முகம்

This entry is part [part not set] of 39 in the series 20110410_Issue

சின்னப்பயல்


புகழ்பெற்றவரின் முகச்சாயல்
என்னில் கிஞ்சித்தேனும்
இருப்பதாக உணர்ந்தால்

அவரைப்போலவே
உடையணிகிறேன்
நடை உடை பாவனைகளை
அவர் செய்வது போல்
மாற்றிக்கொள்கிறேன்

அவரைப்பற்றி
பேசுவதிலும்,அவர்
சம்பந்தமான விடயங்களை
தேடிக் கையிருப்பு
வைத்துக்கொள்வதிலும்
தனி அக்கறை
காட்டுகிறேன்

செய்யும் ஒவ்வொரு
செயலிலும் அவரின்
சாயல் தென்படுவதை
உணர்ந்து
அகமகிழ்கிறேன்
அவ்வாறில்லையெனில்
அப்படித் தென்படுமாறு
மாற்றி வைத்துக்கொள்கிறேன்.

என்னில் அவர்
தென்படுவதை
உணர்ந்தவர்கள்
என்னைத்தவிர்க்க
முயல்வதை எண்ணி
வெறுப்பில் குமைவேன்.

எனக்கென ஒரு சுயம்
இருப்பதை
மறந்தே போகிறேன்

– chinnappayal@gmail.com

Series Navigation

சின்னப்பயல்

சின்னப்பயல்

முகம்

This entry is part [part not set] of 34 in the series 20101107_Issue

சத்யானந்தன்


“யாராவது வந்து எடுங்கள்” என்பது போல “லேண்ட் லைன்” மணியொலி செய்து கொண்டிருந்தது. வீட்டில் வேறு யாரும் இல்லாததால் துரையரசன் மாடியிலிருந்து கீழே வந்து எடுக்க வேண்டியிருந்தது.முதல் நாள் வணிகர் சங்கக் கூட்டம் முடிய இரவு வெகு நேரமாகியிருந்த்து. தூக்கக் கலக்கத்தை சமாளித்து படிகளில் பைய்ய இறங்கி வந்தான். “வணக்கம். நான் செல்வ்ராசன் பேசறேன். அம்மா இருக்காங்களா?”
“வணக்கம் அங்கிள் நான் துரை பேசறேன். அம்மா இங்கே இல்ல அங்கிள். அக்கா வீட்டுக்குப் போயிருக்காங்க”
“ரெண்டு நாள் மின்னே கூட போன் பண்ணியிருந்தேன். உன்னோட ஒயிஃப் தான் எடுத்தாங்க. அம்மா ஊரிலே இல்லையா?”
“இருக்காங்க. அப்பா காலமான பிறகு இந்த ஒரு மாசமா அம்மா எங்கேயுமே போகலே. கொஞ்ச நாள் எங்க வீட்டுக்கு வான்னு அக்கா கூட்டிக்கிட்டுப்போயிருக்கு. அக்கா வீட்டு நம்ப்ர் தரட்டுமா அங்கிள்?

“வேணாம் தம்பி. நான் பேச நினைக்கறதை அவுங்க அங்கே இருக்கும் போது பேச முடியாது. உங்க வீட்டிலே அவுங்க இருக்கும் போது பேசினா நல்லா இருக்கும்”

“இன்னும் ரெண்டு நாளிலே வந்துடுவாங்க”

“அது வரையில் தாளாது தம்பி. அவுங்களை இன்னிக்கி மதியம் போல பேசச் சொன்ன நல்லா இருக்கும்.”

“சரி அங்கிள்”. காலைக் கடன் முடியும் வரை அவரது திடீர் ஃபோன் அழைப்ப்பு ஏன் என்ற கேள்வியும் அப்பாவின் மரணம் தன் மீது சுமத்தி இருக்கும் பொறுப்புக்க்ளும் மனதுள் மேல் எழுந்தன. ரியல் எஸ்டேட் விவகாரமோ கட்சி வேலையோ அப்பாவோடு தான் செல்வராசன் பேசுவார். அப்பாவைத்தவிர வேறு யார் எடுத்தாலும் வணக்கம் சொல்லி முடித்துக் கொள்வார். இப்போது அம்மாவிடம் அவசரமாகப் பேச என்ன இருக்கும்? காலை உணவு முடித்து தன் “டிராவெல்ஸ்” அலுவலகம் செல்லும் வரை கேள்வி மனதுள் நெருடியபடியே இருந்தது.

காலையில் முதலில் அலுவலகம் சென்ற பின்னர் தான் வேறெங்கும் செல்வான். அலுவலகப் பெண் வரத் தாமதமானாலும் அவன் திறந்து வைத்துத் துவங்க ஏதுவாயிருக்கும். அலுவலகம் போகும் வழியில் தொடங்கிப் போன பின்னும் முதல் நாள் கூட்டம் பற்றி நிறைய அழைப்புகள்

பதினோரு. மணி போல் மனைவியிடமிருந்து ஃபோன். “சொல்லு சரளா”
“கொஞ்ச நேரத்திலே நான் கிளம்பி வரேன். ஆறு மணிக்கி பஸ் ஸ்டாண்டுக்கு காரை அனுப்புங்க”
“சரி”
“சாப்டீங்களா?”
பேசி முடித்ததும் அம்மாவிடம் செக்வராசன் பேசியதைப் பற்றி சொல்ல நினைத்து அக்காள் வீட்டு லேண்ட் லைனில் அழைத்தான். அம்மாவிடம் மொபைல் அப்பா காலத்திலேயே கிடையாது. அக்கா வீட்டில் வேலை செய்யும் . அம்மாள் ஃபோனை எடுத்தார்.”இங்கே யாரும் இல்லையே தம்பி. உங்க மாமா மெட்ராஸ் போயிருக்காங்க, அவுங்க ரெண்டு பேரும் டாக்டர் கிட்டே போயிருக்காங்க”

மதியம் மூன்று மணிக்கு செல்வராச்னே மறுபடி அழைத்தார். “அம்மா உடனே பேசினா நல்லா இருக்கும் தம்பி”. மறுபடி முயன்றான். இந்த முறை அம்மா தூங்கிக் கொண்டிருந்தார்.
“அப்படி என்ன ரகசியம்? நான் சின்னப் பையனா என்ன?” அடக்க முடியவில்லை. அவருக்கே ஃபோன் செய்து கேட்டான். “என் கிட்டே சொல்லக்கூடாதா அங்கிள்?”
“ஒண்ணுமில்லை தம்பி உங்க அப்பா காலமான பிறகு காலியான இடத்துக்கு எலெக்க்ஷன் வருது. கட்சித் தலைமையிலே நாளைக்கு முக்கியமா ஆலோச்னை பண்றாங்க. உங்க அம்மா சம்மதிச்சா அவுங்க நிக்கலாம். இல்லேயின்னா நீ.” அப்பாவைத்தவிர மாமா தான் அவன் அறிந்து அரசியல்வாதி. அப்பாவும் மாமாவும் சேர்ந்து பணியாற்றி அவன் பார்த்ததே இல்லை.
“தம்பி.. நீங்களே இதை அம்மா கிட்டே பக்குவமா எடுத்துச் சொல்லுங்க. குறிப்பா உங்க அக்கா மாமாவுக்குத் தெரிய வேண்டாம். ”
“சரி”
‘மாலை ஆறு மணிக்குள்ளே சொல்லுங்க”. பிறகு அலுவலக வேலைகளில் ஆழ்ந்து விட்டான். மாலை ஐந்து மணிக்கு சரளா வண்டி அனுப்பியாகி விட்டதா என்று கேட்ட போது தான் குடும்ப நினைவே வந்தது. இந்த முறை அவர்கள் இருவரும் ஒரு மஞ்சள் நீராட்டு விழாவுக்குப் போயிருப்ப்து தெரிந்தது. அக்காவின் மொபைலில் அழைத்தான்,
முதலில் ஒரே சத்தமும் சிரிப்பொலியுமாய்க் கேட்டது. “சொல்லுடா தம்பி “என்றாள் அக்கா. ‘அம்மாகிட்டே அர்ஜென்டா பேசணும்”. சத்தமும் சிரிப்பொலியும் மறுபடி. அரை நிமிடத்துக்கும் மேல் ஆன பின் அம்மா “சொல்றா துரை”
“அம்மா உன் கிட்டே உடனே பேசணும்” ஹலோ ஹலோ என்றார் அம்மா. “அம்மா வெளியிலே வந்து பேசு” மறுபடி ஹலோ ஹலோ என்றார் அம்மா.”ஒண்ணும் கேக்க மாட்டேங்குது.மறுபடி பேச்சு சத்தம்.இனி அவரிடம் பேசுவது எப்போது புரியவில்லை. ஆனால் செல்வராசன் விடுவதாக இல்லை.இரவு எட்டு மணிக்கு அழைத்தார். ” அம்மா என்ன சொன்னாங்க?”
“அங்கிள், அம்மாவை என்னாலே ஃபோன்லே பேச வைக்க முடியலே. சாரி.”
‘ஒண்ணு ப்ண்ணுங்க. நீங்களே கிளம்பி வாங்க தம்பி.இன்னும் ரென்டு நாளிலே கட்சியிலே முடிவு எடுக்கறாங்க. இனி தாமதிக்க இயலாது.”
“இன்னைக்கேவா?”
“ஆமா. அம்மாகூட பிறகு சம்பிரதாயமாப் பார்த்துக்கொள்ளலாம். உங்களை நாளையே அறிமுகம் செய்துடலாம். தலைமை அலுவல்கத்துக்குக் காலை பத்து மணிக்கு வந்திடுங்க.” அவரிடம் பேசி முடிக்கும் முன்னே மனைவி தொலை பேசியில் வந்து விட்டாள். “எப்ப வரீங்க?”
அவளிடம் சுருக்கமாகச் சொன்னதும் மிகவும் உற்சாகமாகி விட்டாள். அவன் வீட்டுக்குள் நுழையும் போது பை தயாராக இருந்தது, அவன் உணவு உண்ணும் போது ஏதோ அவன் இப்போதே கட்சியால் தேர்ந்து எடுக்கப்பட்டது போல துள்ளலாய்ப் பேசிக் கொண்டிருந்தாள்.

பேருந்துப் பயணத்தில் சரியான தூக்கமில்லை. ஒரு விடுதியில் அறை எடுத்து உறங்கினான். எட்டு மணிக்கு கடமை தவறாமல் “அலாரம்” அடித்தது.வரவழைத்த தேனீரை அருந்தும் முன்பே செல்வராசன் தொலை பேசியில் தலைமை அலுவலகம் அருகே உணவு விடுதியில் சந்திக்கலாம் என்றார். ஒன்பதரை மணிக்கு அங்கே போன போது ஒரு உணவு மேசையில் இருந்தார்.
“தம்பி, அம்மாவை அக்கா வீீட்டிலேயிரிந்து ஏன் பேச வேண்டாமின்னு சொன்னேன்னு புரிஞ்ச்சுதா?”
புரியவில்லை என்று தலையாட்டினான்.
“உங்க மாமா இந்த வாய்ப்புக்காகத் தீவீரமா வேலை செய்துக்கிட்டு இருக்காரு”
“இது எங்களுக்குத் தெரியாது”
“உங்களைத் தீவீர அரசியலுக்குக் கொண்டு வர உங்க அப்பா எண்ணி இருந்தாரு. அவர் உயிரோட இருந்திருந்தா பேச்சாளர் பயிற்சிக்கு அனுப்பி இன்னேரம் மேடை ஏற்றி இருப்பார்”அவனுக்கு சற்றே அதிர்சியாக இருந்தது. பொதுவாக அவனை மதித்து அவர் எந்த குடும்பப் பிரச்சனை பற்றியும் ஆலோசித்ததில்லை.
“உங்க மாமாவுக்கும் உங்க அப்பாவுக்கும் நிறைய விஷையங்கள்ள கருத்து வேறுபாடு இருந்திச்சு. இப்ப உங்க மாமா வேகமாத் தன் காய்களை நகர்த்தராரு”

அவனோ அல்லது அவன் அம்மாவோ நிற்பதுதான் சரியாக இருக்கும் என்று செல்வராசன் விளக்கினார். பதினொரு மணி போல இருவரும் தலைமை அலுவலகத்துள் இருந்தனர். தயாராகக் கொண்டு வந்திருந்த பொன்னாடையை அமைச்சருக்குப் போர்த்தி வணக்கம் சொல்ல சுமார் ஒரு மனி நேரம் காத்திருக்க வேண்டி இருந்தது. புன்முறுவலுடன் அதை ஏற்ற அமைச்சர் ” சுந்தரம் வாரிசு துரையரசன் கட்சி பணிக்காக முன் வந்திருகிறார். வாழ்த்துக்கள்.” என்றார். செல்வராசன் அப்பா பற்றி அமைச்சரிடம் விவரித்தபடி பேசப் பேச துரையரசனுக்கு அப்பா பற்றி இத்தனை விவரம் ஏன் தெரியாமற் போனது என வியப்பாகவும் வருத்தமாகவும் இருந்தது. பொதுவாகக் கட்சி பற்றி அவர்கள் இருவரும் பேசியவையும் துரையரசனின் புரிதலுக்கு சற்றே சிரமம் தரும் விஷயங்களாக இருந்தன. விடை பெற்றுக் கிளம்பும் போது ” தொகுதி பொறுப்பாளர்ங்கற முறையில் தம்பியின் பெயரைக் கண்டிப்பாப் பரிந்துரை செய்யறேன்” என்றார் அமைச்சர்.

பகலுணவுக்குப் பிறகு கிட்டத்தட்ட எல்லா நிர்வாகிகளையும் செல்வராசன் அறிமுகம் செய்து வைத்தார். பல பிரமுகர்களையும் சந்திக்க முடிந்தது. கிளம்பும் முன் அமைச்சரை இன்னொரு முறை பார்க்க எண்ணினார் செல்வராசன். சாளரம் வழியே பார்த்த போது துரையரசனின் மாமா மற்றும் இருவர் அமைச்சருடன் உரையாடுவது தெரிந்தது. பொருள் பொதிந்த விதமாகத் தலையை ஆட்டிய செல்வராசன் “கிளம்புவோம்” என்னும் விதமாக சைகை செய்தார்.

காரில் ஏறிய பின் “இப்போப் புரிஞ்சிதா தம்பி நான் ஏன் அவசரமா உங்களை வரச்சொன்னேன்னு” என்றார். “உங்க மாமா நீங்களோ அல்லது அம்மாவோ போட்டியிட ஆர்வமாவே இல்லயின்னு சொல்லிக்கிட்டிருக்கிறார். கட்சித் தலைமயைப் பொறுத்த அளவிலே உங்களை வேட்பாளரா அறிவிக்கறது வெற்றிக்கு வழி வகுக்கும்னு முடிவு எடுப்பாங்க. கவலையில்லே. செலவுக்கு எற்பாடு செய்துட்டீங்களான்னு கேப்பாங்க. தயாரா இருக்கேன்னு சொல்லுங்க. நம்ம ஆதர்வாளரின்னு நிறைய நண்பர்கள் இருக்காங்க. கவலையில்லே.” என்று பலவிதமான அறிவுரை கூறி அவனை விடுதியில் இறக்கி விட்டுச் சென்றார்.

துருவித் துருவி விவரம் கேட்ட மனைவியிடம் தயங்கித் தயங்கி விளக்கினான். ஏனோ மகிழ்ச்சி ததும்ப விளக்க முடியவில்லை. ஆனால் அவளோ படு உற்சாகமாக பதிலளித்தாள். “உங்க முகம் பட்டிதொட்டியெல்லாம் பளிச்சிடப்போவுது. சந்தோஷப்படாம மென்னு முழுங்கரீங்க. அப்பாவுக்கு நல்ல மதிப்பு தொகுதி முழுசும். நீங்க ஜாம் ஜாம்னு ஜெயிச்சு வருவீங்க” என்றாள். கட்சித் தலைவருங்ககிட்டே உங்க மீடிங்க் நல்ல படியா முடிஞ்சா சமயபுரத்து ஆத்தாவுக்கு முகம் வாங்கி போடறதா வேண்டிக்கிட்டிருக்கேன். வரும்போது சமயபுரத்துல இறங்கி சாமி கும்பிட்டுட்டு முகம் வாங்கிப்போட்டுட்டு வாங்க. ஆத்தா சன்னதி எதிரிலே இருக்கற உண்டியல்லே போடணும்.”

முகம், கை,காது,கண் என நேர்ந்து கொண்டோருக்கென பல வடிவ வெள்ளித் தகடுகள் மூங்கிற் தட்டுக்களில் கூவிக் கூவி விற்றோர் வழி மறித்தனர். பை, செருப்பை பத்திரப்படுத்திய பிறகு இருபது ரூபாய் கொடுத்து ஒரு முகம் வாங்கினான். தரும தரிசனம் மிகப் பெரிய வரிசையாய்த் தென்பட்டது. சிறப்பு தரிசனத்தில் பத்து ரூபாய் வரிசையில் இணைந்தான்.

‘ப’ வடிவில் பல திருப்பங்களைத் தாண்டி கிட்டத்தட்ட சன்னதியை நெருங்கும் போது துரையரசனுக்கு முன்பே நின்றிருந்த ஒரு நடுத்தர வயதுப் பெண் குரலும் உடலும் நடுங்கக் குதித்து ஆடியப்டி முன்னும் பின்னும் நகர அவன் சுதாரித்துக் கொண்டு பின்னகர்ந்தான். அவளது உறவினர்கள் அவளைத் தாங்கிப் பிடிக்க ஒரு ஆண் அவள் எதிரே கை கூப்பி நின்றான்.

“உன் குல தெய்வம் ஆருடா?”
” நீ தான் தாயே”
“பின்னே ஏன்டா இத்தனை நாளா வரலே?”
“தப்புத் தான் தாயே. மாப்புக் கேட்டுக்கறேன்”
“நீ ஏரோட்டர நெலம் ஆருது?”
“என்னுதான் தாயே. நல்ல வெள்ளாமை உன் அருளாலே”
“அப்புறம் ஏண்டா உன் புள்ள குட்டிங்களை தவிக்க உட்டு அண்ணன் குடும்பத்துக்கு வாரி உடறே?”
“கொஞ்சம் சிரம திசை அண்ணன் வூட்டுலே. அதான்”
“தனக்கு மிஞ்சித்தான்டா தானமும் தருமமும்”
“சரி தாயே”
“ஏய். எனக்குப் புதுசா பட்டுப் புடவை வாங்கிச் சார்த்தறேன்னு வேண்டிகோடா”
“சரி தாயே”
பின்னேயிருந்து ஒருவர் அவனை “நீங்க நகருங்க” என்றார் தோளில் தட்டி. அவனும் மற்றோரும் அந்தப் பெண் மீது படாமல் முன்னகர்ந்தனர்.

கும்பல் அவனைத் தள்ளிய படியே அவசர தரிசனம் செய்வித்து வெளியிலும் சேர்த்து விட்டது. குங்குமத்தை மடித்து சட்டைப் பையில் வைக்கும் போது தான் கையில் வெள்ளி முகம் உறுத்த அதை சன்னதி உண்டியலில் போட மறந்த தவறு கவனத்திற்கு வந்தது. இனி மறுபடி வரிசையில் செல்லத் தென்பில்லை. ஒரு வரிசையின் கடைசியில் இருந்த ஒரு பெரிய அம்மாள் அன்புடன் உண்டியலில் அதைச் சேர்க்க ஒப்புக் கொண்டார். வரிசை நகர்ந்தது. கொடுக்கும்முன் இன்னொரு முறை முகத்தை பார்திருக்கலாமோ என்று தோன்றியது.

Series Navigation

சத்யானந்தன்

சத்யானந்தன்

முகம்

This entry is part [part not set] of 37 in the series 20070830_Issue

கோட்டை பிரபு


முகம்
பிரம்மனின்
தனிச்சூத்திரத்தில்
விளைந்த ஆக்கம்,

அகத்தினை
புறத்தே நீட்டும்
அற்புதத்தீவு,

பதைபதைக்கும்
இதயம் கண்டால்
பரிதவிக்கும் படிமம்,

நகைப்பின்
உருவம் காட்டும்
நங்கூரக்கயிறு,

சில ஒத்திருந்தும்
நூலிழை பிசகி
உலகினை வியக்கவைக்கும்,

மரணித்த,
அக்கணம் முதல்
பிறர் நினைவில்
உலா வரும்
ஒரே ஓவியம்
முகம்!!!


kottaiprabhu@yahoo.com

Series Navigation

கோட்டை பிரபு

கோட்டை பிரபு

முகம்

This entry is part [part not set] of 47 in the series 20050120_Issue

ம.நவீன்


ஐந்தாவது முறையாக
கழட்டி வைத்து
மற்றதை எடுத்து மாட்டியபோது
அலமாரிக்குள் இருந்து சிரித்தது
இன்றைய
இரண்டாவது முகம்!

அதிகமாக அடுத்தவர்களிடம்
பல் இளித்த களைப்பில்
இன்னும் உரக்கத்தில் இருந்தபடியால்
முதல் முகத்துக்கு தொந்தரவில்லாமல்
கதவடைக்கும் நேரம்
இன்னும் என் கழுத்துக்குமேல்
இருக்கும் நினைவில்
பழையபடி கோபத்தில் கத்த தொடங்கியது
மூன்றாவது !

இப்போது புதிதாய்
எடுத்து அணிந்துக்கொண்ட
‘வெள்ளை ‘ முகம்
ஆள்காட்டி விரலை இழுத்து
‘உஷ் ‘ என கடமையை தொடங்க
ஏதோ ஆழ்ந்த சிந்தனையில் இருந்து
திடுக்கிட்ட நான்காவது
சுதாகரித்தபடி
விட்டு வைத்த காதல் வசனத்தை
தொடங்கியது!

உறங்கும்போது மட்டுமே
பயன்படும் உண்மைமுகம்
இதில் எது ‘தான் ‘ என்ற குழப்பத்தில்
இன்னும்!

ம.நவீன், மலேசியா.

Series Navigation

ம.நவீன், மலேசியா

ம.நவீன், மலேசியா

முகம்

This entry is part [part not set] of 40 in the series 20031204_Issue

ஏலங்குழலி


தி.நகரின் எத்தனையோ குறுக்குத் தெருக்களில் ஒன்றின் முனையில் வந்து, இரு பெண்கள் நின்றனர். அவர்களின் தலைக்கு மேல், வண்ணக் கலவையாக அந்த போர்டு தொங்கியது.

“என்ன சொல்ற, அர்ச்சனா ? போய் பாத்துருவமா ?” சுப்ரியா, குட்டையாக வெட்டப்பட்டிருந்த தலைமுடியை ஒரு சிலுப்பு சிலுப்பினாள்.

“ம்ம்ம்…பார்ப்போம். ‘வித்தியாசமான முறைல உங்கள் முக-வசீகரத்தை வெளிப்படுத்துவோம் ‘ னு பந்தாவா சொல்லியிருக்காங்களே… ? டி.வீலே நெறைய ஆட் பாத்திருக்கேன். ஒரு முறை ட்ரை பண்ணுறதுலே என தப்பு ? எனக்கும் புதுசா ஏதாவது செய்துக்கணும்னு தோணுது.”

அவர்கள் அந்த போர்டு தொங்கவிடப்பட்டிருந்த கேட்டைத் திறந்துகொண்டு, உள்ளே நுழைந்தனர். ஜீன்ஸ் அணிந்த இரு நவயுகப் பெண்கள் ஒயிலாக நடந்து வருவதைக் கண்ட வாட்ச்மேன் ‘சடே ‘ரென்று ஸ்டூலிலிருந்து விரைந்து எழுந்தான். அவசரமாக சலாம் வைத்தான். பத்து தப்படி தள்ளியிருந்த பங்களாவின் மேற்புறமிருந்த அழகு நிலையத்திற்குள் செல்ல வழியும் காட்டிக்கொடுத்தான்.

பார்லருக்குள், பாண்டும் சட்டையும் அணிந்த சில பெண்கள் பம்பரமாக ஓடியாடிக் கொண்டிருந்தார்கள். சுவர்களில் அழகுப் பொருட்களின் விளம்பரங்கள் பளபளப்புடன் தொங்கின. இரண்டு மூன்று நாற்காலிகளில் சில உயர்குடும்பத்துப் பெண்கள் உட்கார்ந்து, தத்தம் தலையை அழகு நிலையத்துப் பெண்களிடம் ‘தேமே ‘யென்று கொடுத்துவிட்டு உட்கார்ந்திருந்தனர். வேறொரு மூலையில், ஒரு பெண் ப்ளாஸ்டிக் வாஷ்பேசினில் தலை கவிழ்ந்திருக்க, ‘புசுபுசு ‘வென்று நுரை பொங்க ஷாம்பூ தேய்த்துக்கொண்டிருந்தாள் இன்னொரு பார்லர் பெண்.

அங்கங்கு ஆளுயரக் கண்ணாடிகள், அறையின் வெளிச்சத்தை மிகைப்படுத்தின. ‘லோரியால் ‘, ‘லக்மே ‘ என்று அழகுச் சாதனங்கள் மேஜைகளில் நிரம்பி வழிந்தன.

புதுவரவுகளைப் பார்த்ததும், சல்வார் அணிந்திருந்த பெண்ணொருத்தி சாவதானமாக நடந்து வந்தாள். வாயில் சூயிங் கம். கையில் ஒரு பேனா.

“வாங்க, வாங்க. உக்காருங்க. என்ன பண்ணிக்கிறீங்க ?”

அர்ச்சனாவும் சுப்ரியாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

“பேஷியல்.” சூயிங்-கம் பெண் வாயைத் திறக்குமுன், அர்ச்சனா இடைமறித்தாள். “ஹெர்பல், ஃப்ரூட் இதெல்லாம் வேணாம். சாதா பேஷியல் போதும். அப்புறம் எனக்கொரு பெடிக்யூர், இவங்களுக்கு ஒரு மேனிக்யூர்.”

“அவ்ளவ்தானா ? புருவம் ப்ளக் பண்ணிக்குங்களேன். நாங்க நல்லா செய்துவிடுவோம்.”

இன்னொரு அறைக்குள் அவர்களைப் படுக்க வைத்து, ஏறக்குறைய இருபது நிமிடங்களுக்கு விதவிதமான வாசனைகளுடன் மஞ்சள், கரும்பச்சை, பிங்க் என்று பல திரவங்களை முகத்தில் அழுந்தி தேய்த்து, கண்களில் பஞ்சை வைத்து ஒற்றி, முகத்தின் சிறிய கரும்புள்ளிகளை முற்றிலுமாகச் சுரண்டியெடுத்த பின், ‘ஜிவுஜிவு ‘த்த முகங்களுடன் அர்ச்சனாவும் சுப்ரியாவும் வெளியே வந்தார்கள். உடனேயே இரு பார்லர் பெண்கள் கைகளில் தத்தம் உபகரணங்களுடன் அவர்களெதிரில் அமர்ந்தனர்.

அர்ச்சனாவின் பாதங்களை ஒரு பெண் குத்தகைக்கு எடுத்துக்கொள்ள, சுப்ரியாவின் நீண்ட விரல்களை இன்னொரு பெண் லோஷனால் தடவ ஆரம்பித்தாள். அழகு நிலையத்தின் நிர்வாகி போல் தோன்றிய இரட்டை நாடிப் பெண்மணி ஒருத்தர், இன்னொரு அறையின் கதவைத் திறந்துகொண்டு வந்தார். ‘இந்தம்மாவுக்கெல்லாம் எதுக்கு ஸ்லீவ்லெஸ் ? ‘ என்று சுப்ரியா அர்ச்சனாவிடம் முணுமுணுத்தது நல்ல வேளையாக அவர் காதில் விழவில்லை(பார்லர் பெண்ணின் காதில் விழுந்து தொலைத்திருக்க வேண்டும். அவள் முகத்தில் ஒரு புன்னகை ஓடி மறைந்தது.). இரு பெண்களையும் பார்த்துப் பொதுவாக ஒரு செயற்கைப் புன்னகை பூத்தாள்.

“பெடிக்யூர் மட்டும்தான் பண்ணிக்கிறீங்களா ? புருவத்தையும் ஷேப் பண்ணிக்குங்களேன். உங்க முகத்தையே மாத்தி அமைச்சிடும். ரொம்ப ஸூட் ஆகும் உங்களுக்கு. நாங்க நல்லா செய்துவிடுவோம்.” என்றாள்.

“எல்லாரும் அதைத்தான் சொல்றாங்க… ‘வித்தியாசமா செய்துவிடுவோம் ‘னு சொல்லியிருக்கீங்களே ? நல்லா பண்ணிவிடுவீங்களா ?”

“கண்டிப்பா. எங்ககிட்ட விட்றுங்க. கலாஆஆஆஆ…” ஒரு நெடிய கூப்பாட்டுக்குப் பின், சூயிங்-கம் பெண் கதவைப் ‘பட் ‘டென்று திறந்துகொண்டு, தலையை மட்டும் உள்ளேவிட்டுப் பார்த்தாள்.

“கூப்டாங்களா, மேடம் ?”

“Eye-brows. நல்லா பண்ணிவிடணும், என்ன ?”

“சரிங்க மேடம்.”

அர்ச்சனாவின் கால்நகங்களை ஒரு பெண், சிறிய கத்தி போன்ற உபகரணம் ஒன்றினால் சுரண்ட, அவள் வலியில் ‘ஸ்ஸ்ஸ்ஸ்” என்றாள்.

சுப்ரியா புன்னகைத்தாள். “இதுக்குத்தான் நான் பார்லர்லே பெடிக்யூர் பண்ணிக்கிறதே இல்லை. வலி உயிர் போகும்.”

“அதுக்காக ? அப்புடியே விட்றலாம் ‘னு சொல்றியா ? அதெல்லாம் நம்மால முடியாதுப்பா.”

சுப்ரியா உதட்டைப் பிதுக்கிவிட்டு, ‘பளபளவென் ‘று ஒளிர்ந்த தன் கைவிரல் நகங்களைச் சரி பார்த்துக்கொண்டாள். பார்லர் பெண் ஒரு ப்ளாஸ்டிக் டப்பா நிறைய நகச்சாயங்களை நீட்ட, கருஞ்சிவப்பில் ஒரு வண்ணத்தைத் தேர்ந்தெடுத்துப் பூசச் சொன்னாள்.

பதினைந்து நிமிடங்களுக்குள், இரு பெண்களும் அழகு நிலையத்தின் முன்னறையின் இருந்தனர். வசதியான இரு சுழலும் நாற்காலிகளில் இருவரும் சாய்ந்து கொள்ள, இரு பார்லர் பெண்கள் அவர்களது புருவங்களைச் சீர்ப்படுத்தத் தொடங்கினர்.

அர்ச்சனாவை அழகு படுத்திக்கொண்டிருந்த பெண் கண்ணாடியைப் பார்த்துப் தன் புருவத்தைச் சுருக்கினாள். “மேடம், புருவத்தை மொத்தமா ஷேவ் பண்ணிக்கிட்டாங்கன்னா கூட நல்லா இருக்கும். உங்க ஃபேஸ் கட்டுக்கு அதுதான் ஸூட் ஆகும்.”

அர்ச்சனா கொஞ்சம் குழப்பத்துடன் சுப்ரியாவைப் பார்த்தாள். “என்ன சொல்ற ? பண்ணிக்கலாமா ?”

“எதுக்கு அதெல்லாம் ? ஷேப் பண்ணாலே போதும்.”

“இல்லீங்க மேடம். நாங்க நல்லா பண்ணிவிடுவோம். புருவம் நல்ல ஷேப்போட ‘பளிச் ‘சுன்னு இருக்கும். ரொம்ப வித்தியாசமான லுக் கிடைக்கும்.”

“சரி…பண்ணிவிடுங்க.”

அரை மணி நேரமும், ஆளுக்கு அறுநூறு ரூபாயும் தீர்ந்தான பிறகு, இருவரும் அழகு நிலையத்தின் வெளிவாயில் படிக்கட்டுகளைத் தாண்டி வெளியே வந்தனர்.

“நல்லாத்தான் பண்ணியிருக்காங்க இல்ல ?”

“நாட் பேட்.”

வாயில் கேட் பூட்டப்பட்டிருந்தது. சுப்ரியா சுற்றும் முற்றும் பார்த்தாள். “எங்கே வாட்ச்மேனைக் காணம் ?”

“இரு…இங்கதான் எங்கியாவது இருப்பாரு…லஞ்சுக்குப் போயிருக்காரோ, என்னமோ ?”

அவர்கள் அங்கு நின்று கொண்டிருப்பதை அப்போதுதான் கவனித்தவன்போல், கட்டிடத்தின் மறு பக்கம் யாருடனோ அரட்டையடித்துக் கொண்டிருந்த வாட்ச்மேன், ஆடியசைந்துகொண்டு வந்தான். சுவாரஸ்யமில்லாமல் கேட்டைத் திறந்துவிட்டான்.

“மன்னிச்சுக்குங்கம்மா. உங்களை கவனிக்கலை. ஆரோ எங்க பார்லர் பொண்ணுங்க, இல்ல பக்கத்து ஆஃபீஸ் பொண்ணுங்கதான் கேட்டாண்ட நிக்குதுன்னு நெனைச்சிப்பிட்டேன். எல்லாரும் ஒரே மாதிரி வேற இருக்கீங்களா…”

அர்ச்சனாவும் சுப்ரியாவும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். மெதுவாகத் தெருவில் இறங்கிச் சிறிது தூரம் நடந்தனர்.

“சுப்ரியா, நான் இன்னும் கொஞ்ச நாளைக்கு பார்லர் பக்கம் வர வேணாம்னு பாக்கறேன்,” என்றாள் அர்ச்சனா.

“நானும்தான்.”

——————–

elankhuzhali@yahoo.com

Series Navigation

ஏலங்குழலி

ஏலங்குழலி

முகம்

This entry is part [part not set] of 45 in the series 20030302_Issue

ஜெயமோகன்


…….சரி, நான் இக்கடிதத்தை எழுத வந்த விஷயத்தை சொல்கிறேன். சென்றவாரம் அனந்தன் தம்பி ஒரு கத்தை சுவடிகளை அனுப்பியிருந்தான் . எல்லாம் கொல்லம் — கோட்டயம் சாலையில் உள்ள துளசிமங்கலம் என்ற புராதன நம்பூதிரி மடத்தில் கிடைத்தவை . இந்த மடத்தைப்பற்றி நீ கேள்விப்பட்டிருப்பாயோ என்னவோ ? தெற்கு கேரளத்தில் அதர்வ வேத அதிகாரம் உள்ள இரண்டு மனைகளில் ஒன்று இது . நான்கு நூற்றாண்டுக்காலம் இந்த மனையின் நம்பூதிரிகள் முக்கியமான மந்திரவாதிகளாக விளங்கிவந்திருக்கிறார்கள். திவான் தளவாய் கேசவதாசன் மீது சில நாயர் மாடம்பிகள் ஒரு மகாமாந்திரீகனை வரவழைத்து ஏவல் செய்ததாக அச்சு கணியாரின் ‘கேரள சரித்திர வைபவம் ‘ சொல்கிறதே, அந்த மந்திரவாதி இந்தக் குடும்பத்தை சேர்ந்தவர்தான். திவான் கேசவதாசன் பிழைத்துக் கொண்டார் ,ஆனால் அதன் பிறகு இந்தமனைக்கு கெட்ட காலம் ஆரம்பித்தது .மனையின் சொத்துக்கள் முழுக்க பிடுங்கப்பட்டன . கோயிலதிகாரங்கள் நிறுத்தலாக்கப்பட்டன. படிப்படியாக அக்குடும்பத்தின் செல்வாக்கும் முக்கியத்துவமும் இல்லமலாயிற்று .இந்த வம்சத்தில் இப்போது இருப்பவர் சங்கரநாராயணன் நம்பூதிரி . இவர் கோட்டயம் பாரில் வக்கீலாக இருக்கிறார் .

துளசிமங்கலம் வீடு மிக மிகப் புராதனமான மரக்கட்டிடம் . இன்று ஒன்றுக்குமே உதவாது . அங்கே ஐம்பது வருடங்களாக யாரும் குடி இல்லை , ஒரு கேஸ் நடந்து இப்போதுதான் சங்கரநாராயணனுக்குச் சாதகமாக தீர்ப்பு வந்தது . கூரை சரிந்து ,சுவர்களும் மட்கிஇடிந்து விட்டன. வீட்டுக்குள்ளேயே ஜேஷ்டாதேவிகோவில் ஒன்றும் உண்டு . கட்டிடத்தை இடித்து விறகுவிலைக்கு விற்க சங்கரநாராயணன் முயன்றபோது கோயில் உள்ளறையிலிருந்து ஒரு சுவடிப்பெட்டி கிடைத்தது . அதில் உள்ள சுவடிகளை அனந்தன்தம்பிக்கு தந்திருக்கிறார் . அனந்தன் பரிசோதித்தபோது சரித்திர சம்பந்தமான எதுவும் இல்லாததனால் எனக்கு அனுப்பினான் . பெரிதாக ஒன்றும் இல்லைதான். நிறைய மந்திரச் சுவடிகள். பாஷா பாரதம் ஒன்று . இரண்டுவகை ராமாயணம் . எல்லாமே ஏற்கனவே தெரிந்த விஷயங்கள் .

என் ஆர்வத்தை கிளறியது ஒரு சுவடி . அதன் பெயர் ‘ ஸ்ரீ துளசிமங்கல ப்ரஃபாவம் ‘ யார் எழுதியது என்று தெரியவில்லை . மொத்தம் இருபத்தொன்று கதைகள் . எல்லாமே துளசிமங்கலத்து நம்பூதிரிகள் பல்வேறு யக்ஷிகளையும் பூதங்களையும் வென்றடக்கியது பற்றியவை . வழக்கம்போல ஏற்கனவே கேரளத்தில் பரவலாக புழக்கத்தில் இருந்த கதைகள்தான் எல்லாமே . அவற்றையெல்லாம் துளசிமங்கலத்துக்காரர்கள் செய்ததாகச் சொல்லி இடங்களையும் அதற்கேற்றபடி மாற்றியிருக்கிறார்கள் .பழைய சம்புக்களில் எல்லாம் இருக்குமே கொச்சையான தமிழ் போன்ற ஒரு மலையாளம் , அந்த நடை . இப்படி தொடங்குகிறது ‘ அதுக்கு பின்னாலே முல்லந்திருவோண ஆழ்ச்சையிலே தம்றான் திருமேனி த்றுப்பள்ளிகொண்டெழுந்த போதே .. அந்நு விசாக பூற்ணிமையாணெந்நு கண்டு மகிழ்ந்நு கொண்டாடி தன்றெ கூட்டரோடிவ்வண்ணம் ஆக்ஞாபிச்சாதாயிட்டு …. ‘ ‘ ஆனால் ஒரு கதை எனக்கு மிக ஆர்வமூட்டுவதாக இருந்தது. அதை நீ படிக்கவேண்டும் என்று பட்டது . மூலத்தில் படித்தால் உனக்கு மரை கழன்றுவிடும் . நானே கதைபோல விரித்து எழுதியிருக்கிறேன்.

கதை சுனைக்காவில் நீலி என்ற யக்ஷியைப்பற்றியது . இப்போது தேசிய நெடுஞ்சாலையாக இருக்கும் கோட்டயம் கொல்லம் பாதை முன்பு வண்டித்தடமாக இருந்தது . சாலைபோட்டது திவான் கேசவதாசன் . வண்டித்தடத்திலிருந்து கொட்டாரக்கரைக்குப் பிரியும் சாலை முன்பு சிறிய ஒற்றையடிப்பாதையாக இருந்திருக்கலாம் . கேரளத்தின் பொதுவான நில அமைப்புக்கு மாறாக இது வரண்ட, கடினமான செம்மண்பாறையாலானது . ஆகவே இப்போதுகூட அதிகமும் முந்திரிமரமே இங்கு வளர்கிறது .முன்பு பனைமரங்களும் செண்பக பாலைமரங்கள் போன்றவையும் அடர்த்தி இல்லாமல் வளர்ந்திருக்கும் காட்டுப்பகுதியாக அது இருந்தது. இப்போதும் அங்கே ஆள்வாசம் மிகக் குறைவுதான். செங்கல்பாறையை வீடுகட்ட செங்கல்லாக செதுக்கும் தொழில் இருப்பதனால் பகலில் தொழிலாளர் நடமாட்டம் இருக்கும் ,அவ்வளவுதான். சுனைக்காவில் நீலி பிரதிஷ்டை ஒரு பிரம்மாண்டமான உருளைப்பாறையின் கீழே இருக்கிறது .முன்பு கோயில் கிடையாது ,அப்பாறையின் அடியிலுள்ள சிறிய குகை ஒன்றுக்குள் விக்ரகம் நிறுவப் பட்டிருந்தது . இப்போது அதைக் கருவறையாகக் கொண்டு கான்கிரீட்டில் முகமண்டபமும் சிறுகோபுரமும் கட்டி , வரவேற்பு வளைவும் அமைத்திருக்கிறார்கள் . பெயரும் சுனைக்காவில் பகவதி என்று மாற்றப்பட்டிருக்கிறது.

ஆனாலும் இப்போதுக்கூட அங்கே போகும்போது மனம் கலக்கமடையும். காரணம் அந்த பாறைதான் .அதைப்பார்த்துக் கொண்டிருந்தால் எக்கணமும் அது உருண்டு நம்மீது விழுந்துவிடும் என்ற பிரமை ஏற்படும். அதன் உச்சியில் ஒரு கள்ளிப்பாலைமரம் ஏதோவெடிப்பிலிருந்து எழுந்து நிற்கிறது . கள்ளிப்பாலைமரம் இப்போதெல்லாம் மிகவும் குறைந்துவிட்டது . அந்த மரத்துக்கே யக்ஷிப்பாலை என்று பெயர் இருப்பதனால் யாரும் அதை வளர்ப்பதில்லை . சிறிய இலைகள் குலைகுலையாக அடர்ந்த கிளைகள் நாற்புறமும் சரிந்து கிடக்கும் அந்த மரமே ஒரு யக்ஷி கூந்தல் விரித்து நிற்பதுபோலத்தான் இருக்கும் .ஆடிமாதம்தவிர பிறமாதங்களில் கோயிலுக்கு பக்தர் வருகை இல்லை. கொட்டாரக்கரை போக அது ஒரு குறுக்குவழியாகையால் அடிக்கடி பேருந்துகள் போகும். முன்பு அவ்வழியாகப்போகிறவர்களை சுனைக்காவில் யக்ஷி கவர்ந்து அந்த பாறை உச்சிக்கு இட்டுச்சென்று உதிரம் குடித்து விட்டு கீழே உதிர்த்து விடுவது வழக்கமாக இருந்திருக்கிறது .உள்ளூர்க்காரர்கள் அவ்வழியாக போவதில்லை என்றாலும் கோட்டயம் கொல்லம் வியாபாரிகள் அவ்வழியாகச் சென்று அவ்வப்போது அகப்பட்டுக் கொள்வதுண்டு. கூட்டமாகச்சென்ற பலர் பாறையின் உச்சியில் நிலவொளியில் பந்தச்சுடரின் கரும்புகைபோல நீண்ட கூந்தல் மேலெழுந்து பறக்க கைகளை விரித்தபடி நிற்கும் யக்ஷியை கண்டிருக்கிறார்கள். சில கூட்டங்களை அவள் பின் தொடர்ந்து வந்திருக்கிறாள் , யட்சியின் மார்புக்காம்புகளிலும் கூரிய பார்வை உண்டு என்பது அடையாளம்.

துளசிமங்கலம் மனையின் மூத்த மாந்திரிகரான பிரம்மதத்தன் நம்பூதிரிப்பாடு அதர்வ வேத அடிப்படையிலான ஆபிசார வேள்விகள் செய்பவரானாலும் யக்ஷிபூதங்களை அடக்கும் வித்தை தெரிந்தவரல்ல. அதில் அவருக்கு ஆர்வம் இல்லை. நாட்டில் தெய்வ பயமும் ஒழுக்கமும் நிலவ யக்ஷியும் பூதங்களும் அவசியம்தான் என்பது அவர் எண்ணம் . ஒருமுறை கொல்லம் சாலையில் முகத்துவாரம் என்ற ஊரில் ஒரு ஆபிசார யக்ஞத்துக்காக அவர் சென்றிருந்தார் . அவரது மகனும் பிரதான சீடனுமான விஷ்ணுசர்மன் துணைக்குச் சென்றிருந்தான். வேள்வி நடந்து கொண்டிருக்கும்போதுதான் மிக அவசியமான ஒரு பொருளை எடுத்துவர மறந்துவிட்டது தெரிந்தது . அதர்வ மந்திரம் எழுதப்பட்டு நாற்பத்தொன்றுநாள் பூஜை செய்யப்பட்ட போதிபத்ரம் அது .வேள்வி மூன்றுநாள் நடக்கும். அதற்குள் அதை எடுத்துவந்துவிடலாம் .ஆனால் அது மனையின் உள்ளே ஜேஷ்டைகோயிலின் கருவறைக்குள் இருந்தது . அங்கு நம்பூதிரியும் சீடனும் தவிர பிறர் நுழையக் கூடாது. மேலும் மந்திரங்களை பிறர் பார்ப்பதும் அபாயம். ஆகவே அவர் தன் மகனையே அனுப்ப தீர்மானித்தார்.

சுனைக்காவில் யக்ஷி குடியிருக்கும் பகுதிதான் குறுக்குவழி . அவ்வழியாக சென்றால்தான் சென்று வர முடியும். நம்பூதிரி தன் மகனுக்கு மந்திரம் ஓதி உருவேற்றப்பட்ட மூன்று கூழாங்கற்களை தந்தார் .சுனைக்காவு யக்ஷி வழிமறிப்பதில்லை , அதற்கான அதிகாரம் அவளுக்கு இல்லை .பின்னால்வந்து அழைப்பாள் , சபலப் பட்டு திரும்பிப்பார்ப்பவர்கள்தான் அவள் இரை . திரும்பிப்பார்க்காதவர்களை அவள் ஒன்றுமே செய்யமுடியாது . எக்காரணத்தாலும் திரும்பிப்பார்க்கலாகாது என்றும் , திரும்பிப்பார்க்க நேரிட்டு யக்ஷி பிடிக்கவந்தால் ஒரு கூழாங்கல்லை எடுத்து அவளை எறியுமாறும் நம்பூதிரி சொன்னார். அப்படி அவன் மூன்றுமுறை தப்பிக்கலாம்

விஷ்ணு கிளம்பினான் .அவனுக்கு பயமிருந்தாலும் கூழாங்கற்கள் கையிலிருக்கும் தைரியமும் ,என்ன நடக்கிறது என்று பார்க்கும் ஆர்வமும் ,தன் மனவலிமையை சோதித்துப் பார்க்கும் துடிப்பும் இருந்தது . சாலையில் இருந்து சிறுபாதைக்கு பிரிந்ததுமே அவனது புலன்கள் எல்லாமே மும்மடங்கு வலிமைகொண்டு விட்டன . மனம் ஐந்தாக பிரிந்து ஒவ்வொரு புலனிலும் குவிந்திருந்தது . அது முழுநிலா நாள். வெட்டவெளியில் நிலவொளி கனவுத்தோற்றம்போல இளநீல நிழல்களுடன் பெருகி நிரம்பிக் கிடந்தது . தனித்தனியாக நின்ற மரங்கள் காற்றில் மெல்ல இலைகளை சிலுசிலுத்தபடி நின்றன. வானில் நிலவு அமானுடமான ஒரு மெளனத்துடன் மெல்லிய காவிநிறம்கலந்த வெண்மையுடன் ஒளிவிட, மேகச்சிதறல்கள் அதை பிரதிபலித்தன . காற்று மரங்களை உலைத்தபடி ஓடும் ஒலியும் , அவ்வப்போது சிறு பிராணிகள் சருகுகளை மிதித்தபடி ஓடும் ஒலியும் அவனை அதிரவைத்தன. தொலைவில் சுனைக்காவுப் பாறை கழுவிய ஈரம் உலராத யானை போல கரிய பளபளப்புடன் நின்றது .அதன் மீது நின்ற பாலைமரம்மீது நிலவொளி பாலருவிபோல கொட்டியது .அவன் எச்சரிக்கைகளை மறந்து மெல்ல அந்த காட்சியின் மோனத்தில் தன்னை மறந்துவிட்டான் .

ஒரு காலடியோசை கேட்டுத்தான் சுயநினைவு பெற்றான். கவனித்தபோது அது அவனது காலடியோசைதான் என்று தெரிந்தது . ஆறுதலடைந்து சில அடிதூரம் நடந்தபோது இன்னுமொரு காலடியோசைகேட்பது போலிருந்தது .பலமுறை செவிகூர்ந்த பிறகு அது தன் காலடியின் எதிரொலி என்று அறிந்தான். ஆனாலும் அவ்வொலியை மனம் மிகக் கூர்மையாக கவனித்தது . பிறகு ஒரு கணத்தில் அவனுக்கு தெளிவாயிற்று, அது எதிரொலி அல்ல . காரணம் ஒருமுறை அவன் காலடி வைப்பதற்குள்ளேயே எதிரொலி கேட்டது. அவன் உடல் குப்பென வியர்த்து விட்டது .உடல் முழுக்க பலவிதமான துடிப்புகள் வேகம் கொண்டன. மூச்சை சிரமப்பட்டு வெளிவிட்டு இழுக்கவேண்டியிருந்தது .பிடரியில் மயிர் சிலிர்த்து ஒரு மணல் விழுந்தால்கூட சருமம் உடைந்து ரத்தம் வந்துவிடும் போலிருந்தது .

மென்மையான ஒரு சிரிப்பொலி கேட்டது . மோகமும் குறும்பும் தெரியும் ஒலி. ‘ தெரிந்துவிட்டதா ? நான் அப்போதே உங்கள் பின்னால்தான் வருகிறேன் ‘ அனிச்சையாக திரும்பிய கழுத்தை அனைத்து பிரக்ஞையாலும் பிடித்து நிறுத்தவேண்டியிருந்தது . ‘ ஏன் பார்க்க மாட்டார்களோ , பயமா ? ‘ பிறகு கருணையும் அன்பும் தெளிந்த குரல் , ‘ உங்களைப்போன்ற ஓர் ஆண்மகனைத்தான் நான் காலாகாலமாக தேடிக் கொண்டிருந்தேன்… ‘ .அவன் அவள் பேச்சுகளை செவிகொடுக்காமலிருக்க முயன்றாலும் மனம் அக்குரலிலேயே குவிந்திருந்தது .அவள் பேச்சுகளுக்கெல்லாம் அவன் அந்தரங்கம் பதில்சொல்லியபடியே இருந்தது .அவன் திரும்பாதது கண்டு அவள் குரல் மாறுபட்டது . ‘ எல்லாமே கட்டுக்கதை . பெண்களைப்பற்றித்தான் யார்வேண்டுமானாலும் என்னவேண்டுமானாலும் சொல்லலாமே .நான் அப்படிப்பட்டவளில்லை .நம்புங்கள் ‘ என்று தழுதழுத்து மெல்ல விசும்பினாள். அவன் மனம் உருகியது , கால்கள் குளிர்ந்துகனத்து அசையமறுப்பதுபோல உணர்ந்தான். திரும்பமாட்டேன் திரும்பமாட்டேன் என்று மந்திரம்போல சொல்லிக் கொண்டான்.

அவள் அவனிடம் பல உணர்ச்சிகளுடன் மீண்டும் மீண்டும் பேசினாள். கொஞ்சல், அழுகை, காமச்சிணுங்கல்கள் , முனகல்கள் ,பலவித அந்தரங்க ஓசைகள்….. கடைசியில் அவள் ‘சரி , ஒத்துக் கொள்கிறேன் .நீ என்னைப்பற்றி நன்றாக தெரிந்தவன் .புலனடக்கம் உள்ளவன் .ஆனால் நீ இழப்பது என்ன என்று உனக்குத் தெரிந்திருக்கவேண்டும் . என்னைப்போன்ற ஓர் அழகியை நீ மனிதகுலத்தில் ஒருபோதும் காணமுடியாது . அழகு பற்றிய உன்னுடைய எந்தக் கற்பனையும் என்னைத் தொட்டுவிடமுடியாது….. ‘

‘ ‘நீ போய்விடு .நான் ஏமாளி இல்லை ‘ ‘என்று அவன் சொன்னபோது குரலில் உறுதி இருக்கவில்லை

‘ ‘ஒரு கணம் ?ஒரே ஒரு கணம் ? நீ பிறகு வாழ்நாள் முழுக்க வருத்தப்படுவாய்…. ‘ ‘

அவன் தன் கைகளில் இருந்த கூழாங்கற்களைப் பார்த்தான் . உதடுகளை ஈரப்படுத்தியபடி இருமனத்துடன் தடுமாறி ,சட்டென்று தீர்மானித்து , திரும்பிப்பார்த்தான் . நிலவொளியில் இளம் தாழம்பூ போல அவள் நின்றிருந்தாள் . அவனது சிந்தை பிரமித்து உறைந்திருந்த நேரத்தில் அவளது புன்னகை விகாரமடைந்து கரங்கள் நீண்டு வந்தன . அவன் சுதாரித்துக் கொண்டு ஒரு கூழாங்கல்லை எடுத்து அவள் மீது வீசினான் .அவள் பெரிய ஒரு பாறையால் தாக்கப்பட்டதுபோல அவள் தெறித்து விழுந்தாள்

அவன் ஓடி மூச்சுவாங்க நின்றபோது பின்னால் அவள் வந்துவிட்டிருந்தாள் . சுனைக்காவின் பாறை அப்படியே தொலைவில் நிற்பதுபோலப் பட்டது .நடக்க நடக்க தூரம் குறையாதது போல. ‘ என்னை இன்னொரு முறை பார்க்காமல் உன்னால் இருக்கமுடியுமா ? ‘ ‘ என்றாள் அவள் . ‘ நான் உன்னை ஏமாற்றினேன். எந்த பெண்ணும் முதலிலேயே தன்னை முழுக்க வெளிப்படுத்திவிடமாட்டாள் .நான் இன்னமும் பேரழகி… ‘ ஆனால் அவள் சொற்களை அவன் கேட்டதாகவே காட்டிக்கொள்ளவில்லை .

அவள் சென்று விட்டது போலத்தோன்றியது . அவன் செவி கூர்ந்தபோது எந்த ஓசையுமில்லை .ஆனாலும் அவன் திரும்பவில்லை . சட்டென்று அவனது அம்மாவின் குரல் கேட்டது ‘ விஷ்ணு , எங்கே போகிறாய் ? அப்பா எங்கே ? ‘ திரும்பிப் பார்க்கப்போனவன் கட்டுப்படுத்திக் கொண்டான். ‘விஷ்ணு , என்ன இது ,கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் எங்கே போகிறாய் ? உன் அக்காவுக்கு ஜன்னி கண்டிருக்கிறது அதுதான் உன்னைதேடி நானே வந்தேன்…. யக்ஷியெல்லாம் உள்ள இடம் என்கிறார்கள்.. ஆ…. ‘ அம்மாவின் பயம் நிறைந்த அலறல் ஓசைகேட்டு அவன் ‘அம்மா ‘என்று திரும்பிவிட்டான் . அக்கணமே என்ன என்று புரிந்துகொண்டு பயங்கர தோற்றத்துடன் புகைபோல எழுந்து தாக்கவந்த யக்ஷிமீது தன் கூழாங்கல்லை எறிந்தான் .

மீண்டும் அவள் பின்னால் வந்தாள் . ‘ நீ தப்பப் போவதில்லை .அது எனக்கு உறுதியாகத் தெரியும் .தாய் மீது அதிகமான பாசம் கொண்ட எவரும் பெண்களிடமிருந்து தப்பமுடியாது . ‘

‘உன் பேச்சை நான் கவனிக்கவே போவதில்லை ‘

‘நீ திரும்பிப்பார்ப்பாய் . பார்க்காதவன் என்றால் முதலிலேயே திரும்பிப் பார்த்திருக்கமாட்டாய். ‘

‘இல்லை இனி ஏமாற மாட்டேன்.. ‘ ‘

‘ உனக்கு இது மிக அரிய வாய்ப்பு .ஆண்களின் காமம் மனதில்தான் . ஆகவே அதற்கு எல்லையும் இல்லை .உன் ஆழத்தில் எத்தனையோ ரகசிய ஆசைகள் இருக்கும் . நிறைவேறாத ஆசைகள், நிறைவேறவே முடியாது என உனக்கே நன்றாகத்தெரிந்த ஆசைகள். உனக்கு நீயே எண்ணிக்கொள்ளக்கூட கூச்சப்படும் ஆசைகள் . அவற்றை இங்கே நீ நிறைவேற்றலாம் . பார், இப்போது உன்மனதில் மின்னலாக வந்துபோன அவளுடைய அதே தோற்றத்தில் நான் நின்றுகொண்டிருக்கிறேன்… ‘ ‘

அவன் தழுதழுத்த குரலில் , ‘ என்னை விட்டுவிடு ‘ என்றபடி , தலையை திருப்பாமலேயே நடந்தான் .

சற்று நேரம் கழித்து அவள் ‘சரி , உன்னிடம் என் தோல்வியை ஒப்புக் கொள்கிறேன். உனக்கு ஒரு பரிசாக இதை அளிக்கிறேன் .ஒரு ஆணுக்கு அவனுடைய மிகச்சரியான மறுபாதி போன்ற பெண் ஒருத்தி உண்டு . அவளை அவன் முழுக்க முழுக்க தற்செயலாகவே சந்திக்கமுடியும். ஆகவே கோடானுகோடி ஆண்கள் அவளை கண்டுகொள்வதேயில்லை . அவளைக் கண்டால்கூட ஒருவேளை அவர்களால் அடையாளம் காணமுடியாதுபோகலாம் . அந்த சந்திப்பு நிகழும்போது அவன் ஆழ்மனமும் விழித்திருக்கவேண்டும் ….. ‘ ‘

‘ ‘என்னிடம் நீ எதையுமே பேச வேண்டாம் ‘ ‘

‘ ‘விஷ்ணு, இனி உன்னை நான் ஏதும் செய்யமுடியாது உன் ஊர் வரப்போகிறது .என் எல்லையும் வந்துவிட்டது . இது உன் சுயகட்டுப்பாடை மதித்து நான் அளிக்கும் பரிசு . உன்னுடைய பெண்ணை உனக்குக் காட்டுகிறேன் . அதன் பின் அவளை நீ தேடிக் கண்டுபிடிக்கலாம் . குறைந்தபட்சம் அவள் என நம்பி வேறு ஒருத்தியை மணக்காமலாவது இருக்கலாம். ‘ ‘

‘ ‘நீ போய்விடு ! போ… ‘ ‘

‘ ‘உண்மையிலேயே அவளைப் பார்க்க நீ விரும்பவில்லையா ? அவளை பார்ப்பது ஒருவகையில் நீ யார் என அறிவதும் கூட ‘ ‘

‘ ‘வேண்டாம் போய்விடு… ‘ ‘

‘ ‘நீ அறியமாட்டாய் . மண்ணில் மனிதர்களுக்கு அளிக்கபட்டுள்ள இன்பங்களில் முதன்மையானதே அப்படிப்பட்ட முழுமையான காதல் இன்பம்தான் . எத்தனையோபேர் அதற்காக தங்கள் உயிரை தயக்கமின்றி தியாகம் செய்திருக்கிறார்கள்…. அவர்களை அவ்வின்பத்தை அறியாத சாமானிய மக்கள் புரிந்துகொள்வதேயில்லை . நீயோ உயிருக்கு அஞ்சி அந்த மாபெரும் இன்பத்தை தவறவிடுகிறாய்… ‘ ‘

அவன் தன் கடைசிக் கூழாங்கல்லைப் பார்த்தான் , வியர்த்த கரங்களிலிருந்து அது நழுவிவிடும் போலிருந்தது . அவன் கால்கள் தயங்கின , சற்றுத்தள்ளி அரசமரம் தெரிந்தது . அதன் அடியில் ஒரு பிள்ளையார் சிலை . அதற்கு சற்று இப்பால் ஓடும் சிறு நீரோடைதான் யக்ஷியின் எல்லை . அவனது கால்கள் வேகம் குறைந்தன . அந்த எல்லை மெதுவாக வந்தால்போதும் என தன் மனம் எண்ணுவதை அவன் ஆச்சரியத்துடன் உணர்ந்தான் . அந்த பயணம் கத்திமுனைநடையாக இருந்தபோதிலும் அது ஓர் உச்ச அனுபவம் . ஒருபோதும் இதேபோன்ற தீவிரமான கணங்கள் இனி அவனுக்கு நிகழப்போவதில்லை . இந்த நாள்களைப்பற்றி பேசிப்பேசியே அவன் தன் எஞ்சிய நாட்களை கழிக்கவேண்டும் . அதன் இறுதித் துளியையும் சுவைக்க விரும்பினான் .

‘ ‘இதோ பார் , ஒருவேளை இதை தவறவிட்டதற்காக மனமுடைந்து நீ தற்கொலைகூட செய்ய நேரும். ‘ ‘

அவன் எல்லையை நெருங்கியபிறகு நின்று , திரும்பிப்பார்த்தான் . ‘ நீயா ? ‘ என்றான் பதறிப்போய்.

அதற்குள் யக்ஷி அவனை நெருங்க ,அவன் கூழாங்கல்லை வீசினான்.

அவன் மறுபடியும் காலெடுத்து வைப்பதற்குள் அவள் ‘ நில் ‘ என்றாள் . உரக்கச் சிரித்தபடி , ‘நம்ப முடியவில்லை அல்லவா ? நான் காட்டியது உண்மைதான் என உன் ஆழத்துக்கே தெரியும் . இப்போது தெரிந்ததா நீ எத்தனை எளிய மானுடப்புழு என்று ? எத்தனையோ கட்டுகளால் மீட்பின்றி பிணைக்கப்பட்டவன் நீ . உன்னால் ஒருபோதும் உன் மனம் நாடும் எந்த இன்பத்தையும் அடைய முடியாது .நான் சொல்வதைக்கேள் .இந்த மானுட உயிரை துறந்துவிடு…. என்னுடன் வா.. எங்கள் உலகில் கட்டுப்பாடுகளும் தயக்கங்களும் இல்லை… ‘

அவன் ஒரு காலைத்தூக்கி ஓடைக்கு அப்பால் வைத்தான். மறுகாலைத் தூக்குவதற்கு முன் அவள் திட்டவட்டமான குரலில் ‘ நில் , உன்னால் போக முடியாது .அதற்காகவே இதை இறுதியாக வைத்திருந்தேன் ‘ என்றாள் . ‘ இங்கேபார் , இப்போது நான் நீ பார்த்தே ஆகவேண்டிய ஒருத்தி . உன் ஆழத்தில் எப்போதுமே இருப்பவள்… ‘

‘ ‘இல்லை இல்லை அப்படி யாரும் இல்லை ‘ ‘ என அவன் கூவினான்

‘ ‘உன்னால் முடிந்தால் நீ போகலாம் .ஆனால் இப்போது உன் மனத்தில் எழுந்த அந்த ஆவலை என்னைப்பார்த்தால் நீ தீர்த்துக் கொள்ள முடியும். நீ கண்டிப்பாக திரும்பிப்பார்ப்பாய் .எந்த ஆணும் தவிர்க்கமுடியாது . இங்கேபார்…. ‘

விஷ்ணு நம்பூதிரியின் உடல் சுனைக்காவு பாறைக்கு அடியில் சிதறிக்கிடந்தது . அதன் பிறகுதான் பிரம்மதத்தன் நம்பூதிரிப்பாடு மந்திரங்களை கற்று யக்ஷிகளையும் பூதங்களையும் வாதைகளையும் அடக்க ஆரம்பித்தாராம் .யாராலும் அடக்கமுடியாத சுனைக்காவில் யக்ஷியை அடக்கியதும் அவர்தான்.

இந்தக்கதையை அந்தரங்கமாக உன்னால் புரிந்துகொள்ள முடியவில்லையா ?

***

jeyamohanb@rediffmail.com

Series Navigation

ஜெயமோகன்

ஜெயமோகன்

முகம்

This entry is part [part not set] of 45 in the series 20030302_Issue

பத்மாசினி


முகமூடிகளைக்
கழட்டியும், மாட்டியும்
பின் மாற்றியும், மாட்டியும்
இருந்ததில்…முகம் மறந்து போனது.

முகத்தை மீட்டெடுக்க
கழட்டிய முகமூடியைப் போடாமல்
முகத்தைத் தேடிய போதுதான்
தெரிந்தது…முகம் தொலைந்திருந்தது.

padmasini2003@yahoo.com

Series Navigation

பத்மாசினி

பத்மாசினி