பிறை நிலவுகள்.

This entry is part [part not set] of 42 in the series 20030626_Issue

எம்.கே.குமார்.


ராசாத்தி மல்லாக்கப்படுத்திருந்தாள். ஐந்து மணிக்கே அவளுக்கு விழிப்பு வந்துவிட்டது. அதற்குப்பின் தூக்கமே வரவில்லை. சென்னைப்பட்டிணத்தில் அதிகாலை ஐந்து மணிக்கு விழிப்பது என்பதே பாவம். காய்கறி, மீன் வியாபாரம் செய்பவர்களும் வயிறு பெருத்தவர்களும் மட்டுமே அந்த நேரத்தில் எழுந்திருப்பார்கள். வியாபாரம் செய்பவர்கள் கொள்முதல் செய்வதற்கும் வயிறு பெருத்தவர்கள் கொண்டமுதலை இறக்குவதற்கும் எழுந்திருப்பார்கள். ‘இரண்டையும் நான் செய்யவில்லை. பின் எதற்கு நான் விழித்துக்கொண்டேன் ‘ என நினைத்துக்கொண்டாள்.

வயிற்றைப்போட்டு புரட்டியது அவளுக்கு. வாந்தி வருவதுபோல் கூட இருந்தது. நேற்று என்ன சாப்பிட்டோம் என நினைத்துப்பார்த்தாள். ஒருவேளை வயிற்றைப்போட்டு புரட்டுவதற்கு அதுவும் கூட காரணமோ என நினைத்தாள். ஒரு பக்கம் பசிப்பது போலவும் இருந்தது. கமலா கல்யாணத்திற்கு சென்றவள் நேற்று இரவுதான் திரும்பி வந்தாள். வரும்போது கமலா அம்மா கொடுத்தனுப்பிய பண்டங்களையும் கொண்டுவந்திருந்தாள். அதுதான் இரவு உணவாகியது அவளுக்கும் அவனுக்கும்.

‘கல்யாணமா அது ? யப்பா! பெரிய திருவிழா மாதிரி அல்லவா இருந்தது. கமலா கொடுத்து வைத்தவள்தான்.அவருடைய கணவருக்குத்தான் எவ்வளவு தெரிந்தவர்கள் ? சும்மாவா, உதவி இயக்குனராச்சே! ‘. என நினைத்துக்கொண்டாள்.

கமலாவும் அவளைப்போலத்தான். ஆனால் நல்ல நிறம். கதாநாயகிக்கு அருகில் நின்று ஆடும் தகுதி படைத்தவள். சிலசமயங்களில் கதாநாயகியைவிட அழகாய் இருப்பதால் அங்கிருந்து கொஞ்சம் தள்ளி நிற்கவைப்பார்கள். நன்றாகவும் நடனமாடுவாள். அதனால்தானே இந்த கிருபாவுக்குப்பிடித்துப்போய்விட்டது.

கிருபா சமீபத்தில் வந்த ஒருசில படங்களின் உதவி இயக்குனர். ஒரே இயக்குனரிடம் உதவி இயக்குனராய் சிலவருடங்கள் இருந்தாலும் அந்த இயக்குனரின் எல்லாப்படங்களும் வெற்றிப்படங்களாகவே இருந்தன. எல்லாவற்றிற்கும் காரணம் உதவி இயக்குனரான கிருபாதான் என்பது தயாரிப்பாளர்களுக்கு விளங்கியது.கதை விவாதங்களில் கலந்துகொள்ளும்போது அதைக்கவனித்திருக்கிறார்கள் அவர்கள். காட்சியைப்புட்டுப்புட்டு வைப்பான். திரைக்கதையின்தொய்வுகளை தயங்காமல் சொல்வான். புதிதாக நல்ல ஐடியாக்களைச் சொல்லி அதைச் செலவில்லாமல் செய்வதற்கும் திட்டம் சொல்வான்.

இப்படிப்பட்ட புத்திசாலிக்கு இன்னொரு திறமையானவளை பிடித்துப்போவதில் என்ன அதிசயம் இருக்கிறது ? அவனது படங்களின் பாடல்கள் ஒன்றிரண்டுக்கு நடனமாடச்சென்றாள் கமலா. அப்படி இப்படி பார்த்தார்கள். பிடித்துப்போய்விட்டது. ராசாத்தியிடம்தான் முதலில் சொன்னாள் கமலா. அக்கா அக்கா என்று அன்போடு பேசுவாள். அப்படித்தான் கிருபாவும்.

கல்யாணத்திற்கு இரண்டு நாளைக்கு முன்னே வந்துவிட்டாள் ராசாத்தி. ஏறக்குறைய எல்லா வேலைகளையுமே அவள்தான் செய்தாள். கல்யாணத்திற்கு வரும் சொந்தக்காரப்பெண்களெல்லாம் இப்படி சரசரக்க பட்டுச்சேலை கட்டிவந்து உட்கார்ந்து கொண்டால் வீட்டு வேலைகளையெல்லாம் யார் பார்ப்பது ?அங்குமிங்கும் ஓடினாள். எல்லோரையும் வரவேற்று உபசரித்தாள். சமையலறைக்கும் சென்றாள். மணவறைக்கும் அவ்வப்போது வந்துசென்றாள்.

கமலாவும் அவள் அம்மாவும் அவள் கைகளை எடுத்து கண்களில் ஒற்றிக்கொண்டார்கள். ‘என் மூத்த பொண்ணு மாதிரி எல்லா வேலைகளையும் நீதாம்மா பாத்தே ‘ன்னு அவள் வீட்டுக்கு வரும்போது நிறைய பண்டங்களும் ஒரு சேலையும் கொடுத்தாள் கமலாவின் அம்மா.

கிருபாவும் மனப்பூர்வமாக நன்றி சொன்னான்.

ராசாத்திக்கு இன்னும் வயிற்றுப்புரட்டல் நின்றபாடில்லை. தலைமாட்டில் வைத்திருந்த கடிகாரத்தில் மணியைப்பார்த்தாள். மணியைப்பார்த்து என்ன ஆகப்போகிறது. எழுந்து பாத்ரூம் சென்றாள். அடிவயிற்று நாடாக்களைக்கொஞ்சம் தளர்த்திவிட்டாள்.கொஞ்சம் தண்ணி அள்ளி வயிற்றின் மேல் தேய்த்துக்கொண்டாள். இப்போது புரிந்தது வயிற்றுப்புரட்டலுக்கு காரணம்.

‘அட மடச்சியா நான் ? எப்படி இவ்வளவு தாமதமாக உணர்கிறேன். நன்றாகத்தூங்கிய அசதியில் தெரியவில்லை போலும். என்ன ? இரண்டு நாட்கள் சீக்கிரமாக. அப்போ நாளைக்கி கோயிலுக்குப்போகமுடியாதா ? ‘ மனதுக்குள் சின்னதொரு வேதனை வந்துவிட்டது அவளுக்கு.

எழுந்து படுக்கைகளை ஒதுக்கிவைத்தாள். ‘வீட்டைக்கழுவ வேண்டுமா ? அய்யோ இதுவேறு இம்சை! ‘

அப்புறம் கழுவலாம் என முடிவெடுத்தாள். குளித்துவிட்டு வந்தாள்.

சந்துரு இன்னும் தூங்கிக்கொண்டிருந்தான். கால்வரை போர்வையை இழுத்துவிட்டாள். குனிந்து உட்கார்ந்து அவன் தலைமுடியைக்கோதிவிட்டாள். தலைமுடி பஞ்சு போல இருந்தது. ஆனால் செம்பட்டை நிறத்தில். கடைவாய் ஓரம் ஓடிய எச்சிலைத்துடைத்துவிட்டாள். படுக்கையிலே ‘ஒண்ணு ‘க்குப்போயிருந்தான் அவன்.

அண்ணன் ஞாபகம் வந்தது அவளுக்கு.

‘அவனும் இப்படித்தான், பத்தாவது படிக்கும்வரை. ஆனால் நள்ளிரவில் யாருக்கும் தெரியாமல் எழுந்து தான் போட்டிருந்த ஈரமான கால்சட்டையைக்கழட்டி ஒரு ஓரத்தில் வீசிவிட்டு இன்னொன்றை எடுத்து மாட்டிக்கொண்டு வந்து பேசாமல் படுத்துவிடுவான். யாருக்கும் தெரியாதா என்ன ? அவனைத்தவிர நான் மட்டுமே இருக்கிறேன். நான் கால்சட்டை போடுவேனா என்ன ? ‘

இதழோரம் சிரிப்பு வந்தது அவளுக்கு. ‘சந்துருவும் அப்படித்தான் இருக்கிறான். எட்டு வயசுதானே ஆகிறது ‘ என நினைத்துக்கொண்டாள்.

சாமி படத்தின் எதிரே இருந்த திரையை மூடி வைத்தாள். ‘இவ்வளவு நேரம் திறந்தா இருந்தது ‘. சந்துருவுக்கு அருகிலே திரும்பவும்படுத்துக்கொண்டாள். தான் எதுக்காகவோ ஏங்குவது போல் இருந்தது அவளின் மனநிலை.

திரும்பவும் ஒரு பதினெட்டு வயது வருமா என ஏங்கியது மனசு.

பதினெட்டு வந்தாலும் பசுபதி வருவானா ? பசுபதி ராசாத்தியின் நாயகன். பதினெட்டுப்பட்டியின் காடுமலைகளுக்கெல்லாம் அவர்களைத்தெரியும்.

ராசாத்தியைக் காதலித்தான் அவன். சினிமாவின் நடனக்குழு ஆட்களில் அவனும் ஒருவன். ஊருக்கு வந்தபோது மூக்கும் முழியுமாக இருந்த அவளைப்பார்த்தான். சாடையில் பேசினான். விவரங்களைப்பரிமாறிக்கொண்டார்கள். விவரம் தெரிந்தபோது கிராமத்து அப்பா கொதித்தார். அம்மா அழுதாள். ஒருநாள் ஊரை விட்டு ஓடிவந்தார்கள்.சென்னையின் சினிமா பாக்கம் அது. ஒரு ஓட்டு வீட்டின் இன்னொரு பாதியை வாடகைக்குப்பிடித்தார்கள். சந்தோசமாக இருந்தார்கள். சந்துரு பிறந்தான். அப்புறம்தான் விதி விளையாடியது. சாலை விபத்து ஒன்றில் அவன் காலமாகிப்போனான். கதறி அழுதாள். அழும்போது கூட அனாதையாக அழுகிறோமே என்ற வெறுப்பு அவளுக்கு. அதுக்காகவும் அழுதாள்.

கமலாவின் அம்மாதான் அடைக்கலம் கொடுத்தாள். வாழ்வதற்கு வழி சொன்னாள். சினிமா நடனக்குழுவில் சேர்ந்தாள். ஐம்பதாவது ஆளாக ஆடினாள். ஏதோ கொஞ்சம் பிழைப்போடியது. அப்படி இப்படி என்று முன்னேறினாள். முப்பதாவது ஆளாகினாள்.

என்னதான் ஆனாலும் ஊருக்குப்போவதில்லை என முடிவெடுத்திருந்தாள். இன்று வரை அப்படித்தான் ஏதோ போய்க்கொண்டிருக்கிறது.

ராசாத்தி பெருமூச்சு ஒன்றை விட்டாள்.

பால்காரன் சத்தம் கேட்டது. எழுந்து வெளியே வந்தாள். அதிகாலையிலே குளித்திருப்பதைப் பால்காரன் பார்த்துக்கொண்டான். ஒருமாதிரியாக சிரித்தான். அவன் புத்தி அது.

அடுப்பைப் பற்ற வைத்தாள். பாலைக்கொதிக்க வைத்தாள். அரிசி டப்பாவில் இன்னும் அரைகிலோ இருந்தது. ஒரு மாதத்திற்கு முன் வாங்கியது. பரவாயில்லை இன்னும் ஓரிரு நாட்கள் பிழைப்பு ஓடும்.அப்புறம் என்ன செய்வது ?

பால் பொங்கி வந்தது. எடுத்து டா கலந்து கொண்டாள். முதல் துளி உள்ளே செல்லும்போது அப்பாடா என்றிருந்தது. சந்துருவுக்கு தனியே பாலை எடுத்து வைத்தாள்.

காலை ஒன்பது மணி ஆகியது. சென்னையின் பரபரப்பு வாழ்க்கை ஆரம்பமாகிவிட்டது. வாகனங்களின் சத்தம் அவ்வப்போது பேரிரைச்சலாகவும் கேட்டுக்கொண்டிருந்தது. சந்துருவை எழுப்ப நினைத்தாள். வேண்டாம் என விட்டு விட்டாள். இன்றைக்கு பள்ளி இல்லை என நினைவு வந்ததால்.

யாரோ கதவைத்தட்டும் சத்தம் கேட்டது. எழுந்து வந்து கதைவைத்திறந்தாள். சுந்தரம் நின்றிருந்தார்.

‘வாங்கண்ணே. உள்ளே வாங்க ‘

‘ என்னம்மா எப்புடி இருக்கே ? ஒடம்புக்கெல்லாம் நல்லாயிருக்கா ? சந்துரு எப்படி இருக்கான் ? ‘

‘நல்லாயிருக்கோம்ண்ணே…என்னண்ணெ இந்தப்பக்கம் ? ‘

உள்ளே வந்து அமர்ந்தார் அவர். மின்விசிறியை அவர் பக்கம் திருப்பிவிட்டாள்.

‘ஒண்ணுமில்லேம்மா..புதுசா ஒரு படம் புக்காயிருக்கு. நாலு பாட்டாம். நம்ம சேனாதிபதி இருக்காரே அவர்தான் டான்ஸ் மாஸ்டர். நல்ல மனுஷன். எங்கிட்டெ காண்ராக்ட் விட்டுருக்கார் சப் ஆர்டிஸ்ட்க்கு. அதான் நீயும் கஷ்டப்படுறியே….ஒன்னையும் ஒரு ஆளா போடலாமுன்னு. ‘

‘ரொம்ப சந்தோசமுண்ணே……..எத்தினி நாளுண்ணே கூலி கெடைக்கும் ? ‘

‘எப்படியும் 5 நாளு வரும்ன்னு நெனைக்கிறேன்.. ஏன்னா ஒண்ணு இல்லாட்டி ரெண்டுபாட்டு தாம்மா குரூப் டான்ஸ் இருக்கும். மத்ததெல்லாம் சோலோவா இருக்கும். ‘

‘ரொம்ப நன்றிண்ணே. எப்போண்ணே வரணும் ? ‘

‘சரிம்மா….இன்னைக்கி வர்றியா ? இன்னக்கித்தான் ஆரம்பிக்கிறாங்க…….ஷூட்டிங். போனாத்தான் தெரியும் என்ன பாட்டுன்னு. ‘

‘சரிண்ணே…..எத்தனை மணிக்கு ? ஏவிஎம் ஆ ? இல்லே பிலிம்சிட்டியாண்ணே ? ‘

‘பிலிம்சிட்டிமா. வந்துருக்கியல்லே தெரியுமில்லே….லேடிஸ் பாலிடெக்னிக்குலே இறங்கி கொஞ்சம் நடக்கணும். சாயங்காலம் 2 மணிக்கு. ‘

‘தெரியுமுண்ணே…..வந்துடுறேன்.இருங்கண்ணே காப்பி போடுறேன்…… ‘

‘இல்லேம்மா. நான் கெளம்புறேன். வந்துடு. ‘

சுந்தரம் கிளம்பிச்சென்றார்.

கடவுளைக்கண்டது போல் இருந்தது அவளுக்கு.

‘யப்பா! எப்படியும் நான்கைந்து நாளுக்காவது வேலை இருக்கும். நாளுக்கு சாப்பாடு போக நூறு வைத்தாலும் நானூறு கிடைக்கும். சந்துருவை சீக்கிரமாக பள்ளிக்கு அனுப்பிவிட்டே செல்லலாம்.ஒன்றும் பிரச்சினை இல்லை. ‘

**

முதல் பாடல் ஷூட்டிங் ஆரம்பமாகியது. ராசாத்தி ஒரு மணிக்கே அங்கு இருந்தாள். நடன இயக்குனர் முதலில் இவளைப்பார்த்து வாம்மா என்றார்.

பயிற்சிகள் முடிந்து பாதிப்பாடல் ஷூட்டிங் செய்யப்பட்டது. வீட்டுக்குக்கிளம்பும்போது அவள் அருகில் வந்தார் படத்தின் இயக்குநர்.

‘எத்தனை வருஷமா டான்ஸ்குரூப்லே இருக்கீங்க ? ‘

‘வணக்கம் சார். நாளூ வருஷமா சார். ‘

‘இந்த சாரு மோருல்லாம் வேண்டாம். விடுங்க. அருமையான ஒரு கேரக்டர் ரோல் இருக்கு. பண்றீங்களா ? ‘

‘இருங்க. மொதல்லே நான் கதை கேரக்டர் பத்தி சொல்லிடுறேன். உங்க வயசுடைய ஒரு பொண்ணு. மீன் விக்கிற பொண்ணு. கதையிலெ வர்ற பணக்கார ஹீரோயினுக்கு ஃபிரண்ட். மத்ததெல்லாம் அப்புறம் சொல்லுறேன். எப்படியும் படம் முழுக்க நீங்க வர ஸ்கோப் இருக்கு. படத்தோட ஷெடூயுல் அறுபது நாள். எப்படியும் நாப்பது நாளுக்கு உங்களூக்கு ஷூட்டிங் இருக்கும். நல்ல பேரும் கிடைக்கும். என்ன சொல்றீங்க ? ‘

ராசாத்தி ஆடிப்போனாள். குரூப் டான்ஸில் கூட இடம் கிடைக்குமா என்றிருந்த அவளுக்கு படத்திலே வேடம். அதுவும் ஹீரோயினுக்கு தோழியாக. படக்கென்று அவன் கால்களில் விழலாமா என்றிருந்த அவளுக்கு கைகள் தானாக கூப்பிக்கொண்டன. பேச வார்த்தைகள் வராமல் ‘நன்றி சார் ‘ என்றாள் ஒரே வார்த்தையில்.

**

‘என்ன டயரெக்டர் சார் ? அந்தப்பொண்ணுக்குப்போயி இப்படி ஒரு ரோலு ? அப்ப நாம மொதல்லெ பாத்தோமே அவளுக்கு என்ன சொல்றது ? ‘

தயாரிப்பாளர் கடுப்பாகத்தான் பேசினார்.

‘எந்தப்பொண்ணு சார் ? ‘

‘என்ன இப்படிக்கேக்குறீங்க ? டிஸ்கஷன்னுக்கு கூப்பிட்டு அன்னக்கே ஒண்ணு பண்ணியாச்சி அவளே. அப்பவே சொன்னோம் அவதான் ஹீரோயின்னு. அப்பறம் அப்படி இப்படி மாத்தி அவளத்தூக்கி இதுக்குப்போட்டோம். இப்போ அதுவும் இல்லைன்னா ? ‘

‘என்ன சார் பண்ணுவா அவ ? மூஞ்சி வேணாமா சார் ? ஒடம்பக்காட்ட தொறந்துட்டுவந்துட்டா போதுமா ? ஒரு எக்ஸ்பிரஷன் வேணாம் ? இல்லே சார். என்னை மன்னிச்சுடுங்க. இவங்க இல்லாமே இந்தப்படம் பண்றது கொஞ்சம் கஷ்டம்.! ‘

தயாரிப்பாளர் கொஞ்சம் அடக்கி வாசித்தார். அவருக்குத்தெரியும் இது அருமையான கதை என்று.

‘எப்படியும் இப்போதெல்லாம் கதை உள்ள படங்கள்தான் ஓடுகின்றன. இவனுடைய முதல் படம் வேறு நல்ல ஹிட். செம வசூல். நமக்கென்ன ? அப்படியே வந்தால் அவளுக்கு இரண்டாம் படத்திலே ஒரு வாய்ப்புன்னு சொல்லிறவேண்டியதுதான். இல்லாட்டி கொஞ்சம் பணம். கழுதங்க. பணத்துக்கு மடங்காதது கெடக்கா என்ன ? ‘

****

ஒன்பது மணிக்கு வீட்டுக்கு வந்தாள். கதவு திறந்தே கிடந்தது.

உள்ளே சந்துரு உட்கார்ந்து படித்துக்கொண்டிருந்தான். அவன் அருகில் அவர்.

திக்கென்று இருந்தது அவளுக்கு.

‘என்ன இவ்வளவு லேட்டா வரீங்க. வெளியே எங்காவது போனீங்களா ? ‘

இதயத்தின் ஓட்டம் இரண்டு மூன்று மடங்காய் இருந்தது.

என்ன பதில் பேசுவதென்றே அவளுக்குத்தெரியவில்லை.

‘ம்ம். வாங்க எப்போ சார் வந்தீங்க ? என்ன இந்தப்பக்கம் சார் ? சுந்தரம் அண்ணன் கூட எதுவும் சொல்லலியே ?! ‘

‘அட……ஏன் இப்படி படபடக்குறீங்க ? அமைதியா உள்ளே போயி மொகத்தையெல்லாம் கழுவிட்டு வாங்க.

நான் வந்து அரைமணி நேரம் ஆகுது. சந்துரு கூட உக்காந்து படிச்சிக்கிட்டு இருக்கேன். ‘

‘இல்லே சார் ‘

‘ஒண்ணுமில்லே….போங்க. ‘

முகத்தை அலம்பிவிட்டு வெளியே வந்தாள். மனதின் படபடப்பு அடங்கவே இல்லை.

என்ன சொல்லப்போகிறாரோ ?

‘உட்காருங்க ராசாத்தி. மொதல்லே ஒரு விஷயத்தை நான் தெளிவா சொல்லிடுறேன். இதுக்கு நீங்க ஒத்துக்காட்டி கூட நான் உங்களை அந்த ரோல்லே இருந்து எடுக்க மாட்டேன். சரியா ? ‘

அப்பாடா என்றிருந்தது. ஆனால் வேறு ஏதோ பூதத்தைக்கிளப்புகிறாரே ?

‘சரி. இப்போ என் மனசிலே உள்ளதெ நான் சொல்லலாமா ? மொதல்லே உங்களை நான் அந்த மனசெல்லாம் பட ஷூட்டிங்லேதான் பார்த்தேன். அப்புறம் அப்படி இப்படி அங்கெ இங்கேன்னு. கிருபாவும் உங்களப்பத்தி சொன்னான். அப்புறம் நேத்து கிருபா கல்யாணத்துலே…….. ‘

அவர் தொடர்ந்து பேசப்பேச ராசாத்திக்கு என்னவோபோல் இருந்தது. என்ன தோணியதோ தெரியவில்லை. கால்களுக்குள் முகத்தைப் புதைத்துக்கொண்டு அழத்தொடங்கினாள்.

சந்துரு நடப்பது ஒன்றுமறியாமல் பார்த்துக்கொண்டிருந்தான்.

வெளியே காகம் ஒன்று கரைந்து கொண்டிருந்தது.

***

yemkaykumar@yahoo.com

எம்.கே.குமார்.

நண்பர்களுக்கு

விமர்சங்கள் நன்றியோடு வரவேற்கப்படுகின்றன.

நன்றி.

Series Navigation

எம்.கே.குமார்

எம்.கே.குமார்