நாகம்

This entry is part [part not set] of 51 in the series 20040219_Issue

பத்ரிநாத்


ஸ்ரீதர ராஜன் இன்று பதவி ஓய்வு பெறுகிறார். அதையொட்டி நடைபெறும் பிரிவு உபச்சார விழாவிற்கு அனைவரையும் அழைத்தது, அறிவிப்புப் பலகை. ‘ ‘மூன்று மணிக்கு பொது அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது..அனைத்து ஊழியர்களும் அதைப் பயன் படுத்திக் கொள்ளவும் ‘ ‘, – அதன்படி அனைவரும் பயன் படுத்திக் கொண்டனர்- தாங்கள் மூன்று மணிக்கே வீடு திரும்புவதற்கு..

அரங்கிலுள்ள கூட்டத்தை நோட்டம் விட்டார், ஸ்ரீதர ராஜன். எதிர்ப் பார்த்த அளவில் இல்லை.. ஒருவேளை நாம் எதிர்ப் பார்த்தது அதிகமோ என்று தோன்றியது. மாவுக்கு ஏற்ற பணியாரம். தன்னுடைய இத்தையாண்டு அவையில் தனக்கு கீழ் உள்ள ஊழியர்கள், சக அதிகாரிகள் என்று யாரிடமும் நல்ல மனிதர் என்ற அளவில்கூட பெயர் பெற்றிருக்கவில்லை. அதை அவர் உணர்ந்தும் இருந்தார்.

கண்டிப்புக்கும் கொடுங்கோன்மைக்கும் சிறிய இடைவெளு – ஒரு மெல்லிய கோடுதான்.. பல சமயங்களில் பின்னதுதான் அவர் வெளுப் படுத்தியிருக்கிறார். அதை உணர்ந்த சமயங்களில் பெரும்பாலும் காலங்கடந்துவிட்டிருக்கும்.. இறுதியில் ‘வெறி நாய் ‘ ‘கோணல் புத்திக்காரன் ‘ என்ற பட்டப் பெயர்களே மிஞ்சின.

எதையுமே குரூரம், குதர்க்கமாகவே அணுகியிருக்கிறார். இப்போது ரத்தம் சுண்டிப் போகும் சமயத்தில் பாவமன்னிப்புக் கோருகிறது, மனம். அவருடைய ஓரளவு மனமாற்றத்திற்குக் காரணம், அவர் மனைவியின் பிரிவு என்பதுகூட இருக்கலாம். உயிருடன் இருக்கும் போது சாதிக்காததை மரணத்திற்கப் பின் சாதித்த மகராசி.

இன்று பணியிலிருந்து ஓய்வு.. பிறகு மரணத்தை எதிர் நோக்கிக் காத்திருக்க வேண்டும்.. உடல் சில்லிட்டது.. அந்த நினைப்பைத் தவிர்க்கவிரும்பினார்.. மனதில் ஏதேதோ நினைவலைகள் வந்து கொண்டேயிருந்தன. எத்தனை நண்பர்களைப் பெற்றிருக்கிறோம்..ம்ம்.. நட்பு ரீதியாக உள்ள வட்டம் மிகமிகக் குறைவு.. அவ்வளவு ஏன்.. ? சொந்த மகன்களிடமகூட ஆரோக்கியமான நட்பு இல்லையே.. ஆனால் அதற்கு ஒரு காரணம் தலைமுறை இடைவெளு.. மற்றொன்று அவன்கள்

சதா அமெரிக்க மோகத்தில் இருப்பவன்கள்.. தந்தையின் கிராஜூவிட்டியை எதிர்ப் பார்த்துக் கொண்டு கழுகைப் போல காத்திருப்பவன்கள்.. அயல் நாடு பறந்து சென்று விட்டால், திரும்பிக்கூட பார்க்க மாட்டான்கள்.. ம்ம்.. ஆனால் ஒரு வகையில் தானும் ஒரு காரணம் என்று தோன்றியது.. என்றாவது ஒரு நாள் அவர்களுடன் நண்பனைப் போல அழகாய்ப் பழகியிருப்பேனா.. அன்பு.. இருந்தது.. வெளுக் காட்டத் தெரியவில்லை.. அனைவரையும் அடக்கியாள வேண்டும், நம் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும், பயன் படுத்திக் கொள்ள வேண்டும் என்றே பறந்த மனம் ஒரு பிறழ்ந்த மனம்.. பிறவிக்குணம்..

தன் இயல்பால் அதிகம் பாதிக்கப் பட்டவர்களின் பட்டியலைப் போட்டால், முதலில் மனைவிதான் வருவாள்.. ‘ ‘யேய்.. இந்த அழுக்குத் தலைகாணிகள மாத்திப் போடுடி.. ஒங்கப்பா அம்மா மாதிரி பாக்கவே சகிக்கல.. ‘ ‘, என்பார்.. அப்பிராணி.. தான் அழுவதுகூட வெளுயே தெரியக் கூடாது என்று நினைக்கும் ஜென்மம் – அவர் மனைவி இந்திரா.. சக்கரத்தாழ்வார் பேசத் தெரிந்தவராக இருந்தால், ‘ ‘ இந்திரா.. போறும்.. எத்தனை முறை என்னையே சுத்திக் கொண்டிருப்பாய்.. கால் வலிக்கப் போறது.. ‘ ‘, என்றல்லவா சொல்லியிருக்க வேண்டும்.. அவர் மனைவி இந்திராவும் வைஜெயந்தியைப் போல இன்னொரு அய்யோ பாவம்..

வைஜெயந்தி..

‘ ‘அம்மா.. அம்மா ‘ ‘, என்றே அவர் தாயை அழைத்துக் கொண்டு, வளைய வந்தவள்.. ‘ ‘ஸ்ரீதர் தாண்டி முறப்பையன்.. ‘ ‘, என்று அவர் தாய் உட்பட சொந்தங்கள் உசுப்பேற்ற, அதை அப்படியே நம்பி அவரை மனதில் வரிந்து கொண்டிருந்தவள்.. வெகுளி.. தெருவில் வரும் போதே மெலிதான கொலுசுச் சத்தம்.. எத்தனை விதவிதமான வண்ணப் பாவாடைத் தாவணியில் சிலுசிலுவென்றிருப்பாள்..

‘ ‘அம்மா.. கொஞ்சூண்டு சக்கர வேணும்.. ‘ ‘, ‘ ‘திருப்பதி பிரசாதம் அப்பா குடுத்துட்டு வாடின்னார்.. ‘ ‘. ‘ ‘நாளைக்கி பஞ்சாங்கம் பாத்து நல்ல நாளான்னு.. ‘ ‘, என்று ஏதாவது சொல்லிக் கொண்டுத் தனக்காகப் பிறந்தவனைப் பார்ப்பதற்குச் சாக்கிட்டுி அவர் தாயாரைப் பார்க்க வருவாள்.. அவரும் அவள் ஏக்கத்தை நிறைவேற்றுவார்..

‘ ‘வைஜெயந்தி.. ‘ ‘, என்றழைப்பார்.. தாய் சமையலறையில்..

‘ ‘என்ன.. ‘ ‘, முகமெங்கும் பூரிக்கும் காதலுடன்.. அவளை விழுங்கிவிடுவதைப் போல பார்ப்பார்.. நீலத்தாவணி.. கழுத்தில் மெல்லிய சங்கிலி.. செழிப்பான கன்னங்கள்.. லேசான மாறுகண்.. வாசலிருந்து வரும் வெளுச்சம் பாவாடை வழியாக ஊடுருவி வர, நிழலாய்த் தெரியும் அளவான அழகான வாழைத்தண்டு கால்கள், கிளாச்சியூட்ட..

‘ ‘ ஒரு அல்ஜுப்ரா சம் வரலைன்னு சொன்னியே.. நா போட்டுட்டேன்.. இந்தா.. ‘ ‘, அறையின் உள் வந்தவளைக் கையைப் பிடித்திழுத்து.. அத்துமீறல்கள்.. விடுவித்துக் கொண்டு ஒரே ஓட்டம்தான்..

கல்லூரி முடித்து நல்ல வேலை கிடைத்த போது, சொந்தங்கள் மீண்டும் வேறுவகையில் தூபம் போட்டாீகள்.. ‘ ‘டேய்..ஃபர்ஸ்ட் கிளாஸ் உத்யோகம்.. மாமி.. நல்ல வரனா பாருங்கோ.. பத்தாங்கிளாசே பாஸ் பண்ணல.. அந்தத் தற்குறிய கட்டிண்டு கஷ்டப் படணுமேன்னு தலையெழுத்தா.. ? பெரிய எடமெல்லாம் க்யூவுல நிப்பான்னா.. ‘ ‘, என்ற போது, ஸ்ரீதருக்குச் சரிதான் என்றே தோன்றியது.. தாயாருக்கு இஷ்டமில்லை.. தயங்கினாள்.. ‘ ‘எப்படிடா.. ? ‘ ‘,

‘ ‘அம்மா.. நீ வேறம்மா.. ஜாதகத்தில தோஷம் அது இதுன்னு ஏதாவது சொல்லிடும்மா.. ‘ ‘, என்று இவரே யோசனையும் சொல்லிக் கொடுத்தார்..

ஆயிற்று.. இரண்யகசிபுவைப் போல அவள் மனதைக் கிழித்தாகிவிட்டது.

என்றாவது வைஜெயந்தியைப் பாீக்க நேரிட்டாலும், குற்றவுணர்வு ஏற்பட்டதில்லையே இந்தச் சாடிச மனதிற்கு.. ‘ ‘நா எவ்வளவோ சொன்னேன்.. அம்மாதான்.. ஜாதகம் அது இதுன்னு.. ‘ ‘, என்று மாற்றிப் பேசியிருக்கிறார்.. உடனடியாகப் பிரச்சனையிலிருந்து தப்பிக்க எண்ணும் மனம்.. பிறர் சோகங்களை

ரகசியமாய் ரசிக்கும் குரூரம்.. காய்ந்த சருகாய்ப் போனாள், வைஜெயந்தி.. இத்தனை வருடத்திற்குப் பின் சற்று வருத்தப்பட வைக்கிறதே மனம்..

வயசாகிறதோ..

அலுவலகத்தில் எத்தனையோ நண்பர்களை எதிரிகளாக்கிக் கொண்டிருக்கிறார்.. சாதி மாறிக் காதலித்தவர்கள் பாதையில் மூக்கை நுழைத்து அவமானப் பட்டிருக்கிறார்.. பதவி உயர்வுத் தேர்விலும் முறைகேடான வழிமுறைகளை நாடிச் சென்றிருக்கிறார்.. இப்போதுகூட பணியின் இறுதிக் காலகட்டத்தில், சண்முகத்திற்கு எதிராகத்தான் தீங்கிழைத்திருக்கிறார். சண்முகம் வழக்கு வந்தபோது, பெரியவர் மற்ற சக அதிகாரியுடன் கலந்து ஆலோசிக்க எண்ணினார். சண்முகத்திற்குக் குற்றப்பத்திரிக்கை மட்டும் தாக்கல் செய்யலாமா என்ற யோசனை வந்த போது,

அவனை இடைநீக்கம் செய்துதான், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்ற 1979 நடைமுறையைக் காட்டி வாதிட்டார்.. சக அதிகாரி, கோதண்டராமன், அதெல்லாம் வேண்டாம் என்று கூறிய போதும், தான் பிடித்த முயலுக்கு என்ற 1979 நடைமுறையைத் திரும்பத் திரும்ப வலியுறுத்தினார்.. ஆனால் 1982 நடைமுறை வேறு மாதிரி இருப்பினும் – அது ஸ்ரீதருக்குத் தெரிந்தும், துரதிருஷ்டவசமாக மற்றவர்கள் அறிந்திருக்கவில்லை.. அதனால் இவர் வாதம் ஏற்றுக்கொள்ளப் பட்டு, சண்முகத்திற்கு இடைநீக்கம் வழங்கப்பட்டது.. ஒரு வருடம் முடியப் போகிறது.. அவனும் நடையாய் நடக்கிறான்.. ‘ ‘பாக்கலாம் போப்பா.. ‘ ‘, என்று கூறி அனுப்புவார்.. குற்றப்பத்திரிக்கை மிகவும் வன்மத்துடன் தயாரிக்கப் பட்டிருப்பதால், அவனக்குப் பெரும் தீங்கு நேரவும் அதிகமாக வாய்ப்பிருக்கிறது.. அதை அவனிடம் தெரிவிக்கவில்லை..

அன்று சண்முகம் இவரைப் பார்க்க வந்திருந்த போது அழுதேவிட்டான்.. ‘ ‘சார்.. ரொம்ப கஸ்டப் படறேன்.. மனசு வய்யிங்க.. ‘ ‘, என்றபோது வாழ்க்கையில் முதன் முறையாக அந்தக் குரல் அவரைப் பாதித்ததை உணர்ந்தார்.. இருப்பினும் என்ன செய்ய முடியும்.. ? கை மீறிவிட்டதே.. ‘ ‘இதப் பாருப்பா.. நா ரிடையர் ஆகப் போறேன்.. மேலப் போய்ப் பாரு.. ‘ ‘, என்று சொல்லியனுப்பினார்..

இது இரண்டாவது நாள்.. எவ்வளவு வெட்டித்தனமாகப் படுத்துக் கொண்டிருப்பது.. பைத்தியம் பிடித்துவிடும் போலிருக்கிறது.. இந்த இரண்டு நாளும் சரியான தூக்கம் இல்லை.. சாப்பாடு இல்லை.. நண்பர்களும் இல்லை.. மரணம் வந்துவிடுமோ என்று தோன்றிக் கொண்டேயிருக்கிறது.. அதை மறக்க ஏதாவது செய்ய வேண்டும்.. பணியில் சேர்ந்தது முதல் ஓய்வு பெற்ற வரை சம்பவங்களை எத்தனை முறைகள்தான் இந்த அறையில், தொழுவத்தில் மாடு அசை போடுவதைப் போல நினைத்துக் கொண்டிருப்பது.. மனைவியின் நினைவு வேறு அலைக்கழித்தது.. அப்பா.. எத்தனை மோசமான நீர்க்குமிழி வாழ்க்கை இது.. காற்றைப் பிடுங்கிவிட்ட பலூனைப் போல.. அன்று இரவு அப்படித்தான் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தாள்.. உறவினர் திருமணத்திற்குச் செல்ல வேண்டும், அப்படியே அந்தக் கோவிலுக்குச் சென்றுவிட்டு, யாரோ சினேகிதியைப் பார்த்துவிட்டுப் வரப்போகிறேன் என்று.. அடுத்த நாள் காலையில் சீக்கிரமாகவே இவருக்கு விழிப்புத் தட்டிவிட்டது.. எழுந்து வந்து கூடத்தில் அமர்ந்தவர், சன் டிவியில் ராசி பலன் சொல்ல ஆரம்பித்தும் இவள் எழாததைச் சந்தேகித்துப் போய்ப் பார்த்தால்… ஒன்றுமே இல்லாத இந்த வாழ்க்கையில், ஏன் இப்படிப் பிணக்குகளை வளர்த்துக் கொண்டிருக்கிறேன்..

வெளுயே காலாற நடந்து வந்தார்.. திருமண மண்டபத்தைக் கடந்து வந்தார்.. அடுத்து நாற்சந்தி.. அதைத் தொடர்ந்து சென்றார்.. சண்முகம் நினைவு வந்தது.. அட.. அவனும் நம் ஏரியாக்காரன்தானே.. அங்கு பல குடிசைகள் இருந்தன.. அங்கே செல்வதற்குச் சற்று தயக்கமாக இருந்தது.. அவனைப் பார்த்து, மன்னிப்பு கேட்போம்.. என்னால் ஏதாவது முடிந்த உதவியைக் கட்டாயம் செய்வேன் என்ற சிறு நம்பிக்கையையாவது கொடுப்போம் என்றே தோன்றியது.. அந்தக் குடிசைகள் இருக்கும் பக்கம் சென்றால், கண்களில் தென்படுவான்.. ஓர் அடி எடுத்தவர்,

தயங்கினார்.. பின்னர் திரும்பி நடந்தார்.. பிறகு பார்த்துக் கொள்வோம்..

வீடு திரும்பிக் கொண்டிருந்தவரை உரசியவாறு ஒரு சைக்கிள்.. அட.. சண்முகம்.. ‘ ‘சார்.. வாங்க.. சார்.. ‘ ‘, வரவேற்றான்..

‘ ‘பரவாயில்லப்பா.. ‘ ‘, தயங்கினார்..

‘ ‘அட வாங்க சார்.. வூட்ல ஏதாவது வந்து சாப்புட்டுப் போங்க.. ‘ ‘, என்றான்.

மறுத்தார்.., ‘ ‘சார்.. நம்ம விசயம் எதாவது தெரியுமா.. ‘ ‘, பரிதாபமாகப் பார்த்தான்.

அவரும் சொல்லத்தான் நினைத்தார்.. இருந்தும் இப்படித்தான் பேசினார்..

‘ ‘அநியாயம்ப்பா.. நா என்ன செய்ய முடியும்.. ? ஆபீஸர் மீட்டிங்ல படிச்சுப் படிச்சு எவ்வளவோ சொன்னேன்.. ஆனா அந்தக் கோதண்டராமன்தான் உன்ன சஸ்பெண்டு பண்ணணும்னு ஒத்த கால்ல நின்னார்.. நா சொன்னேன்னு சொல்லிடாத.. ‘ ‘, என்றார்..

—-

prabhabadri@yahoo.com

Series Navigation

பத்ரிநாத்

பத்ரிநாத்