டெபோனேரும் ப்ளேபாயும்

This entry is part [part not set] of 35 in the series 20021207_Issue

அனிருத்தன் குணசீலன்


மொட்டை மாடியில் வத்தல், வடாம் எல்லாம் காயப் போட்டாகி விட்டது. இப்போதுதான் நிழலில் நிம்மதியாக உட்கார முடிகிறது. காலையில் ஆறு மணியில் இருந்து பம்பரமாக சுழல வேண்டியுள்ளது. அமெரிக்க வாசத்துக்கும் இந்தியா திரும்பியதற்கும்தான் எவ்வளவு வித்தியாசங்கள். மாமியாருக்கு பேண்ட், சட்டை போட்டால் பிடிக்கவில்லை. வேலை செய்வதற்கு செளகரியமாய் இருக்காதாம்.

இந்த வேலையெல்லாம் படிக்கிற காலத்திலேயே செய்ததுதான். நடுவில் கல்லூரியில் ஹாஸ்டல் வாசம், கொஞ்சம் சோம்பேறியாக்கினாலும் விடுமுறைக்கு வந்தால் பெண்டு கிழியும். அம்மாவே இடித்து இடித்து செய்யப் பழக்கி இருந்தாள்.

தம்பி ரகுவோ என்னை விட நன்றாக ஏய்த்துவிடுவான். பாலுக்குப் போயேன் என்றால் ஹிந்தி கிளாஸ் செல்ல வேண்டும் என்பான். பேப்பர் படித்துக் கொண்டேக் கொஞ்சம் கைக்குழந்தையைத் தூளி ஆட்டு என்றால் குளிக்கப் போய் விடுவான்.

பம்பில் தண்ணீர் அடி என்றால் பழைய தண்ணியை தீர்த்துவிடுகிறேன் என்று நான் அடித்து வைத்ததையும் காலி செய்துவிடுவான். இன்று காலை ஒரு மணி நேரம் போனில் யாருடனோ அரட்டை. வழிந்ததைப் பார்த்தால் ‘துள்ளுவதோ இளமை ‘ ரகமோ என்று சந்தேகம் எனக்கு. நான் படிக்கும்போது எல்லாம் தலை நிமிர்ந்து கூடப் பார்க்கக் கூடாது.

இன்று நான்காவது படிக்கும் போதே டேட்டிங் ஆரம்பித்து இருக்கிறாள், எனதருமைத் தங்கை. ரகுவிடம் யாருடா ஃபோனில் என்பதற்கு ஃப்ரெண்ட் என்றான். எவடா அவ என்பதற்கு காதிலேயே வாங்காமல் வெளியே சென்று விட்டான்.

எனது வேலை விஷயமாகக் காலையில்தான் அனைவரும் கூப்பிடுவார்கள். எனது கல்லூரித் தோழி தீபாவின் அலுவலகத்தில் இருந்து கூப்பிடலாம். வயலின் வகுப்பு சீனியர் ராதே கூட நேற்று அவள் வங்கியில் தேவையுள்ளது என்று கூறியிருந்தாள். அவர்கள் அழைத்திருக்கலாம்.

வேலை செய்துவிட்டு செய்யாமலிருப்பது ரொம்பவே கஷ்டம். சும்மாதானே இருக்கிறாய் எனப் ப்ல்வேறு வேலைகள் தலையில் விழுந்து விடுகிறது.

சிவா வேறு, மாமியாருக்கு கூட மாட உதவியாக இரு, வேலையெல்லாம் வேண்டாம் என்று சொல்லிக் கொண்டே இருக்கிறது. அதுக்கு என்ன அரசாங்க வேலை. இந்தியா திரும்பிய உடனேயே அவசரமாக வங்கிப் பரிட்சை, தேர்வாணைக் குழு என்று எது எதுக்கோ விண்ணப்பம் வாங்கி, டிடி எடுத்து எப்படியோ உட்கார்ந்து விட்டது. அதுவும் என் மாமியார் இருக்கும் டெல்லியில்தான் கிடைக்க வேண்டுமா.

நான்தான் அங்கேயும் தகுதி இல்லாமல், தனியாருக்கும் தெரியாத ஜாவாவில் பதிலில் தட்டுத் தடுமாறி கமலின் கலைப்ப்டம் மாதிரி அந்தரத்தில் தொங்குகிறேன்.

புருஷன் ஒரு இடம், பொண்டாட்டி ஒரு இடம் வேண்டாம் என்று என்னையும் மாமியார் வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள். வந்த உடனேயே அப்படி ஒரு குளிரில் தாக்குண்டு லொக்கு லொக்கு இருமல். அமெரிக்காவில் சொர்க்கமான சான் ஓஸே வாசம். இந்தியவில் சென்னை என்று இருந்து ஹனிமூனுக்கு ஊட்டிக் கூடப் போகாத என்னை ஜீரோ டிகிரி செல்சியஸில் தள்ளிவிட்டார்கள்.

முதலில் வந்த நேர்முகத் தேர்வில் எல்லாம் என்னைப் பார்த்தவுடன் சம்பளத்தை விட மருத்துவ செலவுக்கான பஞ்சப்படி, சிக் லீவ் எத்தனை நாள் என்றுதான் அழுத்திச் சொல்லுவார்கள்.

இப்போது கோடையில் வெயில் கொளுத்தோ கொளுத்துகிறது. அதுதான் படிப்பு, வேலைக்கு நடுவிலும் வத்தல், வடாம் எல்லாம் இட்டுக் காயப் போட்டு இருக்கிறேன்.

நமது பாட்டி காலத்து வழக்கம். கடைகளில் கிடைக்கிறதே என்பதற்காக நாம் விட்டு விட முடியுமா ? நாம் செய்தால்தான் நம் குழந்தைகளுக்கு செய்ய வேண்டும் என்ற ஆவல் பிறக்கும். எதுவுமே, தன் கையால் செய்து பிறர்க்கும் கொடுத்து அவர்கள் நன்றாக உள்ளது என்று கூறும் போது உண்டாகும் இன்பமே ஒரு தனி சுகம். அதுவே, கடையில் வாங்கிப் பொரித்ததைப் பாராட்டினாலும் நமக்கு என்னப் அதில் பங்களிப்பு இருந்தது எனபதை பாராட்டுபவரும், செய்பவரும் அறிந்தேயிருப்பார்கள்.

காதில் தேனாகத் தொலைபேசி அழைத்தது. வேலைக்குக் காத்திரும் பொழுது தொலைபேசியே இனிய கானம். சிவா ஏதாவதுப் புதிய அனுகூலம் கேட்குமோ என்றும் ஒரு பயம் எட்டிப் பார்த்தது. ஆனால், டெபோனேர் வேலை விஷயமாகத்தான் ஃபோனிலேயே முதல் கட்டத் தேர்வு.

கிடைத்தால் நிஜமாகவே கரும்புத் தின்ன கூலி கிடைக்கும். மங்கையர்கள் எல்லாம் வத்தல் வடாமுடன் போஸ் கொடுக்க நான் அதற்கு இணைய வடிவமைக்கிறேன். நடுவில் புறாக்கள் சிறகடிக்கின்றன. ஒன்று இப்போதா எச்சமிட வேண்டும் என் தலையில். துடைக்க எழுந்தால் மணி ஐந்து.

நான் வேலை பார்க்கும் ப்ளேபாயில் எட்டு சதவிகிதம் நீீக்குகிறார்கள். இன்னும் கொஞ்ச நேரத்தில் தெரிந்து விடும். ஆட்குறைப்பு பற்றி சிவகாமியிடம் இன்னும் பேசவில்லை. வேலை போகாவிட்டால் மாலையில் ஓக் மரச் சாலையில் இருந்து ஜிலேபி வாங்க வேண்டும்.

அப்புறம் என்ன சிவா-ஜியின் வாயில் ஜிலேபிதான்.

*

mail_aniruthan@yahoo.com

Series Navigation

அனிருத்தன் குணசீலன்

அனிருத்தன் குணசீலன்