மனைவி…

This entry is part [part not set] of 26 in the series 20020812_Issue

ஆனந்தன்


அழகிற்குத் தவமிருந்தேன்..
அன்பாய் நீ வந்தாய்…
பன்பிற்காய்ப் பார்த்திருந்தேன்
பாசத்தில் நீ அரவணைத்தாய்….

சிந்தனையில்
சிலை வடித்தேன்,
சிற்பியாய்…
கற்பனையில்
கவி படைத்தேன்,
கவிஞனாய்…
அந்த பிரம்மனையும்,
கம்பனையும்
மிஞ்சி விட…
என் தேவதையாய்
உனைக் காணும் முன்.

சிறு குறும்புகள் செய்து
சிறு பிள்ளையானேன்!
சச்சரவுகள் செய்து
சிறு சண்டைகளிட்டேன்….
எப்பொழுதும் புன்னகை சிந்தி
எனை ஆட்கொண்டாய்…

விட்டுக் கொடுத்தலுக்கு
தண்ணீர் குடிக்காமல்
உயிர் துறந்த
கதையில் வரும்
மான்கள் மட்டும் அல்ல,
கண்ணே…
நாம் கூட
ஓர் உதாரணம் தான்!

புன்னகை பூத்த – உன்
முகம் தெரிந்தால் – என்
கோபம் கூட
கோணி நிற்கும்…

காமதேனும் தேவையில்லை
என் அருகே
நீ இருந்தால்..

ஆனந்தன்
k_anandan@yahoo.com

Series Navigation

ஆனந்தன்

ஆனந்தன்

மனைவி!

This entry is part [part not set] of 27 in the series 20020127_Issue

வ.ந.கிாிதரன்


1.

இரவு மணி பதினொன்றினை நெருங்கிக் கொண்டிருந்தது. யன்னலினூடி கட்டட முனிகள் தவமியற்றிக் கொண்டிருப்பது தொிந்தது. ஓட்டியற்ற ஓடமாகப் பிறை நிலவு. பலகணியில் அடைந்திருந்த புறாக்கள் சில அசைந்தன. அடுத்த அப்பார்ட்மென்ட்லிருந்த இதுவரை கத்திக் கத்தி யுத்தம் புாிந்து கொண்டிருந்த யமேய்க்கனும் அவனது வெள்ளைக் காதலியும் சற்று முன்னர் தான் சப்தமிழந்து ஓய்ந்து போனார்கள். மனோரஞ்சிதத்தின் நெஞ்சுப்புற்றிலிருந்து ஞாபகம் பாம்புகளெழுந்து படம்விாித்தாடின. முன்றிலில் சாய்வு நாற்காழியில் சாய்ந்திருக்கும் அப்பாவின் சாறத்தைக் கதிரையாக்கி அப்பாவுடன் சேர்ந்து அவளும் விாிந்து கிடக்கும் விண்ணின் அழகில் மனதொன்றிக் கிடப்பதிலெவ்வளவு சந்தோசம்! நட்சத்திரங்கள் கொட்டிக் கிடக்கும் இரவு வான் அவளது நெஞ்சில எப்பொழுதுமேயொரு வித புதிர் கலந்த பிரமிப்பினை ஏற்படுத்தி விடும். அண்ணாந்து பார்க்கும் போது விாிந்து கிடக்கும் வெளியின் ஒரு பகுதியாக அந்தரத்தில் மிதந்து இயங்கும் இன்னொரு சுடராகத் தன்னையுணர்வாள். அச்சமயங்களில் இளகிக் கிடக்கும் மனது…நீண்ட பல வருடங்களிற்குப் பின்னால் வருகை தந்திருந்த நீண்ட வால் வெள்ளி பார்ப்பதற்காக அப்பாவுடன் ஒவ்வொரு நாள் அதிகாலையும் நேரத்துடன் எழுந்தது இப்பொழுதும் மனதினுள் பசுமையாகவிருக்கிறது.

2.

‘அப்பா! சாியான புத்தகப் பூச்சி. அப்பா! ஆறடி தாண்டிய ஆகிருதி. சிந்தனைக் கண்கள். குமிண் சிாிப்பு. நானறிய பார்த்து அப்பா வேலைக்கென்று வெளியெ போனதில்லை. வேலைக்குப் போகாத அப்பா. எந்த நேரமும் சாய்வு நாற்காலியில் சாய்ந்தபடி கிரகாம் கிறீன், டால்ஸ்டாய், வூட் ஹவுஸ், கொன்ராட்,… ஆனந்த விகடன், கல்கி, கலைமகள்,…இதைத் தவிர வேறென்ன செய்தார் ? அப்பாவிற்குக் கவலைகள் இருந்ததுண்டா ? குடும்பம், குட்டியென்று…எல்லாமே அம்மாதான்.அதிகாலையெழும்பி, அடுக்களை அலுவல் முடித்து, பாடசாலை செல்லும் அம்மா போய்ப் பொழுதுபட வந்தால்.. அம்மா மீண்டும் அடுக்களைதான். அம்மா வரும்வரை அப்பா குட்டி போட்ட நாயாய் அலைவார். அப்பா ஏனப்படியிருந்தார் ? அம்மா அதுபற்றி அலட்டிக் கொண்டது கிடையாது. ஏன் அப்பாவும் தான்.

சில போதுகளில் பழையதை எங்களுடன் பகிர்ந்து கொள்வதுமுண்டு. அந்தக் காலத்தில் அவர் படித்த பாடசாலை ‘களியாட்டு விழா ‘ வொன்றில் அம்மாவைக் கண்டதையவர் கூறக் கேட்டிருக்கின்றேன். ‘குந்தவை ‘ , ‘வானதி ‘போல் கனனியாிருவர் கண்டு சிந்தையைப் பறிகொடுத்ததைச் சொல்லிச் சொல்லியே சிாிப்பார். பதிலிற்கு அம்மாவும் ஆசிாியப் பயிற்சிக் கலாசாலையொன்றில் பயின்றுகொண்டிருந்த காலமொன்றில் பல நூறு மைல்கள் தொலைவில் நடுக்காடொன்றில் நிலம் அளந்து கொண்டிருந்த அப்பாவைக் காண்பதற்காய் அவசரமாய்க் கார் பிடித்து வந்த போது இடையில் குறுக்கிட்ட பஸ்சொன்றில் தொிந்த முழு நீளச் சட்டைக் கையொன்றை வைத்து அப்பாவைக் கண்டு பிடித்த கதைதனை கூறிக் களிப்பார். அப்பொழுதெல்லாம் அப்பா வேலை பார்த்துக் கொண்டிருந்தாராம். ஆழ நடுக் காடுகளில் நில அளவையாளராக அவர் பார்த்த வேலை பற்றி அம்மா சொல்வதுண்டு. காதலென்றால் என்னவென்று அவர்கள் மூலம்தான் கண்டு கொண்டேன். அந்தக் காலத்தில் காதலிப்பதில் அவர்களிற்கிருந்த துணிச்சல் இந்தக் காலத்தில் என்னிடம் கூட இருந்ததில்லை. கருத்தொருமித்தவர் காதல் செய்தால் கிடப்பதெல்லாம் களிப்பே.

அப்பாவிற்கந்தக் காலத்தில் அவர் பெயாில் வீடு, வளவு, வயலென்று அள்ள அள்ளக் குறையாத சொத்துக்கள். சொல்லி மாளாதாம். சின்ன வயதில் பெற்றவர் போய்விட தனித்திருந்தவரை சுற்றமென்றிருந்தவர்கள் முடிந்தவரை சுருட்டி விட்டே சென்றனராம். ஐந்திற்கும் பத்திற்கும் அடகு வைத்து , அடகு வைத்த வட்டி அளவற்றுப் பெருகிவிட, வெளியுலகம் தொியாத அப்பா அவர்களிற்கோர் காமதேனு. அதன் பிறகு…..அப்பா அவர்பாட்டில் முயன்று முயன்று முன்னுக்கு வந்தவராம். பல்கலைக் கழகப் படிப்பைப் பாதியிலே விட்டு விட்டுத் தொழில் நுட்பம் கற்று, நில அளவைத் தொழில் புாியும் போதுதான் கல்லூாிக் களியாட்டு விழாவொன்றில் குந்தவையைக் கண்டு காதல் கொண்டாராம்.

காதலிக்கும் போது வேலை பார்த்துக் கொண்டிருந்த அப்பா கல்யாணம் முடிந்ததும் பென்ஷன் பெற்றுக் கொண்டாராம்.

ஏனென்று அப்பாவை என்றும் கேட்டதில்லை. அப்பாவும் கூறியதில்லை.அவர்கள் காதலித்தார்கள். அவர்களிற்கதுவோர் பிரச்சனையேயல்ல. அவர்கள் அன்பைச் சொாிந்தார்கள். அது போதும் எங்களிற்கு.அறியாப் பருவத்தில் அதுதவிர வேரென்ன வேண்டுமெமக்கு ? புத்தகம் மட்டுமிருந்து விட்டால் போதுமப்பாவிற்கு. எங்களிற்கும் தான்.ராணி, ராணிமுத்து, அம்பிலிமாமா, குமுதம், கதிர், விகடன்,கல்கி,கலைமகள்,மஞ்சாி, தீபம்…இதுதவிர பத்திாிகைகள் பலப்பல. ஜெகசிற்பியன், கோமகள், அநுத்தம்மா, கல்கி, சாண்டில்யன்,பி.வி.ஆர், அறிஞர் அண்ணா, மி.க,

கொத்தமங்கலம்சுப்பு…கதைகள் படிப்பது; நிரைப்படுத்தித் தொடர்கதைகளக் கட்டி வைத்துப் படிப்பது..அப்பா வேலைக்குப் போகவில்லைதான். அப்பா வேலைக்குப் போகவிட்டால் தானென்ன ? வளர்ப்பதிலென்ன குறை வைத்தார் ?

எங்களை வளர்ப்பதிலென்ன குறை வைத்தார் ?

அப்பாவிற்கு அதிகாலைகளில் வானொலியில் அந்தக் காலத்துப் பாடல்களைக் கேட்பதிலோர் களிப்பு. பி.யூ.சின்னப்பா, பாகவதர், எம்.எஸ், டி.ஆர்.ராஜகுமாாி…

‘சிவபெருமான்

கிருபை வேண்டும்.. ‘

‘ராதே! உனக்குக் கோபம்

ஆகாதடா.. ‘

‘காற்றினிலே வரும்

கீதம்.. ‘

அப்பா அம்மாவைப் பொிதும் காதலித்தார். பதிலிற்கு அம்மாவும் அப்பாவை ஆழமாக நேசித்தார், இருந்தும் இடையிடையே சிறுசிறு மோதல்கள்..உரசல்கள்…அப்பொழுதெல்லாம் அப்பா சொல்வார்: ‘செல்லச் சன்னதியிலைச் சாமியாராய்ப் போவன் ‘ கடைசிவரைச் சாமியாராய் அவர் போகவில்லை. கடைசிவரை அவரால் கட்டை மீற முடிந்ததில்லை. அதற்காகச் சொல்லாமலிருக்கவும் அவரால் முடிந்ததில்லை. அம்மாவை நினத்தால் எப்பொழுதுமே வியப்பு; பெருமிதம்தான். ஒருநாள் கூட அப்பாவிடம் ஒருவார்த்தை வேலைபற்றி அவர் கூறிக் கேட்டதில்லை.

‘அவர்தானே உங்களைப்பார்த்ததெல்லாம் ‘ ‘அவர்தானே உங்களை வளர்த்ததெல்லாம் ‘ அப்பா வேலைக்குப் போகாதது அப்பொழுதும் குறையாகப் பட்டதில்லை. அப்பா வேலைக்குப் போகாவிட்டால் தானென்ன ? அப்பா ‘அப்பா ‘வாகயிருந்தார். அது போதாதா எங்களிற்கு. அந்த வேலையை அவர் ஒழுங்காகவே செய்தார். அது போதாதா எங்களிற்கு ? ‘தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து முந்தியிருப்பச் செயல் ‘ அது போதாதா எங்களிற்கு ?

அப்பா நல்லதொரு அப்பாவாகவிருந்தார். அதுதவிர அப்பாவின் உள் உலகம் எப்படியிருந்தது ? அதிலென்னவென்ன ஆசைகள், தாபங்கள்.. அப்பொழுது அதுபற்றிச் சிந்திக்கும் வயதாவெங்களிற்கு ? இப்பொழுது சிந்திக்க முடிகின்றது. அப்பா இருந்திருந்தால் கேட்டிருக்கலாம். இருந்தும் ஒரு குறை. அப்பா எங்களிற்கு அப்பாவாகயிருந்ததில் அளவிடா மகிழ்ச்சி. இருந்தும் வளர்ந்து, உயர்ந்து, கிளை விட்ட சமயத்தில் அவாிலையேயென்று கவலைதான். அப்பா!

‘நீ நீட்டி நிமிர்ந்து படுத்தபடி, பொண்டாட்டியின் உழைப்பில் பொழுதைப் போக்கியவ ‘னென்று யாரும் சொல்லியிருக்கலாம். யார் சொல்லியென்ன ? அம்மா சொன்னாளா ? அவளுக்கோ நல்லதொரு கணவனாய் நீயிருந்தாய்.

எங்களிற்கோ……நல்லதொரு தந்தையாய் நிழல் தந்தாய். அது போதுமெங்களிற்கு. அது போதும். அப்பா! அது போதும்.

அப்பா! அது போதும்.

3.

தூங்க மாட்டேனென்று மனம் இன்று அடம் பிடித்துக் கொண்டிருந்தது. அப்பாவின் நினைவுகள் அவள் நெஞ்சில் ஒருவித ஏக்கத்தினைப் பால்யகாலம் பற்றியதொரு ஏக்கத்தினை ஏற்படுத்தின. கவலைகளற்ற சிட்டுக் குருவிகளாகச் சிறகடித்துக் கொண்டிருந்த அந்த நாட்கள். எப்பொழுது நினைத்தாலும் நெஞ்சினை இளக்கி விடும் அந்த நாட்கள். அப்படியே அப்பா, அம்மாவின் அரவணைப்பில் இருந்த்கு விட்டிருக்கக் கூடாதா ? வாழ்வு அமைதியாகச் சென்று கொண்டிருந்த அந்தப் பால்ய காலத்துக் கணங்களின் இனிமை எங்கே ? தொலைபேசி கணகணத்தது. சோபாவில் சாய்ந்திருந்தபடி தொலைக்காட்சியில் போய்க் கொண்டிருந்த தொலைக்காட்சித் தொடரொன்றை பார்த்தபடி பழைய நினைவுகளில் நனவிடை தோய்ந்தபடியிருந்த மனோரஞ்சிதம் ‘யாராகவிருக்கும் இந்த நேரத்தில் ‘ என எண்ணியவாளாக எழுந்து சென்று தொலைபேசியினை எடுத்து ‘ஹலோ ‘ என்றாள்.

‘ஹலோ ரஞ்சிதமா ? நான் சந்திரன் கதைக்கிறேன் ‘

மனோரஞ்சிதத்திற்கு சிறிது திகைப்பாகவும் மகிழ்ச்சியாகவுமிருந்தது. ராமச்சந்திரன். அவளது முன்னாள் கணவன்.

‘என்ன சந்திரன் இந்த நேரத்திலை.. ‘

‘ரஞ்சிதம், எனக்கு நாளக்கு வேலையில்லை. நீரும் நாளைக்கு வேலைக்குப் போகவில்லையென்று கூறியிருந்தனீர். எங்காவது ரெஸ்றாண்டிற்குப் போய் ஆறுதலாகக் கதைக்கலாமென்று பட்டது. என்ன சொல்லுகிறீர் ? ‘

மனோரஞ்சிதத்திற்கும் போனாலென்னவென்று பட்டது.

‘அதுசாி சந்திரன், இந்த நேரத்தில் எந்த ரெஸ்ராண்டிற்குப் போகலாம்..எல்லாரும் கடையைப் பூட்டுகிற நேரத்திலை.. ‘

‘அந்தக் கவலையை விடும். எனக்குத் தொிந்த சீனனுடைய ரெஸ்ராண்டொன்று டவுண் டவுனிலையிருக்கு…சைனா டவுனிலை தான். அவன் விடிய விடிய திறந்திருப்பான்…அங்கு போகலாம்…என்ன சொல்லுறீர் ? ‘

‘எனக்கென்றால் சாி.. நீங்கள் இங்கு வந்து போக இன்னும் நேரம் சென்று விடுமே.. ‘

‘நான் உமது இடத்திற்குக் கிட்டத் தானிருந்து கதைக்கிறேன். இன்னும் பத்தே பத்து நிமிடங்களில் அங்கு வந்து விடுவேன். ரெடியாய் நில்லும் ‘

மனோரஞ்சிதம் அவன் வருவதற்குள் முகம் கழுவி தன்னைத் தயார் படுத்தத் தொடங்கினாள். ‘இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே காலந் தள்ளுவது. இன்னும் இழுத்துக் கொண்டே போகாமல் இன்றைக்கே பேசி இதற்கொரு முடிவு கட்டினாலென்ன ? ‘ என்றொரு எண்ணமும் கூடவே எழுந்தது. அதே சமயம் ராமச்சந்திரனின் தன்னையே முதன்மைப் படுத்தி அவளை அடிக்கடி வருத்திய பழைய சம்பவங்களெல்லாம் ஞாபகத்திலெழுந்தன. எவ்வளவு தூரம் அவளை வார்த்தைகளாலேயே குற்றியிருப்பான். எதற்கெடுத்தாலும் அவள் மேல் சந்தேகம். அவள் நேரம் கழித்து வரும் சமயங்களெல்லாம் அவளை வார்த்தைகளால் எவ்வளவு தரம் வாட்டியிருப்பான் ? சில சமயங்களில் ‘தேவடியா ‘ என்று கூடத் திட்டியிருக்கிறான். அவற்றுடன் ஒப்பிடும் பொழுது இவ்விதம் பிாிந்து சந்தித்து வாழ்வது கூட ஒரு விதத்தில் நன்றாகத் தானே இருக்கிறது. இப்படியே இருந்து விட்டாலென்ன ? ‘ பலவிதமான எண்ணங்கள் வளையமிடத் தன்னை அலங்காிப்பதில் மனோரஞ்சிதம் ஈடுபட்டாள். ராமச்சந்திரன் கூறியமாதிாியே பத்து நிமிடங்களில் வந்து விட்டான். இருவரும் அவனது காாிலேயே டொராண்டோ நகாின் மத்தியிலமைந்திருந்த ‘சீனநகர் ‘ நோக்கிப் பயணமானார்கள். அவன் கூறிய படியே அந்தச் சீன உணவகத்தினுணவு வகைகள் சுவையாகவேயிருந்தன. அவன் ‘பியர் ‘ எடுத்து அருந்தத் தொடங்கினான்.

‘என்ன சந்திரன்! பியர் குடித்தாலெப்படி கார் ஓடுவதாம் ‘ என்று மனோரஞ்சிதம் கேட்டாள்.

‘ரஞ்சிதம்! இன்று நீர் தான் டிரைவர். இப்படியொரு சந்தர்ப்பம் இனி எப்பொழுது வருமோ ? ‘

நீண்ட நேரமாக உரையாடியபடி உணவினைச் சுவைக்கத் தொடங்கினார்கள்.

‘ரஞ்சிதம், எனக்கென்றால் ஒரு யோசனை.. ‘

‘என்ன சந்திரன்.. ‘

‘நடந்தது நடந்து விட்டது. அவற்றைப் பழங்கனவாக மறந்து விட்டு ஏன் புது வாழ்க்கையை நாம் தொடங்கக் கூடாது ? ‘

‘அப்படியென்றால் ஏற்கனவே விட்ட பிழைகளை நாங்கள் இனியும் விடக் கூடாது. ஒருவரையொருவர் நன்கு புாிந்து மதித்து எந்தவிதச் சந்தேகமுமில்லாமல் வாழ்வதாகவிருந்தால் எனக்கு ஆட்சேபனையில்லை. எதற்கும் இன்னுமொரு நாள் அவகாசம் தாருங்கள். நான் உங்களிற்கு எனது முடிவைச் சொல்லுகிறேன். என்ன சொல்லுகிறீர்கள் சந்திரன் ? ‘

அவனுக்கும் அது சாியென்று பட்டது. ‘ஆறப் பொறுத்தவன் ஆக்கப் பொறுக்கக் கூடாதா ? ‘ அன்றிரவு அவர்கள் அவ்வுணவகத்திலிருந்து புறப்பட்ட பொழுது ராமச்சந்திரன் தன் நினைவிலேயே இல்லை. அளவிற்கதிகமான மகிழ்ச்சியில் அளவிற்கதிகமாக பியர் அருந்தி விட்டிருந்தான்.

‘சந்திரன், இந்த நிலையில் உங்களைத் தனியே விட எனக்கு விருப்பமில்லை.. பேசாமல் என் அபார்ட்மென்றிலேயே இரவு தங்கி விடுங்கள் ‘ என்று மனோரஞ்சிதமே கேட்ட பொழுது ராமச்சந்திரன் மகிழ்ச்சியுடன் சம்மதித்தான். ராமச்சந்திரன் சோபா பெட்டில் படுத்துக் கொள்ள மனோரஞ்சிதம் தனது அறையில் படுத்துக் கொண்டாள். மறு நாள் ராமச்சந்திரனிற்கு முடிவு கூறுவதாகக் கூறியதை எண்ணியள், அது பற்றிய எண்ணங்களில் மூழ்கியவளாகவளாக நெடுநேரம் தூக்கம் வராமல் விழித்திருந்த மனோரஞ்சிதத்தை இறுதியில் தூக்கம் தழுவிக் கொண்டது. அதிகாலை மூன்று மணியிருக்கும். இன்னும் விடிந்திருக்கவில்லை. மனோரஞ்சிதத்திற்குத் தன் மேல யாரோ படுத்திருப்பது போலொரு உணர்வு.மூச்சு முட்டியது. கனவேதாவதுதான் காண்கின்றோமோ என எண்ணியவளாக விழித்துக் கொண்டவளிற்குத் தூக்கி வாாிப் போட்டது. ராமச்சந்திரன் அவள் மேல் பரவியவனாக அவளைத் தழுவ முயன்று கொண்டிருந்தான்.

‘என்ன சந்திரன்..உங்களிற்கென்ன பைத்தியமா… ‘ என்று கத்தியவள் அவனைப் பிடித்துத் தள்ளி விட்டாள். அவன் இன்னும் வெறியில் தானிருந்தான். ‘என்னடி பத்தினி வேசமாய் போடுறாய் ? நானென்ன வேறு ஆளா ? உன் புருசன்டா ‘

இவ்விதம் அவன் கூறவும் அவள் ஆத்திரம் அதிகாித்தது. இதை அவள் எதிர்பார்க்கவேயில்லை. எவ்வளவு இலகுவாக இயல்பாக ஆணவத்துடன் கூறினான் அவன் ? இவன் திருந்தவே மாட்டானா ? இவளுக்கும் அவனுக்குமிடையிலுள்ள தொடர்பென்ன ? ஒரு காலத்தில் அவனுக்கு அவள் மனைவியாகவிருந்தாள். அவன் அவளுக்குக் கணவனாகவிருந்தான். ஆனால் அது ஒரு காலத்தில். தற்காலத்திலல்ல. அந்த ஒரு காலத்துறவைக் காரணமாக வைத்து இன்னும் இவன் இவளை அடக்கலாமென்று இயல்பாகவே இவன் எண்ணிக் கொண்டிருக்கின்றான். வெளியில் இவன் எவ்வளவு கதைத்தாலும் இவனது ஆழ்மனதிலுள்ள எண்ணம் தான் இப்பொழுது இந்தப் போதையில் வெளிப்படுகிறது. என்ன மனுசனிவன் ?

‘சந்திரன்! நாங்கள் ஒரு காலத்தில் புருசன் மனைவியாக இருந்தவர்கள் தான். அது பழைய கதை. இப்பொழுது எங்களுக்கிடையில் உள்ள தொடர்பு வெறும் நண்பர்களிற்கிடையிலான தொடர்பு மட்டும் தான். நல்ல காலம் இப்பொழுதாவது உங்களுடைய சுயரூபம் தொிந்ததே. நீர் மாறியிருப்பீரென்று நினைத்தேன். ஆனால் இன்னும் நீர் மாறவேயில்லை. நாய் வாலை நிமிர்த்த முடியுமா ? ‘ மனோரஞ்சிதம் இவ்விதம் கத்தவும் ராமச்சந்திரன் சுயநிலைக்கு வந்தான். மனோரஞ்சிததை அவன் நன்கறிவான். இத்தகைய சமயங்களில் அவன் என்ன செய்ய வேண்டுமென்பதையும் உணர்வான்.

‘ரஞ்சிதம்! என்னை மன்னிச்சுக் கொள்ளும். நான் செய்தது பிழைதான். அதுக்காக நீர் என்ன தண்டனை கொடுத்தாலும் ஏற்றுக் கொள்ள நான் தயார் தான். ஆண் பெண் உறவென்பது உடற் பசிக்கொரு தீனிதான். என்னுடைய நிலையை நினைச்சுப் பாரும். நான் நினைச்சிருந்தால் என் உடல் தேவைகளுக்காக இங்கு மிகவும் இலகுவாக இன்னொரு பெண்ணின் துணையை நாடியிருக்க முடியும். ஆனால் நான் செய்தேனா ? நான் இங்கு என்னை நியாயப் படுத்த முனையவில்லை. நான் செய்தது சாியென்று கூறவில்லை. ஆனால் அதற்காக என் சுயரூபம் அது இதென்று கூறுவதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. ஆனால் நான் நிச்சயமாக நீர் உணர்வீரென்று நினைக்கின்றேன். ஆனால் நாளைக்கு நீர் கூறப்போகின்ற பதிலுக்கு இந்தச் சம்பவமொரு காரணமாகவிருக்காதென்று நம்புகிறேன் ‘ இவ்விதம் கூறிய சந்திரன் படுக்கையிலிருந்தும் எழுந்து சட்டையை மாற்றியவனாகப் புறப்பட்டான். அவன் செல்வதையே பார்த்தபடி அமைதியாக மனோரஞ்சிதம் நின்றாள்.

******************************

Series Navigation

வ.ந.கிரிதரன்

வ.ந.கிரிதரன்

மனைவி

This entry is part [part not set] of 15 in the series 20010422_Issue

ரகுநாதன்


1

ராமசாமி விருட்டென்று நடைக்குத் தாவிக் கதவைத் தட்டினான் தெரு விளக்கின் ‘இருபத்தஞ்சு பவர் ‘ விளக்கு மட்டும் வீட்டுக் கதவை அடையாளம் காட்டும் புனித சேவையோடு கர்மயோக சாதகம் செய்து கொண்டிருந்தது. ராமசாமியிடம் கைக் கெடிகாரம் இல்லை. எனவே மணி என்ன இருக்கும் என்று நிதானிக்க முடியவில்லை. என்றாலும் டவுனுக்குச் செல்லும் கடைசி பஸ், வரும் வழியில் அவனைக் கடந்து செல்லவில்லை என்ற நிச்சயத்தின் பேரில், மிஞ்சிப் போனால் பத்துப் பத்தரை இருக்கும் என்று நினைத்துக் கொண்டான். அதில் அவனுக்குக் கொஞ்சம் திருப்தி.

மீண்டும் அவன் கதவைத் தட்டினான். கதவு திறக்கப்பட்டது; செல்லம் எதிர்ப்பட்டாள்.

தூக்கத்தின் அழுத்தம் கண்ணிமையை விட்டு இறங்காததனால், அவள் முகம் சோர்ந்து போயிருந்தது. அந்தச் சோர்வை ‘காரிகேச்சர் ‘ பண்ணி அழுத்தம் கொடுப்பது போல, தலை மயிர் வரிசை குலைந்து போயிருந்தது. அசேதனப் பொருளான அந்தச் சேலையின் துவட்சியில் கூட, அந்தச் சோர்வின் ‘களை ‘ தட்டியது.

ராமசாமி கலாரசிகன் அல்ல. ரசிகனாயிருந்தால் ‘திருவனந்தலிலும் முகமலர்ந்தொளிரும் ‘ அந்தக் கடை திறப்பின் களையை அனுபவித்திருப்பான். எனவே சாதாரண வாலிபனுக்கு உரிய உணர்ச்சியோடு, செல்லமாகக் கன்னத்தைத் தீண்டிவிட்டு, ‘தூங்கிட்டியா ? ‘ என்றான்.

‘ம் ‘ என்ற முனகலிலேயே ஆமோதிப்பதைத் தெரிவித்து விட்டு, சோம்பல் முறித்தாள் செல்லம்.

ராமசாமி குழாயடிக்குச் சென்று கைகால் கழுவி விட்டு வீட்டுக்குள் வந்தான். உடை களைந்து மாற்றிக் கொண்டான். பிறகு செல்லத்திடம் திரும்பி, ‘அதற்குள்ளாகவா தூக்கம் ? ‘ என்றான்.

அப்போதுதான் தூக்கக் கலக்கம் கலைந்த செல்லம் நாணத்தோடு உள்ளூர நகைத்துக் கொண்டாள்.

‘நீ சாப்பிட்டாச்சா ? ‘

‘ம் ‘

‘சரி. எனக்குப் பசி தலையெச் சுத்தது. போய்ச் சோத்தை வய்யி ‘ என்றான் ராமசாமி.

செல்லம் ஒரு கணம் திகைத்தாள். அவள் தூக்கம் அந்தத் திகைப்பில் பறந்து போய்விட்டது.

‘சாதமா ? தண்ணி விட்டுட்டேனே ‘ ‘ என்று பரிதபித்தாள்.

ராமசாமிக்கு நல்ல பசி; மேலும் நடந்து வந்த களைப்பு. இத்தனைக்கும் மேல் முன்கோபம் அவனுக்குப் பிறவிக் குணம்.

‘தண்ணி ஊத்திட்டியா ? அதுக்குள்ளே ஏன் ஊத்தினே ? கொஞ்சம் பொறுத்திருந்தா என்ன… ‘

வார்த்தை அதனளவில் வலிமை மிக்கதென்று சொல்ல முடியாது. சொல்லுகின்ற பாவனையில்தான் வலிமை இருக்கிறது. ராமசாமியின் வார்த்தைகளில் கோபம் புதைந்து போயிருந்தது. செல்லத்தையும் கண்டிக்க வேண்டும்; என்றாலும் அவள் சின்னஞ் சிறுசு; புதுசு. அவனுக்கும் நல்ல பசி; அவன் ஆத்திரத்துக்கும் ஒரு நிவர்த்தி வேண்டும். எனவே வார்த்தைகளின் பாவனை ரசக் கலவையை அவனால்கூட, ஊகிக்க முடியவில்லை.

செல்லம் ராமசாமியோடு குடியும் குடித்தனமுமாய் இருந்து கொஞ்சக் காலம்தான் ஆகிறது. என்றாலும், அந்தக் காலத்துக்குள்ளாகவே அவனது குணத்தை அவள் ஓரளவு அறிந்துதான் வைத்திருந்தாள். எனவே அவளது செல்லக்கோபத்தை உணர்ந்து அவனை அறிவுறுத்த எண்ணி, ‘நீங்கதானே சொல்லிட்டுப் போனீங்க, நாழியாச்சின்னா காத்திருக்க வேண்டாம் ‘ன்னு ‘ என்றாள்.

‘அப்படியென்ன நேரமாச்சு ? ‘ என்று அவன் குரல் கடுத்தது.

‘நேரமா ? மணி பதினொன்று ஆகப் போறது. சோறு வேர்த்து விதையாப் போச்சி. அதுனாலெதான் தண்ணி விட்டேன். வேணுமின்னா புளிஞ்சி வைக்கிறேன் ‘ என்று சமாதானம் கூறினாள் செல்லம்.

ராமசாமிக்குப் பசிக் கொடுமை. அந்த நேரத்தில் வாதாட நேரமில்லை. இருந்தாலும் அவனுக்கு வெந்நீர்ப் பழையது பிடிக்காது ‘ எனவே எரிச்சல் மூண்டு வந்தது. ‘சரி சரி; ஏதாவது வய்யி ‘ என்று சலித்துப் போய்ச் சொன்னான். ‘வய்யி ‘ என்பதற்குப் பதிலாக ‘வச்சித்தொலை ‘ என்ற வார்த்தைதான் வாயில் வந்தது; ஆனால் வெளிவரவில்லை.

செல்லம் அடுக்களையுள் சென்று இலையைப் போட்டாள். சாதத்தையும் பிழிந்து வைத்தாள். ராமசாமி ஒன்றும் பேசாமல் சாப்பிட உட்கார்ந்தான். சாப்பாடு, அதிலும் குளிர்ந்து போன சாதமும் குழம்பும், சப்பிட்டுப் போயிருந்தன. பசிதான், ஆனால் அவன் பசி ருசியும் அறியும். சாப்பாடு செல்லவில்லை.

‘என்ன ? சாப்பிடாமல் பெரிய யோசனை பண்ணுறீங்களே ‘ ‘ என்றாள் செல்லம்.

ராமசாமிக்கு அப்போது கோபத்தை அடக்கவே முடியவில்லை. ‘என்னத்தைச் சாப்பிடறது ? உன் காரியத்தை மட்டும் வேளாவேளைக்குப் பாத்துட்டேல்லெ. நீ ஏன் பேசமாட்டே ‘ ‘ என்று எரிந்து விழுந்தான்.

செல்லம் புடலம்பூப் போன்ற குணம் பொருந்தியவள். அவள் பூப்பதும் தெரியாது, வாடுவதும் தெரியாது. ‘நான் என்ன பண்ணிட்டேன் ? ‘ என்று சொல்ல ஆரம்பித்தாள். அதற்குள் தொண்டை அடைத்தது. கண்ணில் சிவப்பு ரேகைகள் துடித்துத் தெரிந்தன. கண்ணீர் கண்ணைக் கரித்தது. இருந்தாலும் அவள் அதை வெளிக்காட்டிக் கொள்ள விரும்பவில்லை.

ஆனால் ராமசாமிக்குக் கண் குருடா என்ன ? ‘இந்தச் சொரணை அப்போ எங்கே போச்சி ? அழுதுட்டியா ? ‘ என்றான்.

அவ்வளவுதான். செல்லம் குபீரென்று முகத்தைப் புதைத்துக் கொண்டு அழ ஆரம்பித்து விட்டாள்.

‘இனி சாப்பிட்டாற் போலத்தான் ‘ என்று முனகி விட்டு கையைக் கழுவினான் ராமசாமி. ஒன்றும் பேசாமல் படுக்கையில் வந்து விழுந்தான். விளக்கைக்கூட அவன் அணைக்கவில்லை.

செல்லம் சிறிது நேரத்தில் வரக்கூடும் என்று எதிர்பார்த்தான். ஆனால் வரவில்லை, கூடத்து விளக்கை அணைக்கும் ஸ்விட்ச்சின் சப்தம் கேட்டது: ‘ஒருவேளை கூடத்திலேயே படுத்துவிட்டாளோ ? ‘

கடிகாரம் மணி பன்னிரண்டு அடித்தது.

ராமசாமிக்கு அப்போதும் தூக்கம் வரவில்லை. புரண்டு புரண்டு படுத்துக்கொண்டிருந்தான்: ‘நான் அப்படி என்ன சொல்லி விட்டேன். அவள் ஏன் அழுதாள் ? ‘

அவன் சிந்தனை ஒரு நிலையிலில்லை.

2

ராமசாமி படித்த வாலிபன். பி.ஏ. பட்டம் பெற்றதும், இடையில் ஒன்றிரண்டு மாதகாலம்கூட வீட்டில் இராமல், கமர்சியல் டாக்ஸ் ஆபீஸில் குமாஸ்தாவாகச் சேர்ந்துவிட்டான். வீட்டிலும் வசதிகளுக்குக் குறைவில்லை. பையன் சம்பாதித்துப் போட்டுத்தான் வீட்டில் உலையேற்ற வேண்டும் என்ற நியதி கிடையாது. மேலும், அவன் அப்பா ஒரு சர்க்கார் உத்தியோகஸ்தர். எனவே அவர் தாம் பிடிக்க வேண்டிய சிபாரிசை யெல்லாம் பிடித்து பிள்ளையை வேலையில் அமர்த்தினார். எனவே அவன் வேலையில்லாத் திண்டாட்டத்தினால் கஷ்டப்படவோ, நாலுபேரின் தயவுக்காகக் கைகட்டி நிற்கவோ செய்யவில்லை. சுருங்கச் சொன்னால் அவன் வாழ்க்கை அனுபவம் பெறாத பள்ளிப் புள்ளி. என்றாலும், கண்டும் கேட்டும் இருந்த வாழ்க்கை அநுபவம் இருந்தது; இருந்தாலும் அவை அவனாக அநுபவியாதவை.

எனவே இந்த மாதிரி வாழ்க்கையில் அவன் லட்சியம் பேசும் நவயுவனாக இருந்ததிலும் ஆச்சரியமில்லை. தான் வாழ்வில் சுதந்திரமாகவே வாழப் போவதாகத் தன் நண்பர்களிடமெல்லாம் சொல்லி வந்தான். அது மட்டுமல்ல, தான் மணக்கப் போகும் மனைவிக்கும் சகலவித சுதந்திரங்களும் கொடுக்கப் போவதாகவும் சொல்லி வந்தான். எனவே அவனுக்கு வீட்டில் கலியாணப் பேச்சை எடுத்தபோது அவன் தனக்குப் பிடித்த பெண்ணைத்தான் கலியாணம் செய்து கொள்வேன் என்று சாதித்தான். அவனுக்குப் பிடித்த பெண் படித்த பெண்ணாக இருக்க வேண்டும். என்றாலும் படித்துவிட்டோம் என்ற கர்வத்தால் மினுக்கித் திரியும் நவநாகரிகக் கொலுப்பொம்மைகளை அவன் விரும்பவில்லை. செல்லம் அவ்வளவு படித்தவளல்ல. என்றாலும் ஹைஸ்கூல் வகுப்பு வரை தொட்டுப் பார்த்திருந்தாள். பிள்ளையின் பிடிவாதத்துக்காக, தகப்பனார் அவனைக் கூட்டிக்கொண்டு போய் எத்தனையோ பெண்களையெல்லாம் காட்டினார். ஆனால், விட்ட குறையோ தொட்ட குறையோ, ராமசாமிக்கு செல்லத்தைப் பார்த்தவுடனேயெ பிடித்துப் போயிற்று.

தை மாசம் கலியாணமும் நடந்தது.

கடிகாரத்தின் மணி பன்னிரண்டரை அடித்தது.

ராமசாமி மீண்டும் புரண்டு படுத்தான்: ‘செல்லம் ஏன் என்னிடம் அப்படி நடந்து கொள்கிறாள் ? நான் அவளுக்கு எவ்வளவோ சுதந்திரம் கொடுத்திருந்தும் அவள் ஏன் பணிந்து தணிந்து செல்கிறாள் ? பயமா ?…. ‘ அவனுக்கும் ஒன்றும் புலப்படவில்லை.

….கலியாணம் ஆன புதிதில் அந்தப் புதிய இனிய நாட்கள் அவனுக்கு புளகாங்கிதம் ஊட்டத்தான் செய்தன. அப்போது அவன் உலகத்திலுள்ள மற்றவர்களுடைய குடும்ப வாழ்க்கையையெல்லாம் எண்ணிப் பார்த்தான். ‘ஒவ்வொருத்தனும் தன் மனைவியை எப்படி அடிமையாய் நடத்துகிறான் ? அவளும் மனுஷிதானே ‘ அவனுக்கு அவள் அடிமையா ? பெண் ஆணுக்கு அடிமையல்ல. பின் மனைவியை ஏன் வேலைக்காரியாய் நடத்துகிறார்கள் ? அடிக்கிறார்கள் ? அதன் பின்னர் வாழ்க்கையிலே ஒற்றுமை இருக்குமா ?… ‘ ஆனால், அவன் தன் தாய்மாமன் வீட்டில் பார்த்திருக்கிறான். அத்தைக்கும் மாமனுக்கும் ஓயாச்சண்டை, சமயத்தில் அத்தையின் முதுகும் தடித்துப் போய்விடும். இருந்தாலும், அத்தையும் மாமனும் மறுகணமே அன்யோன்யமாகி விடுவார்கள். இருவரும் இதுவரை ஒருநாள் கூட பிரிந்திருந்ததில்லை. அப்படியானால், அவர்கள் இருவருக்கும் அப்படி அறுந்து போகாத பிணைப்பை ஏற்படுத்தியிருக்கும் ஒட்டுறவு எது ?…..அது மட்டும் அவனுக்குப் புரியவில்லை. இருந்தாலும், மனைவியை அடிப்பது, அடிமைப் படுத்துவது எல்லாம் காட்டுமிராண்டித்தனம் என்பது அவன் அபிப்பிராயம்.

எனவே செல்லம் காலடிவைத்த நாள் முதலாக அவன் அவளுக்குத் தன் கருத்துக்களை எடுத்துச் சொன்னான். மனைவி என்ற காரணத்துக்காக அவளைக் கொடுமைப் படுத்தவோ, அடிமைப்படுத்தவோ செய்யப் போவதில்லை என்றும் உறுதி யளித்தான். பழைய கர்நாடகப் பாங்கின்படி அவள் தன்னிடம் நடந்து கொள்ளவேண்டும் என்றும் அவன் விரும்பவில்லை. தான் சாப்பிட்ட பிறகுதான் அவள் சாப்பிட வேண்டும் என்ற சம்பிரதாயங்களையெல்லாம் செல்லம் மறந்துவிடவேண்டும் என்றும் போதித்தான். மேலும், செல்லத்துக்கு ஏதாவது துணிமணி சாமான் எடுக்கவேண்டுமென்றாலும் அவள் இஷ்டப்படியே எடுத்துக் கொள்ளலாமென்றும், அவளது சுய நிர்ணய உரிமை எதிலும் தான் தலையிடப் போவதில்லை என்றும் அறிவித்தான். செல்லமும் எல்லாவற்றையும் ‘ஊங் ‘ போட்டுக் கேட்டுவிட்டு அதன்படியே நடப்பதென்று தீர்மானித்தாள். ‘பதிற்சொற் கடவாத பாவை ‘ தானே அவள் ‘ இந்த ஏற்பாடெல்லாம் குறைந்தது ஆறுமாத காலம் வரையிலும் ஒழுங்காகவே நடந்து வந்தது.

திடாரென்று ஒரு நாள் ராமசாமிக்கு திருச்சிராப்பள்ளிக்கு மாற்றுதலாகி உத்தரவு வந்தது. ராமசாமி குடும்ப சகிதம் சென்று வேலையை ஒப்புக்கொண்டான். திருச்சியிலேயே வீடு பார்த்து குடித்தனமும் பண்ண ஆரம்பித்தான்.

குடித்தனம் ஒழுங்காகவே நடந்து வந்தது. ஆனால் அவன் கொடுத்த சுதந்திரம்தான் சரிவர நடக்கவில்லை. எங்கு போகவேண்டுமென்றாலும், அவன் அனுமதியை மட்டுமின்றி, துணையையும் கோரி நின்றாள், செல்லம்.

ஒரு நாள் இருவரும் துணி எடுக்கச் சென்றார்கள். செல்லத்துக்குத்தான். கடைக்காரன் துணிகளை எடுத்துப் பரப்பினான். நீலம், மஞ்சள், பச்சை–இன்னும் எத்தனையோ வர்ணங்கள் ‘ சிந்தாமணி, மனோன்மணி, ரேடியோ கலவைப் பெயர்கள் ‘ அவனுக்கு இதெல்லாம் ஒன்றும் புரியவில்லை.

செல்லம் ஒவ்வொரு துணியாகப் பார்த்துப் போட்டாள். பிறகு ஒரு துணியை எடுத்து, ‘என்ன, இது உங்களுக்குப் பிடித்திருக்கிறதா ? ‘ என்றாள்.

‘நானா கட்டப் போகிறேன் ? உனக்குப் பிடித்திருந்தால் சரிதான் ‘ என்றான் ராமசாமி.

‘இதற்குத் தானா கேட்டேன் ? ‘ என்று சலித்துக் கொண்டாள் செல்லம்.

அன்று அவள் துணி எடுக்கவில்லை. செல்லம்தான் அவசரப்படுத்தி, துணி எடுக்கக் கூப்பிட்டாள். பிறகு ஏன் அவள் துணி எடுக்கவில்லை ? அவனுக்கு எதுவும் புரியவில்லை. அவள் கட்டக்கூடிய துணி எனக்கும் பிடித்திருந்தால்தான் அவள் எடுப்பாளா ? அவனுக்காகவா அவள் உடுத்துகிறாள் ? அவளுக்காக இல்லையா ?…

கடிகாரம் மணி ஒன்று அடித்தது.

அவனுக்குப் பொய்த் தூக்கம்தான். புரண்டுபடுத்தான். ‘அவள் ஏன் அழுதாள் ? நான் அவளை அடிமைப்படுத்தி வைப்பதுதான் அவளுக்குச் சந்தோஷமா ? அல்லது அன்று கிளப்பில் நடந்த பேச்சு வார்த்தை மாதிரி, அவளுக்குத் தன் சுதந்திரத்தைக் காப்பாற்றிக் கொள்ளத் திராணியில்லையா ?…

அவனுக்கு அன்று கிளப்பில் நடந்த சம்வாதம் நினைவுக்கு வந்தது.

‘சுதந்திரம் வந்தால் மட்டும் போதுமா ? அதைக் காப்பாற்றுவதற்குச் சக்தி வேண்டாமா ? என்று அவன் நண்பன் ஒருவன் இந்திய சுதந்திரத்தைப் பற்றிப் பேசினான்.

‘சக்தியில்லை என்பதற்காக, சுதந்திரமே வேண்டாம் என்பாயா ? ‘ என்றான் ராமசாமி.

‘பகீரதன் பெரும் பிரயத்தனப் பட்டுத்தான் கங்கையைக் கொண்டுவந்தான்: ஆனால் அவனுக்கு அதைத் தாங்கச் சக்தி இருந்ததா ? பரம சிவன் தானே வர வேண்டியிருந்தது ‘ ‘

‘புராணக் கதையை ஏன் உதாரணம் இழுக்கிறாய் ? நீந்தத் தெரியவேண்டு மென்றால் நீரில் இறங்காமல் இருக்க முடியுமா ? சுதந்திரம் வந்தால், தானே அதைக் காப்பாற்றவும் தெரியும். வெறுங் காற்றில் கை வீசுவதனால் சக்தி பிறந்துவிடுமா ? ‘

‘இப்படியெல்லாம் பேச எனக்கும்தான் தெரியும். எந்தச் சுதந்திரமானாலும் சரி. பெண்விடுதலை, தேசவிடுதலை எதுவானாலும் சரி, அதைப் பெறுபவர்கள் வந்த சுதந்திரத்தைக் காப்பாற்றத் தெரிய வேண்டும். இல்லையென்றால் வந்த சுதந்திரம் வந்த வழியே போகத்தான் செய்யும். ‘

‘அதெல்லாமில்லை, நான் என் மனைவிக்குப் பரிபூரண சுதந்திரம் கொடுத்திருக்கிறேன். அவள் அதைக் காப்பாற்றாமலா இருக்கிறாள் ? ‘ என்றான் ராமசாமி….

ராமசாமியின் மனம் மீண்டும் செல்லத்திடம் திரும்பியது. ‘அப்படி யென்றால் செல்லத்துக்கு நான் கொடுத்த சுதந்திரத்தைக் காப்பாற்ற அவளுக்குச் சக்தியில்லையா ? ‘ அவனுக்குத் தூக்கம் பிடிக்கவில்லை.

மணி ஒன்றரை அடித்தது….

செல்லத்துக்கு மட்டும் தூக்கம் பிடித்ததா என்ன ? அவளும் புரண்டு புரண்டுதான் படுத்துக்கொண்டிருந்தாள். கலியாணம் என்றவுடன் அவளுக்கு ஆனந்தம் இருந்ததுபோல் பயமும் இருக்கத்தான் செய்தது. ‘வரப்போகும் புருஷன் எப்படிப்பட்டவரோ ? தான் இனிப் பிறந்த வீட்டை மறந்துவிட வேண்டியதுதானா ? அவருக்கே அடிமையாகிடவிட வேண்டியதுதானா ? என்றெல்லாம் அவள் பயந்ததுண்டு. ஆனால், கலியாணமான புதிதில் ராமசாமி கொடுத்த வாக்குறுதிகள் அவளுக்குத் தெம்பை அளித்தன. ஆனாலும் நடைமுறையில் மட்டும் அந்தச் சுதந்திரம் அவளுக்கு ஒத்துவரவில்லை.

அவள் மனம் அலை பாய்ந்தது: ‘அவர்தானே தமக்காகக் காத்திருக்க வேண்டாம் என்றார். என் பாட்டை பார்த்துக் கொண்டதாகச் சலித்துக் கொண்டாரே. அவரில்லாமல் நான் யார் ? பின் அவர் ஏன் அப்படிப் பேச வேண்டும் ?…

‘கணவனும் மனைவிக்கு அடிமையல்ல; மனைவியும் கணவனுக்கு அடிமை யல்ல. ஆனால், சுதந்திரம் என்று சொல்லி இருவரும் ஒருவரையொருவர் அறியாமல் பிரிந்து தான் தோன்றியாகச் சென்றுகொண்டிருப்பதுதான் சுதந்திரமா ? நான் பெண், எனக்கு அவர் துணை, அவரின்றி நான் இயங்க முடியாது. அப்படியிருக்கும்போது அவர் என்னைச் சுதந்திரமாய் விட்டுட்டேன் என்று சொல்லி என்னை விட்டு விலகிச் சென்றால்…

‘அன்று துணிக்கடையில் துணி எடுக்கவே மனம் இல்லை. அவருக்காகத்தானே நான் இருக்கிறேன். என்றாவது என்னை ‘அதைக் கட்டு, இதைக் கட்டு ‘ என்று வற்புறுத்தி யிருக்கிறாரா ? எல்லாம் நான்தான் பார்த்துக் கொள்ள வேண்டுமாம் ‘ நல்ல சுதந்திரம் ‘ அபிப்பிராயம் கூறுவதால் கூடவா சுதந்திரம் கெட்டுவிடப் போகிறது ‘

‘நான் அவருக்கு அடிமையாக வேண்டாம். ஆனால், அவரது அன்புக்கு நான் அடிமையாகத்தான் வேண்டும். என்னை நான் அவருக்கு அடிமைப் படுத்த எண்ணும் போதெல்லாம் அவர் ஏன் விலகி ஓடுகிறார் ?…

‘அடிமையாவதில் ஒரு இன்பமா ?….இன்பம் இருப்பதாகத்தான் எனக்குத் தெரிகிறது. பக்தர்கள் அடியார்க்கு அடியாராக இருப்பதால்தானே கடவுளுக்குப் பாத்திரமாகிறார்கள். இல்லறத்தில் ஒருவருக்கொருவர் அடிமையானால் தானே ஆனந்தம் பிறக்கும். அந்த அடிமை ஆதிக்கத்தினால் வரக்கூடாது; அன்பினால் வரவேண்டுமா ? அன்புக்கு அடிமையா ?…அப்படியென்றால் அவருக்காக நானும் எனக்காக அவரும் வாழ்வதுதான் சுதந்திரமா ?…

‘இப்போது அப்படியா வாழ்கிறோம் ? நான் நானாக வாழ முடியவில்லையே ‘ அவராவது அவராக வாழ்கிறாரா ? ‘

செல்லம் மீண்டும் புரண்டு படுத்தாள். மணி இரண்டு அடித்தது. தூக்கம் பிடிக்கவில்லை.

3

ராமசாமி இரண்டரை மணி அடிக்கும் வரை அப்படியே கிடந்தான். அதற்கு மேலும் அவனால் கிடக்க முடியவில்லை.

‘செல்லம் தூங்கியிருப்பாளோ ? ‘

அவள் முனகி முனகிப் புரள்வது அவன் காதில் விழுந்தது. தூங்கவில்லை என்று நிச்சயித்துக் கொண்டான். மெதுவாக எழுந்து கூடத்துக்குச் சென்றான்.

செல்லம் வெளி முற்றத்தில் தலைக்குத் தலையணைகூட இல்லாமல் முந்தானையை விரித்துக் கையை அணைகொடுத்துப் படுத்திருந்தாள். ராமசாமி அவள் பக்கம் சென்று உட்கார்ந்து தலையை மெதுவாகத் தடவிக் கொடுத்தான்.

‘செல்லம் ‘ ‘

அவள் லேசாக முனகினாள்.

‘இதற்கெல்லாம் அழுவார்களோ ? நான் உன்னை என்ன செஞ்சிட்டேன். அடித்தேனோ ? இந்த வார்த்தைக்கு இப்படி அழுதால்– ‘ என்று இழுத்தாற்போல் பேசினான்.

செல்லத்துக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை. பொங்கி வந்த அழுகையை அடக்க முடியாமல் ராமசாமியின் மடியில் குப்புறப் படுத்து தலையைப் புதைத்துக் கொண்டு அழ ஆரம்பித்துவிட்டாள்.

ராமசாமியின் உடம்பு பதறியது. ‘உனக்கு நான் என்ன குறைவு செய்தேன் ? சகல சுதந்திர பாக்கியத்துடன்தானே பராமரித்து வருகிறேன் ‘ என்று மெதுவாகச் சொன்னான்.

‘உங்கள் சுதந்திரமே எனக்கு வேண்டாம். ‘

‘என்ன ? ‘ என்று விழித்தான் ராமசாமி.

‘நான் உங்கள் அடிமை. ஆமாம். உங்களுக்கு நான் அடிமை ‘ என்று வெடித்துக்கொண்டு சொன்னாள் செல்லம்.

‘அடிமையா ? ‘

‘ஆம். உங்கள் அன்புக்கு நான் அடிமை; உங்கள் லட்சியத்துக்கு அல்ல ‘ என்றாள் செல்லம்.

‘நீ சொல்வது… ‘ என்று இழுத்தான் ராமசாமி.

‘என்னை உங்கள் மனைவியாக நடத்துங்கள் ‘ ‘ என்று கத்தினாள் செல்லம்.

ராமசாமி ஒரு கணம் திகைத்து உட்கார்ந்திருந்தான். மறுகணம் அவனுக்கு ஏதோ உண்மை புலப்பட்ட மாதிரி இருந்தது:

‘என் லட்சியம் எதிர்காலக் கனவு; செல்லம் கடந்தகால கலாசாரத்தில் ஊறிப்போன பாரதப் பெண். இதுவோ நிகழ்கால நடைமுறை. அப்படியானால், நான் இன்றைய நடைமுறைக்குத் தக்கவாறு இறங்கிவர வேண்டுமா ? அப்போதுதான் செல்லம் முன்னேற முடியுமா ? முன்னேறி என்னை எட்டிப் பிடிக்க முடியுமா ?…. ‘

அன்று முதல் செல்லம் ராமசாமி வரும் வரை சாப்பிடுவதும் இல்லை. ராமசாமியும், ‘செல்லம் இன்னும் சாப்பிடாமல் இருப்பாளே ‘ என்ற தவிப்போடு நேரத்தோடேயே வீட்டுக்கு வரத் தவறுவதும் இல்லை.

Series Navigation

ரகுநாதன்

ரகுநாதன்