாயில் காயவைத்திருந்த வாதுமைக்கொட்டைகளில் ஒன்றைத் தன் முன்னிரு கால்களால் எடுத்துப் பிடித்தவண்ணம், பருப்பினைக் கொறிக்க அது சிரமப்படும் அழகையும்; அவன் ரசிக்க வேண்டியதாகிவிட்டது.

அதிகாலமேயிலிருந்தே, நின்று கொண்டிருக்கிறான். நடுத்தர வயது, இடையில் தார்பாய்ச்சிக்கட்டிய வேட்டியிருக்க, மேலுக்குத் திறந்திருந்த மார்புமுழுக்கச் சுழிசுழியாக முடி. சவரம் செய்யாத முகம். காதுகள் இரண்டிலும் கடுக்கன், தலையில் கொஞ்சமாகவிருந்த சிகையைப் பின்புறம் ஒதுக்கியதில் கிடைத்த குழந்தை கைப்பிடி அளவு குடுமி; அதன் மீது செம்மண் நிறத்திலொரு முண்டாசு.

அவனுக்கு இரண்டு அல்லது மூன்றுமணிநேர இடைவெளியில் வெற்றிலை போட்டாகவேணும். மடியை அவிழ்த்துப் பார்க்கிறான். வில்லியனூர் துருக்கர் கொடுத்துவிட்ட வெற்றிலை பழுத்துப் போய்க்கிடக்கிறது. பாக்கும், சுண்ணாம்பும் இரண்டு மூன்று வாய்க்கு வரும். புகையிலை

மாத்திரம் குறைகிறது. எதிர்வீட்டில் நிற்கின்ற பல்லக்குத் தூக்கிகளைக் கேட்டுப்பார்க்கலாம் என்கின்ற எண்ணம் மனதிலுதிக்க, இறங்கி நடக்கிறான்.

பதினைந்தாம் நூற்றாண்டின் பிற்பகுதி: மத்தியதரைக்கடலின் மீதான துருக்கியர் ஆதிக்கம் வலிமையாகவிருக்க, தந்திரத்தோடான ஆளுமையும், முயற்சிகளில் நம்பிக்கையும் கொண்ட ஐரோப்பியர்கள் கீழைநாடுகளுக்கு, புதிய கடல்வழியைக்காண தொடைதட்டி நின்றார்கள்..

அதிர்ஷ்டக் காற்றென்னவோ, போர்ச்சுகீசியர் கப்பலுக்குச் சாதமாக வீசுகிறது. வாஸ்கோடகாமா என்ற மாலுமி கோழிக்கோட்டில் துறை பிடிக்கிறான்*. வந்தவன் காலில் சாஷ்டாங்கமாக விழுந்து, தாராளமாக வாணிகம் நடத்திக்கொள்ள அனுமதித்த முதல் பெருமை, கோழிக்கோடு துக்கடா அரசாங்கத்தைச் சேரும். அதற்குப்பிறகு கொச்சி, கண்ணனூர் துக்கடாக்களும் ‘மேள தாள சம்பிரத்துடன் ‘ தோளினைக்காட்ட போர்ச்சுகீசியர்கள் சுலபமாய் ஏறி உட்கார்ந்து கொண்டார்கள்.

இவர்களின் அனுபவங்களைப் பாடமாகக்கொண்டு 1600ல் ஆங்கிலேயர்களும், 1602ல் டச்சுக்காரர்களும் இந்தியாவிற்குள் நுழைய, ஆங்கிலேயர்களின் பங்காளிகளான பிரெஞ்சுக்காரர்கள் 64ஆண்டுகாலம் தூங்கிவிட்டு, 1666ல் சூரத்தில் தங்கள் கிழக்கிந்திய கம்பெனிக்கு ஒரு காரியாலயத்தைத் திறந்துகொண்டு வந்து சேர்ந்தார்கள்.

வழக்கம்போல, அந்நியர்கள் செளகரியமாய் இங்கே நுழைந்து மடத்தைப் பிடுங்கிக்கொள்ள ஆயிரத்தெட்டுக் காரணங்களிருந்தன.

முதலாவதாக, வலிமை குன்றியிருந்த மொகலாயப் பேரசு. இரண்டாவதாக ஏக்கர்பரப்புகளில் ராச்சியங்களை வைத்திருந்த சில்லறை ராசாக்கள். இருதரப்பாருமே இரவுக்குப் பெண்கள் சம்போகமும், பகலுக்கு ஹுக்காப் புகையையும் பிரதானகாரியங்களாகக் கொண்டிருந்தவர்கள். உண்ட களைப்பிற்குத் தூங்கியநேரம் போக மற்ற நேரங்களில், சேடிப்பெண்கள் விசிற, புதிதாய் அந்தப்புரத்திற்கு வந்திருக்கும் பெண்கள், தொப்பையில் பாதியும் தொடையில் பாதியுமாய்ச் சரிந்து வெற்றிலைமடித்து கொடுக்க, பரத கண்டத்தின் தேசிய விளையாட்டுக்களான ஆடுபுலி, பரமபதம், தாயகட்டை, சதுரங்கம் ஆட்டங்களில் நாட்கணக்கில் பிரேமித்திருப்பார்கள். ஓய்ந்தநேரங்களில் எல்லாவகையான குத்துவெட்டுகளையும் அவர்களுக்குள் நடத்துவார்கள். வருமானத்திற்காகக் கருவாட்டு பிரஜைகளை முடிந்த மட்டும் கொத்தித் தின்றார்கள். போதாதென்றால் பக்கத்து நாட்டு சுகவாசி ராசாமீது படையெடுப்பு. தோற்கின்றவனின் நிலபுலங்களை அழிப்பது – கொள்ளை அடிப்பதென, இன்றைய இந்திய தாதாக்களின் முன்னோடிகள். சுகமான வாழ்க்கைக்கு உத்தரவாதமென்றால், அந்நியர்களை தலையிற்தூக்கிவைத்துக் கொண்டாடக் காத்திருந்தார்கள். ஆகமொத்தத்தில் இந்தியாவின் ஜென்ம ராசியில் சனி சஞ்சரித்த நேரம்.

ஐரோப்பியர்களுக்கு மொகலாய அரசு, ‘தங்கள் தேசத்தின் சரக்குகளைக் கப்பல் மூலம் இந்தியாவிற்குக் கொண்டுவந்து சூரத்தில் ஒருமுறை சுங்கத் தீர்வையைச் செலுத்தி, மற்றவிடங்களில் விற்பனையைத் தங்கு தடையின்றிச் செய்யலாமென்றும். அவ்வாறே இந்தியச் சரக்குகளைத் தங்கள் தேசத்துக்கு எடுத்துச் செல்லவும் ‘ அனுமதி அளித்தது. பிரெஞ்சு கிழக்கிந்திய கும்பெனியின் முதல் காரியதரிசியாக ‘பெபேர் ‘ (Bebber) என்பவர் பொறுப்பேற்கிறார். இவருக்குப் பின் அந்த நாற்காலியில் உட்கார்ந்தவர், புதுச்சேரி வாசிகள் நினைவிற்கொள்ளவேண்டிய பிரான்சுவா மர்த்தேன். ஆசிய தூரகிழக்கு நாடுகளுக்கான வர்த்தகம், பொன்முட்டையிடும் வாத்து என்பதைப் புரிந்துகொள்ள, இவருக்குச் சில காலம் பிடிக்கிறது.

வங்காளக்குடாக் கடற்கரையோரம், பிரெஞ்சுக் கும்பெனிக்கு, ஒரு துறைமுகம் ஏற்படுத்தத் தீர்மானித்து பிரான்சுவா மர்த்தேன் தெற்கே பயணிக்கிறார். சென்னையில், அவரோடு பறங்கிப் பாதிரியாரொருவரும், அவரது யோசனைக்கேற்ப தானப்ப முதலியார் என்கிற தமிழரும் சேர்ந்துகொள்கிறார்கள், கடற்பயணம் தொடருகிறது. சோழமண்டலக் கடற்கரையில் பறங்கிப்பேட்டைக்கு முன்னதாகக் கிடந்த வெற்று நிலம் பிடித்துப்போக, இறங்கிக்கொள்கிறார்கள். புதுச்சேரி பிறக்கிறது.

இதற்குச் சில மாதங்களுக்கு முன்புதான்**, பிரெஞ்சுக் கேப்டன் ஒருவன் மயிலாப்பூரில் கோல்கொண்டா சுல்தானைத் தோற்கடித்திருந்தான். இந்தக்கீர்த்தியோடு, பிரெஞ்சுக்காரர்கள் புதுச்சேரி நிலத்தை வியாபாரத்திற்கு உபயோகித்துக்கொள்ள அனுமதிக் கேட்க, அதனைஅதிகாரத்தில் வைத்திருந்த திருச்சிராபள்ளி ஷெர்க்கான் லோடி, சுலபமாய்த் தூக்கிக் கொடுக்கிறான்***

பிறகென்ன ? இந்தப்பக்கம் பிரான்சுவா மர்த்தேன் கும்பெனிச் சரக்குகளுக்காகக் கிடங்குகளைக் கட்ட, அந்தப்பக்கம் தானப்ப முதலியார் உள்நாட்டு வியாபாரிகளையும், நெசவாளர்களையும், மற்றவர்களையும் அழைப்பித்து அவரவர் வசதிக்கேற்ப வீடுகள்கட்டிக்கொள்ள ஏற்பாடுசெய்ய, புதுச்சேரி சிரத்தையுடன் உருவாகிறது.

பதினேழாம் நூற்றாண்டிலிருந்தே புதுச்சேரி, மேற்கத்தியர்களின் அவசரத்தையும், கிழக்கத்தியர்களின் நிதானத்தையும், பாலமிட்டுப் பிரித்துவைத்திருந்த நகரம்.

பிரெஞ்சு கிழக்கிந்தியக் கும்பெனியின் வளர்ச்சிக்கு உழைப்பதாகச் சந்திரநாகூரிலும், மஸ்கரேஞ்ஞிலும், புதுச்சேரியிலும் உள்ள குவர்னர்கள் சொல்லிக்கொண்டாலும், இன்னொரு பக்கம் வணிகக் கப்பல்களைவைத்துக் கொண்டு தங்கள் சொத்தினைப் பெருக்கிக்கொண்டனர். இது தவிர, நிர்வாகத்திடம் குவர்னர்களுக்கிடையே நல்ல உறவுடன் இருப்பதுபோல வெளியிற் காட்டிக்கொண்டாலும், ஒருவர் மற்றவர் மீது, தங்கள் தலைமை நிர்வாகத்திடம், கோள்சொல்ல ஆரம்பித்திருந்தனர். குவர்னர்களுக்கிடையே இருந்த போட்டியும், பொறாமையும், சூழ்ச்சியும் நிர்வாக அமைப்பிலும் எதிரொலித்தது.

பதினெட்டாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், அதாவது நமது கதை நடக்கின்ற காலத்தில்; புதுச்சேரியின் மக்கட் தொகை ஒருலட்சத்து இருபதாயிரத்தைத் தொட்டிருந்தது. இவர்களில் மூவாயிரம் பறங்கியர்கள் அடங்குவர். இதர குடிகளில் கிறித்துவர்கள், முகமதியர்கள், இந்துக்களெனப் புதுச்சேரிவாசிகள் பிரிந்திருந்தனர்.. மக்களின் வளர்ச்சிக்கேற்ப பிரச்சினைகளும் குறைவில்லாமலிருந்தன.

புதுச்சேரி குவர்னர் துய்ப்ளெக்ஸ்க்கு வேண்டியவர்கள் பிரெஞ்சுத் தீவு நிர்வாகத்திலும், பிரெஞ்சுத் தீவு குவர்னரான லாபூர்தொனேக்கு வேண்டியவர்கள் புதுச்சேரியிலும், எதிரெதிரணிகளில் இருந்தார்கள். இப்பகைமை புதுச்சேரிவாசிகளிடமும் எதிரொலித்தது….

வேலாயுத முதலியார் வீடு, முத்தியால்பேட்டையில் சென்னைக்குச் செல்லும் சாலையில் ஒதுங்கியிருந்தது. தெற்குப் பார்த்த மெத்தைவைத்த வீடு. புதுச்சேரியில் பெரும்பாலான ஓரளவு வசதிவாய்ந்த ஜாதி இந்துக்களின் வீடுகளை ஒத்திருந்தது.

வெளியே பல்லக்கொன்று காத்திருக்கிறது. பல்லக்குத் தூக்கிகளுக்கிடையே சீரான உயரம். அவர்கள் வீட்டை ஒட்டியிருந்த, வேப்பமர நிழலில் நடத்தும் உரையாடலில், நேற்றுக் கோட்டைமேட்டில் நடந்த தெருக்கூத்தைப் பற்றிய பேச்சு.

‘ ‘நான், நேத்து நாடகம் வைக்கும் போதே, நம்ம செங்கேணிக் கிழவனிடம் சொன்னேன். ‘காத்தவராயன் ஆரியமாலா ‘ நடக்கட்டும். காத்தவராயனா பரங்கிணி நடேசனும், ‘ஆர்யமாலா ‘ வேடத்தை கேணிப்பட்டு கோவிந்தனும், செய்வாங்கண்ணும் படிச்சுபடிச்சுச் சொன்னேன். காதுல வாங்கிக்கலை ‘

‘ஏன் மாமா.. அதான் போகட்டும், பாரதத்தத்திலேயாவது ஏதாவது ‘கர்ணமோட்ஷம், ‘ ‘பதினெட்டாம் போர் ‘. ‘அரவான்பலி ‘ அப்படாண்ணு ஆடியிருக்கலாம். அதைவிட்டுட்டு, தசாவதாரத்துக்குப் போனதென்ன ? அதிலும் ‘பக்த பிரகலாதா ‘ கதைகேட்க நல்லதாயிருக்கும், கூத்துக்குச் சரிவருமா ? ‘

‘நல்லாச் சொன்ன.. இந்தவருடம் பங்கு நெல்லு, அப்படி இப்படிண்ணு மிராசுகள் வந்து நிண்ணா, நாலுவார்த்தை கேட்காமக் கொடுக்கறதில்லை ‘

பல்லக்குத் தூக்கிக்களின் உரையாடலைக் காதில் வாங்கியவாறு, நமது கடுக்கனணிந்த ஆள் நெருங்கியிருந்தான்.

‘என்ன உங்க பேச்சுல கூத்து கீத்துன்னு அடிபடுது.. எங்கேக் கூத்து ? யாரு சமா ? ‘

‘நாங்களிங்கே.. பக்கத்துல கோட்டைமேடு கிராமமுங்க. நேத்துராத்திரி நம்ம ஊர்ல கூத்து நடந்தது. பரங்கிணி நடேசன்வாத்தியார் சமா. அதுகுறித்துதான் வார்த்தையாடினோம். நீர் ரொம்ப நாழிகையாய் அங்கே நிற்கிறீர் போலத் தெரியுதே. என்ன சங்கதி ?. முதலியார் ஐயாவிடம் ஏதாச்சும் உத்தியோகம் பண்ண வந்தீீரா ? ‘

‘அப்படித்தான் சொல்லவேணும். ஒருவாய் பொகையிலை கிடைக்குமா ? வெற்றிலை போடவேணும் ‘. கேட்டவன், வேலாயுதமுதலியார் வீட்டை முதன் முறையாகப் பார்ப்பதுபோல மீண்டும் பார்த்தான்.

வாசற்படியில் பர்மாத் தேக்கிலான பெரிய ஒற்றைக்கதவு. இருபுறமும் பெரிய திண்ணைகள். பிறகு தாழ்ந்த மரத்தூண்கள் நிறுத்தி,

கீற்றுவேய்ந்து இறக்கியிருந்த பெரிய தாழ்வாரம்.

வெற்றிலைப் போட்டுமுடித்தவன், பல்லக்குத் தூக்கிகளிடம் உரையாட ஆரம்பித்திருந்தபோதிலும், கவனம் வேலாயுத முதலியார் வீட்டின் மீதிருந்தது.

கட்டை வண்டியிலிருந்து விறகுகள் இறக்கப்பட்டு உள்ளே கொண்டு செல்லப்படுகின்றன. சாலையில்வைத்து, பாடிக்கொண்டு சின்னக்கோட்டக்குப்பத்துப் பெண்கள், உலக்கைகளால் சுண்ணாம்பு இடித்துக்கொண்டிருக்கிறார்கள்.

கூடத்தில் வேலாயுத முதலியார், வேட்டியை இறுக்கிக் கட்டிக்கொண்டிருந்தார். பாவிலிட்டு முடித்த நூல்கள் பல்வேறு வண்ணங்களில் தறிகளுக்குக் காத்துக் குவிந்துள்ளன.

வீட்டிற் சில்லறை வேலைகள் நடக்கின்றன. பொம்மையார்பாளையத்திலிருந்து வந்திருந்த கொத்தனார்கள் இருவர் உள்வாசலைக் கொத்திவிட்டு, கூழாங்கற்கள், சுண்ணாம்பு, கடுக்காய், முட்டை ஓடு கலந்து பூசிக் கொண்டிருக்கிறார்கள்.

‘ஏனுங்க..புறப்படுவதற்கு முன்பாக உள்ளே வந்து சிரமப்பரிகாரம் செய்துவிட்டுப் போங்கள் ‘ அழைத்தது, அவரது பெண்சாதி அலமேலு அம்மாள்.

‘ஞாபகமிருக்கிறது எடுத்துவை!.. ‘ நீண்ட மேலங்கியை அணிந்து நாடாக்களை முடிந்து கொண்டார். திருநீறைக் கொஞ்சமாக நீர்விட்டுக் குழைத்து, மூன்று விரல்களில் தொட்டு நெற்றியில் குறுக்காக இழுத்தார்.

அவருக்காக, மனைபோட்டு, தட்டில் பழையசோறு தயிர்வழியக் காத்திருக்கிறது. அருகே எண்ணெயில் பொரித்த மோர் மிளகாய். உட்கார்ந்து நிதானமாக உண்டுமுடித்தார். அலமேலம்மாள் தண்ணீர்விட தட்டிலே கையைக் கழுவிக்கொண்டு, ஏப்பமிட்டவாறு எழுந்தார்.

‘ரங்கா… ‘ எனக் குரல் கொடுத்தார். ரங்கன் உறவுக்காரப் பையன்.

‘இதோ வருகிறேன் மாமா ‘ பதிலை முடிக்குமுன் வேலாயுதமுதலியார் முன்பாக நின்றிருந்தான்.

‘கிளம்பு.. சடுதியில் கோட்டைக்குப் போயாகணும், பல்லக்குத் தூக்கிகள் வந்துவிட்டார்களா ?.. வாசலில் நிழலாடுகிறது.. என்னவென்று பார் ?.

‘ஐயா..கம்மாளன் முருகேசனுங்க.. அம்மி பொளியணும்ணு அம்மா சொல்லிவிட்டார்கள் ‘..

வந்தவன் குரல்கேட்டு, அலமேலம்மாள் எட்டிப் பார்த்தாள்

‘ஆர் முருகேசனா.. உனக்கு எத்தனைமுறை ஆட்கள் அனுப்புவது. ? ‘

அலமேலம்மாள் கேள்வியையே அனுமதியாகப் பாவித்து உள்ளேவந்தவன், முழங்கால்களுக்குமேல் வேட்டியைத் தார்பாய்ச்சிக் கட்டியிருந்தான். தலையில் உருமால்.. நெற்றி நிறைய விபூதி. நுழைந்த வேகத்தில், வேலாயுத முதலியார் கால்களில் சாஷ்டாங்கமாக விழுந்தெழுந்தான்.

காலில் விழுந்தெழுந்தவனைக் கண்களால் அங்கீகரித்துவிட்டு, பெண்சாதி பக்கம் திரும்பினார்.

‘நான் புறப்படுகிறேன் அலமேலு.. ரங்கா நீ முன்னாலபோயி ஆகவேண்டிய வேலைகளைப் பாரு. நான் சடுதியில் வந்து சேருகிறேன். ‘ முன்வாசலை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.

ரங்கன் இவரை முந்திக்கொண்டு தெருவில் இறங்கியவன், வேகமாய் நடக்கவாரம்பித்தான்..

ரங்கசாமி என்கின்ற முழுமையான பெயர் அவனுக்கிருகிறச்சே, ரங்கனென்றே அழைக்கப்பழகியிருந்தார். ரங்கன் உறவுக்காரப் பையன். முத்திரையர்பாளையத்திலிருந்து இவரண்டை வந்து சேவகம் பார்க்கிறான். ரங்கன் என்று அவனை விளிப்பதில், வேலாயுத முதலியாருக்கு ஒரு வகையில் அற்பசந்தோஷம். அவனைச் சாக்கிட்டு ஆனந்தரங்கப் பிள்ளையைச் சாட முடிந்தது. குறுகியகாலத்தில் புதுச்சேரியில் துரைமார்களை வளைத்துப் போட்டுக்கொண்டு, ரங்கப்பிள்ளை பொருள் குவிப்பது குறித்து ஊர் முழுக்கப்பேச்சாகவிருப்பது, இவருக்குள்ளும் அசூயையை உண்டாக்கியிருந்தது. வேலாயுத முதலியாருக்கு, ஆனந்தரங்கப் பிள்ள மாதிரிச் சாதுர்யம் இருந்தது ஆனாலும் அதிஷ்டம் குறைவாக இருந்தது. பெத்ரோ கனகராயமுதலியைவிட இந்த ரங்கப்பிள்ளையைக் குவர்னர் அதிகமாகவே நம்புகிறார், என்பது புதுச்சேரிவாசிகளுக்கிடையே பரவலான பேச்சு.

முதலியார் இறங்குவதைப் பார்த்துக்கொண்டிருந்த பல்லக்குத் தூக்கிகள், தலையிற் கட்டியிருந்த முண்டாசை, நால்வர் வலது தோள்களிலும், நால்வர் இடது தோள்களிலுமாக நான்காக மடித்துப்போட்டுக்கொண்டு, பல்லக்கைப் பயபக்தியுடன் நெருங்கிநின்றார்கள்.

முதலியார் பல்லக்கை நெருங்கி உட்காரப்போகின்ற நேரத்தில் அவனைக் கவனித்தார். அவனை, இதற்குமுன்பு, ஒரு முறை பார்த்ததாக நினைவு. எங்கேயென்று யோசித்துப் பார்த்ததில் உடனடியாக ஏதும் ஞாபகத்திற்கு வரவில்லை. தனது பல்லக்குத் தூக்கிகளில் ஒருவனைக் கூப்பிட்டார்.

‘காளி இங்கே வா.. உங்களண்டை வார்த்தையாடிப் போகின்றவன் ஆர் ? ‘

காளி என்று அழைக்கபட்ட பல்லக்குத் தூக்கிகளில் வயது கூடியவன், தோளிலிருந்த துண்டை, கக்கத்தில் அடக்கி, முதலியாரிடம் பணிந்து நின்றான்.

‘ஐயா.. நாங்கள் அவனை இதற்கு முன்பு பார்த்ததில்லை. ஆனால், காலமேயிருந்து இங்குதான் நிற்கிறான். தங்களிடம் சேவகம் கேட்டு வந்தவனெறு நினைத்தோம். நீங்கள் வெளியில்வருவதைக் கண்டமாத்திரத்தில் புறப்பட்டுவிட்டான். ‘

‘அப்படியா!..ம்.. சரிசரி.., நாம் புறப்படுவோம் ‘ ‘.

காளி வலப்புறம் இருந்த பல்லக்குத் தூக்கிகளுடன் சேர்ந்துகொண்டான். ‘வலம் தாங்கு! ‘ ‘இடம் தாங்கு! ‘ என்ற கோஷத்துடன் பல்லக்குப் புறப்பட வேலாயுத முதலியார், யோசனையில் ஆழ்ந்தார்.

வேலாயுதமுதலியாருக்கும் குவர்னரது துபாஷாகும் எண்ணமிருக்கிறது. புதுச்சேரிவாசிகளுக்கு, கும்பெனி நிர்வாகத்தினர் வழங்கும் முக்கிய பதவி. குவர்னர் துய்ப்ளெக்ஸின் முதன்மை உதவியாளர், நிர்வாக காரியாலயத்திலுள்ள ஏழு பறங்கியர்களுக்குப் பிறகு உள்ள முக்கியமான உத்தியோகம்.

இப்போதைக்கு வேலாயுத முதலியார் கும்பெனிக்கு வேண்டிய வியாபாரிகளில் (Dadni) ஒருவர். புதுச்சேரித் துறைமுகத்தில் இறக்குமதியாகும் சரக்குகளில் உள்ளூர் வியாபாரிகளின் பங்கினைச் சிலாக்கியமாகச் சொல்வதற்கில்லை. புதுச்சேரி கடற்கரையில் துறைபிடிக்கும் கப்பல்களுக்கு தட்னிகளை எவரும் பெரிதாக நம்புவதில்லை. துறைமுகத்தில் பாயெடுக்கும் கப்பல்களுக்கே இவரைப் போன்றவர்களின் சேவைகள் தேவைப் படுகின்றன.

ஆனால் கும்பெனிக்குத் துபாஷ்கள் முக்கியமானவர்கள். தட்னிகள் எனப்படும் உள்ளூர் வியாபாரிகளுக்கும், கும்பெனி வியாபாரிகளுக்குமிடையே இருந்து செயல்படுபவர்கள். சரக்குகளைத் தேர்வு செய்வது, ஒப்பந்தங்களை எழுதுவது, பறங்கியர்களுக்கும் உள்ளூர் வியாபாரிகளுக்குமிடையே மொழி பெயர்ப்பாளர்களாக இருப்பது, அவர்களுக்கான முன்பணத்துக்கு குவர்னரிடம் ஏற்பாடு செய்வது என எல்லாமே இவர்களால் நடந்தது.

துபாஷே தட்னிகளை அழைத்து, குவர்னருக்கு அறிமுகபடுத்திய பிறகு, அந்த வருடத்திற்கு கும்பெனிக்குத் தேவையான நெசவுத் துணிகளின் அளவும், அவற்றிற்கு கும்பெனியினால் கொடுக்கமுடிந்த விலையையும் அறிவிக்கிறார். பிறகு தட்னிகள் தங்கள் காரியஸ்தர்களுக்கு(Paquers), நெசவுத் துணிகளின் தேவையைத் தெரிவிக்க அவர்கள் புதுச்சேரியைச் சுற்றியுள்ள நெசவாளிகளிடம் அதனைப் பங்குபோட்டுக் கொடுப்பார்கள்.****

பல்லக்கிலிருந்த வேலாயுத முதலியாருக்கு, மனதிற் கிலேசம் மிகுதியாகவிருந்தது.

‘கையிருப்புத் துணிக்கட்டுகள், ஏற்றுக்கொண்ட ஒப்பந்தத்திற்குக் காணாது. இன்னும் ஐம்பது கட்டுகளுக்குமேல் வரவேணும். நெசவாளிகள் மேல் குற்றம் சொல்வதற்கில்லை. எல்லாம் வண்ணான் துறையிலே சலவை அரைகுறையாக இருக்கிற படியினாலே சடுதியாய் கட்டுப் போடுகிறதற்கு இல்லாமல் தவக்கப்பட்டது. எல்லாவற்ைறையும் ஆயத்தம் பண்ணுகிறதற்கு, ஒருமாசம் செல்லும் என்றபடியினாலே, கப்பல் போகாமல் நிற்கின்றது. ‘ மற்ற வியாபாரிகளுக்கும் இதுவே நிலமை என்பதாலே கும்பெனிக்குச் பெத்ரோ கனகராயமுதலி சமாதானம் சொல்லியிருந்தார். ஆனால் நிலமை சீராகாமல் அப்படியே உள்ளது. இந்தமுறை என்னகாரணம் சொல்வது என்கின்ற யோசனையில் ஆழ்ந்தார்.

புதுச்சேரியின் கோட்டைக்குள்ளிருந்த குவர்னர் அலுவலகமும், அலுவலகத்தைச் சார்ந்த ஒஃபிசியேமாரும் பரபரப்புடன் இயங்கிக்கொண்டிருந்தார்கள். பிரெஞ்சு கிழக்கிந்திய கும்பெனியின் அலுவலகத்தின் கவனம் முழுக்கக் கிட்டங்கிகளில் கிடந்தது. தரகர்கள், துபாஷிகள், முக்கிய வியாபரிகளென ஒருசிலர் அனுமதிக்கப்பட்டிருந்தனர். மொக்காவிலிருந்துவந்திருந்த காப்பித் தூள் பொதிகளும், சீனத்திலிருந்து வந்திருந்த வெள்ளைக் சர்க்கரை, வெள்ளைக் கற்கண்டு, துத்தநாகம், ஆரத்திக் கற்பூரம், ரசம், பட்டு, சுருட்டு, பீங்கான், தேப்பெட்டிகள். எனச் சிப்பங்கள் தனித் தனியாகப் பிரித்து வைக்கபட்டிருந்தன. ஏற்கனவே கும்பெனியின் அதிகாரிகள் பறங்கியர்களுக்குத் தேவையானவற்றைத் தனியாகப் பிரித்து ஒதுக்கியிருந்ததை கும்பெனி ஆட்கள் குதிரைவண்டியில் ஏற்றிக் கொண்டிருந்தார்கள். கிட்டங்கியில் ஏகத்திற்குக் கூச்சல். கும்பெனியின் இயக்குனர்கள் இருவர் முன்னதாகச் சரக்கு விற்பனைக் கிட்டங்கிற்கு வந்து சேர, அவ்ர்களை கும்பெனி சிப்பாய்கள் மரியாதைக் கொடுத்து அழைத்துபோய் ஆசனமிட்டனர்.

வேலாயுதமுதலியாரின் பல்லக்கு, வரதராஜப் பெருமாள் கோவிலைக் கடக்க, பல்லக்கிலிருந்தவாறே, வேலாயுத முதலியார் கும்பிடுபோட்டார். ஆனந்தரங்கப் பிள்ளைக்குப் பெருமாள் வேண்டப்பட்டவர் என்பது முதலியாரின் அபிப்ராயம்.

கோபுரத்தின் கீழே, நுழைவாசல் அருகே, தன் வீட்டில்கண்ட ஆளை மறுபடியும் அவதானிக்க முடிந்தது.

பல்லக்குக் கோட்டைத் திசையில் பயணித்தபோது, வழுதாவூர்ச்சாலைத் திசையிலிருந்து கிராமத்துச் சனங்கள், குஞ்சு குளுவான்களுடன் வந்து கொண்டிருந்தார்கள். பல்லக்கை நிறுத்தச் சொல்லி என்னவென்று விசாரித்தார்.

பல்லக்குத் தூக்கிகளுக்கும் தோள்மாற்ற அவகாசம் தேவைப்பட்டது. நின்றார்கள். ஒரு கிராமத்தானை விசாரிக்க,

‘வேலூர்க் கோட்டையிலே இருந்து மீர்சத், ஆயிரங் குதிரைகளுடன் சேத்துபட்டுக் கோட்டையிலே

இடங்கேட்க, அந்தக் கோட்டைக்காரன் இடங்கொடுக்கிறதில்லை என்று சொன்னதின் பேரிலே,

அவ்விடத்திலே இருந்து புறப்பட்டு வழுதாவூர்க் கோட்டையிலே இறங்கினார். பிற்பாடு நூறு குதிரையும்

இருநூறு குதிரையுமாய் கொஞ்சம் கொஞ்சமாய் இரண்டாயிரங் குதிரைமட்டும் வந்து சேர்ந்தது.

ஆகவே மூவாயிரங் குதிரையுடனே வழுதாவூர் கோட்டையிலே இருந்தான். இருக்கச்சத்தானே

அந்தக் குதிரைக்காரர் புறப்பட்டு சுத்துபட்டிலிருக்கிற கிராமங்களெல்லாம் தோரணம் வைக்கிறதும்,

சுலுமு பண்ணுகிறதுமாக இருக்க, ஆற்காட்டிலேயிருந்த நாவாபு உசேன் சாயபும், சரத்கான்

குமாரனும் வந்தவாசியில் சஃப்தர் ஹுசேனுடன் சேர்ந்து அய்யாயிரங் குதிரையை சேகரம்

பண்ணிக்கொண்டு அவ்விடத்திலேயிருந்து புறப்பட்டு வழுதாவூருக்கு மேற்கே திருவக்கரை

ஆற்றங்கரையிலே இறங்கி சண்டை போட்டார்கள். அப்படி இருக்கச்சே அவர் பிறகே வந்த

குதிரைக்காரர் ஓரண்டையிலே கிராமங்களெல்லாம் கொள்ளையிட்டு அடித்துப்பறித்து தானியதவசம்

உடமை உப்பந்தி தட்டு முட்டுகள் சகலமும் கொள்ளையிட்டது மல்லாமல் ஊருக்குள்

நெருப்பைப்போட்டு வீடுவாசல்களெல்லாம் கொளுத்தி நிர்தூளி பண்ணி சுத்த சூனியமாக்கிப்

போட்டார்கள்….**** ‘ நடந்தவற்றை ஆதியோடந்தமாகக் கூறினான்.

‘வரவர புதுச்சேரி பாதுகாப்பில்லாமற் போச்சுது. சரி பல்லக்கைத் தூக்குங்கள். நாம் நேரத்திற்குப் சரக்குக் கிடங்கண்டை போய்ச் சேரவேணும் ‘ என்று முதலியார் கூற, பல்லக்குப் புறப்பட்டது.

வேலாயுத முதலியார் விற்பனைக்கிடங்கை அடைந்தபோது காலை பத்துமணி. முத்திரையர்பாளையத்திலிருந்து, அவரது சட்டகர் சிங்காரவேலு முதலியார் வந்திருந்தார். வழுதாவூர், முதலியார்பேட்டை, வில்லியனூர், பறங்கிப்பேட்டையென புதுச்சேரியைச் சுற்றியிருந்த பகுதிகளிலிருந்து தட்ணிகள் வந்திருந்தார்கள். கும்பெனியிடம் கடந்த முறை செய்திருந்த ஒப்பந்தத்திற்கு மாறாக, கூடுதலாக தங்கள் நெசவுத் துணிகளுக்கு விலைகேட்டுப் பெறவேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். துபாஷ் கனகராய முதலியார் இன்னும் வந்திருக்கவில்லை.

முதலியார் கிடங்கில் அதிக நேரம் எடுத்துக்கொள்வில்லை. வந்திருந்த சகவியாபாரிகளிடம் சிறிது நேரம் வார்த்தையாட முடிந்தது. ரங்கனிடம் மொக்காக் காப்பித் தூள் கட்டொன்றும், சீனப் பட்டும் வாங்குமாறு பணித்துவிட்டு, .உள்ளூர் வியாபாரிகளுக்கு ஒதுக்கப்பட்டப் பொருட்களில் ஒருசிலவற்றைத் தனக்காக பார்வையிட்டு முடித்தார். பிறகு, அவர் எவரையோ எதிர்பார்த்து நின்றிருந்தார்.

அவர் எதிர்பார்த்தவண்ணம் கும்பெனியின் இரண்டாம் மட்ட அதிகாரியான பிரான்சுவா ரெமி, கிட்டங்கியின் தெற்குவாசல்வழியாக உள்ளே நுழைந்திருந்தான். முதலியாரிடம் நெருங்கி, அண்டை அழைத்துபோய் ரகசியக்குரலில் சிறிது நேரம் வார்த்தையாடினான். பிற்பாடு இருவருமாகப் புறப்பட்டு வடக்கு வாசல் வழியாக வெளியேறுகின்ற நேரத்தில், காலமே பார்த்த கடுக்கன் அணிந்த ஆளை,

மீண்டும் வாசலில் வைத்து, முதலியார் காண்கிறார்..

/தொடரும்/

*1498ம் ஆண்டு, மேமாதம் 20ம் நாள்.

** 1672ம் ஆண்டு, ஜூலை 25ம் நாள்

*** 1673ம் ஆண்டு ஜனவரி மாதம் 2ம்நாள்

**** La Compagnie des Indes, Philippe Haudrere

**** ஆனந்தரங்கப் பிள்ளை நாட் குறிப்பு

Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா

நீலக்கடல்- (தொடர்) -அத்தியாயம் -10

This entry is part [part not set] of 48 in the series 20040311_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


கண்டு நின்ற மாயையுங் கலந்து நின்ற பூதமும்

உண்டுறங்குமாறுநீ ருணந்திருக்க வல்லீரேல்

பண்டையாறு மொன்றுமாய் பயந்தவேத சுத்தனாய்

அண்டமுத்தி யாகிநின்ற வாதிமூல மூலமே.

– சிவவாக்கியர்

சுற்றிலும் சிற்றோடு வேய்ந்த சிறிய சதுரவடிவ கூடம். மத்தியில் திறந்திருக்க, கீழே பாசி படர்ந்த வாசல். வாசலில் நேர்த்தியாகவும் நிறைவாகவும் ஒரு துளசிமாடம். இவன் படுத்திருந்த கூடத்தையொட்டி வாசலின் வலது புறத்தில், அந்தியொளியிற் சிவந்திருந்த பித்தைளை அண்டா, தத்தளிக்கும் நீர். அருகே பொருத்தமாக ஒரு சிறிய பித்தளைச் சொம்பு. வாசலின் இடப்புறம் கயிற்றுப்பந்தலிற் படர்ந்திருக்கும் மல்லிகைக் கொடி. அதன் கரும்பச்சை இலைகளுக்கிடை எட்டிப்பார்க்கும் வெள்ளைவெளேர் மொட்டுகள், மலர்கள். கூடத்தில் நடைவாசலையொயொட்டி முத்துப் புல்லாக்காய் ஆட்டம்போடும் பிரப்பங்கூண்டில், சிறகில் தலைமறப்பதும் – திடுக்கிட்டுத் திரும்பிப்பார்ப்பதும்; சில நேரங்களிற் குரலெடுத்து, ‘வாணி! வாணி! ‘ எனவழைத்து எஜமானி விசுவாசங் காட்டுவதுமாகவொரு பச்சைக்கிளி. அழகு எங்குமிருக்கிறது; அதிசயத்தான் பெர்னார்.

‘நித்திரை சுகமாகவிருந்ததா ? ‘,

கேள்வி கேட்டவன் மாறன். அதிகப் பரிச்சயமில்லாத மனிதர்கள் வீட்டில், இப்படியுறங்கிப்போனதற்காகத் தன்னையே கடிந்துகொண்டான். மீண்டும் மீண்டும் அவளை ஏறிட்டுப் பார்க்க மனம் விழைந்தது. நிஜக்குதிரையென்றால் சுலபமாக அடக்கிவிடுவான், இதுமனக்குதிரை. கடிவாளம் விருப்பத்தின் பிடியிலல்லவா இருக்கிறது. மீண்டும் பார்த்தான். இவன் கண் ஆடியில் இன்னொரு தெய்வானை. இவனது பார்வைப் புள்ளியில் வகிடெடுத்துப் பிரிந்து, கீழேயிறங்கிப் பின்புறத்தைத் தொட்டுக் கடிகாரப் பெண்டூலமாக ஆட்டம்போடும் ஒற்றைச்சடை, வட்டமாகத் துவங்கி அதரங்களுக்குக் கீழே மொக்காய் முடிந்திருக்கும் முழு நிலாமுகம். மைத்தொட்டக்கண்கள் – மனதையும் ஈரப்படுத்தும் பார்வை, ஒட்டிய நிலையில் உதடுகள், உரையாடும்போதெல்லாம் உதடுகளோடு இணைந்து அரங்கேறும் நாசிதுவாரங்களின் சிமிட்டல்கள், ஒளிரும் பற்கள்; வரிசைப்படுத்தி உறவுபடுத்தியதில் முடிவுக்குவந்தான். ‘இவளுக்கும் தெய்வானைக்கும் இடையிலிருப்பது புள்ளியல்ல, உறவுக்கோடு ‘.

சற்றுமுன் நடந்தச் சம்பவங்களை நினைவு கூர்ந்தான்:

‘தெய்வானை.. நீயா ‘ ?

‘தெய்வானையல்ல, வாணி! ‘, அப்படித்தான் என்னைப் பெற்றவர்கள் பெயர் சூட்டியிருக்கின்றார்கள். மற்றவர்களுக்கும் வாணியாகத்தான் நான் அறியபட்டிருக்கவேணும். உங்கள் சினேகிதர் எனக்கு, தெய்வானையென்று புதியதாக நாமகரணமேதேனும் சூட்டியிருப்பாரோ ? எவளாவதொரு வள்ளியைப் பார்த்த சந்தோஷத்தில் இப்படிப் புத்தி போயிற்றோ ? ‘ எனப் படபடத்துக்கொண்டு கேள்விக்கணைகளோடு மாறனை முறைத்தாள்.

‘தாயே முத்துமாரியம்மா! கொஞ்சம் ரட்ஷிக்கவேணும்.. சினேகிதருக்கு உடனடியாகச் சிகிச்சை செய்யவேணும். உள்ளே அனுமதிக்கலாமில்லையா ? அதற்கேதும் ஆட்ஷேபனையில்லையே ? ‘ இடுப்பு வரைகுனிந்து தண்டனிட்டவன் முகத்தில் நமட்டுச் சிரிப்பு.

வாணியின் முகம் சிவந்துபோனதற்கு வெட்கமா ? பொய்க்கோபமா என அறிவதில் மாறனுக்குச் சிரமம். ஒதுங்கியவள், நிலமையையுணர்ந்து பெர்னாரை இடப்புறமாக வாங்கிக்கொள்ள, மாறன் வலப்புறமுமாகத் தாங்கிக்கொண்டான். மூவரும் நடையை அடைந்தபோது,

‘மாறன் வணக்கம்.. மாறன் வணக்கம்.. ‘ கூண்டுக்கிளியின் குரல்.

‘பெர்னார் வணக்கம்.. பெர்னார் வணக்கம் ‘ என்று, என்நண்பர் பெயரைச் சொல்லமாட்டாயா ? ‘ திருத்தினான் -மாறன்.

‘பெர்னார் வணக்கம்.. பெர்னார் வணக்கம் ‘ கிளி அழகாய்த் திருப்பிச் சொன்னதில் வாணிக்குப் பெருமிதம். சற்றுமுன் காட்டியபொய்க்கோபம் மறைந்து, முகம் செந்தூரம்பூசிக்கொண்டது. ஆனால் அதனை ரசிக்கும் மனநிலையில் பெர்னார் இல்லையென்பது அவனது முகத்திற் தெரிந்தது.

கிளி என்ன புரிந்துகொண்டதோ, ‘ முட்டாள்.. மூடன்.. முட்டாள் மூடன் ‘. திரும்பத் திரும்பச் சொல்ல, வாணிக்கு இம்முறை உண்மையிலேயே கோபம் ‘

‘அட முட்டாள் கிளியே.. நீதான் மூடன். எப்போது எதனைச் சொல்வதென்பதில் கொஞ்சம் விவஸ்தை வேணாமோ ? ‘, என்றவள் பின்கட்டு திசையிற் குரல் கொடுத்தாள்.

‘அடியே கமலம்!.. எங்கேபோய்த் தொலைந்தாய். கொஞ்சம் சீக்கிரம் வருவாயானால் உபயோகமாயிருக்கும் ‘

வாணியின் குரலுக்காகவே காத்திருந்ததுபோல, சேடிப்பெண் கமலம் ஓடிவந்தாள்.

‘அம்மா!.. அழைத்தீர்களா ? ‘

‘என்னடி கேள்வியிது ? அழைத்துத்தானே வந்திருக்கிறாய் ? உள்ளேயிருந்து ஓர் இலவம்பஞ்சு மெத்தையைக் கொண்டுவந்து கூடத்திலிடு. அடுப்பில் வெந்நீர்போடு. வீட்டிலிருக்கும் பச்சிலையை விழுதுப்பதத்திற்கு அம்மியிலிட்டு அரைத்துவா. ‘ ஆக்ஞைகள் வரிசையாக இறக்கை கட்டிப் பறந்தன.

எஜமானியின் கட்டளைக்குப் பணிந்து அங்கே காரியங்கள் துரிதமாக நடைபெறுவதற்கான அறிகுறிகள்.

மாறனும் வாணியும் கைத்தாங்கலாக பெர்னாரை நடைவாசலையொட்டிய கூடத்திற்கு அழைத்துச் சென்று பஞ்சுமெத்தையிலிட்டனர். வீட்டில் நிறைந்திருந்த மல்லிகைவாசமும், சந்தணமும், பன்னீரும் சாம்பிராணிப் புகையும் உடன் வந்து வரவேற்றன. பெர்னார் கடுமையான வலிக்கிடையிலும், அந்தச் சுகத்தை அனுபவித்தான்.

‘ இல்லை.. இல்லை.. இந்தப்பெண்ணுக்கும் தெய்வானைக்குமிடையில், இருவருக்கும் தெரிந்தோ தெரியாமலோ ஏதோவொரு முடிச்சுள்ளது. அதனை அவிழ்க்கவேண்டுமென்றால், அதன் முனைகள் அறியப்படவேண்டும். எங்கே ? எப்படி ? ‘

மாறன் வாசலிலிருந்த அண்டாவில் நீர் சேந்தி காலைக் கழுவிக்கொண்டு, இவனருகே வந்தான்.

இரத்தத்தில் தோய்திருந்த தோளினைக்கொண்டு, வாணி காயம்பட்ட இடத்தினை ஊகித்தவளாக, பெர்னாரின் மேற்சட்டைப் பிணைகளைத் தளர்த்தி, பின்புறமாக இறக்கி நிறுத்தினாள். காயம் அதிக ஆழமில்லையெனினும் சுண்டு விரல் அளவிற்கு நீளவாட்டமாக நீரிலிழைத்தக் கோடாய்த் தசையைத் திறந்திருந்தது.

சேடிப்பெண் ஒருகையில் வெந்நீரும், மறுகையில் எண்ணெய் கிண்ணமுமாக வந்து சேர்ந்தாள். பருத்தித் துணியை வெந்நீரில் நனைத்து வாணி வெட்டுண்ட இடத்தைச் சுத்தம் செய்ய மாறன் அவளுக்கு உதவி செய்தான். வலிபொறுக்கவியலாமல் பெர்னார் பற்களைக் கடித்துக்கொண்டான்.

‘வாணி!கவனமிருக்கட்டும். இந்தியாவிலிருக்குவரை இவரை ஈ எறும்புகூட அண்டவிடமாட்டேன் என சங்கற்பம் செய்துகொண்டிருக்கிறேன் ‘.

‘பயம் வேண்டாம், உமது சங்கற்பத்திற்கு இந்தப் பெண்ஜென்மத்தால் எந்தவிதமான அபகீர்த்தியும் நேர்ந்துவிடாது. அந்தக் கிண்ணத்தைக் கொஞ்சம் எடுங்கள் ‘, சேடிப்பெண் வைத்துவிட்டுச் சென்றிருந்த கிண்ணத்தைக் காட்டினாள்.

‘என்னவென்று அறியலாமோ ? ‘

‘வலியும் வீக்கமும் தணியப் பூண்டு சேர்த்துக் காய்ச்சிய தேங்காய்எண்ணெய். காயத்தை இதனால் சுத்தம் செய்த பிறகு, வெட்டுண்ட இடத்தில் இப்பச்சிலையைவைத்துக் கட்ட, ஒரு சில தினங்களில் உங்கள் பறங்கி நண்பர் குதிரைபோட்டுக்கொண்டு மறுபடியும் புதுச்சேரிரைச் சுற்றிவரலாம். ‘

‘அந்தப் பச்சிலையின் பேரை நாங்கள் அறியக்கூடாதோ ? ‘

‘கூடாதென்பதுதான் அப்பாவின் விருப்பம் ‘. இப்போதைக்கு அவர் எனது குரு. நான் அவரது சீடன். அவரது விருப்பத்திற்கு மாறாக என்னால் நடக்கமுடியாது ‘

‘தங்களது தந்தையாரின் ஆக்ஞைபடியே நடவுங்கள் அம்மணி. ‘ என்று நகையாடிய மாறன், ‘வைத்தியர் சபாபதி படையாச்சி, எங்கேபோயிருக்கிறார் என்றாவது நாங்கள் தெரிந்துகொள்ளலாமா ? ‘ என்றான்..

‘ம்.. தாராளமாக. தந்தை திருச்சினாப்பள்ளிக்கும் அன்னை வில்லியனூர் திருக்காமேஸ்வரர் ஆலயத்திற்கும் போயிருக்கிறார். தடியன் சின்னய்யன் சின்னகண்ணு செட்டியார் வீடுவரை சென்றிருக்கிறான். இது போதுமா ? அல்லது இன்னும் வேறு சங்கதிகள் வேணுமா ? ‘

‘ இப்போதைக்கு இது போதுமென்றே நினைக்கிறேன். நண்பருக்குச் சிசுருட்ஷைகளைப் பார்க்கும்போது, அடியேனுக்கும் அப்படியொரு ஆசை ‘. அவள் கண்களை நேரிட்டுப் பார்த்தான். ‘அப்படிச் செய்தால் நானும் பாக்கியவானாவேன். ‘

அவன் பார்வை வீச்சிற்குத் தடுமாறியவள் தன் பணிமறந்து சில நாழிகைகள் தயங்கி நின்றாள்.

‘சரிதான், வைத்தியமென்பது பாதிக்கபட்டவர்களுக்குத்தானேயொழிய, மற்றவர்களுக்கல்ல என்பதை நான் சொல்லித்தான் நீங்கள் அறிய வேண்டுமா ‘

‘எனக்கு மருந்திட வேண்டுமா வேண்டாமா என்பதனைக் கைபிடித்துப் பார்த்தாற்தானே தெரியும் ?. நானும் காயமுற்றிருக்கிறேன் ‘

‘எங்கே ? ‘

‘மனதில். ‘

‘அய்யா..! இந்த ஏழை வைத்தியரில்லத்திற்கு வந்திருப்பது, காயப்பட்ட உங்கள் நண்பருக்காகவா ? அல்லது உங்களுக்காகவா ? ‘

‘உண்மையைச் சொன்னால் கம்புக்கும் களைவெட்டினதுபோல, தம்பிக்கும் பெண் பார்த்ததுபோல ‘

பொறுமையாக மாறனுக்கும் வாணிக்கும் நடந்த உரையாடலைக் அவதானித்துவந்த பெர்னாருக்கு அவர்களிடையே இருப்பது மாசு மறுவற்ற காதலென்பது புரிந்தது.

விழித்தெழுந்திருந்தபோது பின் வாசல் வழியாக, இருட்டோடு கலந்த இளங்காற்று, மதுரமாகத் தீண்டியது. புதிதாகவங்கே டலைஎண்ணெய் விளக்கொன்று ஜோதியாய் எரிந்துகொண்டிருந்தது. சற்றுத் தள்ளி மாறன் மனையில் உட்கார்ந்து, கடலையை உரித்துத் தின்றுகொண்டிருந்தான்.

‘நித்திரை சுகமாகவிருந்ததா ? ‘,

‘வெள்ளைக்கார நண்பரே ? கேள்வி உங்களுக்குத்தான்.. ‘

‘என் கறுப்பு நண்பரே. சுகமான நித்திரைதான். புதுவிடத்தில் உங்களையெல்லாம் சங்கடப்படுத்திக்கொண்டு..மன்னிக்கவேண்டும் ‘

‘ஏதேதோ பெரியவார்த்தைகளாடி எங்களை அச்சுறுத்துகிறீர்கள். உண்மையில் அட்டியின்றி, எங்கள் அன்பினை ஏற்றுக்கொண்டதற்காக நாங்கள்தான் நன்றி சொல்லவேணும். தவிரப் பயணக் கைளைப்பும், காயப்பட்ட உடலும் நித்திரைகொள்ள வைத்திருக்கிறது. இதற்குத் தாங்கள் வருந்துவது ஆகாது. ‘

‘இத்தனை நாழிகையாய் நீயும் எனக்காக இங்கே காத்துக்கொண்டு.. ‘

‘இல்லை சற்று முன்புதான் நமது துபாஷ் பலராம் பிள்ளையை பார்த்துத் தங்களைப் பற்றிய கவலையேதும் வேண்டாமெனச் சொல்லிவிட்டுவந்தேன். ‘

‘அப்படியா ? அவர் வேறு ஏதேனும் தகவல்கள் கூறினாரா. முத்தியால்பேட்டையைச் சேர்ந்த வேலாயுத முதலியார் பற்றிய தகவல்கள் வேண்டுமென்று கேட்டிருந்தேனே. ‘

‘தாங்கள் புதுச்சேரி வருவதற்குதவிய கப்பலிற் கொண்டுவந்த பொருட்களை விற்பதற்கு நாளைக்கு கிட்டங்கியில் ஏற்பாடாகிவுள்ளது. அதில் வேலாயுதமுதலியும் கலந்துகொள்கிறார்.. கும்பெனியின் நம்பிக்கையான தரகர்களில் அவரும் ஒருவராம்.. அவரைப் பற்றிய அதிகபட்ஷத் தகவல்களுக்காக பலராம் பிள்ளை காத்திருக்கிறாராம். ‘

‘கேட்பதற்குச் சந்தோஷமாகவுள்ளது. வந்ததின் நோக்கம் செயல்படவாரம்பித்ததில் மகிழ்ச்சியே. அது சரி உன் காதலி வாணியெங்கே ? ‘

‘தங்களுக்குப் பசும்பால் கொண்டுவருகிறேனென உள்ளே சென்றிருக்கிறாள். ‘ மாறன் கூறி முடிக்கவும், பாற்குவளையுடன் வாணி அங்கே வந்து நிற்கவும் சரியாகயிருந்தது.

‘குங்குமப் பூவும், ஏலமும் கலந்து சுண்டக்காய்ச்சிய பால். எங்களைப் போன்ற அன்றாடங் காய்ச்சிகளுக்கானதல்ல, அரண்மனைவாசிகளுக்கானது. பருகிப் பாருங்கள் புரியும் ‘ – மாறன்

‘மாறன் நீயும் கொஞ்சம் பருகேன் ‘- பெர்னார்

‘நீங்கள் கவலை கொள்ளவேணாம். உங்கள் நண்பருக்கும் போதுமான அளவிற்கு இருக்கின்றது ‘. சூடாக இருந்த பாலை ஆற்றியவாறு கூறினாள்.

அவள் குவளையில் நீட்டிய பாலை வாங்கிப் பருக, பெர்னார் நெற்றியில் முத்து முத்தாக வியர்வை எட்டிப் பார்த்தது.

மாறன், வாசலில் துவைத்துக் காயவைத்திருந்த உருமாலொன்றை எடுத்துவந்து, அன்பாய்த் துடைத்தான். இவன் மனம் நெகிழ்ந்தது.

‘நண்பரே, உங்கள் அன்பிற்கு நான் பெரிதும் கடன் பட்டிருக்கிறேன் ‘ சொல்லும்போதே அவனுக்கு நா தழுதழுத்தது. மாறனை இறுகவணைத்துக்கொண்டான்.

‘எனக்கொரு உபகாரம் செய்யவேணும். உங்கள் தோழிபற்றிய சில தகவல்கள் எனக்குத் தெரியவேணும். ‘

‘தங்கள் மனதிலிருக்கும் கேள்வியின் முகாந்திரம் என்புத்திக்கு விளங்கவில்லை. என்ன தெரிய வேணும் ? ‘

‘அவளுக்குத் ‘தெய்வானை ‘ என்றொரு பெயரில் ஏதேனும் பரிச்சயமுண்டா ? ‘

தங்களருகே நின்றவண்ணம், நண்பர்களுக்குள் நடந்த உரையாடலைக் கேட்டுக்கொண்டிருந்த வாணியின் திசைக்கு, மாறன் திரும்பினான்.

‘வாணி!.. நண்பர் கேட்பது புரிகின்றதா ?

‘திருக்காமேஸ்வரர்தான் என்னை ரட்ஷிக்கவேணும். என் வாழ்க்கையில் அப்படியொரு பெயர்கொண்ட பெண்ணை இதுவரை நான் சந்திக்கவுமில்லை. கேள்விஞானமும் இல்லை. யாரந்தப் பெண் ‘

‘எப்படிச் சொல்வது. என் கண்கள் காணும் காட்சிப்பொருளுக்குப் பழுதில்லையெனில், உங்களிருவரில் ஒருவர் ஸ்தூலம், மற்றவர் சூட்ஷுமம். ஒருவர் அசல் மற்றவர் நகல். எவர் ? ஏன் ? என்பதுதான் கேள்வி. தோற்றம், மொழி, பாவனை எல்லாவற்றிலும் நீ அவளாக இருப்பதுதான் ஆச்சரியம். அவள் என் தெய்வானை. யுகங்கள்தோறும் எனக்கென்று ஜென்மமெடுப்பவள். இங்கிருந்து ஆயிரக்கணக்கான மைல்களுக்கப்பால் என்னை அவளிடம் சேர்த்த ஓர் அந்திமாலையில், அவள் முகம் பார்த்த முதற்பார்வையிலேயே நான் அவளுக்கென்பதும், அவள் எனக்கென்பதும் உங்கள் மொழியில் சொல்வதாகவிருந்தால் ‘எழுதபட்டிருக்கிறது ‘. இன்றைக்குத் தன் வயதுபோன தாயுடனும், சகோதரன் கைலாசத்துடனும் பிரெஞ்சுத் தீவில் ஜீவிக்கிறாள் ‘

‘ஷமிக்க வேணும். எதை வைத்துச் சொல்கிறீர் ? எனக்கும் அந்தப் பெண்ணிற்கும் ஏதேனும் உருவ ஒற்றுமைகளுண்டா ? ‘

‘ உங்களிருவரையும் அருகருகே நிறுத்தினால் உங்களில் யார் தெய்வானை ? யார் வாணி என்பதை அக்காமாட்சி அம்மாளால் கூட அறிய முடியாது ‘

‘காமாட்சி அம்மாள் யார் ?

‘தீவில் தெய்வானையுடனும் கைலாசத்துடனும் வாழ்கின்ற பெண்மணி. அவர்களைப் பெற்றவள்

‘அப்படியா ? ‘ மாறனும், வாணியும், ஒருமித்துக் குரலெழுப்பினார்கள் ‘

‘ஏன் ? உங்களுக்கு முன்பே அவரைத்தெரியுமா ?

‘எங்களுக்குத் தெரிந்த ஒருபெண்மணி.. ‘ இருவரும் மீண்டும் ஏகோபித்த குரலில் சொல்லவாரம்பிக்க, நிலைமையைப் புரிந்துகொண்ட வாணி, ‘ நீங்களே கூறி முடியுங்கள் ‘ மாறனிடம் கூறிவிட்டு ஒதுங்கிக் கொண்டாள்

‘ ஆம்.. வாணியைப் பார்ப்பதெற்கென்று வயதான பெண்மணி ஒருவள் அருகிலுள்ள தொண்டமானத்தம் கிராமத்திலிருந்து வருவாள். மிகவும் பிரியமாக இருப்பாள். அவள் பெயரும் காமாட்சியே. ‘

‘…. ‘

/தொடரும்/

Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா