முகக்களை

This entry is part [part not set] of 6 in the series 20000423_Issue

(4)


கு. அழகிரிசாமி

அப்புறம் சரியாக ஒரு வாரம் கழியவில்லை. ஒரு இளைஞன் புரோக்கருடன் மாடியறையை வந்து பார்த்தான். அவன் ஒரு கம்பெனியில் ஸ்டெனோவாக வேலை பார்ப்பவன். விநாயகத்துடன் அறையைப் பகிர்ந்து வசிக்க முப்பது ரூபாய் வாடகை தர இசைந்து, புதன்கிழமை நல்ல நாள் என்றும், அன்று பெட்டி படுக்கைகளோடு வருவதாகவும் சொல்லி மூன்று மாத வாடகையை அட்வான்ஸாகவும் கொடுத்தான். பிறகு புரோக்கரோடு வெளியே போனான்.

புதன்கிழமைக்கு நடுவே இரண்டு நாட்கள்தான் இருந்தன – திங்கட்கிழமை; செவ்வாய்க்கிழமை.

திங்கட்கிழமை மாலையில் கேரம் ஆட்டத்தின்போது, ‘அஷோக், உங்கம்மா கிட்டே போய்ச்சொல்லு; இன்னிக்குக் காலையிலே நான் ஆபீசுக்குப் போறப்போ உங்க அம்மா எதிரிலே வந்தாங்க. அவங்க எப்போ எதிரே வந்தாலும் அன்னிக்குக் கட்டாயம் ஒரு நல்ல காரியம் நடக்கும். இன்னிக்கும் அப்படியே நடந்தது. நான் மூணு வருஷத்துக்கு முன்னாலே ஒரு ஆதாரமும் இல்லாமே ஒருத்தருக்கு முந்நூறு ரூபா கடன் குடுத்தேன். அவரும் வெளியூருக்குப் போயிட்டார். நான் எத்தனையோ லெட்டர் போட்டும் அவர் பதில் எழுதலே. பணத்தை மோசம் பண்ணிப்பிட்டார்; இனிமே அது திரும்பாதுன்னு நான் முடிவு பண்ணிட்டுப் பேசாம இருந்தேன். ஆனால், இன்னிக்கு என்ன நடந்தது தெரியுமா ? ரிஜிஸ்தர் தபாலிலே அவர் அசலும் வட்டியுமாச் சேர்த்து ரூபா நானூத்தி எட்டுக்கு ஒரு ‘செக் ‘ அனுப்பிட்டார். என்னாலே நம்பவே முடியல்லே. உங்க அம்மாவைப் பார்க்கறது மகாலஷ்மியைப் பார்க்கறமாதிரி. அவங்க முகத்திலே அஷ்டலஷ்மியும் தாண்டவமாடுது. அஷோக் ‘ என்று சிரிக்காமல் சொன்னான் விநாயகம்.

அவன் அன்றிரவே தன் தந்தையின் முன்னிலையில் தாயாரிடம் சொன்னான். அன்றிரவு அந்த அம்மாளுக்குச் சந்தோஷத்தை எப்படித் தாங்குவது என்றே தெரியவில்லை.

‘நான் அப்படி இல்லேன்னா உங்க அப்பா என்னை கண்ணாலம் பண்ணியிருப்பாரா, அஷோக்கு ? ‘ என்றாள் தேவகியம்மாள். உடனே கணவனைப் பார்த்து, ‘அவருக்கு ஒருநாள் கட்டாயம் சாப்பாடு போடணும் ‘ என்றாள்.

‘கட்டாயம் ‘ என்றார் அவர்.

தம்முடைய மனைவியின் முகத்தை மற்றொருவன் மெச்சுவதை அறிந்து அவருக்கும் உடம்பு பூரித்தது. அவளை வேறு வழியில்லாமல் கல்யாணம் செய்து கொண்டதாக அப்போது நினைத்தது எவ்வளவு பெரிய தவறு என்று சொல்லிக்கொண்டார்.

செவ்வாய்க்கிழமை மாலை. அஷோக்க்கும் ரவியும் மொட்டை மாடியில் காற்றாடி பறக்கவிட்டுக் கொண்டிருந்தார்கள். அறையில் கிடந்த ‘கேரம் ‘ போர்டுக்கு இரண்டுபக்கமும் விநாயகமும் லல்லுவும் உட்கார்ந்து விளையாடிக்கொண்டிருந்தார்கள். அப்போது இரண்டு பேருடைய கைகளும் ‘கேரம் ‘ போர்டில் இல்லை. கண்கள் அடிக்கொரு தடவை வெளியே திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டிருந்தன.

கீழேயிருந்து தேவகியம்மாள் தன் மக்களைக் குரல் கொடுத்து அழைத்தாள். விளையாட்டு சுவாரஸ்யத்தில் பையன்கள் காதில் அவள் அழைப்பு விழவேயில்லை. ஆனால் அறைக்குள் அவளுடைய குரல் கேட்டது. சிறுவர்கள் கீழே இறங்குவதற்குத் திரும்பும்வரையில் தங்கள் விளையாட்டை நிறுத்த வேண்டிய அவசியமில்லை என்று இந்த இருவரும் கருதிவிட்டார்கள்.

தேவகியம்மாள் ஐந்தாறு தடவை கூவியும் பிரயோஜனமில்லாமல் போகவே கோபாவேசத்தோடு மாடிக்கு ஓடிவந்தாள். அறையின் வாசலை அவள் திரும்பிப் பார்த்தாள். விநாயகமும் லல்லுவும் தங்கள் வலது கைகளை உடனே பின்னுக்கு இழுத்து ‘கேரம் ‘ போர்டில் வைத்ததை அந்த அம்மாள் பார்த்துக் கொண்டாள். இருவர் வாயிலும் ஒவ்வொரு மிட்டாய் இருந்தது. இருவரும் வாயை மூடிக்கொண்டு கண்களை மட்டும் அகலத் திறந்து பேச்சு மூச்சற்று விழித்தார்கள்.

தேவகியம்மாள் கோபப்படபடப்பில் ‘ஒருத்தருக்கொருத்தர் சோறு ஊட்டுறீங்களா ? ‘ என்று கேட்டாள். பிறகு உடம்பெல்லாம் நடுங்கப் பயங்கரமாகக் கூச்சல் போட்டாள். ‘திருடா! சோமாறி! பேமானி! கம்மனாட்டி! பொறுக்கி! … ‘ என்று விநாயகத்தைத் திட்டிக் கொண்டே மகளின் கூந்தலைப் பிடித்து இழுத்துக் கீழே கொண்டுவந்தாள்.

‘என்ன, ஏது ? ‘ என்று விசாலாக்ஷி ஓடி வந்தாள்.

‘உங்களுக்குச் சொல்ல வேண்டியதில்லே, நீங்க உள்ளே போங்க ‘ என்று விசாலாக்ஷியை விரட்டிவிட்டு, மகளின் இரண்டு கன்னங்களிலும் ‘பளார், பளார் ‘ என்ரு வாங்கிக் கொண்டே இருந்தாள்.

சிறுவர்கள் ஓடிவந்து பயத்தினால் அழுது கொண்டே அம்மாவைத் தடுத்தார்கள். அவர்களை ஆளுக்கு ஒரு மிதி கொடுத்து அப்பால் தள்ளினாள் தேவகியம்மாள். அப்பொழுதும் அவள் ‘பாழாப் போறவன்! மோசக்காரன்! பொறுக்கி! திருடன்!… ‘ என்று உரக்கத் திட்டிக்கொண்டிருந்தாள்.

மாணிக்கம் ஆபீசிலிருந்து திரும்பி வீட்டினுள் நுழைந்து கொண்டிருந்தார். ஒன்றும் புரியாமல் அவர் திகைத்து நின்ற போது, உள்ளே நின்ற விக்ஷாலாக்ஷி அவரைக் கை ஜாடை செய்து அழைத்தாள். விஷயத்தையும் ரகசியக் குரலில் சொல்லிவிட்டாள்.

‘மாடியிலேருந்து மகளை இழுத்துக் கொண்டாந்து உதைக்கிறா, மாடியிலே அவன் இருக்கான் என்ன நடந்ததுன்னு இன்னும் சொல்லணுமா ? ‘

‘அப்படியா கதை! விசாலம்,கதை எப்படியோ திரும்பிட்டதேடி! ‘ என்று சொல்லிக்கொண்டே மாணிக்கம் உள்ளே கும்மாளம் போட்டார்.

இதற்குள் மகளுக்குச் சூடு போடுவதற்காக இரும்புக் கரண்டியை எடுத்து அடுப்பில் காய வைத்தாள் தேவகியம்மாள். அஷோக் பயந்து மார்வாடிக் கடைக்கு ஓடி அப்பாவை அழைத்துக் கொண்டுவந்தான். அவர் உள்ளே வந்ததும், மாணிக்கமும் வேண்டுமென்றே அங்கே வந்து நின்றார்.

தேவகியம்மாள் உடம்பெல்லாம் வாயாக கத்தி ஓலமிட்டாள். பாண்டுரங்கம் விஷயத்தை அறிந்து உள்ளே போனார். உடனே மனைவியைக் கீழே இழுத்துப் போட்டு உதைத்தார்.

‘இத்தினி நாள் நீ இன்னாடி பண்ணிக்கினு இருந்தே, வூட்டிலே ? கதையை இவ்வளவு முத்த விட்டுட்டுக் கூச்சல் வேறெ போடுறியா, கூச்சல்! பொண்ணை ஊர்மேலே வுட்டுட்டு நீ வெக்கப்பட்டு ஓடி ஒளிஞ்சியேடி, பெரிய ரம்பை மாதிரி! அத்தோட பலன்டி இது!… ‘ என்று சொல்லிக்கொண்டே ஒவ்வொரு வாக்கியத்தின் முடிவிலும் காலால் உதைத்துக் கொண்டிருந்தார்.

மாணிக்கம் இனியும் சும்மா இருக்கக்கூடாது என்று ஓடிப்போய் தடுத்து அவரை இந்தப் பக்கம் இழுத்துக் கொண்டுவந்தார்.

‘பாருங்க, ஸார், கூச்சல் வேறே போடுறா! மானம் கெட்டவ! இவ ஏன் கூச்சல் போடுறா தெரியுமா, ஸார், அவன் இவ கையைப் புடிச்சு இஸ்க்க்காமல், பொண்ணு கையைப் புடிச்சிட்டானேன்னு இவளுக்கு ஆத்திரம்! ஸார்!… ‘

‘ஸார்! என்ன பேச்சுப் பேசுறீங்க. ஸார் ? போதும். சும்மா இருங்க ‘ என்று தடுத்தார் மாணிக்கம். இவ்வளவு ரசாபாசத்துக்கும் மூலகாரணம் அவர் மனைவியைத் தூக்கிச் சுமந்ததுதான் என்று எண்ணிய மாணிக்கம், ‘யாரோ செஞ்ச தப்புக்கு அம்மாளை ஏன் ஸார் திட்டுறீங்க ? சும்மா இருங்க ‘ என்றார்.

ஆனால் பாண்டுரங்கம் சும்மா இருக்கவில்லை. சொன்னதையே வாய் ஓயுமட்டும் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டுதான் இருந்தார்.

மேலே மாடிஅறையில் இருந்த விநாயகமோ, எந்த நிமிஷத்திலும் எதற்கும் தயாராக இருக்க வேண்டும் கையை முஷ்டி பிடித்தவண்ணம் நின்று கொண்டிருந்தான். கடைசி வரையிலும் பாண்டுரங்கம் மாடிக்குப் போகவே இல்லை. மாணிக்கம்தான் போனார்.

5

மாணிக்கத்தின் அபார முயற்சியால் விநாயகத்துக்கும் லல்லுவுக்கும் கல்யாணமே நிச்சயமாகிவிட்டது. அவன் மாதம் முந்நூற்றைம்பதுக்குமேல் சம்பளம் வாங்குகிறவன், சுயஜாதி, சொந்த ஊராகிய விழுப்புரத்தில் கொஞ்சம் சொத்து சுகங்களும் உடையவன் என்பது தெரிந்ததாலும், அவனும் லல்லுவும் உயிருக்குயிராக காதலித்ததாலும், அவனுடைய பெற்றோரின் ஆட்சேபத்தையும் மீறிக் கல்யாணம் நிச்சயமாகிவிட்டது.

தேவகியம்மாள் நூறு ரூபாய் சம்பளத்தில் தன் பெண்ணுக்கு மாப்பிள்ளை கிடைப்பானா என்று சந்தேகப்பட்டுக்கொண்டிருந்தபோது, இவ்வளவு பெரிய இடத்திலிருந்து ஒருவன் கிடைத்தும் கூட அவளால் சந்தோஷப்படமுடியவில்லை.

மகளுக்கு கல்யாணம் ஜாம் ஜாம் என்று நடந்தது. ஆனால் தேவகியம்மாளுக்கோ வாழ்க்கையே இருண்டுவிட்டது. அவள் அலங்காரத்தையும் கைவிட்டாள். வெட்கப்பட்டு ஓடி ஒளிவதையும் கைவிட்டாள். உலகத்தையே வெறுத்தவளாக வீட்டுக்கும் வாசலுக்கும் நடமாடிக்கொண்டிருந்தாள்.

சுதேசமித்திரன்- 1969 –

Series Navigation

(4)

(4)

முகக்களை

This entry is part [part not set] of 6 in the series 20000417_Issue

கு – அழகிரிசாமி


(3)

லல்லுவுக்கு இப்பொழுது வயது பதினெட்டு. எஸ்.எஸ்.எல்.ஸியில் பெயிலாகி வீட்டோடு இருக்கிறாள். அவளுக்கு பதினான்கு வயதிலும் பத்து வயதிலும் இரண்டு தம்பிகள் இருக்கிறார்கள்.

மாடி அறையில் விநாயகம் என்ற இருபத்து நான்கு வயது பிரம்மச்சாரி ஒருவன் தன் இருபத்தொன்றாம் வயதிலிருந்தே வாடகைக்கு இருந்து வருகிறான்; அவனோடு ஒரு வருஷமாக வசிப்பவர் நாற்பது வயது துரை. அவர் குடும்பஸ்தர். குடும்பத்தை இதற்கு முன் அவர் உத்தியோகம் பார்த்த ஊரில் விட்டுவிட்டு வந்திருக்கிறார். திரும்பவும் அங்கேயே போய்விடுவதற்கான முயற்சிகளைச் செய்து கொண்டு மாற்றுதல் உத்தரவை எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர் அவர்.

விநாயகத்துக்கு எப்போதுமே பிரம்மச்சாரியாக இருந்து விடவேண்டும் என்று உத்தேசம் எதுவும் கிடையாது. நேரம் வரும்போது எல்லாம் தானாக நடக்கும் என்று இருப்பவன் தான் அவன்.

வீட்டின் பின் போர்ஷனில் இரண்டுமாத காலமாகக் குடியிருப்பவர்கள் மாணிக்கம் என்ற ஒரு ஆசாமியும், அவருடைய மனைவி விஷாலாஷியும். அந்த தம்பதிகளுக்குப் பிள்ளைக் குட்டிகள் இல்லை. அதனால்தான் பாண்டுரங்கமும் அவர்களுக்கு அந்த வீட்டை விட்டார். ஒரு பிள்ளை பிறந்தால் காலி பண்ணச் சொல்லிவிடலாம் என்பது அவர் உத்தேசம். பிள்ளைக்குட்டிகள் இருந்தால் – அதாவது குடித்தனக்காரர்களுக்கு இருந்தால்- வீட்டில் அமைதி நிலவாதே!

மாணிக்கமும் விசாலாஷியும் தங்கள் போர்ஷனை விட்டு வெளியே வரவேண்டுமென்றால், தேவகியம்மாளின்!அறையைத்தாண்டித்தான் வரவேண்டும். அப்போது வலதுபுறம் உள்ள ஒரு பெரிய நிலைக்கண்ணாடியின் முன்னால் தேவகியம்மாள் நின்று கொண்டிருப்பதைக் காணலாம். கண்ணாடியில் மாணிக்கத்தின் நிழல் விழுந்துவிட்டால் போதும், அவள் அப்படியே வெட்கத்தினால் ஓடி ஒளிந்து கொள்வாள். அவர் எப்போதாவது எதிரே வந்துவிட்டாலோ, உடம்பில் ஐஸ் தண்ணீர் கொட்டிவிட்டதுபோல் நடுங்கி வெட்கத்தினால் முகம் கோணி, கடைக்கண்ணால் பார்த்துக்கொண்டே உள்ளே போய் விடுவாள்.

‘இவளுக்கு என் தாயார் வயசு இருக்கும்போலிருக்கு!என்னைப்பார்த்து இப்படி ஏன் வெட்கப்படுகிறாள் ? ‘ – இதுதான் முதன்முதலாக ஆச்சரியத்தோடு மாணிக்கம் தன் மனைவியிடம் சொன்ன வார்த்தைகள்.

‘அது வெட்கமோ ? பயமோ ? ‘ என்றாள் விசாலாட்சி.

‘பயமா ? என்னைப் பார்த்து பயப்படுவானேன் ? இவளைப்பார்த்தால்தான் எமனே பயப்படணும்போலே இருக்கு. இவளுக்கு எதுக்கு பயம் ? பார்த்தால் அப்படியே தூக்கிட்டுப்போயிடுற மாதிரி அழகு சுந்தரியா இருக்கிறா பாரு, பயப்படவேண்டியதான்! ‘

‘நீங்க அப்படி சொல்றீங்க. அவளுக்கோ அவள் அழகு சுந்தரியா இருக்கிறாளே!ரம்பையாத்தான் தோன்றாளே! அதுதெரிஞ்சிதானே அவள் இந்த பயம் பயப்படுறா, ஆம்பிளைங்களைக் கண்டதும் ? அந்த அம்மாள் தன்னை விட அழகி இந்த பூலோகத்திலேயே கிடையாதுண்ணு நிஜமாவே நினைக்கிறா! தெரியுமா ? ‘

‘நிலைக்கண்ணாடியையும் வீட்டிலே வெச்சிக்கிட்டு அவளுக்கு இப்படியும் நினைக்கதோணுதே, அதுதான் ஆச்சரியத்திலும் ஆச்சரியம்! ‘

‘நிலைக்கண்ணாடி ஒரு கண்ணாடியா ? முகத்துக்கு முகம்தான் கண்ணாடி. அவர் முகம் கண்ணாடி. அம்மா அதிலேதான் அழகைப்பார்க்கிறா! ‘

வரவர தேவகியம்மாளின் தளுக்கும் மினுக்கும், நாணமும் ஓட்டமும் மாணிக்கத்தின் பொறுமையைச் சோதித்துவிட்டன. அவர் பாண்டுரங்கத்தை ஒரு நாள் சந்தித்தபோது தனது எரிச்சலை பரிகாசமாக மாற்றி, ‘சார்… ‘ என்று பேச்சைத் தொடங்கி, ஊரில் தன் தம்பி ஒரு பணக்காரப் பெண்ணை அழகில்லை என்று சொல்லிக் கல்யாணம் பண்ணிக்கொள்ள மறுப்பதாக ஒரு பொய்க்கதையைப் பேச்சின் நடுவிலேயே திரித்து, உள்ளே இருக்கும் தேவகி அம்மாளுக்கும் கேட்கும்படியாக, ‘பாருங்க, சார். அழகில்லை அழகில்லைன்னு அதையே சொல்லிக்கிட்டு இருக்கிறானாம். அழகில் என்னசார் இருக்கு ? முகக்களைதானே சார் முக்கியம் ? குரங்கா இருந்தாலும் களையா இருந்தா, எடுத்துக் கொஞ்சத் தோணுமே, சார்! முகத்திலே மகாலட்சுமி மாதிரி ஒரு களை இருந்தா, அப்புறம் அழகை லட்சியம் பண்ணுவானேன்! தெருவுக்கு ஆயிரம் அழகிகளை பார்க்கலாம்; ஆனால் முகக்களையொட ஊருக்கு ஒண்ணு கூட பார்க்க முடியாதே, சார் ‘

என்றார்.

‘வாஸ்தவம் ‘ என்றார் பாண்டுரங்கம்.

‘அந்தப் பொண்ணை நானும் ஒரு சமயம் பார்த்திருக்கிறேன். ஏறக்குறைய உங்க மிஸஸ் ஜாடைதான். முகத்திலே இதே லட்சுமிகரம்! இந்தக்களையே தான் ‘ என்று மாணிக்கம் துணிந்து சொல்லிவிட்டார்.

தேவகியம்மாளுக்கு உள்ளே நிலை கொள்ளவில்லை. இங்கே பாண்டுரங்கமும் சந்தோஷத்தினால் திறந்த வாய் மூடமுடியாமல் நின்றார். மனைவியின் முகத்தில் அபாரக் களை சொட்டுவதாகப் பலவருஷங்களுக்கு முன் உபசாரமாகவும் உபாயமாகவும் சொன்ன பொய்யுரையை அவரே இப்போது மெய்யுரை என்று நம்பத் தொடங்கிவிட்டார்.

தேவகியம்மாளுக்குத் தன் முகக்களையில் இருந்த நம்பிக்கை நூறு மடங்கு பெருகிவிட்டது. அதன் பலனாக மாணிக்கத்தையும் மாடியறை ஆசாமிகளையும் பார்த்து அதிகமாக நாணவும், அதிகமாக ஓடி ஒளியவும் ஆரம்பித்தாள்.

வயது ஏற ஏற, தலை நரைக்க நரைக்க, அந்த அம்மாளுக்கு மேன்மேலும் இளமை திரும்புவதை கண்டு வினாயகமும் அதிசயித்தான். அவன் மாடியில் நின்று கீழே முற்றத்தில் நடமாடும் தேவகியம்மாளைச் சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் பார்த்து ரசிப்பதுண்டு. துரையிடம் சொல்லி தலையில் அடித்துக் கொள்வதும் உண்டு. அவன் தன்னை அடிக்கடி திரும்பிப்பார்க்கிறான் என்பதைத் தேவகியம்மாளும் கவனித்து விட்டாள். தன்னை யாரும் திரும்பியே பார்க்க மாட்டார்கள் என்று சொன்ன கணவனின் முகத்தில் கரி பூசியாகிவிட்டது என்று எக்களிப்புக் கொண்ட தேவகியம்மாள், வினாயகத்திடம் அலாதியான வாத்ஸல்யமே கொண்டுவிட்டாள்.

அவன் வந்த மறுமாதத்திலிருந்தே சிறுவர்கள் அவனுடைய அறைக்குப் போய் மிட்டாய் வாங்கித் தின்பதும், அங்கேயே விளையாடுவதும் சகஜமாகிவிட்டது. லல்லுவுக்கும் பரீட்சையின்போது அவன் பாடம் சொல்லிக்கொடுத்தும் இருக்கிறான். ‘அசோக் எங்கே ? ரவி எங்கே ‘ அவன் பாண்டுரங்கத்த்தின் பிள்ளைகளைத் தேடிக்கொண்டு கீழே இறங்கிவந்தால், அவன் தன்னைச் சரச சல்லாபத்துக்கு அழைப்பது போல் தேவகியம்மாள் பார்த்துக் கொண்டு நாணம் மேலிடத் தலை குனிந்து, கடைக்கண்ணால் கொஞ்சமும், புன்னகையால் கொஞ்சமும், அப்புறம் வாய்ச்சொற்களால் கொஞ்சமும் பேசிப் பதில் சொல்வாள். இந்தக் காட்சியை எல்லோருமே பலமுறை பார்த்திருக்கிறார்கள். மாணிக்கத்துக்கு சந்தேகம் கூட ஏற்பட்டு, ‘இவள் வலை வீசுறாளா ? அவன் வலை வீசுறானா ? தெரியல்லே. ரொம்ப ரொம்ப இழையறாங்க! ‘ என்று தன் மனைவியிடம் சொல்லிவிட்டார். தனக்கும் அந்த சந்தேகம் உண்டு என்றும், இன்னும் தெளிவு ஏற்படாமல் தான் தவித்துக் கொண்டிருப்பதாகவும் விசாலாட்சி சொன்னாள்.

‘அவன் மூணுவருஷமா மெத்தை மேலே குடியிருக்கிறானாம். அதனாலே ஒரு வேளை நெருங்கிப் பழகலாம். எந்த நேரமும் இந்த பையன்களும், ஒவ்வொரு சமயத்திலே பொண்ணும்கூட அங்கே போய் ‘கேரம் போர்டு ‘ விளையாடுதுகள் ‘ என்றார் மாணிக்கம்.

‘பொண்ணு மாடிக்குப் போறா. அவன் கீழே வந்தாலும், பொண்ணு அவனோட நிமிர்ந்து நின்னு பேசறா. ஆனா அம்மாக்காரிக்கு அவனைக் கண்டால் வெட்கம்! இதைப்போல ஒரு அதிசயம் வேறே எங்கேயும் பார்க்க முடியாது ‘ என்றாள் அவள்.

ஒரு மாதத்திற்குப் பிறகு துரை உத்யோக மாற்றுதலாகி அறையைக் காலி செய்துவிட்டு, சென்னையை விட்டே போய்விட்டார். அவருக்கு பதிலாக ஒரு நல்ல ஆசாமி வந்து சேரட்டும் என்று காத்திருந்த பாண்டுரங்கம் வீட்டு புரோக்கர்களிடமும் சொல்லி வைத்திருந்தார். மாடி அறையில் ஒரு ஆள் குறைந்துவிடவே, அந்த இடம் விளையாடுவதற்கு வசதியாக இருந்தது. நவராத்திரி விடுமுறையில், லல்லு, அசோக், ரவி ஆகிய மூவரும் மாலையிலும் முன்னிரவிலும் வினாயகத்தோடு அமர்க்களமாகக் ‘கேரம் ‘ ஆடிக்கொண்டிருந்தார்கள். அப்போது ஒருநாள் வினாயகம் அந்த மூவருடனும் கீழே இறங்கிவந்தபோது எதிரே நின்ற தேவகியம்மாள் வாரிச் சுருட்டிக் கொண்டு உள்ளே ஓடினாள். ஓடிய ஓட்டத்தில் அங்கே சட்டை போட்டுக்கொண்டு நின்ற பாண்டுரங்கத்தின்மேல் போய் விழுந்து விட்டாள். அவர் அப்படியே கட்டிலில் போய் விழுந்தார். முழங்கை கட்டில் சட்டத்தில் மோதிவிடவே தாங்க முடியாத வலி ஏற்பட்டு அவருக்கு ஒரு கணம் கண் இருட்டியும் விட்டது. மீண்டும் கண்ணுக்கு வெளிச்சம் தெரிந்த பிறகு முழங்கை வேதனை பொறுக்க மாட்டாமல் மனைவியைப் பார்த்து முதன்முதலாகச் சீறி விழுந்தார்.

‘ஏன் இப்படி மாடாட்டம் வந்து வுயுற ? கண்ணு தெரியல்லியா ? ‘ என்று பாய்ந்தார் பாண்டுரங்கம். அடிப்பதற்கு கையை ஓங்கி இருப்பார். ஆனால் அடிக்கும் கையில்தான் அடி. தூக்க முடியவில்லை. அதனால் ஆத்திரம் மிகுதியாகி விட்டது. ‘நீ பொம்மனாட்டி தானா ? ‘ என்றும் கேட்டுவிட்டார்.

அவள் தன் குற்றத்தை உணர்ந்து, ‘ நான் பார்க்கல்லே. மெத்தை மெல் இருக்கிறவர் எதிரே வந்துட்டார்… ‘ என்று சமாதானம் சொல்ல முயன்றாள்.

‘வந்துட்டா இன்னா ? அவருக்கு வயசு இருவது; உனக்கு வயசு நாற்பது. சின்னபொண்ணாட்டம் பயந்து சாவுறியே. எதுக்கு ? எதுக்கும்மா இந்த வெட்கம் ? கேக்கறேன். ‘

பாண்டுரங்கமா இப்படி துணிந்து பேசுகிறார் என்று வீட்டில் அத்தனை பேரும் – வினாயகம், மாணிக்கம், விசாலாட்சி உட்பட – வியப்பில் ஆழ்ந்தார்கள். அவருடைய குரல் வீடெல்லாம் கேட்டது. அவளை அவர் எவ்வளவு மட்டம் தட்டினாலும் தகும் என்று தத்தம் இடங்களில் இருந்து கொண்டே மகிழ்ச்சியில் ஆழ்ந்தார்கள். ஆனால் அப்படி துணிந்து பேசியது அவருடைய முழங்கை வேதனையே தவிர அவரல்ல என்பது யாருக்கும் தெரியாது.

‘நாற்பது வயசுக்கு மேலே அம்மாளுக்கு இன்னா வெக்கம்டா, இன்னா வெக்கம்! உன் பல்லைப்பார்த்தாலே பத்து நாளைக்குச் சாப்பிடமாட்டாங்களேடி ‘ என்று பயங்கரமாக ஒரு போடு போட்டுவிட்டு, ‘டேய் அஷோக்! போய் ஒரு ரிக்ஸா இட்டாடா. டாக்டர்கிட்டே போவணும். நோவு பிராணன் போவுது ‘ என்று சொல்லிக்கொண்டே வெளியே வந்தார் பாண்டுரங்கம்.

தன் தப்பை உணர்ந்து பதில் பேச முடியாமல் தேவகியம்மாள் நின்ற பரிதாபம் போதாதென்று, அவளுடைய பற்களைப் பற்றிக் கணவன் சொன்ன வார்த்தைகள் வேறு ஈட்டி போல் பாய்ந்தன. அவமானம் தாங்காமல் குப்புறப் படுத்து முகத்தை தலையனையில் புதைத்துக் கொண்டாள் அவள். இனி அவள் பிழைத்தால் மறு ஜன்மம்தான் என்று உள்ளே விசாலாட்சி சொல்லிக் கொண்டாள்.

டாக்டர் வீட்டுக்குப் போன பாண்டுரங்கம், எலும்புக்குச் சேதமில்லை என்று அறிந்து, ஒரு களிம்புப் பூச்சோடு மார்வாடி கடைக்குப் போய்விட்டார்.

மாலை வந்தது. அப்புறம் இரவும் வந்தது. இரவு வந்ததுமே, மனைவியைக் கடுஞ்சொற்களால் திட்டியது தவறென்று பாண்டுரங்கத்துக்குத் தோன்றிவிட்டது. அவளைச் சமாதானப்படுத்தவும், அவளுடைய அன்பை மீட்கவும் பத்துக்காசு மல்லிகைப்பூ, பத்துக்காசு பக்கவடாப்பொட்டலம், பத்துக்காசு பூவன்பழம் ஆகிய காணிக்கைகளோடு வீடு திரும்பினார். தன்னுடைய தவறுக்காகவும், தான் அடைந்த அவமானத்துக்காகவும் வெளியே தலைகாட்டப் பயந்து மூலையில் கிடந்த தேவகியம்மாள் கணவர் கொண்டுவந்த காணிக்கைகளைக் கண்டாள்; மாண்டவள் மீண்டாள் என்னும்படி புத்துயிர் பெற்றாள். கணவன் தன் பற்களைப் பற்றிச் சொன்னது கோபத்திலே சொன்ன வார்த்தைகளே ஒழிய பழிப்புரையோ, மெய்யுரையோ அல்ல என்று உணர்ந்தாள். மறுநாள் வழக்கம்போல் அலங்கரித்துக் கொள்ளவும், ஆடவர்களைக் கண்டு அஞ்சி கூசவும் தனக்குக் கணவன் சுதந்திரம் கொடுத்துவிட்டார் என்பதையும் உணர்ந்து கொண்டாள். சற்றே அசைவுகண்ட அவளுடைய நம்பிக்கை தன் முகக்களையில் இருந்த நம்பிக்கை பழையபடி உரம் பெற்றுவிட்டது.

(இறுதிப்பகுதி அடுத்த வாரம்)

Series Navigation

- கு. அழகிரிசாமி

- கு. அழகிரிசாமி

முகக்களை

This entry is part [part not set] of 2 in the series 20000410_Issue

ku alagirisamy


2

கல்யாணம் நடந்தது. தேவகியும் தனக்கு முகக்களையும், ஏதோ ஒரு வகையில் ஒரு அழகும், பார்த்த பார்வையிலேயே ஒருவன் மனத்தைப் பறி கொடுக்கும்படி செய்யக்கூடிய கவர்ச்சியும் இருப்பதாக திடமாக நம்பிவிட்டாள். உயிரை விட்டுவிட நினைத்திருந்தவளுக்குப் பாண்டுரங்கம் உயிர்ப்பிச்சை கொடுத்ததோடு, முகக்களையையுமே கொடுத்துவிட்டார். கணவனே கண்கண்ட தெய்வம் என்று அவள் பாண்டுரங்கத்துக்குப் பணிவிடை செய்தாள்; அவள் தம்மை மணந்து கொண்டதால்தான் தாமும் ஒரு சம்சாரியாக வாழ முடிகிறது என்றும், இல்லையென்றால் வெள்ளை வேட்டிப் பண்டாரமாக வாழ்நாளைக் கழிக்க நேர்ந்திருக்கும் என்றும் நினைத்த பாண்டுரங்கம் மனைவியைத் தலைக்குமேல் தூக்கிச் சுமக்கத் தயாராக இருந்தார்.

தாம்பத்தியத்தில் அன்பு வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. ஆனால் பெற்றோர் உயிரோடு இருக்கும்வரையில் அந்த வெள்ளத்தை அவ்வப்போது அணைபோட்டுத் தடுப்பது என்பது நெடுங்கால மரபாக இருந்து வருவதால், சிறிது காலத்திற்குள்ளாகவே, மாமியார் மருமகள் சண்டைகளும், சில சமயங்களில் மாமனார் மருமகள் சண்டைகளுமே மூண்டுவிட்டன. ஒவ்வொரு சண்டைக்கும் மூலகாரணமாகவே இருந்தது, வீட்டு வேலைகளைச் செய்யாமல் தேவகி எப்போது பார்த்தாலும் நிலைக்கண்ணாடியின் முன்னால் நின்று தன்னை விதவிதமாக அலங்கரித்துக் கொள்வதிலேயே நேரத்தைப் போக்குகிறாள் என்ற புகார்தான். ‘காலையில் ஒரு அலங்காரம், மாலையில் ஒரு அலங்காரமா ? அவள் பூசுகிற செந் நெடி தாங்கவே முடியவில்லை. குமட்டல் எடுக்கிறது. வீட்டு நடுக்கூடத்தின் வழியாக குடித்தனக்காரர்கள்- ஆடவர்கள் நடந்து சென்றால் வெட்கம் தாங்காமல் ஓடிவந்து கண்ணாடி இருக்கும் அறையினுள் புகுந்து கொள்கிறாள்; அப்புறம் நாள் முழுவதும் வெளியே வர மறுக்கிறாள் ‘ இப்படி எல்லாம் பெற்றோர் புகார் செய்தும் பாண்டுரங்கம் அதைப்பற்றி கவலைப்படாமல் இருந்தார். அப்புறம் அவர்கள் எத்தனை நீதி நியாயங்கள் எடுத்துக் கூறியும், ஒவ்வொரு சமயத்தில் கண்ணீர்விட்டு அழுதும் மகனைத் தன்பக்கம் இழுக்க முயன்றார்கள். ஆனால் பாண்டுரங்கமோ ஒவ்வொரு சண்டையிலும் மனைவியின் பக்கமே தோளோடு தோளாக நின்றாரே ஒழிய, கட்சி மாறுவதற்கு சிறிதும் இசையவில்லை. இதைக்கண்டு பெரிதும் கவலைக்குள்ளான பெற்றோர் இந்தக்கவலையினால்தானோ, அல்லது வேறு காரணங்களினாலோ ஒருவர் பின் ஒருவராக நான்கு மாத இடைவெளி விட்டுப் பரலோகம் போய்ச் சேர்ந்தார்கள். அந்த வருஷத்திலேயே பாண்டுரங்கத்தின் மூத்த மகள் லல்லு (லலிதா) பிறந்தாள்

(2)

கோடிக்கு ஒரு வெள்ளை; குமரிக்கு ஒரு பிள்ளை என்பார்கள். ஒரு தடவை வெளுக்கப் போட்டுவிட்டால் கோடி வேஷ்டி பழைய வேஷ்டிதான்; குமரிப்பெண்ணின் கதையும் அதுதான். ஒரு குழந்தை பெற்றதோடு குமரிப்பட்டமும் போய்விடும். ஆனால் தேவகியம்மாள், லல்லுவைப் பெற்றெடுத்த் பிறகும் தன் அலங்காரத்தையோ சங்கோஜத்தையோ நிறுத்திக் கொள்ள – குறைத்துக் கொள்ளக்கூட – தயாராக இல்லை. முகக்களை இருக்கிறது. ஏதோ ஒரு கவர்ச்சி தனக்கு இருக்கிறது என்பது தெரிந்து விட்டதால், அதைக்கொண்டு தன்னுடைய அழகின்மையை ஈடு கட்டிவிட வேண்டும் என்பதில் விடாமுயற்சியோடு இருந்தாள். இப்படி முயற்சி செய்து வந்த தேவகியின் அபார நம்பிக்கையைச் சோதிக்ககூடியவாறு ஒரு சம்பவம் நடந்தது. அபோது தேவகி மிகுந்த ஆக்ரோஷத்துடன் புலிப்பாய்ச்சல் பாயவே ஆரம்பித்துவிட்டாள்.

பாண்டுரங்கம் தம் வீட்டு மொட்டை மாடியில் புதிதாகக் கட்டிமுடித்த ஓர் அறையை முதன் முதலாக இரண்டு பிரம்மச்சாரிகளுக்கு வாடகைக்கு விட முடிவு செய்து மூன்று மாத அட்வான்சும் வாங்கிவிட்டார். வீட்டின் ‘பின்போர்ஷ ‘னில் அப்போது ஒரு குடும்பம் வாடகை கொடுத்துக் குடியிருந்து வந்தது. அந்தக் குடும்பத்தலைவியையும் தன்னையும் மனத்தில் வைத்துக் கொண்டு தேவகி கணவனைக் கேட்டாள்: ‘குடியும் குடித்தனமுமா இருக்கிற வூட்லே மொட்டைப் பசங்களை வைக்கலாமா! ‘

பாண்டுரங்கம் சிரித்துக் கொண்டே, ‘நீ இன்னா சொல்றே தேவு ? அந்த ரூம்பிலே மொட்டைப் பசங்க தானே இருக்க முடியும் ? அங்க என்ன சமயக்கட்டா, அம்மியா, ஆட்டுக்கல்லா, இன்னா இருக்குது ? ‘ என்று கேட்டார்.

‘கடனோட கடனா இன்னும் கொஞ்சம் வாங்கிப்போட்டு ஒரு கொட்டா போடுறதுதானே சமயக்கட்டுக்கு ? ‘

‘தேவு, தோ பாரு! உனக்கு இன்னா தெரியும் ? குடும்பக்காரன் இன்னிக்கெல்லாம் குடுத்தாலும் இருபத்தஞ்சு ரூபாக்கு மேல குடுக்க மாட்டான். இந்தப் பசங்க ஒண்டிக்கட்டங்களா இருந்தாலும் ஆளுக்கு இருபது ரூபா தரப்போறாங்க! சொளையா நாற்பது ரூபா! கரண்டுக் காசு வேற! இன்னா சொல்றே நீ ? ‘

தேவகியம்மாளால் பதில் பேசமுடியவில்லை. ரூபாய் நாற்பது என்ற சொல், கோடையிலே சாப்பிட்ட ஐஸ்கிரீம் மாதிரி உள்ளுக்குள்ளே ஜிலுஜிலுத்துக் கொண்டே கரைந்து நிறைந்தது. இருந்தாலும், தோல்வியடைந்த மாதிரி காட்டிக்கொள்ள விரும்பாமல், ‘உனக்கு ரொம்பத்தான் துணிச்சல்! உன்னைத் தவுத்து வேறே யாரும் இப்படி மொட்டைப்பசங்களை இட்டாந்து கொடக்கூலிக்கு வுடமாட்டாங்க. எனக்கு இதெல்லாம் புடிக்கலே. அவ்வளோதான் சொல்லுவேன் ‘ என்று சொல்லிவிட்டுத் திரும்பினாள்.

அப்போது அவளுடைய கவலையைப் போக்க விரும்பிய பாண்டுரங்கம், ‘தேவு, நீ ஒண்ணுத்துக்கும் பயப்படாதே. உன்னை இவங்க திரும்பிக்கூடப் பார்க்க மாட்டாங்க. ரொம்ப நல்ல புள்ளையாண்டான்க… ‘ என்று சொன்னார்.

அவர் அப்படிச் சொன்னாரோ இல்லையோ, நடுத்தெருவில் மானபங்கப்படுத்தப்பட்டவள் போல் பெருங்கூச்சல் போட்டாள் தேவகி. ‘என்னைத் திரும்பிக் கூட பார்க்க மாட்டாங்களா ? நான் என்ன அப்படியா அவலட்சணமா இருக்கிறேன் ? இதைக்கேட்டுக்கினு நான் உசிரோட இருக்கணுமா! நான் அவலட்சணமா இருக்குறேன்னா என்னை எதுக்காக நீ கண்ணாலம் பண்ணிக்கினே ? ‘ என்று கேட்டு விட்டு தலையிலும் அடித்துக் கொண்டு, ‘கடவுளே! நான் இன்னும் உசிரோட இருக்கிறேனே! கட்டின புருஷனே என்னைக் குரங்குன்னு பேசுறானே! என் அம்மாக்காரி- அந்தச் சண்டாளி- பேச்சைக் கேட்டு இந்த மனுஷனுக்குக் கயுத்தைச் சாச்சேனே! .. ‘ என்று ஓலமிட்டாள்.

பாண்டுரங்கம் ‘தேவு! தேவு! ‘ என்று பதற்றத்துடன் அவளைச் சுற்றிச்சுற்றி வந்தார். அவளும் அவரைப் பார்க்க விரும்பாமல் ராட்டினமாகச் சுற்றினாள். அவளுடைய கையைப் பிடித்து அவர் சமாதானப்படுத்த முயன்றபோது, அடச் சீ! என்று உதறிவிட்டு, இன்னிக்கே நான் சமுத்திரத்திலே போய் வுயல்லே, என் பேரு தேவகி இல்லே ‘ என்று சொல்லிக் கொண்டே போய்க் கட்டிலில் தொப்பென்று விழுந்தாள். பாண்டுரங்கம் அதிர்ச்சியால் விதிர்விதிர்த்து, விழிகள் பிதுங்க முரண்டு, அந்தக் காலத்து நட்டுவனார்கள் போல் குடுகுடு என்று அவளைப் பின் தொடர்ந்து ஓடினார். ‘தேவு! தேவு! தேவு! …. ‘ – இந்த ஒரு சொல்லைத் தான் அவர் வாய் உச்சரித்துக் கொண்டே இருந்தது. லல்லு- அந்த மூன்று வயதுப் பெண் – பயந்து போய் அழுததும், அவர் வேஷ்டியை ஆதரவாகப் பிடித்ததும் அவருடைய கவனத்தில் விழவே இல்லை.

‘நான் ஒண்ணும் தப்பாச் சொல்லல்லியே, தேவு! ஏன் இப்படிக் கூச்சல் போடுறே ? வேணாம், நான் உன்னை இன்னா சொன்னேன் ? ஒண்ணுமே சொல்லல்லியே! ‘ என்றபடியே பாண்டுரங்கம் கட்டிலில் அமர்ந்தார். உடனே அவள் அவரைக் கீழே தள்ளினாள். அவர் தரையில் உட்கார்ந்து கொண்டார். ஆயிரம் சொல்லிக் கெஞ்சினார். அவளோ குப்புறப் படுத்த நிலையிலிருந்து அணுவளவும் புரளவில்லை; ஆக்ரோஷமான பெருமூச்சும், அழுகையை அடக்கும்போது பற்களைக் கடிக்கும் நறநறப்பும் நிற்கவில்லை. பாண்டுரங்கம் சோர்ந்து போய் ஆயாசத்தோடு தலையில் கையை வைத்துக் கொண்டு யோசித்தார். திடாரென்று மார்வாடிக் கடை ஞாபகம் வந்துவிட்டது. ‘வேலைக்குப் போகவேண்டுமே! ‘ என்ற பயத்தில் வெளியே வந்து விட்டார்; கடைக்கும் போய்விட்டார்.

இரவு அவர் திரும்பி வந்த போது தேவகியம்மாள் அதே நிலையில் கட்டிலில் கிடந்தாள். ஆனால் உடைமாறியிருந்தது. தலையில் பூவும் பிடரியில் பவுடரும் இருந்தன. அவர் உள்ளே நுழையவும் அவள் பற்களைக் கடிக்கவும் சரியாக இருந்தது. அன்றிரவு அவர் தாமாகவே எடுத்துப் போட்டுக் கொண்டு சாப்பிட்டார். அதைப் பற்றிக் கூட அவர் கவலைப்படவில்லை; அவசியமானால் தாமே சமையல் செய்யவும், அவளுக்கு ஊட்டவும் கூட, அவர் தயாராக இருந்தார். அவருடைய கவலை வேறு; துன்பமும் வேறு. அந்த ஓர் இரவு அவர் மனைவியை பிரிந்திருக்கும்படி நேர்ந்தது. ஓர் இரவு ஓர் யுகமாகக் கழிந்தது. மனம் கலங்கி, புத்தியும் பேதலித்து, ‘இப்படியே தான் இனி வாழ வேண்டுமா ? கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரியா ? கடவுளே! ‘ என்று மறுகி, அன்று கடைக்கு லீவு போட்டுவிட்டு வந்து தாமே சமையல் பண்ணிணார். பிறகு மனைவியைச் சமாதானப்படுத்துவதில் ஈடுபட்டார்.

தேவகியம்மாளோ அன்றே ஒரு முடிவைப் பார்த்து விடுவது, ஒரு தெளிவைக் கண்டு விடுவது என்று வைராக்கியமாக இருந்தாள். மணிக்கணக்கில் முறையிட்ட பாண்டுரங்கம் கடைசியில் அழமாட்டாத குறையாகச் சொன்னார் ‘ கண்ணு! என் மனசு உனக்குத் தெரியாது. எத்தினியோ பணக்காரப் பொண்ணுங்களையெல்லாம் வேணாம்னுட்டு உன்னைக் கண்ணாலம் பண்ணிக்கினேன். எனக்கு சொந்த வூடு இருக்குதுன்னு தெரிஞ்சி எவன் எவனோ பொண்ணைப் பெத்தவன் வந்து காலைப் புடிச்சான். ரெண்டொரு பெண்ணையும் பார்த்தேன். ஒண்ணொண்ணும் ரதம் மாதிரி அலங்காரமாத்தான் இருந்திச்சி. ஆனா, நான் ஒப்புத்துக்கல்லே. ஏன் ? அயகு இருந்தால் போதுமா ? மூஞ்சியிலே லெச்சுமி இருக்க வேணாம் ? அப்பாலே, அப்பாலே ? அதுவும் உன்கிட்ட மறைப்பானேன் ?- காலேஜிலே படிக்கிற ரெண்டு மொட்டைங்க என்னைச் சுத்திச் சுத்தி வந்துச்சு. நானும் அதுகளோட அதுகளோட சிநேகிதமா இருந்தேன்னு வச்சிக்கோயேன். அது ஒரு ரெண்டுவருஷம். கண்ணாலம் கட்டிக்கச் சொல்லிப் பார்த்திச்சு. நான் ஒரே முட்டா முடியாதுன்னுட்டேன்… ‘

பாண்டுரங்கத்தின் குரலில் துயரம் குறைந்து, உற்சாகம் மேலோங்கியது. அவருடைய கட்டுக்கதைகல் அவருக்கு கிளுகிளுப்பை ஊட்டியது போல, அவளுக்கும் ஊட்டின. அவள் பெருமூச்சு விடுவதை நிறுத்தி கணவனின் ராஸ கிரீடைகளைப்பற்றிய விவரங்களை உற்றுக் கேட்டுக் கொண்டிருந்தாள்.

‘தேவு! உன்னைப் பார்த்தேன். உன் மூஞ்சியைப் பார்த்தேன். லெச்சுமி தாண்டவமாடினா. அப்படியே காலிலே வுயுந்த மாதிரி வுயுந்துட்டேன். எனக்கு நீதான் லெச்சுமி. நீ என் வூட்டுக்கு வந்தே… ‘

‘என் அப்பனும் ஆத்தாளும் செத்தாங்க ‘ என்று பாண்டுரங்கம் சொல்லப்போகிறாரோ என்று அப்போது காரணமில்லாமலே பயந்தாள் தேவகியம்மாள்.

‘நீ என்வூட்டுக்கு வந்தே, அன்னியிலேருந்து எனக்கு நல்லகாலம் தான். இப்போ மாடியும் கட்டிட்டேன். மொதல் மாசக் கொடக்கூலியிலே உனக்குப் பட்டு பொடவை வாங்குறதாயும் இருக்கேன். தேவு, ஏந்திரு, வா, சாப்பிடு. கோவிச்சுக்காதே ‘ என்று சொல்லிக் கையை தொட்டார் பாண்டுரங்கம். அப்போது அவள் உதறவில்லை. சாகஸமாக சிறிது மறுத்தாள்; சற்றுத் திமிறினாள்; கடைசியில் எழுந்துவிட்டாள்.

தேவகியம்மாள் சாப்பிட்டாளே ஒழிய, அவளுடைய பிணக்கு முற்றாக தீரவில்லை. அவர் மேலும் பல கட்டுக்கதைகளையும், பாராட்டுரைகளையும் சொல்லி ஒரு தமிழ்ப்படத்துக்கும் அவளை அழைத்துக்கொண்டு போனார்; பத்துக்காசுக்கு மல்லிகைப்பூவும், பத்துக்காசுக்குப் பக்கவடாப் பொட்டலமும், பத்துக்காசுக்கு பூவன் பழங்களும் வாங்கிக் கொடுத்தார். அதன் பிறகுதான் அவளுடைய ஆத்திரம் தணிந்தது. ஆனந்தமும் திரும்பியது. பாண்டுரங்கத்தின் ஒரு நாளைய கட்டாயப் பிரம்மச்சரியமும் அந்த ஒரு நாளோடு போய்விட்டது. அதன் பின் தம்பதிக்கிடையில் எந்தவிதமான தகராறும் ஏற்படவில்லை. அவ்வப்போது கணவனின் உள்ளத்தை சோதித்தறிவதற்காகம் தன்னை அழகி என்று அவர் தொடர்ந்து கருதுகிறாரா என்பதை தெரிந்து கொள்வதற்காக அவள் ஏதேனும் ஒரு சிறு பரீட்சை வைப்பாள். அலங்கரித்துக் கொண்டு அவர் எதிரே போய் நிற்பாள். அவருடைய முகம் மலர்கிறதா என்று பார்ப்பாள். அவர் வாயிலிருந்து பாராட்டும் பரவச மொழிகளும் வரும்வரையில் அங்கேயே நிற்பாள். முன்னும் பின்னும் நடை பயில்வாள். கொஞ்சுவாள்; கோபிப்பாள்; கூப்பிடால் வரமாட்டாள்; கூப்பிடாமலேயே வருவாள். கடைசியில் வெற்றியோடுதான் அன்றிரவில் படுக்கைக்குச் செல்லுவாள்.

இப்படிப் பதினைந்து வருஷங்கள் கழிந்தன. இந்த தாம்பத்திய ஐக்கியத்தை அன்பு வெள்ளத்தை, பின் போர்ஷனில் வாழையடி வாழையாக வசித்து வந்த குடித்தனக்காரர்களும், மாடி அறை ஒண்டிக்கட்டைகளும் நிரந்தரமாக பார்த்துப்பார்த்து தமக்குள் சிரித்திருக்கிறார்கள்.

(தொடரும்)

Series Navigation

ku alagirisamy

ku alagirisamy

முகக்களை

This entry is part [part not set] of 4 in the series 20000402_Issue

கு அழகிரிசாமி


1

பாண்டுரங்கத்திற்கும் தேவகிஅம்மாளுக்கும் கல்யாணமாகி ஏறக்குறைய இருபது வருஷங்கள் ஆகின்றன.

ஏதோ ஒரு வகையில் தான் அழகாக இருப்பதாய் தேவகியம்மாள் நினைக்கத் தொடங்கியது கல்யாணத்திற்குப் பிறகுதானே ஒழிய முன்னால் அல்ல. கன்னிப் பெண்ணாக இருந்தபோது தன்னை அவள் ஒரு அழகியாக கருதவில்லை என்பதோடு, ஒரு கட்டத்தில் தன் முகம் அவலட்சணமாய் இருப்பதாகவும்கூட நினைத்திருக்கிறாள். அதற்குக் காரணம், அவளுக்குப் பேசிய இரண்டு கல்யாணங்களும் நின்றுவிட்டதுதான். இரண்டு இடங்களிலும் மாப்பிள்ளைகளின் பெற்றோர்கள் முகூர்த்தம் வைக்கத் தயாராகவே இருந்தார்கள்; ஆனால் பெண்ணை நேரில் வந்து பார்த்த மாப்பிள்ளைகள்தான் திரும்பிப் பார்க்காமல் போய்விட்டார்கள்.

இது தெரிந்து அப்போது அக்கம்பக்கத்தார் கை கொட்டிச் சிரித்தார்கள். ‘அதுதானே பார்த்தேன் ?இவளையும் இவள் பல்லையும், இவ மூஞ்சியையும் பார்த்துட்டு ஒருத்தன் இவளைக் கட்டிக்கச் சம்மதிப்பானான்னு கேட்டேன். இவளைப் பார்த்துட்டு மாப்பிள்ளைங்க தப்பினேன், பொழச்சேன்னு ஓடிட்டாங்க! ‘ என்றாள் ஒருத்தி.

‘என் பொண்ணுக்கு மாப்பிள்ளை வரப்போறான், என் பொண்ணுக்கு மாப்பிள்ளை வரப்போறான்னு அம்மாக்காரி குதிச்சாளே, இப்போ என்ன ஆச்சு ? இவளை ஒருத்தன் எதிர்க்கே ஒக்காத்தி வச்சிகினு சோறுதுண்ணவே முடியாதேம்மா. கண்ணாலம் எப்படி பண்ணிக்குவான் ? ‘ என்றாள் இன்னொருத்தி. வேறொருத்தியோ, தேவகியின் காதுகள் எலிக்காதுகள் மாதிரி மேலே ஏறிப்போய் உச்சந்தலையில் இருப்பதாகக் குறை சொன்னாள். இவள் இமை கொட்டும்போது, கோழி கண்ணை மூடித் திறப்பதுபோல இருப்பதாகச் சொன்னாள் மற்றொருத்தி. தேவகியின் முகத்தில் பல் இருப்பதுதான் தெரிகிறது என்றும், மூக்கு கண், நெற்றி முதலியவற்றைப் பட்ட பகலிலேகூட விளக்கைப் பக்கத்தில் கொண்டுபோய் வைத்துப் பார்த்தால்தான் தெரியும் என்றும் ஆளுக்கொன்று சொல்ல, எல்லோரும் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தார்கள்.

அக்கம்பக்கத்துப் பெண்கள் இப்படித் தன்னுடைய முகத்தோற்றத்தைப் பற்றி கேவலமாகப் பேசிக் கொண்டது தேவகியின் காதுகளுக்கும் எட்டிவிட்டது. ஆனால் அவர்களில் ஒவ்வொருத்தியுமே தனித்தனியாக வந்து, மற்றவர்கள்தான் அப்படி அநியாயமாகப் பேசிக்கொண்டார்கள் என்றும், ‘இந்தப் பொம்மனாட்டிகளுக்கு வாய் சும்மா இருக்காது, யாரையாவது குத்தம் சொல்லணும், இதே பொழப்பாப் போச்சு ‘ என்றும் சொன்னார்கள்.

என்றாலும் தேவகிக்கு மனம் உடைந்து விட்டது. தான் அவலட்சணமாக இருப்பதாய் அவளே நினைக்கும்படி ஆகிவிட்டது. இப்படி எண்ணிவிட்ட ஒரு பெண்ணால் உயிரோடு இருக்கவே முடியாது என்றும், உலகத்தில் ஒவ்வொரு பெண்ணும் தன்னிடத்தில் ஏதோ ஒரு கவர்ச்சி இருப்பதாக நினைத்துக் கொண்டிருப்பதால்தான் உயிர் வாழ்கிறாள் என்றும் அவளுக்குத் தோன்றவே, மூன்றாவதாகத் தன்னைப் பார்க்க வரும் ஒருவன் தன்னைத் தட்டிக் கழித்தால் தன் உயிரைத் தானே போக்கிக் கொள்வது என்று முடிவு கட்டிவிட்டாள். மூன்றாவதாக அவளைப் பார்க்கப்போனவர்தான் பாண்டுரங்கம். பார்த்த மாத்திரத்திலேயே அவளை கல்யாணம் பண்ணிக் கொள்ள அவர் மனப்பூர்வமாகச் சம்மதம் அளித்துவிட்டார்.

‘எத்தனையோ பொண்களை வாண்டாம் வாண்டாம்னு சொன்னவன், உங்க பொண்ணைப் பார்த்ததுமே சரின்னுட்டான். நான்கூட ஆச்சரியப்பட்டுப் போயிட்டேன். ‘என்னடா சங்கதி ‘ன்னும் அவனைக் கேட்டேன். அவன் என்ன சொன்னான் தெரியுமா ? ‘இந்தப் பொண்ணோட முகக்களை யாருக்கு இருக்கும் ? ‘ன்னு சொன்னான் ‘…பாண்டுரங்கத்தின் தந்தை தேவகியின் பெற்றோரிடம் இவ்வாறு சொன்னார். அவர் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மையே. தேவகியின் முகக்களையைப் பற்றி பாண்டுரங்கம் அவ்வாறு போற்றிப் புகழ்ந்தது வாஸ்தவந்தான். அப்படிப் புகழ வேண்டிய ஒரு நிலை பாண்டுரங்கத்துக்கும் ஏற்பட்டிருந்ததால், புகழ்ந்தார் – ஒரேயடியாகவும் புகழ்ந்தார்.

பாண்டுரங்கம் பெற்றோருடன் வசித்த வீடு சொந்த வீடாகும். சென்னை நகரில் வாடகைக்கு வீடு கிடைக்காமல் தெருத்தெருவாக எத்தனையோ பேர் அலைவதைப் பார்த்த அவருக்குச் சிறுவயதிலேயே சொந்த வீடு என்பது குபேர சம்பத்து என்று தோன்றிவிட்டது. எனவே, தாம் கஷ்டப்பட்டு படிப்பது அனாவசியம் என்று எண்ணி, ஆறாம் வகுப்பில் பெயில் ஆகி அதற்குமேல் பள்ளிக்கூடத்திற்குப் போக முடியாது என்று பிடிவாதமாக மறுத்துவிட்டார். இரண்டொரு வேளை சாப்பிடாமல் இருந்து தம் விரதத்தை நிலை நாட்டினார். ஏக புத்திரனை மிகவும் கஷ்டப்படுத்திவிடக்கூடாது என்று பெற்றோரும் வற்புறுத்தவில்லை. அவ்வாறு ஆறாம் வகுப்பு பெயில் என்ற கல்வித்தகுதியோடு வளர்ந்த அவருக்கு இருபது வயது ஆயிற்று. ‘உத்தியோகம் புருஷ லட்சணம் ‘ என்று அவருக்கு மிகவும் சிரமத்தின் பேரில் ஒரு மார்வாடியின் அடகுக்கடையில் ரசீது போட்டுக் கொடுத்து கணக்கு எழுதும் ஒரு வேலையை வாங்கிக் கொடுத்தார் தந்தை. சம்பளம் மாதம் அறுபது ரூபாய்க்கு உயர மூன்றாண்டுகள் ஆயின. அப்படியும் அவருக்குக் கல்யாணம் செய்ய பெற்றோர் தீர்மானித்தனர்.

சொந்த வீடு இருப்பதால், பங்களாவிலேயே பெண் கட்டலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தார் பாண்டுரங்கம். ஆனால் பங்களாப்பெண் கிடக்காமல் போனதோடு, குடிசைப்பெண்ணாவது தனக்குக் கிடப்பாளா என்றும் ஆகிவிட்டது. கால்காசு வேலையாணாலும் கவர்மெண்ட் வேலை பார்ப்பவனுக்குத் தான் – அவன் பியூனாக இருந்தாலும் சரி- பெண்ணைக் கொடுப்போம் என்றும், அறுபது ரூபாய் சம்பாதிக்கும் மார்வாடிக் கடை கணக்குப்பிள்ளைக்குக் கொடுக்கமுடியாது என்றும் ஒவ்வொன்றாக மூன்று இடங்களிலும் ஒரே மாதிரி சொல்லிவிட்டார்கள். இதனால் பாண்டுரங்கம் இடிந்து போய்விட்டார். சொந்த வீடு இருந்தும் தமக்குச் சம்சார பாக்கியம் கிட்டவில்லை என்றால் இந்த உலகத்தில் சந்நியாசியாகத்தானே வாழவேண்டும் என்று எண்ணி மனம் கலங்கினார். அந்நிலையில்தான் தெய்வாதீனமாக ஒருவர் கொடுத்த தகவலின் பேரில் தேவகியைப் பேசுவதற்குப் போனார்கள். ‘குரங்காக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி ‘ என்ற மனப்பக்குவத்துடன் காத்திருந்த பாண்டுரங்கம் உடனே சம்மதித்து, தேவகியின் முகக்களையையும் உயர்த்திப் பேசிவிட்டார்.

-தொடரும்.
      

Series Navigation<H2> பெண்களுக்குப் பாராளுமன்றத்தில் இட ஒதுக்கீடு தேவையா ? >>

- கு. அழகிரிசாமி

- கு. அழகிரிசாமி

முகக்களை

This entry is part [part not set] of 4 in the series 20000402_Issue

கு அழகிரிசாமி


1

பாண்டுரங்கத்திற்கும் தேவகிஅம்மாளுக்கும் கல்யாணமாகி ஏறக்குறைய இருபது வருஷங்கள் ஆகின்றன.

ஏதோ ஒரு வகையில் தான் அழகாக இருப்பதாய் தேவகியம்மாள் நினைக்கத் தொடங்கியது கல்யாணத்திற்குப் பிறகுதானே ஒழிய முன்னால் அல்ல. கன்னிப் பெண்ணாக இருந்தபோது தன்னை அவள் ஒரு அழகியாக கருதவில்லை என்பதோடு, ஒரு கட்டத்தில் தன் முகம் அவலட்சணமாய் இருப்பதாகவும்கூட நினைத்திருக்கிறாள். அதற்குக் காரணம், அவளுக்குப் பேசிய இரண்டு கல்யாணங்களும் நின்றுவிட்டதுதான். இரண்டு இடங்களிலும் மாப்பிள்ளைகளின் பெற்றோர்கள் முகூர்த்தம் வைக்கத் தயாராகவே இருந்தார்கள்; ஆனால் பெண்ணை நேரில் வந்து பார்த்த மாப்பிள்ளைகள்தான் திரும்பிப் பார்க்காமல் போய்விட்டார்கள்.

இது தெரிந்து அப்போது அக்கம்பக்கத்தார் கை கொட்டிச் சிரித்தார்கள். ‘அதுதானே பார்த்தேன் ?இவளையும் இவள் பல்லையும், இவ மூஞ்சியையும் பார்த்துட்டு ஒருத்தன் இவளைக் கட்டிக்கச் சம்மதிப்பானான்னு கேட்டேன். இவளைப் பார்த்துட்டு மாப்பிள்ளைங்க தப்பினேன், பொழச்சேன்னு ஓடிட்டாங்க! ‘ என்றாள் ஒருத்தி.

‘என் பொண்ணுக்கு மாப்பிள்ளை வரப்போறான், என் பொண்ணுக்கு மாப்பிள்ளை வரப்போறான்னு அம்மாக்காரி குதிச்சாளே, இப்போ என்ன ஆச்சு ? இவளை ஒருத்தன் எதிர்க்கே ஒக்காத்தி வச்சிகினு சோறுதுண்ணவே முடியாதேம்மா. கண்ணாலம் எப்படி பண்ணிக்குவான் ? ‘ என்றாள் இன்னொருத்தி. வேறொருத்தியோ, தேவகியின் காதுகள் எலிக்காதுகள் மாதிரி மேலே ஏறிப்போய் உச்சந்தலையில் இருப்பதாகக் குறை சொன்னாள். இவள் இமை கொட்டும்போது, கோழி கண்ணை மூடித் திறப்பதுபோல இருப்பதாகச் சொன்னாள் மற்றொருத்தி. தேவகியின் முகத்தில் பல் இருப்பதுதான் தெரிகிறது என்றும், மூக்கு கண், நெற்றி முதலியவற்றைப் பட்ட பகலிலேகூட விளக்கைப் பக்கத்தில் கொண்டுபோய் வைத்துப் பார்த்தால்தான் தெரியும் என்றும் ஆளுக்கொன்று சொல்ல, எல்லோரும் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தார்கள்.

அக்கம்பக்கத்துப் பெண்கள் இப்படித் தன்னுடைய முகத்தோற்றத்தைப் பற்றி கேவலமாகப் பேசிக் கொண்டது தேவகியின் காதுகளுக்கும் எட்டிவிட்டது. ஆனால் அவர்களில் ஒவ்வொருத்தியுமே தனித்தனியாக வந்து, மற்றவர்கள்தான் அப்படி அநியாயமாகப் பேசிக்கொண்டார்கள் என்றும், ‘இந்தப் பொம்மனாட்டிகளுக்கு வாய் சும்மா இருக்காது, யாரையாவது குத்தம் சொல்லணும், இதே பொழப்பாப் போச்சு ‘ என்றும் சொன்னார்கள்.

என்றாலும் தேவகிக்கு மனம் உடைந்து விட்டது. தான் அவலட்சணமாக இருப்பதாய் அவளே நினைக்கும்படி ஆகிவிட்டது. இப்படி எண்ணிவிட்ட ஒரு பெண்ணால் உயிரோடு இருக்கவே முடியாது என்றும், உலகத்தில் ஒவ்வொரு பெண்ணும் தன்னிடத்தில் ஏதோ ஒரு கவர்ச்சி இருப்பதாக நினைத்துக் கொண்டிருப்பதால்தான் உயிர் வாழ்கிறாள் என்றும் அவளுக்குத் தோன்றவே, மூன்றாவதாகத் தன்னைப் பார்க்க வரும் ஒருவன் தன்னைத் தட்டிக் கழித்தால் தன் உயிரைத் தானே போக்கிக் கொள்வது என்று முடிவு கட்டிவிட்டாள். மூன்றாவதாக அவளைப் பார்க்கப்போனவர்தான் பாண்டுரங்கம். பார்த்த மாத்திரத்திலேயே அவளை கல்யாணம் பண்ணிக் கொள்ள அவர் மனப்பூர்வமாகச் சம்மதம் அளித்துவிட்டார்.

‘எத்தனையோ பொண்களை வாண்டாம் வாண்டாம்னு சொன்னவன், உங்க பொண்ணைப் பார்த்ததுமே சரின்னுட்டான். நான்கூட ஆச்சரியப்பட்டுப் போயிட்டேன். ‘என்னடா சங்கதி ‘ன்னும் அவனைக் கேட்டேன். அவன் என்ன சொன்னான் தெரியுமா ? ‘இந்தப் பொண்ணோட முகக்களை யாருக்கு இருக்கும் ? ‘ன்னு சொன்னான் ‘…பாண்டுரங்கத்தின் தந்தை தேவகியின் பெற்றோரிடம் இவ்வாறு சொன்னார். அவர் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மையே. தேவகியின் முகக்களையைப் பற்றி பாண்டுரங்கம் அவ்வாறு போற்றிப் புகழ்ந்தது வாஸ்தவந்தான். அப்படிப் புகழ வேண்டிய ஒரு நிலை பாண்டுரங்கத்துக்கும் ஏற்பட்டிருந்ததால், புகழ்ந்தார் – ஒரேயடியாகவும் புகழ்ந்தார்.

பாண்டுரங்கம் பெற்றோருடன் வசித்த வீடு சொந்த வீடாகும். சென்னை நகரில் வாடகைக்கு வீடு கிடைக்காமல் தெருத்தெருவாக எத்தனையோ பேர் அலைவதைப் பார்த்த அவருக்குச் சிறுவயதிலேயே சொந்த வீடு என்பது குபேர சம்பத்து என்று தோன்றிவிட்டது. எனவே, தாம் கஷ்டப்பட்டு படிப்பது அனாவசியம் என்று எண்ணி, ஆறாம் வகுப்பில் பெயில் ஆகி அதற்குமேல் பள்ளிக்கூடத்திற்குப் போக முடியாது என்று பிடிவாதமாக மறுத்துவிட்டார். இரண்டொரு வேளை சாப்பிடாமல் இருந்து தம் விரதத்தை நிலை நாட்டினார். ஏக புத்திரனை மிகவும் கஷ்டப்படுத்திவிடக்கூடாது என்று பெற்றோரும் வற்புறுத்தவில்லை. அவ்வாறு ஆறாம் வகுப்பு பெயில் என்ற கல்வித்தகுதியோடு வளர்ந்த அவருக்கு இருபது வயது ஆயிற்று. ‘உத்தியோகம் புருஷ லட்சணம் ‘ என்று அவருக்கு மிகவும் சிரமத்தின் பேரில் ஒரு மார்வாடியின் அடகுக்கடையில் ரசீது போட்டுக் கொடுத்து கணக்கு எழுதும் ஒரு வேலையை வாங்கிக் கொடுத்தார் தந்தை. சம்பளம் மாதம் அறுபது ரூபாய்க்கு உயர மூன்றாண்டுகள் ஆயின. அப்படியும் அவருக்குக் கல்யாணம் செய்ய பெற்றோர் தீர்மானித்தனர்.

சொந்த வீடு இருப்பதால், பங்களாவிலேயே பெண் கட்டலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தார் பாண்டுரங்கம். ஆனால் பங்களாப்பெண் கிடக்காமல் போனதோடு, குடிசைப்பெண்ணாவது தனக்குக் கிடப்பாளா என்றும் ஆகிவிட்டது. கால்காசு வேலையாணாலும் கவர்மெண்ட் வேலை பார்ப்பவனுக்குத் தான் – அவன் பியூனாக இருந்தாலும் சரி- பெண்ணைக் கொடுப்போம் என்றும், அறுபது ரூபாய் சம்பாதிக்கும் மார்வாடிக் கடை கணக்குப்பிள்ளைக்குக் கொடுக்கமுடியாது என்றும் ஒவ்வொன்றாக மூன்று இடங்களிலும் ஒரே மாதிரி சொல்லிவிட்டார்கள். இதனால் பாண்டுரங்கம் இடிந்து போய்விட்டார். சொந்த வீடு இருந்தும் தமக்குச் சம்சார பாக்கியம் கிட்டவில்லை என்றால் இந்த உலகத்தில் சந்நியாசியாகத்தானே வாழவேண்டும் என்று எண்ணி மனம் கலங்கினார். அந்நிலையில்தான் தெய்வாதீனமாக ஒருவர் கொடுத்த தகவலின் பேரில் தேவகியைப் பேசுவதற்குப் போனார்கள். ‘குரங்காக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி ‘ என்ற மனப்பக்குவத்துடன் காத்திருந்த பாண்டுரங்கம் உடனே சம்மதித்து, தேவகியின் முகக்களையையும் உயர்த்திப் பேசிவிட்டார்.

-தொடரும்.
      

Series Navigation<H2> பெண்களுக்குப் பாராளுமன்றத்தில் இட ஒதுக்கீடு தேவையா ? >>

- கு. அழகிரிசாமி

- கு. அழகிரிசாமி