உங்களுடனும் சில கணங்கள்

This entry is part [part not set] of 31 in the series 20030525_Issue

-பாரதிராமன்.


ஜஸ்பீர் இன்று வருவதாக டாபா முதலாளிக்கு எழுதியிருந்தான்.

நானும் அவனுக்காகக் காத்திருந்தேன்.நாள் பூராவும் கழிந்து இரவும்

கவிந்துவிட்டது.அவனைக்காணோம். சில சமயங்களில் அப்படித்தான்

நேர்ந்துவிடுகிறது.வழியில் ஏதாவது தடங்கல்கள் ஏற்பட்டிருக்கலாம்.

எப்படியும் நாளைக்குள் வந்துவிடுவான் என்ற நம்பிக்கை இருந்தது மனதில்.

இன்னொருபுறம் அவனுக்கு ஏதாவது ஆகியிருக்குமோ என்ற திகிலும்

வாட்டியது.

அதென்னவோ ஜஸ்பீர் என்றதுமே இந்த மனம் கூத்தடிக்க

ஆரம்பித்துவிடுகிறது.இவ்வளவுக்கும் இரண்டு பேரும் நாட்டின் இரண்டு

கோடியைச் சேர்ந்தவர்கள்,பலமாதங்களுக்கு ஒருமுறை சந்திப்பவர்கள்!

விட்டகுறை, தொட்டகுறை என்பார்களே அது இதுதான் போலிருக்கிறது.

மூன்று மாதங்களுக்குமுன் வந்திருந்தபோதே அவன் சற்று

வாட்டமாகத்தான் காணப்பட்டான்.என்னவென்று நான் கேட்டபோது

ஒன்றுமில்லையென்று மழுப்பிவிட்டான். ஆனாலும் என்னிடம் எப்போதும்

போலவே நடந்துகொண்டான்;ஏன்,சற்று அதிக சுதந்திரத்துடனேயே

பழகினான் என்றே சொல்லவேண்டும்.ஆனாலும் என்னிடமிருந்து விடை

பெறும்போது அவன் கண்கள் பனித்திருந்ததை நான் கவனிக்கத்

தவறவில்லை.அவன் மனதை உறுத்திவந்தது எது என்றும் என்னால்

கண்டுகொள்ள இயலவில்லை.இதையெல்லாம் கடந்து என்னால் இம்முறை

அவனை ஒரளவுக்கு திருப்திசெய்யமுடிந்தது என்பதில் எனக்கு மகிழ்ச்சியே.

ஜஸ்பீர் எல்லா லாரி டிரைவர்களையும் போல அல்ல.அவனிடம்

மிருகத்தனத்தை நான் இதுவரை கண்டதில்லை. திருமணமானவன்.

அதனால்தானோ என்னவோ பெண்களைஅவனால் மதிப்புடன்

கையாளமுடிந்தது.ஒரு செக்ஸ் தொழிலாளியாக மட்டுமே என்னை

அவன் பார்த்ததில்லை.அதற்கும் மேலானதொரு இடத்தை அவன்

தன் மனதில் எனக்கு அளித்திருந்தான். அதனால்தான் ஒவ்வொருமுறை

வருவதற்குமுன்னும் டாபா முதலாளிக்குக் கடிதம் எழுதி அவன் வருகைக்காக

என்னைத் தயாராக இருக்கச்செய்தான். நானும் கூட செய்தி கிடைத்த

நாளிலிருந்தே சுத்தமாக இருக்க ஆரம்பிப்பேன்.அவனுக்காகக்

காத்திருப்பதில் ஒரு சுகம் தெரிந்தது.

ஜஸ்பீர் பெரும்பாலும் சனிக்கிழைமைபோல வருவான்.அவனது

சகாக்கள் லாரியை நகரத்துக்குள் எடுத்துச் சென்றதும் அவன் இரண்டு

நாட்களுக்கு டாபாவில் தங்கிக் கொள்வான். அப்போது அவனுடன்கூட

நான் இருக்கவேண்டும்.சிலசமயங்களில் இரண்டு நாட்களுமே

அடித்துப் போட்டாற்போல் தூங்குவான்.அவ்வப்போது எழுப்பி சாப்பாடு

போடுவதோடு சரி, வேறொன்றும் வைத்துக்கொள்வதில்லை.என்றாலும்

கை நிறையவே வாரி வழங்குவான்.அப்போதெல்லாம் என்னைப்

பார்த்து ஒரு புன்முறுவலை வீசுவான். என்னைக் குற்றவுணர்ச்சி குத்திப்

பிடுங்கும்.அடுத்த முறையாவது இதற்கெல்லாம் ஈடு செய்யும்படியாக

அமையவேண்டுமே என்று பிரார்த்தனை செய்துகொள்வேன்.

சில சமயங்களில் அந்த அடுத்தமுறை இரண்டு மாதங்களுக்குள்ளேயே

வந்துவிடும்.அவன் தங்கும் இரண்டு நாட்களுமே பசி தாகம் தெரியாமல்

ஒரே கொண்டாட்டமாகவே கழிந்துவிடும்.அசலும் வட்டியுமாக

என்னிடமிருந்து கவர்ந்துகொள்வான்.அவன் வள்ளல்தன்மை எல்லை

கடந்து பெருகும்.(அது எனக்குத் தேவையாக இருந்தது ஒரு தனி

இரகசியம்.)மகிழ்ச்சியில் சதா பஞ்சாபி,இந்தி பாடல்களை

முணுமுணுத்துக் கொண்டே இருப்பான்.லார லப்பா பாட்டு அவனுக்கு

மிகவும் பிடிக்கும். பல வருடங்களாக வந்துபோவதால் தமிழ் கொச்சையாகப்

பேசத் தெரியும். அவனுக்கு ஜாலிலோ ஜிம்கானா பாட்டைச் சொல்லிக்

கொடுத்ததிலிருந்து அதையும் பிடித்துக்கொண்டான். அதைப் பாடிக்

கொண்டே என்னைக் கட்டிப்பிடித்து தாடி உறுத்துகிறதா என்று கேட்பான்.

என் தலையை வருடும்போது கேசம் உறுத்துகிறதா என்று நான் கேட்பேன்.

அவ்வளவுதான், என் எலும்புகள் நொறுங்கும்படிஎன்னை—— அந்த

சுகம் அவனிடம்தான் எனக்குக் கிடைக்கிறது என்று சொல்லிக்கொள்வதில்

எனக்கு எந்த வெட்கமும் இல்லை.அந்த சுக நினைவுகளே அவன் வருவது

தெரியவந்ததும் அவனுக்காக என்னைக் காத்திருக்கவும் செய்தது.

ஜஸ்பீருக்குத் திருமணம் ஆகியிருந்தது என்று சொல்லியிருக்கிறேன்.

திருமணத்துக்கு முன்பிருந்தே அவன் லாரி ஓட்டி வருகிறான்.அவன்

தொழில் தெரிந்தும் யாரோ துணிந்து அவனுக்குப் பெண்

கொடுத்திருத்திருக்கிறார்கள்.அவள்கூட என்னைப்போல இருப்பாள்

என்று சொல்லியிருக்கிறான். ஆனால் நல்ல சிவப்பாம்.கல்யாணமாகி

நான்கு வருஷங்களில் இரண்டு பெண் குழந்தைகள் பிறந்துவிட்டனவாம்.

மனைவி சரியான நாட்டுப்புறம் என்பான் ஜஸ்பீர்.

‘எப்படி இருந்தால் என்ன, அவளுடன் சந்தோஷமாகக் குடித்தனம்

நடத்துகிறீர்கள் அல்லவா ‘ என்று சென்றமுறை கேட்டபோதுதான் அவன் முகம்

மலர்ச்சி இழந்ததை நான் காண நேர்ந்தது.அதை அப்படியே விட்டு விட்டேன்.

இப்போது ஜஸ்பீர் வந்திருக்கிறான்.அவன் முகத்தில் தெரிந்த

உணர்ச்சிகளை என்னவென்று என்னால் அனுமானிக்கமுடியவில்லை.மிகவும்

சோர்வாகத் தென்பட்டான்.அவனை மார்பில் ஏற்று அணைத்தேன்.மெல்லிய

குரலில், ‘ராணீஜீ ‘ என்று என்னை அழைத்தான்.சொல்ல நினைத்ததைச்

சொல்ல அவன் தயங்குவது தெரிந்தது. ‘ஜஸ்பீர்ஜி, என்னிடம் என்ன

தயக்கம்,எதுவானாலும் சொல்லுங்கள்,என்னால் முடிந்ததைச் செய்யக்

காத்திருக்கிறேன் ‘ என்றேன்.

ஒரு நீண்ட பெருமூச்சுக்குப்பின் ஜஸ்பீர் சொன்னான்: ‘புரோதிமா

என்னையும் குழந்தைகளையும் விட்டுவிட்டு வேறொருவனுடன் ஓடிப்

போய்விட்டாள்.இனி என் குழந்தைகளையும் என்னையும்

கவனித்துக் கொள்ளப்போகிறவர்கள் யாரிருக்கிறார்கள் ? ‘ சொல்லிவிட்டு

அவன் விசும்பத்தொடங்கினான்.

‘கடவுள் இருக்கிறார், ஏன் கவலைப்படுகிறீர்கள் ? உங்களுக்கென்ன

அப்படி வயதாகிவிட்டது, இன்னொரு கல்யாணம் செய்துகொள்ள

வேண்டியதுதானே ? ‘ என்று சமாதானப்படுத்த முயன்றேன் நான்.

‘நான் ஒரு லாரி டிரைவர் என்பது மறந்துவிட்டதா ராணீஜீ உங்களுக்கு ?

யார் எனக்குப் பெண் கொடுக்க சம்மதிப்பார்கள் ?அதுவும் இரண்டாம் தாரமாக ?என்று கேட்டுவிட்டு சற்று நிறுத்தினான் ஜஸ்பீர். ‘நான் கேட்பது தவறில்லை என்றால் ராணீஜி ஏன் என் கூட வந்து வாழக்கூடாது ? நான் என்ன

அவ்வளவு வெறுக்கத்தக்கவனா ராணீஜி ? ‘ என்று தொடர்ந்த

அவனது கெஞ்சல் என்னை உலுக்கியது.என்னால் பதிலேதும்

கூறமுடியவில்லை.

என் தொழில் வருமானம் அனைத்தும் கிராமத்தில் நோயில்

கிடந்து உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் என் கணவனுக்கும்

இறந்துபோன என் சக்களத்தியின் இரண்டு பெண் குழந்தைகளுக்கும்

போய்ச் சேருகின்றது என்பதை ஜஸ்பீரிடம் எப்படிச் சொல்வது ?

-பாரதிராமன்.

————————————————————————————–

இதயம் பேசுகிறது-22-8-99

Series Navigation

பாரதிராமன்.

பாரதிராமன்.