அன்னையர் தினம்

This entry is part [part not set] of 21 in the series 20100509_Issue

எஸ் ஜெயலட்சுமி


காலை நேரம். சுப்ரபாதம்
யார் வீட்டிலிருந்தோ காற்றில் மிதந்து வந்து கொண்டி ருந்தது. தங்கம் பொதிகையில் காலை நிகழ்ச்சிகளைக்
கேட்டுக் கொண்டிருந்தாள். “அம்மா! ஒங்களுக்கு ஒரு பார்சல் வந்திருக்கு’’ என்ற சத்தம் கேட்டது. யாரென்று தெரியவில்லை. ‘எங்களுக்கென்ன பார்சல் வரப் போறது? அதுவும் இந்த நேரத்தில்! போஸ்ட்மேன் பத்துமணிக்கு மேல் தான் வருவார். என்ன பார்சல்? பார்சல் என்றாலே இப்போதெல்லாம் பயம்மா இருக்கே. தபாலில் குண்டு கூட வருகிறதாமே! குழப்பத்துடன் வாசலுக்கு வந்தாள் தங்கம்.

வாசலில் ஒரு ஆட்டோ டிரைவர் கையில் ஒரு பெரிய பிரம்புக் கூடை, பொக்கே சகிதம் நின்று கொண்டிருந்தார். கூடை பெரிய பிடியுடன் மிக நேர்த்தியாக பாக் செய்யப்பட்டு நீல நிற ரிப்பனால் அலங்கரிக்கப் பட்டிருந்தது. பலவித மலர்களுடன் கூடிய பொக்கே. தங்கத்துக்கு ஒன்றும் புரியவில்லை.
“என்னப்பா அது?’’
”மங்களத்தம்மா வீடு தானே இது?”

“ஆமாம்”
“அப்ப இந்த பொக்கேயும் பழக்கூடையும் ஒங்களுக்குத் தான்.
தங்கத்துக்கு இப்பவும் ஒண்ணும் புரியவில்லை. ஆனால் பெயர் விலாசம் எல்லாம் சரியாச் சொல்ல றானே? “ஏம்பா, இது எங்கேயிருந்து வந்திருக்கு? ஒனக்குத் தெரியுமா?
“தெரியாதும்மா.
இதற்குள் ‘வாசல்ல யாரு” என்று கேட்டபடியே தங்கத்தின் அம்மா வந்தாள்.
‘அம்மா, ஒங்களுக்குத்தான் பொக்கேயும் கூடையும்”
“என்னடி அதிசயமாயிருக்கு! கல்யாணப் பொண்ணுக் கும் மாப்பிள்ளைக்கும் தான் பொக்கே குடுப்பா. எனக்கு எதுக்கு பொக்கே?

தங்கம் இதற்குள் பழக்கூடையையும் பொக்கேயையும் நன்கு கவனித்துப் பார்த்தாள். அம்மா, ஒங்களுக்குத்தான் ரகு அனுப்பியிருக்கான். இன்னிக்கு ‘மதர்ஸ் டே. அதுக்காக ஒங்களுக்கு அனுப்பி ஒங்க ளோட ஆசீர்வாதம் வேணும்னு எழுதியிருக்கான். அம்மாவின் முகத்தில் பெருமையும் ஆச்சரியமும் ஒருசேர மிளிர்ந்தது. அதே சமயம் உண்ர்ச்சி மேலிட்டு அழுகையே வந்து விட்ட்து. குரல் தழுதழுக்க ”அவ

னுக்குத் தான் இப்படியெல்லாம் செய்யணும்னு தோணும்” என்றாள். பழக்கூடையில் ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை, மாம்பழம், சப்போட்டா என்று பலவகைப்
பழங்கள். சிங்கப்பூரிலிருந்து எப்படி அனுப்பினான் என்று
அம்மா ஆச்சரியப்பட்டாள். ஆட்டோக்காரர் இதற்குள்
மாயமாய் மறைந்து விட்டார்!

மத்தியானம் 12 மணிக்கு சிங்கப்பூரி லிருந்து ரகு போனில் கூப்பிட்டான். “என்ன,பார்சலும் பொக்கேயும் வந்ததா?’’ என்றான். அம்மா போனிலேயே அழுது விட்டாள். “ரகு, எப்படிடா கரெக்டா அனுப்பினே?
இங்கெல்லாம் யாரும் அவ்வளவா மதர்ஸ் டே யெல் லாம் நெனவு வெச்சுக்கறதில்லை. இப்பத்தான் புதுசு புதுசா வெட்டிங் டே, பர்த் டே, மதர்ஸ் டே யெல்லாம் கொண்டாடறா. எனக்கு ரொம்பவே சந்தோஷமா யிருக்கு. என்பிள்ளை நெனவு வெச்சிண்டு அனுப்பி யிருக்கானேன்னு ரொம்பப் பெருமையா யிருக்கு” என்றாள்.
”போன வருஷமே அனுப்பியிருக்கணும். எதிர்பாராமல் வியட்நாம் போயிட்டேன். அதனால இந்த வருஷம் என் ஃப்ரண்ட் ராஜாமணிகிட்ட சொல்லி ஏற்பாடு பண்ணிட்டேன்’’ என்றான்.

ஒவ்வொரு அன்னையும் தன்

னுடைய குழந்தைகளைக் கண்ணுக்குக் கண்ணாகத்தான் வளர்க்கிறாள். வசதிக்கு மீறித்தான் படிக்க வைக்கிறாள். கடனோ உடனோ வாங்கியும் நகைகளை விற்றோ அட
மானம் வைத்தோ கூடப் படிக்க வைக்கிறாள். ஆனால் இவர்கள் தங்கள் ஆவி, உடல், பொருள் அனைத்தையும் தியாகம் செய்து காப்பாற்றுவது போல் அந்தக் குழந்தை கள் வளர்ந்து பெரியவர்கள் ஆனதும் ஏன் பெற்றோர் களைக் காப்பாற்ற முன்வர மாட்டேன் என்கிறார்கள்?
ஒருதாய் எட்டு குழந்தைகளைக் காப்பாற்றுவாள். ஆனால் அந்த எட்டுக் குழந்தைகளும் சேர்ந்து கூட அந்தத் தாயைக் காப்பாற்ற மாட்டார்களாம்.

முன்பெல்லாம் மதர்ஸ் டே என்ற ஒன்றைப் பற்றிக் கேள்விப்பட்டதே யில்லை. இப்
பொழுது வருஷம் 365 நாட்களுமே ஏதாவது ஒரு டே
கொண்டாடப்பட்டு வருகிறது. ஒருபக்கம் மீடியாவில் ‘மதர்ஸ் டே’ ஆரவாரமாகப் பேசப்பட்டாலும் மறுபக்கம் முதியோர் இல்லங்கள்! மதர்ஸ் டேயில் அக்கறையும் ஆர்வமும் நம்பிக்கையும் இருந்தால் முதியோர் இல்லங்கள் ஏன்? வருஷத்தில் ஒரே ஒருநாள் மட்டும் அன்னையர் தினம் கொண்டாடி விட்டால் போதுமா? கறவை மாடுகள் பால் வற்றி விட்டதும் அதைத் துரத்தி விடுவதைப்போல அன்னையர்கள் முதுமை அடைந்த தும் ‘கிழட்டு மாட்டைக் கொட்டிலில் தள்ளு’ என்பதைப்

போல முதியோர் இல்லங்களுக்கு ஏன் விரட்டப் படு கிறார்கள்? இப்படிப் பலவிதமான யோஜனையில் ஈடு
பட்டிருந்த தங்கத்தை அம்மாவின் குரல் இழுத்தது.

”தங்கம், போன வருஷமே பார்வதி மாமி சொன்னா. அமெரிக்காவிலேர்ந்து மதர்ஸ் டேக்கு அருணா கிஃப்ட் அனுப்பியிருந்தாளாம். மாமி அந்த வைரமோதிரத்தப் போட்டுண்டு காட்டினாள். மாமிக்கு ரொம்பப் பெருமை!’’
’’மாமிக்கு அவ பொண் அனுப்பறதில என்ன பெருமை?
தங்கம் சூள் கொட்டினாள்.
’’ஒனக்குத் தெரியாதா? அருணா மாமியோட பெத்த பொண் இல்லை. வளர்த்த பொண்ணாக்கும்”
“என்னம்மா புதுக்கதையா யிருக்கே!
“ஆமாம், அப்ப நீ ரொம்பச் சின்னவள்”
“அப்படீன்னா அருணாவோட நெஜ அம்மா அப்பா யாரு? அருணா அடாப்டட் சைல்டா?
“அப்படியும் இல்லை. சொல்லறேன் கேளு.

பார்வதி மாமி சுந்தரம் தம்பதிக்கு
ரொம்ப நாளா கொழந்தைப் பாக்கியம் கிட்டவே யில்லை. எவ்வளவோ பரிகாரங்கள், பூஜைகள், க்ஷேத்ராடனங்கள்னு எல்லாமே பார்த்தா. மணி மந்த்ர
ஔஷதன்ம்னு எல்லாமே பார்த்தா. மாமி ரொம்ப

நன்னா கைவேலை யெல்லாம் செய்வாள். ஊரிலேயே அவாத்து கொலு ரொம்பப் பிரசித்தம். மாமி கையா லேயே பூம் பல்லாக்குப் பண்ணி அதில ஸ்வாமியும் அம்பாளையும் வெச்சு நவராத்திரி கொலுவில வெச்சி ருப்பாள். அதப்பாக்கவே கூட்டம் வரும். நவராத்திரி ஒம்பது நாளும் தாம்பாளத்தில முத்தாலத்தி போட்டு வெச்சி ருப்பாள். இன்னிக்கெல்லாம் பார்த்துண்டே யிருக்கலாம் போல அவ்வளவு அழகா யிருக்கும். அவா வீடும் பெரிய ரெட்டை வீடு.

அதுல ஒரு வீட்டுக்குப் புவனாவும் நீலகண்டனும் புதுசா கல்யாணமாகி குடிவந்தா. நீல கண்டனுக்கு இஞ்சினீயர் வேலை. அடிக்கடி காம்ப் போகவேண்டியிருக்கும். அப்பல்லாம் புவனா, மாமி
கூடவே யிருந்து லேஸ்பின்ன, கூடை முடைய, பாசி
வேலைகளெல்லாம் கத்துண்டா. புவனாவுக்கு அம்மா இல்லை. புவனா உண்டாகியிருந்தபோது மாமிதான் அவளுக்குத் தாயாயிருந்து வாய்க்கு ருசியா வேண்டி யதையெல்லாம் செஞ்சு குடுத்தா.

சீமந்தம் கழிஞ்சு பிரசவத்துக்குப் போகக்கூட புவனாவுக்கு மனசேயில்லை. புவனாவின் சிறியதாயார் ரொம்பவும் வற்புறுத்தினதால ஒருமட்டும்
போக சம்மதிச்சா. ஆனா அவா வந்து அழைச்சிண்டு

போறதுக்கு முன்னாலேயே புவனாவுக்கு வலியெடுத்து
விட்டது. பிரஷர் அதிகமாகவே எவ்வளவோ முயற்சி பண்ணியும் புவனாவக் காப்பாத்த முடியலை
” மாமி, நான் தான் தாயில்லாப் பொண்ணாயிட்டேன்.
எனக்கு ஏதாவது ஆச்சுன்னா என் கொழந்தையப் பாத்துப்பேளா”ன்னு கேட்டாளாம். அதிலேர்ந்து பார்வதி மாமிதான் அருணாவை வளர்த்தாள். அருணாவுக்கு ரெண்டு வயசு வரைக்கும் நீலகண்டன் இங்க இருந்தார். அப்பறம் அவருக்கும் மாத்தலாயிடுத்து. அவர் அம்மா அப்பா கட்டாயப் படுத்தி இன்னொரு கல்யாணமும் பண்ணி வெச்சுட்டா. அருணா, மாமி கூடவே இருந்துட்டா. நீலகண்டனுக்கும் மூணு கொழந்தைகள்
பொறந்துட்டா.”

”பார்வதி மாமியும் மாமாவும் தான் அருணாவைப் படிக்க வெச்சு பெரிய எடத்தில கல்யாணமும் செஞ்சு குடுத்தா. மாமி தன்னோட நகைகளையெல்லாம் அழிச்சு பார்த்துப் பார்த்து, புதுசு புதுசா பண்ணினா.”
“ஏம்மா, அருணாவுக்கு இதெல்லாம் தெரியுமா?

“அவ கல்யாணம் வரை தெரியாது.
கல்யாணத்தில யார் மனையிலிருந்து தாரை வார்த்துக் கொடுக்க வேண்டும் என்ற பிரச்சனை வந்த போதுதான்

தெரியும்.
”நான் அன்னிக்கே என் கொழந்தையை அவா கையில
ஒப்படைச்சாச்சு. அன்னிக்கே அவாளுக்குத் தாரை வார்த்துக் குடுத்தாச்சு”ன்னு நீலகண்டன் ரொம்ப அழு தாராம் மேலும் பொறந்த அன்னிலேர்ந்து அவா தானே வளக்கறா? அதனால அவாளே கல்யானம் பண்ணிக் குடுக்கட்டும்” னு தீர்மானம் செஞ்சு, மாமாவும் மாமியும் தான் கல்யாணம் பண்ணிக் கொடுத்தார்கள். அருணா வுக்கும் இதில சந்தோஷம் தான்.

அருணாவுக்கு ஒரு கொழந்தை பொறந்ததைப் பார்த்துட்டுத்தான் சுந்தர மாமா கால மானார். அருணாவின் கணவர் தான் சுந்தர மாமாவுக்கு
எல்லாக் காரியமும் செஞ்சார். இப்ப, மூணு வருஷ காண்ட்ராக்டில அமெரிக்கா போயிருக்கா. அநேகமா அடுத்த வருஷம் திரும்ப வந்து மாமியைக் கூட்டிண்டு
போகப் போறா’’ என்றாள் அம்மா.

பெற்றெடுத்த அன்னை தேவகியைவிட வளர்த்த அன்னை யசோதையின் பெருமையைத்தானே உலகம் புகழ்கிறது? அன்னையர் தினத்தன்று மாமிக்கு அருணா பரிசு அனுப்பியதில் வியப்பேது?

*********************************************************

Series Navigation

எஸ் ஜெயலட்சுமி

எஸ் ஜெயலட்சுமி