நான்காவது கொலை!!! (அத்யாயம் – ஒன்பது )

This entry is part [part not set] of 27 in the series 20021001_Issue

ஜெயமோகன்


ஒன்பது

**

சங்கர்லால் அந்த இருவரையும் பதுங்கிப் பதுங்கிப் பின் தொடரும்போது எதிரே வேறு ஒரு ஆசாமி பதுங்கிப்பதுங்கி வருவதைக் கண்டு [ சரவணா ஸ்டோரில் கிலோ விலைக்கு வாங்கிய ] துப்பாக்கியை சரேலென்று உருவி ஒரு தூணின் மறைவில் ஒளிந்தபடி எட்டிப்பார்க்கையில் ஒரு சடைமுடிச் சாமியார் பம்முவதைக் கண்டு ‘ கைகளை மேலே தூக்கு ! உன் பெயர் என்ன ? எங்கிருந்து வருகிறாய் ? ‘ என்று கேட்டார் .

‘கைகளை மேலே தூக்கினால் வேட்டி அவிழ்ந்துவிடுமே ‘ என்றார் சாமியார்

‘அப்படியானால் ஒருகையை மட்டும்தூக்கினால் போதும் . ‘ சங்கர்லால் கட்டளையிட்டார் ‘ நீர் யார் ? ‘

சாமியார் புன்னகையுடன் ‘ ‘என் பெயர் திகம்பர சாமியார் . பூர்வாசிரமத்திலே சொக்கலிங்கம் பிள்ளை . மனைவி சிவகாமியுடன் துப்பறியும்பொருட்டிங்கு வந்தேன், துப்பறிவதற்கு தாசிகளைத் தேடி போகிறேன் ‘ என்றார் .

‘தாசிகளா எதற்கு ? ‘

‘என்ன கேள்வி இது மகனே ? பத்து பக்கத்துக்கு பத்துபக்கம் தாசிகதைகள் இல்லாமல் என்னால் எப்படி துப்பறிய முடியும் ? நீ என் புகழ்பெற்ற கும்பகோணம் வக்கீல் என்ற கேஸைமட்டுமாவது ஒருமுறை படித்துப் பார்க்கவேண்டும்… ‘ திகம்பர சாமியார் சொல்லலானார் ‘ நீ கேட்ட வினாவானது ஆழமானதும் அற்புதகரமானதுமாகுமெனக் கூறக்கடமைப்பட்டுள்ளேன். . பரமயோகிகள்கூட இதைப்பற்றி பலவாறாக சிந்தித்தும் பதில்காணமுடியாது தவித்துக் கொண்டிருகிறார்களெனினும் உனதுவினாவினை ஒருவாறு தெளிந்து சில சொற்கள் சொல்லலுற்றேன். கும்பகோணம் மன்னார்குடி ரஸ்தாவிலே பாபநாசம் என்று ஒரு சிற்றூருண்டு .அங்கே ஸ்தனபாக்கியம் என்றொரு தாசி ………. ‘

சங்கர்லால் எட்டிப்பார்த்தார் .ஐயத்துக்குரிய இருவரும் வெகுதொலைவில் சென்றுவிட்டிருந்தார்கள் . ‘சற்று வேகமாக சொல்லவேண்டும் சுவாமி.. ‘ என்றார்

‘ஆயிரத்து துளாயிரத்து முப்பதுகளிலே எங்கள் வடுவூரார் கதையே அதிவேக இலக்கியமென அறியப்பட்டதென நீவிரறியீரோ ? தஞ்சாவூர் கும்பகோணம் பாசஞ்சர் போல ராத்திரி முழுக்க பாய்ந்து போய்க்கொண்டே இருக்குமென்பார்கள் .ஒரு புள்ளியைக்கடக்க ஐம்பத்தேழாயிரம் சொற்களோ அல்லது ஆறு நாட்களோ அல்லது இதில் எதுஅதிகமோ அது ஆகும். ..நான் யாரென நீவிர் கேட்டவினாவுக்கு பதில்சொல்லப்புகின் விரியும். அமரும்… ‘

சங்கர்லால் தந்திரமாக கீழ்பக்கம் ஓடிய படிகளை பார்த்தார் ‘ …. அங்கே தர்மநெறி வழுவா பிராமணோத்தமர்கள் தினம் சந்திவந்தனம் பந்திவந்தனமீறாக குலதர்மங்களை மீறாதவர்களாக ஒழுகிவந்தமையினால் ….. ‘

துப்பறியும் நிபுணர்களுக்கேயுரிய லாவகத்துடன் சங்கர்லால் தப்பியோடியமை வாசகர்கள் ஊகித்தறிந்து மகிழ்வு கொள்ளத்தக்க விஷயமேயாகும்.

******

காலையில் வசந்த் தொடர கணேஷ் ஹாலுக்கு வந்தபோது அங்கே ஒரே களேபரமாக இருந்தது . ‘பாஸ் நம்ம ஃபல்குனன் பிள்ளா என்னமோ ஸ்டால் திறந்திருக்காப்ல ‘ என்றான் வசந்த் .

ஃபல்குனன் பிள்ளா ஒரு மேஜைக்கு பின்னால் சொகுசாக சாய்ந்து தேசாபிமானி பார்த்துக் கொண்டிருந்தார் . ‘வணக்கம் வாங்க … ‘

‘என்ன எஸ் டி டி பூத்தா ? ‘ என்றான் வசந்த் .

‘இல்லை சார். போலீஸ் செய்தி தொடர்புக்கு போட்டிருக்காங்க . ஏகப்பட்ட துப்பறியும் நிபுணர்கள் வந்திட்டாங்க . எல்லாருக்கும் செய்தி சொல்லி கட்டுப்படியாகவில்லை .அதுதான் . இரண்டாவது கொலை போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வாங்கிட்டாங்களா ? ‘

‘என்னது பிட் நோட்டாஸா ? ‘

‘இல்லை சார் . நூறு காப்பி வரை தேவைப்பட்டது . அதான் எஸ். பி உத்தரவு ‘

‘புத்தம் புதிய சருமத்துக்கு புன்னகை பூசுமஞ்சள் தூள் ! ‘ என்று வசந்த் வாசித்தான்

‘ஹி ஹி ஹி செலவை விளம்பரம் வழியாக ஈடுகட்டுகிறோம் சார் … ‘

அந்தபக்கமாக ஒருவர் நடந்து போக வசந்த் உற்று பார்த்து ‘எங்கேயோ பார்த்த முகம் ‘ என்றான்

‘பெரி மேசன் சார் .பின்னால் போகிறது அவரது துப்பறியும் நிபுணர் ‘ ‘

‘ஏகப்பட்ட ஆட்கள் வந்துவிட்டார்கள் போலிருக்கிறதே ‘

‘மொத்தம் எண்பதுபேர் . கான்ஸ்டபிள் கந்தசாமி , குங்குமப்பொட்டு குமாரசாமி , ஆனந்த சிங் ‘

‘சரிதான் சர்தார்ஜி ஜோக் வேறயா ? ‘

‘இவர் ஆரணி குப்புசாமி முதலியார் கதாபாத்திரம் . ‘

‘இத்தனைபேர் ஒரு கதையிலேயா ? ‘

‘இந்த கதாசிரியர் ஒரு டைப் சார் . மொத்தம் ஆயிரத்துஅறுநூறு பக்கம் நாநூறு கதாபாத்திரங்கள் என்று திட்டமிட்ட பிறகுதான் நாவலுக்கு கருவே யோசிப்பாராம் . இந்தக் கதையைக்கூட மொத்தம் ஆறாயிரத்து எழுநூற்று பதினெட்டு அத்தியாயம் எழுதபோகிறதாக பேச்சு . நல்ல வேளை நான் அதற்குள்ளே ரிட்டையர் ஆகிவிடுவேன் .நீங்கள்தான் பாவம் , மர்மம் அவிழாமல் நிம்மதியாக டாய்லட் கூட போக முடியாது ‘

‘அதுக்காக இப்படியா , ஒருத்தர் பின்பக்கத்தை இன்னொருத்தர் லென்ஸ் வைச்சு பாக்கணும்போலவா ? ‘

‘அதுதான் இந்தக் கதையின் ஜீவகளை சார். இந்த கதையிலே துப்பறியும் நிபுணர்கள் மேலேயே சந்தேகம் . குற்றவாளி யார் ? கணேஷ் வசந்த் ? ஷெர்லக் ஹோம்ஸ் ? துப்பறியும் அப்புசாமி ? ‘

‘அந்தாள் வந்துட்டானா ? ‘ வசந்த் அலறிவிட்டான்.

‘ அரைபிளேடு ,ரசகுண்டு ஜ. ரா. சுந்தரேசன் எல்லாரும் வந்தாச்சு ‘

‘சி. ஐ. டி சகுந்தலா வரலீங்களா ? ‘

‘அவங்கதான் இன்னைக்கு காபரே ஆட்டம் . போஸ்டர் பார்க்கவில்லையா ? ‘

‘பாஸ் இன்னைக்கு நான் தனியா துப்பறியறேனே ? ‘

கணேஷ் நொந்துபோய் ‘ விடுரா , நான் போய் போரும் அமைதியும் மறுபடி படிக்கமுடியுமா என்று பார்க்கிறேன் ‘ என்று போய்விட வசந்த் ரிசப்ஷனில் இருந்த ஒல்லியான பெண்ணிடம் ‘ மிஸ், நீங்க ஹார்லிக்ஸ் சாப்பிடுவது கிடையாதா ? ‘ என்று கேட்கப்புகுந்தான்.

அப்போது அவிழ்ந்த கூந்தலுடன் கொற்றவையல்லள் என வேம்பு பாய்ந்து வந்து ‘ என்னாங்க ஓட்டல் இது ? தினத்துக்கு ரெண்டாயிரம் ரூபா வாங்கறீங்க . ஒட்டடையெல்லாம் கூட்டி தொடைச்சு வைக்கிறதில்லையா ? கோந்தை வெளையாடற எடம்… ‘ என்றாள்.

‘ஒட்டடையா ? இருக்காதே ‘ என்றார் மேனேஜர் .

‘ எங்கிட்டே சொல்றேளா ? அந்த ஓரத்து ரூமிலே இத்தா பெரிசு ஒரு சிலந்தி … ‘

‘அய்யோ அம்மா .அது ஸ்பைடர்மேன் .ராத்திரி பூரா துப்பறிஞ்சுட்டு இப்பதான் வந்து உத்தரத்துக்கு அடியிலே ஒட்டிக்கிட்டு ரெஸ்ட் எடுக்கறார் ‘ என்றார் பட்லர் பரமசிவம் .

‘ ஏன் அவருக்கு மூல உபத்திரவமோ ? ‘ . வசந்தால் அந்த ஒல்லியை சிரிக்கவைக்கமுடியவில்லை

‘அந்த வடக்குப் பக்க ரூமிலே பேட்மேன் வேற தலைகீழா தொங்கிட்டிருக்கார் . பாத்துப்போங்கோ.. ‘

‘நல்ல ஓட்டல் கட்டினீங்க போங்க .பூச்சியும் பொட்டுமா … ‘

அப்போது ஒரு ஆசாமி மூக்குமேல் இரு மெல்லிய குச்சிகளை வைத்து ஆட்டியபடியே போனார்.

‘வித்தைக்காரருங்களா ? ‘ என்றான் வசந்த் .

‘இல்லீங்க .இவரு பேரு காக்ரோச் மேன் .. ‘

‘கேள்விப்பட்டதில்லையே ? ‘

‘இன்னும் ரிலீஸ் ஆகலை . ஸ்பைடர்மேன் கிட்டே அப்ரண்டாஸாக இருக்கார் . ‘

‘வெங்காய சருகு மாதிரி இருக்கு ‘ வசந்த் அந்த ஆளின் கோட்டை தொடப்போனான் .

‘பின்னாலே போகாதீங்க . அவரோட ஆயுதமே பின்னாலே பீச்சி அடிக்கிற நாத்தம்தான் .முந்தாநேத்து பார்க்கிங் லாட்லே அப்டியே சீறிட்டார். இன்னும் கழுவி முடிக்கலை .. ‘

வேறு ஒருவர் சோபாநுனிகள் மேல் கால்வைத்து தாவித்தாவி போனார் ‘இவரு யாருண்ணு நான் சொல்றேன் .கிராஸ்ஹோப்பர்மேன் .சரியா ? ‘ என்றான் வசந்த்

‘ ‘இந்தமாதிரி ஏகப்பட்டது இருக்கு சார் . இன்னும் பதினேழுபேர் இப்ப லார்வா ஸ்டேஜிலே இருக்காங்க ‘

அந்தப்பக்கமாக போன இரு வெள்ளையர்களை வசந்த் கவனித்தான் .அவர்களில் ஒருவர் ஸ்டிக்கர்பொட்டு வைத்திருந்தார் .

****

இன்ஸ்பெக்டர் கோபாலன் தன் முதன்மை சந்தேகபாத்திரத்தை அடிமேலடிவைத்து நிழல்போல பின் தொடர்ந்துகொண்டிருந்தது அவரது குணச்சித்திரத்துக்கு இயல்பே என அதிபுத்திசாலிகளான நமது நேயர்கள் இதற்குள் ஊகித்திருப்பார்கள் . இவ்வாறு பழகிவிட்டமையினால் அவர் தன்முன் பின்தொடர யாருமில்லாத பட்சம் நடப்பதேயில்லை. அடிமேலடி காரணமாக அவருக்கு கொன்னக்கோல் என்றபெயரும் காய்கறிக்கடை வட்டாரத்தில் உண்டு . [அவர் தன் வீட்டில் சமையலறையிலிருந்து குளியலறைக்கு போகும்போது அம்மியில் தடுக்கி விழ அது சற்று நகர்ந்த விஷயத்தை எமது ‘பழமொழிகளும் உண்மையும் ‘ என்ற நூலில் காண்க. விலை மூன்றணா . முன்பணம் கட்டுபவர்களுக்கு பிழைதிருத்தப்பட்டியல் இனாம் ]

கறுப்புக்கண்ணாடி அணிந்த அந்த மர்ம ஆசாமி பேசும் மொழியும் விபரீதமாக இருப்பதை கோபாலன் கவனிக்கத்தவறவில்லை . ஒரு வேளை ஏதாவது தமிழ்ப் பாடநூலில் இருந்து தவறி வந்த கதாபாத்திரமோ என்ற சந்தேகமும் அவருக்கு எழாமலில்லை . கடைசியில் முப்பது சொற்களுக்குமிகாமல் பதில் சொல்லவேண்டியிருக்குமோ என பீதியுடன் எண்ணிக் கோண்டார் , அவர் தமிழ்பாடத்தில்தான் ஃபெயிலாகி போலீஸ் பக்கம் வந்தார் .

வராந்தாவை தாண்டிச்செல்கையில் ‘…… கண்ணாடி காந்தாமணி என்பவளைப்பற்றி கேள்விப்பட்டிருக்காதவர்கள் வெகுஅபூர்வம். இவளது கன்னமாகப்பட்டது பெல்ஜியம்கண்ணாடி போலிருப்பதாலிப்பெயர் சித்திததென்று கூறுவாருளர் . கண்ணாடிக்கடை கந்தப்பமுதலியென்பானின் எடுத்துவைப்பிவளென்பதால் இப்பெயரென்று கூறுவார் சிலருமுளர் . … ‘ என்று ஒரு குரல் கேட்டது

கறுப்புக்கண்ணாடி அணிந்த மர்ம ஆசாமி அக்குரலைக்கேட்டதுமே இடியோசைகேட்ட நாகம் போலவும் , அம்மா குரல் கேட்ட மந்திரிபோலவும் பம்மிப் பதுங்கி மறுபக்கமாகச் செல்வதை கோபாலன் கவனிக்காமலிருப்பரென நாம் எதிர்பார்க்கமுடியாது . அவ்வழி வந்த ஒரு பட்லரிடம் ‘அதென்ன ஏதோ கதை கேட்கிறது ? ‘ என்று கோபாலன் கேட்டார்.

‘ ‘அது துப்பறியும் திகம்பர சாமியார் சார் . அவரிடம் யாரோ எங்கிருந்து வருகிறீர்கள் என்று கேட்டுவிட்டார்கள். காலையிலிருந்து பதில் சொல்லிக் கொண்டிருக்கிறார். கேட்டவன் தப்பி ஓடிவிட்டான், வழிதவறி ஒரு ஆசாமி அகப்பட்டுக் கொண்டான் . அவனை மீட்க தீயணைக்கும்படைக்கு சொல்லி அனுப்பியிருக்கிறது…. ‘ ‘ என்றான்.

அதற்குள் கறுப்புக்கண்ணாடி அணிந்த மர்ம ஆசாமி தப்பிவிட்டான் என கோபாலன் அறிந்து ஆஹாரம் போட்டு தேட ஆரம்பித்தார் . எல்லா அறைக்கதவுகளும் மூடியிருந்தமையால் அவர் ஒவ்வொரு அறைக்கதவாக காதைவைத்து கேட்டது துப்பறியும் சாஸ்திர விதிப்பிரகாரமேயாகும். ஓர் அறைக்குள்ளிருந்து பயங்கரமான சிரிப்பொலியும் ‘ ‘வாலு போயி கத்தி வந்தது ! டும் ! டும் ! டும் ! ‘ ‘ என்ற கவிதையும் யாரோ நடனமிடும் ஒலியும் கேட்டது .

கோபாலனுக்கு கோபம் வந்தது , என்ன தொடர்கதை இது சம்பந்தமே இல்லாமல் . என்னதான் அங்கதக்கதை என்றாலும் இப்படியா ? திடாரென அவர் மனதை பீதி கவ்வியது . ஒருவேளை உள்ளே இருப்பதுதான் கதாசிரியரா ? கதைபோகிறபோக்கைபார்த்தால் அப்படித்தான் தோன்றுகிறது . அடாடா மாட்டிக் கொண்டேனே , என்ன செய்வது என அவர் தவித்தபோது கதவு திறந்து உள்ளே நின்ற வெள்ளைக்கார நாரீமணியின் காலடியில் அவர் குப்புற விழுந்து தெண்டனிட்டார் .

‘அய்யோ அய்யோ ! அறையிலும் இருக்க விடமாட்டார்களா ? ‘ என்றாள் அவள்

‘நான்.. நான்….. ‘ என்றார் கோபாலன்

‘தெரியும் நீங்கள் காங்கிரஸ் கட்சி . ஐயா, எனக்கு இத்தாலி என்ற தேசத்தையே தெரியாது போதுமா… ‘

‘ நான் துப்பறியும் கோபாலன் . ‘ என்றார் கோபாலன் ‘துப்பறியும் சாம்பு கூட வருவேனே ? ‘

‘கேள்விபட்டதில்லையே ? ‘

‘ ‘கத்தி போயி ரொட்டி வந்தது ! டும் ! டும் ! டும் ! ‘ ‘

‘ மரவீடு அதாவது பி ஜி வுட்ஹவுஸ் கேள்விப்பட்டிருப்பீர்கள் . அவருடைய மூன்றாம் கார்பன் தாளைத்தான் நாங்கள் பயன்படுத்துவது . யார் இவர் ? ‘

‘இவர்தான் பெர்ரி மேசன் …. ‘

‘இங்கிலாந்திலெல்லாம் கொத்தனார்களுக்கு நல்ல மவுஸ் போல . பார்க்க பந்தாவாக இருக்கிறார் … ‘

‘நான் டெல்லா ஸ்ட்ரீட்.. . ‘

‘நான் தம்புசெட்டி தெரு . நீங்க இவருக்கு யாரு ? ‘

‘இவர் உலகப்புகழ்பெற்ற துப்பறிீயும் வக்கீல் சார் . நான் இவரோட செகரட்டரி . எத்தனையோ சிக்கல்களை அனாயாசமாக தீர்த்துவைத்த எங்கள் பாஸ் இங்கே ஒரு பெரிய சிக்கலை தீர்க்கமுடியாமல் இப்படி ஆகிவிட்டார் … ‘

‘அடாடா ,என்ன ஆயிற்று ? ‘

‘ ‘ரொட்டி போயி புட்டி வந்தது ! டும் ! டும் ! டும் ! ‘ ‘

‘இந்தக்கதையின் ஆசிரியர் கத்துக்குட்டி .கதை ஓடாமல் பக்கத்து நாவலில் இருந்து எங்கள் பாஸை இழுத்துவிட்டார் . பாஸ் ஒரு இங்கே ஒரு கார் லைசன்ஸ் எடுக்க விரும்பினார் . அதற்காக ஆர் டி ஓ ஆபீஸ் போனார் … ‘

‘அடாடா … ‘

‘ ஐம்பது ஆவணங்கள் கேட்டார்கள் . இன்ஷூரன்ஸில் தொடங்கி ஆர்த்தோ டாக்டரின் சான்றிதழ் வரை . ‘ ‘

‘ கடைசியாகச் சொன்னது எதற்கு ? ‘ ‘

‘சைடு கொடுக்கும்போது கையை வெளியே விட்டு வேகமாக ஆட்டத்தேவையான எலும்புபலம் இருக்கிறது என்று . இந்த ஐம்பது ஆவணங்களை வாங்க மொத்தம் இருநூற்று எண்பத்தெட்டு ஆவணங்கள் தேவைப்பட்டன . ‘

‘அப்புறம் ? ‘

‘பாஸ் சோர்ந்துவிடுபவரல்ல . அவற்றை பெற முயன்றார் .அதற்கு மொத்தம் ஆயிரத்து அறுநூற்று பதினெட்டு ஆவணங்கள் தெவைப்பட்டன … ‘

‘ பிறகு ? ‘

‘ பாஸ் பிறகு ஒரு ஏஜென்ஸியை அமர்த்தினார் . அந்த ஆயிரத்து அறுநூற்று பதினெட்டு ஆவணங்களைப் பெறுவதற்கு மொத்தம் பதினெட்டாயிரத்து முந்நூற்று அறுபத்தேழு ஆவணங்கள் தேவை என்று கணக்கிட்டுவிட்டார் .படிப்படியாக விடாமுயற்சியுடன் முன்னேறினார் . அப்போதுதான் காற்றடித்து ஆவணங்களைப்பற்றிய குறிப்புகள் கலந்துவிட்டன .போன திங்கள்கிழமை அவற்றை அடுக்கமுயன்றார் . ஒருவாரம் ரொட்டிவைன் உள்ளே செல்லவில்லை. இப்போது இப்படி ஆகிவிட்டார் . இந்தப்பாட்டு ஆர். டி. ஓ ஆபீஸ் வாசலில் ஒரு பைத்தியம் பாடிக்கொண்டிருந்தது . அதையே விடாமல் பாடுகிறார் . ‘

‘பாவம் ‘

‘எனக்கு இப்போது ஒரு குழப்பம் ‘

‘நான் போய்விட்டு பிறகு வருகிறேனே அவசரமாக ஒரு… ‘

‘இருங்கள் . பிளீஸ் . அந்த டிரைவிங் லைசன்ஸ் கிடைத்து விட்டது … ‘

‘அப்பாடா. எப்படி ? ‘

‘ பட்லர் பரமுவிடம் ஆயிரம் ரூபாய் மட்டும் கொடுத்தேன் . மறுநாளே வாங்கிவந்துவிட்டான் . ‘

‘அப்புறமென்ன ? ‘

‘சந்தோஷத்தில் அவனுக்கு இரண்டாயிரம் ரூபாய் டிப்ஸ் கொடுத்தேன். அவனுக்கு என் ஆங்கிலம் புரியாமல் இன்னொரு லைசன்ஸ் வாங்கி வந்துவிட்டான் … ‘

‘இன்னொன்றா ? ‘

‘இது விமானம் ஓட்டும் லைசன்ஸ் .இதை வைத்துக்கொண்டு என்ன செய்வதென்றே தெரியவில்லை …மூளை குழம்புகிறது. எங்கேயோ கேட்ட ஒரு பாட்டுமட்டும் பழுதடைந்த ரேடியோ போல மூளைக்குள் கேட்டபடியே இருக்கிறது …. ‘

கோபாலன் ‘ அமைதியாக இருங்கள் . என்ன இது ? ‘ என்றார்

அந்த அம்மையார் ‘ அடிக்கிற கைதான் அணைக்கும் … ‘ ‘ என்று பயங்கரமாக பாட ஆரம்பிக்க கோபாலன் வெளியே பாய்ந்து படிகளில் தாவி ‘இவளுக்கு தனலட்சுமி தனலட்சுமியென்று ஒர் அதிரூ – பலா- வண்யவதியான ஒரு மகளுண்டு . ரூபவதிகளின் குணங்களேழு வகை . அவையாவனவெனில்… ‘ என்று சொல்லிக்கொண்டிருந்த திகம்பர சாமியாரை தாண்டி ஓடினார்

[தொடரும்]

Series Navigation

ஜெயமோகன்

ஜெயமோகன்

நான்காவது கொலை!!! (அத்யாயம் – ஏழு)

This entry is part [part not set] of 30 in the series 20020917_Issue

ஜெயமோகன்


அத்யாயம் – ஏழு

சன்னதம் கொண்டெழும் ஆயிரம் வனராக்கிகளின் உதரபிம்பத்தில் குளித்தெழுந்த நீர்ப்பரப்பின் வெளியில் உதித்த சூரியர்களில் பெரும் பாழில் மடியும் நீர்கோலங்கள் நெளியும் வானத்து வெண்களிம்பின் மீது நெருப்பு வண்டுகள்ரீங்கரித்து பறக்கும் கரிசல் நிலவின் கனலில் பயங்கர வசீகரமென மின்னும் பனிக்கோளங்கள் சிரிக்கும் சுரோணிதப் பூனையின் கண்களிலிருந்து பறந்துவரும் பூச்சிகளின் மீது விழுந்து சிறகடிக்கும் அடங்காத வெகுமெளனம் இடுங்கிய வாசல்கள் திறந்த தெருச்சுருள்கள்கள் வழியாக நெளியும் பாவனைகள் உதிரும் பட்டுப் பரப்பின் தூய்மை கூறப்படும் . ஆயிரத்தியெட்டாவது அண்டாரெண்டப்பட்சியும் சென்று மறைந்த கானவெளியில் எப்போது கடைந்தகுன்றுகள் வாழும் நிலவு ஏன் கூறுகிறது என கேட்டு அந்த வனராக்கிகள் கூடுகட்டும் வெட்டவெளியின் வழியாக அவர்கள் நடந்து சென்றார்கள் .

‘ ஹோம்ஸ்! ‘ என்று பீதியுடன் அழைத்தபடி வாட்சன் அவரது கைகளை பற்றிக் கொண்டபோது நடுக்கத்தையும் ஈரத்தையும் ஹோம்ஸ் உணர்ந்தார் .

‘ ஈசி ,ஈசி , வாட்சன் என்ன இது ? அப்படியொன்றும் விபரீதமாக ஆகிவிடாது . மெதுவாக பார்த்து நடந்தால் போதும்… ‘ என்று ஹோம்ஸ் உதறலுடன் சொன்னார் .

சிரிக்கும் யாளிகளின் நீண்ட நெடும்பற்கள் விரிந்த அண்டாரெண்டபட்சியின் சிறகுகளில் ஓடும் அகண்டாகார ரத்தக்குழாய்கள் வெடித்து துடிக்கும் ஆயிரம் சிரிப்புகளில் உப்புக்கத்தியில் பாழ்பட்ட வசீகரமெனும் சிதையின் சுவை பரப்பிய பாழில் வெளுக்கும் அவரோகணச் சொல்வெளியின் வனராக்கிகள் கூத்தாடும் விழுதுகள் சிதிலமென விரிந்த தலைகீழ் பிம்பப் பாறையின்மீது கூடுகட்டி நாய்கள் மோந்து பார்க்கும் பனுவல்கள் கூத்தாடிக் கூத்தாடி உடைத்த நந்தவனத்தாண்டியின் குடங்கள் உடைந்து பரவிய பாத்திகளில் நிலவுப்பூக்கள் கல்நாதசுரங்கள் கனிந்த சங்கீத சுரங்கள் போட்டு கிடக்கும் சித்தம் போக்கு சிவன்போக்கு என்று சொல்பெருகிய சூட்சும ஜங்கம ஸ்தாவர வெட்டவெளியில் ….

‘வாட்சன் என் கைகளை கெட்டியாக பிடித்துக் கொள்ளுங்கள். வழுக்கும் .மெல்ல .மெல்ல பர்த்து .. ‘

பொன்வண்டுகள் கல்மண்டபங்களில் தெறித்து பரவிய சொல்வெட்டவெளியென தழைக்கும் சிவப்பு கூடுகள்மீது ஜாங்கோ சொன்ன ஆழமரத்து வேர்கள் வெடித்த பிம்பங்கள் படித்தவன் கெடுத்தபாட்டில் எழுதியவன் கெடுத்த ஏடென கட்டியமுட்டைப் பொம்மைகள் உடைபடும் பாதையின் நிறங்கள் மழைக்கும் இந்த காடுகள் எங்கும் ஒலிக்கும் பழ்பட்ட வசீகரப்பாதைகளில் அக்கா குருவிகளில் சிறகடிக்கும் சிவப்பு பனிக்கத்திகளுடன் ஆலீஸ்…

‘ஹோம்ஸ் எந்த இடம் இது ? ‘

‘பீதியடையாதீர்கள் வாட்சன் நாம் பிரிட்டிஷ்காரர்கள் .நிதானமே நம் தேசியகுணம்… ‘

‘ஹோம்ஸ் ,எனக்கு வயிற்றை கலக்குகிறது… ‘

‘கால்களை கவனமாக எடுத்து வையுங்கள் ,பார்த்தீர்களா ; மெல்ல …மெல்ல… வழுக்க கூடாது , அக்கம் பக்கம் பார்க்கவெண்டாம் … ‘

சங்கிலிக்கருபன்கள் வண்டிமலைச்சிகள் வனராக்கிகளின் கூச்சல்களில் ஆடும் ஆலமர விழுதுகளில் முரளும் யானைக்காதுகளில் புலியின் மீது பனிவாள்கள்கூச்சலிடும் அடுத்த காட்டுபரப்பில் சிந்தனை அண்டபெருவெளியில் எப்போது வெடிக்கும் நட்சத்திரங்களில் மெக்ஸிக மாயக்கிழவன் குடித்த சிவந்த பீரில் எரியும் நெருப்பில் குடித்த வனராக்கிகள் நடனமிட வெட்ட வெட்டத் தழைக்கும் சொற்கள் அடங்காத யானை வயிற்றுப்போக்கென காடு நிறைக்கும் இந்த பெரும்பாழில் மூன்றாவது கண்களின் சுடர்கள் அலைந்தது…

‘ ஹோம்ஸ் நாம் வந்த பாதை குழம்பிவிட்டது ,எதிரே பாதையும் இல்லை .மாட்டிக் கொண்டுவிட்டோம் .அங்கே பாருங்கள் ஒரு ஆள்… ‘

எதிரே வந்த தாடிக்கார இளைஞனிடம் ஹோம்ஸ் ‘மன்னிக்கவேண்டும் .தங்கள் நேரத்தை சற்று எங்களுக்கு ஒதுக்கி இந்த பயங்கரமான இடம் எது என சொல்ல முடியுமா ?.

இளைஞன் சிரித்தபடி ‘ அண்டாரெண்ட பட்சி முட்டைல ஆம்லெட் போடுவேனே ஹையா ‘ என்றான்

எதிரே இருந்த ஃபிர்ச் மரத்தின் பின்னால் இருந்து ஒரு வயோதிகன் எழுந்து — ஆம் , நீங்கள் எண்ணியது சரிதான். அவனது நீண்ட தாடி மார்பில் வழிந்து தரையில் விழுந்து ஓடைபோல ஓடி பக்கத்திலேயே அருவி போல விழுந்துகொண்டிருந்தது — ‘ அபாகுபாக்கஸ் மேகநதிகளின் நிலாவெளியில் புயூணஸ் அயேர்ஸ் ஒளிரும்போது ஸ்பார்டகஸின் சிலுவையில் அயோடின் உப்புகளில் கத்திகள் வயலெட் நிறம்பூத்ததென்ன ? ‘ என்றான்

இளைஞன் ‘வனராக்கி கூட வட்டாடுவேனே ‘ என்று சொல்லி துள்ளிதுள்ளி ஓடினான்.

‘வாட்சன் அழாதீர்கள். தயவுசெய்து… என்ன இது . … ‘ என்றபிறகு ஹோம்ஸ் தன் நுண்ணோக்கியை எடுத்து தரையை கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தார் .

‘வாட்சன் கவனித்தீர்களா ? அடிக்கடி அண்டாரெண்டபட்சி என்று ஒன்று தென்படுகிறது . அதை மட்டும் கவனியுங்கள், வேறு எதையுமே பார்க்க வேண்டாம்… ‘

அவர்கள் இருவரும் மிகுந்த கவனத்துடன் காலெடுத்து வைத்து , மெக்ஸிக மேய்ச்சல் பூட்சுகளை பதியன் போடுவதில் மூழ்கியிருந்த ஆசாமியின் கவனத்தை கவராமல் நடந்து சென்று ஒரு மூடிய கதவின் பின்பக்கத்தை அடைந்தார்கள்.

தட்டியபோது திறந்து ஒரு செர்வர் எதிர்கொண்டான் ‘ இளம் நண்பரே இது என்ன இடம் ? ‘ என்றார் ஹோம்ஸ்.

‘இது கெண்டக்கி சிக்கன் கார்னர். நீங்கள் அண்டாரெண்ட பட்சி வழியாக வருகிறீர்களா ? ‘

‘ஆமாம்.. ‘

‘இங்கு வர அது ஒரு குறுக்குவழி. அண்டாரெண்ட பட்சி என்பது செரிக்காத சிக்கன்தான். வாருங்கள் .. ‘

உள்ளே சென்று அமர்ந்ததும் வாட்சன் ‘ அடிமை இந்தியர்கள் இந்த அளவுக்கு பொறுப்பற்றவர்களாக இருப்பார்கள் என்று நினைக்கவேயில்லை ஹோம்ஸ் .குழந்தைகள் நடமாடும் பாதையில் எத்தனை கவனக்குறைவாக இதைத் திறந்து போட்டிருக்கிறார்கள்! ‘ என்று பொருமினார்

பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த பெரியவர் ‘ உள்ளொளி வேணும் சார் . அது இல்லாட்டி இப்டித்தான் மாட்டிக்கவேணும் . நாமதான் சார் கவனமா இருக்கணும் ‘ என்று சொல்லி தன் சட்டைப்பையில் இருந்து சிறிய பென் டார்ச்சை எடுத்துக் காட்டினார் ‘ நான் எங்க போனாலும் கையோட கொண்டு போயிடறது . ‘

வாட்சன் அதை வாங்கி ‘ கைக்கடக்கமாக இருக்கிறது ‘ என்றார்

‘ஆட்டோ சார்ஜரும் உண்டு சார் … ‘

‘இதையெல்லாம் யாரும் கண்டிப்பதேயில்லையா ? ‘ என்றார் ஹோம்ஸ்.

‘நீங்க என்ன சார் பார்த்தீங்க ? அன்னிக்கு இப்படித்தான் ஒரு கிழக்கவிஞரை எப்டியோ பிடிச்சுண்டு வந்துட்டாங்க. இரண்டுபேர் அமுக்கி பிடிக்க ஒருத்தர் போட்டு கட்டுடைக்கிறார் .அவரானால் அய்யோ ஆத்தா என்று ஒரே அழுகை .அப்புறம் ‘ஆசிரியர் இறந்துட்டார்னு துரையே சொல்லியாச்சு , சும்மாகெட சவமே ‘ என்று சொல்லி அப்படியே புதைத்து விட்டு புதையுண்ட பிரதின்னு ஒரு பிரசங்கமும் பண்ணிட்டாங்க..என்ன சார் பண்றது ? காலம் கெட்டுபோய் கிடக்கு , பாத்தேளா சிக்கன்லே இஞ்சி போடலை .உங்க காலத்திலே இப்படியெல்லாம் உண்டா ? ‘

சிக்கன் வந்தது . ‘இதுக்கெல்லாம் ஓட்டல் எப்டி இடம் குடுக்குதூன்னு தெரியலை ‘ என்று ஓரமாக ஒருவர் அங்கலாய்த்தார்.

‘நாங்க என்ன சார் பண்ரது ?அவங்கதான் ஜனநாயக உரிமைன்னு கத்றாங்க.இவங்களோட குரு ஒருத்தர் அவரே பிழைவேட்டரையர் , அரைவேக்காடர்னு ரெண்டு கதாபாத்திரங்களை போட்டு துப்பறியும் கதை எழுத ஆரமிச்சுட்டார் . பிரச்சினை வேணாம்னு எடம் குடுத்துட்டோம். ‘ என்றான் செர்வர்

‘ஆள் யாரு ? ‘

‘என்னமோ உம்பர்ட்டோன்னு ஒரு வெள்ளைக்காரன். இவரு அவனோட எக்கோ. ‘

‘கொடுமைசார் .அன்னிக்கு இப்டித்தான் திருநெல்வேலி ஜங்ஷன்லே ஒரு பெரியவர் அவரோட ஃப்ரண்டை வழியனுப்ப வந்திருக்கார் . யாரோகேட்டதுக்கு, ‘… ஒண்ணுமில்லே ஜார்ஜ் போராஹெ… ‘ அப்டான்னு சொல்லியிருக்கார் . அந்தமானிக்கு அவரை அள்ளிட்டு வந்து ஸ்பானிஷ் சொல்லிகுடு, அர்ஜெண்டானாவுக்குபோய் மண் அள்ளியாவது பொழைச்சுக்கிறோம் அப்டான்னு சித்ரவதை பண்ணிட்டாங்க சார்.. ‘

‘கிறிஸ்துவின் பெயர் என்றென்றும் நிலைபெறட்டும் ‘ என்றார் வாட்சன் பெருமூச்சுடன்.

***

கதையை பாதியில் விட்டுவிட்டு சில வாசகர் கடிதங்கள்.

1] இலக்கிய சிருஷ்டியின் ஊடுபிரதித்தன்மையின் sublime அதன் ஈரடித்தலின் அதிகபட்ச சாத்தியங்களின் இரட்டைகள் நடுவே ஊடாடும் இன்மையில் உறைவுகொள்கின்றன .ஆகவே கொலை செய்தது ஒருபிணமாகவே இருக்க வாய்ப்பு இருக்கிறது என்று நவீன குறியியல் [இதில் இருபால் உண்டு] மற்றும் மறியியல் முறைப்படி சொல்லமுடியும். .ஒவ்வொரு பிணத்தையும் சிறிதளவு தின்று பார்ப்பதே துப்பறிவதற்கான எளிய வழியாகும் [குறிப்பு. ஜப்பானிய ஜென் மேதை ‘நகுமோ மோ கன் லே ‘ கூறியபடி பிணங்களை வேகவைக்கும்போது பித்தப்பையை நீக்கிவிடவும்,கசக்கும் ]

-பிரேம் ,பாண்டிச்சேரி

2]கொலையுண்ணப்பட்ட வயோதிகரின் திரேகத்தின் மீது அலையும் வஸ்திரத்தில் காற்றின் விரல்கள் அலைவு கொள்வதாக தெரிகிறது என்பதனால் கொலைவெளியில் மிதந்து கொண்டிருக்கும் பறவையின் மூன்றாவது கண்களின் அபூர்வ ஷணங்கள் காரணமாக அமையலாம் என தலைமறைவாக இருக்கும் அன்னியஸ்தனான கிழவர் சொல்லியிருக்கிறார் . [கொலை ஏற்கனவே கோயில்பட்டியை சேர்ந்த பெரிய ஒச்சாத்தேவர் என்பவரால் – — துரத்தித் துரத்தி, கதறக் கதற —செய்யப்பட்டு விட்டது . நாமெல்லாம் போஸ்ட்மார்ட்டம்தான் செய்யமுடியும் என்பது என் தனிப்பட்ட அபிப்பிராயம் ]

– எஸ்.ராமகிருஷ்ணன், விருதுநகர்

3]கொலையுண்டவரை மல்லாத்திபோட்டு போதிய சம்ஸ்கிருதத்துடன் எல்லாரும் சுற்றி அமர்ந்து ஆன்மீகமாக ஆளுக்கொரு கதை பேசிக் கொண்டிருக்கலாம், அவர் புரண்டுபடுக்கும் போது எல்லாம் தெளிவாகிவிடும் என என் வீட்டுக்காரர் அபிப்பிராயப்படுகிறார் .

-எஸ். அருண்மொழி நங்கை , நாகர்கோவில்

4]கொலையின் மூர்க்கத்தில் மனித மனம் கொள்ளும் விகசிப்பின் சிகர கணங்களில் விரலிடுக்கில் [வடித்த கஞ்சிபோல] நழுவும் உன்னதங்களில் அனைத்து கலாச்சார வெற்றிகளும் குழம்பிச் சரியும்போது நமது பழமையின் அர்த்தமின்மைகள் மண்டைகள் உடைந்து மோதிச்சாக காத்துகிடக்கின்றன என்பதில்தான் துப்பறியும் கதை தன் ஜீவனை தக்க வைத்துக் கொண்டுள்ளது

-சுந்தர ராமசாமி , [காம்ப் ] கலிஃபோர்னியா

சோதிடரைக் கொன்ற சுடுமதி யானாரென

பாதிவெண் பாவில் பகரக்கேள் — பேதிகொண்டு

டாய்லெட்டு பக்கம் தடுமாறி நின்றபடி

வாய்விட் டழுபவனே ஆம்!

.

–ஆளூர் அச்சுதன்குட்டி கவிராயர்

*******

‘ ‘பாஸ் இப்பல்லாம் துப்பறியும் கதைல ஒரு இதுவே இல்லாம ஆயிட்டு வருது . அத்தியாயத்துக்கு ஒரு கொலைன்னாக்கூட உறைக்க மாட்டேங்குது . சிறுபத்திரிகை ஆசாமிகள்லாம் கூட நெக்ரோஃபீலியாவோட மைக்ரோ நெரேஷன்னு பீலா வுட ஆரம்பிச்சுட்டாங்க. ‘ வசந்த் சொன்னான் .

அவர்கள் படி ஏறி நாலாவது மாடிக்கு போனபோது பொது டாய்லட் அருகே வெளுத்துப்போன முகத்துடன் சர்வோத்தமன் நாயர் நின்றுகொண்டிருப்பதை பார்த்தார்கள். ‘ பாஸ் இவன்தான் ‘ என்றபிறகு ‘ ‘டாய்லெட் போறீங்களா ? போய்ட்டு வரீங்களா ? ‘ என்றான் வசந்த்

‘ காலைலேருந்தே போய்ட்டு வந்துட்டு இருக்கேன் ‘ என்று ஆசாமி அழமாட்டா குறையாக் சொன்னான்.

‘பாஸ் குற்றவாளிக்கு வயத்தைகலக்கும் , அதனால அவன் வாளியும் கையுமா இருப்பான்னு தாஸ்தேயெவ்ஸ்கீல ஒரு தியரி இருக்கே ‘

‘உங்க கிட்டே ஒண்ணு கேக்கணும் ‘ என்றான் கணேஷ் .

‘எதப்பத்தி ? ‘

‘இப்ப நடந்த கொலையப்பத்தி ‘

‘என் வக்கீல்கிட்டே பேசுங்க ‘

‘த பாருங்க , மிஸ்டர் சர்வோத்தமன் நாயர், இது துப்பறியும் கதையோட பாதி .இப்ப நீங்க மாட்டியிருக்கிறதனால் நீங்க ஒரு சோட்டா கதாபாத்திரம்தான் .இந்தமாதில்லாம் நீங்க சொல்ல முடியாது ‘

அந்த ஆள் முகம் வெளுத்து ‘ அப்டியா ? என் கிட்டே சொல்லவேயில்லையே . நான் பாதியிலேயே அவுட்டா ? ‘

‘ஆமா , அதிகம்போனா இன்னும் அம்பது வார்த்தைகளுக்குள்ளளுங்க கதை முடிஞ்சுடும் . உண்மைய சொல்லிடுங்க ‘

‘சரி, நான்தான் கொன்னேன் ‘

‘எப்டி ? ‘

‘தலைகாணிய வச்சு அழுத்திட்ட்டு சுட்டேன் ‘

‘பிரில்லியண்ட் . எப்டி இந்த ஐடியா உங்களுக்கு வந்திச்சு ? ‘ ‘

‘எங்க எழுத்தாளர் மூர்மார்க்கெட்ல வாங்கின ஆங்கில துப்பறியும் நாவலிலே போட்டிருந்தது ‘ ‘

‘மிஸ்டர் சர்வோத்தமன் நாயர் , இந்தக்கொலைய ஏன் செஞ்சீங்க ? ‘

‘அப்டி எனக்கு உத்தரவு . அத நான் மறுக்க முடியாது ‘

‘யாரோட உத்தரவு ? ‘ ‘

‘சொல்லமாட்டேன் . ‘

‘ஏன் ? ‘

‘எப்டாங்க சொல்ல முடியும் , யோசிச்சு பாருங்க.. ‘

ஏன் சொன்னா என்ன ? ‘

‘எட்டாவது அத்யாயத்துலே எப்படிங்க தொடர்கதை முடியும் ? ‘

‘ஆனா நாங்க உங்களை மிரட்டியாகணுமே . மரியாதையா சொல்லுங்க … ‘

‘மாட்டேன் . ஆ! ‘ அந்த ஆள் குபீரென்று குப்புறவிழுந்து கொளகொளத்து தலையை போட்டான் .கணேஷ் பாய்ந்து அவனை அள்ளி தூக்கி ‘ மிஸ்டர் சர்வோத்தமன் நாயர்.. மிஸ்டர் சர்வோத்தமன் நாயர்.. ‘ என்றான்.

அந்த ஆள் ‘ வ்ஹக்ஷ் ! ச்ழுழ்னிச் ! னுச்ஞே¢ஷ ச்முறிக்ல்ட் ஜ்நமுர்ம்டும்ம டிஜ்வ்கலச்றிச்! ‘ என்றான்

‘பாஸ் இதான் எஸ்பராண்டோவா ? ‘

‘ ‘ நாசமா போச்சு , இது என்னமோ ஃபான்ட் மாறாத பிரச்சினைடா . இன்டெர்நெட் மேட்டர்னா இது கண்டிப்பா இருந்தாகணும்.. ‘ ‘

‘பாஸ் ஆள் காலி ‘

‘ ஆனா பாதி துப்பு குடுத்துட்டுதான் சோட்டாக்கள் சாகணும் . இது ஏழாவது விதி ‘ என்றான் கணேஷ் ‘ நீ அந்தாள் சொன்னதை எப்டியாவது ஃபான்ட் மாத்த முடியுமான்னு பார் ‘ ‘

வசந்த் அவன் வாயை கூர்ந்து கவனித்து, ‘ ‘பாஸ் இவனுக்கு யாரோ விஷம் வச்சிருக்காங்க ‘ என்றான்.

[தொடரும் ]

Series Navigation

ஜெயமோகன்

ஜெயமோகன்