இது ஒரு விவகாரமான கதை

This entry is part [part not set] of 34 in the series 20030607_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


உங்களுக்கு நம்ம கலாச்சாரத்துமேல என்ன அபிப்ராயம் இருக்குதோ ? எனக்குத் தெரியாது. இந்தக்கதையைப் படிச்சப்புறம் ஒரு அபிப்ராயத்துக்கு வாங்க. இப்போதைக்கு வேண்டாம்.

நாகரீகமோ, கலாச்சாரமோ எல்லாமே பணம், படிப்பு, வயசு மற்றும் சுதந்திரம் சம்பந்தப்பட்டது. அதிலும்

நம்மைச் சுற்றி அன்னியர்கள், முகம் தெரியாதவர்கள் அதிகமிருப்பின் எல்லை மீறுகின்ற வேகம் அதிகம்.

இது மனம் சம்பந்தப்பட்டதுன்னு சொல்லமாட்டேன். சாதாரண மனுஷன் மனசோட விவாதிச்சுக் காரியத்தைச் செய்யறதில்லை. இந்தியாவிற் கலாச்சாரத்தைப் பற்றிப் வாய் கிழியப் பேசும் பட்டிமன்ற தலைவர்கள் கூட அமெரிக்காவுக்கோ ஐரோப்பாவிற்கோ வந்தால், கோட்டு சூட்டில்லாம இருப்பதில்லை.

காந்தியைப் போன்ற அசாதரண மனுஷன் மனசோட விவாதிச்சு ‘தன்னுடைய நிஜம் கோட்டு சூட்டு அல்ல என்கிறான். இது எத்தனை பேருக்குச் சாத்தியம் ?

நான் அதாவது விக்ரம், பிரான்சுக்கு வந்து எட்டு ஆண்டுகள் ஓடிவிட்டன. உடனே இஞ்சினீயரா ? டாக்டரா ? என்று கேட்டுவிடவேண்டாம். பிரஞ்சில் ஒரு டிப்ளமா, கார் மெக்கானிக் தொழில், அப்பாவால் வந்த பிரெஞ்சுக் குடியுரிமை இவற்றோடு இங்கு வந்தவன், அதிகமான இந்நாட்டுச் சுதந்திரத்தில் திக்கு முக்காடியது என்னவோ உண்மை. இந்தக் கதைக்கு என்னைப் பற்றிய விவரங்கள் இது போதும்.

‘நிச்சயமாச் சொல்லு, நீ அப்படியெல்லாம் செய்யமாட்டேன்னு சொல்லு. இங்கே எப்படியெல்லாம் இருந்த. இந்தியாவுக்கு வந்து உன் தங்கைகளைப் பாரு குனிந்தத் தலை நிமிராமல் காலேஜுக்கு போயிட்டு, அம்மாவுக்கு ஒத்தாசையா எல்லாம் செய்துகொண்டு, வெள்ளிக்கிழமைதோறும் துர்க்கையம்மன் சன்னதிக்குச் சென்று அகல் விளக்கேற்றி… அவளுவ இரண்டுபேரும் பத்தரமாத்து தங்கங்க.. நீயும் இருக்கிறியே நம்ம பண்பை கெடுக்கறதுக்குன்னு. எதையாவது செய், எவளாவது ஒரு வெள்ளைக்காரியை இழுத்துக்கொண்டுவந்து இவளைத்தான் கல்யாணம் செஞ்சுக்கப்போறேன்னு மட்டும் சொல்லிடாதே! உன்னை நம்பி இரண்டு தங்கைகள் இருக்கறதை மறந்துடாதே… ‘

அப்பா எழுதுகின்ற கடிதந்தோறும் இந்த வரிகள் எப்படியோ தொற்றிக் கொள்ளும். காரணமிருக்கிறது. என்னைப் பற்றிய தகவல்கள் அவரை அப்படி எழுதத் தூண்டியிருக்கக்கூடும்.

இதுல மறைக்கிறதுக்கு ஒண்ணுமில்லை. பெண்களை நான் உடல் தேவைக்காக சற்று அதிகமாகவே உபயோகிச்சிருக்கேன். என் பங்கு இதுல பெருசா ஒண்ணுமில்ல. இங்க அவங்களும் ஒத்துழைச்சதாலேதான் இது முடிஞ்சுது. அதிலும் ‘வூஸ் ஏத் ஏந்தியன் ‘,(நீ இந்தியநா ?) என்று ஆச்சரியப் படுகின்ற பெண்களைக் கண்ணிவைப்பது ரொம்பச் சுலபம்.

இனி மோனிகா..

டயட்டிலிருக்கிறேன் என்று சொல்லி அநியாயத்துக்கு எல்லாத்தையும் சிறிதாக்கிக் கொண்ட ரகம் அல்ல அவள். எல்லாமே அளவோடு, ஆண்களை வீழ்த்தக்கூடிய அத்தனை சாகஸமும் உடலில் இருந்தது. தகப்பன் இத்தாலியன், அம்மாக்காரி அல்ஸாசியன். என் ஜாகைக்கு எதிர் ஜாகை. அவளது ஒவ்வொரு அசைவும் அத்துப்படி.

எங்களுக்குள் ஒரு ஸ்நேகம். ஸ்நேகம்னா மாலை சூரியன் நிறத்தில் அதிகம் ஒப்பனையில்லாமல், ‘லெ மோந்து ‘, ‘ஃபிகாரோ ‘ போன்ற விஷயமுள்ள பிரெஞ்சு பத்திரிகைகளை கைகளில் இடுக்கிக் கெ ‘ண்டு, சிரமத்துக்கிடையில் அவள் தன் ‘பெழோ 206 ‘ லிருந்து கடைக்குச் சென்று திரும்பியதன் அடையாளமாக, ‘விட்டல் ‘ தண்ணீர் பாட்டில்களையும், ‘டெட்ராபாக் ‘ பாலையும் இறக்கும் போதெல்லாம் உதவி செய்திருக்கிறேன். அவளைப் பார்க்கும் போதெல்லாம் ஒரு ‘ஹாய் ‘ ‘ ஒரு ‘போன்ழூர் ‘ அத்துடன் சரி. பெருசாக ஒண்ணுமில்லை. ஆனா அந்தப் ‘பெருசுக்குத்தான் தூண்டிலோடு க ‘த்திருந்தேன்.

அன்று பாருங்கள், பார்ிஸுக்கு இரயிலில் சென்றுவிட்டுத் திரும்பியிருந்தேன். நான் இருந்த நகரமான நான்ஸி ஸ்டேஷனில் இறங்கும்போது, நள்ளிரவைத் தாண்டியிருந்தது. ஜனவரி மாதம் என்பதால் நல்ல குளிர். பனி கொட்டிக் கொண்டிருந்தது. சாலையிற் நிறுத்தபட்ட வாகனங்கள், கட்டடங்கள் எல்லாமே பனியில் மூடியிருந்தன. இரவு 12 மணிக்குமேல் என்பதால் பஸ்ஸோ, ட்ராமோ இல்லை. டாக்ஸியைத்தான் பிடிக்க வேண்டும். சாலையைக் கடந்து பஸ் ஸ்டாப்பில் நின்று டாக்ஸி ஏதேனும் வருகின்றதா என்று காத்திருந்தேன்.

அப்போதுதான் அவளை – மோனிகாவை கவனித்தேன்.

‘ஹலோ…! வூ ராந்த்ரே ( வீட்டுக்குத் திரும்புகின்றாயா ?) என்று பிரஞ்சில் கேட்டேன்.

‘உய்.. (ஆமாம்) ‘, என்றாள் கண்களில் ஆச்சரியத்துடன்.

டாக்ஸி வரவும், நிறுத்திவிட்டு,

‘சேர்ந்தே போகலாமே ‘ என்றேன்.

அவள் மறுப்பேதும் சொல்லாமல், என்னுடன் பின்னிருக்கையில் பக்கத்தில் உட்கார்ந்தாள். முதன் முதலாக அவளை நெருங்கியிருந்தேன்.

மனசு ‘காதல் பண்ணுடா ‘ என்றது. ‘அவசரப் படாதே ‘ என்று அடக்கினேன். டாக்ஸி டிரைவரிடம், ‘ஆர்க் ஆன் சியல்னு ‘ எங்கள் இருப்பிடத்தைத் சொல்ல, டாக்ஸி ஓடத்தொடங்கியது.

‘எங்கிருந்து வர்றீங்க ? ‘, அவள்தான் கேட்டாள்.

‘பாரீஸ்லிருந்து வரேன். கார் த லெஸ்தில் அவசர அவரமாக ட்ரெய்ன் பிடிக்க வேண்டியிருந்தது. ‘

‘… ‘

எங்கேயாவது சாண்ட்விச் கிடைத்தால் வாங்கிக் கொள்ளலாம் ‘ நானே பேசினேன்.

அவள் சற்றே யோசித்தாள்.

‘சரி ஒண்ணு செய்யலாம். நான் கூட சாப்பிடலை. என் கூட சாப்பிடலாமே! என் அப்பார்ட்மெண்டில் எல்லாம் ரெடியாயிருக்குது ‘

பெரிய விருந்து ஒன்றுக்கு மனசும் உடம்பும் ஒரு சேரத் தயாரானது.

‘மச்சம்டா ‘ன்னு மனசு சொன்னாலும் அதனை வெளிக்காட்டிக் கொள்ளமல்,

‘ஓ.கே. ஆனா ஒரு கண்டிஷன், நீங்க ஒரு முறை என்னோட இந்திய ரெஸ்டாரெண்டுக்கு வரணும் ‘

‘தக்கோர் (சம்மதம்) ‘ என்றவள் சிரித்துக் கொண்டாள். எனக்குள் கொஞ்சம் கொஞ்சமாய் உஷ்ணம் கூடிக் கொண்டிருந்தது.

டாக்ஸி எங்கள் ஜாகைக்கு வந்து நின்றது. நான் முதலில் இறங்கி, டாக்ஸிக் கட்டணத்தைச் செலுத்திவிட்டு அவள் பின்னே நடந்தேன்.

ரகசிய எண்களை ஒற்றி பைன் மரக் கதவைத் திறந்தவள், அவள் அப்பார்ட்மெண்டிற்குள் நுழைந்தவுடன் என் லெதர் ஜாக்கெட்டை வாங்கி அதற்குரிய ஸ்டாண்டில் மாட்டிவிட்டு,

‘அஸ்ஸயே வூ!(உட்க ‘ருங்கள்) ‘ என்றாள்.

அவளது சலோன்(வரவேற்பறை): டி.வி.டி. ஹோம் சினிமா சி.டி.டோல்பி, பிப்லியோத்தக், வான்ஹாக் ஓவியம் என அவளைப் போலவே அமர்க்களமாக இருந்தது.

அவள் நான் இருப்பதை மறந்தவளாக அவளது மேலங்கியைக் கழட்டிக் கையில் ஏந்திக் கொண்டே எதிரே இருந்த அறையில் நுழைந்து படுக்கையில் உட்கார்ந்து, ஹீட்டரைக் கூட்டி வைத்துவிட்டு, பனித் தூவலில் நனைந்திருந்த தன் தேன் நிறக் கூந்தலை டர்க்கி டவலாற் கண்ணாடியைப் பார்த்துக் கொண்டே அழுந்தத் துடைத்துக் கொண்டாள். பிறகு சமையலறைக்குள் செல்ல எனக்குள் இதயம் திடும் திடும் என்றது.

சிறிது நேரத்தில் சாண்ட்விச் வந்தது. ரொட்டி-சாலட்-சீஸ்-ஸ்டெக்ஹஷே என்று கொண்டுவந்தவள் இரண்டு கோக்கையும் உடைத்து வைத்தாள். எனக்கு பசி வேறு இடத்தில் வேறு விதமாக.

‘ என்ன யோசிக்கறீங்க ? ‘

‘உங்களைப் பார்த்ததுமே எனக்கு ஒரு மாதிரி, என்ன சொல்றது, எப்படிச் சொல்றதுன்னு தெரியலே. ‘

‘என்ன சொல்லணும் தைரியமாச் சொல்லுங்க! ‘

‘ஒண்ணுமில்லை! ‘

‘அப்ப சாப்பிடுங்க! ‘

‘என்னாலே சாப்பிடமுடியாது. எனக்கு வேற பசி. ‘

‘என்ன ? ‘

‘ந ‘ன் சற்று முன்ன மனசுல ஒண்ணுமில்லைன்னு பொய் சொன்னேன். ஆனா, நெறைய ஏராளமா. எப்படிச் சொல்றதுன்னு தயக்கமாயிருக்கு ‘

அவள் கொஞ்ச நேரம் பதில் சொல்லாமலிருந்தாள்.

‘என்ன சொல்ல வறேன்னா. ‘ நான் தான் மறுபடியும் ஆரம்பித்தேன்.

‘மிஸியே விக்ரம்! நீங்க எதுவும் சொல்லவேணாம். எனக்கு எல்லாமே புரியுது. இப்ப இதைப்பற்றி பேசவேணாம். முதல்ல சாப்பிடுங்க பிறகு பேசலாம். ‘

‘சாரி டியர்! என்னால காத்திருக்க முடியாது. நான் எதுவும் சொல்லாமலே உனக்குப் புரிஞ்சதுக்குச் சந்தோஷம். வா ‘ கையை எட்டிப் பிடித்தேன்.

‘நிறுத்துங்க! உங்களை என்னவோன்னு நெனைச்சு அழைச்சது தப்பாப் போச்சு, சொர்த்தே சில் வூப் பிளே( தயவு செய்து வெளியில் போகவும்) ‘.

‘என்னடி பெருசா பேசற. உங்களைப் பத்தி எனக்குத் தெரியாதா ?

‘இருக்கலாம்! நான் நீங்க நெனைக்கிற மாதிரி இல்ல. தயவுசெய்து வெளியில போகலைன்னா, போலீஸைக் கூப்பிட வேண்டியிருக்கும். ‘

போலீஸ் என்றதும் பயந்து போனேன். அவளை நிமிர்ந்து பார்க்கத் தைரியம் இல்லாமல், வால் நசுங்கிய பல்லியாகத் துடித்தவாறு ஓடி, எதிர்பக்கம் இருந்த என் ஜாகைக்குள் நுழைந்து கதவைச் சாத்திக்கொண்டேன். மனம் முழுக்க ரணம்.

‘எத்தனை பேரிடம் படுத்திருப்பா. என்கிட்ட பத்தினி வேஷம் போடறா. ச்சே! ‘

பிரிட்ஜைத் திறந்து ஒரு பீர் பாட்டிலைத் திறந்து வைத்துக்கொண்டு உட்கார்ந்த போதுதான் அப்பாவிடமிருந்து அன்றைய தபாலில் வந்திருந்த கடிதம் கண்ணில் பட்டது. முக்கிய விஷயம் இதுதான்:

‘நம்ம ரமாவுக்கு நீயில்லாம கல்யாணத்தை அவசரமா முடிக்க வேண்டியிருந்தது. அவளுக்கும் நம்ம எதிர்த்தாப்புல இருந்த டைலருக்கும் இருந்த பழக்கம் யாருக்கும் தெரியாமப் போச்சு ‘

விடியட்டும் மோனிகாகிட்டே மன்னிப்பு கேட்கணும்னு நினைச்சுக்கிட்டேன். கூடுவாஞ்சேரியோ, பாரீஸோ… மனுசங்க மனுசங்களாத்தான் இருப்பாங்க.

குமுதம் 01-03-2001

Na.Krishna@wanadoo.fr

Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா